August 30, 2016

தலைவாசல் விஜய்


92 ஆம் ஆண்டு தலைவாசல் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியான நேரத்தில் 40க்கும் குறைவான பொறியியல் கல்லூரிகளே தமிழகம் முழுவதும் இருந்தன. ஆனால் முன்னூறுக்கும் அதிகமான கலை அறிவியல் கல்லூரிகள் இருந்தன. தலைவாசல் திரைப்படமானது கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் போதைப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. படம் வெளிவரும் முன்பே அப்போது வெளியாகிக் கொண்டிருந்த சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளில் ஏராளமான விளம்பரங்களைக் கொடுத்தார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம். முழுக்க முழுக்க இளைஞர்களைக் கொண்டு உருவாகும் படம் என்றே விளம்பரம் செய்திருந்தார்கள். அறிமுக இசை அமைப்பாளர் பாலபாரதியின் இசையில் பாடல்களும் ஹிட்டாகி இருந்தன. இந்தப் படத்தில் தான் ஒரிஜினல் கல்லூரி கானா முதன் முதலாய் தமிழ்சினிமாவில் இடம் பெற்றது என்று கூடச் சொல்லலாம். எனவே இந்தத் திரைப்படமானது முற்றிலும் புது முகங்களைக் கொண்டிருந்தாலும் கல்லூரி மாணவர்களின் ஆதரவால் நல்ல ஓப்பனிங்கைப் பெற்றது. எஸ் பி பாலசுப்பிரமணியம், நாசர் போன்ற சீனியர்கள் நடித்திருந்தாலும், கானா பாடல் பாடும் முன்னாள் கல்லூரி மாணவர் வேடத்தில் நடித்திருந்த விஜய்யும், மடிப்பு அம்சா என்ற கேரக்டரில் நடித்திருந்த விசித்ராவும் உடனடியாகப் புகழ் பெற்றார்கள். விஜய், ஏற்கனவே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி புகழ் அடைந்திருந்த நீலா மாலா என்னும் தொடரில் வேறு நடித்திருந்ததால் தமிழக மக்களிடையேயும் நன்கு அறிமுகமாகி இருந்தார்.

அடுத்த இரண்டு மாதங்களில் வெளியான தேவர் மகனில் கமல்ஹாசனின் குடிகார அண்ணன் பாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குள் விஜய் தலைவாசல் விஜய்யாக பெயர் பெற்றிருந்தார். அடுத்ததாக தலைவாசல் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசை அமைப்பாளர்  கூட்டணியில் அஜித்-சங்கவி நடித்த அமராவதியிலும் ஒரு நல்ல கேரக்டர் செய்தார். மணிரத்னத்தின் திருடா திருடா, அடுத்ததாக கமல்ஹாசனின் மகாநதி,  ராஜ்கமல் புரடக்‌ஷனில் மகளிர் மட்டும் என தொடர்ந்து முண்ணனி நிறுவனங்கள், நடிகர்களின் படங்களில் நல்ல வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்.

அடுத்து முரளியின் அதர்மம், விஜயகாந்தின் பெரிய மருது திரைப்படங்களிலும் நல்ல வேடங்கள் கிடைத்தன.
இதற்கடுத்து அவர் ஏராளமான படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்தார். பெரும்பாலான கேரக்டர்கள் அவரின் நடிப்புத் திறமையை பறைசாற்றிய கேரக்டர்கள் தான். ஆனாலும் அவரால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான, படத்தையே தாங்கி நிற்கும் படியான கேரக்டர்களில் நடிக்க வில்லை அல்லது கிடைக்கவில்லை.

அவருக்கு முன்னால் நடிக்க வந்திருந்த ரகுவரன், நாசர் மற்றும் அவருக்குப் பின்னால் வந்த பிரகாஷ் ராஜ் ஆகியோருக்கு இணையான நடிப்புத்திறன் கொண்டிருந்தவர் தலைவாசல் விஜய். ஆனால் அவர்களுக்கு இணையான பெயரை தமிழ் சினிமாவில் அவரால் பெற முடியவில்லை. தொடர்ந்து முக்கியத்துவம் இல்லாத சிறு சிறு வேடங்களே அவருக்குக் கிடைத்தன. இத்தனைக்கும் அவர் முதல் படமான தலைவாசலில் இளைஞர்கள் தங்களை அவருடன் அடையாளப் படுத்திப் பார்க்கும்படியான கேரக்டர். கல்லூரி படிப்பு முடித்தும், கல்லூரி வளாகத்திலேயே சுற்றி, கானா பாடிக்கொண்டிருக்கும் கேரக்டர். ஆனால் அதற்கடுத்து உடனடியாக அவர் நல்ல பாஸிட்டிவ்வான கேரக்டர்களில் நடிக்கத் தலைப்படவில்லை.

வேலை செய்யும் இடங்களிலும் சரி, தமிழ் சினிமாவிலும் சரி, ஒருவர் ஒரு வேலையை திறம்பட செய்துவிட்டால் போதும், அது சம்பந்தமான வேலை வரும் போதெல்லாம் அவர் தான் முதல் சாய்ஸாக இருப்பார். இதனால் உடனடி பலன்கள் இருந்தாலும், நாளடைவில் அந்த வேலையை சிறப்பாக செய்யக்கூடியவர் இன்னொருவர் வந்து விட்டாலோ அல்லது அந்த மாதிரியான வேலைகளுக்கான தேவை குறைந்து விட்டாலோ அவரைச் சீந்த மாட்டார்கள். எனவே தான் மற்ற வேலைகளையும் அவ்வப்போது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தலைவாசல் விஜய், அறிமுகமான படத்தில் கஞ்சாவிற்கு அடிமையாகி, பின்னர் திருந்தும் வேடம், அதற்கடுத்த தேவர் மகனில் குடிக்கு அடிமை. பின் வந்த மகளிர் மட்டும்மில் குடிகார கணவன். எனவே தமிழ்சினிமாவில் அதற்கடுத்து எந்த வித குணச்சித்திர குடிகார வேடம் என்றாலும் இயக்குநருக்கு தலைவாசல் விஜய் தான் முதல் சாய்ஸாகத் தெரிவார்.
மகாநதி மற்றும் பேரழகனில் கழைக்கூத்தாடி, காதல் கோட்டையில் ஆட்டோ டிரைவர், கோகுலத்தில் சீதையில் பெண் புரோக்கர், துள்ளுவதோ இளமையில் நடைபாதை மீன் வியாபாரி, சண்டக் கோழி படத்தில் மாற்றுத் திறனாளி  என வித்தியாச வேடங்களும் அவ்வப்போது கிடைத்து வந்தன. இந்த வேடங்களில் எல்லாம் அவர் அப்படியே பொருந்திப் போயிருப்பார். இவர் நடித்த காட்சிகளுக்கான வசனங்கள் கூட அதற்குரிய வார்த்தைக் கோவையில், அந்தக் கேரக்டர்க்கு உரிய உச்சரிப்போடு அமைந்திருக்கும்.

