March 12, 2012

ஜெர்மானியத் தொழில்நுட்பம் – அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும்

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், திருவல்லிக்கேணி மேன்சஷனில் எனக்கு பக்கத்து அறையில் தென்னக ரயில்வேயில் சிவில் எஞ்சினியராக பணிபுரியும் அன்பர் ஒருவர் தங்கியிருந்தார். ஆரம்ப தயக்கங்கள் மறைந்து அவருடன் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தபோது ஒரு நாள் அவரிடம் கேட்டேன்.

“ ஏன் சார், இப்போ தமிழ்நாட்டுல அடிக்கடி பாலங்கள் பழுதடைந்தது. உடைந்ததுன்னு நியூஸ் வருது. ஆனா ரயில்வே பாலம் உடைந்ததுன்னு நியூஸ் வரமேட்டேங்குது.

ஆனா, ட்ரைன் நேருக்கு நேர் மோதல், சிக்னல் பெயிலியர் என்றெல்லாம் செய்திகள் வருது”

எப்படி ரயில்வே பாலம் மட்டும் ட்ரைன் ஓடுற அதிர்ச்சிய தாங்கிக்கிட்டு நல்லா இருக்கு?

அதற்கு அவர் சொன்னார்,

நாங்க பாலம் டிசைன் செய்யும்போதே, பாக்டர் ஆப் சேப்டி ஐந்தில் இருந்து பத்து வரைக்கும் வச்சுத்தான் டிசைன் செய்வோம். என்றார்.

அதாவது ஒரு பாலத்தில், 1000 டன் எடையுள்ள புகைவண்டி, 100கி மீ வேகத்தில் ஒரு நாளுக்கு 10 முறை சென்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் நூறாண்டுக்கு இந்த பாலம் நல்ல முறையில் இருக்க, என்னென்ன தேவை என்று கணித்துக் கொள்வார்கள்.

பின்னர் அதைப்போல ஐந்திலிருந்து பத்து மடங்கு ஸ்ட்ராங்காக டிசைனை செய்து விடுவார்கள்.

பின்னர் டெண்டர் விடுவார்கள். அமைச்சர், அதிகாரி என அனைவருக்கும் அவர்களுக்கு தக்க கமிஷன் கொடுத்தது போக, அந்த காண்டிராக்டர் எவ்வளவு மட்டமாக கட்டினாலும், அந்தப் பாலம் தேவையை பூர்த்தி செய்து விடும். என்றார்.


இதே போல ராணுவத்திலும் பேக்டர் ஆப் சேப்டி என்பது, குறைந்தது ஐந்துக்கு மேல் இருக்கும். அதை மில் (mil standard) ஸ்டேண்டர்ட் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் எந்த சூழ்நிலையிலும் அந்த உபகரணம் 100% திறனுடன் செயல்பட வேண்டும் என்பதால்.

இந்திய ராணுவத்தில் வில்லிக்ஸ் (WILLYX) என்ற ஜீப் முன்னர் இருந்தது. (அமெரிக்கத் தயாரிப்பு) தன்னுடைய பணிக்காலம் முடிந்ததும், அது ஏலத்துக்கு வரும். மக்கள் அதனை போட்டி போட்டு வாங்குவார்கள். கோவை உட்பகுதி கிராமங்கள், பொள்ளாச்சி மற்றும் அதன் உட்பகுதி கிராமங்களில் பண்ணையார்கள் இந்த வில்லிக்ஸ் ஜீப்பைத்தான் முன் பயன்படுத்துவார்கள். அதே போல ஆந்திரா ஜமீந்தார்கள், நிலச்சுவான்தார்கள் எல்லாம் இந்த ஜீப்பைத்தான் பயன்படுத்துவார்கள்.

போலவே, வடமாநில கிராமங்களிலும் இந்த ஜீப்புக்கு பெரும் மவுசு உண்டு. பீகார் மாநில உயர்த்தப்பட்ட ஜாதியினர் தாங்கள் வைத்திருக்கும் பிரத்யேக படைகளுக்கு (ரன்வீர் சேனா போல) இந்த வாகனத்தைத் தான் பயன்படுத்துவார்கள். தங்கள் ஜாதிக்குரிய அடையாளம் அல்லது அரிவாள், கோடாலி, துப்பாக்கி போன்ற மாடல்களுடன் இந்த ஜீப்பை அலங்கரிப்பார்கள். பல திரைப்படங்களிலும் நாம் இதனைக் காணலாம். தயாரிப்பாளர் நிர்ணயித்த ஆயுட்காலம் முடிந்து பல ஆண்டு கழித்தும் சிங்கம் போல் கர்ஜிக்கும் திறன் கொண்டவை இவை.

