tag:blogger.com,1999:blog-14709684738513591112024-03-05T13:27:26.036+05:30முரளிகண்ணன்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger364125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59047958555130782132023-12-15T14:49:00.002+05:302023-12-15T14:49:16.708+05:30கலைஞர் பெண்ணுக்கு சொத்து நாங்கள் திருமணமான புதிதில் சென்னையில் வசித்து வந்தோம். அப்போது எங்கள் வீட்டிற்கு பணிகள் செய்ய உதவியாக வந்தவர் குப்பம்மா. அப்போது அவர் மூன்று வீடுகளில் வேலை செய்து வந்தார். ரொம்ப கரெக்டாக இருப்பார் என்று அவரை சிபாரிசு செய்தவர் சொன்னார். அது போலவே அவர் சொன்ன நேரத்திற்கு சரியாக வருவார். வேறு எதுவும் பேச்சுகள் எதுவும் இல்லாது பணிகளை முடித்து விட்டு, சென்று விடுவார். ஒரு ஞாயிறு மாலை அவர் வேலை முடித்து விட்டுச் செல்ல யத்தனிக்கும் போது பெரு மழை பிடித்துக் கொண்டது. மழை நிற்கும் வரை இங்கே இருங்கள் எனச் சொல்லிவிட்டு டிவி பார்க்கத் துவங்கினோம். விளம்பர இடைவேளையில் சேனல் மாற்றும் போது ஒரு எம்ஜியார் பாட்டு வந்தது. அது வரை அசுவராசியமாகிய டிவி பார்த்தவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். நானும் எதுவும் கேட்காதவர் விரும்பி பார்க்கிறாரே என சேனல் மாற்றவில்லை.
அது எங்களுக்குள்ளான ஒரு பாசப் பிணைப்பு துவங்க ஒரு புள்ளி எனச் சொல்லலாம். டிவியில் எம்ஜியார் படம் ஒளிபரப்புவதாக தெரிந்தால் எங்கள் வீட்டில் வந்து பார்ப்பார். எங்கள் முதல் குழந்தை பிறந்த போது அவராகவே பணிகளை எடுத்துப் போட்டு செய்தார். அதே போல அவருக்கு காபி தான் பிடிக்கும். மற்ற வீடுகளில் அப்போது என்ன செய்கிறார்களோ அதைத் தருவார்கள். எங்களிடத்தில் அவரே உரிமையாக காபி போட்டுக் கொள்வார். போதாக்குறைக்கு நான் பிறந்த ஊருக்கு அருகே தான் அவர் ஊரும்.இப்படியாக எங்களிடையேயான இறுக்கம் தளர்ந்த நாட்களில் தன் குடும்பக்கதையை பகிர்ந்து கொண்டார்.
அவர் நல்ல வசதியான விவசாயக் குடும்பத்தில் நான்கு அண்ணன்களுடன் பிறந்தவர். அவர் திருமணத்தின் போது அவருக்கு 5 பவுன், மாப்பிள்ளைக்கு 1 பவுன், ஒரு சைக்கிள், ஒரு வாட்ச், மற்றும் பாத்திர பண்டங்கள் கொடுத்து ஊர் கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர் கணவரும் தன்மையானவர். அவருடன் பிறந்தவர்கள் அக்கா, தம்பியென நால்வர். பெரிய வசதி இல்லாத குடும்பம். இவர்களுக்கு மணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. குப்பம்மாவின் திருமணத்திற்குப் பின் அவர் அப்பா, அம்மா இருவரும் நான்காண்டு கால இடைவெளியில் இறந்து போய் விட்டனர். பேரிடியாக அவர் கணவர் விவசாய வேலைக்குப் போன போது பாம்பு கடித்து இறந்து விட நிர்க்கதியானார் குப்பம்மா. புகுந்த வீட்டில் அவர் இருக்க முடியாத சூழல் நிலவியது. பிறந்த வீட்டிலும், அவரை ஏற்றுக் கொள்ள யாரும் விரும்பவில்லை. எனினும் சம்பளமில்லா வேலைக்காரியாக அங்கே தன்னை மாற்றிக் கொண்டார். அத்தனை வேலைகள் செய்தாலும், அத்தனை பேருக்கு சமைத்தாலும் கடைசியாக மிஞ்சும் உணவையே உண்ணும் நிலை.
அதெல்லாம் கூடப்பரவாயில்லை தம்பி, எனக்கு என்னவோ சின்ன வயசில் இருந்தே எம்ஜியார் படம்னா பிடிக்கும். எங்க ஊர்ல எப்ப எம்ஜியார் படம் வந்தாலும் ரெண்டு மூணு வாட்டி பார்த்திடுவேன். என் வீட்டுக்காரருக்கும் எம்ஜியார்னா உசுரு. மதுரைக்கு போனா படம் பார்த்துட்டு கிளப் கடையில் ஒரு காப்பி சாப்பிட்டுத்தான் வருவோம் தம்பி. அப்படித்தான் எனக்கு காப்பி பழக்கம் வந்துச்சு. அது என்னமோ காப்பி எனக்கு பிடிச்சுப் போச்சு. இவங்க கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன். எப்பவாச்சும் எம்ஜியார் படம், என்னைக்காச்சும் அர வாய் காப்பி. மூளியா வந்தவ மூலையில உட்காராமா என்ன படம் வேண்டிக்கிடக்கு? நாக்கு ருசி கேட்குதோன்னு நாத்தனார் காரிக கரிச்சுக் கொட்டுவாங்க. அண்ணன்களும் ஏதும் சொல்ல மாட்டாங்க. ஏன் எனக்குன்னு என்னதான் அப்புறம்னு ஒரு நாள் பஸ் ஏறி இங்க வந்துட்டேன். இங்க பொழைச்சுக்கிலாம்னு. மகராசனை நேரில பார்க்கனும்னு ஒரு ஆசையும் இருந்துச்சு. நான் வந்து கொஞ்சநாள்ல அவரும் போய்ச் சேர்ந்துட்டார். அப்படியே இங்க மிச்ச காலத்த கழிச்சிருவோம்னு இருந்துட்டேன். மனசு சரியில்லன்னா பீச்சுக்கு போயி அவர் சமாதியைப் பார்த்துட்டு வருவேன். அப்ப என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லுவேன், பாருய்யா உன் கூட வாழவும் எனக்கு கொடுத்து வைக்கல, நீ வாழ்ந்த இடம், உன்னைய பொதச்ச இடம் எதுக்குமே நான் போய் பொழங்க கொடுத்து வைக்கல, என் மூலமா உனக்குப் பிடிச்ச எம்ஜியாரைப் பாருன்னு.
ஆற்றாமையில் கொட்டிவிட்டு, சொன்னார், எங்க அப்பாக்கு எங்க ஊர் சாமிக்கு பூ அலங்காரம் விசேசத்துக்கு செய்யனும்னு ஆசை. அவர் இருந்தவரைக்கும் திருவிழா தவறாம கொடுத்துடுவார். இப்ப அண்ணன்க செய்யுறாங்களான்னு தெரியாது, நீங்க உங்க ஊருக்குப் போகும் போது, ஒரு எட்டுப் போயி, எங்க ஊர் கோயில்ல எங்க அப்பா பேரைச் சொல்லி பூ அலங்காரத்துக்குன்னு நான் கொடுக்கிறத கொடுங்க என்பார். அதன்படி அவ்வப்போது கொடுப்பேன்.
2006 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தது. திமுக வெற்றி பெற,பெற மகிழ்ச்சியோடு இருந்து கொண்டிருந்தேன். ஸ்வீட் வாங்கி வந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது குப்பம்மா வீட்டுக்கு வந்தார். அம்மா ஸ்வீட் சாப்பிடுங்க என்ற உடன் என்ன இவ்வளோ சந்தோஷம் என்றார்? எங்க கட்சி ஜெயிச்சிருச்சு என்றேன். அவர் முகம் களை இழந்தது. என்ன தம்பி, நீங்க கலைஞர் கட்சியா என்றார். ஆமா அவரை ரொம்ப பிடிக்கும் என்றேன். அவருக்கு நிறைய சம்சாரம், எங்க எம்ஜியாருக்கு அவரைப் பிடிக்காதே என்றார். சம்சாரம் அவங்க குடும்ப பிரச்சினை. மக்களுக்கு நல்ல நல்ல திட்டம்லாம் கொண்டு வந்திருக்கார் என்றேன். எனக்கு என்னவோ அவரைப் பிடிக்காது தம்பி என முடித்துக் கொண்டார்.
ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி என கலைஞரின் திட்டங்கள் குப்பம்மாவுக்கும் நன்மை அளித்தன. பார்த்தீங்களா எங்க ஆட்சியை?, இப்ப எம்ஜியார் படத்தை நீங்க எப்ப வேணுமுன்னாலும் பார்க்கலாம் என கிண்டலடித்தேன். அவரோ போங்க தம்பி, எங்க அம்மா வந்திருந்தாலும் கொடுத்திருக்கும் என முடித்துக் கொண்டார்.
அடுத்த சில ஆண்டுகளில் வேறு ஊருக்கு செல்ல வேண்டிய சூழல். எங்க கூட வந்திருங்க என்று சொல்லிப் பார்த்தோம். அவருக்கோ சென்னை தான் மனதுக்கு உகந்ததாய் இருந்தது. என் மனைவிக்கு குப்பம்மாவை விட்டு பிரியவே மனம் இல்லை. நான் எங்க வீட்டுல இருந்த மாதிரியே இங்க இருந்தேன் உங்கனால என கண்ணீர் சிந்தினார். மகன் கூட பாட்டி நம்ம கூட வரல்லையா எனக் கேட்டான்.
அவர் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த வீட்டுக்காரர்களின் எண்களை வாங்கிக் கொண்டேன். தீபாவளி போன்ற விசேச நாட்களில் அவருக்கு பேசுவோம். ஊருக்குப் போகும் போது அவர் அப்பா பெயர் சொல்லி பூ அலங்கார காணிக்கையும் அவ்வப்போது கொடுப்பதுண்டு.
திடீரென ஒரு நாள் சிலர் என்னைத் தேடி வந்தார்கள். குப்பம்மாவின் உறவினர்களாம். கோவில் பூசாரி மூலம் நான் குப்பம்மா தந்தை பெயரில் பூவுக்கு காசு கொடுப்பது அறிந்து என் ஊரில் விசாரித்து இங்கே வந்துவிட்டார்கள். வேறு ஒன்றும் இல்லை. அவர்கள் தந்தை இறந்த உடன் வீடு, சொத்துக்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரிடம் அப்போது இருந்த நாப்பது ஏக்கர் நஞ்சை, நாலு வீடுகளை சமமாக பங்கிட்டுக் கொண்டார்கள். அப்போது ஊரை விட்டு வெகு தொலைவில் இருந்த இரண்டரை ஏக்கர் வானம் பார்த்த பூமியை பேச்சு வார்த்தை சரி வராமல் விட்டு வைத்திருந்திருக்கிறார்கள். அதில் உடனடி வருமானமும் இல்லாததால் அப்படியே போட்டு வைத்து விட்டார்கள். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகமாகிக் கொண்டே வர, அது அப்படியே பொதுச் சொத்தாக இருந்து கொண்டே இருந்தது.
இப்போது அந்தப் பக்கம் ஒரு மேம்பாலம், நான்கு வழிச் சாலை, ஏராள கேட்ட் கம்யூனிட்டி குடியிருப்புகள் வர வர அந்தப் பகுதியின் நில மதிப்பு விண்ணைத் தொட்டது. புகழ்பெற்ற ஒரு கட்டுமான நிறுவனம் அந்தப் பகுதியில் கால் பதிக்க இவர்களின் இடத்தை தேர்வு செய்தது. 500 கோடிக்கும் மேற்பட்ட பிராஜக்ட் எனவே பத்திரம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டுமென அவர்கள் லீகல் டிபார்ட்மெண்ட் ஒப்பீனியன் கொடுக்க, உள்ளூரில் விசாரித்தது அவர்கள் டீம். ஒரு பெண் வாரிசு இருக்கிறார். அவர் கையெழுத்து இருந்தால் தான் அது செல்லும் என கலைஞர் 1989ல் போட்ட பெண்ணுக்கு சொத்தில் உரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி சொல்ல. அவரைத் தேட ஆரம்பித்து என்னிடம் வந்து சேர்ந்தார்கள்.
அந்தப் பகுதியில் இப்போதைய செண்ட் மதிப்பு பத்து லட்சம். ரெண்டரை ஏக்கருக்கு 25 கோடி வரும். ஐந்தாகப் போட்டு 5 கோடி கொடுங்கள் எனக் கேட்டேன். இதை குப்பம்மாவிடமும் தெரிவித்தேன். அவரோ அதிர்ச்சி அடைந்தே விட்டார். பின்னர் ஊர்காரர்கள், அவங்க கொடுக்குறத வாங்கிக் கொடு தம்பி, இல்லேன்னா வண்டி ஏத்தி தூக்கி விட்டுருவாங்க அவங்க அண்ணன் பிள்ளைக என்றார்கள். இறுதியில் 3 கோடி என முடிவானது.
பத்திரப்பதிவு நாளும் வந்தது. கம்பெனி பணத்தை, நேரடியாக குப்பம்மாவிடம் கொடுத்தது. சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நானும் அவருடன் சென்றேன். சார்பதிவாளர் முன்னிலையில் போட்டோ எடுத்து கையெழுத்து இடும்போது தான் கவனித்தேன் குப்பம்மாவின் உண்மையான பெயர் குபேர லட்சுமி. சார்பதிவாளரின் தலைக்கு மேல் மஞ்சள் சால்வை அணிந்த கலைஞர் சிரித்துக் கொண்டிருந்தார்.முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5560368881961696482023-08-12T13:04:00.001+05:302023-08-12T13:04:22.367+05:30சேது மாமாஞாயிறு மாலை 5 மணி. மதுரை சென்ட்ரல் தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருக்கிறேன். அலை பேசி ஒலித்தது. மகன். வரும் போது தெற்கு வாசல்ல உன் பிரண்ட் கடையில் பரோட்டா வாங்கிட்டு வந்துருப்பா. ரொம்ப நாளாச்சு. லாக்டவுன் போட்டதில் இருந்து மதுரைக்கே நீங்க போகலைல என்றான். ஆறேழு மாதம் கழித்து இன்று தான் மதுரைக்கு வந்திருக்கிறேன். மகனும் என்னைப் போலவே பரோட்டா பிரியன். எத்தனை ஊர், எத்தனை கடைகள். எத்தனை விதமான பரோட்டாக்களை சாப்பிட்டாயிற்று. ஆனால் முதன் முதல் பல நாள் ஏக்கமாக ஏங்கி பரோட்டா சாப்பிட துடித்த போது வாங்கித் தந்தவர் சேது மாமா தான். எத்தனையோ சிறப்புகள், சுகங்கள் வாழ்வில் அனுபவித்தாலும் அது கிடைக்காதா என ஏங்கிய போது, அதைக் கொடுத்தவர்களை மறக்க முடியுமா?
அவரை எப்படியாவது சந்தித்து விட வேண்டுமென்று பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கிறேன். அவருக்காகத்தான் இப்போது இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இன்று சென்ட்ரல் தியேட்டரில் சிவாஜி படம். ஞாயிறு மாலைக் காட்சிக்கு வழக்கமாக சிவாஜியின் ரசிகர்கள் வந்து கூடுவார்கள் என்பதால் இன்றாவது சேது மாமா வந்து விடுவாரா என்று ஆவலுடன் நின்று கொண்டிருக்கிறேன்.
சேது மாமா ஒரு தீவிர சிவாஜி கணேசன் ரசிகர். தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், திரிசூலம் என்ற தி வரிசை சூப்பர் ஹிட்களானாலும் சரி, பாசமலர், பாவ மன்னிப்பு, பாகப் பிரிவினை போன்ற பா வரிசைப் படங்களானாலும் சரி. எதையுமே 20 முறைக்கு குறைந்து அவர் பார்த்ததே இல்லை. எங்கெல்லாம் சிவாஜி படம் ஓடுகிறதோ அங்கெல்லாம் அவர் இருப்பார். அது திருவிழா திரையிடலாக தெருவில் இருந்தாலும் சரி, தீபாவளி ரிலீஸாக இருந்தாலும் சரி. சிவாஜியின் உடைகள், சிவாஜியின் மேனரிசங்கள், அவரின் வசனங்கள் என்ரே வாழ்வார். பாசக்காரர். என் அம்மாவுடன் பிறந்தது 5 ஆண்கள், இரண்டு பெண்கள். என் அம்மா ஆறாவது. அவருக்குப் பின் பிறந்த இரண்டு தம்பிகளில் ஒருவர் தான் சேது மாமா. இன்னொருவர் சிவா மாமா.
அப்போது எங்கள் தந்தை குடும்பம் வறுமையில் இருந்த காலகட்டம். ஊர் திருவிழாவிற்கு வரக்கூட என் தந்தை தயங்குவார். நானும் என் அம்மாவும் மட்டும் போவோம். உள்ளே நுழைந்ததும் பெரிய மாமா பசங்களும், பெரியம்மா பசங்களும் கூட கறிக்கு வந்துட்டாங்களா என்று நக்கல் அடிப்பார்கள். அப்போது அதற்கு கோபப்படும் அளவுக்கு கூட கூறில்லை. அசட்டு சிரிப்புடனேயே வளைய வருவேன்.
என் தாத்தா அப்போது இல்லை. பாட்டி மட்டும் தான். மூத்த மகன்களுக்கும், மகள்களுக்கும் நல்ல படிப்பு, திருமணம் என செய்து கொடுத்து விட்டு, வசதி குறைந்த நாளில் என் தந்தைக்கு மணம் செய்து கொடுத்திருந்தார்கள். எனக்கும் நல்லா செய்யலாம்ல எனக் கேட்க கூட தெளிவில்லாத பெண்ணாகவே அம்மா இருந்திருக்கிறார். இன்னும் இரண்டு மகன்களுக்கு வேறு திருமணம் செய்ய வேண்டி இருந்ததால் அது பற்றி வேறு யாரும் கூட யோசிக்கவில்லை.
சேது மாமா என் அம்மாவிற்கு இரண்டு வயது குறைவு. அவருக்கு அடுத்த சிவா மாமா அவரை விட இரண்டு வயது குறைவு. சேது மாமா தன் தாய் மாமா பெண்ணை காதலித்து வந்தார். அவர் அப்போது ஒரு உரக்கடையின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தார். எந்த ஊருக்குப் போனாலும் தன் மாமன் மகளுக்கு ஏதாவது வாங்கி வந்து கொடுப்பார். மாமன் மகளுக்கு மட்டுமல்ல யாருக்கு எது தேவையோ கேட்காமலேயே வாங்கிக் கொடுப்பார். அது போக ஊர் விசேஷமாய் இருந்தாலும் சரி, வீட்டு விசேசமாய் இருந்தாலும் சரி முன்னால் நிற்பார். இந்த திருவிழாவிற்கு வீட்டிற்கு வருபவர்களுக்கு கூட முன் கூட்டியே திட்டமிட்டு எல்லாவற்றையும் செய்து வைப்பார். சிவா மாமா அப்படியே எதிர். தான் உண்டு. தன் வேலை உண்டு. ஒரு தனியார் போக்குவரத்து அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். எதிலும் பட்டும் படாமல் இருப்பார். இறங்கிச் செய்ய மாட்டார். வீட்டு பொது செலவுகளுக்கு கூட காசு கொடுக்காமல் சேர்த்து வைப்பதாக கேள்வி.
சரி. பரோட்டாவிற்கு வருவோம். எங்கள் தெருவில் சாயங்காலம் ஆனால் சில வீடுகளில் பரோட்டா பார்சல் வாங்கி வருவார்கள். அது பற்றி தெருவில் விளையாடும் போது பசங்கள் பேசிக் கொள்வதுண்டு. அப்போது முதலே பரோட்டா மீது ஆசை. வீட்டில் ரேசன் அரிசி சாப்பாடு தான். அதுவே அரை வயிற்றுக்கு. தந்தை வேலை பார்த்துக் கொண்டிருந்த மில் ஒன்று கைமாறி அவருக்கு வேலை இழப்பு. எந்த வேலையும் அமையாமல் சில மாதம் அலைந்து, பின்னர் ஒரு சைக்கிள் கடையில் வேலை. அம்மா அப்போது தான் டெய்லரிங் பழகிக் கொண்டிருந்தார்.
இந்த சூழலில் தான் ஊர் திருவிழாவிற்குச் சென்றிருந்தோம். மாமா, பெரியம்மா பசங்கள் எல்லோரும் தத்தம் பெற்றோரிடம் காசு வாங்கிச் சென்று இரவு பரோட்டா சாப்பிட்டது கேள்விப்பட்டு வருத்தம்.அதை நினைத்து அடுத்த நாள் வருத்தமாய் இருந்த போது, சேது மாமா வந்தார். எப்படி யூகித்தார் எனத் தெரியவில்லை. வாடா, சைக்கிள்ள உட்காரு என கூட்டிச் சென்று கடையில் உட்கார வைத்து, நல்லா சாப்பிடுறா மருமகனே என பரோட்டா வாங்கிக் கொடுத்தார். அன்றிலிருந்து மாமா மனதுக்கு மிக நெருக்கமானவர் ஆகி விட்டார்.
மாமாவின் கல்யாணப் பேச்சு வந்தது. அவரின் தாய் மாமா, சிவாவுக்கு வேணா பொண்ணக் கொடுக்கிறேன், சேதுவுக்கு வேணாம் என்றார். எல்லோருக்கும் அதிர்ச்சி. அதற்கு அவர், உங்க வீட்ல பொதுவா இப்ப எதுவும் இல்ல, ஆள் ஆளுக்கு பிரிச்சு கொண்டு போயிட்டீங்க. சேது கருத்தாவே இல்ல. இன்னும் சினிமா பார்த்துக்கிட்டு, வீட்டுல எல்லாத்துக்கும் செஞ்சுக்கிட்டு இருக்கான். அவனை கட்டினா என் மக கஷ்டப்படும். சிவா தான் கருத்தான ஆளு. மக கஷ்டப்படக் கூடாதுல்ல என்றார். அதாவது தந்தையின் கோணம். ஆனால் அதற்கு மாமா பெண்ணும் ஒத்துக் கொண்டது எங்களுக்கு எல்லாம் அதிர்ச்சி. நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் சேது மாமா யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டுப் போய்விட்டார். தன் காதலி, தம்பி மனைவியாக இருக்கும் வீட்டில் எப்படி இருப்பது என.
சரி. ஏதோ கோபத்தில் போய் விட்டார். வந்து விடுவார் என சில நாட்கள் நினைத்தார்கள். அது சில வருடம் ஆனது. இதில் மற்றவர்கள் யாரும் அவரைத் தேடக்கூட நினைக்க வில்லை. பாட்டியும் என் அம்மாவும் தான் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஒரு முறை இருவரும் சேர்ந்து, என் தந்தையிடம் சொல்லி, நாளிதழில் ஒரு விளம்பரம் கூட கொடுத்துப் பார்த்தார்கள். உபயோகம் இல்லை.
பாட்டி இயற்கை எய்தினார். இரண்டாம் நாள் சடங்கில் இடுகாட்டில் காக்கைக்கு சாப்பாடு வைத்து, அது எடுத்த பின்னர் தான் சடங்கு முடிந்து, வீட்டிற்குப் போய் சாப்பாடு போடுவார்கள். ஒரு காக்காய் கூட அன்று வரவில்லை. ஒரு உறவினர் கூட கிண்டலடித்தார். நாலு பிள்ளைக தாண்டா வந்திருக்கீங்க, ஒன்ன காணோம்ல. அதான் அந்த அம்மாக்கு உங்க சாப்பாட வாங்க மனசில்ல போல என்று. எங்கயாச்சும் போய் பிடிச்சுட்டாவது வாங்கய்யா என உறவில் வயதானவர்கள் அலுத்துக் கொண்டார்கள்.
இது நடந்து, சில நாட்கள் கழித்து என் அம்மா, என்னை அழைத்து, சேதுக்கு நான் எதுவுமே பண்ணலைடா. நீ வயித்தில இருந்தப்ப, யாருமே என்னைக் கவனிக்கலை. தாத்தா வேற அதுக்கு முன்னதான் இறந்திருந்தார். பாட்டி இருக்கிறத செய்யும். வாய் எல்லாம் நம நமன்னு இருக்கும். சேது தான் அப்பவே அவன் சம்பாதிச்ச சொற்ப காசுலயும் எனக்கு பார்த்து பார்த்து வாங்கித் தந்தான். அவனுக்கு என் கையால நல்லது பொல்லது ஆக்கிப் போடனும்னு நெனைப்பேன், நாம தலை நிமிர்ற நேரம், கல்யாணப் பிரச்சினையால ஊர விட்டே போயிட்டான். எனக்கு ஒரே ஆசை தாண்டா. அவன எப்படியாச்சும் தேடிக் கண்டுபிடிச்சு, அவனுக்காக ஒரு அக்கா அழுதுக்கிட்டு இருக்கான்னு சொல்லி நல்ல சாப்பாடு அவனை சாப்பிட வைடா என்று சொல்லி தான் சேர்த்து வைத்த பணத்தைக் கொடுத்தார். இது நான் தச்சு சம்பாதிச்ச காசுடா. இதுல தான் அவனுக்கு நீ செய்யனும் என்றார்.
அதன் பின் நானும் பல முயற்சிகள் எடுத்து விட்டேன். பண்பலைகளில் நேயர் விருப்பம் பேசும் போது சேது மாமாவை பற்றி குறிப்பிடுவேன். வாங்க என்பேன். மியூசிக் தொலைக்காட்சிகளின் நேரலையில் நேயர்கள் பேசும் போதும் சரி, வாழ்த்து தெரிவிக்கும் ஸ்குரோலிலும் சரி அவரைப் பற்றிச் சொல்லி வரச் சொல்கிறேன். சமூக வலை தளத்தில் கணக்கு தொடங்கிய நாள் முதல் அவர் புகைப் படத்தை அடிக்கடி போட்டு வருகிறேன். பயனங்களில் யாருடைய அலை பேசியிலாவது சிவாஜி பாடல் ரிங் டோனாக ஒலித்தால் குதித்தெழுந்து அதை நோக்கி விரைகிறேன். அவர் வெளிநாட்டில் இருக்கலாம், இல்லை வேறு மாநிலத்தில் கூட இருக்கலாம், தமிழ்நாட்டில் வேறு ஏரியாவில் கூட இருக்கலாம். எந்த நம்பிக்கையில் நான் அவர் மதுரையில் இருப்பார், சிவாஜி படத்திற்கு வருவார் என நம்புகிறேன் என எனக்கே தெரியவில்லை. வேறு வழி ஏதும் புலப்படாத நிலையில் கிடைத்த வழியை நம்பி நடப்போமே அது போலத்தான் நான் சென்ட்ரல் தியேட்டரருக்கு வந்து கொண்டிருக்கிறேன்.
மணி ஆறரை ஆகி விட்டது. பெல் அடித்து படம் துவங்கிய சத்தம் கேட்டது. இன்றும் அவர் வரவில்லை. அம்மா கொடுத்த காசு பல ஆண்டுகளாக பத்திரமாய் இருக்கிறது. பெயர் சேதுராமன், ஐந்தே முக்கால் அடி உயரம் இருப்பார். இப்போது 65 வயது இருக்கும். அவர் மொபைலில் ரிங் டோனாக ஏதாவது சிவாஜி பாட்டோ, இல்லை அவர் படிக்கும் பத்திரிக்கையில் சிவாஜி படம் போட்டிருந்தாலோ நீங்கள் சேதுராமனா, பெரியகுளமா எனக் கேளுங்கள். ஆமாம் என்றால் நீங்கள் இதில் தெரிவியுங்கள். முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-73589952558807173902022-11-12T14:44:00.002+05:302022-11-12T14:44:16.944+05:30கமல்ஹாசனின் கேரக்டர் ஆர்க்தமிழ்சினிமாவில் ஹீரோக்களின் கேரக்டர் ஆர்க் பெரும்பாலும் சில டெம்பிளேட்களில் அடங்கி விடும். கல்லூரி மாணவன், இள வயது காதலன், நல்லது செய்யும் ஊர் பெரிய மனிதர், சோதனைகளை எதிர்கொண்டு அதை சாதனைகளாக்கும் நல்லவன், போலீஸ் அதிகாரி, டான் என சில டெம்பிளேட்களிலேயே தமிழ்சினிமா ஹீரோக்களின் கேரக்டர் ஆர்க் அடங்கிவிடும். கமல்ஹாசன் தன் ஆரம்பகால கட்ட படங்களில் இருந்தே இந்த டெம்பிளேட்டிற்குள் அடங்காமல் தன் ஹீரோ கேரக்டர் ஆர்க் இருக்க வேண்டும் என நினைத்தார். அதற்கு முக்கிய காரணம் கே பாலசந்தர் மற்றும் கமலுக்கு கிடைத்த மலையாள பட வாய்ப்புகள். அது போக அவரது இலக்கிய பரிச்சியமும் அவருக்கு பல கேரக்டர்களை பரீட்சித்துப் பார்க்க உதவியது. சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பிறகு ஏன் அவர் ஏற்காத கேரக்டர்களைக் கூட கமல்ஹாசன் ஏற்று நடித்திருக்கிறார்.
அப்படி அவர் ஏற்று நடித்த கேரக்டர்களில் முக்கியமான ஒரு பிரிவு மனநிலை பாதிக்கப்பட்ட, மூளை வளர்ச்சி குறைந்த கேரக்டர்கள். ஒரு நிகழ்ச்சியில் கமல் சொல்வார், நானும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை என் படங்களில் சித்தரித்து இருக்கிறேன். அவர்களை கேலிப் பொருளாக அல்ல. நாயகர்களாக என்று சொல்வார். அந்த கேரக்டர்களை திரையில் கொண்டு வந்து அவர்களின் வலியை பார்வையாளனுக்கு கடத்துவது கடினமான ஒன்று. அதை கமலால் எளிதாகச் செய்ய முடிந்ததற்கு காரணம் அவருக்குள் இருந்த திரைக்கதை ஆசிரியன்.
இரண்டரை மணி நேரப் படத்தில் நான்கைந்து பாடல்கள், ஒரு காமெடி ட்ராக் எனப் போய்விட்டால் 70-80 காட்சிகளே தேறும். அவற்றை புதிதாக, க்ளிஷே இல்லாமல் எழுதினால் தான் புதிதான ஒரு கேரக்டரை நம் மனதில் நிறுத்த முடியும். இல்லாவிட்டால் அது பத்தோடு பதினொன்றாய் போய் நம் மனதில் எந்த ஒரு இம்பாக்டையும் ஏற்படுத்தாமல் போய் விடும். கமல் நடித்த பல கேரக்டர்கள் பலர் மனதில் இருந்தும் அகலாமல் இருக்கக் காரணமே அந்த கேரக்டர்களுக்குத் தேவையான எழுத்துப் பின்புலமும் அதை நேர்த்தியாக திரையில் பிரதிபலித்ததும்தான்.
அது போல கமல் நடித்த சில மன நலம், மூளை வளர்ச்சி தொடர்பான கேரக்டர்கள் தமிழ்சினிமா வரலாற்றில் மறக்க முடியாதவை. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.
சிகப்பு ரோஜாக்கள்
பெண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதனால் சமுதாயத்தால் தண்டிக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரம். தனக்கு ஆதரவளித்தவரும் பெண் செய்த துரோகத்தால் பாதிக்கப்பட இன்னும் வீறு கொண்டு எழுகிறது அந்த மிருகம். இரையைத் தேடும் புலி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பதுங்கியே இருப்பது போல அந்த மிருகத்தை ஒளித்து வைத்து விட்டு சமூகத்தில் இயல்பாக உலா வரும் வேடம். அந்த வேடத்தை மிசச்சிறப்பாக செய்திருப்பார். ஒரு எலைட் பிஸினஸ் மேனாக, பின் பெண்களை பாலியல் துன்புறுத்தி கொல்பவனாக, தவறு உணர்ந்து வாடுபவனாக ஒரு முழுமையான சுற்றாக அந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும். அதை அனாயாசமாக கையாண்டிருப்பார்.
உல்லாசப் பறவைகள்
காதலி தீ விபத்தில் இறந்து விட அதனால் மனநலம் பாதிக்கும் இளைஞனின் வேடம் கமலுக்கு. பின் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று, குணமாகித் திரும்பும் வேடம்.
கல்யாண ராமன்
மூளை வளர்ச்சி குறைந்த பாத்திரம். இன்னொரு கேரக்டர் வழக்கமான கேரக்டர். இரண்டிற்கும் நடை,உடை பாவனைகள் மட்டுமில்லாது, எத்துப்பல், வாய்ஸ் மாடுலேசன் என மெனக்கெட்டிருப்பார். மூளை வளர்ச்சி குறைந்தவனுக்கு வரும் காதல், அது தொடர்பான அடுத்தடுத்த நிகழ்வுகள், ஏன் அவனுக்கு ஒரு நல்லது நடக்கக்கூடாது என்ற கேள்வி வரும் வகையில் அந்தக் கேரக்டர் அமைக்கப்பட்டு இருக்கும்.
சுவாதி முத்யம்
இந்தப் படம் இன்னும் ஸ்பெஷல். மூளை வளர்ச்சி குறைந்த ஒருவன், அவன் கணவனை இழந்து கஷ்டப்படும் ஒரு பெண்ணின் துன்பத்தை நீக்க அவளை மணக்கிறான். கடைசி வரை அவளை ஒரு ராணியாக உணரவைத்து தன் முயற்சியில் வெற்றி பெறுகிறான். கமல் நடித்த ஏராள வித்தியாச கேரக்டர்களில் இந்தப்படத்திற்கு தனி இடம் உண்டு.
குணா
ஒரு ஆணுக்கு மிகப்பெரிய வலியைத்தரும் வசவு வார்த்தை பாலியல் தொழிலாளி மகன் என்பது. அதுவே வாழ்க்கையாக இருந்தால் எவ்வளவு சிதைவு அடையும் அவன் மனது? அந்த சிதைவை, அதனால் அவன் அனுபவிக்கும் வேதனையை திரையில் கொண்டு வந்திருப்பார் கமல். அதில் இருந்து வெளியில் வர அவன் என்ன முயற்சிகளை எடுக்கிறான், அதில் வெற்றி பெற்றானா? என அந்தச் சூழலில் வளர்ந்த ஒருவனின் சித்திரம் தான் குணா.
தெனாலி
இலங்கையில் இருந்த போர்ச்சூழலால் மன பாதிப்படைந்த ஒருவனின் கதை. நகைச்சுவைப் படம் என்றாலும் அவன் வேதனை, அவன் பக்க நியாயங்கள், அவன் மீண்டு வருவது என தேவையற்ற மன பயம் கொண்டவர்களின் உருவமாக கமல் இருப்பார் இந்தப் படத்தில்.
ஆளவந்தான்
தாய் இறந்து விட, தந்தையாலும், சித்தியாலும் கொடுமைக்கு ஆளாகி மனச்சிதைவுக்கு ஆளாகும் வேடம். தாய் தவிர மற்ற பெண்கள் எல்லாமே கொடுமைக்காரிகள் என்கிற சித்திரம் மனதில் படிந்து விட, தன் உடன்பிறந்தவனின் மனைவியையே கொல்ல முயற்சிக்கிறான். அந்த முயற்சிக்கு தன் உடன்பிறந்தவனே தடையாய் வர அவனையும் கொல்ல முயற்சிக்கும் சிக்கலான மன சிதைவு கொண்ட வேடம்.
இது போன்ற கேரக்டர்கள் தவிர மூன்றாம் பிறை படத்தில் விபத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றி குணப்படுத்தும் வேடம், நாயகன் படத்தில் தன்னால் கொல்லப்பட்டவனின் மகன் ஒரு மூளை வளர்ச்சி குறைந்தவன் என அறிந்து அவனை பரிவுடன் பார்த்துக் கொள்வது என காட்சி அமைத்திருப்பார்.
மனநிலை பாதிக்கப்படுவது ஒரு நோய். அதற்கு சிகிச்சையும் பரிவும் தான் தேவையே தவிர கிண்டல் அல்ல. போலவே மூளை வளர்ச்சி குறைபாடும். அது அவர்களின் தவறு அல்ல. சமூகம் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற மறைமுகச் செய்தி அவரின் படங்களில் இருக்கும்.
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-23685886333621811362022-11-12T14:42:00.002+05:302022-11-12T14:42:29.049+05:30Kamal Hassan Fight Scenesகமல்ஹாசன் மீது ஏராளமான பிம்பங்கள் இருந்தாலும் உடன் நினைவுக்கு வராத பிம்பம் சண்டைக் காட்சிகளில் கலக்கும் நடிகர் என்பது.
தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் கமல்ஹாசன் என்றாலே நல்ல நடிகர், காதல் காட்சிகளில் கலக்குபவர், நன்றாக பாடக் கூடியவர், நன்றாக நடனம் ஆடக்கூடியவர், காமெடி படங்களிலும் வல்லவர் என்ற பிம்பமே தோன்றும். ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் ஏராளமான வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்தவர் யார் என்று பார்த்தால் அதில் கமலே முண்ணனியில் இருப்பார்.
தமிழ்சினிமா சண்டைக்காட்சிகள் என ஒரு வரலாற்றைப் பார்த்தால் ஆனந்தன், எம் ஜி ராமச்சந்திரன் காலத்தில் வாள் வீச்சு பிரபலமாக இருந்தது. பின்னர் சாண்டோ சின்னப்பா தேவர் – எம்ஜியார் இணை சிலம்ப சண்டைக்காட்சிகளை கொண்டு வந்தது. பின் வழக்கமான சினிமா சண்டைகளே தமிழ் சினிமாவை ஆக்ரமித்து இருந்தன.
ஒளிப்பதிவாளர்- இயக்குநர் கர்ணன் தன் படங்களில் குதிரை சண்டைகள், பைக்-கார் சேஸிங் என விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளை கொண்டு வந்தார். மற்ற இயக்குநர்களின் படங்களில் மாஸ்டர்கள் வழக்கமான சண்டைக் காட்சிகளையே அமைத்து வந்தார்கள்.
இந்நிலையில் எழுபதுகளின் இறுதியில் தொடங்கி எண்பதுகளின் ஆரம்பம் வரை ஹாலிவுட் படங்கள் முக்கியமாக புரூஸ்லியின் எண்டர் தி ட்ராகன் போன்ற படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இது மாதிரி சண்டைக் காட்சிகள் தமிழ்சினிமாவில் வராதா என ரசிகர்கள் ஏங்கிய போது இந்த சண்டைக்காட்சிகளின் பாதிப்பில் ஜூடோ ரத்னம், சூப்பர் சுப்பராயன் போன்ற மாஸ்டர்கள் சண்டைக் காட்சிகளை அமைக்க ஆரம்பித்தனர்.
கமலின் ஆரம்ப காலப் படங்களிலும் சண்டைக் காட்சிகள் ஹாலிவுட், சீன படங்களின் பாதிப்பில் தான் இருக்கும்.
ராம் லட்சுமண் படத்தில் வரும் சிலம்பு, ஜூடோ, கராத்தே சண்டை, சகல கலா வல்லவனில் ஒரு சகதி சண்டை, சிலம்பு சண்டை, கார் சேஸிங் என மசாலா படங்களுக்குரிய சண்டைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். , தூங்காதே தம்பி தூங்காதேயில் உட்காரும் பெஞ்ச் வைத்து போடும் சண்டையும் ரசிகர்களை கவர்ந்த ஒன்று. அதன் பின் வந்த காக்கிச் சட்டையில் ட்ரைலர் லாரியில் நடக்கும் சண்டைக்காட்சி மறக்க முடியாத ஒன்று. அப்படம் வந்து சில ஆண்டுகள் வரை ட்ரைலர் லாரியை அடையாளம் சொல்ல காக்கிச்சட்டை படத்துல வர்ற லாரி என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். காக்கி சட்டை படத்தில் ஒரு கையால் தண்டால் எடுப்பது, குழாயைப் பிடித்து சரசரவென ஏறுவது என பல காட்சிகள் இருக்கும்.
ஒரு கைதியின் டைரி படத்தில் புது ரோசாப் பூவு பாடலில் கமலுக்கு சற்று உயரத்தில் ஒரு கூண்டினுள் நின்று நடிகை ஆடிக்கொண்டு இருப்பார். படப்பிடிப்பில் திடீரென கூண்டு அறுந்து கமலின் வயிற்றின் மீது நடிகை கூண்டோடு விழுந்தார். அனைவரும் பதறி விட்டனர். ஆனால் கமல் தன் மூச்சை இழுத்துப் பிடித்து வயிற்றைக் கல்லாக்கியதால் தப்பித்தார். இதன் பின்னரே கமல் தன் ஸ்டண்ட் யூனியன் ஆட்களுக்கு இன்சூரண்ஸ் எடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்தார். புன்னகை மன்னன் படத்தில் தற்கொலை செய்ய குதித்து மரத்தில் தொங்கும் காட்சி போல பல ரிஸ்கான காட்சிகளில் அக்காலத்தில் நடித்து வந்தார்.
அப்போதிருந்த மாஸ்டர்கள் வழக்கமாக ஒரே மாதிரி ஹீரோ அடித்தால் வில்லன் அடியாட்கள் பறந்து போய் விழுவது போன்றே காட்சிகள் அமைத்து வந்தார்கள். கமலுக்கு அதில் திருப்தி இல்லை. அவர் அலைவரிசைக்கு ஏற்ப கொஞ்சம் ரியலிஸ்டிக்காகவும் இருக்க வேண்டும், பார்வையாளனை பரபரப்பில் ஆழ்த்த வேண்டும் எனவும் நினைத்தார். அதனால் புதுப்புது திறமைகளை உள்ளே கொண்டுன் வந்தார். விக்ரம் (1986) படத்தில் தர்மாவை ஊக்குவித்தார். அந்தப் படத்தில் வரும் சேஸிங் காட்சிகள் எல்லாம் சிறப்பாக அமைந்தன.