ஆனாலும் அவர் நடித்த பெரும்பாலான வேடங்களை போதைக்கு அடிமையானவர்/நய வஞ்சக கோழை/விளிம்பு நிலை மனிதர் என்ற வகைகளுக்கு உள்ளேயே அடக்கி விடலாம். இந்த மாதிரியான கேரக்டர்கள் என்றாலே தலைவாசல் விஜய்யை கூப்பிடுங்க என்னும் படி நாளடைவில் ஆகிப்போனார்.
காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த சற்று கோழையான இன்ஸ்பெக்டர் வேடம்.   ஹரிசந்திரா, என்னம்மா கண்ணு, உன்னை நினைத்து,அனேகன் போன்ற படங்களில் நடித்த நல்லவன் போல் நடித்து ஏமாற்றும் வேடம் போன்றே அடுத்தடுத்து தலைவாசல் விஜய்க்கு வாய்ப்புகள் கிடைத்தன. இந்த கேரக்டர்கள் எல்லாமே படத்துக்கு தேவையானதாக இருந்ததே தவிர அவருக்கு என பெரிய மரியாதையை தமிழ்சினிமாவில் பெற்றுத்தரவில்லை.

நடிக்க வந்த மூன்றாண்டுகளிலேயே விஷ்ணு படத்தில், நாயகன் தந்தையின் நண்பனாக இருந்து பின் எதிரியாக மாறும் வயதான வேடம். அதுதான் பரவாயில்லை என்று பார்த்தால் அடுத்து பிரபுவிற்கு தந்தை வேடம். இளவயதிலேயே வயதான வேடங்களில் நடித்த குணசித்திர நடிகர் என்றால் வி.கே. ராமசாமியைச் சொல்வார்கள். அவர் தன் இருபதுகளில் அறுபது வயது வேடம் பூண்டவர். வி கே ராமசாமி என்றாலே யாருக்கும் அவருடைய வயதான தோற்றம்தான் ஞாபகம் வரும். அவரும் அப்படியே தன்னை மெயிண்டெயின் செய்து கொண்டார். அடுத்து நெப்போலியன். அவர்  அறிமுகமான புது நெல்லு புது நாத்திலேயே வயதான கேரக்டர்தான். அதற்கடுத்து அவரை விட மூத்தவரான கார்த்திக்கிற்கு தந்தையாக நாடோடித் தென்றலில் நடித்தார். ஆனால் அவரது  ஆஜானுபாகுவான உருவத்தால் இளவயது வில்லனாக, பின் நாயகனாகவும் பல படங்களில் நடித்தார். ஆனால் தலைவாசல் விஜய் ஏற்ற வயதான வேடத்தால் பின்னர் அவருக்கு கிடைக்க வேண்டிய தாக்கம் தரக்கூடிய இளவயது வேடங்கள்  கிடைக்கவில்லை. வி கே ராமசாமி தன் நகைச்சுவை நடிப்பாலும், நெப்போலியன் தன் மிடுக்கான உருவத்தாலும் ஏற்றம் பெற்றது போல் தலைவாசல் விஜய்க்கு முன்னேற்றம் அமையவில்லை.

தமிழ்சினிமாவில் கொடூர வில்லன்களைத் தவிர எல்லோருமே ஒரு காலகட்டத்தில்  நகைச்சுவை காட்சிகளில் நடித்து விடுவார்கள். இப்போதெல்லாம் கோட்டா சீனிவாசராவ், ஆசிஷ் வித்யார்த்தியில் இருந்து நான்கடவுள் ராஜேந்திரன் வரை பெரிய வில்லன்கள் தான் காமெடியனாகவே நடிக்கிறார்கள். ஹீரோக்களும் கூட அவ்வப்போது காமெடி சீன்களில் நடித்தே ஆகவேண்டி இருக்கிறது. ஆனால் தலைவாசல் விஜய் அவ்வளவாக காமெடி காட்சிகளில் நடிக்கவில்லை. ஒரு வேளை, அர்த்தமில்லாத நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க அவர் மனதுக்கு பிடிக்க வில்லையோ என்னவோ? மேலும் அவரின் ஆரம்ப காலப் படங்களினால் அவர் மேல் விழுந்த சீரியஸான ஆள் என்ற இமேஜால் மற்றவர்கள் தயங்கினார்களோ என்னவோ?.
தலைவாசல் விஜய்யின் உடல் அமைப்பு காரணமாக ஹீரோவாகவோ அல்லது முழுநேர வில்லனாகவோ அவரை ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்குவார்கள் என இயக்குநர்கள் நினைத்தார்கள். எனவே அவர் பெரிய அளவிலான கேரக்டர்கள் வாங்க வேண்டுமானால் அவரே தனக்கான ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி தன்னை நிரூபித்திருக்கலாம்.

கோகுலத்தில் சீதையில் குடும்பப் பெண்ணை விபச்சாரத் தொழிலுக்கு வற்புறுத்தி அழைக்கும் கதாபாத்திரம் அவருக்கு. அதில் பெண்கள் விபச்சாரம் செய்வதால் அவர்களின் வழக்கமான கடினமான வாழ்வில் இருந்து விடுபட்டு எப்படி சொகுசாக வாழலாம் என மூச்சு விடாமல் பேசுவார். நிச்சயமாக அந்த வசனம் எல்லாம் அவரே மெருகேற்றியிருப்பார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவருக்கு வாசிப்பும், சினிமா பற்றிய புரிதலும் உண்டு. 

உதவி இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தாவாக இருந்த லிவிங்ஸ்டன் ஆரம்பத்தில் கிடைத்த வில்லன் வேடங்களுடன் திருப்தி அடைந்து விடாமல், தனக்கேற்ப ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து போராடி சுந்தர புருசன் திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பின்னர் சில வாய்ப்புகள் கிடைத்தன. அது போல ஒரு தீவிர முயற்சியை தலைவாசல் விஜய் மேற்கொள்ளவே இல்லை.


அவர் பணியாற்றிய பெரும்பாலான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் அவர் தொடர்ந்து பணிபுரிந்து கொண்டே வந்திருக்கிறார் என்பதில் இருந்து அவர் எவ்வளவு அணுக்கமாக நடந்து கொள்வார் என்று தெரிகிறது. கமல்ஹாசன் மற்றும் விஜய்காந்த் படங்களிலும் சரி,
பாஸில்,விக்ரமன்,அகத்தியன்,சரண்,லிங்குசாமி,ஹரி ஆகிய இயக்குநர்களின் படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வந்து இருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் பெயர் சொல்லும் படியான படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஹரியின் இயக்கத்தில் நடித்த சிங்கம் 2 மற்றும் பூஜையில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் கதாபாத்திரம் தான். கே வி ஆனந்தின் அனேகனிலும் அவருக்கே உரித்தான கதாநாயகியின் தந்தை வேடம். சொல்லப் போனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான புது இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். ஓரளவு யதார்த்தமான படங்களையும் அவர்கள் எடுத்து வருகிறார்கள். இம்மாதிரி படங்களில் இருக்கும் கேரக்டர்களில் அவரால் சிறப்பாக நடிக்க முடியும். 90களில் வந்த புது இயக்குநர்கள் எல்லோருமே ரகுவரனுக்கு என ஒரு ரோல் வைத்திருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த தலைமுறை இயக்குநர்களிடம் சில கேரக்டர்களுக்கு முதல் சாய்ஸாக வைக்கும் படி பெரிய தாக்கத்தை தலைவாசல் விஜய் ஏற்படுத்தவில்லை.