இந்த ஜீப் வாங்கும் போதே, டெண்டருக்கு இன்னொரு ஜெர்மன் ஜீப்பும் வந்தது. வில்லிக்ஸை விட பெர்பார்மன்ஸ் அதிகம் கொண்ட ஜீப். ஆனால் அப்பேர்பட்ட ஜீப்பின் மைனஸ் எரிபொருள் சிக்கனம். வெயிலில் களைப்படைந்து வந்தவன் மண்பானைத்தண்ணீரை மடக் மடக் என்று குடிப்பதைப் போல எரிபொருளை விழுங்கும் இது.

இதற்கு காரணம் இந்த ஜீப்பின் எடை என்பதால், இந்திய ராணுவத்தினர் இதன் எடையைக் குறைத்து தங்களுக்கு வழங்குமாறு அதன் ஜெர்மானியத் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதிகம் இல்லை ஜெண்டில்மேன், இந்த ஜீப்புக்கு ஐந்து கோட்டிங் பெயிண்ட் அவர்கள் அடிப்பார்கள். அதைக் குறைத்து ஒரு கோட்டிங் அடித்தாலே 50 கிலோ வரை எடை குறையும்.

ஆனால் அந்தக் கம்பெனி அதற்கு மறுத்துவிட்டது. இந்த தகவலை நான் கேட்டபோது, எனக்கு ஹென்றி போர்டின் ஞாபகம் வந்தது.

ஆட்டோமொபைல் துறையின் மறுமலர்ச்சிக்கு காரணமான ட்ரான்ஸ்பர் லைன் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அவர் சொல்லுவார்.

“மக்கள் எந்த நிறத்தை வேண்டுமானாலும் விரும்பலாம், ஆனால் நான் கறுப்பு நிறத்தைத் தான் அவர்களுக்கு கொடுப்பேன்”

என்று.

காரணம், தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் அவர்கள் கண்டறிந்தது, கறுப்பு நிறம் மற்ற நிறங்களை விட விரைவில் காயும் என்பதே.

பெயிண்ட் காய்வதற்காக நான் அதிக நேரம் என்னுடைய காரை தொழிற்சாலையில் நிறுத்தினால் அதன் விலை கூடிவிடும். பின் எப்படி சாமானியனும் வாங்கும் விலையில் அதைத் தர முடியும் என்பார்?

இரண்டு கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது ஜெர்மன் என்றாலே எனக்கு அலர்ஜி. ஏனென்றால் ஹிட்லர். ஆனால் ஒரு பொறியாளனாக என்னை ஜெர்மனி ஈர்த்தது என்றே சொல்லலாம்.

நாம் இந்திய, சீன, கொரிய, ஜப்பானிய, அமெரிக்க, ரஷ்ய மற்றும் ஜெர்மானிய பொருட்களை நம் வாழ்வில் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு நாடும், தங்களுக்குரிய ஐடியாலஜி படி தங்கள் பொருளைத் தயாரிக்கின்றன.

சீனா – உபகரணம் கொடுத்த காசுக்கேற்ப அந்த வேலையை செய்து விடும், குறைவாக காசு கொடுத்தால், தவறி விழுந்தால் கேட்கக் கூடாது. நீடித்து உழைக்குமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.மாவுக்கேற்ற பனியாரம் தான் அவர்கள் கொள்கை.

ஜப்பான் – இதை விட அதிக தரம் இந்த வேலைக்குத் தேவையில்லை (ஆப்டிமைசேஷன்). (குறிப்பிட்ட அளவு கேரண்டி)

அமெரிக்கா – வேலை செய்யும். தப்பு பண்ணினா வேற தர்றோம்.

ஜெர்மன் – இதுக்கு மேல தரம் இந்தப் பொருளில் கொண்டு வர முடியாது.


இந்த கொள்கைதான் அவர்கள் அடிநாதம்.

எல்லோருக்கும் தெரிந்த காரை எடுத்துக் கொள்வோம்.