கமல் அப்போது சண்டைக் காட்சிகளை பற்றி சொல்லும் போது, படம் பார்த்துட்டு வர்றவன் நெஞ்சை நிமித்திட்டு வர்ற மாதிரி இருக்கனும், யாராச்சும் தப்பு செஞ்சா சட்டையப் பிடிச்சு உலுக்கிற மாதிரி ஒரு வெறி ஏறனும் என்பார்.
.நாயகன் படமே சண்டைக் காட்சிகளிலும் கமலுக்கு திருப்பத்தை தந்தது எனலாம். அதன் பின்னரே அவர் சற்று ரியலிஸ்டிக்கான சண்டைக் காட்சிகளின் பக்கம் திரும்பினார். சர்க்கரை கரைசலால் ஆன பாட்டிலை சண்டைக் காட்சிகளுக்கு பயன்படுத்தினார். ரத்தத்திற்குப் பதில் சிகப்பு சாயம் ஊற்றுவதை நிறுத்தினார். அதற்கென சில பொருட்களை பயன்படுத்தினார். காயங்கள் காயம் போலவெ தெரிய ஆரம்பித்தன. அடுத்து வந்த சத்யா படத்தில் சண்டைக் காட்சிகளில் சூப்பர் ஹீரோத்தனம் இல்லாமல் சற்று ரியலிஸ்டிக்கான சண்டைக் காட்சிகளே இடம் பிடித்தன. பாலத்தின் மீதேறி தப்பி ஓடும் கமலின் நண்பனை காலில் வெட்டும் காட்சிகள் அப்போது தமிழுக்குப் புதிது.
தேவர்மகனில் இன்னும் மெருகேறியது சண்டைக் காட்சிகள்.
சிலம்பு குச்சியில் சுண்ணாம்பு தடவி பொட்டு வைப்பது, நாசருடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை என சிறப்பாக அமைந்தது. அதில் நாசரின் தலை தனியே பூமியில் விழுந்திருப்பதில் கமலின் மேக்கப் ஈடுபாடு பயன்பட்டிருக்கும். மகாநதி படத்தில் கையை வெட்டிக் கொள்ளும் காட்சி லாஜிக்கலாக அமைந்தது.
குருதிப்புனலின் ரயிலின் முன் தாவும் காட்சி, சில துப்பாக்கிச் சூடு காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். இந்தியனில் சுதந்திர போராட்ட வீரனின் சண்டைக் காட்சிக்கும், மகல் கமலின் சண்டைக் காட்சிக்கும் பெரிய வேறுபாடு இருக்கும். பெரியவராக வர்மக்கலை உபயோகித்து போடும் சண்டைகளும் செம ஸ்டைலாக இருக்கும். (நெடு முடி வேணுவை தாக்கி தப்பிக்கும் காட்சி).
அதன்பின் எடுத்து கைவிடப்பட்ட மருதநாயக ட்ரெயிலரிலேயே நான்கைந்து சண்டைக் காட்சிகள் இருக்கும். வேலால் ஒருவர் குத்த வரும் போது, அடித்துப் போட்டு விட்டு எருமை மாட்டில் ஏறி தப்பிப்பது, அருவியின் மீதிருந்து பெரிய பாறையை உருட்டி விட்டு பலரை கொள்வது என. அந்த ட்ரெய்லரில் குதிரையின் கண்களில் கூட ஒரு கோபம் இருக்கும். காட்சி எடுக்கும் முன்னர் அக்குதிரையை சீண்டுவாராம் கமல்.
பின் வந்த ஆளவந்தானிலும் திரில்லுக்கு குறைவில்லை. சிறை கான்கீரீட்டை பல்லாலேயே கடித்து, சகோதரனின் தம்பி மனைவி மீது ஆக்ரோஷமாக துப்புவது. சகோதரனைக் கொல்ல துரத்துவது என. ஆளவந்தான் படத்திற்கு சண்டைக் காட்சி அமைக்க வந்த மாஸ்டரை வைத்து தமிழ் சினிமா ஸ்டண்ட் யூனியன் ஆட்களுக்கு ஒரு பயிற்சிப்பட்டறையும் நடத்தினார் கமல்ஹாசன்.
பின் வந்த பம்மல் கே சம்பந்தத்தில் ஸ்டண்ட் யூனியன் ஆளாகவே நடித்தார்.
விருமாண்டியில் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் காட்சி, ஓடும் வண்டியில் இணைக்கப்பட்ட கட்டையில் புல் அப்ஸ் எடுப்பது, சுற்றி உடலை வளைப்பது, கொத்தாளத் தேவர் வீட்டில் அரிவாள் எரியும் காட்சி, நல்லம நாயக்கர் தோட்டத்து ஆட்களை கொல்ல வரும் காட்சி என பல சிறப்பான காட்சிகள் உண்டு. காரில் வரும் போதே ஜன்னல் வழியாக அரிவாள் வீசுவது என கமலின் டைரக்டர் டச் அதில் தெரியும். கிளைமாக்ஸான சிறைக் கலவரம் காட்சியும் மறக்க முடியாத சண்டைக் காட்சி.
தசாவதாரத்தில் நம்பி போடும் பழங்கால சண்டை, பிளட்சரின் வெறித்தன சண்டை, ஜப்பானிய கமலின் குங்பூ சண்டை என வித்தியாச சண்டை காட்சிகள். அதிலும் பிளட்சரின் ஆரம்ப சண்டைக் காட்சியும், சிதம்பர சண்டைக் காட்சியும் விறு விறுப்பாக இருக்கும்.
விஸ்வரூபத்திலும் சண்டை காட்சிகள் வித்தியாசமாக அமைந்தன. சொல்லப்போனால் தன் சுயரூபத்தை காட்டும் ட்ரான்ஸ்பர்மேசன் சீன் தான் படத்தையே தாங்கியது எனலாம். கார் வரும் போது ஜன்னல் கண்ணாடியை சுட்டு, காரினுள் குதிப்பது, பாலைவனத்தில் நடக்கும் ஆயுத தாக்குதல்கள் எல்லாம் ரசிக்க வைக்கும்.
விக்ரம் (2022) படத்தில் குழந்தையை காப்பாற்றச் சென்று அந்த வீட்டில் போடும் ஒரு சண்டைக் காட்சி போதும். குழந்தைக்கு சத்தம் கேட்டு விடக்கூடாதே என்று போடும் சண்டையும், பின்னர் பால்பாட்டில் எடுக்க மீண்டும் வீட்டில் நுழையும் போது போடும் துப்பாக்கிச் சண்டையும் பார்வையாளனை சீட் நுனிக்கு கொண்டு வந்து விடும்.
கமல் தனக்கென சண்டைக் காட்சிகளில் ஒரு பாணியை வைத்துக் கொள்ளாமல் கேரக்டரின் குண நலனுக்கு ஏற்ப சண்டை போடுவதாலேயே இத்தனை வித சண்டைக்காட்சிகளை கொடுக்க முடிந்தது.
மேலும் அவர் சேகரிக்கும் வித வித பொருட்களும் சண்டைக் காட்சிகளை உயிர்ப்புடன் வைக்கின்றன. கலைஞனில் ஸ்டிலட்டோ, விஸ்வரூபத்தில் மூன்றாய் பிரியும் கத்தி, நாயகனில் நிஜ துப்பாக்கி என சண்டைக்காட்சிகளுக்கு வலு சேர்க்க முடிகிறது. விஸ்வரூபம் படத்திற்கு அவர் சேகரித்து வைத்திருந்த ஆயுதங்கள் தான் விக்ரமுக்கும் பயன்பட்டன.
அடுத்து வரும் கமலின் படங்களிலும் இது போன்ற ஆக்ஷன் காட்சிகளை எதிர்பார்க்கலாம்.
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5119849291669939942022-11-12T14:41:00.000+05:302022-11-12T14:41:00.905+05:30இயக்குநர் கமல்ஹாசன்25 ஆண்டுகளுக்கு முன்பு மருதநாயகம் படத்தின் வெள்ளோட்ட காட்சித் தொகுப்பு ஒன்று பத்திரிக்கையாளர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. முடிந்தபின்னர் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அந்தப் படத்தின் இயக்குநர் கமல்ஹாசனுடன் உரையாடினார்கள். அப்போது குங்குமம் பத்திரிக்கையில் இருந்த மாலன் அவர்கள் மற்றவர்களையும் நல்லா நடிக்க வச்சிருக்கீங்க அது முடியும் ஆனால் குதிரையும் அந்தக் காட்சிக்கு ஏற்ற சினத்தை கண்ணில் காட்டியதே எப்படி? என்று கேட்டார். அந்தக் காட்சிக்கு முன் குதிரையை குச்சியால் சீண்டிக் கொண்டே இருந்தேன் என்றார் இயக்குநர் கமல்ஹாசன்.
தமிழ்சினிமாவில் கமல்ஹாசன் மூலம் வெளிச்சம் பெற்ற, ரீ எண்டிரி கொடுத்த நடிகர்கள், நடிகைகள், திரைக்கதை வசனகர்த்தாக்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் உண்டு. பொதுவாக ஒரு இயக்குநர் மூலம் தான் பலரது திறமைகள் வெளிச்சம் பெறும். ஆனால் சமகால இயக்குநர்களுக்கு நிகராக ஏன் அவர்களை விட அதிகமாகவே பல திறமைகளை தனிழ்சினிமாவிற்கு கொண்டு வந்தவர் கமல்ஹாசன். ஏனென்றால் கமல்ஹாசனிடம் இருப்பது நாயக மனம் அல்ல. இயக்குநர் மனம்.
90களின் ஆரம்பத்தில் குணா, தேவர் மகன் படங்களில் காகா ராதாகிருஷ்ணனுக்கும் தேவர் மகன் படத்தில் கள்ளபார்ட் நடராஜன் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார். பிரமாதப்படுத்தினார்கள். கிட்டத்தட்ட எல்லோரும் மறந்திருந்த நடிகர்களை ஞாபகம் வைத்து அழைத்து வந்தது இன்னாருக்கு இன்ன ரோல் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கும் கமல்ஹாசனின் இயக்குநர் மனம். போலவே கிரேசி மோகனுக்கு கொடுத்த அபூர்வ சகோதரர்கள் வசனகர்த்தா வாய்ப்பு, மருதநாயகத்தில் பசுபதி, தேவர் மகனில் வடிவேலுக்கு ஒரு குணசித்திர நடிகர் வாய்ப்பு, எஸ் என் பார்வதிக்கு கொடுத்த தொடர் வாய்ப்புகள், நாசருக்கு என தனியாக சிந்திப்பது, ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியது என சொல்லிக் கொண்டே போகலாம்.
குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சோதனை எட்டு ஒன்பது வயதில் இருந்து தங்கள் பதின் பருவத்தை கடக்கும் வரை அவர்கள் எதிர்கொள்ளும் கிரீடம் இழந்த இளவரசனின் மன உளைச்சல். அதிலும் ஆண் நடிகர்கள். பத்து வயதுக்கு மேல் அதிக ரோல்கள் கிடைக்காது. குரல் உடைந்து விடும். பெரிய வேடங்களுக்கு 18 வயது வரை பொறுத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்வதும் சங்கடமாக இருக்கும். அந்தக் காலத்தில் ஒருவன் தன்னை எப்படி தகவமைத்துக் கொள்கிறான் எனபதே அவன் பிற்கால வெற்றிகளுக்கு அடித்தளமாய் அமையும்.
கமல்ஹாசனைப் பொறுத்த வரையில் அந்த வயது காலத்தில் தொடர்ந்து நடனப்பயிற்சி எடுத்து வந்தார். ஒரு நாட்டிய நாடகம் நடத்தும் எண்ணமும் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் தன் டீன் ஏஜை கடக்கும் போது அவருக்கு இயக்கத்தின் மீது நான் நாட்டம் அதிகமானது. அதை அவர் ஆரம்ப கால படங்களைப் பார்த்தால் அதை உணரலாம்.
கமல்ஹாசன் எழுபதுகளின் ஆரம்பத்தில் பணியாற்றிய படங்களைப் பார்த்தால் உதவி இயக்குநர், உதவி நடன ஆசிரியர் என்றே இருக்கும். நூற்றுக்கு நூறு, அன்னை வேளாங்கண்ணி படங்களில் உதவி இயக்குநர். நூற்றுக்கு நூறு படத்தின் இயக்குநர் கே பாலசந்தரிடம் ஏற்பட்ட அறிமுகத்தால் அரங்கேற்றம் படத்தில் பெயர் சொல்லும் படியான கேரக்டர். அடுத்து சொல்லத்தான் நினைக்கிறேனில் நடிப்போடு சேர்த்து உதவி இயக்குநர் வேலையும்.
இந்த காலகட்டத்தில் கமலின் ஒரே குறிக்கோள் இயக்குநர் ஆவதாகத்தான் இருந்தது. இயக்குநர் ஆர் சி சக்தியின் முதல் படமான உணர்ச்சிகளில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் கதை விவாதத்தில் இருந்து, வசனம், உதவி இயக்கம் வரை கமலின் பங்களிப்பு இருந்தது. தொடந்து கே பாலசந்தரின் படங்களான அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு என எல்லாப் படங்களிலும் அறிவிக்கப்படாத உதவி இயக்குநராகவே செயல்பட்டார் கமல்ஹாசன்.
தான் விரைவாக இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த கமல்ஹாசனுக்கு ப்ரேக் போட்டவர் பாலசந்தர் தான். நீ இயக்குநரா இருக்கும் போது ஹீரோ தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லாம உன்கிட்ட ஒரு மார்க்கெட் வேல்யூ இருக்கிற ஹீரோ இருந்தா நல்லது தானே? முதல்ல நடிச்சு உன்னை நிலை நிறுத்திக்கோ என்றார் கே.பி.
தொடர்ந்து நடிப்பில் முழுக்கவனம் செலுத்தினாலும் ஒரு இயக்குநராக என்னெவெல்லாம் என்ன திறமையெல்லாம் தேவையோ அதை எல்லாம் தேடித் தேடி சேர்த்துக் கொண்டே தான் இருந்தார் கமல்ஹாசன். பாரதி ராஜா, பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் துவங்கி ரா கி ரங்கராஜன், சுஜாதா போன்ற கதாயாசிரியர்கள் வரை அவர் நட்பிலேயே இருந்தார். அவர்களிடம் இருந்த கதைத்திறமையை உள்வாங்கிக் கொண்டார்.
ஒரு கம்பெனியின் சி ஈ ஓ ஆக விரும்புபவர்கள் தாங்கள் இருக்கும் துறை மட்டுமல்லாது மற்ற துறைகளைப் பற்றியும் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். தன் துறையிலும் ஒரு சி ஈ ஓ வைப் போலவே யோசித்து செயலாற்ற வேண்டும். அப்படித்தான் ஒரு இயக்குநர் மனநிலையிலேயே தான் கமல் திரைத்துறையில் செயல்பட்டு வந்தார். கதை, தன் கேரக்டர், உடன் நடிப்பவர்களின் பெர்பார்மன்ஸ், மற்ற எல்லா தொழில்நுட்ப விசயங்களிலும் ஒரு அறிவிக்கப்படாத இணை இயக்குநராகவே செயல்பட்டு வந்தார்.
சட்டம் என் கையில் என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி என் பாலுவின் அடுத்த படம் சங்கர்லால். படப்பிடிப்பின் பாதியிலேயே அவர் இயற்கை எய்தி விட, மீதிப் படத்தை ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதனுடன் சேர்ந்து இயக்கி முடித்தார். இதன் பின்னர் 80களின் மத்தியில் கமல் விரைவாகவே ஒரு படத்தை இயக்கி முடிப்பார் என்று திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் கமல் நிறைய முன் தயாரிப்புகளை செய்து கொண்டு இருந்தாரே தவிர களத்தில் இறங்க வில்லை.
தன் பெயரில் வரும் முதல் படம் தமிழ்சினிமாவால் மறக்க முடியாத படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அதற்கான களம் மருதநாயகம் படத்தில் அமைந்தது. ஆனால் சில காரணங்களால் படம் தடைப்பட்டது. தமிழில் பெரிய வெற்றி பெற்ற அவ்வை சண்முகியை இந்திக்கு கொண்டு சென்றார். அங்கே படத்தை இயக்க வந்தவருக்கும் கமலுக்கும் ஏற்பட்ட கிரியேட்டிவ் டிபரன்ஸில் அவர் விலகிக் கொள்ள கமலே படத்தை இயக்கினார்.
கஷ்டமான மேக் அப், உடன் நடிக்க அம்ரீஷ் பூரி, ஓம் பூரி, தபூ என தேர்ந்த நடிப்பு பட்டாளம். நகைச்சுவையை திரையில் இருந்து பார்வையாளனுக்கு கடத்த வேண்டிய கட்டாயம் இவை அனைத்தையும் எளிதாக சமாளித்து படத்தை வெற்றியாக்கினார்,
அடுத்து கமல்ஹாசன் இயக்கிய படம் ஹேராம். மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. டாக்கு-பிக்சன் ஜானரில் தமிழ்நாட்டின் முக்கிய படமாக இன்றளவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு ரெபரன்ஸாக இருக்கக் கூடிய படமாகவும் இருக்கும்.
அதற்கடுத்து இயக்கிய விருமாண்டி திரைப்படமும் திரைப்பட ஆர்வலர்களிடமும் தற்போதைய இளைய சமுதாயத்திடமும் பேசு பொருளாக இருந்து வருகிறது. இருபது ஆண்டுகள் ஆகப்போகும் வேளையிலும் அப்பட கதாபாத்திரங்கள் பேசு பொருளாகவே
இருந்து வருகிறது. அதன் பின்னர் கமல் இயக்கிய விஸ்வரூபம் திரைப்படமும் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒரு சேர திருப்திப்படுத்தியது.
யோசித்துப் பார்த்தால் மூன்று திரைப்படங்கள் ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் இதற்கு இணையான தரத்தில் தமிழ்சினிமாவில் மூன்று படங்களை கொடுத்த இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் இந்தப் படங்களை இயக்க கமல் எடுத்துக் கொண்ட் முன் தயாரிப்பு பெரிது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் சிறுகச் சிறுக சேமித்து ஒரு வீடு வாங்குவதைப் போல அவர் தன் திரைப்பயணத்தில் கற்றவற்றைக் கொண்டு இந்தப் படங்களை இயக்கினார்.
இனி எதுவும் கற்றுக்கொள்ள தேவையில்லை என்ற போதிலும், சில மாதங்கள் முன்பு அமெரிக்கா சென்று திரைக்கதை பயிற்சிப்பட்டறையிலும் கலந்து கொண்டு வந்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் பெற்ற சமூக அனுபவம், அரசியல் அனுபவத்தையும் கொண்டு மேலும் சில தமிழ் சினிமா மறக்க இயலாத படங்களை கமல் இயக்க வேண்டும்.
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7008994232387608402022-08-27T16:14:00.001+05:302022-08-27T16:14:12.451+05:30ஆணும் சமைக்கனும்கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் 23 வயது வரை வளர்ந்தவன் நான். உணவோ, உடையோ, சினிமாவோ, புத்தகங்களோ எதுவுமே கேட்காமலே கிடைக்கும் வசதியான குடும்பத்தில் தான் பிறந்தேன். அதுவும் ருசியான உணவுக்கு பஞ்சமேயில்லாத வாழ்க்கை. தந்தை அரசு அதிகாரி. போஜனப் பிரியர். வாரத்தில் இரண்டு நாள் காலை சாம்பார் வடை ஹோட்டலில் வாங்குவோம், வீட்டில் அரைக்கும் சட்னி தவிர்த்து. இரண்டு நாள் இரவு புரோட்டாவுடன். புதன், ஞாயிறு வீட்டில் நிச்சய அசைவம்.
சாமி கும்பிட கோவிலுக்குப் போவதாக இருந்தால் கூட, முதல் நாள் இரவு, புளிக்காய்ச்சல் தயாராகும்.தயிர் சுமாரா உறைஞ்சாப் போதும், காலையில பாலை சூடு பன்ணி ஊத்துவோம், அப்பத்தான் மதியம் சாப்பிட புளிக்காம இருக்கும் என்ற பக்குவங்கள் பகிரப்படும். இரவே லாலா கடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கப்பட்டிருக்கும். முக்கு கடையில் பருப்பு வடை வாங்குடா, உளுந்த வடை மதியம் தாங்காது என உத்தரவுகள் பறக்கும். காலையில் புதினா சட்னி அரைத்து புளியோதரை பேக் செய்த பின்னால் தான் எல்லாம் ரெடி, எந்த கோவிலுக்கு என்ற கேள்வியே எழும்பும்.
எங்கள் வீடாவது பரவாயில்லை. என் அம்மாவின் அக்கா வீடு இன்னும் ஒரு படி மேல். என் அம்மாவின் தந்தை ஒரு நிலச்சுவான் தார். முதல் மகளுக்கு அரசு அதிகாரியாகவும் வேண்டும், நிலபுலன்களும் இருக்க வேண்டும் எனப் பார்த்து எக்கச்சக்க நகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்திருந்தார். அவர் உறவுக்காரரும் கூட. என் பெரியம்மாவிற்கும் என் அம்மாவிற்கும் 10 வயது வித்தியாசம். இடைப்பட்ட காலத்தில் விவசாயம் சற்று நொடிக்க, என் அம்மாவிற்கு அரசு அதிகாரி என்பதோடு நிறுத்திக் கொண்டார். அதனாலோ என்னவோ என் பெரியம்மாவிற்கு அம்மா மேல் கூடுதல் கரிசனம். அவருக்கு ஒரு பையன், இரண்டு பெண். வீடே விவசாய விளை பொருட்களாலும், விருந்தினர்களாலும் நிறைந்திருக்கும். கிராமத்தில் இருந்து ஊருக்கு வருபவர்கள் என் பெரியம்மா வீட்டிற்குத்தான் வருவார்கள். எல்லோரும் கூடும் மையமாக அந்த வீடு இருந்தது. தினமும் நான்கைந்து பேராவது காப்பி சாப்பிட வந்துவிடுவார்கள். மதிய சாப்பாடு ஒன்றிரண்டு பேருக்கு கூடுதலாகவே செய்யும் படி இருக்கும். காப்பி பொடி அரைப்பது, வத்தல் வடகம் போடுவது, சாம்பார் பொடி அரைப்பது எல்லாம் விழா போல நடக்கும்.
என் பெரியம்மாவின் பையன், பெரும்பாலான ஆண்டுகள் விடுதியில் தங்கிப் படித்தவர். அதனால் நான் தான் அந்த வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. கடை கண்ணிக்கு சலிக்காமல் போய் வருவேன். என் பெரியப்பாவிற்கு சிகரெட் பழக்கம் உண்டு, அதுவும் நான் தான் வாங்கிக் கொடுப்பேன். பெரியம்மாவின் வீடு இரண்டு தெரு தான் தள்ளி இருந்தது. அதனால் எங்கள் வீட்டில் என்ன செய்தாலும் குடுகுடுவென ஓடிப்போய் அங்கே கொடுத்துவிட்டு, அங்கே என்னவோ அதை எங்கள் வீட்டிற்கு வாங்கி வருவேன். அதனால் ஒவ்வொரு வேளை சாப்பாடும் வெரைட்டியாக இருக்கும்.
சின்ன மகன் என்றுதான் என் பெரியம்மா என்னைக் குறிப்பிடுவார். டேய், நாளைக்கு கம்மாய்ல விரால் மீன் பிடிச்சுக் கொண்டு வராங்கடா. உங்க அம்மாவ சமைக்க வேணாம்னு சொல்லி என சொல்லி விடுவார். என் அம்மாவும் தன் பங்குக்கு, காலை சாப்பாடு நான் கொடுத்து விடுறேன். உங்க பெரியம்மாகிட்ட சொல்லிட்டு வா என்பார்கள்.
மாலை வேளைகளில் பள்ளி முடிந்த உடன் அவர்கள் வீட்டிற்குத்தான் போவேன். முறுகலாக இரண்டு நெய் தோசை, பில்டர் காபி மூத்த அக்கா போட்டுத் தருவார்கள். வெரைட்டியைப் பொறுத்தே இரவு உணவு எந்த வீட்டில் என முடிவு செய்வேன்.
திருவிழா சமயங்களில் பாட்டி ஊருக்குப் போனால், இன்னும் விசேஷம். பெரிய வீடு. மாமா அத்தைகள் என நிறைந்திருக்கும். கெடா, சாவ என்றுதான் பேச்சே இருக்கும். நான் அன்னிய மாப்பிள்ளையின் பையன் என்பதால் என் தந்தைக்கு ஏதும் கோபம் வந்து விடக்கூடாதே என இன்னும் சிறப்பாய் கவனிப்பார்கள். யோசித்துப் பார்த்தால் என் இளமைக்காலத்தில் ஒரு வேளை கூட பட்டினியாய் இருந்ததில்லை என்று சொல்வதை விட ருசியான சாப்பாடு இல்லாத வேளையே இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வளவு சமையல் நடந்தாலும் எங்கள் வீடுகளில் ஆண்கள் சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்க மாட்டார்கள். அதில் தான் கையே கழுவுவார்கள். சமையல் கட்டுக்குள் யாரும் நுழைந்ததே இல்லை. பாசமாக இருப்பார்கள். மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஹோட்டலில் வாங்கலாம் என்றுதான் நினைப்பார்களே தவிர தப்பித்தவறி கூட நாம் செய்து தருவோமே என நினைக்க மாட்டார்கள். தண்ணீர் குடிக்க நான் அடிப்படிக்குள் போனால் கூட, நீ ஏண்டா இங்க வர்ற, கொண்டு வர மாட்டோமா என்றுதான் அம்மா, பெரியம்மா கோபிப்பார்கள். இதனாலேயே என்னவோ எனக்குள் ஆண் சமையலறைக்குள் செல்லவே கூடாது என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
திருமணத்திற்குப் பின்னும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான். என் மனைவியும் சிறப்பாக சமைக்க கூடியவர். மேலும் என் மாமனார்-மாமியார் இருவரும், அவர் என்ன சொன்னாலும் கேட்கணும், எதிர்த்துப் பேசக்கூடாது என உருவேற்றி அனுப்பி வைத்திருந்தார்கள். நான் வீட்டில் ஏதாவது வேலை செய்தால் கூட அவர்கள் பார்த்து விட்டால் என் மனைவியைக் கோபிப்பார்கள்.
இதனால் இன்னும் என் சுக வாழ்க்கை நீடித்துக் கொண்டே போனது. சமையலில் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும் அதுவும் நம் கடமை என்ற எண்ணம் துளிக்கூட ஏற்படவில்லை. மேலும் என் மூத்த மகன் ஹைபர் ஆக்டிவ். எனவே மாலை வேளைகளில் அவனை சமாளிப்பது மட்டுமே என் வேலை என்றும் ஆகிவிட்டது. அவனை வெளியே விளையாட அழைத்துச் செல்வது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது இதோடு என் கடமை முடிந்தது என இருப்பேன்.
பதினைந்து ஆண்டுகள் இப்படியே ஓடி விட்டன. வீட்டுப் பெரியவர்கள் எல்லோரும் தளர்ந்து விட்டனர். இந்தச் சூழ்நிலையில் என் மனைவியின் உடல்நலம் வெகுவாகப் பாதித்தது. இரண்டு மாதமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற நிலை. இரவு உணவு ஹோட்டலில் வாங்கி விடலாம் என்றாலும், காலை ஏழரைக்குள் பையன்களுக்கு காலை சாப்பாடும், மதிய சாப்பாடும் முடிக்க வேண்டிய சூழல். முதல் ஒரு வாரம் ஹோட்டலில் பூரி, பொங்கல் என மாற்றி மாற்றி வாங்கி கொடுத்து விட்டேன். அடுத்த வாரம் கூட சாப்பிடுற பசங்க கிண்டல் பண்றாங்கப்ப. நல்லாவும் இல்ல என்றார்கள்.எனக்குத் தெரிந்தது நூடுல்ஸ், ஆம்லேட், டீ போடுவது மட்டும். கஷ்டப்பட்டு சாதம் வைத்து, தயிர் சாதமாக்கி ஆம்லேட் போட்டு கொடுத்து விட்டேன். அடுத்த வாரத்தில் ரசம் பழகினேன். இரண்டு நாள் தயிர் சாதம், இரண்டு நாள் ரசம் சாதம், இரண்டு நாள் ஹோட்டல் என மாற்றி மாற்றிக் கொடுத்து விட்டேன். சரி சாம்பார் பழகுவோம் என முயற்சி செய்கையில் மனைவி ஓரளவு குணமாகி நான் பார்த்துக்கிறேங்க என என்னை விடுதலை செய்தார். அப்பாடா தப்பிச்சோம்டா என வழக்கத்திற்குத் திரும்பினேன்.
அதன்பின் ஓராண்டு ஆகியிருக்கும். எனக்குள் சில எண்ணங்கள். என்னடா இது, நாம் பெரியார் என்கிறோம், சமத்துவம் என்கிறோம். ஆனால் மனைவிக்கு சமையலில் கொஞ்சம் கூட ஒத்தாசை செய்வதில்லை. செய்தால் அவருக்கும் கொஞ்சம் இலகுவாக இருக்குமே என்று தோன்றியது.
ஒரு நாள் காலை அலாரம் அடித்த உடன் விழித்து, அவரை எழுப்பாமல் டீ போட்டு வைத்து விட்டு, இரண்டு டம்ளர் அரிசியை குக்கரில் போட்டு விட்டு, கொஞ்சம் வெங்காயம் உரித்து வைத்து விட்டு எழுப்பினேன். ஒரு வைர நெக்லஸ் வாங்கித்தந்திருந்தால் கூட அப்படி ஒரு சந்தோசத்தை அவரின் முகத்தில் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே.
இப்போதெல்லாம் காலை வேளையில் உடன் நின்று சமையலில் உதவி செய்கிறேன். ஞாயிறுகளில் நானே சமைக்கத் துவங்கியிருக்கிறேன். இத்தனை நாட்கள் உடன் உதவி செய்யாததை நினைத்து வருந்துகிறேன்.
என் மனைவியிடம் மட்டுமல்ல. என் பாட்டி, பெரியம்மா மற்றும் அக்காக்கள், அம்மா, மாமியார் என என்னை சமையலறைக்குள் விடாமல் என்னை சுகவாசியாக வளர்த்தவர்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நான் உதவி செய்திருக்க வேண்டும். காலம் பூராவும் அடுக்களையில் நின்ற உங்களுக்கு கொஞ்சமாவது விடுதலை கொடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தித் தான் உறைத்திருக்கிறது. இன்னுமே உங்கள் வீட்டிற்கு வந்தால் என்னை சமையலறைக்குள் அனுமதிக்கப் போவதில்லை தான். உணவு பரிமாற, எடுத்து வைக்கவாவது என்னை விடுங்கள். என்னால் முடிந்ததெல்லாம் இனி என் மகன்களை சமையலில் பயிற்றுவிப்பதுதான்.
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-54063960096356377952021-08-09T19:34:00.002+05:302021-08-09T19:34:18.900+05:30காதலுக்கு மரியாதைஇயக்குநர் பாசில் மலையாளத்தில் ஒரு படம் எடுப்பார். அது ஹிட்டான உடன் தமிழுக்கு அந்தப் படம் செட் ஆகுமா என யோசித்து, அதற்கேற்ற நடிகர்களை வைத்து இங்கே மீண்டும் எடுப்பார். பூவே பூச்சூட வா, பூ விழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருசம் 16 என. அது போல மலையாளத்தில் அவர் குஞ்சாகோ போபன், ஷாலினியை வைத்து அவர் எடுத்த அனியத்திப் பிறாவு படத்தை இங்கே இயக்க வந்தார். ஹீரோயின் ஷாலினி என பிக்ஸ் ஆகிக் கொண்டார். சிவகுமார், ஸ்ரீவித்யா ஆகியோரையும் பிக்ஸ் செய்து விட்டார். நாயகனாய் நடிக்க அவருக்கு ஒரு இளமையான ஹீரோ தேவைப்பட்டர். சிலர் சூர்யாவை சொன்னதாகவும், ஆனால் சிவகுமார் அப்பா-மகனாக நடிக்க விரும்பவில்லை என்று சொல்லி மறுத்து விட்டதாகவும் சொல்வார்கள். அடுத்து விஜய்யை புக் செய்ய போனார்கள்.
அப்போது விஜயின் கால்ஷீட் சங்கிலி முருகனிடம் இருந்தது. விஷ்ணு படம் பி & சி செண்டரில் நன்கு ஓடியதைப் பார்த்து அவர் விஜய்யின் கால்ஷீட்டை எஸ் ஏ சந்திரசேகரனிடம் இருந்து வாங்கியிருந்தார். சங்கிலி முருகன் தயாரிப்பு, பாசில் இயக்கம், விஜய்-ஷாலினி ஜோடியில் காதலுக்கு மரியாதை உருவாகத் தொடங்கியது. இசை பாசிலின் மனம் கவர்ந்த இளையராஜா.
பாசில் என்றாலே பட்டாசாக பாடல்களைப் போட்டுக் கொடுப்பார் இளையராஜா.
சங்கிலி முருகனுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தமே உண்டு. சங்கிலி முருகனின் நாடகங்களுக்கு இளையராஜா இசை அமைத்த காலத்தில் இருந்தே அவர்களின் நட்பு ஸ்ட்ராங். சங்கிலி முருகனுக்கு எங்க ஊர் பாட்டுக்காரன், எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டுத் தங்கம், பெரிய வீட்டுப் பண்ணக்காரன் என பல ஆல்பம் ஹிட்களை கொடுத்தவர். அவர் ஆர்மோனியப் பெட்டியை சும்மா திறந்தாலே இனிமையான பாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. மனதிற்குப் பிடித்தவர்களுக்கு என ஆர்மோனியத்தை திறந்தால்? கேட்கவா வேண்டும்.
படம் விரைவாக ஷூட்டிங் முடிந்தது. படத்திற்குப் பிண்ணனி இசை அமைக்க உட்கார்ந்த இளையராஜாவிற்குப் பொறி தட்டியது. இந்தப் படம் நிச்சயம் ஹிட் ஆகும் என. உடனே தன் நண்பர்களுக்கு இது பற்றி தெரிவித்து விநியோக உரிமை வாங்குங்கள் என்று சொன்னார். அப்படி அவர் சொன்னவர்களில் தாணுவும் ஒருவர். ஆனால் தாணுவோ, அவர் பார்ம்லாம் போயிருச்சு. இப்படித்தான் கற்பூர முல்லைக்குச் சொன்னார். படம் தேறவே இல்லையே என தயங்கினார். தாணு சொன்னதிலும் நியாயம் உண்டு. பாசிலுக்கு அப்போது தமிழில் கடைசி கமர்சியல் ஹிட் வருசம் 16 தான். அதன்பின் அவர் எடுத்த அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா என தொடர்ச்சியாக வசூல் ரீதியாக சுமாரான படங்கள் தான்.
இளையராஜாவும் அப்போது கமர்சியலாக தன் முதல் இடத்தை ரஹ்மானிடம் இழந்திருந்தார். ரஹ்மான் பெயர் இருந்தாலே விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் போட்டி போட்டி படத்தை வாங்கிய நேரம். காதலுக்கு மரியாதையில் அன்றைக்கு மார்க்கெட் வேல்யூ விஜய்க்கு தான் இருந்தது. 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக விஜய்க்கு பெரிய வெற்றி. ஆனால் அதற்கடுத்து வசந்த வாசல். மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன் என சுமாரான படங்களைக் கொடுத்து சறுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்து லவ் டுடே படம் வெளிவந்து அவரை மீண்டும் தூக்கி நிறுத்தியது. அதற்கடுத்து சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஒன்ஸ்மோர், வசந்தின் நேருக்கு நேர் படங்களின் கமர்சியல் வெற்றி, விஜய்க்கு ஒரு மார்க்கெட் வேல்யூவை கொடுத்திருந்தது.
இந்த நேரத்தில் தான் படத்தை ப்ரிவியூ பார்த்தார் என் எஸ் சி ஏரியாக்களின் முக்கிய விநியோகஸ்தரான என் எஸ் சி ரவி என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரன். ஜாக்கிசான் படங்களை தமிழ்நாட்டில் விநியோகம் செய்தும் பரவலாக அறியப்பட்டவர். அவருக்கும் இந்தப் படம் ஹிட் ஆகும் எனத் தோன்றியது. அன்றைய தேதிக்கு படத்தின் மொத்த தயாரிப்பு செலவு 90 லட்சம் என்பார்கள். அதற்கு மேல் ஒரு தொகையை வைத்து சங்கிலி முருகனிடம் இருந்து தமிழ்நாடு ஏரியா முழுவதையும் வாங்கினார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். சங்கிலி முருகனும் படம் வெளிவரும் முன்னரே லாபம் வந்து விட்டதே என திருப்தியடைந்து விட்டார்.
படம் வெளியானது. விஜய்க்கான கூட்டம், பாசில் படம் என்பதால் எதிர்பார்ப்பில் ஒரு சிறு கூட்டம் படத்திற்கு வந்தது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நல்ல பீல்குட் படம், இனிமையான பாடல்கள், படம் முடிந்து வெளிவரும் போது மனசு லேசான உணர்வு. அவ்வளவு தான். முழுக்க முழுக்க வாய்மொழி விளம்பரத்தாலேயே படம் பற்றிக் கொண்டது. எப்படிப்பட்ட ஹிட் என்றால் நாகர்கோவில் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது, ஓரிரு மாதம் கழித்து வெளியான அருப்புக்கோட்டையிலும் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கெல்லாம் ஐந்து மடங்கு வரை லாபம் என்றார்கள். இந்தப் பட வெற்றிக்குப் பின்னால் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இனி நாமளும் படம் தயாரித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்தார். முதல் படமே விஜய்காந்த் – விக்ரமன் காம்போவில் வானத்தை போல, அடுத்தடுத்து பெரிய படங்கள் தான். ஷங்கரின் அந்நியன், கமல்ஹாசனின் தசாவதாரம் என.
பாசிலுக்கு ஒரு ராசி உண்டு. அவர் படத்தின் மூலம் அறிமுகமாகும் / நடிக்கும் சில நடிகைகளுக்கு கிட்டத்தட்ட தேவதை ஸ்டேட்டஸ் கிடைத்து விடும். அவர்கள் தமிழ்நாட்டில் மூலை முடுக்கில் உள்ள வீடுகளுக்கும் சென்று சேர்ந்து விடுவார்கள். அப்படி ஒரு கேரக்டர் ஆர்க் அமைக்கக் கூடிய வல்லமை பாசிலுக்கு உண்டு. பூவே பூச்சுடவாவில் அவர் அறிமுகப்படுத்திய நதியா 35 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் ஒரு ஸ்டேட்டஸோடுதான் இருக்கிறார். வருசம் 16 குஷ்பூ இத்தனை பொலிட்டிகல் ஸ்டேண்டுகளுக்கு அப்புறமும் ஒரு பெர்சனாலிட்டியாக முக்கிய படங்களில் நடிக்கிறார். காதலுக்கு மரியாதை ஷாலினிக்கு அப்படி ஒரு ஸ்டேட்டஸை கொடுத்தது. அவர்க்கு காதலுக்கு மரியாதையின் மூலம் கிடைத்த கிரேஸை அமர்க்களம் பட ஓப்பனிங் ஷோவில் கண்டு கொள்ள முடிந்தது. அமர்க்களம் படத்தில் முதல் காட்சியே ஷாலினியின் பாடல் தான். அதற்கு கிடைத்த கை தட்டல் வரவேற்பு ஹீரோக்களுக்கு இணையானது.
காதலுக்கு மரியாதை, இளையராஜாவுக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது எனலாம். திரையுலகமே ரஹ்மான் ரஹ்மான் என்று அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்த போது, என்னாலும் ஒரு கமர்சியல் ஹிட் படத்தைக் கொடுக்க முடியும் என காட்ட ஒரு வாய்ப்பாய் காதலுக்கு மரியாதை அமைந்தது. எக்கச்சக்க கேசட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
விஜய்க்கு பூவே உனக்காக ஒரு மேக் ஓவர் கொடுத்தது என்றால் காதலுக்கு மரியாதை ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. ஏராள பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் விஜய்யின் ரசிகர்களாக மாறினார்கள். பம்பாய் ரொட்டி சுக்கா ரொட்டி, தொட்ட பெட்ட ரோட்டு மேல முட்ட பரோட்டா என குத்துப் பாடல்களாய் பாடிக்கொண்டிருந்த விஜய்க்கு ஒ பேபி, ஓ பேபி என்ற பாடலை இளையராஜா பாடக் கொடுத்து இன்னும் விஜயை மெருகேற்றினார்.
பாசில் அதற்கடுத்து விஜய்யை வைத்து கண்ணுக்குள் நிலவு, ஸ்ரீகாந்தை வைத்து ஒரு நாள் ஒரு கனவு ஆகிய படங்களை இயக்கினார். இரண்டும் சரியாகப் போகவில்லை. அதோடு இங்கு வருவதை நிறுத்திக் கொண்டார். யோசித்துப் பார்த்தால் தமிழில் பாசிலின் மிகப்பெரிய ஹிட் காதலுக்கு மரியாதை தான். வருசம் 16 கூட அதற்கடுத்து தான் வரும். காதலுக்கு மரியாதையின் வெற்றிக்கு படத்தின் கதை, இசை போன்ற அம்சங்கள் காரணமாய் இருந்தாலும் படத்தை தாங்கி நிற்க நல்ல இளமைத் துடிப்பான ஒரு நாயகன் தேவைப்பட்டார். அதை சிறப்பாக விஜய் செய்தார். அவருடைய கேரியரில் மறக்க முடியாத படமாகவும் அமைந்தது.முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60284926891088559822021-08-09T19:32:00.003+05:302021-08-09T19:32:52.441+05:30காதல் கோட்டை1996 ஆம் ஆண்டு. ஜூலை மாதம்.எப்போதும் திருவல்லிக்கேணி மேன்ஷன்களுக்கு மே முதல் ஜூலை வரை புது வரவு நிறைய இருக்கும். தமிழகம் முழுக்க கல்லூரி இறுதி ஆண்டு முடித்தவர்கள் சென்னைக்கு வேலை தேடி வந்து இந்த மாதங்களில் மேன்சனில் அடைக்கலம் புகுவார்கள். அந்நாட்களில் சனிக்கிழமை இரவுகள் மேன்சன் மொட்டை மாடிகள் களைகட்டும். சிகரெட், மதுபானம் என தங்கள் அலைவரிசைக்கு செட் ஆகிறவர்களுடன் இணைந்து ஜோதியில் ஐக்கியமாகி அரட்டை அடித்துக் கொண்டு கொண்டு இருப்பார்கள். புதிதாக வந்தவர்களும் தயக்கத்துடன் தங்களுக்கு ஏற்ற குரூப்பில் சேர்வார்கள். இல்லை புதுக் குழுக்களை உருவாக்குவார்கள்.
