August 19, 2011

ரெ.வெற்றி நிலவன் இளங்கலை (வரலாறு), பொதுக்குழு உறுப்பினர்


துயில் கலைந்த உடன், தெருவில் இருக்கும் சேவல்களை எழுப்பி கூவச் சொல்லிவிட்டு பத்திரிக்கை முகவரும் நண்பருமான பாலனின் பணியிடத்திற்க்கு சென்று பணிகளை மேற்பார்வையிடுவார் வெற்றி நிலவன். அன்றுவந்த செய்தித்தாள்கள், வார மற்றும் பருவ இதழ்கள் அனைத்தையும் நான்கைந்து கோப்பை தேநீர் துணையுடன் வாசித்து முடிப்பார்.

பின்னர் வீட்டில் குளித்து, வெள்ளுடை அணிந்து நகர கழகத்திற்கு வருவார். அங்கு வந்து முரசொலியை சுவாசித்துவிட்டு, அருகிலிருக்கும் பட்டுக்கோட்டை அழகிரி படிப்பகத்து சுவற்றில் எழுத வேண்டிய செய்திகளை எழுதிக் கொடுப்பார்.
பின்னர் ஒப்பந்தப்புள்ளி கோராமல் மரம் வெட்டும் விவகாரம், கண்மாய்க்கு நீர் வரவேண்டிய ஓடைகளில் ஆக்ரமிப்பு போன்ற பிரச்சினகளை அலசிவிட்டு நன்பகல் 12 மணி அளவில் நண்பரது அசைவ உணவகத்துக்கு வந்து காசாளர் இருக்கையில் அமர்வார்.

இப்பொழுது ஓரளவுக்கு அவரது பின்புலம் புலப்பட்டிருக்கும். ஆம் அவர் ரெ.வெற்றிநிலவன், இளங்கலை (வரலாறு), பொதுக்குழு உறுப்பினர், திராவிட முன்னேற்றக் கழகம்.

அண்ணாவின் பேச்சாலும், எழுத்தாலும், கொள்கைகளாலும் கவரப்பட்டு தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டவர். ஜெயச்சந்திரன் என்ற பெயரை வெற்றிநிலவன் என மாற்றிக் கொண்டவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய தளகர்த்தராக விளங்கியவர். தொடர் வாசிப்புகளால் பகுத்தறிவாளராகவும் விளங்கியவர்.

தன் தாயார் இறந்தபோது, அந்தக் காலத்தில் தீப்பெட்டி என்று ஒன்று இல்லாததால்தான் கொள்ளிப்பானை என்ற வழக்கம் வந்தது. இப்போது அது எதற்கு என பெரியாரின் வார்த்தைகளை பேசி கொள்ளிப்பானை தூக்க மறுத்தவர். ஆனால் தன் ஒரே மகனுக்கு பெயர் சூட்டும் வைபவத்தில்தான் வீட்டில் முதன் முதலாக தன் கொள்கைத் தோல்வியைச் சந்தித்தார்.
இந்தி எதிர்ப்பு போரில் உயிர்விட்ட தாளமுத்து, நடராஜன், அசுரன் என்று வர்ணிக்கப்பட்ட ராவணன், என இவற்றில் ஏதேனும் ஒன்றில்தான் தன் மகன் பெயர் வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் மனைவியின் எதிர்ப்பால் பின் வாங்கினார். எண்ணியலின்படி, பிறந்த நட்சத்திரத்திற்க்கு ஏற்ப ச,சு,செ வில் பெயர் அமையலாம் என்றதும், “செல்ல உதய சூரியன்” என்றார். மனைவி ”சுரேஷ்” என்றார். பின் மிதிவண்டியில் செல்ல உதய சூரியன் என எழுதி திருப்திப் பட்டுக்கொண்டார்.