கார்களுக்கு உள்ளே ஓடும் வயர்களின் தூரம் குறைந்தது 5 கி மீ இருக்கும். இதற்கு டொயோட்டா போன்ற ஜப்பானிய கம்பெனிகள், 2 மிமீ தடிப்பான இன்சுலேசன் மற்றும் மேற்புற உரை போதுமென்று தீர்மானித்தால் (ஆப்டிமைசேஷன்), ஜெர்மானிய பென்ஸ்,ஆடி, ஸ்கோடா, பி எம் டபிள்யூ போன்றவை 6 மிமீ திக்கான வயராக அதை தயாரிப்பார்கள். இதனால் செலவு கூடும், காரின் எடை அதிகரிக்கும் அதனால் எரிபொருள் தேவை அதிகரிக்கும். ஆனாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
அதேபோல பெயிண்ட், முன்பு ஆர்மி டெண்டருக்கு வந்த ஜீப்புக்கு  சொன்னது போலத்தான், தாராளமாகச் செய்வார்கள். அதனால் தான். ஸ்கிராட்ச் ஆனாலும் உள்ளிருக்கும் பெயிண்ட் மானம் காக்கும்.

நம் இந்தியத் தயாரிப்புகளில் இருக்கும் ஒரு குறைபாடு, அந்தப் பொருள் எல்லா காலநிலைக்கும் தாங்குமா என்று பார்க்கமாட்டார்கள். ஐடியா கிடைத்ததும், டிசைன் செய்து, தயாரிப்புக்கு அனுப்பி விடுவார்கள். ப்ராடக்ட் டெவலப்மெண்ட் சைக்கிள் கால அளவு மிக குறைவாகவே இருக்கும்.

ஆனால் ஜெர்மன் கம்பெனிகளில், தாங்கள் டிசைன் செய்த பாகங்களை புரோட்டோடைப் ரெடி செய்து கம்பெனியின் மேற்கூரையில் போட்டு விடுவார்கள். அது பனி, வெயில், மழை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். நான்கு பருவங்களும் முடிந்த பின்னர், அதனை எடுத்து தரப் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். அது அக்செப்டபிள் லெவலில் இருந்தால் மட்டுமே, அதனை அப்ரூவ் செய்வார்கள். எனவே அந்தப் பொருள் எந்தச் சூழலையும் தாங்கும்.

இதைப் பற்றி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே விண்டர்,ஆட்டமன், சம்மர், ஸ்ப்ரிங் என்று நான்கு காலநிலைகள் உள்ளன. ஆனால் நமது விருதுநகர் மாவட்டத்தில் இரண்டே காலநிலைகள் தானே உள்ளன. சம்மர் மற்றும் ஹாட்சம்மர். ஏப்ரல், மேயில் ஹாட் சம்மர் மற்ற மாதங்கள் சம்மர் என்று நண்பர்கள் கலாய்த்தார்கள்.

அதே போல பாக்டர் ஆப் சேப்டி. ஒருமுறை நான் உபயோகித்த லோட் செல் 400 டன் வரை உள்ள தாக்கும் எடையை அளக்கக்கூடிய கெப்பாசிட்டி கொண்டது. பொதுவாக மற்ற நாட்டு தயாரிப்புகள் 300 டன் வரையே தாக்கும் எடையை நன்கு அளக்கும். அதன்பின் அதன் லீனியாரிட்டி குறையும். 400டன்னுக்கு மேல் எடை தாக்கினால் செயல் இழந்து விடும்.

சரியாக கணக்கிடாமல், 600 டன் வரை அதில் வேகமான எடை விழும்படி தவறு செய்து விட்டேன். ஆனாலும் அது அசரவில்லை. விழுந்த எடை 600 டன் என காட்டியது. அடுத்தடுத்தும் நன்கு இயங்கியது. ஏனென்றால் அது ஜெர்மானிய தயாரிப்பு.