அந்த நேரத்தில் தான் எந்தப் படம் இப்போ செகண்ட் ஷோ போகலாம், நாளைக்கு என்ன படம் போகலாம் போன்ற பேச்சுக்களும் கிளம்பும்.
அந்த வார சனிக்கிழமை, கிட்டத்தட்ட எல்லா குழுக்களிலும் ஒரு படத்தின் பெயர்தான் அடிபட்டது. காதல் கோட்டை. படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்கடா, விகடன்ல கூட அட்டைப்படத்தில போட்டு அம்பது மார்க் கொடுத்த்கிருக்காங்க, வித்தியாசமான கதையாம் போலாமா என்று ஒருமித்த குரல்கள் கேட்டன. ஆசை, வான்மதில நடிச்சிருக்காப்லேல அந்த அஜீத் தான் ஹீரோவாம், இங்க தேவிகலால தான் போட்டிருக்கான். பொட்டி மாதிரி இருக்கும். டிக்கெட் கிடைக்குமான்னும் தெரியலை. அப்பிடியே ஒரே ரோடு, திருவான்மியூர் தியாகராஜாக்கு போயிடலாம் என்று ஒரு குரூப் கிளம்பியது. உடன் சென்றாயிற்று.
தியேட்டர் நெருங்க நெருங்க திருவிழா கூட்டம். அவ்வளவு பைக்குகள். எல்லாம் 21-25 வயது வாலிபர்கள். இத்தனைக்கும் அது படம் வெளியாகி மூன்றாவது சனிக்கிழமை என நினைவு. அஜீத்தின் முதல் படமான அமராவதியையும் தியேட்டரில் பார்க்கவில்லை, அடுத்து அவர் சிறிய வேடங்களில் நடித்த பாசமலர்கள், பவித்ரா, விஜய்யுடன் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படங்களையும் தியேட்டரில் பார்க்கவில்லை. ஆசை படம்தான் முதலில் தியேட்டரில் பார்த்த அஜீத் படம். மணிரத்னம் தயாரிப்பு, வசந்த் இயக்கம், பாடல்கள் ஹிட், எல்லாப் பக்கமும் நல்ல ரிவ்யூ வரவும் போய் பார்த்த படம். அதில் உடன் இருந்தது எல்லா வயதினரும் இருந்த கலவையான ஆடியன்ஸ்.
அடுத்து வந்த வான்மதி படம் மதுரை நாட்டியா திரையரங்கில் பார்த்தது. அதில் பள்ளி மாணவர்கள்,இளைஞர்கள் என இரண்டு கேட்டகிரி மட்டும் இருந்தார்கள். பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா… லியோ கப்பாசா பாடலுக்கு செம ஆட்டம் போட்டார்கள். அடுத்தடுத்து ரெண்டு படம் இவருக்கு நல்லா போகுதே என நினைக்கும் போதே கல்லூரி வாசல் வந்தது. அதில் பிரசாந்த் ஹீரோ. அஜீத் இரண்டாம் நாயகன். படம் சொதப்பியது. அதைவிட மோசம் அடுத்து வந்த மைனர் மாப்பிள்ளை. இந்த நிலையில் தான் காதல் கோட்டை வந்திருந்தது. முழுக்க முழுக்க இளைஞர் கூட்டம். சரி. ஹீரோவா பார்ம் ஆயிட்டாப்ல என தோன்ற வைத்தது.
எப்படியோ டிக்கெட் வாங்கி உள்ளே போயாகி விட்டது. முதல் அரை மணி நேரம் படம் எதுவும் ஈர்க்கவில்லை. அதே சமயம் நெளியவும் வைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக படத்துக்குள் நுழைந்து, பின் கடைசி அரை மணி நேரம் கை நகத்தையெல்லாம் கடித்து, உலக கோப்பை இறுதிப்போட்டி இந்தியா சேஸிங்கைப் பார்ப்பது போல பரபரத்து இறுதியில் சுபமாய் முடிந்தது படம். படம் முடிந்து வெளியே வரும் போது, செட்டில் சிலர் அடுத்த வாரம் திரும்ப வரலாமா எனக் கேட்டனர். நிச்சயமா என்பதே பதிலாய் இருந்தது. பலருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். படம் வெள்ளி விழா கொண்டாடியது. இத்தனைக்கும் அந்த வருடம் ஏகப்பட்ட வெற்றிப் படங்கள் வந்தன. விஜய்யின் பூவே உனக்காக, கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித் தா, கமல்ஹாசனின் இந்தியன் என முக்கிய நடிகர்களின் மைல்கல் படங்கள் எல்லாம் அப்போது வந்திருந்தன. காதல் கோட்டை வெளியான பின் வந்த தீபாவளிக்கும் அவ்வை சண்முகி, கோகுலத்தில் சீதை என ஹிட் படங்கள் வந்தன. அத்தனையையும் மீறி தொடர்ந்து எங்காவது ஓடிக்கொண்டே இருந்தது காதல் கோட்டை.
காதல் கோட்டை ஏராளமானவர்களுக்கு ஒரு திருப்பு முனையைத் தந்த படம். அஜீத்திற்கு ஏராளமான இளைஞர்களை ரசிகர்களாக பெற்றுத்தந்து இனி அவர் ஒரு நட்சத்திரம். அவரை நம்பி படம் எடுக்கலாம் என்ற அந்தஸ்தை வாங்கித் தந்தது. அந்நாட்களில் சென்னையில் பார்த்தால் சாப்ட்வேர் இளைஞர்களுக்கு இணையாக ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ், மேக்ஸ்வொர்த் ஆர்சார்ட்ஸ், ஆர் பி ஜி செல்போன் விற்பனை பிரதிநிதிகள், பேஜர் விற்பனை பிரதிநிதிகள், மற்றும் அனைத்து மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள், மெடிக்கல் ரெப்ரசண்டேட்டிவ்கள் என ஏராளமான விற்பனைப் பிரதிநிதிகள் சென்னையில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். காதல் கோட்டை அஜீத்தின் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் அவர்களிடையே இன்ஸ்டண்ட் ஹிட். அஜீத் அணிந்து வரும் வெள்ளை முழுக்கை சட்டை, க்ரீம் கலர் பேண்ட், ஷூ என அவர்களுக்கும் எளிதாக செட் ஆனது. அஜீத்தும் அப்போது புரசைவாக்கம் போன்ற ஏரியாக்களில் ரெடிமேட் ட்ரஸ் ஷோ ரூம்கள் திறக்க அழைக்கப் பட்டார். யோசித்துப் பார்த்தால் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி மூன்று படங்களும் அஜீத்திற்கு கொடுத்த இளைஞர் படை இன்று வரை அவரைக் காத்துக் கொண்டிருக்கிறது எனலாம்.காதல் கோட்டைக்கு அடுத்தே அவர் பல சுமார் படங்களைக் கொடுத்தாலும் அஜீத் என்ற பிராண்ட் அடி வாங்காமல் காதல் கோட்டை சில ஆண்டுகள் அவரைக் காத்தது.
அகத்தியன் இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனிடம் சொன்ன போது, அவர் நான் உங்களோட மதுமதி படம் வாங்கி இருந்தேன். நல்ல லாபம். அது போல ஒரு கதை சொல்லுங்க எனக் கேட்டு வான்மதி படம் எடுத்தார். வான்மதி கமர்சியல் ஹிட் ஆகவும், துணிந்து காதல் கோட்டைக்கு ஒப்புக் கொண்டார். பலரும் ஒப்புக்கொள்ளத் தயங்கிய கதை, என்னய்யா பார்க்காமலேயே லவ்வா என நிராகரிக்கப்பட்ட கதை அது. வான்மதியின் வெற்றியே சரி பார்ப்போம் என சிவசக்தி பாண்டியனை ஒப்புக் கொள்ள வைத்தது. காதல் கோட்டை படத்தின் வெற்றி அகத்தியனுக்கு தேசிய விருதை மட்டும் வாங்கித்தரவில்லை, அடுத்தடுத்து பெரிய தயாரிப்பாளர்களை அவரை நோக்கி வரச் செய்தது. சிவசக்தி பாண்டியனை ஒரு நல்ல தயாரிப்பாளராக நிலை நிறுத்தியது. ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானுக்கும் நல்ல பெயர் பெற்றுத் தந்தது.
இலக்கியவாதியான தங்கர் பச்சான், அஜீத் பத்திரிக்கை படிப்பது போல் வரும் காட்சியில் “காலச்சுவடு” புத்தகத்தைப் படிப்பது போல் அமைத்திருப்பார். பின்னர் இன்னொரு படத்தில் அவரது “ஒன்பது ரூபாய் நோட்டு” புத்தகம் இருக்கும். கதாநாயகி தேவயானிக்கும் காதல் கோட்டை தான் மிகப்பெரிய ப்ரேக். இன்று வரை கமலி கதாபாத்திரம் பேசப்படுகிறது. இதற்கடுத்து தொடர்ந்து நிறைய பெரிய படங்கள் கிடைத்து சில ஆண்டுகள் ராசியான கதாநாயகியாக வலம் வந்தார். இயக்குநர் மணிவண்ணனுக்கும் கூட இந்தப் படம் ஒரு திருப்பு முனை. ரங்கீலா ஊர்மிளா தெரியாம வயசுப்பையன் இருக்கலாமாடா என சமுதாய கிண்டலுடன் கூடிய அவர் கேரக்டர் ஹிட்டாக, அதன்பின் ஏராளமான படங்களில் அதே பாணியில் வலம் வந்தார். தலைவாசல் விஜய், கரண் ஆகியோருக்கும் காதல் கோட்டையின் வெற்றி பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.
இதையெல்லாம் விட காதல் கோட்டை படத்தின் வெற்றியை அளக்கும் இன்னொரு கருவி இருக்கிறது. பார்க்காமலேயே காதலுக்குப் பின் காதலுக்காக நாக்கை அறுப்பது உள்ளிட்ட ஏராளமான வித விதமான காதல் படங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இறங்கிக் கொண்டே இருந்தன, அவ்வளவு ஏன் படத்தலைப்பிலேயே அத்தனை காதல்கள். காத்திருந்த காதல், காலமெல்லாம் காதல் வாழ்க, காதலுக்கு மரியாதை, காதல் பள்ளி என.
காதல் கோட்டை படத்தை 1996ன் காலப் பதிவு என்று சொல்லலாம். எஸ் டி டி பூத்கள், அப்போது பிரபலமாயிருந்த இரண்டே கார்களான மாருதி 1000, சியல்லோ, லேசாக ஊடுருவ ஆரம்பித்த செல்லுலார் என காட்சிப்படுத்தப்பட்ட படம்.
இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் இந்தப் படத்தைப் பார்த்தால் இது சாத்தியமா எனத் தோன்றும். நிறைய காட்சிகள் ரெலவண்ட் ஆக இல்லாதது போல் தோன்றும். ஆனால் படத்தின் ஆன்மா, இதயத்தில் தொடங்கி கண்ணில் முடிவடையும் காதல். அது இக்காலத்திலும் சாத்தியம் தான். சமூக வலைதளங்களில் ஒருவரின் கருத்துக்களால் மட்டும் ஈர்க்கப்பட்டு பார்க்காமலும் காதல் வந்து கொண்டுதான் இருக்கிறது. பின்னர் நேரில் பார்த்து சுபமாகவும் முடிகிறது.
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-49967048331088560732021-08-09T19:31:00.001+05:302021-08-09T19:31:22.043+05:30அண்ணாமலை90களில் ரஜினிகாந்தின் தளபதியும், மன்னனும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றதும், தளபதிக்கு அடுத்து பெரிய ஆளு மன்னன், அப்போ மன்னனுக்கு அடுத்த படம் சக்கரவர்த்தியான்னு? எல்லோரும் கேட்ட போது, இல்லை அதுக்கும் மேல அப்படின்னு கடவுளின் பெயரை டைட்டிலாகக் கொண்டு வந்த படம் தான் அண்ணாமலை.
பாலசந்தரின் மூலம் அறிமுகமானதால் ரஜினிக்கு அவரின் மீது பெரும் மதிப்பு. ஒரு கட்டத்தில் ரஜினி மிகப்பெரிய வியாபார அந்தஸ்துள்ள நடிகரான பின்னர் பாலசந்தர் அவரை இயக்குவதை நிறுத்தினார். பாலசந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த படம் தில்லு முல்லு தான். அதற்குப்பின் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிற்கு அவ்வப்போது படங்கள் நடித்துக் கொடுப்பார் ரஜினிகாந்த். வேலைக்காரன், சிவா ஆகிய படங்களை 1980களில் அப்படி நடித்துக் கொடுத்தார்.
அதுபோல 1992ல் அறிவிக்கப்பட்ட படம் அண்ணாமலை. கே பாலசந்தரின் சிஷ்யரான வசந்த் இயக்கிய கேளடி கண்மணி பெரிய வெற்றி. ஆனால் அதன்பின் வந்த நீ பாதி நான் பாதி சரியாகப் போகவில்லை. ஆனாலும் அவரின் மீதான நம்பிக்கையால் பாலசந்தர், வசந்த் இயக்கத்தில் படத்தை தயாரிக்க நினைத்தார். இளையராஜா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்போது பாலசந்தரின் படங்களுக்கு மரகதமணி இசை அமைத்து வந்தார். வைகாசி பொறந்தாச்சு பட வெற்றிக்குப் பின்னர் இசை அமைப்பாளர் தேவாவிற்கு நல்ல பெயர் ஏற்பட்டது. அவரை அண்ணாமலைக்கு அழைத்து வந்தார்கள். இந்நிலையில் வசந்த் தன் சுதந்திரம் குறித்து சந்தேகம் கொண்டு படத்தில் இருந்து விலக, பாலசந்தரின் மற்றொரு சிஷ்யரான சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு இயக்குநரானார். அவர் ராகேஷ் ரோஷனின் குத்கர்ஸை தழுவி ரஜினிகாந்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்தார்.
91ல் ஆட்சிக்கு வந்திருந்த அதிமுக அரசின் முதல்வர் ஜெயலலிதாவும்,ரஜினிகாந்தும் ஒரே ஏரியாவில் இருந்ததால் பாதுகாப்பு சோதனைகளுக்காக ரஜினியின் கார் செக்போஸ்டில் நிறுத்தப்பட, அதை சில பத்திரிக்கைகள் பெரிது படுத்தின. மேலும் அப்போது சென்னை மாநகர சுவர்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என ஒரு சட்டமும் அமலுக்கு வந்திருந்தது. அதற்கு முந்தைய சில பிரச்சினைகளால் ரஜினிக்கு ரெட் கார்ட் போடப்போவதாக விநியோகஸ்தர்களும் அப்போது சொல்லி வந்தார்கள். ஆனால் தளபதி, மன்னன் படங்களின் வெற்றி ரஜினி படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது.
இந்த நிலையில் இந்தக்கால பர்ஸ்ட் லுக்,மோஷன் போஸ்டர்,டீசர் உத்திகளுக்கு முன்னோடியாக ஒரு விளம்பர யுக்தியை கவிதாலயா நிறுவனம் கையாண்டது. அதுதான் அப்போது தமிழக மக்கள் பார்ப்பதற்கு இருந்த ஒரே தொலைக்காட்சி சானலான தூர்தர்ஷனில் சிறு விளம்பரம் வெளியிடுவது. அதற்கு முன்னர் வாராவாரம் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் தங்கள் புதுப்பட பாடல்களை பணம் கொடுத்து ஒளிபரப்பி விளம்பரம் தேடினார்கள் தயாரிப்பாளர்கள். கவிதாலயா நிறுவனம் எப்படி வானொலியில் விளம்பரம் போடுவார்களோ அது போல இங்கும் செய்யலாம் என ஒரு குறு விளம்பரத்தை தயாரித்தது. “வணக்கம், நான் தான் அண்ணாமலை” என ரஜினி நீதிமன்ற குற்றவாளி கூண்டில் இருந்து சொல்லும் சில வினாடி காட்சி அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது (இந்தக் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒன்று). இது மக்களிடையே பெரிய ஆர்வத்தைத் தூண்டியது.
படம், பண்டிகை விசேசம் ஏதும் இல்லாத ஒரு ஜூன் மாத நாளில் வெளியானது. ரஜினி படம் வெளியாகும் நாளே விசேஷம் தானே?. முதல் காட்சி பார்த்தபோது, தளபதி, மன்னனோடு ஒப்பிட்டால் அவ்வளவு விசேஷமில்லையே என்று தோன்றியது.
ஆனால் சில நாட்களிலேயே படத்திற்கு வந்த கூட்டம் ஆச்சரியப்படும் படி இருந்தது. ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் பெரும் திரளாக வந்தார்கள். சொல்லப்போனால் இந்தப் படத்துக்குப் பின்னர் ரஜினி ரசிகர் வேறு, பொது மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்தப் படம் பல வசூல் சாதனைகளைப் படைத்தது.
ரஜினியின் வளர்ச்சி ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை, அதனால் இடையூறு செய்கிறார் என்ற செய்தி பத்திரிக்கைகள் மூலம் ரஜினி ரசிகர்களின் மனதில் அப்போது ஆழமாகப் பதிந்திருந்தது. அதனால் ரஜினி ரசிகர்கள் இந்தப்படத்திற்கு பெரிய ஆதரவு கொடுத்தார்கள். அதற்கேற்றார்போல சில வசனங்களும் படத்தில் வைத்திருந்தார்கள்.
பொதுமக்களுக்கோ, நம்மை ஏமாற்றியவர்களை நாம் நன்கு வாழ்ந்து பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதே போல நம் எதிரிகள் உதவி கேட்டாலும் காலரைத் தூக்கிக்கொண்டு உதவவேண்டும் என்ற ஆழ்மன ஆசை இருக்கும். இதற்கு தீனி போட்டது போல் இந்தப்படம் அமைந்திருந்தது. அதற்கடுத்து வந்த எல்லா ரஜினி படங்களுமே ஏறக்குறைய இதே டெம்பிளேட்டில்தான் அமைந்தன.
ரஜினிக்கு என்று இந்த ஏரியாவில் ஒரு தொகை வசூலாகும் என்ற கணக்கு இருக்குமே, அந்தக் கணக்கை உடைத்து புதுக்கணக்கு எழுத வைத்தது அண்ணாமலை. எந்த விநியோகஸ்தரும் எதிர்பார்க்காத லாபத்தை தந்தது.
அண்ணாமலைக்குப் பின் ரஜினி இந்த 29 வருடங்களில் நாயகனாக 20 படங்கள் தான் நடித்திருப்பார். ஆனால் ரஜினி அறிமுகமானதில் இருந்து அண்ணாமலை வரை இருந்த 17 வருடங்களில் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்திருப்பார்.
இதே போலத்தான் முரட்டுக்காளை படமும். அதற்கு முந்தைய ஐந்து வருடங்களில் ரஜினி ஐம்பது படங்களுக்கு மேல் நடித்தார். ஆனால் முரட்டுக்காளைக்குப் பின்னர் அவர் வருடத்துக்கு சராசரியாக ஐந்து அல்லது ஆறு படங்களில் மட்டுமே நடித்தார். அந்த அளவுக்கு அவர் படங்களின் மேல் எதிர்பார்ப்பு ஏற்பட பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியதாகிவிட்டது.
அண்ணாமலைக்குப் பின்னர் இன்னும் புதுப்புது ஏரியாக்களில் ரசிகர்கள் பெருகியவண்ணம் இருந்தார்களே தவிர குறையவே இல்லை. பாட்ஷா,படையப்பா எல்லாம் அதனுடைய கண்டெண்ட் வேல்யூவால் ரிப்பீட் ஆடியன்ஸ் பெற்று வசூல் சாதனை புரிந்த படங்கள். 2000க்குப் பின் சிவாஜி,எந்திரன் என உலகம் முழுவதும் வசூல் பெருகினாலும் அது எல்லாவற்றுக்குமே ஒரு ஆரம்பப் புள்ளி அண்ணாமலை தான்.
முரட்டுக்காளைக்குப் பின்னர் ரஜினிக்காகவே விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டார்கள் என்றால், அண்ணாமலைக்குப் பின்னர் திரையுலகமே, தங்கள் படங்களின் வெளியீட்டுத் திட்டங்களை ரஜினிக்காக வகுத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.
ரஜினி எண்பதுகளில் தன்னை ராகவேந்திரர் பக்தனாக அடையாளப் படுத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் ராகவேந்திரர் படம் பதிந்த செப்புக் காப்பை அணியத் துவங்கினார்கள். நிறையப் பேர் ராகவேந்திரர் பக்தர்களானார்கள். திருவண்ணாமலை மிகப்பெரிய ஆன்மீக ஸ்தலம் என்றாலும் பொதுவாக வட மாவட்டத்தினர் மட்டுமே அங்கு குவிவார்கள். ஆனால் இளையராஜா சில திருப்பணிகள் அங்கே செய்து அது பற்றி தொடர்ச்சியாக செய்திகள் வந்தது, ரஜினிகாந்தின் அண்ணாமலை படம், அதைத் தொடர்ந்து அவரும் அண்ணாமலை பற்றி பேசியது, தமிழகம் முழுவதும் அண்ணாமலையாருக்கு பக்தர்களை கூட்டியது எனலாம். 1990க்கு முன் அண்ணாமலை கிரிவலத்திற்கு வந்த கூட்டம், 1990க்குப் பின் அங்கே வரும் கூட்டம் பற்றிய ஒப்பீட்டை திருவண்ணாமலையினர்தான் சொல்ல வேண்டும்.
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-78653685899870844922020-02-22T18:42:00.000+05:302020-02-22T18:43:30.638+05:30பூபதி அண்ணன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">பூபதி அண்ணன் லாட்டரி சீட்டுக்கடை எனக்கு அறிமுகமானது சுசீலன் சார் மூலம்தான். நியூமராலஜி, ஜோசியம் போன்றவற்றில் அதீத ஈடுபாடு கொண்ட அவருக்கு ஆறாம் எண் ராசி என ஒரு ஜோசியர் மட்டையை கட்டி விட அவருக்கு ஆறாம் எண் பித்து பிடித்துவிட்டது. அப்போது ஆறாம் வகுப்பில் ஆறாம் எண் ரோல் நம்பராகக் கொண்ட என்னை, தனக்கு லாட்டரி சீட்டு வாங்கித் தரும் வேலைக்கு அமர்த்திக் கொண்டார். பிரதி வெள்ளிக்கிழமை ராகு காலம் 10.30-12.00 முடிந்ததும் ஸ்டாப் ரூமிற்கு போக வேண்டும். அவர் என்னை கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி ஆறு ரூபாய் கொடுப்பார். ஆறு லாட்டரி சீட்டுகள் வாங்கிவர வேண்டும். லாட்டரி சீட்டு எண்ணின் கூட்டுத்தொகை ஆறாக இருக்க வேண்டும் என்பார். காலையில் இட்லி கூட எண்ணி ஆறுதான் சாப்பிடுவார் என்று பேசிக்கொள்வார்கள்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">மேகாலயா, ராயல் பூட்டான், கஞ்சன் ஜங்கா, சிக்கிம், அஸ்ஸாம் போன்ற வட கிழக்கு நாடுகளின் சீட்டுக்கள் தான் வாங்க வேண்டும் என்பார். தமிழ்நாடு ஆகாது. கேட்டால் தென் திசை என்பார். ஆனால் மற்ற சார்களோ தமிழ்நாட்டுல சீட்டுல வரி அதிகம் பிடிப்பாங்க. லட்சம் விழுந்தாலும் 65 ஆயிரம் தான் கிடைக்கும். மத்ததுல எழுவது எம்பது தேறும் என்பார்கள். முதல்முறை நான் வாங்கித்தந்த சீட்டில் அவருக்கு 50 ரூபாய் பரிசு விழுந்து விட்டது. அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி. ஏஜெண்ட் கமிசன் போக 45 ரூபாய் பூபதி அண்ணன் எண்ணிக் கொடுத்தார்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">அடுத்து ஆறில் இருந்து 15 ரூபாய்க்கு சீட்டு வாங்க ஆரம்பித்தார் சுசீலன். பூபதி அண்ணனுக்கு சந்தோசம். பத்து சீட்டு வித்துட்டு வர்றவனுக்கு ஒரு ரூபா கமிசன் தர்றேண்டா. வாராவாரம் நீ அவருக்கு சீட்டு வாங்கும் போது ஒரு ரூபா நீயும் வாங்கிக்கோ என்றார். அதனால் ஆர்வமாக வெள்ளிக்கிழமை 12.03க்கு சுசீலன் சார் ரூமில் ஆஜராகி விடுவேன். அந்த சமயத்தில் தமிழக அரசின் தீபாவளி சூப்பர் பம்பர் குலுக்கல் 2 கோடி ரூபாய் பரிசு சீட்டு வெளியிடப்பட்டது. அப்போது இம்மாதிரி பெரிய தொகை பரிசு சீட்டு எனில் கூட்டணி சேர்த்து வாங்குவார்கள். யாராவது ஒருவருக்கு சுக்கிரதிசை இருந்து அவர் மூலமாவது பரிசு கிட்டட்டுமே என்று. சுசீலன் சாரும் தன் ராசிப்படி ஆறு பேர் சேர்ந்து வாங்கத் திட்டமிட்டார்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">பூபதி அண்ணன் கடைக்கு 5 சீட்டுகள் மட்டுமே வாங்கி வந்தார். நம்ம ஊருல இதெல்லாம் அவ்வளவு ஓடாதப்பா என்றார். சோதனைக்கு என அதில் கூட்டுத்தொகை ஆறு வரவில்லை. இதைக் கேட்டு சுசீலன் சாருக்கு வருத்தம். நான் உடனே சார் மதுரை பஸ் ஸ்டாண்ட் கே ஏ எஸ் சேகர் கடையில் போய் வாங்கிட்டு அடுத்த பஸ் பிடிச்சு வந்துடுறேன் சார் என்றேன். இல்ல பூபதிகிட்டயே கேட்டுப்பாரு அடுத்தவாரம் வாங்கி வரச்சொல்லு என்றார். மதுரைக்கு வாரம் ஒருமுறைதான் கொள்முதலுக்கு போவார் பூபதி. சுசீலனின் பங்குதாரர்கள் அதுக்குள்ள நல்ல நம்பர் போயிருச்சுன்னா, இவனவே அனுப்பிடலாம் என்றார்கள். அடுத்த நாளே காலை பள்ளியில் பையை வைத்துவிட்டு பஸ் ஸ்டாண்ட் வந்து மதுரைக்கு கிளம்பினேன். வாழ்க்கையில் முதல் ஆன் டியூட்டி ஆறாம் வகுப்பில் வாய்த்தது எனக்கு.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் காலை 12 மணி அளவில் இறங்கும் போது நல்ல வெயில். இறங்கிய உடனேயே அந்தக் குரல் கேட்கத்துவங்கியது. தென்னகத்தின் கைராசி மன்னன் கே ஏ எஸ் சேகர், இதுவரை 64 பேருக்கு முதல் பரிசாக மட்டும் ஐந்து கோடிக்கு மேல் வாங்கித்தந்த கைராசி ஏஜெண்ட் என ரிக்கார்ட் செய்யப்பட்ட குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. கடைக்கு முன்னால் நல்ல கூட்டம். சின்னப் பையனாக இருந்ததால் விற்பனையாளர் கவனிக்கவில்லை. அண்ணே அன்ணே என தொடர்ந்து கத்தவும் என்ன எனக் கேட்டார். தமிழ்நாடு சூப்பர் பம்பர் குலுக்கல் 2 கோடி சீட்டு ஒன்னு வேணும் என்றதும் நூறு ரூபா டிக்கெட்டு தெரியுமா என்றார். இந்தா வச்சிருக்கேன். கூட்டுத்தொகை ஆறு வர்றது மாதிரி வேணும் என்றதும், யாரு எங்க என விசாரித்தார். பூபதி அண்ணன் ரெபரன்ஸ் எல்லாம் சொல்லவும் எடுத்துத் தந்தார். டிக்கெட் வாங்கிவிட்டு அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு சப் ஏஜெண்ட்கள். விற்பனையாளர்கள், கல்லாவில் பணம் விழுந்து கொண்டே இருந்தது.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">இப்பொது நினைத்துப் பார்த்தால், எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியிருந்தார் என ஆச்சரியம் தான். மக்களுக்கு சூதாட்டம், திடீர் பணக்காரன் ஆகுதல் போன்றவற்றில் இருந்த நம்பிக்கையை நல்ல பிஸினஸ் மாடலாக மாற்றினார். தீவிர ஆசையுள்ளவர்கள் தான் கடைக்கு வருவார்கள், மற்றவர்களிடம் நாம் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என டிக்கெட்டுக்கு 10% கமிசன் கொடுத்து ஏராளமானவர்களை விற்பனையாளர் ஆக்கினார். பேருந்திற்குள் சென்று விற்பது, மாற்றுத்திறனாளிகள், பூக்கூடை பெண்டிர் என எங்கெல்லாம் மக்கள் காசை எடுப்பார்களோ அங்கே இதையும் சேர்த்து வாங்கட்டும் என நினைத்தார். அதைவிட கே ஏ எஸ் சேகர் போல ஆகிவிட வேண்டும் என ஒரு ஆசையை நூற்றுக்கணக்கானவர்களிடம் விதைத்திருந்தார். எப்போதும் பட்டு வேட்டி, லேசான மஞ்சள் நிற பட்டு சட்டை என சிரித்த முகமாக புல் மேக்கப்புடன் திரிவார்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">ஊருக்குள்ள மார்க்கெட் ஏரியால பத்துக்கு பத்து இடத்துல கடை போடு. பெருமாள் படத்தோட ஒரு அஞ்சு சாமி போட்டோ, டிக்கெட் வைக்க ஒரு ஆறுக்கு மூணு மர டேபிள், அது சரிவா இருக்கணும். கூடவே ஒரு மாருதி ஆம்னி. தவணைக்கு வாங்கீரணும் என கனவோடு பலரை அலைய வைத்தார். சுற்றுப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் அந்த மாருதி ஆம்னியில் போய்த்தான் டிக்கெட் விற்பார்கள். பூபதி அன்ணனும் அந்தக் கூட்டத்தில் ஒருவர். அவருக்கும் கே ஏ எஸ் சேகர் போல ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. திருச்சியில கே ஏ எஸ் ராமதாஸ், கோயம்புத்தூர் பக்கம் ஏதோ மணிங்கிறாங்க. அது மாதிரி ஆகணும் என்பார்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">டிக்கெட் வாங்கி பள்ளிக்குத் திரும்பி, சுசீலன் சாரிடம் கொடுத்தாயிற்று. பசங்களுக்கு விசயம் தெரிந்து விட்டது. அடுத்த நாள் காலை செல்வி அத்தை கடைக்கு ஆப்பம் வாங்கப் போன போது, உடனிருந்தவன், என்னடா மதுரைக்கு தனியாப் போய் டிக்கெட்லாம் வாங்கிட்டு வந்தியாமே என்று கேட்டான். செல்வி அத்தைக்கு ஆச்சரியம். என் தந்தையின் ஒன்று விட்ட அக்காள் அவர். காலை பனியாரமும், வெல்ல ஆப்பமும் மதியம் வடையும் சுட்டு விற்பவர். அவருக்கு திருமண வயதில் ஒரு பெண். ஒரு மூணு பவுன் இருந்தாப் போதும் இவள தள்ளி விட்டுடலாம் என அங்கலாய்த்துக் கொண்டேயிருப்பார். சில சீட்டுகளும் கட்டி வந்தார். அவருக்கு ஒரு ஆசை. லாட்டரியில ஏதாச்சும் விழுந்தா இவளைக் கரையேத்திடலாம் என்பார். நான் ஏந்த்தை, அதெல்லாம் ஆயிரத்துல ஒருத்தருக்கு அடிக்கும். இந்த வாத்தியாருங்க ஜாலிக்கு வாங்கிப் பார்க்கிறாங்க உங்களுக்கெதுக்கு என்றேன்? ஒரு ரூபாய்க்கு மட்டும் அப்பப்போ வாங்கிக் கொடுடா என்றார்கள்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">தெரிந்த சர்க்கிளில் யாராவது ஒருவருக்கு விழும் ஒரு லட்ச ரூபாய் ஆயிரக்கணக்கானவர்களை இந்த சுழலுக்குள் இழுத்து விடுகிறது. பெரும்பாலும் தின ஊதியக்காரர்கள்தான், பூ கட்டி விற்பவர்கள், இட்லி,பனியாரக்கடைக்காரர்கள், சுமை தூக்கிகள், பார வண்டி இழுப்பவர்கள், கொத்தனார், சிற்றாள் என பாரபட்சமில்லாமல் அப்போது லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு தடவ நமக்கு விழுந்திட்டா நம்ம வாழ்க்கையே மாறிப்போகுமே என பலியாகிக் கொண்டிருந்தார்கள். காலை ரிசல்ட் பேப்பர் வரும் முன்னரே காத்திருந்து, அந்த ரிசல்டைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும் எனும் அளவிற்கு நிறையப் பேரை இந்த பைத்தியம் பிடித்து இருந்தது.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">நானும் பூபதி அண்ணன் கடையில் அவ்வப்போது கிடைக்கும் டீக்காகவும், பேன் காற்றுக்காகவும், டேப் ரிக்கார்டர் பாட்டுக்காகவும் டிக்கெட் வாங்கிக் கொடுப்பவனாக மாறியிருந்தேன்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">தமிழ்நாடு 2 கோடி குலுக்கலுக்கான நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. அன்று இரண்டு கோடி என்பது ஒர் மிகப்பெரிய பணம். முக்கிய கடைவீதியில் சென்ட் 4500 ரூபாய் விற்ற காலம் அது. இப்போது பத்து லட்சத்திற்கு மேல் கொடுத்தாலும் தரமாட்டோம் எனும் காலகட்டம். டிக்கெட் விலை நூறு ரூபாய் என்பதுதான் மக்களின் தயக்கத்துக்கு காரணமாய் இருந்தது. தீபாவளிக்கு மதுரைக்கு துணி எடுக்கப் போணோம் ஆனது ஆச்சுன்னு ஒரு டிக்கெட்ட வாங்கிட்டோம் என இரண்டு பேர் சொல்லவும் அந்த தயக்கம் குறையலாயிற்று. பூபதி அன்ணன் கூட என்னடா, நிறைய பேர் கேட்டு வர்றாங்க. பத்தா வாங்கிருக்கலாம் போலயே என சலித்துக் கொண்டார். ஆளாளுக்கு கூட்டணி போட்டு வாங்கத் துவங்கியிருந்தார்கள். செல்வி அத்தைக்கு இந்த தகவல் போயி, யார் கூடவாவது சேர்த்து வாங்குடா என் பங்குக்கு பத்து ரூபா தர்றேன் என்றார்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">எங்கள் ஊரில் முதன் முதலாக ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்தது ஆறுமுகம் என்பவருக்கு. அவர் மின்வாரியத்தில் லைன்மேனாக வேலை பார்த்து வந்தார். அந்தப் பரிசு விழுந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் புலம்பியது இது.</span><br />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">பரிசு விழுந்தாலும் விழுந்துச்சு. ஆள் ஆளாளுக்கு ஆஞ்சு போட்டாங்கப்பா. இங்கிட்டு எங்க அக்கா தங்கச்சிகளுக்கு எல்லாம் துணி மணி எடுத்துக்கொடுத்து, அப்புறம் சம்சாரம் வீட்டு ஆளுகளுக்கும் செய்ய வேண்டியதாப் போச்சு. ஆள் ஆளுக்கு காது குத்து, கல்யாணம்னு காசு கேட்டு வர்றாங்க. ஏஜெண்ட் கமிசன், வரி போக எழுபதாயிரம் கிட்ட தான் வந்துச்சு. எத்தனை பேருக்கு அழுகுறது. எப்பயும் அம்பத்தோரு ரூபாய்க்கு மேல மொய் வச்சதில்ல. இங்க பாரு லச்சாதிபதிய இருவது அம்பதுங்கிறான் 500, 1000னு வைக்கணும்கிறாங்க. சைக்கிள்ளதான் வேலைக்குப் போறதுதான் வசதி எல்லோரும் ஒரு டிவிஎஸ் பிப்டியாவது வாங்கக் கூடாதாங்கிறாங்க. தியேட்டருக்குப் போனா என்னயா பேக் பெஞ்சுல உட்கார்றா மாடி சோபா டிக்கெட் எடுக்க வேண்டியது தானேங்கிறாங்க.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">பக்கத்துல எந்த கும்பாபிஷேகம் நடந்தாலும் ஒரு மஞ்ச நோட்டீஸ அடிச்சு, ரசீது புக்கோட தேடி வந்துடறாங்க. ஏ ஈ கூட என்னா ஆறுமுகம், லட்சாதிபதி ஆயிட்டேன்னு மதிக்க மாட்டேங்கிறய்யான்னு கேட்கிறாரு. அதெல்லாம் கூட போகட்டும், போன தீபாவளிக்கு கடைகள்ள வசூல் பண்ணின லைன்மேன் காசுல பங்கு தராம, அவருக்கு என்னயா லச்சாதிபதின்னு எனக்கு கொடுக்காம அவங்களே பங்கு போட்டுக்கிட்டாங்க என்று அழுகாத குறை.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">எழுபதுகளில் ஒரு லட்சத்திற்கு இதைவிட மதிப்பதிகம். இந்தியாவில் முதன் முதலில் லாட்டரிசீட்டில் ஒரு லட்சம் பரிசு பெற்றவரின் வாழ்க்கை எப்படி மாறியிருந்தது என்பதைப் பற்றி எண்பதுகளில் ஒரு கட்டுரை வந்திருந்தது. பரிசு பெற்றவர் சமையல் கலைஞர். வென்றதும் அவருக்கு தலை கால் புரியவில்லை. நண்பர்களோடு ஒரே கூத்து. செகண்ட் ஷோ முடிந்ததும், நண்பர்களுக்காக தனி ஷோ எல்லாம் தியேட்டரில் ஓட்டச் சொல்லி பார்த்திருக்கிறார். ராசுக்குட்டி பட தியேட்டர் சீனெல்லாம் இதைக் கேள்விப்பட்டு எடுத்திருப்பார்களோ என நினைத்ததுண்டு. ஆனால் ஒரு வருடத்திலேயே எல்லாவற்றையும் தொலைத்து ஓட்டாண்டியாகி அவர் நின்றார் எனக் கட்டுரை முடியும்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">நானெல்லாம் ஒரு லாட்டரி அடிச்சாப் போதும் அதை வச்சு கருத்தாப் பொழைச்சுக்கிருவேன்னு எல்லோரும் மனதில் நினைப்பார்கள். அதுவே அவர்களை லாட்டரி வாங்கச் சொல்லி நகர்த்தும் சக்தி. நான் தொடர்ந்து செல்வி அத்தைக்காக கேட்டுக் கொண்டதற்கிணங்க, மூன்று பேர் சேர்ந்து கூட்டணியில் டிக்கெட் வாங்க வந்தவர்களிடம், மூணு ராசியில்லை, இன்னொரு பங்கா பத்து ரூபா ஒருத்தவங்க போடட்டும் எனச் சொல்லி செல்வி அத்தையை ஒரு பங்குதாரர் ஆக்கினார் அண்ணன். அத்தைக்கோ ஒரே பூரிப்பு. ஏதோ பரிசே விழுந்துவிட்டது போல உற்சாகமானார். எப்போதும் துயர வடிவாய் உட்கார்ந்திருப்பவர் முக மலர்ச்சியோடு இருந்தார். ஒருவனிடம் ஒன்று கிடைக்கப் போகிறது என்ற எண்ணமே அவனின் நடவடிக்கைகளை எவ்வளவு மாற்றுகிறது என கண்கூடாக கண்டேன். எவ்வளவு கஷ்டத்தில் இருப்பவர்களும் கையில் ஒரு லாட்டரி இருந்தால், ரிசல்ட் வரும் வரை நம்ம கஷ்டம் அடுத்த வாரம் தீர்ந்திடும் என்ற மோடிலேயே வலம் வருவார்கள்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">தீபாவளி குலுக்கல் நாள் நெருங்கியது. பூபதி அண்ணன், எனக்குத் தெரிஞ்சு 15 சீட்டுக்கிட்ட நம்ம ஊர்ல வாங்கியிருக்காங்க. அதுபோக மதுரையில தனியாப் போயி வாங்கினதும் இருக்கு. நம்ம கிட்ட வாங்கினதுல பர்ஸ்ட் பிரைஸ் கூட வேணாம், செக்ண்ட், தேர்ட் பிரைஸ் இல்லாட்டி இருபது ஒரு லட்ச ரூபா பரிசு இருக்கு அதுல ஒன்னு விழுந்தாக்கூட போதும் கைராசி ஏஜெண்ட்னு போர்டு வச்சிரலாம் என்பார். இப்போதைய நடிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஏங்குவது போல அப்போது லாட்டரி விற்பனையாளர்கள் கைராசி ஏஜெண்ட் பட்டத்துக்கு ஏங்குவார்கள்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">அந்த நாளும் வந்தது. ஊரில் யாருக்கும் கடைசி பரிசான 500 ரூபாய் கூட விழவில்லை. சுசீலன் சார், மதுரைக்குப் போயி வாங்கிட்டு வந்ததுக்காச்சும் ஒரு சின்ன பரிசாவது விழுந்திருக்கலாம் என அங்கலாய்த்துக் கொண்டார். செல்வி அத்தை கடைப்பக்கமே நான் ஒரு வாரத்திற்குப் போகவில்லை. பூபதி அண்ணனும் இப்பத்தான் வளர்ந்து வர்றோம். இப்படி கால வாரி விட்டுருச்சே என புலம்பினார்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">ஒரு வாரம் தான். எல்லோரும் தத்தம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார்கள். அடுத்து என்ன குலுக்கல், எப்படி இருக்கும்? என பேச்சுக்கள் ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் ஒரு நம்பர் லாட்டரி வந்தது. கடைசி எண்ணுக்கு பரிசு விழுந்தால் ஒரு தொகை. கடைசி இரண்டு எண் எனில் ஒரு தொகை, ஆறு எண்ணும் சரியாக இருந்தால் முதல் பரிசு என்று வந்த லாட்டரியை பலருக்கும் பிடித்துப் போய் விட்டது. ஐம்பது பைசாதான் ஒரு டிக்கெட். பத்து டிக்கெட் வாங்கினால் எப்படியும் ஒரு டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துவிடும். ஒரு எண் மட்டும் சரியாக இருந்துவிட்டாலே கடைசிப் பரிசான ஐந்து ரூபாய் கிடைத்து விடும். பாதிக்காசு வந்து விட்டதே என ஆறுதல் பட்டுக் கொள்வார்கள்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">இந்த லாட்டரி டிக்கெட் குலுக்கலை அந்தந்த மாநிலங்களில் இருந்து உரிமை பெற்று தலைமை ஏஜெண்டே நடத்திக் கொள்ளலாம் என்பது லாட்டரி வியாபாரிகளுக்கு வசதியாகப் போயிற்று. ஏராளமான சீரியல்களில் அச்சடித்து விற்கத் துவங்கினார்கள். விற்பதில் 12% சீட்டுகள் அளவுக்குத்தான் பரிசு கிடைக்கும். அது விற்கும் லாட்டரி சீட்டு மதிப்பில் 20% அளவுக்குத்தான் வரும். எனவே ஏஜெண்டுகளுக்கு அதிக கமிசன் கொடுத்து விற்கலானார்கள்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">பூபதி அண்ணனுக்கு இந்த ஒரு நம்பர் லாட்டரியில் தான் லாட்டரி அடித்தது. விற்பனை அதிகரிக்க கமிசனும் அதிகரித்தது. தெருவின் முதல் பிளாக் அண்ட் ஒயிட் டிவி, கிரைண்டர் இறுதியாக டி வி எஸ் 50 என பல முதல்களுக்கு சொந்தக்காரர் ஆனார்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">முதலாளிகள் என்பவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்காக யோசித்துக் கொண்டேயிருப்பவர்கள். எப்படி தங்கள் முதலீட்டைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே முதலாளியாய் இருக்க முடியும். லாட்டரி தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்களின் அடுத்த முன்னேற்றத்திற்கு யோசித்து அறிமுகப்படுத்தியதுதான் சுரண்டல் லாட்டரி. லாட்டரி சீட்டு வாங்கிவிட்டு எதற்கு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும்? காசு கொடுத்து வாங்கிய உடனேயே ரிசல்ட் பார்க்கலாம் என்று அறிவித்து களத்தில் இறங்கினார்கள். மக்களுக்கும் அது பிடித்துப் போயிற்று. லக்கி நம்பர் பார்த்து சீட்ட வாங்கி, அதப் பத்திரமா வச்சிருந்து ரிசல்ட் பார்க்கிறதுக்கு, காச கொடுத்தமா, சுரண்டுனமான்னு போயிடலாம் என நினைத்தனர்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. விட்டத பிடிக்கணும் என்ற சொல் அவர்களை ஆட்டுவித்தது. ஒரு ரூபாய் கொடுத்து, சுரண்டி விழுகவில்லை என்றதும் அடுத்த சீட்டு அடுத்த சீட்டு என்று காசு தீரும்வரை போனார்கள். ஐந்து செண்டிமீட்டருக்கு ஐந்து செண்டிமீட்டர் இருக்கும் அந்த சதுர சீட்டு, பலருக்கு சவப்பெட்டி ஆனது. பாக்கெட்டில் மடித்து வைத்த சீட்டோடு ஒரு ஹேண்ட் பேகில் சீட்டுக்களோடு விற்பனையாளர்கள் வலம் வரத் தொடங்கினார்கள். பஸ் ஸ்டாண்ட், கடை வீதியில் மட்டும் இருந்த அவர்கள் திரையரங்கம், தொழிலகங்கள் அருகிலும் நடமாடத் தொடங்கினார்கள். வார சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அவர்களது இலக்கு. எங்கு வாரச்சம்பளம் கொடுத்தாலும் அங்கே பேக்குடன் சென்று விடுவார்கள்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">கட்டிடத் தொழிலாளிகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த இடத்திற்கே சென்று சுரண்டிவிடுவார்கள். கிட்டத்தட்ட குடிபோதைக்கு நிகரான போதை. எப்படி 20-20 வந்ததும் டெஸ்ட் மேட்ச் பிளேயர்களின் மவுசு குறைந்து அதிரடி ஆட்டக்காரர்களுக்கு மவுசு ஏறியதோ அதுபோல கே ஏ எஸ் சேகர், கே ஏ எஸ் ராமதாஸ், மணி, கனி என கோலோச்சியவர்கள் அமுங்கிப் போய் மார்ட்டின் போன்றவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். பல குடும்பங்கள் தெருவுக்கு வந்தன.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு லாட்டரிக்கு தமிழகத்தில் தடை விதித்தது. 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. லாட்டரித் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலானவர்கள் வேறு தொழிலுக்குப் போய்விட்டார்கள். சிலர் மட்டும் கள்ளத்தனமாக கேரளா லாட்டரிகளை இங்கே தருவித்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">பூபதி அண்ணனை சமீபத்தில் சந்தித்தேன். அந்த கடையில் முதலில் பி சி ஓ, அப்புறம் ஜெராக்ஸ் அப்புறம் மொபைல் ரீ சார்ஜ் என வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறார். சுசீலன் சார் ரிட்டயர்ட் ஆனபிறகு உள்ளூர் கிளப்பில் அளவாக சூதாடிக் கோண்டிருக்கிறாராம். செல்வி அத்தை, மகளுக்கு தக்கி முக்கி திருமணம் செய்து கொடுத்து விட்டார். அந்த தெரு வழி போனால், மருமகனுக்கு சூடா ரெண்டு ஆப்பம் கொடு என இப்போது கடையைப் பார்த்துக்கொண்டிருக்கும் மகளிடம் சொல்வார்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">அத்தை, உனக்கு ஒரு முறை 100 ரூபா பரிசு விழுந்துச்சு, விழுகலைன்னு ஏமாத்தி நானே செலவழிச்சுட்டேன் என்று சொல்ல வேண்டும் என நினைப்பேன். தயக்கத்துடன் வந்து விடுவேன்.</span></div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-32799485240146173772020-02-07T19:57:00.002+05:302020-02-07T19:57:51.752+05:30கமல் ரசிகர்கள் - விஸ்வரூப பிரச்சினை அன்று.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">சென்னையில் 95ல் இருந்து 2010 வரை இருந்திருக்கிறேன். எல்டாம்ஸ் ரோட்டின் வழியாகச் செல்லும் போது, கமல்ஹாசன் வீட்டருகே வரும்போதெல்லாம் இப்போது உள்ளே இருப்பாரா என்று மனதில் ஒரு ஆவல் எட்டிப்பார்க்கும். தலை தன்னிச்சையாக அவர் வீட்டின் பக்கம் திரும்பிப் பார்க்கும்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">இளம் பருவத்தில், நமக்குப் பிடித்தமான பெண் இருக்கும் வீட்டின் தெருப்பக்கம் போனாலே நமக்கு ஜிவ்வென்றிருக்குமே ஏதாவது வேலையைச் சொல்லிக்கூட அந்த தெருவில் நுழைந்து எங்காவது நம் ஆள் தென்படுகிறாளா என கண்ணைச் சுழற்றுவோமே அதுபோல எனக்கு எல்டாம்ஸ் ரோடு சாம்கோ ஹோட்டல் ஏரியா. 2005 வாக்கில் அடையாறில் உள்ள ஐஐடி மெட்ராஸில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன். நண்பர்களுடன் வெளியில் சாப்பிடவேண்டும் என்றால் நான் சாம்கோ போலாம்டா நல்லா இருக்கும் என்று மற்றவர்களை கன்வின்ஸ் செய்து கூட்டி வந்துவிடுவேன். கமல்ஹாசனுக்கு பிடித்தமான ஹோட்டல் என்பது மட்டுமல்லாமல் அடிக்கடி அங்கே வந்து சாப்பிடுவார் என்பதும் காரணம். நண்பர்களும் எப்படியாவது உங்க தலைவரை பார்த்திடணும்னு எங்களை ஊறுகாய் ஆக்குற என்பார்கள். இருந்தாலும் சாம்கோ பிரியாணி அருமையானது என்பதால் வந்துவிடுவார்கள்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">2008-09 ஆம் ஆண்டில் உரையாடல் என்னும் அமைப்பினர் எல்டாம்ஸ் ரோட்டில் இருந்த பார்வதி மினி ஹாலிலும் பின்னர் அதன் எதிரே இருந்த கிழக்கு பதிப்பக மொட்டை மாடியிலும் உலகத்திரைப்படங்களை ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறில் திரையிடுவார்கள். பதிவர்கள் கே என் சிவராமன் மற்றும் ஜியோவ்ராவ் சுந்தர் இதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார்கள். சென்னையில் இருந்த பதிவர்கள் சந்திக்கும் வாய்ப்பாகவும் இது இருந்தது. படம் பார்த்துவிட்டு காலாற நடந்து கமல்ஹாசன் வீட்டு கேட்டின் முன் நின்று எங்காவது தென்படுகிறாரா என்று பார்ப்பேன்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">இந்தச்சூழ்நிலையில் தான் 1959ல் ஆரம்பிக்கப்பட்ட ஐஐடி மெட்ராஸின் பொன்விழா கொண்டாட்டங்கள் 2009ல் தொடங்கியது. நிகழ்வின் ஒரு பகுதியாக ஆங்கிலத் துறை, திரைக்கதை பயிற்சி பட்டறையை ஒரு வாரம் நடத்தியது. என் ஆராய்ச்சி வழிகாட்டி இது மாதிரியான நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்பதை விரும்ப மாட்டார். அதிலும் குறிப்பாக என்னை. ஒரு நாள் விடுமுறை கேட்டாலே கல்யாணம் ஆயிருச்சு, பையன் ஸ்கூல் போறான், காலாகாலத்துல முடிச்சிட்டு வேலைக்குப் போறத விட்டுட்டு என்பார். அதனால் அதில் நான் பங்கேற்க முடியவில்லை.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">ஆனால் நான் யாரைச் சந்திக்க வேண்டும் என்று 20 ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருந்தேனோ அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதை முன்னின்று நடத்தியவர் வேறு யாருமல்ல கமல்ஹாசன் தான். ஐஐடி வளாகத்திலேயே அவர் ஒரு வாரம் தங்கியிருந்தார். சக அமைப்பாளர்களுடன் காலையில் வாக்கிங் செல்லும் போது, தேநீர் இடைவேளைகளில், மாலை அரங்கத்தின் முன் என தினமும் நான்கைந்து முறை அவரைப் பார்த்து விடுவேன். பயிற்சி பட்டறை முடியும் நாளன்று அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">பின் படிப்பு முடிந்து மதுரைக்கு வேலைக்குச் சென்றுவிட்டேன். 2013 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் சென்னை திருவல்லிக்கேணியில் வேலை விஷயமாக தங்க நேர்ந்தது. அப்போது விஸ்வரூபம் பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருந்தது. கமல்ஹாசன் பேட்டி, ஜெயலலிதா பதில் பேட்டி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு, நீதிபதி படம் பார்த்தார் என பிரச்சினை சுழன்று கொண்டே இருந்தது. அன்றைய நாள் வேலை மதியமே முடியவும், ஹோட்டல் ரூமுக்கு திரும்பி வரும் வழியில் நீண்ட நாட்களுக்குப் பின் திருவல்லிக்கேணி நாயர் மெஸ்ஸில் சாப்பிடச்சென்றேன். அங்கே என் ஊர்க்காரரும் கமல்ஹாசன் நற்பணி மன்ற தீவிர செயல்பாட்டாளருமான ராசண்ணனை சந்தித்தேன். எங்கடா இங்க என்றவாறு அளாவளாவத் தொடங்கினார்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">அவர் மட்டுமல்லாமல் நற்பணி மன்ற நிர்வாகிகளும் நிறைய வந்திருந்தனர். தலைவர்க்கு பிரச்சினைனதும் மனசே சரியில்லை. அதான் ஆளுக்கு ஒரு லட்சம் போட்டு பத்து லட்சம் கொண்டு வந்திருக்கோம். நாமல்லாம் இருக்கோம்னு அவர்க்கு காட்டணும் என்றவர்கள் ஆழ்வார்பேட்டைக்கு கிளம்பிட்டோம் என்று என்னையும் அள்ளிப்போட்டுக்கொண்டனர். மூன்றரை மணி அளவில் அங்கே சென்றடைந்தோம். அருகேயிருந்த டீக்கடைகள், ஜூஸ் கடைகள் நிழல்தரும் இடங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் கமல் ரசிகர்கள். டீ குடிக்கப் போகும்போது நாம் கவலையுடன் தலைவரைப் பற்றிப் பேசுவதைக் கேட்டால் நமக்கும் சேர்த்து பணம் கொடுக்கிறார்கள், ஒன்றரை லிட்டர் குளிர்பானங்களை யாரோ வாங்கிக் கொண்டுவந்து வெயிலில் நிற்பவர்களுக்கு கொடுக்கிறார்கள். ஊர் திருவிழா அட்மாஸ்பியர் போல அது ,மாறிக்கொண்டிருந்தது.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">மாலை ஆனது, கூட்டம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது. வேலைக்குப் போனவர்கள் எல்லாம் வீட்டுக்குப் போகாமல் தங்கள் அலுவலகப் பையுடன் வந்துவிட்டார்கள். அருகில் மென்பொருள் நிறுவன மேலாளர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். தமிழ்நாட்டுல எப்படியும் நம்மாளுக ஒரு லட்சம் பேர் நல்ல நிலைமையில் இருப்பாங்க, ஆளுக்கு பத்தாயிரம் போட்டாலே 100 கோடி வந்திடும். கொடுத்துருவோம் என அருள் வந்தவர் போல் பேசிக்கொண்டிருந்தார். உடன் வந்தவர்கள் அருகேயிருந்தவர்கள் எல்லாம், அக்கவுண்ட் நம்பர சொல்ல சொல்லுங்க ஆன்லைன் ட்ரான்ஸ்பர் பண்ணிடுவோம் என சொல்லி, யாருகிட்ட அக்கவுண்ட் நம்பர் கேட்கலாம் என விசாரிக்கத் தொடங்கினார்கள். உத்தேசமாக ஏழு மணி அளவில் ஐந்தாயிரம் பேருக்கு மேல் இருந்தார்கள். எல்லோரிடமும் இதே உத்வேகம்தான் இருந்தது. யார் கிட்ட கொடுக்கணும் என்பதுதான் ஒரே கேள்வியாக இருந்தது.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">என்னடா இவ்வளவு வெறியா இருக்காங்க என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்ன செய்துவிட்டார் இவர்? எதை நம்பி இப்படி இறங்கி வருகிறார்கள் என்று. பெரும்பாலும் மக்களின் பொது நம்பிக்கைக்கு எதிராகவே பேசி வந்துள்ளார். அவரால் பணம் சம்பாதித்த ரசிகர்கள் என்பது மிகக்குறைவு. ரசிகர் மன்ற ஷோவில் வரும் பணத்தையெல்லாம் கூட ரத்ததான முகாம், நிழற்குடை, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் என்று செலவழித்து விடுவார்கள். தங்கள் கைக்காசை போட்டவர்கள் எனக்குத் தெரிந்தே ஏராளம் உண்டு.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">அந்தக் கூட்டத்தில் என் நண்பர்கள் பலரை மீண்டும் சந்திக்க முடிந்தது. எதையும் கிண்டலாகவே அணுகும் நபர் அதில் ஒருவர். ஒரு குயர் நோட்டு ஒண்ணு வாங்கிட்டு வந்து மொய் மாதிரி எழுத ஆரம்பிப்போம். எப்படியும் ரெண்டு மூணு கோடி தேத்திரலாம் என்றார். அப்போது எங்கள் குழாமில் சீரியஸான ஒருவர், கையில் ஒரு பாலீத்தின் கவர் வைத்திருந்தார். என்ன என கேட்டதற்கு வீட்டுப் பத்திரம் கொடுக்கலாம்னு வந்தேன் என்றார். அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது. எச் ஐ ஜி எனப்படும் ஹையர் இன்கம் குரூப் வீடு அது, பெசண்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் அருகே. இரண்டு கோடிக்கு குறையாத மதிப்புள்ளது அது. அவரே இதை விரும்பமாட்டார்யா வேலையைப் பாரு என அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்தோம்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">ஆனால் சுற்றி வந்த போது அவரைப்போல சிலரைக் காண முடிந்தது. வீடு, மனை பத்திரங்களுடன் வந்திருந்தார்கள். எனக்கு சிறிது வெட்கமாகக் கூட இருந்தது. நம்மளும் கமல் ரசிகர்னு சுத்திக்கிட்டு இருக்கோம். ஒரு ஆயிரம் ரூபா கூட குடுக்க மனசு வரல்லியே என்று.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">ஒரு வழியாக கமல் வீட்டு உச்சிப்படியின் மீது தோன்றினார், கறுப்பு உடை. எல்லோரும் போய் அவங்க அவங்க வேலையைப் பாருங்க. நான் என் வேலையைப் பார்க்கிறேன் என்பதுதான் அவர் பேச்சின் சாராம்சம்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">கூட்டம் மெல்ல கலையத் தொடங்கியது. என் ஊர்க்காரர்கள் வண்டியில் ஏறி திரும்பும் போது நாளைக்குத்தான் போறோம் நம்ம ரூமுக்கு வா பேசிக்கிட்டு இருப்போம் என்றார்கள்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">ரூமை அடைந்த உடன், அவர் அவர் தொழில், வேலை சார்ந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு பிறப்பித்தார்கள். நானும் சிறிது நேரம் என் பணி சம்பந்தமாக அலைபேசியில் பேசினேன். அடுத்த நாள் வேலைகள் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">ஒரு வழியாக சாப்பிடக் கிளம்பினோம். போகும் வழியிலும் அவரவர் தொழிலில் என்ன செய்யலாம் என்ற விவாதம் தொடர்ந்தது. கமல்ஹாசன் செய்த்து என்ன என்பதற்கு அப்போது எனக்கு விடை கிடைத்தது. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் தங்கள் தொழிலில்/வேலையில் புதுமையாக, ஆர்வமாகச் செய்து சாதிக்க வேண்டும் என்பதை அவரைத் தொடர்பவர்களிடம் புகுத்தி இருக்கிறார். அந்த வழிகாட்டலுக்காகத்தான் அவருக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்ற துடிப்பு எல்லோருக்கும்.</span></div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-30570648868606249942019-12-05T11:18:00.000+05:302019-12-05T11:18:46.513+05:30அடுப்பு லட்சுமி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<!--[if gte mso 9]><xml>
