May 22, 2008

ராமராஜன் திரைப்படங்களின் உளவியல் – சுகுணா திவாகர் கருத்தை முன்வைத்து.


கமலின் தீவிர ரசிகனான எனக்கு ராமராஜன் படங்களை சுத்தமாகப் பிடிக்காது. அவர் படங்களுக்கு செல்வோரை நக்கல் செய்வது எனக்கு ஒரு பொழுது போக்கு. ஒருமுறை “என்னப் பெத்த ராசா” என்ற படத்துக்கு நண்பன் அழைத்த போது நூறு ரூபாயும்,ஒரு கர்ச்சீப்பும், பஞ்சும் கொடுத்தாலும் வரமாட்டேன் என்று மறுத்திருக்கிறேன். அப்போது அவர் படங்களைப் பற்றிய பொதுவான விமர்சனம்
1. ஸ்டில்களில் இணைந்து நடிப்போர் இல்லாமல் இருந்தால் எந்தப்படம் என்று கண்டுபிடுக்க முடியாது
2. எல்லா வகை காட்சிக்கும் ஒரேமாதிரி நடிப்பு வசன உச்சரிப்பு
3. காமெடி மற்றும் பாட்டு இல்லாவிட்டால் படம் ஓடாது
(யோசித்துப் பார்த்தால் இது விஐய் படத்துக்கும் பொருந்தும்)

ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளாலும் பேருந்து பயணங்களாலும் பத்து பதினைந்து ராமராஜன் படங்களைப் பார்க்கும் அவல நிலைக்கு ஆளானேன்.

சுகுணா திவாகர் தன் பதிவொன்றில் ராமராஜன் படங்கள் ஆபத்தில்லாத கிராமப் படங்கள் ஏனெனில் அவை நிலப்பிரபுத்துவ கூறை முன்நிறுத்தாதவை என்று கூறியிருந்தார். அதைப்படித்தபின் படங்கள் அனைத்தையும் மீள்பார்வை செய்து பார்த்தேன். அப்பட்டமான உண்மை.

1.கதையின் நாயகன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவனாகவே காட்டப்படுகிறான். (என்னப் பெத்த ராசா, தங்கமான ராசா, கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், ஊருவிட்டு ஊரு வந்து,நம்ம ஊரு நல்ல ஊரு, எங்க ஊரு பாட்டுக்காரன்..........). செயற்கரிய செயல்களை செய்வதில்லை. சிறிது புத்திசாலித்தனம்,நேர்மை ஆகியவற்றால் மக்களை கவர்கிறான். இந்த கதாநாயக தன்மையால் கிராமப்புற இளைஞர்கள் தங்களை அவரிடம் அடையாளம் கண்டார்கள். ஓ இதுமாதிரி இருந்தால் நம்மையும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளோடியது.
ஆனால் அவரை அடுத்து வந்த கே.எஸ். ரவிக்குமார் தன் படங்களில் (ஊர்மரியாதை, நாட்டாமை, நட்புக்காக,சமுத்திரம் ) நிலப்பிரபுத்துவ கூறை முன்நிறுத்தினார். ஊர் பெரியவர் தெய்வம் மற்றவர்கள் ஏப்ப சாப்பை என்பது போல கதையமைப்பு இருக்கும். ஆர்.வி.உதயகுமார் (சின்னகவுண்டர், எஜமான்,ராஜகுமாரன்) பின்னர் வெளிவந்த சில பிரபு,சத்யராஜ்,சரத்குமார் படங்களும் இவ்வகையே. அவற்றில் எல்லாம் கதாநாயர்கள் நம்ப முடியாத பலம், நேர்மை, வள்ளல் தன்மையுடன் இருப்பார்கள். அவ்வகைப் படங்களில் கிராமப்புற ரசிகர்களால் தங்கள் சுயத்தை அடையாளம் காண முடியவில்லை. எனவேதான் இன்னமும் ராமராஜன் படங்கள் பி சி சென்டர்களில் ஓடுகின்றன.

2. கதாநாயகிகளும் கூடியவரையில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணாகவே காட்டப்படுகிறாள். ஆளை மயக்கும் அழகுடன் இருப்பதில்லை. இது கிராமப் புற பெண்கள் தங்களை அடையாளப்படுத்த.

3.பெண்களை மட்டம் தட்டி பேசும் காட்சிகள் குறைவு. ரஜினி (படையப்பா,மன்னன்) விஐய்(சிவகாசி,குருவி) இதில் படு மோசம்.
இப்போது வரும் பல மொக்கைப்படங்களுக்கு ராமராஜன் படங்கள் எவ்வளோவோ பரவாயில்லை.

