July 29, 2014

கமல் குணா

அன்றைக்கு எங்கள் தெருவில் இருந்தவர்களிலேயே குணா அண்ணன் தான் தீவிர கமல் ரசிகர். மங்கம்மா சபதம் படத்தையே 17 தடவை பார்த்தவர் என்ற ஒன்றே அவரின் கமல் வெறியைச் சொல்லிவிடும்.

அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மைக்கேல் மதன காம ராஜன் என தொடர்ச்சியாக கமல் படங்கள் வெளிவந்து அவரை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்த நேரம், அடுத்த படம் குணா என அறிவிப்பு வந்தது. அவருக்கு அளவில்லா சந்தோஷம். அதுவரை தட்டிகளில் கமல்குணா என போட்டுக்கொண்டிருந்த குணா அண்ணன் இந்தப் படத்துக்கு வைக்கப்படும் தட்டியில் எப்படி பெயர் போடுவார்? என நாங்கள் பேசிக்கொண்டோம்.

ஆனால் பத்திரிக்கைகளில் வந்த தகவல்கள், எங்கள் ஆர்வத்தை குறைக்கத் தொடங்கியிருந்தன. சந்தான பாரதி இயக்கம், புதுமுகம்ரோஷினி, எஸ்,வரலட்சுமி,காகா ராதாகிருஷ்ணன் என பழைய ஆட்களின் மறு பிரவேசம், ரேகா போன்ற மார்க்கட் இழந்த நடிகை, இத்தனைக்கும் மேலாக கறுப்படித்த முகம்,முள்முள்ளான தாடி என கமல்.
ஆனால் ரஜினியின் தளபதியிலோ, மணிரத்னம், மம்முட்டி என வலுவான துணைகள். ஆர்வத்தை தூண்டும் ஸ்டில்கள். கேசட் வெளியான அன்றே படத்தின் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. அப்போதுதான் குணா அண்ணனே கலங்கிப் போனார்.

அதற்குக் காரணம் இருக்கிறது. “என்னப்பா, எப்பவுமே படம் ரிலீஸாகி கொஞ்சநாள் கழிச்சுத்தான் வசன கேசட் வரும்?, குணாவுக்கு ரிலீஸுக்கு முன்னாடியே வந்திருச்சே?” என ரஜினி ரசிகர்கள் அவரை கலாய்த்து எடுத்து விட்டார்கள். ஒவ்வொரு பாடலுக்கு முன்னாலும் கமல்ஹாசன், இளையராஜா, சந்தான பாரதி ஆகியோர் பாடல் குறித்துப் பேசி இசை மற்றும் பாடல் வரிகளை முடிவு செய்ததையும் பாடல்களுக்கு முன்னால் சேர்த்திருந்ததால் வந்த வினை அது.

ஆனாலும் குணா என்னும் படத்தலைப்புக்கு கீழே இருந்த திரிசூலம் எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது. நிச்சயம் ஆக்‌ஷன் அதிரடி இருக்கும் என. அதையும் ரிலீசுக்கு முன்னால் வந்த கமலின் பேட்டி தகர்த்தெறிந்தது. இந்தப் படத்தை ”மதிகெட்டான் சோலை” என்னும் இடத்தில் எடுத்ததாகவும், குணா என்னும் பெயரைவிட மதிகெட்டான் சோலை பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் மற்றவர்கள் சம்மதிக்க வில்லை என்றும் கூறியிருந்தார்.

வழக்கமாக கமல் படத்திற்கு குணா அண்ணன் தலைமையில் தான் போவோம். ஆனால் நானும் சில நண்பர்களும் முதல் காட்சி தளபதிக்கு சென்றுவிட்டோம். கவுண்டமணியின் காமெடி நல்லாயிருக்கு, பானுபிரியா, குஷ்பூ, பாடல்காட்சிகள் என பிரம்மா பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அடுத்த நாள் அதற்குப் போனொம். அன்றே கவுண்டருக்காக மீண்டும் தாலாட்டு கேட்குதம்மா.

என்னடா இன்னும் நம்ம படம் நீங்க பார்க்கலை போலிருக்கே? என குணா அண்ணன் கேட்டபோது தலைகுனிந்தோம். சரி வாங்கடா செகண்ட் ஷோ போவோம் என கூட்டிப் போனார், இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன்.