சாதரணமான ஒரு டூல். ரின்ச்சஸ் (wrenches) எடுத்துகோங்க. நம்ம நாட்டிலே எது ஒசத்தின்னு கேட்டா "டபாரியா" மேக் தன் பெஸ்ட்ன்னு சொல்லுவாங்க. ஆனா ஒரு டபாரியா ரின்ச் வச்சுகிட்டு பத்தாவது மாடில ஸ்கஃபோல்டிங்ல வேலை பார்க்கும் ஒருத்தன் அதை கீழே தவறி போட்டுட்டா அது ஒரு காண்ட்கிரீட் தரையில் விழுந்தா டமால் தான். ஆனா அதே ஜெர்மானியின் USAG, UPAK பிராண்டு வாங்கி புர்ஜ் கலீஃபாவின் 160 வது மாடில இருந்து கீழே போட்டுட்டு கீழே வந்து அவ்வை நெல்லிக்கனியை ஊதி எடுத்து சுருக்குப்பையிலே போட்டுகிட்டு போவது போல டூல் பாக்ஸ்ல போட்டு கிட்டு நடையை கட்டலாம்.  காரணம்  "பாக்டர் ஆஃப் சேஃப்டி".

அவர்கள் வாட்ச் சிலது பார்த்தா "22 மீட்டர் கெப்பாசிட்டி"ன்னு போட்டிருக்கும். ஆனா அது 40 மீட்டர் உயரத்தில் இருந்து போட்டாலும் ஒன்னும் ஆகாது. ஏன்னா அவங்களின் "பாக்டர் ஆஃப் சேஃப்டி" சதவிகிதம் பத்து முதல் 15 வரை.

உதாரணத்துக்கு ஒரு தராசு இருக்குன்னு வச்சுகுங்க. ஒரு நாளைக்கு ஒருவன் அந்த தராசில் ஒரு கிலோ கத்தரிக்காய் ஒரு 500 முறை நிறுவை செஞ்சு போடுவான். அந்த தராசு ஒரு இரண்டு மாதத்தில் கன்ஸ்யூமருக்கு ஒரு கிலோ சரக்கு தருவதுக்கு பதில் ஒரு கிலோவுக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஆகிடும். ஏன்னா அது உழைக்கும் உழைப்பு அப்படி. எதுனா நெளிஞ்சு போகும். எடையில் வேரியேஷன் இருக்கும். அதை இரண்டு மாதத்துக்கு ஒரு முறை காலிப்ரேஷன்க்கு அனுப்பினா அவங்க சர்வீஸ் செஞ்சு அதே ஒரு கிலோ மட்டும் சரியா இருப்பது போல மாத்தி தருவாங்க. (நான் இங்க தராசு - கத்தரிக்காய்னு சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே. )

ஆனால் ஜெர்மானிய டூல்ஸ் எல்லாம் விற்பனையின் போதே இதன் காலிப்ரேஷன் பீரியட் 6 மாதம் அல்லது ஒரு வருஷம் ஆனா 100 சதம் யூஸ் பண்ணினா மட்டுமே என்ற குறிப்போடு வரும். அப்படி 100 சதம் நாம அதை யூஸ் செஞ்சாலும் காலிப்ரேஷன் அனுப்பும் போது அதன் வேரியேஷன் என்பது 0.1 சதம் தான் இருக்கும் என்பது கண்கூடு. (மற்ற நாட்டு பொருட்கள் 5 முதல் 7 சதம் வரை வேரியேஷன் இருக்கும்)அப்படின்னா அதன் தரம் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்க.

அதனால் தான் ஹை பிரிசிசன் மெசின் என்றாலே ஆக ஒரு லெவல் மிஷின் ல அதாவது 100 மாடி, 150 மாடி கட்டிடம் கட்ட லெவல் மிஷின் என்பது எத்தனை துல்லியமாக இருக்க வேண்டும் தெரியுமா? கொஞ்சம் மாறினா கூட பில்டிங் பைசா நகரத்து சாய்ந்த பில்டிங் மாதிரி ஆகிடும். அப்படி இருக்கும் போது ஒரு கஸ்டமர் ஜெர்மன் மிஷின் வாங்குவானா? அல்லது விலை குறைவா இருக்குன்னு வேற மிஷின் வாங்குவானா?

ஆகா அவங்க தரத்தில் நோ காம்ப்ரமைஸ் என்பதால் வியாபாரம் பத்தி அதிகம் கவலைப்படாமல் தானாக விற்பனை ஆகிவிடும். ஆக அவங்க கொள்கையில் உறுதியா இருக்காங்க. அதனால நாம எல்லாம் அதை நம்பி வாங்கும் அளவும், அதை புகழும் அளவும் ஜெர்மானிய பொருட்கள் இருக்கு.