தொடர்ச்சியான கழகப் பணிகளால் தலைமையின் கவனத்தை ஈர்த்தார். நகரச் செயலாளர் பதவி கிடைக்க வேண்டிய சூழ்நிலையில், மாவட்ட அரசியல் நிர்ப்பந்தங்களால் வேறொருவருக்கு அது தாரை வார்க்கப்பட்டது. அறிவாலயத்தில் நடந்த ஆலோசனையின் பேரில், ஆறுதல் பரிசாக பொதுக்குழு உறுப்பினர் பதவி வரப் பெற்றார்.

அவர் நண்பர் சிறிது முன்கோபப் பேர்வழி. உணவகத் தொழிலுக்கு பொறுமை அவசியம். அதுவும் அவ்வூரில் கூடுதலாகவே தேவைப்படும். நன்றாகவேயிருந்தாலும், ”இவ்வளவு மட்டமான குழம்பை வைத்து வியாபாரம் செய்துதான் இவர்கள் தங்கள் மனைவியருக்கு பூ வாங்கித்தர வேண்டுமா?” என அர்ச்சனை செய்பவர்கள் அங்கே அதிகம். அப்படிப் பட்டவர்களை சமாளிப்பது நண்பருக்கு கடினமான ஒன்று. மேலும், வழக்கமான வாடிக்கையாளர்களின் மனதறிந்து பரிமாறுபவர்களை வேலை வாங்குவதிலும் வெற்றிநிலவன் கைதேர்ந்தவர்.

மூன்று மணி அளவில் கணக்கை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து விட்டு மாலை கழக அலுவலகத்திற்கு திரும்புவார். இரவானதும் மீண்டும் காசாளர் பணி. கழகம் அறிவிக்கும் அறப் போராட்டம், பொதுக்கூட்டம், தேர்தல் காலங்களுக்கு இந்த நேர அட்டவணை பொருந்தாது.
இதனால் நண்பர் அளிக்கும் மதிப்பூதியமே குடும்பத்தின் வருமானமாக இருந்து வந்தது. 89ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்றதும் அவர் மனைவி விடிவுகாலம் வந்ததென அகமகிழ்ந்தார். ஆனால் வெற்றிநிலவனோ தனக்கென சில கொள்கைகளை வைத்திருந்தார். வருடத்துக்கு இரண்டு வேலை வாய்ப்புகள், மாறுதல் உத்திரவுகளுக்கு மேல் அமைச்சர்களை தொந்திரவு செய்யக்கூடாது, அதுவும் அத்தியாவசியமாக தேவைப்படுபவர்களுக்கே என்பது போல. ”ஊதியக்குறைவு மணாளனுக்கு வாழ்க்கைப்பட்ட மங்கையருக்கு மாவரைத்து விற்பதுதான் மாவட்ட ஆட்சியர் உத்தியோகம்” என்னும் புதுமொழிக்கு ஏற்ப அவர் மனைவி அத்தொழில் புரிய தலைப்பட்டார்.

96ல் மீண்டும் கழகம் ஆட்சிக்கு வந்தது. வெற்றிநிலவனின் போக்கில் எந்த் மாறுதலும் இல்லை. இப்பொழுது வீட்டில் அவர் மனைவியின் கை கொஞ்சம் ஓங்கத் தொடங்கியிருந்தது. அவருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக செவ்வாடை அணிந்து ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றத்தில் இணைந்தார். மகனும் பொறியியலில் பட்டயப் படிப்பு முடித்து ஒரு வேலையில் அமர்ந்தான். கழகத்தில் புதுப்புது முகங்கள் தென்பட்டன. வைகோவின் நண்பராக இருந்தும் அவர் வெளியேறிய போது கழகத்திலேயே இருந்ததால் அவரின் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் பங்கம் வரவில்லை. ஆனால் எந்தவித ஏற்றமும் கிடைக்கவில்லை.