<o:OfficeDocumentSettings>
<o:AllowPNG/>
</o:OfficeDocumentSettings>
</xml><![endif]--><!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-IN</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:EnableOpenTypeKerning/>
<w:DontFlipMirrorIndents/>
<w:OverrideTableStyleHps/>
</w:Compatibility>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="false"
DefSemiHidden="false" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="371">
<w:LsdException Locked="false" Priority="0" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="true"
UnhideWhenUsed="true" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="true"
UnhideWhenUsed="true" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="true"
UnhideWhenUsed="true" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="true"
UnhideWhenUsed="true" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="true"
UnhideWhenUsed="true" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="true"
UnhideWhenUsed="true" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="true"
UnhideWhenUsed="true" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="true"
UnhideWhenUsed="true" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="index 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="index 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="index 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="index 4"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="index 5"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="index 6"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="index 7"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="index 8"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="index 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" SemiHidden="true"
UnhideWhenUsed="true" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" SemiHidden="true"
UnhideWhenUsed="true" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" SemiHidden="true"
UnhideWhenUsed="true" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" SemiHidden="true"
UnhideWhenUsed="true" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" SemiHidden="true"
UnhideWhenUsed="true" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" SemiHidden="true"
UnhideWhenUsed="true" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" SemiHidden="true"
UnhideWhenUsed="true" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" SemiHidden="true"
UnhideWhenUsed="true" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" SemiHidden="true"
UnhideWhenUsed="true" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Normal Indent"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="footnote text"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="annotation text"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="header"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="footer"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="index heading"/>
<w:LsdException Locked="false" Priority="35" SemiHidden="true"
UnhideWhenUsed="true" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="table of figures"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="envelope address"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="envelope return"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="footnote reference"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="annotation reference"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="line number"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="page number"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="endnote reference"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="endnote text"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="table of authorities"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="macro"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="toa heading"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Bullet"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Number"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List 4"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List 5"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Bullet 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Bullet 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Bullet 4"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Bullet 5"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Number 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Number 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Number 4"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Number 5"/>
<w:LsdException Locked="false" Priority="10" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Closing"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Signature"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="true"
UnhideWhenUsed="true" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Body Text"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Body Text Indent"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Continue"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Continue 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Continue 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Continue 4"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="List Continue 5"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Message Header"/>
<w:LsdException Locked="false" Priority="11" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Salutation"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Date"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Body Text First Indent"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Body Text First Indent 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Note Heading"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Body Text 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Body Text 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Body Text Indent 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Body Text Indent 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Block Text"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Hyperlink"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="FollowedHyperlink"/>
<w:LsdException Locked="false" Priority="22" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Document Map"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Plain Text"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="E-mail Signature"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Top of Form"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Bottom of Form"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Normal (Web)"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Acronym"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Address"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Cite"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Code"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Definition"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Keyboard"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Preformatted"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Sample"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Typewriter"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="HTML Variable"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Normal Table"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="annotation subject"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="No List"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Outline List 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Outline List 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Outline List 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Simple 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Simple 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Simple 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Classic 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Classic 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Classic 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Classic 4"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Colorful 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Colorful 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Colorful 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Columns 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Columns 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Columns 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Columns 4"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Columns 5"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Grid 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Grid 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Grid 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Grid 4"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Grid 5"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Grid 6"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Grid 7"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Grid 8"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table List 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table List 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table List 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table List 4"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table List 5"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table List 6"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table List 7"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table List 8"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table 3D effects 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table 3D effects 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table 3D effects 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Contemporary"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Elegant"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Professional"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Subtle 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Subtle 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Web 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Web 2"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Web 3"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Balloon Text"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" UnhideWhenUsed="true"
Name="Table Theme"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" SemiHidden="true" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" QFormat="true"
Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" QFormat="true"
Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" QFormat="true"
Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" QFormat="true"
Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" QFormat="true"
Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" QFormat="true"
Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" SemiHidden="true"
UnhideWhenUsed="true" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" SemiHidden="true"
UnhideWhenUsed="true" QFormat="true" Name="TOC Heading"/>
<w:LsdException Locked="false" Priority="41" Name="Plain Table 1"/>
<w:LsdException Locked="false" Priority="42" Name="Plain Table 2"/>
<w:LsdException Locked="false" Priority="43" Name="Plain Table 3"/>
<w:LsdException Locked="false" Priority="44" Name="Plain Table 4"/>
<w:LsdException Locked="false" Priority="45" Name="Plain Table 5"/>
<w:LsdException Locked="false" Priority="40" Name="Grid Table Light"/>
<w:LsdException Locked="false" Priority="46" Name="Grid Table 1 Light"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="Grid Table 2"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="Grid Table 3"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="Grid Table 4"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="Grid Table 5 Dark"/>
<w:LsdException Locked="false" Priority="51" Name="Grid Table 6 Colorful"/>
<w:LsdException Locked="false" Priority="52" Name="Grid Table 7 Colorful"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="Grid Table 1 Light Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="Grid Table 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="Grid Table 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="Grid Table 4 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="Grid Table 5 Dark Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="Grid Table 6 Colorful Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="Grid Table 7 Colorful Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="Grid Table 1 Light Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="Grid Table 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="Grid Table 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="Grid Table 4 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="Grid Table 5 Dark Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="Grid Table 6 Colorful Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="Grid Table 7 Colorful Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="Grid Table 1 Light Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="Grid Table 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="Grid Table 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="Grid Table 4 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="Grid Table 5 Dark Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="Grid Table 6 Colorful Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="Grid Table 7 Colorful Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="Grid Table 1 Light Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="Grid Table 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="Grid Table 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="Grid Table 4 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="Grid Table 5 Dark Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="Grid Table 6 Colorful Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="Grid Table 7 Colorful Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="Grid Table 1 Light Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="Grid Table 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="Grid Table 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="Grid Table 4 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="Grid Table 5 Dark Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="Grid Table 6 Colorful Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="Grid Table 7 Colorful Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="Grid Table 1 Light Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="Grid Table 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="Grid Table 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="Grid Table 4 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="Grid Table 5 Dark Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="Grid Table 6 Colorful Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="Grid Table 7 Colorful Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="46" Name="List Table 1 Light"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="List Table 2"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="List Table 3"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="List Table 4"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="List Table 5 Dark"/>
<w:LsdException Locked="false" Priority="51" Name="List Table 6 Colorful"/>
<w:LsdException Locked="false" Priority="52" Name="List Table 7 Colorful"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="List Table 1 Light Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="List Table 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="List Table 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="List Table 4 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="List Table 5 Dark Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="List Table 6 Colorful Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="List Table 7 Colorful Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="List Table 1 Light Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="List Table 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="List Table 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="List Table 4 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="List Table 5 Dark Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="List Table 6 Colorful Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="List Table 7 Colorful Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="List Table 1 Light Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="List Table 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="List Table 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="List Table 4 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="List Table 5 Dark Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="List Table 6 Colorful Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="List Table 7 Colorful Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="List Table 1 Light Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="List Table 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="List Table 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="List Table 4 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="List Table 5 Dark Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="List Table 6 Colorful Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="List Table 7 Colorful Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="List Table 1 Light Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="List Table 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="List Table 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="List Table 4 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="List Table 5 Dark Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="List Table 6 Colorful Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="List Table 7 Colorful Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="46"
Name="List Table 1 Light Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="47" Name="List Table 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="48" Name="List Table 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="49" Name="List Table 4 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="50" Name="List Table 5 Dark Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="51"
Name="List Table 6 Colorful Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="52"
Name="List Table 7 Colorful Accent 6"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt;
mso-para-margin-top:0cm;
mso-para-margin-right:0cm;
mso-para-margin-bottom:8.0pt;
mso-para-margin-left:0cm;
line-height:107%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri",sans-serif;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:"Times New Roman";
mso-bidi-theme-font:minor-bidi;
mso-fareast-language:EN-US;}
</style>
<![endif]-->
<br />
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">மனநல வளர்ச்சி குன்றி இருப்பது, மனச்சிதைவுக்கு ஆளாகி இருப்பது
என்பது அவர்களின் தவறல்ல சூழலின் தவறே என்பது புரியாத வயதில் நானும் அப்பாதிப்புக்கு
உள்ளானோரை இகழ்ந்தே வந்திருக்கிறேன். நான் சிறுவனாக இருந்த 1980களில் எங்கள் ஊரில்
அப்படிப்பட்டோர் சிலர் இருந்தனர். மத்திய வயதில் இருந்த டப்பா என்று அழைக்கப்பட்ட ஒருவர்.
அவர் பாட்டிற்கு சிவனே என்றிருப்பார். யாராவது டப்பா என்றால் கோபப்பட்டு அடிக்க ஓடி
வருவார். அவரால் விரைவாக ஓடிவர முடியாது என்பதால் சிறுவர்கள் தூர நின்று டப்பா என்று
கத்திவிட்டு ஓடிவிடுவார்கள். நானும் அப்படி பலமுறை அவரை ரண சித்திரவதை செய்திருக்கிறேன். </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">அவரைத் தவிர இன்னும் இரண்டு பெண்மணிகள் அப்படி பாதிப்புக்கு
ஆளாகி இருந்தார்கள். ஒருவரை கிறுக்கு லட்சுமி என்றும் இன்னொருவரை அடுப்பு லட்சுமி என்றும்
அழைப்பார்கள். இருவருமே தலைமுடியெல்லாம் சிக்குப் பிடித்து, கந்தலாடை உடுத்தி, உடல்முழுவதும்
கரி பூசப்பட்டது போல் கறுத்து இருப்பார்கள். யாராவது கொடுப்பதை சாப்பிட்டு விட்டு இருப்பார்கள்.
கிறுக்கு லட்சுமியை சிறுவர்கள் ஏதாவது துன்புறுத்தினால் பெருங்குரலெடுத்து கத்துவார்.
சிறுவர்கள் அங்கிருந்து அகலும்வரை தன்னால் முடிந்தவரை கதறுவார். அப்போது பெரியவர்கள்
யாராவது பார்த்து பையன்களை விரட்டி விடுவார்கள். </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">அடுப்பு லட்சுமி என்பவர் மிக அமைதியானவர். ஊரில் உள்ள குட்டிச்சுவர்களில்
கரிக்கட்டையால் அடுப்பு படங்களை வரைவார். சுவரில்லாத இடம் எனில் மண்ணில் சிறு குச்சியால்
நேர்த்தியாக அடுப்பு படங்களை வரைவார். யாராவது அடுப்பு லட்சுமி என்றாலோ எதையாவது தூக்கி
வீசினாலோ கண்ணீர் உகுத்து அழுவார், சிறு சிறு கேவல்கள் மட்டுமே வெளிப்படும். </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">நான் ஏழாவது படிக்கும் போது நூலகம் செல்லும் பழக்கம் ஏற்பட்டது.
முதலில் சிறுவர் புத்தகங்களில் தொடங்கி பத்தாம் வகுப்பில் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன்.
கு அழகிரிசாமி போன்றோரின் சிறுகதைத் தொகுப்பகளையும் அப்போது படித்தேன். அதிலிருந்துதான்
மனச்சிதைவுக்கு அவர்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வி எழுந்தது. தெருவில்
என் அடுத்த செட் பையன்கள் மனச்சிதைவுக்கு உள்ளானோரை துன்புறுத்துவதை தடுக்கத் துவங்கினேன். </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">இந்த சமயத்தில் அடுத்த மாவட்டத்தைச் சேர்ந்த நூலகர் ஒருவர்
எங்கள் ஊருக்கு மாற்றலாகி வந்தார். நான் பள்ளி விட்டு வந்ததும் மாலை ஏழு மணி வரை நூலகத்தில்
இருந்துவிட்டு, நூலகம் மூடும் போதுதான் கிளம்புவேன். ஏழே கால் மணி பேருந்தை நூலகர்
பிடித்தால்தான் அவர் ஊருக்கு செல்ல வசதி. இல்லையேல் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்
அடுத்த பேருந்துக்கு. நான் அவர் நூலகத்தை விரைவாகப் பூட்ட உதவுவேன். பூட்டிய உடன் பேருந்து
நிறுத்தம் வரை உடன் செல்வேன். எந்த புதிய புத்தகம் வந்தாலும் எனக்குத்தான் அவர் முதலில்
கொடுப்பார். இப்படியாக எங்கள் பழக்கம் அதிகரிக்கத்துவங்கியது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">ஒரு நாள் நானும் அவரும் பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லும்
போது அவர் அடுப்பு லட்சுமியைப் பார்த்தார். அவர் மன வேதனைப் பட்டதை முகம் சொல்லியது.
அருகிலிருந்த கடையில் இரண்டு பன்களையும் ஒரு டீயும் வாங்கிக் கொடுத்தார். லட்சுமி பன்னை
மட்டும் வாங்கிக் கொண்டு அமைதியாகச் சென்று விட்டார். </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">அடுத்த நாள் அவரிடம், யார் சார் இவங்க? என்னாச்சு எனக்கேட்டேன்.
லட்சுமியின் இயற்பெயர் செல்வ நாயகி. மிகப்பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர்.
இரண்டு அண்ணன்கள். இவர் கடைசி. செல்வ நாயகியின் தாயார் அவரின் சிறுவயதிலேயே மார்பக
புற்றுநோயால் இறந்து விட்டார். பொதுவாகவே பெண் என்றால் தந்தைக்குப் பிடிக்கும், கடைசிப்
பிள்ளை என்றால் இன்னும், தாயை இழந்த பிள்ளை என்றால் இன்னும். எனவே அத்தனை செல்லத்தையும்
செல்வ நாயகியின் மேல் கொட்டி வளர்த்தார். கணவனை இழந்த தன் அக்காவையும் அவர் தன் வீட்டில்
வைத்து பராமரித்து வந்தார். </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">செல்வ நாயகி வகுப்பில் முதல் மாணவி. அவரின் தந்தைக்கு தன்
மகளை எப்படியும் ஐ ஏ எஸ் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசை. அதற்கேற்ப செல்வ நாயகியும் எப்பொழுதும்
புத்தகமும் கையுமாகவும், பொது அறிவுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என
பரிசுகளை குவிப்பதுமாகவும் இருந்திருக்கிறார். சமையல் கட்டுப்பக்கமே வந்தது கிடையாது.
அவரின் அத்தை, தன் தம்பியிடம், சமையல் பழகிக்கச் சொல்லுடா என்று பலமுறை வற்புறுத்துவார்.
ஆனால் செல்வ நாயகி படித்தால் போதும் என மறுத்து விடுவார்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">ஆனால் செல்வநாயகி, படித்த நேரம் போக அத்தைக்கு ஒத்தாசையாய்
சமையல் கட்டில் வேலை செய்வார். ஒரு முறை தன் தந்தைக்கு குளிக்க போட்ட வெந்நீர் பாத்திரத்தை
அவசரத்தில் துணியில்லாமல் எடுக்க, கை பொத்துப்போய் சிரமப்பட்டார். இதனால் அடுப்புக்கிட்ட
மட்டும் போகாத, மத்த வேலை பார் என்று எல்லோரும் சொல்லிவிட்டார்கள். இந்நிலையில் செல்வநாயகியின்
மூத்த அண்ணனுக்கு திருமணமானது. ஒரு நாள் செல்வநாயகியின் அத்தையும் அண்ணியும் சமைத்துக்
கொண்டிருக்கும் போது, சமையலறை ஈரம் வழுக்கி அத்தை கீழே விழுந்தார். துரதிர்ஷ்டவசமாக
தலையில் அடிபட்டு இறந்து விட்டார். இதனால் செல்வ நாயகிக்கு சமையலறைக்குள் செல்வது என்றாலே
பயம் எடுக்கத் துவங்கியது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">அக்காவின் மரணம், செல்வ நாயகியின் அப்பாவை மிகவும் பாதித்தது.
நாம தெம்பா இருக்கும் போதே மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடவேண்டும் என்று
எண்ண வைத்தது. செல்வ நாயகியின் கல்லூரி படிப்பு முடியும் தருவாயில் மாப்பிள்ளை பார்க்கத்
துவங்கினார். அந்தஸ்துக்கு ஏற்ற இடமாகப் பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டார்.
செல்வ நாயகி புகுந்த வீட்டில் அவரின் மாமியார், ஓரகத்தி இருவரும் நன்கு சமைப்பவர்கள்.
அதனால் இவர் மேல் வேலைகள் மட்டும் செய்து கொடுத்து சிறிது காலம் தள்ளினார்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;"> ஓரகத்தி
இரண்டாவது பிள்ளைக்காக கருவுற, சமையல் வேலைகளில் பாதி இப்போது செல்வநாயகிக்கு வந்தது.
புதிதாகச் செய்வதால் அவர்களின் வேகத்திற்கு இவரால்<span style="mso-spacerun: yes;"> </span>ஈடு கொடுக்க முடியவில்லை. என்னத்த பிள்ள வளர்த்தாங்க,
தாயில்லா வீட்டுல பெண்ணெடுத்தது தப்பாப் போச்சு என ஆளாளுக்கு கரித்துக் கொட்ட சமையலறைக்குள்
நுழைய இன்னும் பதட்டமானார். கணவர் கொஞ்சம் அனுசரனையாக இருந்தாலும் அந்நாட்களில் மாமியாரை
மீறி என்ன செய்து விட முடியும்? செல்வ நாயகி யாரையும் எதிர்த்துப் பேசி பழகாதவர். அதற்கான
வாய்ப்பே கிடைக்கப் பெறாதவர். மனதிற்குள்ளேயே புழுங்கி புழுங்கி அடிக்கடி பிரமை பிடித்தாற்போல்
இருக்கத் துவங்கினார். மாமியார், தன் தந்தையை ஏக வசனத்தில் பேசுவது அவருக்கு பெரும்
மன உளைச்சலை அளித்தது. இதனால் அவருக்கு ஒரு முறை கருச்சிதைவும் ஏற்பட்டது. அதனால் உடல்
நலமும் பாதிக்கப்பட்டது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">என்னால் தனியாகப் பார்க்க முடியவில்லை. இன்னொரு மருமகளும்
கைக்குழந்தையோட இருக்கா என செல்வ நாயகியின் பிறந்த வீட்டிற்கு அவரை அனுப்பி வைத்துவிட்டார்
மாமியார். இப்படி வீட்டுல வந்து உட்கார்ந்துக்கிட்டா எப்படி அடுத்த பையனுக்கு பொண்ணு
பார்ப்பீங்க என்பது போல் ஜாடை மாடையாக செல்வநாயகியின் அண்ணி பேச மனமுடைந்து போனார்
செல்வநாயகியின் தந்தை.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">கூடப்பிறந்த அக்கா, கணவனை இழந்து வந்த போதும் அவருக்கு ஒரு
வழி ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை, நம்பி வந்த மனைவியையும் நோயில் இருந்து காப்பாற்ற
முடியவில்லை, மகளும் மன வேதனையில் அல்லல் படுகிறாள் என்ற கவலையில் இரவு உறங்கியவர்
காலையில் கண்விழிக்க வில்லை. இன்னும் மனமுடைந்து போனார் செல்வ நாயகி. சமையல் அறைக்குள்
நுழைந்தாலே அத்தை, அப்பா இருவரின் ஞாபகம், புகுந்த வீட்டாரின் தூற்றல்கள் மனதுக்குள்
சுழல அப்படியே உட்கார்ந்து விடுவார்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">என் பையனுக்கு இன்னொரு ஆளா வந்து காலத்துக்கும் சமைச்சுப்
போட முடியும்? போய் சரியாகிட்டு வா என மாமியார் துரத்த, அண்ணன்கள்,அண்ணி புகுந்த வீட்டிற்குத்
துரத்த, செல்வ நாயகியின் மனச்சிதைவு அதிகமாகிக்கொண்டே போனது. கணவனின் பாராமுகம் அதை
அதிகப்படுத்தியது. ஒரு மழை நாளில் செல்வ நாயகி எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தாள். உடலெல்லாம்
சேறுடன் ஒரு குட்டிச் சுவரின் அருகில் உட்கார்ந்து அடுப்பு படத்தை வரையத்துவங்கியவள்
அடுப்பு லட்சுமியாக அழைக்கப்படலானாள்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">இதைக் கேட்டதிலிருந்து, செல்வநாயகியைப் பார்க்கும் போதெல்லாம்
வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துச் சென்று கொடுக்கத் துவங்கினேன். தினமும் ஒரு வேளை
எப்படியும் சாப்பாடு கொடுத்து விட வேண்டும் எனத் தேடிச் சென்று கொடுக்கத்துவங்கினேன்.
ஒரு தீபாவளி அன்று வீட்டில் செய்த பலகாரங்களுடன் தேடிச் சென்று அக்கா சாப்பிடுங்க என்று
சொல்லி கொடுத்தேன். ஒரு சில மாதங்களில் எங்கள் ஊரில் இருந்து வேறு ஊருக்கு அவர் சென்று
விட்டார். </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். அதன்பின் வேலை, திருமணம்,
சொந்தத்தொழில் எனப் போய் நொடித்து மிகுந்த சிக்கலில் இருந்தேன். மீண்டும் மாத சம்பளத்திற்கு
வேலைக்குப் போக துவங்கியிருந்தேன். ஒரு நாள் கையிருப்பாக ஒரு ரூபாய் கூட இல்லை. தெரிந்தவர்
எல்லோரிடமும் கடன் வாங்கியாகி விட்டது. அடுத்த வாரம் சம்பளம் வந்து விடும். வீட்டில்
சமைக்க கூட அரிசி இல்லை. இன்றைய இரவு கடந்து விட்டால் கூட போதும், நாளை வீட்டில் இருந்த
இரண்டு பானைகளை கடையில் விற்று தப்பித்து விடலாம் என்ற நிலையில் இருந்தேன். மகன் பசியாக
இருந்தது தான் கஷ்டமாக இருந்தது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">திடீரென கதவைத்தட்டும் சத்தம். பயந்து கொண்டே கதவைத்திறக்க
பால்யகால நண்பன். சிறு வயதிலேயே வேறு ஊருக்குச் சென்ற குடும்பம். அப்புறம் தொடர்பேயில்லை.
பக்கத்து ஊர்ல தாண்டா மாமியார் வீடு, விசேசத்துக்கு வந்தேன். குமார தற்செயலாப் பார்த்தேன்.
அதாண்டா அவன் சைக்கிள நமக்கே வாடகைக்கு குடுப்பானே, அவன் தான்.உன்னையக் கேட்டேன். இங்க
இருக்கேனு சொன்னான். விசேசத்துக்குத்தான் கூப்பிட முடியலை. சாப்பாடாவது கொண்டு வருவோம்னு
கொண்டு வந்தேன் என இரண்டு வாளி நிறைய விசேஷ சாப்பாட்டை கொடுத்து விட்டுச் சென்றான்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">மகனுக்கு முதலில் சாப்பாடை வைத்து விட்டு, நானும் மனைவியும்
சாப்பிடும் போது, மனைவி என்னிடம், நானும் கல்யாணம் ஆனதில இருந்து பார்க்கிறேன், எவ்வளோ
பிரச்சினை இருந்தாலும் நீங்க ஒரு வேளை கூட பட்டினியா இருந்ததா ஞாபகமே இல்லை. அதெப்படி?