தமிழ் தவிர்த்துப் பார்த்தால் தலைவாசல் விஜய் போன்ற குணச்சித்திர நடிகர்களுக்கு ஏற்ற மாநிலம் ஆந்திரா. நாசரோ பிரகாஷ் ராஜோ இல்லாமல் ஒரு படத்தை எடுக்கவே தயங்கும் நிலையெல்லாம் அங்கு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இவருக்கு அம்மாதிரி வாய்ப்புகள் அங்கும் அமையவில்லை.

மலையாளத்தில் யுகபுருசன் என்னும் திரைப்படத்தில் நாராயன குருவாக நடித்தார். அவருக்கு அட்டகாசமாக அந்த வேடம் பொருந்தியது. அதன்பின்னர் அங்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக அங்கும் பெரிய அளவில் அவர் நடிக்கவில்லை.

அவரது மகள் நீச்சலில் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரது கேரியரில் கவனம் செலுத்தக்கூட தற்போது அதிக படங்களில் தலைவாசல் விஜய் நடிக்காமல் இருக்கலாம். ஆனால் மிக இயல்பாக கொடுத்த கேரக்டருக்கு ஏற்ற உடல் மொழியுடன் நடிக்கக் கூடிய ஒரு நடிகரை சமீப கால புது இயக்குநர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள்

August 11, 2016

ஆண்களின் வசந்தகாலம்

ஆண்களுக்கு எது வசந்த காலம்? என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும் குறிப்பாக பொருளாதாரத்தில் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த ஆணுக்கு. 20-21 வயதில் படிப்பு முடிக்கும் ஆணுக்கு குறைந்தது 4-5 ஆண்டுகளில், அதிகபட்சம் 10-12 ஆண்டுகளில் திருமணம் நடக்கிறது. சராசரியாக படிப்பு முடிந்து 7 ஆண்டுகளில் திருமணம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த காலம் மாதிரியான ஒன்று அவன் வாழ்வில் திரும்ப வரவே வராது.

முன்னர் எப்படியோ, ஆனால் இப்போது இந்த வயதில் இருக்கும் ஆண்களுக்கு பெரும்பாலும் குடும்பப் பொறுப்பு இருப்பதில்லை. வரதட்சனை கொடுக்காமல் அக்கா வாழாவெட்டியாக இருக்கிறார், தங்கைக்கு சீருக்கு பணம் சேர்க்க வேண்டும், தம்பி படிப்புக்கு அப்பா காசு கேட்கிறார் போன்ற பேச்சுக்கள் இப்போது பெருமளவில் இல்லை. மத்திய வர்க்க பெற்றோர், தன் மகனிடம் எந்த பண உதவியும் எதிர்பார்க்காமல் தங்கள் கடமைகளை முடிக்கும் நிலையிலேயே இப்போது உள்ளனர். விதிவிலக்குகள் இருக்கலாம். நம்மை பொருளாதார ரீதியாக எதிர்பார்க்காமல் இருக்கும் பெற்றோர் அமைவது ஒரு வரம். அந்த வரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் திருமணத்திற்கு முன்னான காலத்தை வசந்தகாலம் ஆக்கும்.


அமெரிக்காவில் உள்ள ஏடி அண்ட் டி ஆராய்ச்சி சாலையில் நடந்ததாக ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். அங்கு ஒரு ஆராய்ச்சியாளர், தன் மேலதிகாரியிடம் சென்று இவ்வாறு கேட்டாராம், “நானும் என்னுடன் பணிபுரிபவரும் ஐந்து ஆண்டுகள் முன்னர் இங்கே ஒரே நாளில் தான் வேலைக்குச் சேர்ந்தோம். இருவரும் அறிவைப் பொறுத்தவரையிலும் ஒரே அளவில் தான் இருந்தோம். ஆனால் தற்போது அவர் என்னைவிட அறிவும் அதிகமாகி. பதவி உயர்வும் பெற்றுவிட்டார். இது எப்படி?”.

அதற்கு அவரின் மேலதிகாரி “நீ உனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக முடித்துக் கொடுத்தாய். ஆனால் வேலை நேரம் முடிந்த உடன் அலுவலகத்தை விட்டு கிளம்பி விட்டாய். ஆனால் அவனோ தினமும் 2 மணி நேரம் உன்னை விட அதிகமாக இருந்து இங்கே மற்ற விஷயங்களை கற்றுக் கொண்டான். அவனுடைய மூளையில் நீ கற்றுக் கொண்டதை விட அதிகமான தகவல்கள் குடியேறின. மேலும் இரண்டு விஷயங்களை தெரிந்தவன் அதோடு தொடர்புடைய மூன்றாவது விஷயத்தை, எந்த விஷயமும் தெரியாதவனை விட விரைவாக கற்றுக் கொள்வான். இதனால் அவன் கற்றுக் கொள்ளும் வேகம் அதிகரித்தது.

எந்த ஒரு வேலையோ அல்லது பிரச்சனையோ வரும் போது நம் மூளையானது நம்மிடம் உள்ள தகவல்களைக் கொண்டே அதற்கான தீர்வை எடுக்க முனையும். அதிகமான தகவல்களை கொண்டவன், விஷயங்கள் புரிந்தவன், அதற்கு எளிதான தீர்வை எடுத்து விடுவான். 

தினமும் 2 மணி நேரம் என்பது குறைவான நேரம். ஆனால் தொடர்ந்து 5 ஆண்டுகள் இரண்டு மணி நேர உழைப்பு என்பது அவனுடைய அறிவை உன் அறிவை விட பல மடங்கு மேலாக்கிவிட்டது. அதனால் எந்த வேலையையும் அவனால் இப்போது உன்னை விட சிறப்பாக செய்ய முடிகிறது என்றார்.


இந்த அதிக நேரமானது நமக்கு திருமணத்திற்கு முன்னரே கிடைக்கும். திருமணத்திற்கு முன் நம்மை நம் வீட்டிலோ,உறவு வட்டங்களிலோ அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள். திருமணத்திற்கு முன் தங்கையின் பிரசவத்திற்கு போகாத அண்ணனைக் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் திருமனத்திற்குப்பின் தங்கை மகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கூட அது ஒரு பிரச்சனையாகும். பெற்றோர்களே கூட திருமணத்திற்குப் பின் தங்கள் மகன் தங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கல்யாணத்துக்கு முன்னாடிலாம் இப்படி இல்லை. அவ வந்து தான் இப்படி என்று அவள் காதுபட வேறு சொல்லி, தேவையில்லாத பஞ்சாயத்துகளில் நம் நேரத்தை விரயமாக்குவார்கள். நம் சுற்றத்தாரும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு போகாவிட்டால், எங்கள் வீட்டிற்கெல்லாம் நீங்கள் வருவீர்களா, கல்யாணத்துக்குப் பின்னாடி கண்ணு தெரியலை என்று குமைவார்கள். அதைவிட மனைவி வீட்டு விசேஷங்களுக்கு ஒதுக்கப்படும் நேரம். அவர்களின் ஒன்றுவிட்ட சித்தியின் மகள் வளைகாப்புக்கு கூட நாம் போயாக வேண்டும். சம்பளம் தருகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மனைவிகள், அலுவல நேரத்தில் பணி புரிய அனுமதிக்கிறார்கள். அதற்கு மேல் அங்கு நேரம் செலவு செய்து விட்டு தாமதமாக வந்தால் நாம் வேறு வகை செலவுகளை செய்தாக வேண்டும்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்கையில் அது தொடர்பான விஷயங்களுக்கு இப்பொழுது அதிக நேரத்தை ஒதுக்க வேண்டி இருக்கிறது. எனவே திருமணத்திற்குப் பின் நம் நேரம் நம் கையில் இல்லை.