May 20, 2008

சிலந்தி இன்னொரு கற்றது தமிழ்?


சமுதாயத்தில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று திரைத்துறையினர் அடிக்கடி பேட்டி கொடுப்பார்கள். மசாலா படங்களைத் தவிர்த்தால் தமிழில் மீதம் இருக்கும் சில படங்களைப் பார்த்தால் இந்த எண்ணம் நமக்கும் வரும். எண்பதுகளில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்த நாட்களில் வந்த படங்களில் (வறுமையின் நிறம் சிகப்பு .... ) அப்பிரச்சினை பேசப்பட்டிருக்கும். மேலும் நான் B.A , M.A ஆனால் வேலை கிடைக்கலை போன்ற வசனங்கள் இருக்கும். அதுபோல ஒருவர் வேலை பார்க்கிறார் என்றால் வங்கி பணி அல்லது தனியார் நிறுவன கிளார்க் என்று இருக்கும். 90களின் மத்தி வரை வந்த படங்களில் கல்லூரி என்றாலே கலை மற்றும் அறிவியல் கல்லூரி தான். ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. படித்து வேலை வாய்ப்பில்லை என்றால் இப்போது யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே இப்போது அம்மாதிரி படம் எடுக்க முடியாமல் ரவுடி கதைகளாக எடுக்கறார்கள்.
இப்பொழுது மென்பொருள் துறை ஆட்சி செலுத்துவதால் திரைத்துறையும் அதை எதிரொலிக்கிறது. ( கற்றது தமிழ், யாரடி நீ மோகினி.......). அந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் தான் சிலந்தி. அழகி புகழ் மோனிகாவும் அவர் நண்பிகளும் மென்பொருள் துறையினர். அவர்கள் செய்யும் sexual harassment ஆல் பாதிக்கப்பட்ட ஒருவன் பழி வாங்குவதாக கதை. நல்ல suspense உடன் சொல்லப்பட்டுள்ளது. கற்றது தமிழ் போலவே இதிலும் மென்பொருள் துறையினர் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். படத்துக்கு மைய இழையே இந்த பிரச்சினைதான். மோனிகாவின் கவர்ச்சி படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.

May 11, 2008

விஜயகாந்த்தின் அரசாங்கம் எதிர்பாராத ஆச்சரியம்




இந்த வாரம் நண்பர்கள் எல்லாரும் குருவி போகலாம் என்று நினைத்திருந்தோம். இணைய விமர்சனைங்களை பார்த்து அதை தவிர்த்திருந்த நிலையில் நேற்று இரவு வேறுவழியில்லாமல் விஜயகாந்த்தின் அரசாங்கம் பார்க்க சென்றோம். நான் கூட பதிவு போட நல்ல மேட்டர், குருவியை எல்லாரும் கலாய்த்தது போல நாமும் இதை ஒரு வழி பண்ணிவிடுவோம் என்று ஆர்வத்துடன் போனேன். ஆனால் என்ன ஒரு ஆச்சரியம். படம் பார்க்கிற மாதிரி இருந்தது. விஜயகாந்த் படம் மாதிரி இல்லை.

1) விஜயகாந்த் படம் ஆரம்பித்து 20 நிமிடம் கழித்து வருகிறார்.
2) மிக குறைவான பில்ட் அப் காட்சிகள்
3) புள்ளி விவர பேச்சு இல்லை
4) 20 பேரை தனியாளாக அடிக்கும் காட்சி இல்லை
5) புத்திசாலித்தனமான திரைக்கதை
6) ஹீரோ அடிதடியை நம்பாமல் லாஜிக்காக யோசித்து துப்பறிவது.
7) டைரக்டர் (மாதேஷ்), ஷங்கர் கூடாரத்தில் இருந்து வந்திருந்தாலும், சாக்லேட் மாதிரி படம் தயாரித்து இருந்தாலும், மதுர மாதிரி படம் டைரக்ட் செய்திருந்தாலும் இப்படம் எந்த சாயலும் இல்லாமல் இருப்பது.

படம் முடிந்து வரும் போது ஒருவரை ஒருவர் கிள்ளி பார்த்துக் கொண்டோம்.

அன்பில் நனையும் காலம் – வாழ்த்துக்கள் சுகுணாதிவாகர்



இன்று (11-05-08) மணவிழா காணும் அன்பு நண்பர் சுகுணாதிவாகர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்