வீட்டிலும், கட்சியிலும் செல்லாக்காசாக அவர் மாறியிருந்த நேரத்தில் தான் அவர் மகனுக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது சங்கராச்சாரியார் கைதாகி இருந்தார். வந்த மருமகளோ ரிக், யஜூர் வேதத்தைப் படித்தவளைப் போல ஆச்சாரங்களைக் கடைபிடிக்கத் தொடங்கினார். பிராமணர்களைப் போல ஆக முயற்சிப்பவர்களை “நியோ பிராமணர்கள்” என்று குறிப்பிடும் சமூகம், பிராமணர்களை விட அதிக ஆச்சாரம் கடை பிடிப்பவர்களுக்கான குறியீட்டை கண்டுபிடிக்காதது ஆச்சரியமான ஒன்று.

2006ல் மீண்டும் கழக ஆட்சி. அவருக்குத்தான் அது பெருஞ்சோதனையாக அமைந்தது. நண்பரின் உணவகத்தின் பொறுப்பை அவரது மகன் ஏற்றிருந்தார். வெற்றிநிலவன் உதாசீனப் படுத்தப்பட்டார். மதிப்பூதியமும் இல்லாது மதிப்பிழந்தார்.

மனைவியோ இப்போது வார வழிபாட்டு மன்றத் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டார். மகனுக்கோ தன் மனைவி கடைபிடிக்கும் ஆச்சாரங்களால் தான் தன் வாழ்வு உயர்ந்ததென்று எண்ணம். வீட்டிலும் மிகவும் அன்னியப்பட்டார். பட்டுக்கோட்டை அழகிரி படிப்பகம் மட்டுமே இப்போது அவரது ஒரே ஆறுதல்.

பெயரன்கள் இருவர். காலை வேளைகளில் அவர்களை குளிப்பாட்டி, பள்ளிக்கு அனுப்பும் பொறுப்பு இப்போது அவருக்கு. அதனால் காலை உணவுக்கு கவலையில்லை. இரவும் அவர்களுக்கு கதை சொல்லி, சாப்பாடு ஊட்டி, உறங்க வைப்பதால் உணவு கொடுத்து விடுகிறார்கள். ஆனால் மதியம் தான் இறைஞ்ச வேண்டியிருக்கிறது. அண்ணா காலத்து ஆளாயிற்றே. சுயமரியாதை சிறிதாவது இருக்காதா? என்ன?

சமீபத்தில் கழக பொருளாளர் கைதை ஒட்டி நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். கைதாகி, திருமண மண்டபத்தில் இருந்த போது மூன்று மணி அளவில் காவலர்களால் வழங்கப்பட்ட எலுமிச்சை சாதம் தான் இந்த ஆண்டில் அவர் சாப்பிட்ட முதல் மதிய உணவு.

August 18, 2011

தற்போது மதுரையை கலக்கும் ஜாதித் தலைவர்கள்

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை பொதுவாக ஜாதிக் கட்சித் தலைவர்கள் என்றாலே அது முக்குலத்தோர் அல்லது தலித்களை முன்னிறுத்தியே இருக்கும். ஒவ்வொரு தேவர் ஜெயந்தியின் போதும் சுவர்கள் மற்றும் பிளக்ஸ் மூலம் முக்குலத்தோரில் யார் லைம் லைட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். சேதுராமன் (மீனாட்சி மிஷன்), சேதுராமத் தேவர், வாண்டையார், முருகன்ஜி, பி டி அரச குமார் என தலைவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள். தலித்களில் ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன், சாத்தை பாக்யராஜ், கிருஷ்ணசாமி, முருக வேல் ராஜன், திருமா வளவன் என தலைவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனால் பொதுவாக மற்ற சமுதாயங்களில் இருந்து குறிப்பிட்ட நபரை முன்னிறுத்தி ஆராதிப்பது குறைவாகவே இருக்கும். கரிக்கோல் ராஜ், சவுந்திர பாண்டியன், பாபு நாயுடு என பெயர்கள் அடிபடுமே தவிர தொடர் பிரச்சாரம் குறைவாகவே இருக்கும்.
ஆனால் இப்போது இருவர் அடிக்கடி போஸ்டர்களிலும், பேனர்களிலும் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தனியரசு (கொங்கு வேளாள இளைஞர் பேரவை, மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்), மற்றொருவர் பெரிஸ் மகேந்திரவேல் (நாடார் மஹாஜன சங்கம்).