வேலைக்காக இன்னொரு ஊருக்கு வந்து, திருமணமாகாத காலகட்டத்தில், நம் இளைஞர்கள் செய்யும் இன்னொரு நேரச் செலவு, உணவு தேடி அலைவது. வார நாட்களின் இரவுகள், வார இறுதி நாட்களில் சாப்பிட என்று பைக்கில் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் நாங்களே சமைத்து சாப்பிடுகிறோம் என்பவர்களைத்தான் மன்னிக்கவே முடியாது. அத்தியாவசிய சமையலைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் பாத்திரம் கழுவுவது, அதனால் ஏற்படும் சண்டைகள், வீட்டுக்கு சாமான் வாங்குவது, சிறு சிறு ரிப்பேர்கள் செய்வது என தங்களின் வசந்த காலத்தை வீணடிப்பவர்கள் இவர்கள். இந்த வேலைகளை எல்லாம் அதிகபட்சம் மூன்று மாதங்களில் திருமணத்திற்குப் பின் கற்றுக்கொள்ளலாம்.

இந்த வகையில் வேறு ஊருக்கு வந்து வேலை பார்க்கும் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல் இருக்கிறது. மூன்று வேளை சாப்பாடு நேர நேரத்திற்கு கிடைத்து விடும். செலவும் மிகக் குறைவு. ஆண்களுக்கு இது போல ஒர்க்கிங் மென்ஸ் ஹாஸ்டல் இருந்தால் நலம். அதே போல பிரயாண நேரம். தாங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே தங்கிக் கொள்வது நமது நேரம் அனாவசியமாக செலவாவதை குறைக்கும். திருமணத்திற்குப் பின் மனைவிக்கு ஏதுவாக, குழந்தைகளின் கல்விக்காக, எல்லோருக்கும் சிரம்மில்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டி இருக்கும். மாமியார் வீட்டிற்கு அருகில் இருக்க வேண்டும் என்ற மனைவியின் நிபந்தனைக்காக தினமும் நான்கைந்து மணி நேரம் பயணம் செய்யும் பலரை நான் அறிவேன்.

இப்போதைய மத்திய வர்க்க இளைஞன் தன் பெற்றோர்க்கு பணம் அனுப்பத் தேவையில்லாத காரணத்தால் சிக்கனமாக செலவழித்தால் நிறைய சேமிக்கலாம். ஏழாண்டுகள் இப்படி சேமிக்கும் பணம், ஒரு மிகப்பெரிய கையிருப்பாக மாறும். அதை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், புதிதாகத் தொழில் தொடங்க விரும்பினால் அந்நேரத்தில் அது கை கொடுக்கும். அம்மாதிரியான சேமிப்பை நாம் திருமணமான பின் செய்வது மிகக் கடினம்.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு முன் அங்கே நம்மை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம். வருமானத்தையும் சரியாக சேமித்துக் கொண்டால், நாம் இருக்கும் நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மேலே உயர ஏதுவாக இருக்கும். 

இந்த வசந்த காலம் ஒரு ஸ்பிரிங் போர்ட் போன்றது. ஊன்றி அழுத்தி எவ்வினால் சமூக பொருளாதார நிலையின் அடுத்த தளத்திற்கு தாவி விடலாம். இல்லையென்றால் நம் மகனுக்கு பின்னாட்களில் தெரியப்படுத்துவதற்காக இதை எழுதிக் கொண்டிருக்கலாம். 

August 03, 2016

தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள்

முன்னர் மதுரை மாவட்டத்தில் இருந்து இப்போது தேனி மாவட்டத்தில் இருக்கும் ஊர் அது. பெயர் கெங்குவார்பட்டி. 80களில் அங்கே இருந்தது ஒரே ஒரு தியேட்டர் தான். இப்போதும் கூட அந்த தியேட்டர் மட்டும் தான் அங்கே இருக்கிறது. அங்கே ரஜினி படங்களுக்கு எப்போதும் நல்ல கூட்டம் வரும். இளைஞர்கள், குடும்பத்தோடு வரும் பெண்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து வரும் சிறுவர்கள் என சுமாரான படங்களுக்கு கூட திருவிழா கூட்டம் வரும். ஆனால் ஒரு குறிப்பிட்ட ரஜினி படத்திற்கு மட்டும் வழக்கமாக வரும் இளைஞர்களின் கூட்டத்தை விட அதிகமாகவும், அதற்கு இணையாக பள்ளிச் சிறுவர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. கடைசி சில நாட்களில் திரையரங்கு முழுவதும் இளைஞர்களும் சிறுவர்களும் மட்டுமே இருந்தனர்.

இத்தனைக்கும் அந்த படத்தின் கதை ஏராளமான படங்களில் வந்தது தான். பாசமான அண்ணன் தங்கை. அண்ணன் எந்த வம்பு தும்புக்கும் போகாத அப்பாவி மிடில்கிளாஸ் வாலிபன். அவனது தங்கையை வில்லன் கூட்டம் கற்பழித்து கொலை செய்து விடுகிறது. அதற்கு பழிவாங்க துடிக்கிறான் அண்ணன். மார்சியல் ஆர்ட்ஸ் கற்றுத்தரும் ஒரு குருகுலத்தில் சேர்ந்து அந்தக் கலைகளை கற்று இறுதித் தேர்வில் முதலிடம் பிடிக்கிறான். அங்கே அவனுடன் பயின்று போட்டியில் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவன் கோபத்தில் வில்லன் கூட்டத்துடன் சேர்கிறான். இவர்களை எப்படி நாயகன் வெல்கிறான் என்பதுதான் கதை.

அந்தப் படம் பாயும்புலி. பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இளைஞர்களிடமும் சிறுவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படம். காரணம் அதில் இடம் பெற்ற சண்டைப் பயிற்சி காட்சிகள். 36 சேம்பர் ஆப் ஷாவோலின் படத்தில் இருந்து சண்டைப் பயிற்சி காட்சிகளை அப்படியே உருவி இதில் சேர்த்திருந்தார்கள். அந்தப் படத்தை பார்க்காத பட்டி தொட்டிகளில் எல்லாம் பாயும்புலில சண்டை அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்றே பேச்சாக இருந்தது.

திரைப்பட பாடல்களுக்காக ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் சண்டை காட்சிகளுக்காக ரிப்பீட் ஆடியன்ஸ் வந்தது இந்தப் படத்திற்குத்தான். அதுவரை தமிழ்சினிமாவில் வராத சண்டைக் காட்சிகள் இருந்ததால் ரசிகர்களை அந்தப் படம் பெருமளவு ஈர்த்தது.