என்றார். </span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-ansi-language: EN-US;">ஒரு புண்ணியவதிக்கு கொஞ்ச நாள் நான் சாப்பாடு கொடுத்திருக்கேன்.
அவங்க கொடுத்த வரம் அது என்றேன்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
</div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29783184823132626502019-11-21T12:50:00.000+05:302019-11-21T12:50:14.953+05:30முத்து மாமா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திருமணமாகி மூன்றாண்டுகள் வரை குழந்தை இல்லாததால் என் மனைவி
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் குழந்தை பாக்கியம் கேட்டு வேண்டுதல்
வைத்திருந்தார். அதன் பின் பிறந்த மகளுக்கு குல தெய்வ கோவிலில் காதுகுத்து
முடிந்ததும், இரண்டு வருடம் கழித்து நேர்த்திக்கடனுக்காக
திருப்பரங்குன்றத்தில் மொட்டை போட வேண்டியிருந்தது. மனைவியின் அண்ணனிடம்
தகவல் தெரிவித்த போது, வந்தால் செலவோ என நினைத்து நீங்களே அப்படியே போய்
பண்ணிக்குங்க என்றார். என் வீட்டாரிடம் கேட்டதற்கு, நீங்க வேண்டினது தானே,
முடியறப்போ போய் பண்ணிக்குங்க என்றனர். <br />
<br />
சாதாரண நிகழ்வுதான். இருந்தாலும் இது ஒரு நேர்த்திக்கடன். சொந்த பந்தம்
இல்லாமல் குழந்தையை மட்டும் கூப்பிட்டுக்கொண்டு போய் மொட்டையடித்து கூட்டி
வர மனதிற்கு சங்கடமாய் இருந்தது. உறவு என யாராவது உடன் வந்தால்
நல்லாயிருக்கும் எனத் தோன்றியது. மனைவியோ, விடுங்க, நாம மட்டும் போயிட்டு
வந்திருவோம். காதுகுத்தா இவ்வளோ பீல் பண்ணுறீங்க என சுலபமாக எடுத்துக்
கொண்டார்.<br />
<br />
அடுத்த வாரம் ஞாயிறு போகலாம் என முடிவெடுத்த போது, எனக்கு முத்து மாமாவை
அழைத்தால் என்ன எனத் தோன்றியது. அவர் என் அம்மாவின் ஒன்று விட்ட அண்ணனின்
மகன். ஏழெட்டு வயது தான் வித்தியாசம் இருக்கும். எங்கள் சொந்தத்தில் முதன்
முறையாக அரசு பாலிடெக்னிக்கில் சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே சொந்த
பந்தம் எல்லோரின் வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வார். திருமணத்திற்கு
முதல் நாள் மண்டபத்தில் நுழைந்தால், ஸ்டோர் ரூம் இன்சார்ஜ் தொடங்கி பந்தி
வரை கவனம் செலுத்துவார். பெண் வீடென்றால் சீர் வரிசையை இறக்கி வைத்து
விட்டுத்தான் வீடு திரும்புவார். <br />
<br />
எங்கள் பகுதிகளில் இறப்பை “பெரிய காரியம்” என்று தான் சொல்வார்கள். எழவு என
அமங்கலமாக சொல்லக்கூடாது என்பார்கள். ஏரியாவில் எந்த பெரியகாரியமாக
இருந்தாலும் முத்து மாமா அங்கே இருப்பார். தொடர்பான எல்லோருக்கும் தகவல்
தெரிவிப்பது தொடங்கி, இறுதி ஊர்வல ஏற்பாடுகள், இடுகாட்டு சம்பிரதாயங்கள் என
பம்பரமாய் சுழல்வார். வயதானவர்கள் கூட நாம செத்தா, நம்ம பிள்ளைகளுக்கு
தகவல் போவதை விட முதலில் முத்துவிற்குத்தான் போக வேண்டும் என
நினைப்பார்கள். படிப்பு முடிந்து மதுரையில் ஒரு நிறுவனத்தில் வேலை
பார்த்தாலும், மாலை வேளை, விடுமுறை நாட்களில் எந்த காரியத்திற்கும்
அழைப்பின்றி வருவார்.<br />
<br />
அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே, உறவினர்களுக்கும்
நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்து அனுப்பவதில் மிகுந்த ஈடுபாட்டோடு
இருப்பார். டிசம்பர் மாதத்தில், அரையாண்டுத் தேர்வு முடிந்த உடனேயே புது
மண்டபத்தில் பொங்கல் வாழ்த்து அட்டைகளைத் தேடித்தேடி வாங்குவார். <br />
அப்போது தான் திருமணவார்கள் எனில் வெண்ணை உண்ணும் கிருஷ்ணர், பால முருகன்,
குழந்தை ஏசு என வாழ்த்து அட்டைகள் வாங்குவார். வசதி குறைவால் அவதிப்படுவோர்
எனில் திருப்பதி வெங்கடாஜலபதி, மனக்கஷ்டம் உள்ளவர்களுக்கு ஊழ்வினை
அறுக்கும் ஈசன், எம்ஜியார் ரசிகர்களுக்கு எம்ஜியார், சிவாஜி ரசிகர்களுக்கு
சிவாஜி. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய்காந்த் என யார் யாருக்கு என்ன
பிடிக்குமோ அதை ஞாபகம் வைத்து, தேடித்தேடி வாங்குவார். இயற்கை காட்சிகள்,
பொங்கும் பானை என அவரவர் ரசனைக்கு வாங்குவது மட்டுமின்றி, பொருத்தமான
பொங்கல் வாழ்த்து வாசகங்களை அட்டையின் உள்ளே ஸ்கெட்ச்சால் அழகாக எழுதி
அனுப்புவார். <br />
<br />
அவர் திருமண சமயம் நான் வெளியூரில் விடுதியில் தங்கிப் படித்துக்
கொண்டிருந்தேன். ஊருக்கு அவ்வப்போதுதான் வருவது. பின் ஒரு சமயம், முத்தும்
அப்படித்தான்யா பொண்டாட்டி வந்த உடனே மாறிட்டான் என உறவினர்கள்
விசேஷங்களில் பேசிக் கொண்டனர். என்னிடம் வழக்கம் போல பரிவுடன் என்னடா
மாப்பிள்ளை என்று அழைத்துப் பேசுவார். பின் ஓரிரு வருடங்கள் கழித்து
திருச்சியில் வேலை கிடைத்து அங்கே சென்று விட்டார். அவ்வப்போது ஏதாவது
விசேஷங்களில் சந்திப்பது உண்டு. சிறுவயதில் அவர் மீது எனக்கு ஏற்பட்ட பாசம்
இன்று வரை குறைந்ததில்லை.<br />
<br />
மனைவியிடம் இது பற்றி ஆலோசித்தேன். இப்படி அவர மட்டும் கூப்பிட்டா மத்தவங்க
என்ன நினைப்பாங்க? என்றார். நம் இருவர் வீட்டிலுமே வரத் தயங்குகிறார்கள்.
மற்றவர்களா எடுத்தேறி வரப்போகிறார்கள்? அவர் சும்மா எதார்த்தமா கோவிலுக்கு
வந்தார்னு கூட சொல்லிக்கிடலாமே என்று வாதித்து விட்டு, எனக்குத் தெரிஞ்சு
அவர் நல்ல மனுசன், அவர் ஆசிர்வாதம் என் பிள்ளைக்கு வேணும்னு ஆசைப்படுகிறேன்
என்றேன். இன்னும் சொல்லப்போனா அவர் வருவாரான்னு கூடத் தெரியலை. என் மனத்
திருப்திக்கு அவரப் போய் கூப்பிடுகிறேன் என மனைவியை ஓரளவு
சமாதானப்படுத்திவிட்டு திருச்சிக்கு பஸ் ஏறினேன்.<br />
<br />
அவர் வீட்டிற்குச் சென்றதும் மிக சந்தோசமாக வரவேற்றார், வாடா மாப்பிள்ளை
என்னடா விசேஷம் என்றார். வாங்கிச் சென்ற பழம், ஸ்வீட்களை அக்காவிடம்
கொடுத்து விட்டு நல்லா இருக்கீங்களாக்கா என்று கேட்டுவிட்டு விஷயத்தைச்
சொன்னேன். நிச்சயம் வர்றேண்டா, மூத்த பொண்ணு பிளஸ் 2. அதனால இவ இங்க
பிள்ளைகளை பார்த்திக்கிரணும் நான் வந்துடுறேன் என்றார். சிற்றுண்டி
முடிந்ததும், நான் ட்ராப் பண்றேன் என பைக்கில் அழைத்து வந்தார். பேருந்து
நிலையத்திற்கு சற்று முன்னர் ஒரு கடையில் நிப்பாட்டி, இருடா, டீ சாப்பிட்டு
போகலாம் என்றார்.<br />
<br />
டீ குடிக்கும் போது, மாமா தப்பா நினைக்காட்டி ஒன்னு கேட்கவா என்றேன்.
சொல்றா என்றார். நீங்க, எல்லா காரியத்தையும் எடுத்துச் செய்வீங்க.
கல்யாணத்துக்கு அப்புறம் அப்படியே விட்டுட்டீங்க. என்னாச்சு மாமா? என்றேன்.<br />
<br />
மாப்ள, நான் எல்லார் விசேஷத்துக்கும் என்னால முடிஞ்சத செஞ்சேன். என்
கல்யாணத்துக்கு அப்படி வந்து நிறைவா இருப்பாங்கன்னு பார்த்தேன். வந்தவங்க
யாரும் ஒரு துரும்ப கூட தூக்கி வைக்கல. சரி பெரியவங்கன்னு பார்த்தா,
நிறையப் பேர் வரவேயில்லை. வந்தவங்க கிட்ட மொய் கொடுத்து விட்டாங்க. சரி
பரவாயில்லை அவங்களுக்கு என்ன வேலையோ, வேர விசேசமோ, சூழ்நிலையோன்னு
விட்டுட்டேன். அடுத்து என் மனைவி பிரசவம், அப்புறம் காதுகுத்து எதுக்குமே
யாரும் என்னன்னு கூட கேட்கலை. சொந்த பந்தம், கூப்பிடாம வந்து வேலை
செய்யுறவனை வேலைக்காரனாத்தான் பார்க்குது. தனக்கு சமமா பார்க்கிறதில்லை. <br />
<br />
என்னைய நம்பி ஒருத்தி வந்திருக்கா, அது போக என்னை நம்பியே ரெண்டு பிள்ளைக
இருக்கு. அவங்களுக்கு ஒரு மரியாதை வேணும். அது நான் இப்படி
எல்லோர்கிட்டயும் மனசு கோணாம நடந்து, இறங்கிப் போய் வேலை செய்யுறதுனால
கிடைக்காம போகுதுங்கிறப்ப அத நான் ஏன் செய்யணும்?<br />
எல்லார்கிட்டயும் தான் எல்லார் நம்பரும் இருக்கு. நான் யாருக்காவது போன்
பண்ணினா என்னப்பா எங்களையெல்லாம் மறந்துட்டியா முன்ன மாதிரி இல்லங்கிறாங்க.
ஏன் நீங்களா ஒரு தடவயாச்சும் என் கூட பேசக்கூடாதா? ஒரு பண்டிகைக்கு
வாழ்த்துச் சொல்லக்கூடாதா?<br />
<br />
அவங்க மதிச்சாங்கன்னா நாம எறங்கிப் போகுறது தப்பில்ல. இல்லைன்னா
சொந்தத்துக்கிட்ட கொஞ்சமாச்சும் கெத்தாத்தான் நடந்துக்கிடணும். மனைவி,
பிள்ளைகளோட மரியாதை நாம கெத்தா இருக்கிறதுல தான் இருக்கு. <br />
உனக்குத் தெரியும்லடா, எத்தனை வாழ்த்து எவ்வளோ பேருக்கு அனுப்பியிருப்பேன்
பொங்கலுக்கு? அப்ப எனக்கு ஒன்னு கூட வந்ததில்லைடா. அட ஒரு நன்றி கார்டு.
அப்ப நாலணா ஸ்டாம்ப் சேர்தே எட்டணா தான் வரும். அதக்கூட ஒருத்தனும் வாங்கி
அனுப்பினதில்ல எனக்கு என பொரிந்து தள்ளி முடித்தார்.<br />
<br />
பஸ்ஸில் திரும்பி வரும் போது முத்து மாமாவின் வேதனை மனதை சங்கடப்படுத்திக்
கொண்டேயிருந்தது. எல்லோருக்கும் நல்ல பிள்ளையாகிறேன் என மனைவி, மகளை
நானும் விட்டுக் கொடுக்கிறேனோ என்ற எண்ணமும். </div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-61410494166471609792018-10-21T10:51:00.003+05:302018-10-21T10:51:14.382+05:30நாயகன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">நாயகன் வெளியான 1987 ஆம் ஆண்டு தீபாவளி தினத்திற்கான சிறப்பு ஒலியும் ஒளியுமில் முதலில் ஒளிபரப்பானது மனிதன் படத்தின் “வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன், மனுசனை இன்னும் பார்க்கலியே” பாடல். அதற்கடுத்தாற்போல நான் சிரித்தால் தீபாவளி பாடல் ஒளிபரப்பானது. தெருவில் சில வீடுகளில் மட்டுமே டிவி இருந்த காலம். நிகழ்ச்சி முடிந்ததும், உடன் பார்த்துக்கொண்டிருந்த மணிகண்டன், எங்க தலைவரைப் பார்த்தியா எவ்வளோ தெளிவாப் பாடுறாரு. உங்க பாட்டும் இருக்கே, காதுக்குள்ளயே போகலை என்று கிண்டலடித்தான். அது உண்மை தான் முதல் வரியைத்தாண்டி எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. </span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">தீபாவளி முடிந்த அடுத்த வாரம், எங்கள் தெருவில் இருந்து மதுரை கல்லூரிகளின் விடுதிகளில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தவர்கள் சனி, ஞாயிறு விடுமுறைக்கு வந்தார்கள். மனிதன் நல்லாயிருக்கு. நாயகன் புரியலை. அது ஒரு மாதிரிப் போகுது என்றார்கள். இன்று அதை நினைத்துப் பார்த்தால் அதில் புரியாமல் போக என்ன இருக்கு எனத் தெரியவில்லை. ஆனால் அப்போது ஒருவர் சொன்னது முக்கியமானதாகப் பட்டது. அது, வசனமெல்லாம் உத்து கவனிச்சு கேட்க வேண்டியிருக்கு என்றார்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">ஆனாலும் நாயகன் மக்களுக்கு எப்படியோ அப்போது பிடித்துப் போய், நன்றாக ஓடியது. படத் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் என்னத்த எடுத்து வச்சிருக்காங்க, என்ன ஆகுப்போகுதோ என்று புலம்பினார் என்பார்கள். முதல் இரண்டு நாட்கள் கிடைத்த எதிர்மறைப் பேச்சுகளையும் தாண்டி அந்தப் படம் ஓடியது. ஒருவழியாக 100 நாட்கள் கழித்து எங்கள் ஊருக்கு வந்தது. எங்கள் தெரு அண்ணன் சொன்னது போல, வசனங்களை உற்றுக் கவனிக்க வேண்டியிருந்தது. காரணம் அப்போதெல்லாம் திரைக்குப் பின்னால் ஒரே ஒரு ஸ்பீக்கர் மட்டுமே இருக்கும். ஸைட் ஸ்பீக்கார்கள் சில திரை அரங்கங்களில் மட்டும். மற்றப் படங்களில் எல்லாம் எல்லோரும் ஒரே சத்தத்தில் பேசுவார்கள். அது சாகப்போகும் கிழவியாக இருந்தாலும் சரி, சரசப்பேச்சு பேசும் குமரியாக இருந்தாலும் சரி. வேண்டுமானால் வழக்கத்தை விட சத்தமாக ஹீரோவோ, வில்லனோ கத்துவார்கள். கமல்ஹாசன் படங்களில் கேரக்டருக்கு தகுந்தபடியான, சூழ்நிலைக்கு தகுந்தபடியான சத்தத்திலேயே கேரக்டர்கள் பேசும். படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அதுபாட்டுக்கு காதுல வசனம் விழுகணும்யா என்பவர்களுக்கு அது சிறு இடையூறாகவே இருக்கும். பல வசனங்கள் காதில் விழாது. </span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">இதை 15 ஆண்டுகள் கழித்து அன்பே சிவத்திலும் அனுபவித்தேன். தற்போது கல்யாண மண்டபமாக மாறிவிட்ட உதயம் திரையரங்கில் படம் ரிலீஸ். மாலைக்காட்சி. ஒரிஸ்ஸா காட்சிகளில் விமான நிலைய அறிவிப்புகள் போன்றவை ஸ்பீக்கர் வழியே வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் பல வசனங்கள் காதில் விழவில்லை. சில வருடங்கள் கழித்து நண்பரின் லேப்டாப்பில் இந்தப் படத்தை பார்க்கும் போதுதான் தவறவிட்ட வசனங்கள் தெரிந்தன. </span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">பி சி ஏரியாக்களில் பல திரையரங்குகளின் நிலை இதுதான். ஒளியாவது முன்னே பின்னே இருந்தாலும் எப்படியாவது பார்த்து விடலாம். ஏனென்றால் நம் கவனம் முழுவதும் திரையிலேயே இருக்கும். இந்த வசனம், பிண்ணனி இசை சரியாகக் கேட்காவிட்டால் என்ன செய்ய முடியும்? ஹேராம் போன்ற ஒரு படத்தை சி செண்டரில் பார்த்தால் இதன் முக்கியத்துவம் தெரியும். ஒன்றிரண்டு வசனங்கள் தான் காதில் விழும், அதுவும் வேற்று மொழியில் இருக்கும். விருமாண்டி படத்தை கிராமத்தில் பார்க்கும் போதும் இந்த கஷ்டம் புரிந்தது. </span><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.99); color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் இந்த மூன்றையும் தியேட்டரை விட தொலைக்காட்சியில் தான் நன்கு ரசிக்க முடிந்தது. காரணம் எல்லா வசனங்களும் தெளிவாக காதில் விழுந்தன. நானும் ரவுடி தான் படத்தை எங்கள் ஊரில் பார்த்து விட்டு சுமாராத்தான இருக்கு, இதுக்கு எதுக்கு இவ்வளோ பாராட்டுன்னு நினைச்சேன். அப்புறம் ஒரு நல்ல தியேட்டர்ல பார்த்த பின்னாடிதான் பரவாயில்லைன்னு தோணுச்சு. மெட்ராஸ் படமும் அப்படித்தான். என் கணக்குப்படி தமிழ்நாட்டுல எப்படியும் 40% தியேட்டர்கள் இந்தப் பிரச்சினையோடதான் இருக்கு. அதனால தான் தெளிவான தயாரிப்பாளர்கள், ஹரி, கே எஸ் ரவிகுமார் எல்லாம் எல்லோரையும் ஒரே டெசிபல்ல பேச வச்சிடுறாங்க போல. ஷங்கர் கூட கவனிச்சுப் பார்த்தா எளிமையான வசனம், நார்மல் டெசிபல்லயே பேச வைக்கிறார். சென்னையில் ஒரு படம் பார்க்கிறதுக்கும் செம்பட்டியில் ஒரு படம் பார்க்கிறதுக்கும் இருக்கிற வித்தியாசங்கள்ள இதுவும் ஒண்ணு. </span></div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-19127346901934141872018-10-08T07:32:00.003+05:302019-08-27T20:40:02.200+05:30ஒரு தலை ராகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">ஒருதலைராகம் </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">படம் </span><span style="font-family: "latha" , "sans-serif";">1980 <span lang="TA">ஆம் ஆண்டு தமிழகம்
முழுக்க ஒரு முப்பது தியேட்டர்களுக்கு உள்ளாகவே வெளியானது</span>. <span lang="TA">படத்தின்
தயாரிப்பாளரில் இருந்து</span>, <span lang="TA">இயக்குநர்</span>, <span lang="TA">இசை
அமைப்பாளர்</span>, <span lang="TA">நடிகர்</span>, <span lang="TA">நடிகைகள் என
எல்லோருமே <span style="mso-spacerun: yes;"> </span>ஏறக்குறைய புதுமுகங்கள்</span>.
<span lang="TA">சரி போய்த்தான் பார்ப்போமே என்று அன்று தியேட்டருக்குள்
நுழைந்தவர்களுக்கு தெரியாது தங்களுக்கு ஒரு புது அனுபவம் கிட்டப்போகிறது என்று</span>.
<span lang="TA">படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே இது ஒரு புதுமாதிரியான படம்
எனப் புரிந்து கொண்டார்கள்</span>. <span lang="TA">அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு
முன்பு வெளியான </span>16 <span lang="TA">வயதினிலே கொடுத்த அதே புதுமை</span>. 16 <span lang="TA">வயதினிலே அதுவரை காட்டியிராத கிராமத்தைக் காட்டி இருந்தது என்றால் இதில்
சிறுநகரம் சார்ந்த கல்லூரியை முதன்முதலாக தமிழ்சினிமாவில் காட்டி இருந்தார்கள்</span>.<o:p></o:p></span><br />
<span style="font-family: "latha" , "sans-serif";"><br /></span>
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">இந்தப் படம் முதலில்
வசீகரித்தது கல்லூரி மாணவர்களை</span><span style="font-family: "latha" , "sans-serif";">.
<span lang="TA">நம்ம காலேஜ அப்படியே எடுத்துருக்காண்டா என கூட்டம் கூட்டமாகச்
சென்று பார்த்தார்கள்</span>,<span lang="TA"> பின்னர் பள்ளி மாணவர்கள்</span>, <span lang="TA">பொதுமக்கள் என எல்லோரையும் தியேட்டர்களுக்கு வரவழைத்தது</span>. <span lang="TA">திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி</span>. <span lang="TA">பெரிய ஊர்களில்
</span>200 <span lang="TA">நாட்களைக் கடந்து ஓடியது</span>. <span lang="TA">அதுவரை
தமிழ்சினிமாவில் கல்லூரி என்றாலே மாணவர்கள் கூட கோட்சூட் அணிந்து செல்வார்கள்
என்னும் அளவுக்கு நிஜத்தில் இருந்து விலகியே இருக்கும்</span>. <span lang="TA">பெரும்பாலும்
</span>40<span lang="TA">வயதைக் கடந்த கதாநாயகர்கள் கல்லூரி மாணவர்களாகத்
தோன்றுவார்கள்</span>, <span lang="TA">ஆனால் நாம் கண்முன்னால் பார்க்கும் கல்லூரியை</span>.
<span lang="TA">மாணவர்களை</span>, <span lang="TA">அவர்களின் இயல்பான நடை</span>,<span lang="TA">உடை</span>,<span lang="TA">பாவனைகளுடன் உலவவிட்டது ஒருதலை ராகம்</span>.<o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">குறிப்பிட்ட
வார்த்தைகளுடனேயே புழங்கும் ஒரு சமூகத்திற்குள் பத்திரிக்கைகள்</span><span style="font-family: "latha" , "sans-serif";">,<span lang="TA">தொலைக்காட்சி</span>,<span lang="TA">திரைப்படம் மூலமாகத்தான் புதிய வார்த்தைகள்<span style="mso-spacerun: yes;"> </span>சென்று சேரும்</span>. <span lang="TA">அல்லது
அந்தப்பகுதிக்கு வரும் மற்றவர்களாலும் புதிய வார்த்தைகள் அறிந்து கொள்ளப்படும்</span>.
<span lang="TA">தொலைக்காட்சி இல்லாத</span>, <span lang="TA">அதிகம் பேர் பத்திரிக்கை
படிக்காத அந்த நாட்களில் திரைப்படங்கள் மூலமே பல வார்த்தைகள் கிராமம் மற்றும்
சிற்றூர் பகுதிகளில் உள்ளே வந்தன</span>. <span lang="TA">அப்படிப்பார்த்தால்
கல்லூரி மாணவர்களிடையே சகஜமாகப் புழங்கும் மச்சி</span>, <span lang="TA">மாமூ போன்ற
வார்த்தைகள் இந்தப்படத்தின் மூலமாகவே கிராமப்புறங்களில் கூட நுழைந்தன</span>.<o:p></o:p></span><br />
<span style="font-family: "latha" , "sans-serif";"><br /></span>
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">காதலியைத் தொடாமல்</span>,<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">பேசாமல் காதலன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">காதலித்த முதல் படம்</span><span lang="TA" style="mso-bidi-font-family: Latha;"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">இதுதான்</span><span style="font-family: "latha" , "sans-serif";">. <span lang="TA">ஒரு வகையில் இதயம் திரைப்படத்துக்கு
முன்னோடி</span>.<span style="mso-spacerun: yes;"> </span></span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">காதலி குடும்பச்சூழல் மற்றும் </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">அவள் சந்தித்த </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">ஆண்க</span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">ளின் மீதான</span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";"> வெறுப்பு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">காரணமாக காதலிக்க மறுக்கிறாள். உற்சாக
உருவாய் வளையவந்த காதலன் மனதுடைந்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">நோய் வாய்ப்படுகிறான். காதலி மனம்மாறும்
தறுவாயில் இறந்து விடுகிறான்.</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">இந்தப் படத்தில் இருந்துதான் நாயகனுக்கு
அவன் சமவயதிலேயே ஒரு நண்பர் கூட்டம்</span><span style="font-family: "latha" , "sans-serif";">,
<span lang="TA">அதில் ஒரு காமெடியன்</span>, <span lang="TA">இறுக்கமான மனதுடையவன்
ஒருவன் மற்றும் ஜாலியான இருவர் என்ற பார்முலாவும் தமிழ்சினிமாவுக்கு கிடைத்தது</span>.
<o:p></o:p></span><br />
<br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">டி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">ராஜேந்தர்
இயக்கியது</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">ஆனால்
இப்ராஹிம் என்பவர் பெயரில் வெளியானது என்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">சொல்வார்கள். இசை பாடல்கள் டி ராஜேந்தர்
தான். சங்கர்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">ரவீந்தர்</span><span style="font-family: "latha" , "sans-serif";">,<span lang="TA">தியாகு</span>,</span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";"> சந்</span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">தி</span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">ரசேகர்</span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">ஜோதி</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">உஷா (பின்னாளில் டி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">ஆரின்
மனைவியானார்)</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">ஆகியோர்</span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";"> நடித்தது.</span><span lang="TA"> </span><br />
<br />
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">ஒருதலை
ராகத்தின் கதை</span><span style="font-family: "latha" , "sans-serif";">, <span lang="TA">கதை நடக்கும் களம் போலவே இன்னொரு ஆச்சரியம் கொடுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்</span>.
<span lang="TA">அப்போது ஓரளவு வசதியான ஆட்கள் மட்டுமே டேப் ரிக்கார்டர் வைத்திருப்பார்கள்</span>.
<span lang="TA">எனவே ஒரு பாடல் நன்றாக இருக்கிறதென்றால் இப்போது போல எல்லோரும் நினைத்த
உடன் கேட்டுவிட முடியாது</span>. <span lang="TA">வானொலியில் எப்போதாவது ஒலிபரப்பினால்தான்
உண்டு</span>. <span lang="TA">தியேட்டருக்குச் சென்றுதான் கேட்க முடியும்</span>. <span lang="TA">எனவே ஒரு தலை ராகத்தின் பாடல்களைக்கேட்க மக்கள் திரும்ப திரும்பச் சென்று பார்த்தார்கள்</span>.
<span lang="TA">கல்லூரி மாணவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்</span>. <o:p></o:p></span></div>
<br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">மன்மதன் ரட்சிக்கனும்
இந்த மன்மதக்காளைகளை</span><br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">வாசமில்லா மலரிது
வசந்தத்தை தேடுது</span><br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">கொக்கரக்கோழி கூவுற
வேளை</span><br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">இது குழந்தை பாடும்
தாலாட்டு</span><br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">கடவுள் வாழும்
கோவிலிலே</span><br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">நான் ஒரு ராசியில்லா
ராஜா</span><br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">என் கதை முடியும்
நேரமிது.</span><br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">இதில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">இது
குழந்தை பாடும் தாலாட்டு பாடலில் வரும் எல்லா வரிகளும் எதிர்உவமையாக அமைந்திருக்</span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">கு</span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">ம்</span><br />
<br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">நடை மறந்த கால்கள்
தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன்</span><span lang="TA"> </span><br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">வடமிழந்த தேரது ஒன்றை
நாள்தோறும் இழுக்கிறேன்</span><span lang="TA"> </span><br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்</span><span lang="TA"> </span><br />
<br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">நான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">ஒரு
ராசியில்லா ராஜா பாடலை டி எம் எஸ் பாடினார். அதன்பின் தனக்கு வாய்ப்பே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">இல்லை.
அப்பாடல் சென்டிமெண்டலாக என்னை பாதித்து விட்டது என பல பேட்டிகளில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">சொ</span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">ல்லியிருக்கிறார். </span><span style="mso-bidi-font-family: Latha;"><o:p></o:p></span><br />
<br />
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">மேலும்
அப்போது டிடிகே மற்றும் சோனி கம்பெனிகளின் கேசட் மட்டும்தான் கிடைக்கும்</span><span style="font-family: "latha" , "sans-serif";">. <span lang="TA">அவற்றின் விலை அதிகம்</span>.
<span lang="TA">தியேட்டர் பால்கனி டிக்கட் மூன்று ரூபாய்க்குள் இருந்த காலத்தில் அந்த
கேசட்டுகளின் விலை</span> 45 <span lang="TA">ரூபாய் என்றால் அதைப் புரிந்து கொள்ளலாம்</span>.
<span lang="TA">குல்சன்குமார் டி சீரிஸ் கேசட்டுகளை சகாய விலைக்கு தயாரித்து விற்க ஆரம்பித்த
உடன் தான் அதிக அளவில் மக்கள் கேசட்டுகளை வாங்கத்துவங்கினார்கள்</span>. <span lang="TA">அதற்கு அடுத்தபடியாக</span> 90<span lang="TA">களின் ஆரம்பத்தில்</span> 10 <span lang="TA">ரூபாய்க்கு கேசட் கிடைக்க ஆரம்பித்த உடன் மக்கள் இன்னும் அதிகமாக வாங்கத் துவங்கினார்கள்</span>.
<span lang="TA">அந்த சமயத்தில் எந்த ஹாஸ்டல் ரூமுக்குள் நுழைந்தாலும் ஒரு பாடல் கேசட்
நிச்சயம் இருக்கும்</span>. <span lang="TA">அது ஒருதலைராகம் படத்தின் கேசட்</span>.
<span lang="TA">அதனுடன் காம்போவாக இரயில் பயணங்களிலும் சேர்ந்து பதியப்பட்டிருக்கும்</span>.
10 <span lang="TA">ஆண்டுகள் முன் வந்த ஒரு படத்தின் பாடலுக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா
என்று நினைத்த்துண்டு</span>. <span lang="TA">ஆனால் இன்று வரை</span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">அந்தப் படத்தின் பாடல்களுக்கு மவுசு
இருந்து கொண்டுதான் இருக்கிறது</span>. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">எப்படி
கிளாசிக்கல் டான்ஸுக்கு சலங்கை ஒலியின் ஓம் நமச்சிவாய இன்றுவரை கல்லூரி விழாக்களில்
உபயோகப்படுகிறதோ அதுபோல ரெட்ரோ பாடல்கள் பாடுபவர்கள் இன்னும் ஒருதலை ராகத்தின் மன்மதன்
ரட்சிக்கணும்</span><span style="font-family: "latha" , "sans-serif";">, <span lang="TA">வாசமில்லா மலரிது பாடல்களை உபயோகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்</span>.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif";"><br /></span></div>
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">இந்தப் படத்தின்
இயக்குநர் டி ராஜேந்தர்தான் என்பதை தன் அடுத்தடுத்த படங்களில் அவர்
நிரூபித்துவிட்டார்</span><span style="font-family: "latha" , "sans-serif";">. <o:p></o:p></span><br />
<span style="font-family: "latha" , "sans-serif";"><br /></span>
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">தொடர்ந்து குறைந்த
பட்ஜெட்டில் எடுக்கப்படும் கல்லூரி சார் படங்கள் தமிழில் வெளிவர ஒருதலை ராகம்
ஒரு<span style="mso-spacerun: yes;"> </span>காரணமாக அமைந்தது</span><span style="font-family: "latha" , "sans-serif";">.<span style="mso-spacerun: yes;">
</span><span lang="TA">இந்தப் படத்தின் ஒளிப்பதிவு ராபர்ட் </span>–<span lang="TA">ராஜசேகரன்</span>.<span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">இவர்கள் அடுத்த ஆண்டிலேயே
குறைந்த முதலீட்டில் பாலைவனச் சோலை படத்தை எடுத்து அதை மிகப்பெரும்
வெற்றிப்படமாக்கினார்கள்</span>. <o:p></o:p></span><br />
<span style="font-family: "latha" , "sans-serif";">1980<span lang="TA">களில் சிறு
நகர கல்லூரி எப்படி இருக்கும்</span>? <span lang="TA">மாணவர்கள் என்ன மாதிரி ஆடை
அணிவார்கள்</span>? <span lang="TA">அவர்கள் கையில் என்னென்ன உபகரணங்கள் இருக்கும்
எனத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு தலை ராகம் படத்தைப் பாருங்கள்</span>. <span lang="TA">கூடுதலாக காதலிக்க அத்தனை தகுதிகள் இருந்தும்</span>, <span lang="TA">காதலைச்
சொல்ல முடியாமல்</span>, <span lang="TA">அதைச் சொன்னாலும் ஏற்க மறுக்கும் ஒரு
பெண்ணை காதலித்தவனின் வலியையும் தெரிந்து கொள்ளலாம்</span>.<o:p></o:p></span><br />
<br /></div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-86161770377620423212018-07-24T11:42:00.000+05:302020-02-23T11:10:50.276+05:30ரஷ்யன் டெக்னாலஜி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">எங்கள் ஆய்வகத்தில் இந்திய ராணுவத்திற்குத் தேவையான குண்டு துளைக்காத ஆடைகள் மட்டும் தலைக்கவசத்தை மேம்படுத்தக்கூடிய ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஆய்வு நிதி அளித்திருந்த மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பிராஜக்ட் டைரக்டர் நேரில் வந்து ஆய்வு செய்வார். அந்த வார ஞாயிறு முக்கியமான சோதனை செய்ய வேண்டிய நாள். அதற்கு முன்னால் பொருளின் தன்மை, இயந்திரவியல் பண்புகள் என எல்லாவித சோதனைகளும் முடிந்திருந்தன. கடைசியாக ரியல் லைப் டெஸ்ட். ஆள் சந்தடியில்லாத ஒரு பிரதேசத்தை தேர்வு செய்திருந்தோம். வேறொன்றுமில்லை, போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரத் துப்பாக்கிகளால் நாங்கள் தயாரித்த ஆடைகள், தலைக்கவசத்தை சுட்டு பரிசோதிப்பார்கள். எப்படி தாங்குகிறது என. பொருளின் எடையும் குறைவாக இருக்க வேண்டும். தாங்குதிறனும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆய்வு. இதற்காக பலவித காம்போசிட்களை உபயோகப்படுத்தி இருந்தோம்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">அந்த நாளும் வந்தது. சென்னையில் உள்ள ஒரு ராணுவ மையத்தில் இருந்து இயந்திரத் துப்பாக்கிகளும் வந்திறங்கின. சில சோதனைகளுக்குப் பிறகு பிராஜக்ட் டைரக்டரிடம், இது இந்த மெட்டீரியல், இந்த காம்போசிசன், இவ்வளவு கியூரிங் டைம், டென்சைல் இவ்வளவு இருந்தது, பிரிட்டில் அதிகமா இருக்கு, டப்னெஸ் குறைவு, அதனால இதை மாற்றி ட்ரை செய்தோம் என அவரிடம் தெரிவித்துக் கொண்டிருந்தேன். பின் மதிய உணவு நேரத்திலும் விவாதம் நடந்து கொண்டேயிருந்தது, திரும்பவும் பீல்டுக்கு வரும்பொழுது ஒரு ஆசை வந்தது. பிரபலமான ஏ கே 47ஐ தூக்கிப் பார்க்க வேண்டும் என. அவரிடம் சொன்ன உடன் சிரித்துக் கொண்டே கோ அஹேட் என்றார். </span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">ஏழெட்டு துப்பாக்கிகள் இருந்தன. தூக்குறது தூக்குறோம் நல்ல பீஸா தூக்குவோம் என்று தேடிப்பிடித்து ஒன்றை எடுத்து தூக்கிப் பார்த்தேன். அவர் சிரித்தார். எதற்கு என்று கேட்டேன். யாரை அழைத்து வந்து உங்களுக்குப் பிடித்த ஒன்றை இதில் இருந்து எடுங்கள் என்று சொன்னாலும் இதைத்தான் எடுப்பார்கள், என்ன விசேஷம் என்றால் இதுதான் இருப்பதிலேயே பழையது என்றார். இது ஒரிஜினல் ரஷ்யன் மேக். மீதம் எல்லாம் நாம் அவர்களிடம் டிசைன் வாங்கித் தயாரித்தது என்றார். ஆச்சரியத்துடன் அதை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் இதென்ன பிரமாதம் முதன் முதலில் 47ல் தயாரிக்கப்பட்ட ஏ கே 47 களே இன்னும் நன்றாய்த்தான் உள்ளன என்றார். பின்னர் பேச்சு ரஷ்யன் டெக்னாலஜி பற்றி திரும்பியது. ரஷ்யர்களிடம் இருந்து நாம் வாங்கிய துப்பாக்கிகள், பீரங்கிகள் எல்லாமே நம்மை எந்த சூழ்நிலையிலும் கைவிடாதவை என்றார். ரஷ்ய டாங்குகளில் 12 ஸ்பீட் கியர் பாக்ஸ் ஒன்று இருக்குமாம். அது ஹைட்ராலிக் கியர் பாக்ஸ். முக்கால் படி உழக்கு பார்த்திருக்கிறீர்களா அந்த அளவில் தான் இருக்குமாம். சிக்கலாக வடிவமைக்கப்பட்ட ஏகப்பட்ட போர்ட்கள் கொண்டது அது. அந்த டிசைன் முடிந்ததும் அந்த பொறியாளருக்கு மனச்சிதைவே வந்துவிட்டதாம். பயிற்சி முடிந்து வரும் டிரைனி ஆபிசர்கள் அந்த டேங்கில் பர்ஸ்ட் கியர் போட்டால் தான் அவரை ஆபிசராகவே ஏற்றுக் கொள்வார்களாம். உடல் உறுதியும் வேண்டும், இலாவகமும், டைமிங் சென்ஸும் வேண்டும் அதற்கு, </span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">ரஷ்யத் துப்பாக்கிகளின் நீடித்த உழைப்பிற்கு முக்கிய காரணம் அவர்களது மெட்டலர்ஜி. நம் இந்தியப் உலோகங்களை, ஒரு உபயோகத்திற்கு என்றால் என்ன இயந்திரவியல் பண்புகள் தேவையோ அதற்கேற்ப தயாரிப்பார்கள். ஆனால் ரஷ்யர்கள் அதன் மைக்ரோ ஸ்ட்ரக்ட்சர் வரை யோசிப்பார்கள். மூலக்கூறுகள் எப்படி விரவி இருக்க வேண்டும், அதற்கு எப்படி வெப்ப்படுத்தி குளிர்விக்க வேண்டும் என அடிவரை போவார்கள். நாம் அவர்களுடைய டிசைனை வாங்கி அப்படியே தயாரித்தாலும் அவர்களின் தரத்தை நெருங்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம். அவர்களின் குளிர் காலம் உலகறிந்தது. அந்த சூழலிலும் ஒரு மைக்ரான் அளவு கூட உலோகம் சுருங்கிவிடக் கூடாது எனத் திட்டமிடுவார்கள். அந்த அளவு நுணுக்கமாக போவதால் நம் எல்லையில் நிலவும் குளிரை எளிதாக சமாளிக்கும் அவர்கள் இயந்திரங்கள்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">நான் கூட கல்லூரியில் படிக்கும்போது நினைப்பதுண்டு. அமெரிக்க, ஜப்பானிய, ஜெர்மானிய பொருட்கள் நம்மிடையே அதிகம் புழங்குகின்றன. ஆனால் ரஷ்யத்தயாரிப்புகள் என்று எதுவும் நாம் உபயோகப்படுத்தியதில்லையே என. எங்கள் தெருவில் எஸ் யூ சி ஐ என்ற கம்யூனிச உறுப்பு அமைப்பின் அலுவலகம் இருந்தது. 80களில் அங்கு ரஷ்யப் புத்தகங்கள் வரும். டபுள் டெம்மி சைஸில் இருக்கும் அந்தப் புத்தகத்தின் தாள்களைத்தான் கட்டுரை நோட்டு தவிர மற்ற அனைத்திற்கும் அட்டை போட பயன்படுத்துவேன். நான் அறிந்து உபயோகப்படுத்திய ரஷ்யத் தயாரிப்பு என்றால் அது ஒன்றுதான். அந்த புத்தகங்களை சொந்தக்கார பையன்கள் அடுத்த ஆண்டு வாங்கி உபயோகித்தாலும் அட்டை கிழியாமல், மங்காமல் இருக்கும். அவையெல்லாம் வர்ஜின் பேப்பர்கள். நேரடியாக மரக்கூழில் செய்யப்படுவது. இப்போது நாம் உபயோகிக்கும் காகிதங்கள் பெரும்பாலும் இந்த வர்ஜின் காகிதம், வைக்கோல் போன்றவற்றை அரைத்து தயாரிப்பது. அந்த பேப்பர் தவிர ரஷ்யத் தயாரிப்பு எதுவும் உபயோகப்படுத்தியதில்லை. மது அருந்தும் பழக்கமிருந்தால் வோட்கா உபயோகித்திருக்கலாம். பின்னர் நான் கோவையில் ஒரு பம்ப் நிறுவனத்தில் பணியாற்றிய போதுதான் ரஷ்யத் தயாரிப்புகள் நம்மிடையே அதிகம் புழங்காததன் காரணம் அறிய முடிந்தது. அந்நிறுவனத்தின் டிசைன் பிரிவில் இருந்த போது, ஒரு பம்ப் டிசைனில் பிரச்சினை வந்தது. வழக்கமான போல்ட் போட்டால் பம்பின் மேல் மூடி டிசைனை மாற்றியாக வேண்டிய கட்டாயம். ஏற்கனவே அதற்கான டை எல்லாமே தயாராக இருந்தது. அந்த டிசைன் தான் நல்ல லுக்காக இருக்கிறது என எல்லோரும் ஏற்றுக்கொண்ட டிசைனும் ஆகும். உடனே நான் ஒரு யோசனை சொன்னேன். நார்மல் போல்ட்டுக்கு பதிலாக அலன் போல்ட் போடலாம் என்று (அதனுடைய தலை அளவு வழக்கமான போல்டை விட குறைவாக இருக்கும்). உடனே என மேனேஜர், நீ பிராக்டிகலா யோசிக்க மாட்டேன் என்கிறாய் என்றார். நம்ம பம்ப் கிராமப்பகுதிகளில் அதிகம் விற்கும். அங்க ஒரு ரிப்பேர்னா அவங்களே பார்ப்பாங்க, இல்லேன்னா ஒரு மெக்கானிக்க கூப்பிடுவாங்க, அவங்ககிட்ட இந்த அலன் கீ எல்லாம் இருக்காது (அலன் போல்டை திருக உதவுவது) நம்மளத் திட்டுவான். அடுத்த ஆள் யோசனை கேட்டா அத வாங்காதேம்பான். நம்ம பம்ப் சின்னப்பிள்ள கூட கழட்டி மாட்டுற மாதிரி இருக்கணும் என்றார். </span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">எழுபதுகளில் அளவைகள் எல்லாம் உலகம் முழுவதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக எஸ் ஐ யூனிட் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது ஸ்மார்ட் போன் சார்ஜர்கள் எல்லாம் ஒரே மாதிரியாக மாற்றப்பட்டதை இதற்கு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட அடி, பவுண்ட், இஞ்ச் முறை இன்னுமே உலகம் முழுவதும் சில இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் (காற்றழுத்தம் – பி எஸ் ஐ – பவுண்ட்ஸ் பெர் ஸ்கொட்யர் இஞ்ச்) பெரும்பாலும் அவர்களும் எஸ் ஐ யூனிட்டிற்கு மாறிவிட்டார்கள். ஆனால் இரும்புத்திரை நாடான அப்போதைய ரஷ்யா தன் தயாரிப்புகளை உலகம் முழுவதிற்கும் பொதுவான அளவீடுகளில் தயார் செய்யவில்லை. பொது மக்களிடம் நேரடியாகப் புழங்கும் ஒன்றிற்கு மாற்று உபகரணங்கள் அரிதாக இருந்தால் அது எடுபடாது. இன்னொன்று அவர்கள் பெரிதாக எந்த சந்தையையும் குறி வைக்கவில்லை. அவர்கள் கம்யூனிச சிந்தனையும் அதற்கு ஒரு காரணம். அவர்கள் குறி வைத்தது பாதுகாப்பும் சம்பந்தப்பட்ட இயந்திரங்களே. அதற்கான வருமானமும் அதிகம். </span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">மெக்கானிக்கல், சிவில் பொறியாளர்களுக்கு அடிப்படையான சப்ஜெக்ட் என்பது ஸ்ட்ரெந்த் ஆப் மெட்டீரியல்ஸ். ஸ்டீபன் டிமோஷன்கோவ் என்ற ரஷ்யர் எழுதிய ஸ்ட்ரெந்த் ஆப் மெட்டீரியல்ஸ் புத்தகம் மிகப் பிரபலமானது. நாங்கள் கிண்டலாகச் சொல்வோம். தஸ்தவேஸ்கியும் டிமோஷன் கோவும் படிச்சாப் போதும். ஒன்னு வாழ்க்கைக்கு இன்னொன்னு பிழைப்புக்கு என்று. அந்த அளவிற்கு பொறியியல் பின்புலமிருந்தும் மெட்டலர்ஜியில் பிஸ்தாக்களாய் இருந்தும் ஒரு ரஷ்யன் காரோ, பைக்கோ நம்மிடையே புழங்காததற்கு காரணம் அவர்கள் தங்கள் எல்லையை பாதுகாப்பு உபகரணங்கள் என்று சுருக்கிக்கொண்டதும் பொது உடைமைச் சிந்தனையும் காரணம் எனலாம். </span><br />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">ஆனால் அதே பொது உடைமை சிந்தனை கொண்ட சீனர்கள் பொருளாதாரமே பலம் என்று களத்தில் இறங்கிவிட்டார்கள். </span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டும் கூடங்குளத்தில் அவர்களது தொழில்நுட்பத்தில் நம்பி இறங்குகிறோம் என்றால் ரஷ்ய டெக்னாலஜியில் நாம் நம்பிக்கை வைத்திருப்பது தான். ஆனால் என்ன எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் அங்கிருந்து தான் வரவேண்டும்.</span><br />
<br style="background-color: rgba(255, 255, 255, 0.99); box-sizing: border-box; color: #333333; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" />
<span style="background-color: rgba(255 , 255 , 255 , 0.99); color: #333333; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">இன்னொரு ரஷ்யப் பொருளை உபயோகிக்க எவ்வளவு காலம் ஆகுமோ?</span></div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-42707778497685130992017-05-31T06:48:00.003+05:302019-06-26T10:31:15.190+05:30சி ஏ படிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழ்நாட்டில் 1940 முதல் 1960 வரை வழக்கறிஞர்களுக்கு பெருமதிப்பு
இருந்தது. சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் அவர்கள் இருந்தார்கள். 60ல்
இருந்து 80கள் வரை மருத்துவர்களுக்கு சமூகத்தில் பெரிய வரவேற்பு இருந்தது.