மதுரை மாவட்டத்தில் இதுவரை கொங்கு வேளாளர்கள் மிக ஆக்டிவ்வாக அரசியலில் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதில்லை. இப்போது தனியரசின் மூலம் ஒருங்கிணைக்கப் படுகிறார்கள். “எங்களின் தனி அரசே” போன்ற பஞ்ச் வசனங்களுடன் திருமணங்களுக்கும், கோயில் விழாக்களுக்கும் பிளக்ஸ், போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன. அவர் மாநிலம் தழுவிய அரசியல் சக்தியாக மாற நினைக்கிறாரோ என்னவோ?

மற்றொருவரான பெரிஸ் மகேந்திரவேல், தொழிலதிபர். உசிலம்பட்டியில் இருக்கும் பெரிஸ் பிஸ்கட் தொழிற்சாலை இவருடைய குடும்பத்தைச் சார்ந்த்துதான். முதன் முதலில் மடிட்சியாவின் (மதுரை மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு) உசிலை வட்டார இணைச் செயலாளராக இருந்தார். மெதுவாக வளர்ச்சி பெற்று அதில் முக்கியப் பொறுப்புக்கு வந்தார். பின்னர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகக்குழு பொறுப்பு, பின்னர் செயலாளர் என அதிலும் முக்கியப் பொறுப்பு. எனவே ஓரளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புள்ள பதவிகளில் இவர் இருக்கிறார்.
தற்போது இவரை வாழ்த்தியும் மதுரையில் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அரசியல் ஆசை இவருக்கும் துளிர் விடுவதையே இது காட்டுகிறது.

எதிர்காலத்தில் இவர்கள் நல்ல முறையில் சமுதாயப் பணி ஆற்ற வாழ்த்துக்கள்

August 17, 2011

மூன்று முடிச்சு - ரஜினி படமல்ல - தொடர் பதிவு

மூன்று முடிச்சு" தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் 'பாலகுமார்' அவர்களுக்கு நன்றி.


விரும்பும் விஷயம்

1. திரைப்படங்கள்
2. புத்தகங்கள்
3. சாப்பாடு

விரும்பாத விஷயம்

1. அசுத்தம்
2. நய வஞ்சகம்
3. சோம்பல்

பயப்படும் விஷயம்

1. உறவுகளுக்குள்ளான பஞ்சாயத்து
2. வேலையின் நிரந்தரமில்லாத்தன்மை
3. பிள்ளைகளின் எதிர்காலம்


புரியாத விஷயம்

1. மகளுக்கு ஒரு நீதி மருமகளுக்கு ஒரு நீதி என்னும் மாமியார்த்தனம்
2. தன் வீட்டுக்கு ஒரு நீதி புகுந்த வீட்டுக்கு ஒரு நீதி என்னும் மருமகள்தனம்
3. மிகப் பெரிய அளவில் சாதித்தவர்கள் கூட செண்டிமெண்ட்டை பாலோ பண்ணுவது

மேஜையில் உள்ள பொருள்

1. கணிப்பொறி
2. தேனீர்க் கோப்பை
3. குறிப்பு நோட்டு

சிரிக்க வைக்கும் விஷயம்/மனிதர்கள்

1. நகைச்சுவை நடிகர்கள் (எப்போதும் கவுண்டமணி, இப்போது சந்தானம்)
2. ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவே எழுதும் ஓவர் பில்டப் பேட்டிகள்
3. சில பதிவர்கள்

தற்போது செய்து கொண்டு இருக்கும் காரியம்

1. மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற திட்ட அறிக்கை தயாரித்தல்
2. நண்பர் ஒருவரின் ஆய்வுப் பணி அறிக்கையை திருத்துதல்
3. சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்

வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

1.குறைந்தது பத்து அறிவு சார் சொத்துரிமை (பேடண்ட்) வாங்க வேண்டும் (வியாபார ரீதியில் பயன்தரக்கூடிய)
2.ஆடி அல்லது பென்ஸ் கார் (ஹை எண்ட்) ஒன்று வாங்க வேண்டும்
3. ஒரு நல்ல நாவல் எழுத வேண்டும்


உங்களால் செய்து முடிக்கக் கூடிய விஷயம்

மேற்கூறிய மூன்றும்

கேட்க விரும்பாத விஷயம்

1.சாவு/உடல் நலம் குன்றிய செய்திகள்
2. வறுமைச் செய்திகள்
3. சிறுவர்/சிறுமியர் கொலை, கற்பழிப்பு


கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்

1. சரளமான ஆங்கிலம்
2. கணிதவியல்
3. இயற்பியல்


பிடிச்ச உணவு வகை?

1. புரோட்டா, மட்டன் சாப்ஸ், ஆம்லேட்
2. இட்லி, ஈரல் குழம்பு
3. தேனீர்

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்

மாறிக் கொண்டேயிருக்கும். இப்போது

1.விளையாடு மங்காத்தா
2. முத்தமிழே (ராமன் அப்துல்லா)
3. எவண்டி உன்னைப் பெத்தான் (வானம்)


பிடித்த படம்

இதுவும் மாறிக் கொண்டேயிருக்கும். இப்போது

1. இன்செப்சன்
2. ஆடுகளம்
3. தென்மேற்கு பருவக்காற்று

இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்

1. காற்று
2. நீர்
3. உணவு

இதை எழுத அழைக்கப்போகும் நபர்

யார் எல்லாம் இந்த சங்கிலியில எழுதுனாங்கண்ணு தெரியலை.

இந்த ஆண்டு பதிவுலகில் இணைந்து, இன்னும் இந்த ஜோதியில் கலக்காத ஒருவர் இதை தொடரட்டும். (உடன்பிறப்பு, பலராமன், ராஜேஷ் மற்றும் ரியாஸ் அகமது ) இதுவரை எழுதலைன்னா, இதை அழைப்பாக ஏற்றுத் தொடரவும்

--
நட்புடன்,
முரளிகண்ணன்

August 16, 2011

வளையல்

எனக்கு வரும் கனவுகள் பெரும்பாலும் நேர்கோட்டிலேயே அமைந்திருக்கும். அதில் பிளாஷ் பேக் உத்திகளோ, பின் நவீனத்துவமோ, மாஜிக்கல் ரியலிஸமோ இருந்ததில்லை. பெரும்பாலும் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவைகளே மனதில் பதிந்து கனவாக வெளிப்பட்டிருக்கின்றன. சிறுவயதில் கிரிக்கெட் வெறியனாக இருந்த போது தொடர்ச்சியாக கனவில் கமெண்டரி சொல்லி வீட்டிலுள்ளோர் துக்கத்தைக் கெடுத்திருக்கிறேன். சென்னை டெஸ்டில் இம்ரான் சதம் அடித்த அன்று,

“அப்பா, இம்ரான் கான் நம்ம வீட்டுக்கு வர்ராறாம்பா தயிர் சாதம் ரெடி பண்ணி வைங்கப்பா” என்று உளறினேன். கனவை விட அதிலிருந்த பொருட்பிழைக்கே அதிக கேலிக்கு உள்ளானேன். ஏண்டா அவரே பதான். பிரியாணி ரெடி பண்ணச் சொன்னா பரவாயில்லை, போயும் போயும் தயிர்சாதமா ரெடி பண்ணச் சொல்றே என்று வெறுப்பேறும் அளவுக்கு கிண்டல் பண்ணி விட்டார்கள்.