அதே போல ஜெர்மானியர்கள் ஒரு பொருளை தயாரிக்கும் போது தரம் என்பதை மட்டுமே கொள்கையா வச்சிருக்காங்களே தவிர அது எங்க தயாராகுது, எந்த நாடு, எவன் அதை தயாரிக்கிறான் என்பதை பார்ப்பதில்லை. உதாரணம் அப்போதே ஹிட்லர் கோவையில் இருந்த ஜி டி நாயுடு கிட்டே ஹாட்லைன் போன் செஞ்சு வாங்கி பயன் படுத்தியதோடு அதே போல அங்கயும் தயரிச்சார் என்பதும் இப்போதும் பி எம் டபில்யூ காருக்கு தேவையான ஒரு சின்ன ரப்பர் (சுண்டுவிரலில் மாட்டிக்கும் அளவிலான) ஓ ரிங் மாயவரத்தில் சுஜா ரப்பர் பேக்டரி என்னும் நிறுவனத்தில் இருந்து தான் போகுது என்பதெல்லாம் சின்ன உதாரணங்கள்.

சிவகாசி பிரிண்டிங் பிரஸ்களில் ஜெர்மன் மிசின்களுக்கு இருக்கும் மதிப்பே அலாதி.  ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் மிசின்கள் தான் அங்கே  பேவரைட். அதை செகண்ட் ஹேண்ட் என்ன போர்த் ஹேண்டில் கூட வாங்குவார்கள்.

ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டமிருக்கு கழுதை மேய்க்க என்பதைப் போல், ஜெர்மனியின் பென்ஸ்,ஆடி, பி எம் டபிள்யூ கார்களில் ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அட்லீஸ்ட் அதில் ஒரு பயணமாவது ஏதாவது நண்பர்கள் தயவில் நடக்கும் என நினைக்கிறேன். என் அம்மா- தாத்தா வீட்டில் 60 ஆண்டுகளாக இன்றும் பாடிக்கொண்டிருக்கும் ஜெய்கோ ஜெர்மன் வால்வ் ரேடியோவையாவது ஒரு அமவுண்ட் கொடுத்து மாமாவிடம் இருந்து வாங்கி விட வேண்டும்.

March 10, 2012

தயாரிப்பாளர் சங்கிலிமுருகன்

சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் 79ல் அறிமுகமான சங்கிலிமுருகன் லோ பட்ஜெட் இயக்குநர் ராம நாராயணன் இயக்கிய பல படங்களில் நடித்தார். அதே போல் விஜயகாந்தின் பல படங்களில் வில்லன்களில் ஒருவராக நடித்து வந்தார். இந்த பழக்கத்தின் காரணமாக விஜயகாந்தை நாயகனாகவும், ராம் நாராயணனை இயக்குநராகவும் போட்டு தனது மீனாட்சி ஆர்ட்ஸ் மூலம் கரிமேடு கருவாயன் என்னும் படத்தை தயாரித்தார்.

அதற்கு முன் வெளியாயிருந்த மலையூர் மம்பட்டியான் பாதிப்பில் அதே மாதிரி பல படங்கள் அப்போது வந்தன. ஆனால் இந்தப் படம் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்பின் அவர் பல வெற்றிப்படங்களைத் தயாரித்தார். இளையராஜா இவருக்காகவே அட்டகாசமான பாடல்களை வழங்கி இவரை தூக்கி நிறுத்தினார்.

சங்கிலிமுருகன் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர். இவரை தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரின் நீட்சியாகப் பார்க்கலாம்.

அவரைப் போலவே இவரும், நடிக்க வந்து படம் தயாரித்தவர்கள். அவருக்கு எம்ஜியார், இவருக்கு இளையராஜா.

அவரும் தன் நடிகர்களுக்கு,கதையாசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுப்பார். இவர் விஜயகாந்துக்கு வெள்ளித்தட்டில் வைத்து பெரிய மருது படத்துக்காக கொடுத்த 50 லட்சம் அப்போது பரபரக்கப்பட்டது.

ஆனால் சின்னப்பா தேவர், தன் படங்களில் தேவர் ஜாதியை தூக்கிப் பிடித்ததில்லை.

சங்கிலிமுருகனின் பெரும்பாலான கிராமப் படங்களில் நாயகன் தேவர் ஜாதியை சேர்ந்தவராகவே சித்திரிக்கப் பட்டுள்ளார்.
படம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர், பசும்பொன் குருபூஜை நடக்கும் இடம், தேவரின விழாக்கள் போன்ற வசனங்கள், காட்சிகள் விரவியிருக்கும்.

