June 25, 2014

பட்டாசு கிளப்பும் பாஸு பாஸு சாங்

படத்தில்/பாட்டில் ஏதாவது அறிவுரை/கருத்து சொல்லப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டால் போதும், வெறிநாய் ஒன்று துரத்தி வந்து, அந்த தியேட்டர் பக்கம் ஓடினால் மட்டுமே தப்பமுடியும் என்ற நிலை இருந்தால் கூட பரவாயில்லை, ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று திரும்பி நின்று நாயிடம் கடி வாங்கிக் கொள்ளும் மக்கள் அதிகரித்து விட்ட சூழல் இது.

முதலாளிகள்/அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடும் பொதுவுடைமை கருத்து கொண்ட கதாநாயகர்களே அதிகம் புழங்கி வந்த தமிழ் சினிமாவில், இப்போது முதலாளித்துவ சார்புடைய, ஏன்? பாசிச எண்ணமுடைய ஹீரோக்கள் பெருகிவிட்டதில் இருந்தே இதை அறிந்து கொள்ளலாம்.

எம்ஜியார் காலம் போல் ”தூங்காதே தம்பி தூங்காதே”  என்று கருத்துடன் பாடினாலோ, ”வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுசனை இன்னும் பார்க்கலையே” என மனிதன் ரஜினி போல பாடினாலோ அல்லது “ரத்த சாட்டை எடுத்தால்” என கண் சிவக்க சிவப்பு மல்லி விஜய்காந்த்தாக மாறினாலோ மக்கள் சேனல் மாற்றி விட்டு போய்க் கொண்டேயிருப்பார்கள்.

ஆனால் அதையே மிக கலோக்கியலாக கொடுத்தால், ரசிப்பார்கள். கோழி கூவுது படத்தில் வரும் “அண்ணே அண்ணே சிப்பாயண்ணே” பாடல் ஒரு உதாரணம். ”நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப் போச்சிண்ணேன்”, ”ஒன்னரையணா காய்கறியை ஒண்ணார் ரூபா ஆக்கிப் புட்டாங்க”, என்ற வரிகள் இன்னும் நம்மை முணுமுணுக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

சத்யராஜ் கூட தன்னுடைய சில படங்களில் இப்படி கொடுக்க முயற்சி செய்து தோல்வி அடைந்திருக்கிறார். தெற்கு தெரு மச்சான் படத்தில் லொக்கு லொக்கு இருமலு என புகைப் பழக்கத்தை விடச் சொல்லி பாடினார். டைட்டில் பாடலாக இருந்தும் அந்த பாட்டுக்கு மக்கள் தம்மடிக்கச் சென்றுவிட்டார்கள்.

எனவே சில காலம் அதை யாரும் முயற்சி செய்து பார்க்கவில்லை. ரஜினிகாந்த் மட்டும் தன் இண்ட்ரோ பாடல்களில் சில கருத்துக்களை புகுத்தி பாடினார். அவர் ரேஞ்சுக்கு அதை ஒப்புக் கொண்டார்கள்.

கதையின் அவசியம் கருதியோ, கதாபாத்திரத்தின் குணநலனை விளக்கவோ சில சமயம் பாடலில் கருத்தைச் சொல்ல வேண்டியுள்ளது. அதை சேதாரமில்லாமல் சொல்ல ஒரே வழி, அப்போதைய கேட்சியான பேச்சுத்தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தி பாடல் எழுதுவதே.
அப்படி தற்போது வந்திருக்கும் பாடல், கேபிள் சங்கர் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ”தொட்டால் தொடரும்” படத்தில் இடம்பெற்றுள்ள கார்க்கி, கேபிள் சங்கர் இணைந்து எழுதியுள்ள ”யாருக்கும் ஈவு இல்ல இரக்கம் இல்ல பாஸு பாஸு” பாடல்.

வேகமாக செல்லும் நகர வாழ்க்கையில் அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படாத மனநிலையையும், சந்திக்கும் அவதிகளையும், அபத்தங்களையும், ஆனாலும் அவற்றை கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தையும் கேட்சியான வார்த்தைகளால் சொல்லி செல்கிறது இந்த பாடல்.

இப்போதெல்லாம் சிறுவர்களுக்கு உடனே பிடிக்கும் பாட்டே ஹிட்டாகிறது. அந்த வகையில் இந்தப் பாடல் தற்காலத்திய சிறுவர்களை கவரும் ரிதத்தில் இருப்பது  பிளஸ்.


பாடல் அடைந்த வெற்றி போலவே படமும் வெற்றி அடைய படக்குழுவினரை வாழ்த்துகிறேன். 

1 comment:

shortfilmindia.com said...

நன்றி தலைவரே..