கொடூர வில்லனாகவே தமிழக மக்கள் மனதில் பதிந்து போயிருந்த எம் என் நம்பியார்க்கு நல்லவர் என்ற இமேஜ் மேக் ஓவர் கொடுத்த படம் பாக்யராஜ் இயக்கிய தூறல் நின்னு போச்சு. இந்தப் படத்தின் கதையும் வழக்கமான பாக்யராஜின் யதார்த்தமான கதைக்களம் தான். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பக்கத்து ஊர் பெண்ணை வெகுவாக காதலிக்கும் கிராமத்து இளைஞனாக பாக்யராஜ். ஆனால் அவன் பெற்றோரால் திருமணம் தடைப்பட அந்த ஊருக்கே வந்து தங்கி, தன் காதலில் ஜெயிக்கிறான். இதில் பெண்ணின் பெரியப்பாவாக வரும் எம் என் நம்பியார் சிலம்பக் கலை வல்லுநர். அவர் பாக்யராஜுக்கு ஆதரவு தருகிறார். இந்தப் படத்தில் முக்கிய காட்சியாக பாக்யராஜ் லாவகமாக சிலம்பு சுற்றும் காட்சி இடம்பெற்றிருக்கும். விடியும் வரை காத்திரு படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், பாக்யராஜுக்கு தமிழக மக்களிடத்தில் ஒரு அப்பாவி இளைஞன் இமேஜே இருந்தது. அந்தப் பின்புலத்தில் அந்த சிலம்பும் சுற்றும் காட்சி திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எம்ஜியாருக்கு அடுத்த படியாக திரையில் லாவகமாக சிலம்பம் சுற்றியவர் என்ற பெயரையும் பாக்யராஜுக்கு பெற்றுத் தந்தது. அதே போல ஆசியாவின் மிகப்பெரிய மதுரை தங்கம் தியேட்டரில் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜியாரின் படங்களுக்கு அடுத்து 100 நாட்களைத் தாண்டி ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றது. எம்ஜியார் தூறல் நின்னு போச்சு படத்தைப் பார்த்து பாக்யராஜின் சிலம்ப ஆட்டத்தை மிகவும் சிலாகித்தார். இதுவே பின்னாட்களில் பாக்யராஜை எம்ஜியார் தன் கலையுலக வாரிசு என அறிவிக்க ஒரு காரணமாகவும் அமைந்தது.

இந்தப் படத்தில் இன்று கேட்டாலும் மயக்கும் பாடல்கள், இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் இருந்தாலும் படத்தில் இடம்பெற்ற சிலம்ப சண்டைக் காட்சிகள் இளைஞர்களிடம் படத்தின் பால் நல்ல ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இந்தப் படங்கள் என்றில்லை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சண்டைக்காட்சிகளுக்கு என பிரத்யேக ரசிகர் கூட்டம் இருந்தது.
சினிமா தொடங்கி பல ஆண்டுகள் வரை புராண, வரலாற்றுப் படங்கள் தான் அதிகம் வந்தன. அதில் சண்டைக் காட்சிகள் என்றால் கத்திச் சண்டை தான் பிரதானமாக இருந்தது. எம்ஜியார், ஆனந்தன் ஆகியோர் இந்த கத்திச் சண்டைகள் மூலமாக ஆரம்ப காலத்தில் மக்களைக் கவர்ந்தவர்கள். ஒரு முறை கம்யூனிஸ்ட் பேச்சாளர் ஒருவர் தங்கள் கொள்கையையெல்லாம் முழங்கிய பிறகு, அதெல்லாம் சரி, உங்க கட்சித்தலைவர் எங்க எம்ஜியார் மாதிரி சண்டை போடுவாரா என கூட்டத்தினர் கேட்ட வரலாறெல்லாம் தமிழகத்தில் உண்டு.

சமூக கதைகளை அடிப்படையாகக் கொண்டு படங்கள் வரத் தொடங்கிய காலகட்டத்தில் மார்சியல் ஆர்ட்ஸ் முறையில் சண்டை அமைத்து மிகவும் குறைவான படங்களே வந்தன. மார்டன் தியேட்டர்ஸ் படங்களின் சண்டைக் காட்சிகளில் மட்டும் சிறிதளவு மார்சியல் ஆர்ட்ஸ் பிண்ணனி இருக்கும். பெரும்பாலான படங்களில் சினிமாத்தனமான சண்டைக்காட்சிகள் தான். எப்படி பரதம், கதகளி, ஒடிஸி என எந்த வித நடன முறையும் இல்லாமல் புதுவிதமாக சினிமா நடனம் ஒன்றை உருவாக்கினார்களோ அதுபோல ஜூடோ,குங்பூ,கராத்தே என எந்த வித முறையும் இல்லாமல் சினிமாவுக்கென தனியாக சண்டைக் காட்சிகளை அப்போது அமைத்தார்கள். ஏன் இன்றும் கூட அப்படி கலந்துகட்டித்தான் சண்டைக் காட்சிகளை அமைத்து வருகிறார்கள்.
சாண்டோ சின்னப்பா தேவர் எம்ஜியாரை வைத்து தயாரித்த படங்களில் சிலம்ப சண்டை முக்கிய இடம்பெறும். தாய்க்குப் பின் தாரம் படத்தில் எம்ஜியாருக்கும் சின்னப்பா தேவருக்கும் நடக்கும் சிலம்ப சண்டைக்காட்சி பிரசித்தம்.

70களின் பிற்பகுதியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமமாலினி நடித்த ஷோலே தமிழகத்தில் அபார ஓட்டம் ஓடிய போது அதே காலகட்டத்தில் புரூஸ்லி நடித்த எண்டர் தி ட்ராகனும் பட்டி தொட்டியெங்கும் ஓடியது. தொடர்ந்து புருஸ்லிக்கும் மார்சியல் ஆர்ட்ஸ் முறையிலான சண்டைக்காட்சிகளுக்கும் தமிழகத்தில் ஒரு ஈர்ப்பு வந்தது.
ஒரு திரைப்படத்திற்கு போகலாமா வேண்டாமா என முடிவெடுக்க ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கும். கல்லூரி மாணவர்கள், திருமணமாக இளைஞர்கள் காதல் சம்பந்தமான படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். மத்திய வயதினர் கதையம்சம் உள்ள படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். கலகலப்பான, மசாலா படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் பள்ளி மாணவர்களைப் பொறுத்த வரை சண்டைக் காட்சிகள் அதிகமுள்ள படங்களுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். 80களில் சினிமா போஸ்டர்களில் ஒரு ஆக்ஷன் ஸ்டில்லாவது இருந்தால் தான் அந்த படத்திற்குப் போகலாம் என முடிவெடுப்பார்கள். அவர்கள் பேச்சிலும் கூட இந்தப் படத்துல இத்தனை சண்டை, அந்தப் படத்துல அத்தனை சண்டை என்றே பேச்சிருக்கும். இப்பொழுதும் கூட பள்ளி மாணவர்கள் ஆக்ஷன் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். தற்கால பள்ளி மாணவர்களே ஒரு நடிகரின் எதிர்கால ரசிகர்கள் என்பதால் அவர்கள் விரும்பும் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிப்பவர்களுக்கே தொடர்ந்து ரசிகர்கள் கிடைத்த வண்ணம் இருப்பார்கள்.

இதனாலேயே உச்ச நடிகர்கள் அனைவரும் தாங்கள் நடிக்கும் படத்தில் சிறப்பான சண்டைக்காட்சிகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்.
இந்த சண்டைக்காட்சிகள் பரவலாக ஆரம்பித்த உடன், அப்போது ஊர் ஊருக்கு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் போல திடீரென கராத்தே கற்றுத் தரும் பள்ளிகளும் முளைத்தன. பள்ளிகளில் கட்டாயம் ஒரு கராத்தே மாஸ்டர் இருந்து கராத்தே உடுப்புகள் விற்பனையை அதிகரிக்க உதவினார். யெல்லோ பெல்ட், பிளாக் பெல்ட் என டெக்னிக்கல் வார்த்தைகளும் தமிழில் புழங்க ஆரம்பித்தன. ஒரு ஆர்வத்தில் கராத்தே கிளாஸில் சேர்பவர்களில் 25 சதவிகிதம் கூட தொடர்ந்து பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள். எப்படி ஜாக்கிங் போக வாங்கிய ஷூ செப்பல் ஸ்டாண்டில் ஒரு அலங்காரப் பொருளாக மாறுமோ அதுபோல இந்த கராத்தே உடைகளும் துணி அலமாரியில் காட்சிப் பொருளாகவே பல வீடுகளில் ஆகிப்போனது.