அதேபோல் சங்கிலிமுருகன் படங்களில் தவிர்க்க முடியாதவர் எம் என் நம்பியார். ஆரம்ப காலத்தில் வில்லனாக உடன் நடித்ததால் ஏற்பட்ட பாசப் பிணைப்பாக இருக்கலாம்.

சங்கிலி முருகன் தயாரித்த படங்கள்

கரிமேடு கருவாயன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
எங்க ஊரு காவக்காரன்
சர்க்கரைப்பந்தல்
பாண்டி நாட்டு தங்கம்
பெரிய வீட்டு பண்ணக்காரன்
கும்பக்கரை தங்கய்யா
நாடோடி பாட்டுக்காரன்
பெரியமருது
பாசமுள்ள பாண்டியரு
காதலுக்கு மரியாதை
சுறா

இதில் காதலுக்கு மரியாதை படத்தை மொத்தமாக தற்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்று அழைக்கப்படும் அன்றைய என் எஸ் ஸி ரவி மொத்த விலைக்கு வாங்கி, நல்ல அறுவடை செய்து விட்டார். பின் சுறாவும் இவரிடம் இருந்து சில கைமாறி சன் பிக்சர்ஸ் மூலம் வெளியானது.

பாசமுள்ள பாண்டியருக்காக ராஜ்கிரணுக்கு ஏகப்பட்ட தொகை கொடுத்தது, படம் அதிக நாள் தயாரிப்பில் இருந்தது ஆகியவை படம் ஓடாடதால் இவரைப் பாதித்தன.

ராமராஜனுக்கு முதல் பெரிய ஹிட் என்றால் எங்க ஊரு பாட்டுக்காரன் தான். அப்படம் மூலம்தான் அவருக்கு பசு நேசன் என்ற பெயரும், டவுசர் என்ற பெயரும் கிட்டியது.

எங்க ஊரு காவக்காரனிலும் அருமையான பாடல்கள். சர்க்கரைப்பந்தலில் சரண்ராஜ், நிஷாந்தி ஜோடி. இந்தப் படம் வசூலில் பெரிய அடி வாங்கியது. வசதியான, தப்பு வழிக்குச் செல்லும் கணவரைத் திருத்தும் பெண் வேடம் நிஷாந்திக்கு.

பாண்டி நாட்டு தங்கம் மதுரையில் ஒரு தியேட்டரில் 150 நாள் ஓடியது. கார்த்திக் சூட்டிங்கிக்கே வர சோம்பேறித்தனம் படுவார். சங்கிலி முருகன் சிக்கனவாதி. எந்த விளம்பரமோ, வற்புறுத்தலோ இல்லாமல் அந்தப் படம் ஓடியது. இந்தப் படத்தை இயக்கியவர் டி பி கஜேந்திரன்.

என் கே விஸ்வனாதன் இயக்கிய பெரிய வீட்டு பண்ணக்காரனும் 100 நாள் ஓடியது. கும்பக்கரை தங்கய்யா முதலுக்கு மோசமில்லை. இதன்பின் இவருக்கு சரிவு தோன்றியது எனலாம்.

கும்பக்கரை தங்கய்யாவுக்குப் பின் கமல்ஹாசனை வைத்து, கங்கை அமரன் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கப் போவதாக செய்தி வந்தது. ஜோடியாக லட்சுமி மகள் ஐஸ்வர்யா எனவும் தகவல்கள் வந்தன.

ஆனால் அது கைகூட வில்லை. பின்னர் அவர் தேவர்மகன் படத்தில் கணக்குப் பிள்ளையாக நடித்தார். உடன் அவரது தயாரிப்பு நிர்வாகி? ராமு மச்சானும் நடித்தார். பின்னர் சில இடங்களில் அவர், கமல் என் படத்தில் நடிக்காமல் ஏமாற்றி விட்டார் என்று சொல்லி வந்தார்.

கார்த்திக் மோகினி நடிப்பில் வெளிவந்த நாடோடி பாட்டுக்காரன் ஓரளவே ஓடியது. பெரிய மருதும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

2005ஆம் ஆண்டு சிங்கம் புலி இயக்கிய மாயாவி படத்தில் ஆசாரியாக மிக சிறப்பாக நடித்திருந்தார். இப்போது உடல்நலக் குறைவினாலோ அல்லது வேறு காரணங்களாலோ நடிப்பதில்லை.