இப்போதும் அவர்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அப்போதுபோல் இருக்கிறது எனச்
சொல்லமுடியாது. இப்போது, எம்.எஸ்.ஸா, எம்.சி.ஹெச்சா என்றெல்லாம் துணைக்
கேள்வி கேட்கிறார்கள். அதன்பின்னர் பொறியியல், அதிலும் குறிப்பாக
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு காலம் வந்தது. இப்படி ஒவ்வொரு
துறைக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. அதேசமயம், சராசரி வரவேற்புடனும்
இருந்திருக்கிறது. ஆனால், இன்றுவரை ஒரு துறை மட்டும் வருடத்துக்கு வருடம்
பெரிய அந்தஸ்த்தோடு வளர்ந்து வருகிறதென்றால் அது C.A. முடித்த ஆடிட்டர்கள்
இயங்கும் தணிக்கைத் துறைதான். அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் ஆடிட்டர்களின்
தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.<br />
<br />
வேலையில்லாத வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் உண்டு. ஏன், போணியாகாத
மருத்துவர்கள்கூட உண்டு. ஆனால், வேலையில்லாத ஆடிட்டரைப் பார்ப்பது அரிது.
100 சதவிகிதத்துக்கும் மேல் வேலை வாய்ப்புள்ள துறை. பை நிறையச் சம்பளம்.
இருந்தும் போதுமான அளவு ஆடிட்டர்கள் தமிழகத்தில் இல்லை.<br />
<br />
இதற்குப் பல காரணங்கள் உண்டு.<br />
<br />
முதலாவது கடினமான தேர்வு முறை.<br />
<br />
இரண்டாவது இத்துறைபற்றி பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமை.<br />
<br />
விழிப்புணர்வு இருக்கும் பெற்றோர்களிடமும், மாணவனிடமும் இந்தப் படிப்பை
முடிக்க முடியுமா எனும் சந்தேகம், முடிக்காமல் விட்டுவிட்டால் வாழ்க்கை
வீணாகிவிடுமே! என்ற பயம்.<br />
<br />
அடுத்ததாக, சி.ஏ. முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஏற்படும் பொருளாதார நிர்ப்பந்தம்.<br />
<br />
முதலில் சி.ஏ. தேர்வுபற்றி பார்ப்போம்.<br />
<br />
சி.ஏ. சேர்வதற்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா
(ICAI) எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில்
பவுண்டேசன் கோர்ஸ், அடுத்ததாக சி.ஏ. இண்டர் எனப்படும் தேர்வுகள், அது
முடிந்ததும் மூன்று ஆண்டுகள் ஆடிட்டர் ஒருவரிடம் கட்டாயப் பயிற்சி எடுக்க
வேண்டும். அதன்பின்னர், சி.ஏ. பைனல் எனப்படும் தேர்வுகள். இதைக்
கடந்தபின்னர் ஆடிட்டர் என்று அழைக்கப்படுவார்கள்.<br />
<br />
இந்த பவுண்டேசன் கோர்ஸ் என்பது பிளஸ்-டூ முடித்தவர்கள் எழுதலாம். இளங்கலைப்
பட்டம் வாங்கியவர்களுக்கு இது தேவையில்லை. பி.காம்.தான் என்றில்லை. எந்த
டிகிரியாக இருந்தாலும் சி.ஏ. படிக்க பதிவு செய்துகொள்ளலாம். பி.காம்.
படித்தவர்களுக்கு இந்தத் தேர்வுகள் ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். சி.ஏ.
இண்டரில் முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 3 பேப்பர்களும்
இருக்கும். இதில், எந்த ஒரு பேப்பரில் பாஸ் செய்யாவிட்டாலும் மீண்டும் அந்த
குரூப்பில் எல்லா பேப்பர்களையும் திரும்ப எழுதவேண்டும். ஒரு குரூப்பில்
எல்லாவற்றிலும் பாஸ் செய்தாலும் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட சதவிகித
மார்க்கையும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திரும்பவும் எல்லா
பேப்பர்களையும் எழுத வேண்டும். சி.ஏ. பைனலிலும் அப்படித்தான். அதில், முதல்
பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 4 பேப்பர்களும் இருக்கும்.
இந்த பைனல் தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும். தேர்வு அட்டவணையும்கூட
இடையில் விடுமுறையின்றி தொடர்ந்து இருக்கும்.<br />
<br />
பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகளில் ரெகுலர் வகுப்புகள்
இருக்கும். எனவே, தினமும் படிக்கும் வாய்ப்பு, காதில் பாடத்தைக் கேட்கும்
வாய்ப்பு உண்டு. ஆனால், சி.ஏ.வில் நாம் போட்டித் தேர்வுகளுக்கு
தயார்செய்வதுபோல தன்னிச்சையாகப் படிக்க வேண்டும். மேலும்,
பாடத்திட்டங்களும் ஒவ்வொரு ஆண்டு பார்லிமெண்ட் பட்ஜெட் தாக்கல் ஆனவுடன்
அதற்கேற்ப மாறும். மேலும், இடையிலும்கூட பார்லிமெண்ட்டில் நிறைவேறும்
சட்டங்களைப் பொறுத்து மாறும். பயிற்சி செய்யும் ஆடிட்டர்கள்தான் அத்தனை
புத்தகங்களையும் வாங்கி அடுக்க முடியும்.<br />
<br />
இரண்டாவதாக, பெற்றோர்களின் போதிய விழிப்பின்மை. மற்ற தொழில்நுட்பப்
படிப்புகள் குறித்து அடிக்கடி செய்தித்தாள்களில், பத்திரிகைகளில் செய்திகள்
வரும். இன்று விண்ணப்பம் வழங்கப்படுகிறது, இன்று தேர்வு என்று. ஆனால்
இந்தப் படிப்புபற்றி எந்தப் பத்திரிகையிலும் செய்தி வராது. இதைப்போலவே,
மத்திய அரசு நடத்தும் AIIMS போன்ற தேர்வு சென்டர்கள் கேந்திரிய வித்யாலயா
போன்ற பள்ளிகளில்தான் இருக்கும். எனவே, மற்ற பள்ளி மாணவர்களுக்கு
இதைப்பற்றிய விழிப்புணர்வே இருக்காது.<br />
<br />
மேலும், இந்தப் படிப்பைப்பற்றி பெற்றோர்கள் யாரிடம் விசாரித்தாலும் மிக
எதிர்மறையாகவே பதில்வரும். ‘இத முடிக்கிறது கஷ்டம்ங்க’ என்பார்கள். எனவே,
பெற்றோர்கள் மிகவும் தயங்குவார்கள். மேலும், சி.ஏ. படிப்புக்கு பதிவு
செய்தவர்களில் வெற்றி சதவிகிதம் 0.1க்கும் குறைவு என்பதும் பெற்றோர்களை
யோசிக்கவைக்கும். அத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு, வெறும்
கையோடு வந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு.<br />
<br />
அடுத்ததாக, டிகிரி முடித்தவர்கள் இந்தப் படிப்பை முடிக்க குறைந்தது 5
ஆண்டுகள் ஆகும். ஆடிட்டரிடம் பயிற்சிபெறும் (ஆர்டிகிள்ஷிப்) காலத்தில்
இப்போதும்கூட 3000 ரூபாய் சம்பளம்தான் வழங்கப்படுகிறது. பொறியியல்
படித்தவன் 21 வயதில் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான். ஆடிட்டருக்கு 30
வயதில்தான் வருமானம். எனவே, மகனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பவர்கள்
இதற்குத் தயங்குவார்கள். மேலும், குடும்பம் அவனை சப்போர்ட் செய்யாவிட்டல்
தன் பொருளாதார நிலை குறித்து விரக்தியடைந்து படிப்பில் கவனம் செலுத்த
முடியாது. இதனால், இதிலிருந்து விலகிக்கொண்டவர்களும் அதிகம்.<br />
<br />
ஆனால், என் மகன்/மகள் இதை முடிக்கட்டும் என மன தைரியத்துடன் பி.காம்.
படிக்கவைத்து, ஆறு, ஏழு ஆண்டுகள் பொருளாதாரரீதியாக சப்போர்ட் செய்தால்
தலைமுறைக்கும் எந்தக் கவலையும் இல்லாத ஒரு முன்னத்தி ஏர் கிடைக்கும்.
ஏனென்றால், ஒரு ஆடிட்டர் என்பவர் சமூகத்தின் உயர்மட்டத்தில்
இருப்பவர்களுடனேயே எப்போதும் பழகுபவர். அவரின் சிபாரிசு எந்தக் கல்வி
நிலையத்திலும், கம்பெனியிலும் எடுபடும். அந்த பழக்கவழக்கங்களின் மூலமாகவே
அடுத்தடுத்த தலைமுறையை வளர்த்துவிடலாம்.<br />
<br />
சி.ஏ. இண்டரில் தமிழகத்தில் நிறையப்பேர் தேர்வு பெற்றுவிடுகிறார்கள்.
பைனலில்தான் தேர்வாக முடியாமல் தவிக்கிறார்கள். மேலும், ஆர்டிகிள்ஷிப்
காலத்தின்போது ஆடிட்டரிடம் இயைந்துபோக முடியாமையும் ஒரு காரணமாக இருக்கும்.
ஆடிட்டரிடம் இருப்பது பண்டைய கால குருகுலவாசம் போலத்தான். இவர்களுக்கு
இன்னொரு வாய்ப்பாக அமைவது ஐசிடபிள்யூ ஏ (ICWA) எனப்படும் காஸ்ட்
அக்கவுண்டிங் கோர்ஸ்.<br />
<br />
இதிலும் பவுண்டேசன், இண்டர், பைனல் என சி.ஏ. போலவே படிநிலைகள். ஆனால்,
ஆடிட்டரிடம் மூன்றாண்டுகள் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. தேர்வுகளும்
சி.ஏ.வோடு ஒப்பிடுகையில் சற்று எளிதாக இருக்கும்.<br />
<br />
சி.ஏ.வுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், சி.ஏ. முடித்தவர்கள் ஒரு
நிறுவனத்தின் தலை முதல் அடி வரை உள்ள செயல்பாடுகளை தணிக்கை செய்பவர்கள்,
அந்த நிறுவன வளர்ச்சிக்கு எப்படிச் செயல்பட வேண்டுமென யோசனை கூறுபவர்கள்,
வரி விதிப்பு முறைகளை ஆராய்ந்து நிறுவன வளர்ச்சிக்கு/லாபத்துக்கு ஏற்ப
யோசனை சொல்பவர்கள். ஆனால், ஐசிடபிள்யூஏ முடித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட
பிராஜக்ட்டுக்கு எவ்வளவு செலவாகிறது? அதற்கேற்ற லாபம் இருக்கிறதா? இல்லை
நஷ்டமா? என கணக்குப் பார்ப்பவர்கள். ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை
எல்லாம் ஒன்று சேர்ப்பவர்கள். ஆனால், இவர்கள் கணக்கை தணிக்கை செய்ய
மாட்டார்கள். இவர்களுக்கும் பெரிய அளவில் டிமாண்ட் இருக்கிறது. சம்பளமும்
ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே ஆறிலக்கத்தை எட்டிவிடும்.<br />
<br />
சி.ஏ.இண்டர் பாஸ் செய்து, பைனலில் தவறியவர்கள் சற்று முயற்சித்தால்
ஐசிடபிள்யூஏ பாஸ் செய்துவிடலாம். ஓரளவுக்கு ஒரேமாதிரியான பாடத்திட்டம்தான்
இருக்கும். எலுமிச்சையை குறிவைத்துத் தோற்றவர்கள் தர்ப்பூசணியை எளிதில்
குறி தவறாமல் அடிக்க முடியுமல்லவா?<br />
<br />
அப்படியும் பாஸ் செய்ய முடியவில்லையென்றால், சி.ஏ. இண்டர் பாஸ்
செய்தவர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா
(ICAI) “அக்கவுண்ட் டெக்னீசியன்” என்னும் சான்றிதழை வழங்கும். இந்தச்
சான்றிதழ் பெற்றவர்கள் எந்த நிறுவனத்திலும் அக்கவுண்டண்டாகப் பணியாற்றலாம்.
சி.ஏ.வை கடுமையாகப் படித்து தோல்வியடைந்தவர்கள் வங்கித் தேர்வுகளில்
எளிதாக தேர்ச்சி பெறலாம்.<br />
<br />
பெற்றோர்கள் இருவரும் நல்லவேலையில் இருக்கிறார்கள். பொருளாதாரப் பிரச்னை
இல்லை என்றால் தைரியமாக பிள்ளைகளை சி.ஏ.வுக்கு திருப்பிவிடலாம். எந்தச்
சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காது அவர்களை ஆற்றுப்படுத்திக்கொண்டே
இருந்தால் ‘வேலை இழப்பு’ என்ற வார்த்தையே கேள்விப்பட்டிராத பெருமைமிகு
தணிக்கையாளர் சமூகத்தில் உங்கள் பிள்ளையும் ஒரு அங்கமாகலாம்.</div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-58170928405166613802017-05-25T19:45:00.002+05:302017-05-25T19:45:54.543+05:30அளவு ஜாக்கெட்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எங்கள் ஊர் ஸ்டைல்கிங் டெய்லரைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அனேகமாக எல்லா
ஊரிலும் இந்தக்கதை ஏதாவது ஒரு பெயரில் புழக்கத்தில் இருக்கும்.
வேறொன்றுமில்லை. ஸ்டைல்கிங் டெய்லரிடம் சட்டை தைக்க அளவுகொடுத்துவிட்டு
வெளியே வந்த ஒருவர் நீண்ட நாள் சொத்து தகராறில் இருந்த பங்காளியை கடை
வாசலில் சந்தித்தார். வாய்த்தகராறு முற்றி, கோபத்தில் கடைக்குள் புகுந்து
அங்கு இருந்த கத்திரிக்கோலை எடுத்து பங்காளியின் வயிற்றில் குத்திவிட்டார்.
பதினாலு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்து வெளியேவந்தவர் சட்டை தைக்க
கொடுத்தது ஞாபகம் வந்து அதை கேட்கப் போனார். உடனே கடைக்காரர் அஞ்சு நிமிசம்
பொறுங்கண்ணே இந்தா காஜா வச்சா முடிஞ்சுச்சு என்றாராம்.<br />
<br />
அப்போது இருந்த பெரும்பாலான டெய்லர்கள், கஸ்டமர் நான்கைந்து முறை வந்து
கேட்டால் தான் துணியை டெலிவரி கொடுக்க வேண்டும் என்ற பாலிஸியை
வைத்திருந்தார்கள். தீபாவளியும், பள்ளிச்சீருடை தைக்கும் காலமும் தான்
சிற்றூர்களில் பீக் பீரியட்கள், இந்த காலங்களில் இவர்களைப் பிடிக்கவே
முடியாது. ஸ்கூல் திறக்கப் போகுது, யூனிபார்ம் தைக்கக் குடுத்து நாலு
வாரமாச்சு என்னான்னு கேட்டு வாடா என்று வீட்டில் சொன்ன உடன் அப்படியே
கிளம்பி அங்கே போய் ஒரு அட்டெண்டன்ஸை போட்டுவிட்டு, அங்கு ஒரு பாட்டையும்
கேட்டுவிட்டு வரும்வழியில் அஞ்சு பைசாவுக்கு ஒரு கல்கோணாவை வாங்கி வாயில்
அதக்கிக் கொண்டே வருவதை பெரும்பாலான பையன்கள் செய்திருப்பார்கள்.<br />
<br />
தீபாவளி நேரங்களில் தான் இன்னும் விசேஷம். முதல் நாள் இரவு வரை துணியைக்
கொடுத்திருக்க மாட்டார்கள். காலை நாலு மணிக்கு நல்லெண்ணெய் தேய்த்த
உடம்போடு அரை ட்ராயரை மட்டும் போட்டுக்கொண்டு, குளிச்ச உடனே புதுசு
போடணுமாம், சீக்கிரம் குடுங்க என்று கடைக்கு நாலுபேர் மல்லுக்கட்டிக்
கொண்டு நிற்பார்கள். இதாவது பரவாயில்லை, சில டெய்லர்கள் கல்யாணத்திற்கு
தைக்க கொடுத்த துணியைக்கூட தாமதப்படுத்தி விடுவார்கள். ஊரிலேயே மண்டபம்
இருந்தால் கூட பரவாயில்லை. ஒரு நச்சுப்பிடித்த ஆளை கடைக்கு அனுப்பி இரவில்
கூட வாங்கிவிடலாம். வெளியூர் கோவில், மண்டபம் எனில் முதல்நாள் மதியமே
கிளம்ப வேண்டி வரும். அப்போது மாப்பிள்ளை தனக்கு நம்பிக்கையான ஒரு ஆளிடம்
அந்தப் பொறுப்பைக் கொடுத்து விட்டுப் போக வேண்டியிருக்கும். எப்படியாச்சும்
முகூர்த்தத்துக்கு வாங்கிட்டு வந்து சேந்துற்ரா மாப்பிள்ள என்று
கெஞ்சிவிட்டுப் போவார்கள். <br />
<br />
ரெடிமேட் சட்டை,பேண்ட்கள் அவ்வளவாக மார்க்கெட்டைப் பிடிக்காத 80களில் இந்த
டெய்லர்கள் இப்படி ஒரு தனி ராஜாங்கமே நடத்தி வந்தார்கள். கடை வீதியில்
டெய்லர் கடைகள் தான் முக்கிய லேண்ட்மார்க்காக இருக்கும். டீன் ஏஜ் மற்றும்
கல்லூரி பையன்கள் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் இடங்களில் ஒன்றாகவும்
டெய்லர் கடைகள் இருந்தது. கேசட் பதிவு செய்து தரும் மியூசிக்கல்ஸ், வாடகை
சைக்கிள் கடை, சலூன், விளம்பர தட்டி போர்டுகள் எழுதும் கலைக்கூடங்கள்,
லெண்டிங் லைப்ரரி போன்ற இடங்களில் தங்கள் டேஸ்ட்க்கு ஏற்பவும்,
கடைக்காரருடனான கெமிஸ்டிரி மற்றும் நண்பர்கள் அமைப்பிற்கு ஏற்பவும்
சேர்ந்து அரட்டை அடிப்பார்கள். கடைக்காரர்களும், புது கஸ்டமர்கள் கிடைக்க
இவர்கள் பிராண்ட் அம்பாசிடர்களாக இருப்பதால் வரவேற்கவே செய்வார்கள்.
கூட்டமாக இருக்கும் நேரங்களில், சாப்பிடப் போகும் நேரங்களில் கூடமாட
ஒத்தாசை, பாதுகாப்பு என இந்த அரட்டை செட்டால் கடைக்காரர்களுக்கும்
லாபமுண்டு.<br />
<br />
நான் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்தே எனக்கு இந்த மாதிரி ஏதாவது ஒரு
அரட்டை குரூப்பில் சங்கமமாகி டாப் அடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை. பத்தாம்
வகுப்பு படிக்கும் நேரத்தில் லெண்டிங் லைப்ரரி மனதுக்குப் பிடித்த இடமாக
இருந்தது. பெரும்பாலான நாட்கள் அங்குதான் உட்கார்ந்திருப்பேன். என் முதல்
சாய்ஸ் கேசட் கடை தான். அங்கு எனக்குப் பிடிக்காத குரூப்கள் ஆக்ரமித்து
இருந்தன. டெய்லர் கடை எனக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லாத இடம். இந்த
நேரத்தில் தான் மதுரையில் தொழில் கற்ற ஒருவர் “ஜெண்டில்மேன் டெய்லர்ஸ்”
என்ற பெயரில் கடை துவங்கினார். அட்டகாசமாக தைத்த அவர் ஓரிரு மாதங்களிலேயே
பிரபலமாகி நம்பர் ஒன்அந்தஸ்தை அடைந்தார். அக்ரஹாரத்தில் பெரும் தொப்பையுடன்
மத்திய முப்பதுகளில் மூல நட்சத்திரத்தால் பேச்சிலராக இருந்த ஒரு பேங்க்
மேனேஜருக்கு இவர் தைத்துக் கொடுத்த பெல்ட் போடாமலேயே நிற்கும் பிட்டான
பேண்டும், தொப்பை அசிங்கமாகத் தெரியாத சட்டை பிட்டிங்கும் பிடித்துப்
போய்விட்டது. டெய்லரின் ராசியோ என்னவோ உடனடியாக அவருக்கு திருமணமும்
நிச்சயமானது. உடனே அவர் செய்ததுதான் டாக் ஆப் தி டவுன் சரி சரி ஊரின்
பேச்சானது. அதுவரை எங்கள் ஊரில் கல்யாண மாப்பிள்ளைக்கு டி டி ஆர் கோட் என
அழைக்கப்படும் கோட்டையே கல்யாணத்திற்கு அணிவார்கள், கறுப்பு
சுபகாரியத்திற்கு ஆகாது என்று எல்லோருமே நீல நிற கோட்தான். இவர் திரி பீஸ்
கோட்,சூட் வாங்க முடிவெடுத்தார். பெரும்பாலும் ரெடிமேட் கோட் தான்
வாங்குவார்கள். இவர் துணி எடுத்து தைக்கச் சொல்லி ஜெண்டில்மேன் டெய்லரிடம்
ஆர்டர் கொடுத்து விட்டார். எங்கள் ஊரில் முதன் முதலில் டெய்லர் கடையில்
தைக்கப்படும் கோட் சூட் என அதற்கு ஒரு அந்தஸ்தும் கிடைத்தது.<br />
<br />
சென்னை சென்று துணி எடுத்து வந்தார்கள். டெய்லரிங் சார்ஜ் 1000 ரூபாய் என
நிர்ணயிக்கப்பட்டது. மற்ற வேலைகளை எல்லாம் ஒரு வாரம் நிறுத்தி இதிலேயே
கவனம் செலுத்தினார்கள், பல கேட்லாக்குகளை வேறு மதுரையில் இருந்து வாங்கி
வந்தார்கள். அங்கு டாப் அடிக்கும் பையன்களும் அப்படி என்னதாண்டா ஆயிரம்
ரூபாய் கூலி அளவுக்கு தைக்கப் போறாங்க என ஆவலுடன் அங்கேயே
குழுமிவிட்டார்கள். சினிமா பாக்ஸ் டிக்கெட் மூன்று ரூபாய்க்கு விற்ற காலம்
அல்லவா? பொதுவாக இம்மாதிரி கடைகளில் டீ வாங்கும் போது அங்கு
இருப்போர்க்கும் சேர்த்துதான் வாங்குவார்கள். ஆயிரம் ரூபாய்ல பாதிகாசு
டீக்கே போயிரும் போல இருக்கு என கிண்டலாக சொல்வார்கள். இம்மாதிரி
கொண்டாட்டமான மனநிலை இருக்கும் இடங்களில் இருக்கவேண்டும் என்பது என் ஆசை.
ஆனால் அங்கு நம்மை வித்தியாசம் காட்டாது ஏற்றுக்கொள்ளும் ஆட்களும் தேவை
என்பதால் பெரும்பாலும் ஒதுங்கியே இருப்பேன். என் நண்பன் ஒருவன் அந்த
ஜெண்டில்மேன் டெய்லர் டாப் குரூப்பில் இருந்தான். அவன் அப்பப்ப இங்கிட்டு
வந்துட்டுப் போடா என்பான்.<br />
<br />
ஆண்களுக்கான டெய்லர்கள் இப்படி என்றால் பெண்களுக்கான டெய்லர்கள் ஒரு ரகம்.
அப்போது பெண்களுக்கான டெய்லர் என்றாலே இரண்டே வேலைகள் தான். ஜாக்கெட்
தைப்பது, சேலைகளுக்கு ஓவர்லாக் அடிப்பது மட்டும். ஜாக்கெட்டும் இந்தக்காலம்
போல் ஜன்னல், நிலை, வாசல்படி இத்யாதிகள், அலங்கார தோரணம் போல் கயிறுகள்,
ஊசி பாசி மணிகள் இல்லாமல் சாதாரணமாகத்தான் இருக்கும். அந்த டெய்லர்களும்
கொஞ்சம் மந்தமான ஆட்களாகத்தான் இருப்பார்கள். அம்மாதிரி இருக்கும்
ஆட்களிடம் தான் ஊர்ப் பெண்களும் ஜாக்கெட் தைக்க குடுப்பார்கள், தியேட்டரில்
கூட பெண்கள் பக்கம் முறுக்கு, கடலை மிட்டாய் விற்க கொஞ்சம் விவரமில்லாத,
மந்தமான பையன்களைத்தான் தியேட்டர்காரர்கள் அனுமதிப்பார்கள், ஒரு ரூபா,
ரெண்டு ரூபா கணக்கில விட்டாலும் பரவாயில்லை. நம்ம சொந்தம், ஊர்கார
பொண்ணுங்க வந்து போற இடம். அவங்க நிம்மதியா பார்த்துட்டுப் போகணும்யா
என்பார்கள்.<br />
<br />
இந்த லெண்டிங் லைப்ரரியில் பொழுதுபோகாத நேரத்தில் உட்கார்ந்திருப்பேன்
என்று சொன்னேன் அல்லவா? அதனால் எங்கள் தெருப்பெண்களுக்கு மாலைமதி,
ராணிமுத்து வாங்கித்தரும் ஏஜண்டாகவும் இருந்தேன். இரண்டு தெரு தள்ளி என்
ஒன்று விட்ட அத்தையின் வீடு இருந்தது. அவரின் கணவர் தாசில்தார். மூன்று
பெண்கள். இரண்டிரண்டு வயது இடைவெளியில். லலிதா, பத்மினி, ராகினி என பெயர்
சூட்டியிருந்தார். அந்த திருவாங்கூர் சிஸ்டர்ஸ் போல இந்த தெற்குத்தெரு
சிஸ்டர்ஸும் ஊரில் பிரபலம். அவர்களும் என்னிடம்தான் புத்தகம் வாங்கித்தரச்
சொல்லி கேட்பார்கள். விசேஷ காலங்களில் ஈசன் டெய்லர்கிட்ட ஜாக்கெட்
கொடுத்திருக்கோம் வாங்கி வா என்பார்கள். நாலைந்து முறை அலைய வேண்டி
இருக்கும். ஜெண்டில்மேன் டெய்லர் கடையில் உட்கார்ந்திருந்தா அரட்டை
அடிச்சிக்கிட்டு பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கலாமே இங்க நிக்கிறோமே என
துக்கமாக இருக்கும். பொதுவாக இம்மாதிரி கடைகளில் ஆட்களை
அண்டவிடமாட்டார்கள். உட்கார சேர் கூட இருக்காது. நான் புலம்பியதைக் கேட்ட
என் நண்பன் ஒரு யோசனை சொன்னான். டேய் நீ அடுத்த தரம் அவங்க வீட்டுக்குப்
போகும் போது அளவு ஜாக்கெட் குடுத்து தைக்கிறீங்களே? மொதோ ஜாக்கெட் எப்படி
தச்சீங்கன்னு கேளு. அடுத்து உன்னைய கிட்டவே சேர்க்க மாட்டாங்க, அப்புறம்
இந்த லைப்ரரி,லேடீஸ் டெய்லர்லாம் விட்டுட்டு எங்க கூட டாப்புக்கு
வந்திடலாம் என்றான். நானும் அதை நம்பி நடுப்பெண்ணான பத்மினியிடம் அவ்வாறு
கேட்க ம்ம். எங்க அக்கா ஜாக்கெட் போட்டுப் பார்த்து அளவு சொல்லி விட்டோம்
என்று இயல்பாக சொல்லிவிட்டு பேச்சை மாற்றிவிட்டார்கள்.<br />
<br />
மாமா டெபுடி கலெக்டராகி வேறு ஊருக்கு மாற்றலாகி அவர்கள் சென்றுவிட்டார்கள்.
மூவருக்கும் திருமணம் முடிந்து சென்னை, பெங்களூர் என செட்டில்
ஆகிவிட்டார்கள். பல ஆண்டுகள் கழித்து ஒரு திருமண வீட்டில் பத்மினியை
சந்தித்தேன். மகள் கல்லூரியில் படிப்பதாகவும் உன் பையன் என்ன செய்கிறான்
என்று கேட்டாள். எட்டாம் வகுப்பு என்று சொல்லிவிட்டு நீண்ட நாட்களாக மனதில்
தங்கியிருந்த கேள்வியைக் கேட்டேன். ஆமா, அன்னைக்கு நான் வேணுமின்னேதான்
அப்படி கேட்டேன். ஏன் கோபப்படலை என்று?. ஏண்டா ஒரு பொண்ணுக்குத் தெரியாதா
ஆணோட பார்வை? அதுவுமில்லாம நீ வில்லங்கமாவா கேட்ட ஏதோ வாய்ப்பாடு
ஒப்பிக்கிற மாதிரி அதைக் கேட்ட. எத்தன நாள் அதை வச்சி உன்னைய கிண்டல்
அடிச்சி சிரிச்சிருக்கோம் தெரியுமா எனச் சொல்லிவிட்டு கன்னத்தில் லேசாகத்
தட்டிவிட்டி நகன்றாள். </div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-32005525437782973572017-05-19T06:41:00.002+05:302018-08-01T17:51:20.509+05:30ராதா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<!--[if gte mso 9]><xml>
<o:OfficeDocumentSettings>
<o:RelyOnVML/>
<o:AllowPNG/>
</o:OfficeDocumentSettings>
</xml><![endif]--><br />
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-IN</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt;
mso-para-margin-top:0cm;
mso-para-margin-right:0cm;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0cm;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
</style>
<![endif]-->
<br />
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">தெருவில்
சில பெண்கள் இருப்பார்கள்</span><span style="font-family: "latha" , "sans-serif";">.
<span lang="TA">அவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கல்லூரி மாணவர்கள்</span>, <span lang="TA">இளைஞர்களின் கண்களுக்கு மிகச் சாதாரணமாகத் தெரிவார்கள்</span>. <span lang="TA">ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ரெட்டைச்சடையில் பார்க்கும் போது மனதில் எந்த பட்டாம்பூச்சியும்
பறக்காது</span>. <span lang="TA">ஆனாலும் அவர்கள் செட்டில் சில பையன்களுக்கு அவள்தான்
உலக அழகியாய் இருப்பாள்</span>. <span lang="TA">அதுபோலத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்தில்
ராதவைப் பார்த்தபோது பெரிய அழகி என்ற எண்ணம் ஏற்படவில்லை</span>.<span lang="TA">பெரும்பாலான
காட்சிகளில் டல் மேக்கப்புடன் தான் இருந்தார்</span>. <span lang="TA">இந்தப் படம் எங்கள்
ஊருக்கு முத்துராமன் மகன் நடிச்ச படமாம் என்ற அறிமுகத்துடனேயே வந்தது</span>. <span lang="TA">பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தன</span>. <span lang="TA">முக்கியமாக</span>
“<span lang="TA">வாடி என் கப்பக்கிழங்கே</span>” <span lang="TA">பாடல் மாணவர்களின் பேவரைட்டான
ஈவ் டீசிங் பாடலாக மாறியிருந்தது</span>. <span lang="TA">முந்தைய தலைமுறையில் மெல்ல
நட மெல்ல நட</span>, <span lang="TA">தெரு அண்ணன்களுக்கு ஓரம்போ ஒரம்போ மற்றும் சுராங்கனி
என்றால் எங்கள் செட்டிற்கு வாடி என் கப்பக்கிழங்கே</span>. <span lang="TA">தொடர்ந்து
சிக்ஸர்களாக அடித்துக்கொண்டிருக்கும் ஒரு பேட்ஸ்மென்னின் இன்னொரு சிக்ஸரையும் மக்கள்
சாதாரணமாக கடந்து போவதுபோல இளையராஜாவின் சிறப்பான அலைகள் ஓய்வதில்லை பாடல்களையும் அதிகம்
சிலாகிக்காமல் எங்கள் ஊர் கடந்து சென்றது</span>. <span lang="TA">ஆனால் வாடி என் கப்பக்
கிழங்கே மட்டும் பள்ளி மாணவர்களிடம் தங்கிவிட்டது</span>. <span lang="TA">பள்ளி செல்லும்
குமரியின் இயல்பான எழிலுடன் இருந்த ராதாவும்</span>.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">இந்தப்
பாடலை எழுதியவர் கங்கை அமரன்</span><span style="font-family: "latha" , "sans-serif";">.
<span lang="TA">கேரளாவின் ஸ்பெஷல்களில் ஒன்று கப்பக்கிழங்கு</span>. <span lang="TA">ராதா
கேரளாவில் இருந்து வந்ததால் அவரை வரவேற்கும் விதமாக எழுதினேன் என்றார்</span>.<span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">கிழங்காட்டம் இருக்கு என்று ஊர்ப்பக்கம்
சொல்வார்கள்</span>, <span lang="TA">அதன் பொருள் கின்ணென்று உறுதியாக அதிகப்படியாக தொள
தொளவென</span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">சதை இல்லாமல்
இருக்கும் பெண் என்று அர்த்தம்</span>. <span lang="TA">ராதாவும் அந்தப் படத்தில் அப்படித்தான்
இருந்தார்</span>. <span lang="TA">மாநிறம் தான்</span>. <span lang="TA">ஆனால் தமிழர்களுக்கு
மிகவும் பிடித்த மாநிறம்</span>. </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">பத்தாம்
வகுப்பில் சுமாராகத் தெரிந்த பெண்களே பிளஸ் டூ சமயத்தில் சற்று எழில் கூடித் தெரிவார்கள்</span><span style="font-family: "latha" , "sans-serif";">. <span lang="TA">அது தெருவில் திடீரென அதிகரிக்கும்
அடுத்த தெருப் பையன்களின் சைக்கிள் மூலமே அது நமக்கு அறியவரும்</span>. <span lang="TA">யாருக்குடா இங்க வந்து இவிங்க டாப் அடிக்கிறாங்க</span>? <span lang="TA">என்ற
கேள்விக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பெண்ணை சுட்டிக்காட்ட அதுக்காடா</span>? <span lang="TA">என்று குழப்பத்துடன் நடையைக் கட்டுவோம்</span>. <span lang="TA">அப்படி நடிக்க
வந்த ஒராண்டிலேயே எழில்கூடி இளஞ்ஜோடிகள்</span>, <span lang="TA">கோபுரங்கள் சாய்வதில்லை</span>,
<span lang="TA">காதல் ஓவியம் என ஏராளமான இளைஞர்களை கவர்ந்தார்</span>. <span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">அந்தப் பெண்களே கல்லூரியில் படிக்கும்
போது எழிலுடன் சற்று ஒயிலும் கூடும்</span>. <span lang="TA">நடை</span>,<span lang="TA">உடை</span>,<span lang="TA">பாவனைகள் மெருகேறும்</span>. <span lang="TA">அந்த
ஒயில் அவருக்கு தூங்காதே தம்பி தூங்காதே</span>, <span lang="TA">பாயும்புலியில் வாய்த்தது</span>.
<span lang="TA">அந்த ஒயிலில் ஒரு கூட்டம் மயங்கியது</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">தெருவில்
பள்ளி யூனிபார்ம்</span><span style="font-family: "latha" , "sans-serif";">, <span lang="TA">கல்லூரியில் படிக்கும் போது கன்வென்ஷனல் சுடிதாரிலேயே கண்கள் பார்த்து பழகிய
பெண்ணுக்கு திடீரென கல்யாணம் என்பார்கள்</span>, <span lang="TA">வேண்டா வெறுப்பாய் அம்மாவை
அழைத்துக் கொண்டு போகும் டூட்டியால் மண்டபத்திற்குப் போனால் மிதமாய் எடை கூடி</span>,
<span lang="TA">பளபளப்பு வலுவாகவே கூடி அந்தப் பெண் சேலையில் தேவதை போல் மணமேடை ஏறுவாள்</span>.