அந்த 25 சதவிகித ஆட்களில் 15 சதவிகிதத்தினர் ஓடு உடைப்பது செங்கல் உடைப்பதுடன் திருப்தி பட்டுக்கொள்வர். எஞ்சிய சிலரே ஏதாவது பெல்ட் வாங்கி தங்கள் பெயருடன் கராத்தே என்று போட்டுக் கொள்வார்கள்.
சண்டைப் பயிற்சியாளர்கள் கூட தங்கள் பெயர் டெரராக தெரிய வேண்டுமென தற்காப்புக் கலை பெயர்களைச் சூடிக் கொண்டார்கள். ஜூடோ ரத்னம், கொபுடோ கிருஷ்ணமூர்த்தி என.

தன் தனித்துவமான ஸ்டைலின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற ரஜினி, சண்டைக் காட்சிகளிலும் தனி ஸ்டைலை பின்பற்றினார். அவரின் கைகள் மின்னல் வேகத்தில் அசைந்தாலும் வேகம் மட்டுமில்லாது அதில் ஸ்டைலும் கலந்திருக்கும். கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய ”கராத்தே” மணி ரஜினியின் அன்புக்கு நான் அடிமை படத்தில் வில்லனாக அறிமுகமானார். இருவருக்குமான சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. ஆனால் கராத்தே மணியின் சிஷ்யர்கள் அனைவருக்கும் கராத்தே மணி சண்டையில் தோற்றதாக இருந்தது பலத்த மன வருத்தத்தை கொடுத்தது என்பார்கள்.

அதன்பின் ரங்கா படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தார்கள். திருடனான கராத்தே மணி, ரஜினியின் பேச்சைக் கேட்டு நல்லவராக மாறுவார், ரஜினி, கராத்தே மணியின் பாதையைப் பின்பற்றி திருடனாக மாறுவார். இருவரும் எதிர் எதிரே சந்திக்கும் சூழல் வரும். கராத்தே மணி தன்னுடைய முறையான கராத்தே பாணியால் தாக்க, ரஜினி தன் அனாயாசமான ஸ்டைலால் அதை முறியடிக்க தியேட்டரில் விசில் பறக்கும். அவசர அடி ரங்கா என ஸ்டைலாக எதிரியின் நெற்றியில் அவர் வைக்கும் பஞ்ச் அப்போது பிரசித்தம். பள்ளி மாணவர்கள் தங்கள் கையில் தங்கள் பெயர் கொண்ட பேப்பரை வைத்துக் கொண்டு அடுத்தவனின் நெற்றியில் அது போல் பஞ்ச் வைப்பார்கள். நிஜமான சண்டை என்பது வேறு. மக்கள் ரசிக்கும் படியாக அதை திரையில் கொண்டு வருவது என்பது வேறு. ரஜினிகாந்திடம் அப்போது இருந்த வேகம் அவர் செய்யும் சண்டைகளை மிகவும் ரசிக்க வைத்தது. அந்த சண்டைக் காட்சிகளில் அவர் கலக்கும் குறும்பும் எல்லோரையும் தங்களை மறந்து களைகநிஜ வாழ்க்கையில் புகழ்பெற்ற கராத்தே மாஸ்டரை ரஜினி அனாயாசமாக வெல்வதை மக்கள் ரசிக்க அவருடைய வேகமான தனித்துவம் மிக்க ஸ்டைலே காரணம். எந்த வகை சண்டைக் காட்சிகளாக இருந்தாலும் அதை களைகட்ட வைக்க ரஜினியால் முடிந்தது.

முரட்டுக்காளை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் சிலம்பம், அடுத்த வாரிசில் கத்திச் சண்டை என அதற்கு முன்னர் மற்றவர்கள் சண்டையிட்ட விதங்களில் இருந்து சற்று மாறுபட்டு தன் ஸ்டைலைக் காட்டியிருப்பார் ரஜினி. ராஜாதி ராஜாவில் அப்பாவியாக இருந்து சிலம்பம் கற்றுக் கொள்ளும் பாடல் காட்சியிலும் மாப்பிள்ளையில் ஊர் திருவிழாவில் நகைச்சுவை கலந்து செய்யும் சிலம்பு சண்டையிலும் தன் முத்திரையை பதித்திருப்பார்.

சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் முதன்மையானவர் கமல்ஹாசன். ஒரு பேட்டியில் கூட படம் பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகன் யாரையாவது அடிக்க வேண்டும் என்று வெறியேறுவது போல சண்டைக்காட்சிகள் அமைக்க வேண்டும் என்று சொல்வார். சண்டைப் பயிற்சி கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ், பயிற்சி பட்டறை என பல முன்னெடுப்புகள் செய்தவர் கமல்ஹாசன். தன்னுடைய படங்களில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார்.

கமல்ஹாசன் நடித்த ராம் லட்சுமண் என்னும் படத்தில் சிலம்பம் உள்ளிட்ட எல்லா வகையான கலைகளையும் பயன்படுத்தி இருப்பார்கள். எப்படி சலங்கை ஒலியில் எல்லா வகையான நடனமுறைகளையும் ஆடிக்காண்பிப்பாரோ அதேபோல நான் தான் ஒங்கப்பண்டா நல்ல முத்து பேரண்டா என்ற பாடலில் எல்லா வகையான சண்டைப் பயிற்சி முறைகளையும் செய்து காண்பித்திருப்பார். ஒரு வகையில் தூள் படத்தில் வரும் சிங்கம் போல என்னும் சண்டைக்காட்சியுடன் இணைந்த பாடலுக்கு இது ஒரு முன்மாதிரி. சகலகலா வல்லவன் படத்திலும் ஒரு சிலம்ப சண்டைக்காட்சி உண்டு. கமல்ஹாசனுக்கு சிலம்ப சண்டை மீது நல்ல ஈர்ப்பு உண்டு. தேவர் மகனிலும் ஒரு சிலம்ப சண்டைக் காட்சியை வைத்திருப்பார். தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படத்தில் பெஞ்ச் வைத்துக் கொண்டு ஜாக்கிசான் படப்பாணியில் ஒரு சண்டைக்காட்சியை வைத்திருப்பார். எனக்குள் ஒருவன் திரைப்படத்திலும் கராத்தே கற்ற வாலிபராக தன் கேரக்டரை அமைத்திருப்பார்.