March 09, 2012

ஐ ஐ டி கள் வழங்கும் இதர வித்தியாசமான படிப்புகள்

கடந்த இரண்டு வருடங்களாக, எங்கள் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்புக்காக பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது.

சில சந்திப்புகளுக்கு பின்னர், அவர்கள் தங்கள் குடும்பம், குழந்தைகள் படிப்பு போன்ற விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.

பன்னாட்டு மென் பொருள் நிறுவனம் ஒன்றின் உதவி தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர், தன் மகன் புனே தேசிய சட்டக் கல்லூரியில் படிப்பதாகக் கூறினார். அதன்பின் அவரை பேடன்ட் லா படிக்க அமெரிக்கா அனுப்பப் போவதாகக் கூறினார்.

இதே போல் பல உயரதிகாரிகளின் பிள்ளைகள் பொறியியல், மருத்துவம் தவிர்த்து பிற துறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தத் துறைகளில் உச்சத்தை அடைகிறார்கள்.

அம்மாதிரியான வித்தியாசப் படிப்புகளில் சில ஐ ஐ டிக்களிலும் வழங்கப்படுகின்றன.



பொதுவாக ஐ ஐ டி கள், பொறியியலில் பி.டெக், எம்.டெக் எம் எஸ் மற்றும் பிஎச்.டி, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் எம்.எஸ்.ஸி மற்றும் பிஎச்.டி ஆகிய படிப்புகளை வழங்கி வருகின்றன. இதுபோக எம்.பி ஏ படிப்பையும் வழங்கி வருகின்றன.

இவற்றில் பொறியியலில்

பி டெக் – JEE (ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் டெஸ்ட்]
எம் டெக் – GATE [கிராஜிவேட் ஆப்டிடூட் டெஸ்ட் இன் இஞ்சி னியரிங்]
எம் எஸ் – GATE + நேர்முகத் தேர்வு
பிஎச்.டி – M.E (OR) M.Tech + அந்தந்த துறைகள் முடிவு செய்யும் அட்மிசன் டெஸ்ட்

மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்திற்கு

எம்.எஸ்.ஸி – JAM [ ஜாயிண்ட் அட்மிசன் டெஸ்ட் பார் எம் எஸ் ஸி]
பிஎச்.டி –M.Tech (or) M.Sc with GATE/CSIR/NET வகையறா + அந்தந்த துறைகள் முடிவு செய்யும் அட்மிசன் டெஸ்ட்

எம் பி ஏ வுக்கு

முன்னர் JMET – (ஜாயிண்ட் மேனெஜ்மெண்ட் எண்டரன்ஸ் டெஸ்ட்] மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். தற்போது CAT (COMMON ADMISSION TEST) டெஸ்ட் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

ஆனால் இது போக ஒவ்வொரு ஐ ஐ டி யிலும் உள்ள ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சைன்ஸ் டிபார்ட்மெண்ட்கள் வித்தியாசமான படிப்புகளை வழங்கி வருகின்றன.

அவற்றைப் பற்றிய ஒரு பார்வை.

சென்னை ஐ ஐ டி

இங்கு எம் ஏ ஆங்கிலம் மற்றும் எம் ஏ டெவெலப்மெண்ட் ஸ்டடீஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. இவை 5 ஆண்டு கால படிப்புகள். +2 முடித்தவுடன் சேர வேண்டியவை. இதற்கான அட்மிசன், இத்துறை மூலம் நடத்தப் படும் நுழைவுத்தேர்வின் மூலம் நிர்ணயிக்கப் படுகிறது. மொத்தம் 45 சீட்கள் உள்ளன.

இந்த தேர்வு மே மாதத்தில் நடத்தப் படும். செம டப்பாக இருக்கும் இந்தத் தேர்வு.

அனுகூலங்கள்

இந்திய ஆட்சிப் பணி போன்ற போட்டித் தேர்வுகளை எளிதில் வெற்றி கொள்ளலாம்.

இந்திய பல்கலை மானியக்குழுவால் நடத்தப் படும் தேசிய தகுதி தேர்வு (NET) போன்றவற்றில் எளிதில் வெற்றி பெறலாம்.