<span lang="TA">அடடா மிஸ் பன்ணிட்டோமே எனத்தோன்றும்</span>. <span lang="TA">அதே போல்
அழகுடன் ஆனந்த் படத்தில் இருப்பார்</span>. <span lang="TA">சி வி ராஜேந்திரன் இயக்கிய
இந்தப் படத்தில் ராதா சேலையில்</span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">வரும் காட்சிகள் எல்லாம் ஒரு தேர்ந்த ஓவியர் தன்னை மிகவும் கவர்ந்த பெண்ணை
தன் வாழ்நாள் முழுவதும் செலவழித்து வரைந்த ஓவியமாகவே தோன்றும்</span>. <span lang="TA">எங்கள் ஊர் திருவிழாவின் போது தியேட்டர்களில் நடுநிசிக் காட்சியாக அந்த ஆண்டில்
ஓடிய மிகப்பெரும் வெற்றிப்படத்தை மீண்டும் திரையிடும் வழக்கம் இருந்தது</span>. <span lang="TA">ஆனந்த் ஒரு தோல்விப்படம்</span>. <span lang="TA">ஆனாலும் அந்த திரைப்படத்தை
அந்த ஆண்டு ஒரு முக்கிய தியேட்டரில் வெளியிட்டார்கள்</span>. <span lang="TA">காரணம்
அந்த தியேட்டர் ஓனர் ராதா ரசிகர்</span>. <span lang="TA">பிரபு ஹீரோவாக நடித்த அந்தப்படத்திற்கு
வந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டு</span> ”<span lang="TA">சங்கிலி</span>” <span lang="TA">பிரபு ரசிகர் மன்ற நிர்வாகியே மிரண்டு போனார்</span>.<span style="mso-spacerun: yes;"> </span></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">திருமணம்
முடிந்து முதல் வருடம் ஊர் திருவிழாவிற்கு வரும் பெண்கள் இன்னும் மெருகேறி இருப்பார்கள்</span><span style="font-family: "latha" , "sans-serif";">. <span lang="TA">கொஞ்சம் நாணம் குறைந்து
வீதிகளில் வலம் வருவார்கள்</span>. <span lang="TA">மாலை வேளைகளில் சர்வ அலங்காரத்துடன்
தம்பி</span>, <span lang="TA">தங்கைகள் உடன்வர திருவிழா கடைகளை அலசுவார்கள்</span>,
<span lang="TA">அத்தகைய தோற்றத்தில் ராதா இருந்தது எங்க சின்ன ராசா படத்தில்</span>.
</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">எங்க சின்ன
ராசா என்றதுமே பழனி அண்ணன் தான் நினைவுக்கு வருவார்</span><span style="font-family: "latha" , "sans-serif";">. <span lang="TA">அதிதீவிர திமுககாரர்</span>. <span lang="TA">எங்கள் வார்டின் பூத் ஏஜெண்ட்</span>. <span lang="TA">பாக்யராஜ் அதிமுக அனுதாபி
என்பதால் பாக்யராஜின் படங்களைப் பார்ப்பதை தவிர்ப்பார்</span>. <span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">என்னய்யா இவன் மிமின்னு பேசிக்கிட்டு
இருக்கான் என்பார்</span>. <span lang="TA">அப்போது டி ராஜேந்தர் திமுக அனுதாபி என்பதால்
அவரின் படமான உறவைக் காத்த கிளியை கூட நாலைந்து முறை பார்த்தவர்</span>. <span lang="TA">பாக்யராஜ் பட <span style="mso-spacerun: yes;"> </span>போஸ்டரை பார்ப்பது கூட
கட்சிக்கு விரோதமான அணுகுமுறை என்ற கருத்தியல் கொண்டவர்</span>. <span lang="TA">அவரை
அசைத்துப் பார்த்தது ராதா தான்</span>. <span lang="TA">வழக்கம் போல பாக்யராஜின் போஸ்டர்
என்று தலையை திருப்பி புறமுகம் காட்ட முயன்றவரின் கண்ணில் ஒரு மின்னல் போல ராதாவின்
அதிலட்சண முகம் படர பாக்யராஜ் படமாக இருந்தாலும் பரவாயில்லை என பார்க்கத் துணிந்தார்</span>.
<span lang="TA">கொண்டைச் சேவல் கூவும் நேரம் என்ற பாட்டில் மயிலை ஒத்த அசைவுகளுடன் ராதா
ஆட கிறங்கிப் போனார்</span>. <span lang="TA">படத்தை தியேட்டரில் இருந்து தூக்கும் வரை
தினமும் அவர் படத்துக்கு போனதை வைத்து எங்கே அவர் அதிமுகவிற்கு மாறிவிடுவாரோ என்ற பயம்
கட்சிக்காரர்களுக்கே வந்தது</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">தொடர்ந்து
வந்த சில ஆண்டுகள் அந்த தோற்றத்திலேயே தமிழக ரசிகனுக்கு அருள் பாலித்தாள் அந்த அழகு
தேவதை</span><span style="font-family: "latha" , "sans-serif";">. <span lang="TA">உழவன்
மகன்</span>, <span lang="TA">அம்மன் கோயில் கிழக்காலே</span>, <span lang="TA">காதல் பரிசு</span>,
<span lang="TA">ஜல்லிக்கட்டு</span>, <span lang="TA">அண்ணா நகர் முதல் தெரு</span>, <span lang="TA">பிக்பாக்கெட்</span>, <span lang="TA">ராஜாதி ராஜா எல்லாம் ராதா உச்சக்கட்ட அழகோடு
இருந்த காலத்தில் வெளியான படங்கள்</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">ஒரு விஷயத்தில்
ஒரு மனத்தடை இருந்தால் அதை இன்னொருவர் செய்யும் போது அது விலகும்</span><span style="font-family: "latha" , "sans-serif";">. <span lang="TA">இது உடை விஷயத்தில் மிகப்பொருந்தும்</span>.
<span lang="TA">எங்கள் ஏரியா திருமணங்களில் முதல்நாள் மணமகனுக்கு பேண்ட்</span>,<span lang="TA">சர்ட் முகூர்த்த நேரத்தில் வேட்டி</span>, <span lang="TA">தாலி கட்டி முடித்து
<span style="mso-spacerun: yes;"> </span>பரிசுப் பொருட்கள்</span> (<span lang="TA">மொய்
கவர் தான்</span>) <span lang="TA">வாங்கும் போது கோட் சூட் என்பது வழக்கம்</span>. <span lang="TA">மென்பொருள் நிறுவனங்களில் ஊர்க்காரர்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர்
அங்கு நடக்கும் திருமணங்களில் ஷெர்வாணி</span>, <span lang="TA">குர்தா</span>, <span lang="TA">ஆப் பிளேசர் <span style="mso-spacerun: yes;"> </span>என வெரைட்டியாக மணமகன்
ஆடை அணிவதைப் பார்த்து ஆசை கொண்டனர்</span>. <span lang="TA">ஆனால் அதைப் போட்டுவந்தால்
என்னடா குடுகுடுப்பைக்காரன் மாதிரி இருக்கே என கலாய்த்து விடுவார்களோ என பயந்து ஆசையை
அடக்கிக் கொண்டனர்</span>. <span lang="TA">வசதியான அத்தை</span>, <span lang="TA">தனக்குப்
பெண் கொடுக்காததால் வீம்புக்கு நிறைய செலவு செய்து கல்யாணம் செய்த மேலத்தெரு ரமேஷ்
செலவோடு செலவாக ஒரு ஷெர்வாணியையும் இறக்கினார்</span>. <span lang="TA">நல்லாத்தான இருக்கு
என அதை சமூகம் ஏற்றுக்கொண்டது</span>. <span lang="TA">இப்போது முதல் நாள் நிச்சயதார்த்தத்துக்கு
ஷெர்வாணி என்பது சம்பிரதாய உடை அளவிற்குப் போய்விட்டது</span>. </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">அதுபோலத்தான்
இந்த சுடிதாரையும் அணிய தமிழகத்துப் பெண்கள் தயக்கம் காட்டி வந்தனர்</span><span style="font-family: "latha" , "sans-serif";">. <span lang="TA">காதலிக்க நேரமில்லை காஞ்சனா
முதற்கொண்டு</span>, <span lang="TA">ஜெயலலிதா ஏன் ஸ்ரீதேவி வரை சல்வார் கம்மீஸில் வலம்
வந்தாலும் பெரும்பாலான தமிழ்ப்பெண்கள் சுடிதார் அணிய தயக்கம் காட்டினர்</span>. <span lang="TA">பப் கை வைத்த ஜாக்கெட்</span>, <span lang="TA">பன் கொண்டை என நடிகைகளிடம் இருந்து
பல பேஷன்களை ஏற்றுக்கொண்டவர்கள் சுடிதார் விஷயத்தில் மட்டும் தயக்கம் காட்டிக்கொண்டே
இருந்தார்கள்</span>. <span lang="TA">ராதா இதயகோவில்</span>, <span lang="TA">அண்ணா நகர்
முதல் தெருவில் அணிந்த சுடிதார்கள் பாந்தமாக இருப்பதைப் பார்த்து பலரும் முயற்சி செய்தார்கள்</span>.
<span lang="TA">தமிழ் பெண்களின் சுடிதார் மீதான மனத்தடையை நீக்கியதில் ராதாவுக்கும்
ஒரு பங்குண்டு</span>.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">சிவாஜி
கணேசன்</span><span style="font-family: "latha" , "sans-serif";">, <span lang="TA">சிவகுமார்</span>,
<span lang="TA">கமல்ஹாசன்</span>, <span lang="TA">ரஜினிகாந்த்</span>, <span lang="TA">விஜய்காந்த்</span>, <span lang="TA">சத்யராஜ்</span>, <span lang="TA">பிரபு</span>,
<span lang="TA">கார்த்திக்</span>, <span lang="TA">மோகன்</span>, <span lang="TA">பாக்யராஜ்</span>,
<span lang="TA">டி ராஜேந்தர் என அனைத்து முண்ணனி நாயகர்களுடனும் ராதா நடித்தார்</span>.
<span lang="TA">ஏன் எஸ் பி பாலசுப்பிரமணியம்</span>, <span lang="TA">நிழல்கள் ரவியுடனும்
நாயகியாக நடித்தார்</span>. <span lang="TA">யாருடன் அவர் நடித்தாலும் வித்தியாசமாகத்
தெரியவில்லை</span>. <span lang="TA">எந்த நாயகருடன் இணையாக நடித்தாலும் பொருந்திப்போகும்
உயரம்</span>,<span lang="TA">உடல் அமைப்பு மட்டுமில்லாமல் நடிப்பும் இருந்ததால் எல்லோருடனும்
ஈடுகொடுத்து நடித்தார்</span>.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">கனவுக்கன்னி
என்பது மாஸ் ஹீரோவுக்கு இணையான ஒரு பதம்</span><span style="font-family: "latha" , "sans-serif";">.
<span lang="TA">பெரும்பாலான ஆண்களுக்குப் பிடிக்கவேண்டும்</span>. <span lang="TA">ஸ்ரீதேவிக்குப்
பின் அந்த கனவுக்கன்னி அந்தஸ்து ராதாவுக்கு வந்தது</span>. <span lang="TA">அப்போது மாதவி
போட்டியில் இருந்தாலும் அவரை மீறி பலரின் மனங்களில் இடம்பிடித்தார் ராதா</span>. <span lang="TA">அடுத்து ராதாவின் சகோதரி அம்பிகா</span>, <span lang="TA">ரேவதி</span>, <span lang="TA">நதியா என மக்களுக்குப் பிடித்த நடிகைகள் வந்துகொண்டேயிருந்தாலும் கனவுக்கன்னியாக
ராதாவே நிலைபெற்றிருந்தார்</span>. <span lang="TA">தர்மத்தின் தலைவனில் அறிமுகமாயிருந்தாலும்
வருஷம்</span> 16 <span lang="TA">மூலமாகவே அந்த கனவுக்கன்னி அந்தஸ்து குஷ்பூவுக்கு இடம்மாறியது</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">நம்மை
ஒருமுறையாவது பார்ப்பாளா என்று நாம் பார்த்து ஏங்கிய பெண் மிகச் சுமாரான அழகுடையவனை
திருமணம் செய்துகொண்டால் ஒரு மென்சோகம் நம்மைத்தாக்குமே அதுபோலவே </span><span style="font-family: "latha" , "sans-serif";">90<span lang="TA">கள் ஆரம்பித்த உடன் ராதா</span>,
<span lang="TA">டி ராஜேந்தர்</span>, <span lang="TA">எஸ் பி பாலசுப்பிரமணியம் இவர்களுடன்
நடிக்க ஆரம்பித்ததும் ராதா ரசிகர்களுக்கு ஏற்பட்டது</span>. <span lang="TA">மனைவி ஒரு
மாணிக்கம் படத்தில் மலையாள நடிகர் முகேஷின் ஜோடியாக நடித்தார்</span>. <span lang="TA">அந்தப் படத்தில் அர்ஜூன் இருந்தும்</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">இந்த சமயத்தில்
குஷ்பு</span><span style="font-family: "latha" , "sans-serif";">, <span lang="TA">ரூபிணி</span>,
<span lang="TA">கௌதமி</span>, <span lang="TA">பானுபிரியா போன்றோர் தமிழக இளைஞர்களின்
மனங்களை ஆக்ரமிக்கத் தொடங்கினார்கள்</span>. 91<span lang="TA">ல் மும்பையைச் சேர்ந்த
தொழிலதிபர் ராஜசேகரன் நாயரை ராதா திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி வந்தது</span>.
<span lang="TA">அதன்பின்னர் ராதா பற்றி எந்தத் தகவலும் இல்லை</span>. <span lang="TA">ஒருதலையாய் காதலித்த பெண் திருமணம் செய்து கொண்டு தூரதேசம் சென்றதைப் போலவே
பல ராதா ரசிகர்களும் இந்நிகழ்வை எடுத்துக்கொண்டார்கள்</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">பின் ராதா
மகள்கள் கார்த்திகா</span><span style="font-family: "latha" , "sans-serif";">, <span lang="TA">துளசி நடிக்க வந்தபோது கூட யாரோ எவரோ என்றே பல ராதா ரசிகர்களும் அவர்களை கண்டுகொள்ளவில்லை</span>.
<span lang="TA">சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் நடுவராக ராதா இப்போது இருக்கிறார் என்ற
செய்திகள் வந்தது</span>. <span lang="TA">மறந்தும் கூட அந்த சேனல் பக்கம் செல்லவில்லை</span>.
<span lang="TA">சமீபமாக இன்னும் நிறையப்பேர் அதுபோலவே இருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன்</span>.
<span lang="TA">தேவதையாய் கண்ட பெண்ணை சராசரி பெண்ணாக மீண்டும் பார்க்க யார்தான் துணிவார்</span>?
<span style="mso-spacerun: yes;"> </span></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
</div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-19490573428182461812017-01-15T15:30:00.002+05:302017-01-15T15:30:22.520+05:30அங்கீகாரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div id="posttext">
திங்கட் கிழமை காலை வேளையில் முடி திருத்தம் செய்யப் போவது<br />
<br />
தீபாவளி, பொங்கலுக்கு புதுப் படங்கள் வெளியாவதற்கு முதல் நாள் திரையிடப்பட்டிருக்கும் ஓடித் தேய்ந்த படத்தை மதியக் காட்சி பார்ப்பது<br />
<br />
பரபரப்பான உணவகம், தேநீர் விடுதி தவிர்த்து, அதன் அருகேயிருக்கும் ஆளரவமில்லா கடையைத் தேர்ந்தெடுப்பது<br />
<br />
உறவிலும் நட்பிலும் பெரிய முக்கியத்துவம் பெறாதவர் விசேஷங்களுக்கு முன்னரே செல்வது<br />
கைராசியான மருத்துவரை தவிர்ப்பது<br />
<br />
அமாவாசை, செவ்வாய்கிழமைகளில் அசைவம் வாங்கச் செல்வது<br />
<br />
என நீளும் என் பழக்கங்கள்<br />
<br />
யோசித்துப் பார்த்தால் ஊரில் சிறு வயதில் எல்லோரும் விரும்பிக் குளிக்கும்
படித்துறையை விட்டு ஆழமில்லா, நீர் போக்கும் குறைவான ஆற்றுக்கரையிலேயே
குளித்திருக்கிறேன்.<br />
<br />
யாரும் விரும்பிச் சேராத டியூசனில் சேர்ந்திருக்கிறேன்<br />
<br />
அந்த வரிசையில் இப்போது ஞாயிறு அன்று பணிக்குச் செல்வதும் சேர்ந்து விட்டது<br />
<br />
ஞாயிறன்று பணிக்கு வருபவரின் மீது எந்த மேலாளரும் கடுஞ்சொற்களை பிரயோகிப்பதில்லை<br />
<br />
வார நாட்களில் பயமுறுத்தும் எந்த கோப்பும் ஞாயிற்றுக்கிழமைகளில் மென்மையாகவே நடந்து கொள்கிறது<br />
<br />
குறைவாகச் சமைப்பதால் நன்றாகச் சமைக்கும் அலுவலக உணவகத்தின் சமையல்காரர்
வாஞ்சையுடன் பரிமாறுவார். யாரிடமும் பகிரமுடியாமல் இருப்பவற்றை இறக்கி
வைப்பார்.<br />
<br />
மற்ற நாட்களில் எடுக்கவே அச்சமூட்டும் அலுவலகத் தொலைபேசி கூட கனிவாகவே பேசுகிறது<br />
<br />
நேரடிப் போட்டியில் இந்த இடங்களிலெல்லாம் உனக்கு அங்கீகாரம் கிடைக்காது என்பதால்தானே இந்த பழக்கமெல்லாம்? என புத்தி கேட்கிறது<br />
<br />
அங்கீகாரம் வேண்டா மனது மனிதனின் மனதல்லவே என பதிலளிக்கிறது மனது<br />
</div>
</div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51329143847593280602016-12-28T10:03:00.001+05:302016-12-28T10:03:54.761+05:30பாண்டியராஜன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
1985 ஆம் ஆண்டு. பாரதிராஜா,பாலுமகேந்திரா, பாலசந்தர், பாக்கியராஜ், ஆர்
சுந்தர்ராஜன் போன்று கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும்,
எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் என கதையோடு சேர்த்து நாயக நடிகர்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த
காலம். ஏன் ஸ்ரீதர், ஜெகன்னாதன் போன்ற பழம்பெரும் இயக்குநர்களும் கூட அந்த
ஆண்டில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன்,விஜய்காந்த்
போன்ற நடிகர்கள் ஆண்டுக்கு நான்கைந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த
காலம். இந்தச் சூழலில் ஒரு புது இயக்குநர், பாக்யராஜிடம் உதவியாளராக
இருந்தவர் பிரபுவை நாயகனாக வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படம் இயக்கி
வெளியிட்டார்.<br />
<br />
அது சிறிய பட்ஜெட் படங்கள் நான்கு வாரங்கள் ஓடினால் முதல் திருப்பிக்
கிடைக்கும் காலகட்டம். ஏராளமான போட்டி இருந்தும் அந்தத் திரைப்படம் பல
திரையரங்குகளில் 50 நாட்களையும், சில திரையரங்குகளில் 100 நாளையும் கண்டது.
அந்தப் படம் கன்னிராசி. <br />
இயக்குநர் பாண்டியராஜன். <br />
<br />
இந்தப் படத்தின் பல காட்சிகள் இப்போது இணையத்தில் மீம் உருவாக்கத்திற்கு
துணையாக இருக்கின்றன. இந்தப் படத்தின் காட்சிகள் அப்போது கூட இந்த அளவுக்கு
சிலாகிக்கப்படவில்லை. வீட்டிற்கு வரும் தம்பியை சிறப்பாக கவனிக்கும்
அக்கா, அது கண்டு புகையும் மாமா என காலத்திற்கும் நிற்கும் நகைச்சுவை
காட்சியை அந்தப் படத்தில் வைத்திருந்தார் பாண்டியராஜன். தன் மகளுக்கு
செவ்வாய் தோஷம் இருப்பதால் எங்கே தன் தம்பிக்கு மணமுடித்தால், அவன் இறந்து
விடுவானோ என்று அஞ்சும் அக்கா, அவர்கள் திருமணத்தை தடுக்கும் எளிய கதை. அதை
மிக இயல்பான காட்சிகளால் ரசிக்கும் படியாக எடுத்திருப்பார் பாண்டியராஜன்.<br />
<br />
அதே ஆண்டில் அவர் இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்து இன்னொரு படமும்
வெளிவந்தது. 30 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஏராளமானவர்கள் சிலாகிக்கும்
ஆண்பாவம் தான் அது. திருமணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லும் போது,
தவறுதலாக வேறு பெண்ணைப் பார்ப்பதால் வரும் சிக்கல்களை நகைச்சுவையாக சொன்ன
படம். இந்த இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் அனைவரும் இன்னொரு திறமையான
இயக்குநர் தமிழ்சினிமாவுக்கு கிடைத்து விட்டார் என்றே நம்பினார்கள்.<br />
<br />
கோபக்கார இளைஞன் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் அனைவரும் ஆர்வம்
கொண்டிருந்த காலம் அது. மாற்றாக பாக்கியராஜ் சராசரி இளைஞன்
கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில்
சற்று அதிகமாக குறும்புத்தனத்தை கலந்து ஒரு அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தை
கொண்டுவந்தார் பாண்டியராஜன். அந்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
அடுத்து பாண்டியராஜன் இயக்கிய ”மனைவி ரெடி” திரைப்படம் பெரிய வெற்றியைப்
பெறாவிட்டாலும் அவரது கேரக்டரை ஆழமாக மக்கள் மனதில் பதித்தது.<br />
<br />
எனவே தொடர்ந்து அவருக்கு நாயக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பாண்டியராஜனும்
இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம்
கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு ஏற்றார் போன்ற கேரக்டர்களில் தொடர்ந்து
நடிக்க ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில் அவரை நடிப்பதற்காக புக் செய்ய
வந்த ஒரு தயாரிப்பாளர், யாரை இயக்குநராகப் போடலாம் எனக் கேட்டாராம். அதற்கு
பாண்டியராஜன், மணிரத்னம் இயக்கிய படங்களைப் பார்த்தேன். அவரைக் கேளுங்கள்
என்றாராம். தயாரிப்பாளரும் மணிரத்னத்தை அணுகினாராம். இதை மணிரத்னம் ஒரு
பேட்டியில் சொல்லி இருந்தார். என்ன காரணத்தாலோ அந்தப் படம் துவங்கவில்லை. <br />
<br />
இடையில் பாண்டியராஜன் நடித்த சில படங்கள் சறுக்கியபோது இயக்கத்தை கையில்
எடுத்தார். அப்படி எடுத்த படம் நெத்தி அடி. இந்த திரைப்படம் ஒரு வகையில்
ட்ரெண்ட் செட்டர் எனலாம். அதற்கு முன்னர் தமிழ் திரைப்படங்களில் கல்யாணம்
போன்ற சுப நிகழ்வுகளை விஸ்தாரமாக காண்பித்துள்ளார்களே தவிர, இறந்த வீடு,
அதில் செய்யப்படும் சடங்குகள் பற்றி நிறைய காட்டி இருக்கமாட்டார்கள்.
நெத்தி அடி திரைப்படத்தில் முதல் ஒரு மணி நேரம் ஒரு இறப்பைச் சுற்றிய
காட்சிகள் தான். அதுவும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இதே பாணியை
பின்னாளில் எம் மகன் திரைப்படத்தில் உபயோகித்திருந்தார்கள். மதயானை கூட்டம்
படத்தில் ஏராளமான டீடெயில்களுடன் இந்தக் காட்சிகளை அமைத்திருந்தார்கள். <br />
<br />
இதற்குப்பின் அவர் நாயகனாக மட்டும் நடித்த படங்களும் பெரிய வெற்றியைக்
கண்டன. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய கதாநாயகன், கலைப்புலி சேகரன்
இயக்கத்தில் வெளியான ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ராஜசேகர் இயக்கத்தில் வெளியான
பாட்டி சொல்லைத் தட்டாதே ஆகிய படங்கள் நூறுநாட்களை கடந்து வெற்றி பெறவும்,
பாண்டியராஜன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு நடிப்பிலேயே கவனம் செலுத்த
ஆரம்பித்தார். எல்லாமே சராசரி முதலீட்டுப் படங்கள். அவை எதுவுமே பெரிய
வெற்றியைக் காணவில்லை என்றாலும் சராசரியாக ஓடிய படங்கள்.<br />
<br />
வாய்க்கொழுப்பு, புருசன் எனக்கு அரசன், பொறந்தாலும் ஆம்பளையா
பொறக்கக்கூடாது ஆகிய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. இருந்தாலும் அவர்
நடித்த படங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது குறைவே.<br />
<br />
நெத்தி அடி இயக்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சுப்ரமணியசாமி படத்தை
இயக்கி நடித்தார். இந்தப் படமும் சராசரியாக ஓடியது. அதற்குப்பின்னர் அவர்
குருநாதர் பாக்யராஜின் கதையில் தாய்க்குலமே தாய்க்குலமே படத்தில்
நடித்தார். பின்னர் கோபாலா கோபாலா திரைப்படத்தை இயக்கி நடித்தார். இதுதான்
இவருடைய கடைசி பெரிய ஹிட் எனச் சொல்லலாம். அதற்கடுத்து பல படங்களில்
நடித்துக் கொண்டே இடைவெளிகளில் டபுள்ஸ், கபடி கபடி ஆகிய படங்களை
இயக்கினார். கடைசியாக தன் மகன் பிருத்விராஜை வைத்து கை வந்த கலை படத்தை
இயக்கினார்.<br />
<br />
ஆரம்பத்தில் பெரிய இயக்குநராக வருவார் எனக் கருதப்பட்ட பாண்டியராஜன் 10
படங்கள் கூட இயக்கவில்லை. ஆனால் 75 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். இந்த
தலைமுறை அவரை ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்கும் ஒரு சிறிய நடிகர்
என்றே எண்ணுகிறது. பாண்டியராஜன் இயக்கிய படங்களின் பொது அம்சம் இயல்பான
நகைச்சுவை தான். ஒரு சிறிய சிக்கல் உறவுகளுக்குள் ஏற்படும். அது
தீர்ந்தவுடன் சுபம். அந்த முடிச்சை அவிழ்ப்பதில் பாண்டியராஜன் தனக்கென ஒரு
பாணி வைத்திருப்பார். <br />
<br />
பாண்டியராஜன் அப்போதிருந்த கதாநாயகர்களுடன் ஒப்பிடுகையில் உயரம்
குறைவானவர். எனவே ஆக்ரோஷமான வேடங்கள் எல்லாம் செய்ய முடியாது.
கதாநாயகனுக்கு உரிய முகவெட்டும் இல்லை. ஆனாலும் தைரியமாக தனக்கு ஏதுவாக
இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார். அதற்கு அவருக்குள்
இருந்த இயக்குநர் உதவி செய்தார். கதாநாயகன் படம் மலையாள ரீமேக். அதே போல்
அடிக்கடி அவர் மலையாளப் படங்களின் ரீமேக்குகளை தொடர்ந்து செய்து வந்தார்.
சுப்ரமணிய சுவாமி, கோபாலா கோபாலா போன்று அவர் இயக்கிய படங்களும் மலையாள
ரீமேக்குகளே. தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்துகொண்டிருந்ததால் அவர் ஏதும்
புதிய முயற்சியில் இறங்கவில்லை. <br />
<br />
இயக்குநராக இருந்து நடிக்க வந்தவர்கள் என்று பார்த்தால் தமிழ்சினிமாவில்
இரண்டு வகை உண்டு. மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், மனோ பாலா போல பல்வேறு
காரணங்களால் படங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டபின் குணசித்திர வேடம்,
நகைச்சுவை வேடத்துக்கு தாவியவர்கள் மற்றும் பரபரப்பான இயக்குநராக இருக்கும்
போது நடித்தவர்கள்.<br />
பாக்யராஜ்,டி,ராஜேந்தர், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் இந்த வகையில்
வருவார்கள். முதல் இரண்டு பேர்களும் தாங்கள் உச்சத்தில் இருந்தபோது அடுத்த
இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. பாக்யராஜ் மட்டும்
நட்புக்காக நான் சிகப்பு மனிதன், அன்புள்ள ரஜினிகாந்த், விதி போன்ற சில
படங்களில் தலைகாட்டினார். டி ராஜேந்தர் இப்பொழுதுதான் கே வி ஆன்ந்த்
படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். பாண்டியராஜனும், பார்த்திபனும்
தான் இரண்டு படங்கள் இயக்கிய உடனேயே நடிகராக மாறிவிட்டார்கள்.<br />
<br />
இப்படி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கவும் செய்த பாக்யராஜ்,
டி.ராஜேந்தர் படங்களிலும் உறவுச்சிக்கல்கள் தான் அடிநாதமாக இருக்கும்
என்றாலும், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டுபோய் தீர்ப்பார்கள். ஆனால்
பாண்டியராஜன் படங்களில் அதை எளிதாக தீர்ப்பார்கள். பாண்டியராஜனின் பாணி
என்பது குசும்புத்தனம் கொண்ட, பயந்த சுபாவம் உள்ள நல்லவன் கேரக்டர்.
இதைத்தான் தான் இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் அவர்
கடைப்பிடித்தார். பாக்யராஜும் கிட்டத்தட்ட இதே பாணிதான் என்றாலும்
இருவருக்கும் இடையே சிறு வேற்றுமை உண்டு. பாக்யராஜின் கேரக்டரில் எமோஷனல்
அதிகம் வெளிப்படும். ஆனால் பாண்டியராஜனின் கேரக்டரில் அந்தளவு எமோசனல்
இருக்காது. இவர்களுக்கு நேர் எதிரியாக டி.ராஜேந்தர் எமோஷனல் மட்டுமே
இருக்கும். பார்த்திபன் சில படங்களுக்கு பிறகு இயல்புத்தன்மை குறைந்து
பேண்டஸியும் சற்று கலக்க ஆரம்பித்தார்.<br />
<br />
இயக்கத்தின் ஆரம்ப கால கட்டத்திலேயே பாண்டியராஜனும், பார்த்திபனும் நடிக்க
வந்துவிட்டதால் அவர்களின் ஆரம்ப படங்களைப் போல பின்னாட்களில் இயக்கிய
படங்களில் முத்திரை பதிக்க இயலவில்லை. ஆனால் பாக்யராஜும், டி ராஜேந்தரும்
நிறைய வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்தார்கள். இயக்கம் என்பது நடிப்பை
விட பல மடங்கு உழைப்பைக் கோரும் வேலை. நடிகராக ஒப்பீட்டளவில் எளிதான
வேலையைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் இயக்கத்துக்கு திரும்பி வரும்போது பெரிய
வெற்றிகளைப் பார்ப்பதில்லை. இதற்கு பாண்டியராஜன் வாழும் எடுத்துக்காட்டு.
அவரது முதல் இரண்டு படங்கள் 30 ஆண்டுகள் கழித்தும் இப்போதைய இளைய
தலைமுறையினரால் கொண்டாடப் பட்டு வருகின்றன. நெத்தி அடி படம் கூட முதல் பாதி
வரை மிக நன்றாக இருக்கும். ஆனால் பாண்டியராஜனின் சிக்கல்களை தீர்க்கும்
எளிய பாணியில் இல்லாமல் பேண்டஸியாக சிக்கலைத் தீர்க்கும் பிற்பகுதியை
வைத்திருப்பார். அதனால் பலராலும் நினைவு கூறப்படவேண்டிய அந்தத் திரைப்படம்
பெரிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை. இடையில் அவர் நடிக்கப் போகாமல்
இருந்திருந்தால் அந்தப் பகுதிகளை நன்கு மெருகேற்றியிருப்பார்.<br />
<br />
நடிப்பிலும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் 1988-89ல் அமைந்தது. கதாநாயகன்,
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், பாட்டி சொல்லைத் தட்டாதே எல்லாம் எல்லா
செண்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிய படங்கள். அந்தப் படங்களுக்கு
பாண்டியராஜனின் குறும்புத்தனம் கொண்ட அப்பாவி இளைஞன் இமேஜ் பெரிதும்
கைகொடுத்தது. ஆனால் அவரால் தொடர்ந்து அம்மாதிரி வெற்றிகளைக் கொடுக்க
முடியவில்லை. <br />
<br />
பாண்டியராஜனிடம் இருந்த இன்னொரு குறைபாடு அவர் நடித்த எல்லாத்
திரைப்படங்களிலும் அவர் பாண்டியராஜனாகத்தான் தெரிந்தார். உடல் மொழியிலோ,
உச்சரிப்பிலோ எந்த வித மாறுபாடும் காட்டியதில்லை. எனவே தான் பல
வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் 2000க்குப் பின் அவருக்கு நாயக
வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த மாதிரி கதைகளை நடிக்க அடுத்த செட் நடிகர்கள்
வந்துவிட்டார்கள். <br />
<br />
குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கருணாஸ், அவர் பாண்டியராஜன் பாணி
படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம்
அம்பானி, ரகளை புரம் ஆகிய படங்கள் எல்லாமே பாண்டியராஜன் பட சட்டகத்தில்
அமைந்தவைதான். கருணாஸும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களில் நடிக்க
ஆரம்பித்து சில வெற்றிகளைப் பார்த்தார். <br />
இயல்பான கதாபாத்திரங்கள், குறும்புத்தனமான வசனங்கள் கொண்டு மக்களை
மகிழ்விக்கும் நல் உணர்வுப்படங்களை தொடர்ந்து கொடுத்திருக்க வேண்டிய
பாண்டியராஜன் நடிப்பின் பக்கம் சென்றது தமிழ்திரைக்கு ஒரு இழப்பே.</div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-43256762522212375922016-11-29T17:12:00.004+05:302018-10-20T09:18:22.848+05:30சிந்தாமணி தியேட்டர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-IN</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><br />
<!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt;
mso-para-margin-top:0cm;
mso-para-margin-right:0cm;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0cm;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
</style>
<![endif]-->
<br />
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">எம்
கே தியாகராஜர்</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">-<span lang="TA">பி</span>.<span lang="TA">யூ சின்னப்பா காலம் தொடங்கி</span>, <span lang="TA">எம்ஜியார்</span>-<span lang="TA">சிவாஜி கணேசன்</span>, <span lang="TA">ரஜினிகாந்த்</span>-<span lang="TA">கமல்ஹாசன்</span>, <span lang="TA">அஜீத்</span>-<span lang="TA">விஜய் காலம் வரை
அவர்களின் முக்கிய படங்களையும்</span>, <span lang="TA">அந்தந்த காலத்தின் சூப்பர் ஹிட்
படங்களையும் தொடர்ந்து திரையிட்ட தியேட்டர்கள் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய
அளவிலேயே இருக்கும்</span>. <span lang="TA">அவற்றில் உடனடியாக நினைவுக்கு வரு</span>வது<span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">தியேட்டர் மதுரை</span> – <span lang="TA">சிந்தாமணியாகத்தான் இருக்கும்</span>. <span lang="TA">தமிழகத்தின் வேறு எந்த
தியேட்டரும் இந்த நான்கு காலகட்டங்களிலும் தொடர்ந்து சிறப்பாக இயங்கியதாகத் தெரியவில்லை</span>.
<span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">எம் கே தியாகராஜா பாகவதர் காலகட்டத்தில்
துவங்கப்பட்ட பல தியேட்டர்கள் ரஜினிகாந்த்</span>-<span lang="TA">கமல்ஹாசன் காலம் வரையே
இயங்கின</span>. <span lang="TA">எம்ஜியார் காலத்தில் கட்டப்பட்ட பல திரையரங்குகள் மட்டும்
இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கின்றன</span>. <span lang="TA">சிந்தாமணி தியேட்டர் கட்ட
காரணமாய் இருந்த சிடிசினிமா தியேட்டரும் ரஜினி</span>-<span lang="TA">கமல் காலம் வரையே
இயங்கியது</span>. <span lang="TA">சிடிசினிமா திரையரங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய
எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி படத்தால் கிடைத்த லாபத்தில் தான் எம்</span>.<span lang="TA">எம்</span>.<span lang="TA">ஆர் கிருஷ்ண மூர்த்தியால்</span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">இந்த திரையரங்கம் கட்டப்பட்டது</span>.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">இந்தத்
திரையரங்கில் பின்புறம் சாயமுடியாத வகையிலான பெஞ்ச்</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">, <span lang="TA">பேக் பெஞ்ச் ஆகியவை தரைத்தளத்தில் இருக்கும்</span>.
<span lang="TA">இதில் அனைவரும் சேர்ந்து அமரும்படியாகத்தான் இருக்கும்</span>. <span lang="TA">ஆண்</span>, <span lang="TA">பெண் தனித்தனியே அமரும் படி நடுவே தடுப்பு அமைத்திருப்பார்கள்</span>.
<span lang="TA">இந்த பெஞ்சுகள் முழுவதும் தேக்கில் செய்யப்பட்டவை</span>. <span lang="TA">முதல் மாடியில் மக்கள் தனித்தனியாக</span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">அமரும்படி சோபா அமைக்கப்பட்டிருக்கும்</span>.
1000 <span lang="TA">பேர் அமரக்கூடிய திரையரங்கம் என்றாலும் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகும்
போது மக்கள் நெருக்கி அடித்து உட்கார்ந்து</span> 1200 <span lang="TA">பேர் வரை கூட
பார்ப்பார்கள்</span>. <span lang="TA">பெண்களுக்கான டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் தியேட்டரின்
உள்புறத்தில் பெண்களுக்கான இருக்கை ஒதுக்கீடு இருக்கும் பகுதியில் அமைந்திருக்கும்</span>.
<span lang="TA">ஆண்கள் பகுதியில் அதற்கு பதிலாக சைக்கிள் நிறுத்துவதற்கான இடமாக அது
இருக்கும்</span>. <span lang="TA">ஆண்கள் டிக்கெட் கவுண்டர் தியேட்டரின் வெளிப்புறத்தில்
அமைக்கப்பட்டிருக்கும்</span>. <span style="mso-spacerun: yes;"> </span></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">சிந்தாமணி
தியேட்டர் அமைந்திருப்பது மதுரையின் பெரும்பாலான பேருந்துகள் செல்லும் முக்கிய சாலையில்</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">.<span style="mso-spacerun: yes;">
</span><span lang="TA">மதுரை பின்கோடு</span> 1<span lang="TA">ல் அமைந்திருந்த தியேட்டர்
அது</span>. <span lang="TA">எல்லா பேருந்துகளும் நிற்கும் முக்கியமான நிறுத்தம் வேறு</span>.
<span lang="TA">எனவே டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கும் போது அந்தப் பகுதியே கூட்டத்தால்
திணறும்</span>. <span lang="TA">எம்ஜியார்</span>,<span lang="TA">சிவாஜி</span>,<span lang="TA">ரஜினி</span>,<span lang="TA">கமல் ஆகியோரது படங்கள் வெளியாகும் நேரத்திலும்</span>,
<span lang="TA">திருவிழா நாட்களிலும் போலிஸ் துணையில்லாமல் கூட்டத்தை ஒழுங்கு படுத்தவே
முடியாது</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">இந்தத்
திரையரங்கில் ஏராளமான எம்ஜியார் படங்கள் வெளியாகி வசூல் சாதனை செய்துள்ளன</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">. <span lang="TA">மன்னாதி மன்னன்</span>,
<span lang="TA">அரசிளங்குமரி</span>, <span lang="TA">அடிமைப் பெண்</span>, <span lang="TA">மாட்டுக்கார வேலன்</span>, <span lang="TA">ரகசிய போலிஸ்</span> 115, <span lang="TA">அன்பே வா போன்ற ஏராளமான படங்கள் எம்ஜியாருக்கு என்றால் சிவாஜி கணேசனுக்கு காத்தவராயன்</span>,
<span lang="TA">தங்கப் பதக்கம்</span>, <span lang="TA">திரிசூலம் போன்ற மெகா பிளாக் பஸ்டர்
படங்கள்</span>. <span lang="TA">திரிசூலம் சிந்தாமணியில் ஓடிய ஓட்டத்தில் வந்த லாபத்தில்
அவர்கள் திரிசூலம் என்னும் பெயரில் இன்னொரு தியேட்டரே கட்டி இருக்கலாம் என்பார்கள்</span>.
<span lang="TA">கமல்ஹாசனுக்கு களத்தூர் கண்ணம்மா முதல் ஆளவந்தான்</span>, <span lang="TA">பம்மல் கே சம்பந்தம்</span>, <span lang="TA">விருமாண்டி வரை படங்கள் அங்கே வந்துள்ளன</span>.
<span lang="TA">மின்னலே</span>, <span lang="TA">தூள்</span>, <span lang="TA">ரன்</span>,<span lang="TA">பாய்ஸ்</span>, <span lang="TA">கஜினி</span>,<span lang="TA">போக்கிரி வரை புதிய
படங்கள் அங்கே திரையிடப் பட்டுள்ளன</span>.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">சிந்தாமணி
தியேட்டரின் சிறப்பம்சம் என்னவென்றால் இம்மாதிரி மாஸ் ஹீரோக்களின் படங்கள் மட்டுமல்லாமல்
அந்தக் கால சாரதாவில் தொடங்கி ஒரு தலை ராகம்</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">,
<span lang="TA">அந்த</span> 7 <span lang="TA">நாட்கள்</span>, <span lang="TA">முந்தானை
முடிச்சு</span>, <span lang="TA">வைகாசி பொறந்தாச்சு போன்ற எல்லாத் தரப்பு மக்களும்
சென்று பார்க்கும் படங்களும் அங்கே பெருமளவு வந்திருக்கின்றன</span>. <span lang="TA">சிந்தாமணி தியேட்டருக்கு </span>1990<span lang="TA">களின் ஆரம்பக் கட்டம் வரை
பெண் பார்வையாளர்கள் மாலை மற்றும் இரவு காட்சிக்கு அதிக அளவில் வருவார்கள்</span>.
<span lang="TA">மதுரையின் சிறப்புகளாகச் சொல்லப்படும் ரோட்டோர இட்லி</span>க் <span lang="TA">கடைகள் மற்றும் பூக்கடைகளுக்கு மாவு அரைத்து கொடுக்கும் </span>மற்றும் பூ
கட்டிக் கொடுக்கும் <span lang="TA">பெண்கள் அந்தப் பகுதியில் ஏராளம்</span>. <span lang="TA">அவர்கள் தங்கள் கடமைகளை முடித்துவிட்டு மாலை அல்லது இரவு காட்சிக்கு வந்து
விடுவார்கள்</span>. <span lang="TA">எல்லோரும் பார்க்கும் வகையில்</span> 80<span lang="TA">களின் இறுதிவரை பெஞ்சு ரூ</span> 1.10, <span lang="TA">பேக் பெஞ்சு ரூ</span>
2,20 <span lang="TA">மற்றும் பால்கனி ரூ</span> 3.00 <span lang="TA">என்னும் வகையிலேயே
டிக்கெட் விலை இருந்தது</span>. <span lang="TA">எனவே அவர்கள் தினமும் சம்பாரிக்கும்
காசில் தாராளமாக</span> 1.10 <span lang="TA">டிக்கெட்டில் படம் பார்க்கலாம்</span>.