ராம நாராயணன் 84 ஆம் ஆண்டு அர்ஜூனை தன்னுடைய நன்றி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகப்படுத்தினார். வாய் பேச முடியாத ஊமை கதாபாத்திரம். ஆனால் சிறப்பாக கராத்தே சண்டை போடுவார். இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து கடமை,இவன்,வேஷம் என கராத்தே சண்டை போடும் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். எப்படி ஆனந்தபாபுவை டிஸ்கோ டான்சர் என மக்கள் நினைத்தார்களோ அது போல அர்ஜூனை கராத்தே மாஸ்டர் என்றே நினைத்தார்கள்.
அவரும் தான் நடித்த பெரும்பாலான படங்களில் மார்சியல் ஆர்ட்ஸ் சண்டைக்காட்சிகளில் திறம்பட நடித்து வந்தார். தாய் மேல் ஆணை என்னும் படத்தின் கதை மிகச் சாதாரணமானது. வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஆனால் அந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் எல்லாம் வெகு சிறப்பாக அமைக்கப்பட்டு அதனாலேயே அந்தப் படம் கவனம் பெற்றது. தொடர்ந்து தன்னுடைய படங்களில் கராத்தே, குங்பூ கற்றவராகவே தன்னுடைய பாத்திரத்தை அமைத்திருப்பார். சுதந்திரம் படத்தில் குத்துச் சண்டை வீரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சண்டை காட்சிகளில் நடித்தே கிராமப் பகுதிகளில் அதிக ரசிகர்களைப் பெற்றவர் விஜயகாந்த். அவர் பெரும்பாலும் எந்த கலை பிண்ணனியும் இல்லாத சினிமா சண்டையையே போட்டு வந்தார். கால்களால் எதிரியை சுழன்று சுழன்று அடிக்கும் சண்டைதான் அவரின் ட்ரேட் மார்க். பரதன் படத்தில் கிக் பாக்ஸராக நடித்திருப்பார். பிரபுவும் குத்துச் சண்டைக் காட்சிகளில் நடித்தால் நம்பும்படி இருக்கும். அவரும் வெற்றி மேல் வெற்றி என்னும் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்தார். இதில் குத்துச் சண்டையில் இருக்கும் பாதுகாப்பின்மையால் குடும்பத்தில் வரும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதை அமைத்திருப்பார்கள்.
அதற்கடுத்த தலைமுறையில் விஜய் பத்ரி திரைப்படத்திலும், ஜெயம் ரவி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமியிலும் கிக் பாக்ஸர்களாக நடித்திருந்தார்கள்.
தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், இந்த மார்சியல் ஆர்ட்ஸ் வகை சண்டைகளை ஆக்ஷன் படங்களில், ஒரு பகையைத் தீர்த்துக் கொள்ள நாயகனுக்கு உதவும் கருவியாகவே வைத்திருப்பார்கள். கதாநாயகன் வீரமானவன் எனக் காட்டுவதற்கு அவன் பாக்ஸிங் போட்டியிலோ அல்லது கராத்தே போட்டியிலோ வெல்வது போல காட்டியிருப்பார்கள். அல்லது நகைச்சுவைக்காக (இன்று போய் நாளை வாவில் சோமா பயில்வான், கோவிலில் சிலம்ப ஸ்கூல் வைத்திருக்கும் வடிவேல்) உபயோகப்படுத்தி இருப்பார்கள்.

ராக்கி, கிக் பாக்ஸர் போன்ற ஆங்கில படங்களில் சாம்பியன்ஷிப் பெறுவதன் பொருட்டே கதை நிகழும், முழுக்க முழுக்க கதைக்களம் சண்டைப் பயிற்சிகளைச் சுற்றியே வரும். இங்கு அதுபோல நிறைய படங்கள் வருவதில்லை.

பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசன் திரைப்பட சண்டைப் பயிற்சியாளராக வந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சண்டைக் காட்சிகளை அந்தப் படத்தில் அமைக்கவில்லை. ஆனால் அடுத்து சில ஆண்டுகள் கழித்து வந்த தசாவதாரத்தில் சிங்கன் நரகாசி என்னும் ஜப்பானிய தற்காப்புக்கலை நிபுணராக ஒரு வேடத்தில் நடித்திருந்தார். கமல் நடித்த இன்னொரு வேடமான பிளட்சர் அமெரிக்க தொழில் முறை கொலைகாரனாக நடித்திருப்பார். ஒரு ஜப்பானிய கலைக்கும் அமெரிக்க தற்காப்புக்கலைக்குமான சண்டைக் காட்சியாக அப்பட்த்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அமைக்கப் பட்டிருக்கும்.

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா நடித்து வெளியான முகமூடியில் நாயகன் சமுதாய பிரச்சினைகளை தீர்க்க சூப்பர் ஹீரோவாக மாறுவார். அவர் முறையான தற்காப்புக்கலை பயிற்சியை மேற்கொண்டவர். மேலும் வில்லனும் அதே தற்காப்புக் கலை பயின்றிருப்பவர். இவர்களுக்கிடையேயான மோதல் என கதைக்களம் பெரும்பாலும் மார்சியல் ஆர்ட்ஸ்ஸையே சுற்றிவரும்.

சென்ற ஆண்டில் வெளியான ஜெயம் ரவி நடித்த பூலோகம், மாதவன் நடித்த இறுதிச்சுற்று ஆகியவை பாக்ஸிங்கை கதைக்களமாக கொண்டவை. ஆனாலும் பூலோகத்தில் கார்பொரேட் நிறுவனங்கள் எப்படி மக்களை சுரண்டுகின்றன என்பதும், இறுதிச்சுற்றில் பாக்ஸிங் அமைப்பில் நிகழும் அரசியலும் மையப்புள்ளியாய் இருந்தன. மற்ற நாட்டுப் படங்களில் குழந்தைகளுக்கான சினிமா, இளைஞர்களுக்கு, ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு என தனித்தனி வகைகளில் படமெடுப்பதால் ஆக்ஷன் படங்களில் முழுக்க முழக்க மார்சியல் ஆர்ட்ஸ்ஸை வைத்தே படமெடுக்க முடிகிறது. தமிழிலும் அம்மாதிரி வகை வகையாக படமெடுக்கும் சூழல் வரும்போது அம்மாதிரிப் படங்களை நாமும் எதிர்பார்க்கலாம்.

(அந்தி மழை ஜூலை இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி:அந்திமழை)

August 01, 2016

கமல் ரஜினி



நான் முன்னர் பணியாற்றிய இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் டிசைன் பிரிவில் இருந்த மேலாளரை பெரும்பாலான பணியாளர்களுக்குப் பிடிக்காது. திறமையானவர். ஆனால் யாரிடமும் முகஸ்துதியாகப் பேசமாட்டார். அதற்கு நேர்மாறாக புரடக்ஷன் பிரிவில் இருந்த மேலாளரை அனைவருக்கும் பிடிக்கும். எல்லோரிடமும் சுமுகமாக பழகுவார். சிறிய செயல்களைக் கூட பாராட்டிவிடுவார். டிசைன் பிரிவு மேலாளர், ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆவலுடனே இருப்பார். ஆனால் புரடக்சன் மேலாளரோ அதான் நல்லாப் போயிக்கிட்டு இருக்கில்ல, அப்படியே மெயிண்டையின் பன்ணுவோம் என்று சொல்லிவிடுவார்.