ஆனால் நேற்று வந்த கனவு, ஏராளமான மாண்டேஜ் ஷாட்டுகளுடன் கூடிய பாடலைப் போல் வந்தது. முதல் ஷாட்டில் எம்ஜியார் “வளையல் நல்ல வளையல், முத்து முத்தான வளையலுங்க” என்று பாடிக் கொண்டே போனார். பின்னர் ஒரு பெண் உயரமாக வளையலை அடுக்கி “ நான் ஜெயிச்சுட்டேன், எனக்கே முதல் பரிசு” என்று கிறீச்சிட்டாள்.

எங்கள் ஊரின் முதல் மற்றும் பிரபல வளையல் வியாபாரியான நாராயணன் மாமா, “ம்ம் இந்த மாசம் ஒரு வளகாப்பும் இல்லையே” என்று சலித்துக் கொள்கிறார்.

மதுரைக்குச் சென்று ஒரு மார்வாரியிடம் கடைப் பையனாக இருந்து தொழில் கற்று வந்தவர் அவர். கடையில் எம்ஜியார் படத்தை மட்டுமே வைத்திருப்பார். ”படகோட்டி, ரிக்‌ஷாக்காரன்னு எல்லாம் நடிச்சார், ஆனா வளையல் காரரா ஒரு படத்துல கூட தலைவர் நடிக்கலையே என்று அங்கலாய்ப்பார்”

அதான் படகோட்டியில நடிச்சாரே மாமா என்று கேட்டால், மெயினாவே வளையல்காரரா நடிக்கணும்டா என்பார்.

அடுத்த ஷாட், என்ன புரபோஸ் பண்ணனும்னா, பிளாட்டின வளையல என் கைல மாட்டிச் சொல்லுங்க என்கிறாள் மங்கை ஒருத்தி. உன் இடுப்பே கையளவு தானே இருக்கு, ஒட்டியாணமாவே போட்டு விடுகிறேன் என்கிறான் அம்பானி.

வரலட்சுமி விரதத்துக்கு வந்தவங்களுக்கு வளையல் குடும்மா என்கிறாள் 100 கிலோ எடையுள்ள மாமியார் ஒருத்தி. ஆகட்டும் அத்தே என்கிறாள் 110 கிலோ எடையுள்ள மருமகள்.

கார்த்திக்கும் வளையல்காரனாக ஒரு பாட்டுப் பாடுகிறார். மன்சூர் அலிகான் ஹீரோவாக நடிக்கும் ராவணன் என்று தினத்தந்தி செய்தி சொல்லுகிறது. கடைசி வரியில் ஹீரோ வளையல்காரன் என்று முடிக்கிறது.

பேப்பரை சுருட்டி எடுத்துக் கொண்டு சொர்க்கத்துக்கு ஓடுகிறேன். நாராயணன் மாமாவை கண்டுபிடித்து மாமா “மெயின் ஆக்டரே வளையல்காரரா நடிக்கிற படம் வருது” என்கிறேன்.

அவர் சிரித்துக் கொண்டே ஒரு வருஷத்துக்கு முன்னாடி எம்ஜியார ஹீரோவா வச்சு வளையல்காரன் அப்படின்னு படமே எடுத்திட்டேன் என்கிறார். அவரது பழைய மார்வாரி முதலாளிதான் பைனான்ஸ் பண்ணினார் என்கிறார். ஏன் இவ்வளோ நாள் ஆச்சு என்கிறேன். நம்பியார் இப்பத்தானே இங்க வந்தார் என்கிறார்.

தங்க வளையலும், கண்ணாடி வளையலும் தான் பெண்களுக்கு பிடிக்கும். மண் வளையல்ல நிறைய டிசைன் வரும். ரப்பர் வளையல் கைக்கு பாதுகாப்பு என்று அறுக்கிறாள் அவள் விகடன் ரிப்போர்ட்டர்.