<span lang="TA">பிடித்துப் போய்விட்டால் நான்கைந்து முறை கூட</span>ப் <span lang="TA">பார்ப்பார்கள்</span>. வேறு பொழுது போக்குகள் இல்லாத காலகட்டம் வேறு.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">சிந்தாமணி
தியேட்டருக்கு எதிரே நின்றோமானால் இடப்பக்கம் மொத்த ஜவுளி வியாபாரம் களைகட்டும் விளக்குத்தூண்
பகுதி</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">, <span lang="TA">வலப்பக்கம் நெல்பேட்டை எனப்படும் நெல் போன்ற விவசாயப் பொருட்கள் கொள்முதல்
பகுதி மற்றும் விவசாய இடுபொருட்கள்</span>, <span lang="TA">உரம்</span>, <span lang="TA">பூச்சி மருந்து விற்கும் கடைகள்</span>. <span lang="TA">தியேட்டருக்கு எதிரே
சற்றுத்தள்ளி காய்கறி மார்க்கெட் மற்றும் மொத்த விலைக்கு மளிகைப் பொருட்கள் விற்கும்
கடைகள்</span>. <span lang="TA">எனவே மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வணிகம்
புரிய வருபவர்கள் எல்லோரும் தங்கள் பணி முடிந்த உடன் காலைக் காட்சியோ</span>, <span lang="TA">மதியக் காட்சியோ பார்த்து விட்டுச் செல்வார்கள்</span>. <span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">இதனால் இப்பகுதியில் ரிக்</span><span lang="TA">ஷாக்காரர்களும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் அதிகம்</span>. <span lang="TA">அவர்கள் மாலை மற்றும் இரவுக்காட்சிக்கு வந்து விடுவார்கள்</span>.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">தியேட்டர்
ஆரம்பித்த காலத்தில் இருந்து</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">
1970<span lang="TA">கள் வரை சிந்தாமணி</span>, <span lang="TA">செல்வந்தர்கள் மற்றும்
கல்லூரி மாணவர்கள் படம் பார்க்கும் உயர் வர்க்க தியேட்டராக இருந்தது</span>. <span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">நாளடைவில் புதிய தியேட்டர்கள் வருகைக்குப்
பின்னர் நடுத்தர வர்க்கத்துக்கான தியேட்டராக மாறியது</span>. <span lang="TA">நெரிசல்
மிகுந்த அந்த ஏரியாவில் கார்</span>, <span lang="TA">பைக் நிறுத்துவதற்கான வசதிக் குறைபாடு
ஒரு காரணமாக இருந்தது</span>. <span lang="TA">மேலும் ரோட்டில் வெயிலில் நின்று டிக்கெட்
எடுப்பது போன்ற அமைப்பும் அவர்களை சங்கடப்படுத்தியது</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">சிந்தாமணி
தியேட்டர் லண்டன் ஒடியன் தியேட்டர் அமைப்பில் கட்டப்பட்டது என்று சொல்வார்கள்</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">. <span lang="TA">ஏராளமான திரையரங்கங்கள்
பின்னாளில் இம்மாதிரியான கட்டமைப்பில் கட்டப்பட்டது</span>. <span lang="TA">இம்மாதிரியான
கட்டமைப்பில் பால்கனி பகுதியில் கழிவறைப் பகுதி மிக குறுகியதாக இருக்கும்</span>. <span lang="TA">பின்னர் பாக்ஸ்</span>, <span lang="TA">பால்கனி என்ற அமைப்பில்</span> 70<span lang="TA">களுக்குப் பின்னர் திரையரங்குகள் கட்டப்பட்டன</span>. <span lang="TA">இந்த அமைப்பில்
கழிவறை வசதி ஓரளவு விசாலமாக இருக்கும்</span>. <span lang="TA">இம்மாதிரியான தியேட்டர்களுக்கே
செல்வந்தர்கள்</span>, <span lang="TA">கல்லூரி மாணவர்கள் செல்லத் துவங்கினர்</span>.
<span lang="TA">மாப்பிள்ளை விநாயகர்</span>, <span lang="TA">சினிபிரியா</span>, <span lang="TA">அம்பிகா</span>,<span lang="TA">நடனா ஆகியவை மக்களை இழுக்கத் தொடங்கின</span>.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "nirmala ui" , "sans-serif";">90<span lang="TA">களில் ரூ</span> 6.50, <span lang="TA">ரூ</span> 9.00 <span lang="TA">என்ற அளவில்
டிக்கெட் விலை இருந்தது</span>. <span lang="TA">ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட நிர்வாகத்தினர்
வசதிகளை சற்று மேம்படுத்தினார்கள்</span>. <span lang="TA">மின்னலே</span>, <span lang="TA">தூள் என இளைஞர்களை கவர்ந்திழுக்கும் படங்கள்</span> 2000<span lang="TA">ல் இருந்து
தொடர்ந்து வெளியாகத் துவங்கின</span>. <span lang="TA">ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல
ஒலி அமைப்புடன் விளங்கிய திரையரங்கம் சிந்தாமணி</span>. 2000 <span lang="TA">வாக்கில்
இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினார்கள்</span>. <span lang="TA">அப்போது டிக்கெட் விலை ரூ</span>
20 <span lang="TA">மற்றும்</span> 30 <span lang="TA">என இருந்தது</span>. <span lang="TA">மற்ற தியேட்டர்களில் சரியாக கேட்காத லைவ் ரெக்கார்டிங் செய்யப்பட்ட விருமாண்டி
படத்தின் சில ஒலிகள்</span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">இங்கே துல்லியமாக கேட்டது</span>. <span lang="TA">பின்னர் பாய்ஸ்</span>, <span lang="TA">கஜினி</span>, <span lang="TA">போக்கிரி ஆகிய படங்கள் திரையிடப்பட்டு</span>
2008 <span lang="TA">வரை இயங்கியது</span>. <span lang="TA">பின்னர் ஒரு பிரபல துணிக்கடையால்
வாங்கப்பட்டு குடோனாக உபயோகப் படுத்தப்பட்டது</span>. <span lang="TA">இப்போது ஏதோ ஒரு
கட்டுமானத்திற்காக இடிக்கப்பட்டு வருகிறது</span>.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">சிந்தாமணி
தியேட்டரின் முதல் சரிவு</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">
90<span lang="TA">களில் துவங்கியது எனலாம்</span>. <span lang="TA">அத் திரையரங்கிற்கு
வரும் பெண்களின் முதல் பொழுது போக்கு சாதனமாக தொலைக்காட்சி மாறியது</span>. <span lang="TA">போக்குவரத்து வசதிகள் அதிகமானதால் சுற்றுப் பட்டு ஊர்களில் இருந்து வரும் மக்கள்
வேலை முடிந்ததும் உடனடியாக திரும்பத் தொடங்கினார்கள்</span>. <span lang="TA">மேலும்
நடுத்தர வர்க்கத்தின் சுய மரியாதையும் கூடியது</span>. <span lang="TA">வெயிலில் வரிசையில்
நின்று டிக்கெட் வாங்கத் தயங்கினார்கள்</span>. <span lang="TA">கைகளில் குச்சியோடு</span>,
<span lang="TA">திட்டி அவ்வப்போது அடித்து கூட வரிசையை ஒழுங்கு படுத்தும் பணியாளர்கள்
அவர்கள் ஈகோவை காயப்படுத்தினார்கள்</span>. 600 <span lang="TA">ரூபா சம்பளம் வாங்குகிறவரிடம்
நாம் திட்டும் அடியும் வாங்குவதா என்ற எண்ணம் வந்தது</span>. <span lang="TA">குடும்பத்தோடு
வரும் பொழுது மரியாதை இல்லாமல் வா</span>, <span lang="TA">போ எனப் பேசும் பணியாளர்கள்
அவர்களை கோபப்படுத்தினார்கள்</span>. <span lang="TA">எந்த குடும்பத்தலைவன் தான் தன்
மனைவி முன்பும் குழந்தைகள் முன்பும் அவமானப்பட விரும்புவான்</span>? 80<span lang="TA">கள் வரை மத்திய தர வர்க்க வீடுகளில் மின் விசிறி</span>, <span lang="TA">கழிவறை
வசதிகள் முன்னே பின்னே தான் இருக்கும்</span>. <span lang="TA">ஆனால்</span> 90<span lang="TA">களில் இருக்கை வசதி</span>, <span lang="TA">மின் விசிறி வசதி</span>, <span lang="TA">நல்ல கழிப்பறை ஆகியவை <span style="mso-spacerun: yes;"> </span>பெரும்பாலான
வீடுகளுக்கு வந்தன</span>. <span lang="TA">நம் வீட்டில் இருக்கும் வசதி கூட இங்கில்லையே
என்ற எண்ணம் பெரும்பாலோனோருக்கு தோன்றியது</span>. <span lang="TA">இதனால் டிவியில் பார்ப்போம்</span>,
<span lang="TA">குறுந்தகடில் பார்ப்போம் என்ற எண்ணம் வந்தது</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">இந்த
நிலை சிந்தாமணியை மற்றும் குறித்தல்ல</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">.
<span lang="TA">பெரும்பாலான திரையரங்குகள் இந்நிலையைச் சந்தித்தன</span>. <span lang="TA">எனவே தங்கள் வசதியை மேம்படுத்த தொடங்கின</span>. <span lang="TA">அவ்வாறு மேம்படுத்</span>தப்படா
<span lang="TA">திரையரங்குகள் வணிக வளாகங்கள் ஆகின</span>. <span lang="TA">சிந்தாமணி
இந்த நிலையை கடந்து சில அடிப்படை வசதிகளை மேம்படுத்தி</span> 2008 <span lang="TA">வரை
இயங்கியது</span>. <span lang="TA">ஆனால் அது நகரின் மையப்பகுதியில் அமைந்திருப்பதால்
வெகுவாக மேம்படுத்த முடியவில்லை</span>. <span lang="TA">அதற்கு ஆகும் செலவை திருப்பி
எடுக்க முடியுமா என்ற நிலை வேறு</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">இப்பொழுது
ஒரு விழா நாளில் இரண்டு மூன்று திரைப்படங்கள் வந்தால்</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">, <span lang="TA">சினிமா மீது ஆர்வமிருப்பவரோ
அல்லது இளைஞர்களோ தான் எல்லாப் படங்களையும் பார்க்க முடிகிறது</span>. <span lang="TA">குடும்பஸ்தர்கள் ஒரு படத்தைத்தான் பார்க்க முடிகிறது</span>. <span lang="TA">ஏன் என்றால் நான்கு பேர் கொண்ட குடும்பம் திரையரங்கிற்குச் சென்றால் டிக்கெட்
கட்டணம்</span>, <span lang="TA">போக்குவரத்து</span>, <span lang="TA">சிற்றுண்டி என</span>
1000 <span lang="TA">ரூபாய் ஆகிவிடுகிறது</span>. <span lang="TA">மதுரையில்</span>
20 <span lang="TA">சதவிகித்தினர்</span> 15,000<span lang="TA">க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களே</span>.
60 <span lang="TA">சதவிகிதம்</span> 15,000<span lang="TA">ல் இருந்து</span> 25,000 <span lang="TA">வரை சம்பாதிப்பவர்கள்</span>. <span lang="TA">எனவே இவர்களால் ஏதாவது ஒரு திரைப்படத்தை
மட்டுமே மாதமொருமுறையோ அல்லது காலாண்டுக்கொருமுறையோ பார்க்க முடிகிறது</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">முன்னர்
எல்லாம் ஹிட்</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">, <span lang="TA">ஆவரேஜ்</span>, <span lang="TA">தோல்வி என படத்தின் ரிசல்ட் மூன்று வகையில் இருக்கும்</span>.
<span lang="TA">இப்போது ஹிட் அல்லது தோல்விதான்</span>. <span lang="TA">ஏனென்றால்</span>
80 <span lang="TA">சதவிகிதம் பேர் வருபவற்றில் ஒரு குறிப்பிட்ட படத்தை மட்டும் பார்த்துவிட்டு
மற்றொன்றை ஓரளவு நன்றாக இருந்தாலும் சாய்ஸில் விட்டு விடுகிறார்கள்</span>. <span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">எனவே திரையுலகத்தினரும் கமர்சியல்
படங்களை எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்</span>. <span lang="TA">புது முயற்சிகளை மிகக் குறைந்த முதலீட்டில் மட்டுமே செய்கிறார்கள்</span>.
<span lang="TA">எனவே ஓரளவு நல்ல பட்ஜெட்டில் பரீட்சார்த்த ரீதியிலான படங்கள் எடுப்பது
மிகக்குறைந்து வருகிறது</span>.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">சிந்தாமணி
போன்ற திரையரங்குகள் மூன்று வகுப்புகளையும்</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">,
<span lang="TA">சில திரையரங்குகள் நான்கு வகுப்புகள் வரையும் வைத்திருந்தன</span>. <span lang="TA">எனவே பொருளாதார வசதிக்கேற்ப நாம் தேர்வு செய்யும் வசதி இருந்தது</span>. <span lang="TA">இப்பொழுது</span> 120 <span lang="TA">ரூபாய் டிக்கெட் மட்டுமே கொடுக்கிறார்கள்</span>.
<span lang="TA">அரசாங்க கொள்கையின் படி குறைந்த விலையில் கொடுக்க வேண்டிய</span><span style="mso-spacerun: yes;"> </span>10 <span lang="TA">சதவிகித டிக்கெட்டுகளை கொடுப்பதேயில்லை</span>.
<span lang="TA">எனவே ரிப்பீட் ஆடியன்ஸ் என்ற கருத்தாக்கமும் குறைந்து கொண்டே வருகிறது</span>. </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , "sans-serif";">நியாயமான
கட்டணத்தோடு</span><span style="font-family: "nirmala ui" , "sans-serif";">, <span lang="TA">அடிப்படை வசதிகளுடன் திரையரங்குகள் இயங்கினால் பார்வையாளர்கள் வரத் தயாராக
இருக்கிறார்கள்</span>. <span lang="TA">பன்முகத்தன்மையிலும் திரைப்படங்கள் வெளிவரும்</span>.
<span lang="TA">இல்லையென்றால் வணிக வளாகம் ஆகும் நிலை வரும் என்பதே சிந்தாமணி திரையரங்கம்
நமக்குச் சொல்லும் செய்தி</span>.</span></div>
</div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-65385439612142763322016-11-28T06:59:00.000+05:302018-10-11T16:02:36.007+05:30திங்கள் கிழமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div id="posttext">
தோல்வி அடைந்தவனின் ஞாயிற்றுக்கிழமை தான் <br />
எவ்வளவு மோசமானதாய் இருக்கிறது?<br />
<br />
குழந்தைகளின் பழுப்பேறிய சீருடைகளைத் துவைக்கும் போது அடுத்த மாதமாவது புது சீருடைகள் வாங்கித்தரவேண்டும் என வருந்த வைக்கிறது.<br />
<br />
பக்கத்து வீட்டு கறிக்குழம்பு வாசனை வராமல் சாளரத்தை அடைக்க வைக்கிறது.<br />
<br />
நீண்ட நேரம் மணி ஒலிப்பதாய் தோன்றும் ஐஸ்கிரீம் வண்டி விரைவாக கடந்து விடவேண்டுமே என பதற வைக்கிறது.<br />
<br />
மாலை வேளைகளில் பக்கத்து வீட்டு குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவதை பிள்ளைகள் ஏக்கத்துடன் பார்ப்பதை சகிக்க வேண்டியிருக்கிறது. <br />
<br />
எந்தப் புள்ளியில் இணையுடன் சண்டை துவங்குமோ என பதைபதைப்புடன் இந்த நாள் விரைவாய் கடந்து விடாதா என எண்ண வைக்கிறது.<br />
<br />
சாக்கு சொல்ல முடியாமல் விசேஷங்களில் கலந்து கொண்டு அவமானப் படவேண்டி இருக்கிறது.<br />
<br />
இந்த வாரமும் நோயுற்ற பெற்றோரைச் சென்று சந்திக்க முடியவில்லையே என வேதனைப் பட வைக்கிறது.<br />
<br />
இத்தனை பிரச்சனைகளையும் மறக்க வைத்துவிடும் திங்கள் கிழமையே போற்றி போற்றி</div>
</div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26331340702046803142016-11-17T00:19:00.003+05:302016-11-17T00:19:53.752+05:30சதுரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மூன்று உலகங்களில் இரண்டாவது உலகமான பொருள் உலகத்தில் அன்று குறை தீர்ப்பு
நாள். மூவுலகத்தின் தலைமை அதிகாரி அன்று குறை கேட்க வந்திருந்தார். அவ்வளவு
சாதாரணமாக எல்லாம் அவரை உலகின் குடிமக்கள் சந்தித்து விட முடியாது. அவரவர்
உலகின் தலைமை அதிகாரியின் ஒப்புதல் வேண்டும். இரண்டாவது உலகமான பொருள்
உலகிலும் சரி, மூன்றாம் உலகமான ஆற்றல் உலகிலும் சரி தலைமை அதிகாரிகள் சில
கட்ட ஆற்றுப்படுத்தலுக்கு பின்பு அனுமதி வழங்கி விடுவார்கள். முதல் உலகமான
அறிவுலகில், நாமே பிறருக்கு குறை தீர்க்க வேண்டியவர்கள், நாம் குறை தீர்க்க
இன்னொருவரிடம் போவதா என அந்த தலைமை அதிகாரி மறுத்து விடுவார்.<br />
<br />
பொருள் உலகில் இருந்த வடிவங்கள் நாட்டைச் சேர்ந்த சதுரத்திற்குத்தான்
பெரும் மனக்குறை. இரு பரிமாண வடிவங்களில் சிறந்த வடிவமாக வட்டத்தைச்
சொல்லி, இந்த மூவுலகங்களின் பயனாளி உலகமான பூமியில் எல்லோரும் உபயோகித்துக்
கொண்டே இருக்கிறார்கள். நானும் செவ்வகமும் இரண்டாம் நிலையில் இருந்தோம்.
ஆனால் இப்போது பூமியில் செவ்வகத்தையே எல்லோரும் பயன்படுத்துகிறார்கள்,
என்னை மதிப்பாரில்லை என. <br />
<br />
முதலில் சக வடிவமான முக்கோணத்திடம் புலம்ப ஆரம்பித்தது. இங்கிருந்து அந்த
பூமியைப் பார். நீக்கமற செவ்வகமே நிறைந்திருக்கிறது. ஒரு மனிதன் தன்
வாழ்நாளில் அதிகபட்சம் காட்சியாகப் பார்ப்பது எல்லாமே செவ்வகமாகவே
இருக்கிறது. கையில் இருக்கும் அலைபேசி, வேலை செய்ய உபயோகிக்கும் கணித்திரை,
பொழுதுபோக்க உதவும் தொலைக்காட்சி, திரையரங்கத் திரை என எல்லாமே செவ்வகம்
தான்.<br />
<br />
வீட்டின் கதவு, சாளரம், உபயோகிக்கும் மேஜை, படுக்கும் கட்டில், வாகனங்கள் என நீக்கமற செவ்வகமே ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது.<br />
<br />
விளையாட்டு மைதானங்களைப் பார்த்தாலும் கால்பந்து, ஹாக்கி, பேட்மிட்டன்,
கூடைப்பந்து என எல்லாமே செவ்வகங்கள் தான். செஸ் விளையாட்டில் மட்டும்தான்
என் உபயோகம். அதை இம்மாதிரி ஆரவாரத்துடன் யார் பார்க்கிறார்கள் என்றது.<br />
<br />
ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து போடும் தொட்டில் முதல், இறுதியில் அவன்
உறங்கும் கல்லறை வரை செவ்வகம் தான். விளம்பரப் பலகைகள், வீட்டின் அறைகள்,
பீரோ என எங்கெங்கெலாம் மனிதன் புழங்குகிறானோ அங்கெல்லாம் செவ்வகமே என
அங்கலாய்த்துக் கொண்டது. <br />
<br />
முக்கோணத்திற்கு இதில் பெரிய குறையொன்றும் இல்லை. என்னை அடிக்கடி
பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். கணித சமன்பாடுகள் இருக்கும்
காலம் வரை என் பயன்பாடு இருந்து கொண்டுதான் இருக்கும். உனக்கு மட்டும்
என்ன? எத்தனை இடங்களில் நீ பயன்பட்டுக் கொண்டு இருக்கிறாய்? என சதுரத்திடம்
கேட்டது.<br />
<br />
நீ மூன்று பக்கம் உடையவன், அதனால் உனக்கு நான்கு பக்கக் காரனான
செவ்வகத்திடம் போட்டி இல்லை. ஆனால் நானும் அவனும் ஒரே இனம். என்னை விட அவன்
அதிகளவு பயன்படுவதை என்னால் தாங்க முடியவில்லை என சதுரம் முக்கோணத்திடம்
கூறியது.<br />
இது போல தொடர்ந்த நச்சரிப்பால் பொருள் உலக தலைமை அதிகாரி, சதுரத்திற்கு
குறை தீர்க்கும் நாளில் ஒரு வாய்ப்பு வழங்கினார். மூவுலகத்தின் தலைமை
அதிகாரியிடம் நேர்காணலுக்குச் சென்றது சதுரம்.<br />
<br />
தன் மன வருத்தங்களையெல்லாம் அவரிடம் கொட்டியது சதுரம். நான் இருவருக்கும்
சமமாக கூட முக்கியத்துவம் கேட்கவில்லை. செவ்வகப் பயன்பாட்டில் பாதியாவது
எனக்கு கிடைக்குமாறு செய்யலாமே என வேண்டியது. அறிவுலகத்தில் சொல்லி, என்
வடிவத்தில் மிகப் பிரபலமாகும் இரண்டு விளையாட்டுக்கள், என் வடிவத்தில்
சிறப்பாக இயங்கும் சாதனங்கள் என ஏதாவது உருவாக்கி என் முக்கியத்துவத்தை
அதிகரிக்கலாமே என கேட்டது சதுரம்.<br />
பொறுமையாக சதுரத்தின் தரப்பை கேட்டுக் கொண்ட மூவுலகத்தின் தலைமை அதிகாரி,
சிறிது யோசனைக்குப் பின் பேச ஆரம்பித்தார். வட்டம் ஆதியில் இருந்து
மனிதர்களால் நீக்கமற உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது. அதில் கூர்மையான முனை
ஏதும் இல்லை. யார் அதை அணுகினாலும் காயப்படுத்தாது. எங்கும் யாருடனும்
உரசல் இல்லாமல் நழுவிவிடும். அதனாலேயே அதை எங்கும் உபயோகப்படுத்தி
வந்தார்கள். <br />
<br />
செவ்வகம் இருவேறு அளவுகளைக் கொண்டது. மனிதர்கள் இப்போது ஒவ்வோர் இடத்திற்கு
ஏற்றவாறு தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற காலகட்டம். ஒருவரிடத்தில்
ஒரு விதமாகவும், இன்னொரு இடத்தில் இன்னொரு விதமாகவும் தங்கள் முகங்களைக்
காட்ட வேண்டி இருக்கிறது. எனவே அவர்களின் மனதிற்கு நெருக்கமான செவ்வகத்தை
இப்போது அதிக அளவில் உபயோகிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நீ எல்லாப்
பக்கமும் ஒரே அளவு கொண்டவன். இப்போதைய மனித மனம் எல்லோரிடத்திலும் ஒரே
மாதிரி நடக்க தயாரில்லை. உன் கட்டுக் கோப்பு அவர்களை பயமுறுத்துகிறது. எனவே
அவர்கள் உன்னை தவிர்க்கிறார்கள். மேலும் இன்னும் சிக்கலான மனநிலைக்கு
அவர்கள் மாறும் போது சமமில்லா பக்கம் கொண்ட முக்கோணம், ஐங்கோணம், அறுகோணம்
என்றெல்லாம் தாங்கள் உபயோகிக்கும் பொருட்களை அமைத்துக் கொள்வார்கள் என்று
முடித்தார்.<br />
<br />
சதுரம் ஆதங்கத்துடன் மூவுலகத்தின் தலைமை அதிகாரியிடம் கேட்டது, “அப்படியென்றால் எதிர்காலத்தில் என் உபயோகம்?”. <br />
<br />
நீ மட்டுமல்ல, எல்லோரிடம் ஒரே மாதிரி நடக்கும் எந்த அறிவுக்கும்,
பொருளுக்கும், ஆற்றலுக்கும் பூமியில் தேவை குறைந்து கொண்டேதான் போகும்.
எல்லோரிடமும் ஒரே மாதிரி நடக்க கூடியவர்களால் மட்டுமே நீ
பயன்படுத்தப்படுவாய். அது தான் இன்றைய நியதி என பதிலளித்தார். </div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-63213522210952742332016-10-31T20:21:00.002+05:302016-10-31T20:21:21.431+05:30இயக்குநர் மனோபாலா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
”நான் உங்கள் ரசிகன்” என்று ஒரு படம் 1985ஆம் ஆண்டு வெளியானது. அந்த ஆண்டு
வெளியான சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளிலும் சரி, மற்ற பல்சுவை வார
இதழ்களிலும் சரி அந்தப் படத்தின் ஸ்டில்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
அந்தக் காலகட்டத்தில் அந்தப் படத்திற்கு செய்யப்பட்ட விளம்பரம் அதிகம். தன்
முதல் படமான கார்த்திக்,சுஹாசினி நடிப்பில் வெளியான ஆகாய கங்கை சரியாக
கவனிக்கப் படாததால் மூன்றாண்டுகள் கழித்து கிடைத்த வாய்ப்பில் வெற்றி பெற
கடுமையாக முயற்சிகள் எடுத்திருந்தார் அப்படத்தின் இயக்குநர் மனோ பாலா.
அந்தப் படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுத்தரவில்லை என்றாலும் ஒரு
இயக்குநராக பலரின் நம்பிக்கையை பெற்றுத்தந்து தொடர்ந்து வாய்ப்புகள்
கிடைக்க காரணமாக அமைந்தது. <br />
<br />
அதற்கு அடுத்து அவர் இயக்கிய ”பிள்ளை நிலா” பெரிய வெற்றி பெற்றது. ஒரு
வகையில் தமிழில் முண்ணனியில் இருந்த நடிகர்,நடிகைகள் நடித்து வெளியான முதல்
பேய்ப்படம் இது என்றும் சொல்லலாம். அப்போது மார்க்கெட்டில் நல்ல
நிலைமையில் இருந்த மோகன், ராதிகா மற்றும் நளினி இணைந்து நடித்த படம்.
அதற்கு முந்தைய பேய்ப்படங்கள் எல்லாம் சிறிய நடிகர்கள் அல்லது மார்க்கெட்
இழந்த நடிகர்களே நடித்து வந்தார்கள். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்
தொடர்ந்து மோகன், விஷ்ணுவர்த்தன், விஜய்காந்த் ஏன் ரஜினிகாந்த் படத்தையே
இயக்கும் வாய்ப்பு வந்தது. <br />
<br />
மனோ பாலாவின் படங்கள் எல்லாவற்றிலும் பெண் கேரக்டர்களுக்கு மிகவும்
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அவரின் கதாநாயகிகள்
கவர்ச்சியாகவும் இருக்க மாட்டார்கள். நன்கு நடிக்கத் தெரிந்தவர்களை மட்டுமே
அவர் நாயகியாக தேர்ந்தெடுப்பார். ராதிகா,சுஹாசினி,பானுபிரியா, சுகன்யா என
அவரின் நாயகிகள் எல்லாமே நன்றாக நடிக்கக் கூடியவர்கள் தான். <br />
<br />
80களில் இருந்த நாயக பிம்பம் சாராமல் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்
கதையம்சம் உடைய படங்களை இயக்கியவர்களில் மனோ பாலாவும் ஒருவர். பாலசந்தர்,
பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர் சி சக்தி போன்ற இயக்குநர்கள் இந்தக்
காலகட்டத்தில் முக்கியமானவர்கள். விசு,ரங்கராஜன் போன்ற இயக்குநர்கள் பெண்
கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களை எடுத்திருந்தாலும்
அதில் பாரம்பரிய குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்கும் பெண் கதாபாத்திரங்களையே
அமைத்திருப்பார்கள். <br />
<br />
மனோபாலா பா வரிசை இயக்குநர்கள் மற்றும் ஆர் சி சக்தியைப் போல புதுமைப்
பெண்களை திரையில் உலவ விட்டவர். மனோ பாலாவின் குருவான பாரதிராஜா,
கிராமத்து தைரியசாலி பெண்களை காட்டினார் என்றால், பாலசந்தர் நகரத்து
நடுத்தர வர்க்க குடும்பத்து பெண்களின் முற்போக்கு வடிவங்களைக் காட்டினார்.
தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எப்படி தங்களின் தியாக மனப்பான்மையால், திட
மனதால் உழைப்பால், எதிர்கொள்கிறார்கள் என்பது பாலசந்தரின் கதையுலகமாக
இருந்தது. அவர் எடுத்த கிராமிய அரசியல் படங்களான தண்ணீர் தண்ணீர்,
அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்களில் கூட பெண் கதாபாத்திரத்துக்குத் தான்
மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்றாலும் அவை உழைப்பு, தியாகம்,
மன உறுதியால் பிரச்சினைகளை சமாளிப்பது போலவேதான் கதை இருக்கும். <br />
<br />
பாலு மகேந்திராவின் கதைகளில் இருக்கும் பெண்கள் இயல்பான ஆசைகளுடன் இருந்து,
அதன் மூலம் வரும் கஷ்டங்களை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். வீடு,
சந்தியாராகம் போன்றவற்றில் நடுத்தர வர்க்க குடும்பத்து பிரச்சினைகள்
பேசப்பட்டிருக்கும், ரெட்டை வால் குருவி, மறுபடியும், சதிலீலாவதியில்
இரண்டு மனைவிகள் கதை சொல்லப்பட்டு, அதில் அவர்கள் எடுக்கும் தைரியமான
முடிவுகள் சொல்லப்பட்டிருக்கும். ஆர் சி சக்தியின் படங்களிலும்
பெரும்பாலும் நடுத்தர வர்க்க சிக்கல்களே அலசப்பட்டிருக்கும். மனக்கணக்கு,
கூட்டுப் புழுக்கள், பத்தினிப் பெண் என நடுத்தர வர்க்க இயலாமையைச் சுற்றி
அவரின் கதைகள் பின்னப்பட்டிருக்கும். சிறை மட்டும் விதிவிலக்கு. அதில்
மானபங்கம் செய்யப்பட்ட பெண், கணவன் வீட்டின் நடவடிக்கைகள் பொறுக்க
மாட்டாமல் மான பங்கம் செய்தவன் வீட்டில் அடைக்கலம் புகுவாள்.<br />
<br />
மனோ பாலாவின் பெண் கதாபாத்திரங்கள் இன்னும் சற்று தைரியசாலிகள். கர்ப்பமான
மனைவி இருப்பவனை காதலித்து, அது நிறைவேறாமல் இறக்கும் கதாநாயகி
பிள்ளைநிலாவில். கருணாநிதி கதையில் வெளியான தென்றல் சுடும் படத்தில்
அப்பாவியாக இருந்து, காதலித்து ஏமாற்றப்பட்டு, இறந்ததாக கருதப்பட்டு
தப்பித்து பின்னர் மாடல் அழகியாக வந்து ஏமாற்றியவனை பழிவாங்கும் நாயகி.
இந்த இரண்டு படங்களிலும் ராதிகா தான் நாயகி.<br />
<br />
மனோபாலாவின் அதிக படங்களில் நாயகியாய் நடித்தவர் ராதிகா. மனோ பாலா
விஜயகாந்தை வைத்து இயக்கிய சிறைப் பறவை, ரஜினிகாந்தை வைத்து இயக்கிய
ஊர்காவலன் ஆகிய படங்களிலும் ராதிகாதான் நாயகி.<br />
<br />
அனந்து அவர்களின் கதையில் மனோபாலா இயக்கிய படம் நந்தினி. ராதிகாவிற்கு
அடுத்து மனோபாலா இயக்கத்தில் அதிகப்படங்களில் நடித்தவர் சுஹாசினி. தன்
தாய்க்கு இன்னொருவருடன் இருக்கும் நட்பை சந்தேகித்து, பின் அது தவறென மகள்
உணரும் கதை. அந்த சிக்கலான தாய் கதாபாத்திரத்தில் சுஹாசினி
நடித்திருந்தார். அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான அன்னை, தத்தெடுத்து
வளர்ப்பதில் உள்ள சிக்கல்களைச் சொல்லியது. விதவைப் பெண் ஒருவர், வருடத்தில்
ஒரு மாதம் மட்டும் ஒரு குழந்தையை எடுத்து வந்து தன் திருப்திக்காக
வளர்ப்பதும், அதனால் அந்த அனாதைக் குழந்தைக்கு ஏற்படும் அசௌகர்யங்கள் என
வித்தியாச கதைக்களம்.<br />
<br />
சன் டிவி டெலிபிலிம் எடுக்க ஆரம்பித்த போது, மனோ பாலா – ராதிகா
காம்பினேசனில் சிறகுகள் என்னும் படத்தை தயாரித்தார்கள், அதில் விக்ரமும்
நடித்திருந்தார். தன் கணவனால் புறக்கணிக்கப்படும் பெண், தன் திறமையால்
வெகுவாக முன்னேறும் கதாபாத்திரம் ராதிகாவுக்கு. இப்போது ஒலிபரப்பாகும்
ஏராளமான தமிழ் சீரியல்களின் மையக்கருத்தாக இந்தப் பட கதை இருக்கிறது. <br />
<br />
மனோபாலாவின் பெரும்பாலான கதைகள் பெண் தன் பிரச்சினையில் இருந்து எப்படி
குலைந்து போகாமல் வெகுவாக முன்னேறிக்காட்டுகிறாள் என்பதாகவே இருக்கும்.
இதில் இருந்து தான் அவர் தன்காலத்தில் பெண் கதாபாத்திரங்களைப் படைத்த மற்ற
இயக்குநர்களில் இருந்து வேறுபடுகிறார். பாலசந்தர், பாலுமகேந்திரா ஆகியோரின்
கதாபாத்திரங்கள் அந்த பிரச்சினை தீர்ந்தால் போதும் என்ற அளவிலேயே
இயங்கும், ஆனால் மனோபாலாவின் நாயகிகள் பிரச்சினையைத் தீர்ப்பதோடு
மட்டுமல்லாமல் மேலும் முன்னேறி, தன்னை வதைத்த ஆண்களை நோக்கி வெற்றிச்
சிரிப்பு சிரிப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கும். <br />
<br />
மனோபாலா மற்ற கதைக்களங்களிலும் சிறப்பாகவே தன் திறமையைக் காட்டி
இருக்கிறார். அதற்கு அவர் கருணாநிதி, அனந்து, கலைமணி, ஆபாவாணன், ஆர் பி
விஸ்வம் போன்ற திறமையான கதாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றியதும் ஒரு
காரணம். <br />
அவர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்,
சிறைப் பறவை ஆகியவை மக்களிடையே வரவேற்பு பெற்ற படங்கள். ரஜினிகாந்த்
நடித்த ஊர்காவலன், சாமியார்கள் தங்கள் நலனுக்காக செய்யும் தகிடு தத்தங்கள்
எப்படி குடும்பங்களை பாதிக்கும் என்று காட்டியது. ராம்கி நடித்த
வெற்றிப்படிகள், அருண் பாண்டியன், பானுபிரியா நடித்த முற்றுகை ஆகியவை
திரில்லர் வகைப் படங்கள்.<br />
<br />
விஜயா வாஹினி பல வருடங்களுக்கு பின்னர் படத்தயாரிப்புக்கு திரும்பி
வந்தபோது தயாரித்த படங்களில் மனோபாலா இயக்கத்தில் வெளியான கறுப்பு
வெள்ளையும் ஒன்று. அதே ஆண்டில் சிவாஜிகணேசன், சரோஜா தேவி நடிப்பில்
பாரம்பரியம் என்னும் படத்தையும் இயக்கினார். இவையிரண்டும் எண்ணிக்கையை
கூட்ட மட்டுமே உதவின. <br />
<br />
மனோபாலா இயக்கத்தைத் துறந்து நடிப்பில் முழுக்கவனம் செலுத்தி ஒரு நல்ல
நகைச்சுவை நடிகராக தற்போது அறியப்படுகிறார். ஆனால் அவரது படங்களில்
நகைச்சுவைக் காட்சிகளுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. அவர் முழுநேர
இயக்குநராக இருந்த 80களில் காமெடி டிராக்குகள் மிகப் பிரபலம்.
கவுண்டமணி-செந்தில், ஜனகராஜ், எஸ் எஸ் சந்திரன் ஆகியோர் முக்கியப்படங்களில்
எல்லாம் இடம்பிடித்திருப்பார்கள், ஆனால் மனோபாலாவின் படங்களில் இந்த
நகைச்சுவை டிராக்குகள் இருக்காது. கதையோடு ஒன்றிய நகைச்சுவைக் காட்சிகள்
இருக்கும். அதுவும் சில காட்சிகளே இருக்கும். <br />
<br />
1990 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான மல்லு வேட்டி மைனர்
நகைச்சுவைக்கும் சற்று முக்கியத்துவம் கொடுத்து மனோபாலா இயக்கிய படம்.
சத்யராஜ், அவரது தந்தையின் சின்ன வீடுகளுக்கெல்லாம் பென்சன் அனுப்பும்
குணமுள்ள மைனர். பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் மைனராக இருந்தாலும்
அவருக்கும் ஒரு பெண்ணிடம் காதல் வருகிறது. ஆனால் சந்தர்ப்பத்தால் இன்னொரு
பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். காதலித்த பெண்ணால் வரும் பிரச்சினைகள்,
அதற்கான தீர்வு என வித்தியாசமான ஒரு கதை. காதலியாக ஷோபனா, சந்தர்ப்ப
வசத்தால் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணாக சீதா என இருவரும் சிறப்பாக
நடித்திருப்பார்கள். சத்யராஜ் மைனர் வேடத்தில் அதகளப்படுத்தி இருப்பார். <br />
இப்போது ட்ரெண்டாக இருக்கும் பேய் பிளஸ் நகைச்சுவை பார்முலாவையும் முதலில்
கொண்டுவந்தவர் மனோ பாலாதான். ஜெயராமை வைத்து அவர் இயக்கிய நைனா
திரைப்படத்தில் தான் இந்த கான்செப்ட் தமிழ் சினிமாவில் முழுமையாகப்
பயன்படுத்தப்பட்டது, கொலைக் குற்றவாளியாய் சித்தரிக்கப்பட்ட தன் மகனுக்கு
ஆவியாய் வந்து உதவும் தந்தையின் கதை. இதில் ஏமாற்றுக்கார மீடியமாக வடிவேலு.
படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தற்போது வெளியாகும் ஏராளமான
நகைச்சுவைப் பேய் படங்களுக்கு முன்னோடியாக இருந்தது.<br />
<br />
90களுக்குப் பின்னர் பிறந்த யாருமே மனோபாலாவை ஒரு இயக்குநராக நினைக்க
மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் ஏராளமான படங்களில் சிறு சிறு வேடங்களில்
நடித்து வருகிறார். ஆண்டுக்கு குறைந்தது 15 படங்களிலாவது தலையைக் காட்டி
விடுகிறார். <br />
அவர் காலத்து இயக்குநர்கள் எல்லாமே தங்களுக்கு என்று ஒரு தனி பாணியை
வைத்திருந்தார்கள். அந்த பாணி படங்களினாலேயே அவர்கள் அறியப்பட்டார்கள்.
ஆனால் மனோபாலா கதையின் தன்மைக்கேற்ப தன் படங்களை இயக்கினார். அதனால் தான்
அவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல்
இருக்கும். இது ஒருவகையில் நல்ல விஷயம் என்றாலும் தனித்தன்மை இல்லாத
இயக்குநர் என்பது போல மக்களால் உணரப்படுகிறது. மேலும் அவர் இயக்கிய
படங்களில், அப்போதைய பெரு வெற்றிக்கான அளவுகோலான சில்வர் ஜூபிளி படங்கள்
ஏதுமில்லை. <br />
ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய ஊர்காவலனும் சரி, பிள்ளை நிலா, தென்றல்
சுடும் போன்ற படங்களும் சரி 100 நாட்களை மட்டுமே கண்டவை. மற்ற படங்கள்
எல்லாம் சராசரியான 50 நாள் படங்கள். <br />
<br />
மக்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவில் ஒருவரை சிறந்த இயக்குநர்
எனலாம். ஆனால் அதிலும் மனோபாலாவின் திரைப்படங்கள் படைப்பு ரீதியாக பெரிய
பாதிப்பை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. தற்போது அவர் நடிக்கும் படங்களிலும்
கூட சிறு சிறு வேடங்களிலேயே திருப்தி அடைந்து கொள்கிறார். தன்
நடிப்புத்திறனை நிரூபிக்க பெரிய முயற்சி ஏதும் எடுப்பதில்லை. <br />
<br />
இரண்டாண்டுகளுக்கு முன்னர் மனோபாலா, வினோத் இயக்கத்தில் தயாரித்த சதுரங்க
வேட்டை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோபாலாவிற்கு இருக்கும்
அனுபவம் மற்றும் கதையறிவைக் கொண்டு இனி சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து
குறு முதலீட்டுப்படங்களைத் தயாரிக்கலாம். சிறந்த வேடங்களைத்
தேர்ந்த்தெடுத்து நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராகப் பெயர் பெறலாம்.
சராசரியான இயக்குநர் ஆனால் வித்தியாச கதைக்களங்களை இயக்கியவர் என்ற பெயரை
அவர் மாற்ற பெரிய மனதுடன் இனி செயல்பட வேண்டும்.</div>
முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com2