டிசைன் பிரிவில் எந்நேரமும் புது முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கும். ஐந்துக்கு ரெண்டு பழுதில்லை என்பது போலத்தான் வெற்றி விகிதமும் இருக்கும். எப்பொழுதாவது ஜாக்பாட் போல அவர்கள் டிசைனில் உருவான இயந்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுவிடும். சில சமயம் அவர்கள் மிக அட்வான்ஸாக டிசைன் செய்து, அங்கிருக்கும் குறைவான தொழில்நுட்பத்தால்  சரியாக பெர்பார்மன்ஸ் கொடுக்காமல் தோல்வி அடைவதும் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்நாட்டின் பல கிராமங்களில் மின் வசதி கூட இல்லாத காலத்தில், சிறிய ஜெனெரேட்டர்களை தயாரிப்பதற்கு டிசைன் எல்லாம் செய்தார். இதற்கு இப்போது என்ன தேவை என போர்டு மீட்டிங்கில் நிராகரித்து விட்டார்கள்.

இந்த டிசைன் மேனேஜரால அப்பப்ப நஷ்டம் வந்துவிடுகிறது என பேச்சாக இருந்தாலும், அவர்கள் எடுக்கும் முயற்சிகளால் மற்ற தொழிலாளர்களுக்கு கூடுதல் அறிவு கிடைத்தது. வெற்றியடைந்த சில பிராடக்ட்களால் கம்பெனிக்கு நல்ல பிராண்ட் நேம் கிடைத்தது. எனவே கம்பெனி அவருக்கு பெரிய தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த நேரத்தில் புரடக்ஷன் மேனேஜருக்கு நல்ல பெயர் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது. நிர்வாகத்திடமும். தொழிலாளர்களிடமும் தன்மையாக நடந்து கொண்டதால் இருந்த மேலாளர்களிலேயே சிறந்தவர் என பெயர் கிடைத்தது

அந்த சமயத்தில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த பலர் வெவ்வேறு நிறுவனங்களுக்குச் சென்றார்கள். நிறுவனமும் விரிவடையத் தொடங்கியிருந்ததால் ஏராளமான புதுமுகங்கள் உள்ளே வந்தார்கள். வந்த அனைவருக்குமே புரடக்ஷன் மேலாளர் ஏற்கனவே பெற்றிருந்த நற்பெயரால் அவர் மீது ஒரு நல் அபிப்ராயம் இருந்தது. அவரும் என்னப்பா எப்படி இருக்கீங்க என புதியவர்களைச் சந்திக்கும் போது அளாவளாவ அவருக்கு இன்னும் மரியாதை கூடியது. டிசைன் மேலாளரோ திறமையானவர்கள், நல்ல உழைப்பாளிகள் என்றால் ஒரளவு பேசுவார். மற்றவர்களிடம் பாராமுகமாய் இருப்பார். நான் சில காலம் அவரிடம் இருந்தேன். நிறைய கற்றுக்கொண்டேன்

அடுத்த தலைமுறை உதவி மேலாளர்கள் எல்லாம் புரடக்ஷன் மேலாளரைப் போலவே வேலை பார்க்கத் துவங்கினார்கள். இருக்கும் தொழில்நுட்பத்தை அப்படியே வைத்துக் கொள்வோம். புதிய முயற்சிகள் வேண்டாம். நம்மால் நஷ்டம் வந்தது என்ற பேச்சு வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே வேலை பார்த்து அவர்களும் மேலாளர்களானார்கள். டிசைன் பிரிவுக்கு போவதற்கு மிகவும் தயக்கம் காட்டினார்கள். ஓரிரு பிராஜக்ட்களில் இருந்துவிட்டு பின்னர் வேறு பிரிவிற்கு மாறிக்கொண்டார்கள்.

புரடக்சன் மேலாளர் இப்போது சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஆகிவிட்டார். டிசைன் மேலாளர் வைஸ் பிரசிடெண்ட். அந்த நேரத்தில், நான் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டேன். பெண்கள் திருமணமாகி வேறு ஊருக்குச் சென்றாலும், தங்கள் தெரு வம்புகளை அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்வது போல, நானும் எனக்கு நெருக்கமாய் இருந்த அக்கவுண்ட்ஸ் மேலாளரிடம் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்வேன்,
சில ஆண்டுகளில், டிசைன் சாப்ட்வேர்கள் எல்லாம் கம்பெனியில் வாங்கி இருப்பதாகவும், முன்போல பேப்பரில் வரைவது போல் சிரமப்படாமல் இப்போது டிசைன் டீம் எளிதாக வேலை செய்வதாகவும் சொன்னார். புதிதாக வேலைக்குச் சேர்ந்த சிலர் டிசைன் பிரிவில் இப்போது ஆர்வம் காட்டுவதாகவும்  சொன்னார். டிசைன் மேலாளர் முன்னர் செய்து வைத்திருந்த ஏராள முயற்சிகளால் புதிதாய் வந்தவர்கள் எளிதில் அதை கற்றுக் கொண்டு அவருக்கு இணையாகவும். ஏன் அவரைவிட சிறப்பாகவும் பணியாற்றத் துவங்கினார்கள். தற்போது வைஸ் பிரசிடெண்ட் ஆக இருந்தாலும், அவர்களுக்கு இணையாக அவரும் சில முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே தான் இருந்தார்

இப்போது புரடக்சன் துறையிலும் புது முயற்சிகளை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகி இருந்தது. வழக்கமான முறையிலேயே செயல்பட்டால் லாபம் குறையும் நிலை இருந்தது. எனவே இப்போது சீனியர் வைஸ் பிரசிடெண்ட், புது முயற்சிகளை மேற்கொள்ளும் உதவி மேலாளர்களுடன் இணைந்து சில முயற்சிகளைச் செய்தார். அதிக லாபம் கிடைக்கவும் அவருக்கு இன்னும் பெரிய பேர் கிடைத்தது.
நிறுவனத்தில் உள்ளவர்களிடம் எல்லாம் இதேதான் பேச்சாக இருக்கிறதாம். இவர் மட்டும் ஆரம்பத்திலேயே டிசைன் பிரிவுக்கு போயிருந்தால் இந்நேரம் இந்த நிறுவனத்தின் டிசைன் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்களாம்.

கால ஓட்டத்தில் நானும் மேலாளர் ஆகிவிட்டேன்.  சென்ற வாரம் நந்தனம் ட்ரேட் செண்டரில் ஒரு இண்டஸ்டிரியல் எக்ஸ்போவுக்குப் போயிருந்தேன். சுற்றி வந்து கொண்டிருந்த போது,  பழைய நிறுவனத்தில் என்னிடம் பணியாற்றிய ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவரும் தற்போது இன்னொரு நிறுவனத்தில் மேலாளர். தொழில்துறை பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம். எங்களின் டிசைன் மற்றும் புரடக்ஷன் மேலாளர்கள் பற்றித்தான் அதிகம் பேசிக் கொண்டோம். விடைபெறும் போது அவர், நீயும் இப்போது மேலாளர் ஆகிவிட்டாய், யார் பாணியை பின்பற்றுகிறாய்? உனக்குப் பிடித்த டிசைன் மேலாளரைப் போலத்தானே நீயும் இருப்பாய் எனக் கேள்வியையும் கேட்டு பதிலையும் அவரே சொல்லிக் கொண்டார். நான் சிரித்த படியே, அவரைப் பிடிக்கும் தான் ஆனால் நான் வேலையில் பின்பற்றுவது புரடக்சன் மேலாளரின் வழி என்று சொல்லிவிட்டு அவரின் ஆச்சரியப் பார்வையுடன் விடை பெற்றேன்.   

சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள். டிசைன் பிரிவு மேலாளரின் பெயர் கமல்ஹாசன். புரடக்‌ஷன் பிரிவு மேலாளரின் பெயர் ரஜினிகாந்த்.