பாவம்பா சின்ன நகைக்கடை வச்சான். உள்ள செம்பு, மெழுகு வச்சு தங்க முலாம் பூசி, ஏகப்பட்ட வளையலை கொடுத்து ஏமாத்திட்டாங்க. இப்போ ஊர விட்டே ஓடிட்டான்பா என்று ஒருவனை நினைத்து எல்லோரும் உச்சுக் மொட்டுகிறார்கள்.

நான் அவளுக்கு வளையல் போட்டுட்டேன், அதனால அவ எனக்கு தங்கச்சி முறை என்று கனகாவைப் பார்த்துச் சொல்கிறார் சர்க்கரைத்தேவன் விஜயகாந்த்.

எனக்கு கைல வளையல் போடணும்னு ஆசை. என் வாழ்க்கை பூராம் கை இருந்திச்சு ஆனா வளையல் இல்லை என்று கண்ணீர் விடுகிறாள் விக்ரமன் பட கதாநாயகி.

இன்னும் என்னென்னவோ வளையல் தொடர்பில் கனவாக வந்தது. உணவு இடைவேளையில் நண்பன் சதீஷீடம் இதைப் பகிர்ந்து கொண்டேன்.

”ஆயிலி ஐட்டம் எதுவும் ஹெவியா சாப்பிட்டியா?” என்று ஆரம்பித்தான்.

ம்கூம் வழக்கம் போல லைட்டத்தான் என்றேன்.

”யார் பேரோ சொன்னயே, ஆங் நாராயணன், அவர் இருக்காரா? என்றான்.

அவர் செத்து பத்து வருஷம் ஆச்சு என்றேன்.

”மேடம் ஏதும் வளையல் கேட்டு டிமாண்ட் பண்ணினாங்களா?” என்றான்.

சமீபத்துல எதுவும் கேட்கலை. இதுக்கு முன்னாடி கூட செயின், தோடுன்னு தான் கேட்டிருக்காங்க என்றேன்.

”ஒரு வேளை நீ படிக்கும் போது, பீஸ் கட்ட உங்கம்மா ஏதும் வளையல் அடகு வச்சு......” என்று இழுத்தான்.

சேச்சே அப்படியும் எதுவும் நடக்கலை என்றேன்.

”முறைப் பொண்ணு இல்லேன்னா சின்ன வயசு காதலி வளையல் கேட்டு உன்னால வாங்கிக் கொடுக்க முடியாமப் போயி...” என்றான் சதீஷ்.

அடிக்கடி கே டிவி பார்க்கிறது உன் மனசுக்கு நல்லதில்ல என்றேன் நான்.

சாப்பிட்டு முடிந்து கேபினுக்கு திரும்பும் போது மனதில் ஒரு எண்ணம் ஓடியது. “ காஞ்சனா படம் போன வாரம் பார்த்தோமே, அது மாதிரி எதுவும் எபக்டோ” என்று. உடனே சிரித்து அதைத் துடைத்தேன்.


பின் பணியில் மூழ்கி ஒரு கோப்பில் ஆகஸ்டு 16 என்று கையெழுத்திடும் போதுதான் அது ஞாபகத்துக்கு வந்தது. 18 வருடங்களுக்கு முன் ஒரு சுதந்திர தினத்தன்று ஜூனியர் மாணவியை என் நண்பர்கள் வக்கிர பாலியல் கேள்விகளுடன் ராக்கிங் செய்ததை மௌன சாட்சியாய் வேடிக்கைப் பார்த்ததும், அடுத்த நாள் அவள் என்னைத் தேடி வந்து ”பிரின்ஸிபால் கிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கேன், நீங்கதான் நடந்ததை அங்க சொல்லணும்” என்று இறைஞ்ச,

நண்பர்களுக்காக நான் அதை மறுக்க, அவள் தன் கையில் இருந்த ஒற்றை பிளாஸ்டிக் வளையலை சிம்பாலிக்காக தடவியது மங்கலாக ஞாபகம் வந்தது.