சட்ட மேற்படிப்புகள், வெளிநாட்டு பல்கலை மேற்படிப்புகளுக்கு அட்மிசன் கிடைக்க உதவும்.


ஐ ஐ டி கோரக்பூர்


இங்கு உள்ள ”ராஜீவ் காந்தி ஸ்கூல் ஆப் இண்டெலெக்சுவல் பிராப்பர்டி லா” சட்டத்துறையில் எல் எல் பி படிப்பை வழங்குகிறது. இந்தப் படிப்பை முடித்தால் பேடண்ட் சம்பந்தமான வழக்குகளை கையாளலாம். பன்னாட்டு கம்பெனிகளில் லீகல் அட்வைசராக பணிபுரியலாம்.

கல்வித் தகுதி

பொறியியல், மருத்துவத்தில் இளநிலை பட்டம் (முதல் வகுப்பு அவசியம்)
(அல்லது)
அறிவியல் அல்லது மருந்தாளுமையில் முதுகலை பட்டம் (முதல் வகுப்புடன்)
(அல்லது)
முதல் வகுப்பு எம் பி ஏ மேற்கூறியவற்றுடன் இணைந்திருக்கலாம்.

மேலும் இங்கு உள்ள ஸ்கூல் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மூன்றாண்டு பட்டப்படிப்பை வழங்குகிறது. இது, மருத்துவர்களுக்கு பொறியியல் திறமையை ஊட்டுகிறது. இதன் மூலம் அவர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக உருவெடுக்கலாம்.

எடுத்துக்காட்டாக
ரீகாம்பினண்ட் டி என் ஏ, பயோ மெடிக்கல் போன்ற ஆராய்ச்சிகள்.

கான்பூர் ஐ ஐ டி

பொருளாதாரத்தில் எம் எஸ் ஸி ஐந்தாண்டு (ஒருங்கிணைந்த) படிப்பை வழங்குகிறது கான்பூர் ஐ ஐ டி.

ரிசர்வேசன் உட்பட வருடத்திற்கு 25 சீட்கள்.

தகுதித் தேர்வு

ஐ ஐ டி களில் பி டெக் சேர்க்க நடத்தப்படும் ஜே ஈ ஈ தேர்வின் அடிப்படையிலே அட்மிஷன் நடைபெறுகிறது. இந்தப் படிப்பு படிக்க தேர்ட் குரூப் என நம்மவர்களால் அழைக்கப்படும் காமர்ஸ் குரூப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எந்த குரூப்பும் படித்திருக்கலாம். ஆனால் ஜே ஈ ஈ யில் ரேங்க வாங்க வேண்டும். எனவே கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் +2வில் படித்திருக்க வேண்டும்.

ஐ ஐ டி மும்பை

பிளானிங் அண்ட் டெவலெப்மெண்டில் எம் பில் ( 4 செமெஸ்டர்) படிப்பை வழங்குகிறது.

தேர்வு முறை

பிரத்யேக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

கல்விதகுதி

எம் எஸ் ஸி அல்லது பி டெக்கில் 60% (சோசியல் சயின்ஸ் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்)

எம் ஏ கலை அல்லது பொருளாதாரத்தில் 55%

MET/GATE/UGC JRF/UGC lectureship போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள்.

இதுபோக அரசுப்பணியில் உள்ளவர்கள், நிறுவனங்களில் வேலை பார்ப்போரும் தங்களை என்ஹான்ஸ் செய்து கொள்ள இதைப் படிக்கலாம்.

ஐ ஐ டி கௌகாத்தி

இங்கும் எம் ஏ டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் வழங்கப்படுகிறது. மொத்தம் 48 சீட்கள். (ஓ பி சி 27%, எஸ் சி 15%, எஸ் டி 7.5% இட ஒதுக்கீடு)

பிப்ரவரியில் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, தேர்வு ஐ ஐ டி கௌகாத்தி வளாகத்தில் ஜூன் மாதம் நடைபெறும்.

தற்போதைய பொது அறிவு, தற்போதைய பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் லாஜிகல் ரீசனிங்கில் கேள்விகள் இருக்கும்.

பிரத்யேக படிப்புகளுக்கு பெரும்பாலும் அந்தந்த வளாகத்திலேயே தேர்வுகள் நடத்தப்படும்.