குணா அண்ணனுக்கு அந்த நாட்களில் எல்லாம் பயங்கர கோபம் வரும். டேய் குணாவோட சேர்த்து 9 படம் ரிலீஸாயிருக்கு. இதுல தளபதி வேணுமின்னா பரட்டைக்காகவும், பாட்டுக்காகவும் எல்லாத்துக்கும் ஞாபகம் இருக்கும். மத்த படமெல்லாம் மறந்து போயிடும். எழுதி வச்சுக்கங்கடா, இன்னும் 20 வருசம் ஆனாலும் இந்தப் படத்தைப் பத்தி யாராச்சும் பேசிக்கிட்டே இருப்பாங்கடா என்றார். அந்த தீபாவளிக்கு வெளியான விஜய்காந்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், பாக்யராஜின் ருத்ரா, ராமராஜனின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டுக்கு போன தெருக்காரர்கள் குணாவை கண்டு கொள்ளாததில் அவருக்கு அவ்வளவு வருத்தம்.

சில ஆண்டுகள் கழித்து ஒரு கல்லூரியின் வகுப்பறைச் சுவற்றில் “குயிலே எனக்கு கப்ப குடுத்துட்டாங்க குயிலே” என்ற வாசகம் கிறுக்கி இருந்ததைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. அதற்கடுத்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு தியேட்டரில் நடுநிசி 1.30 மணிக்காட்சியாக திரையிடப்பட்ட குணாவுக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு.

நாங்கள் அந்த ஊரில் இருந்து சில ஆண்டுகளில் வேலை காரணமாக வேறு ஊருக்குச் செல்ல நேரிட்டது. குணா அண்ணனுடனான தொடர்பும் குறைந்து போனது. அதன்பின்னர் லோக்கல் டிவி சானல்களில், பேருந்து பயணங்களில், கடந்த சில ஆண்டுகளாக கேடிவியில் குணாவைப் பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள், படத்தை சிலாகிக்கும் போதெல்லாம் குணா அண்ணனின் நினைவு வரும்.

சில முயற்சிகளுக்குப் பின்னர் அவர் தொலைபேசி எண்ணைப் பெற்று பேசியபோது, நாங்கள் வீடு மாறிய சில மாதத்திலேயே திருமணமாகிவிட்டதாகவும், தற்போது கடைத்தெருவில் ஸ்டேசனரி கடை வைத்திருப்பதாகவும் கூறினார். இரண்டு பையன்கள் என்றும் தெரிவித்தார். முன்னர் போன்றே மன்றப்பணிகளில் தீவிரமாக இருப்பதையும் அறிந்து கொண்டேன்.

இப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் ஊரில் இருந்த பள்ளி நண்பர்களின் தொடர்பு வலுப்பெற்ற பின்னர், குணா அண்ணன் தன் எனர்ஜியை இழக்காமல் இன்னும் விஜய், அஜீத் ரசிகர்களுக்குப் போட்டியாக போஸ்டர் அடித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல்களும் வந்து சேர்ந்தது.

சென்ற மாதம், ஒரு திருமணத்திற்காக ஊருக்குப் போயிருந்தேன். குணா அண்ணனை சந்திப்பதற்காகவே முதல் நாளே சென்றேன். ஸ்டேசனரி கடையை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தார். நம்மவர் தான் சொல்லியிருக்காரே, ”கக்கூஸ் கழுவுனாக்கூட பரவாயில்லை, அதுல நாமதான் பெஸ்ட்னு பேரெடுக்கணும்னு”. பின்ன? என்றார்.

இரவு உணவுக்கு அவர் வீட்டிற்குச் சென்றோம். ஹாலை ஒட்டிய அறைக்கதவில் ஆளுயர விஜயின் துப்பாக்கி பட ஸ்டில் ஒட்டப்பட்டிருந்தது.  மகன் ரூம், காலேஜ் பர்ஸ்ட் இயர் என்றார்.

July 28, 2014

கிரிக்கெட்டும் கல்லூரிப் படிப்பும்


கல்லூரிப் படிப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சேசிங் செய்வதைப் போல.

எப்படி பவுலிங்& பீல்டிங் நன்றாக இருந்தால் நாம் சேஸ் செய்யவேண்டிய ரன் குறையுமோ அதுபோல கல்லூரிக்கு ஒழுங்காகச் சென்று பாடங்களைக் கவனித்தால்  நாம் படிக்க வேண்டிய நேரமும் வெகுவாகக் குறையும்.

லைன் அண்ட் லெங்த் – தினமும் கல்லூரிக்கு ஒழுங்கான நேரத்தில், தேவையான புத்தகங்கள், நோட்டு, கருவிகளுடன் செல்வது. எப்படி லைன் அண்ட் லெங்த்தில் பௌலிங் போட்டால் பேட்ஸ்மென்னால் அதிக ரன் அடிக்க முடியாதோ? அதேபோல் நாம் ஒழுங்காகச் சென்றுவிட்டால் நம்மால் படிக்க முடியாத அளவுக்கு ஆசிரியர்களால் பாடம் நடத்த முடியாது.

நோ பால் – கல்லூரிக்குச் செல்லாமல் லீவு போடுவது. ஒரு ரன்னும் கொடுத்து, இன்னொரு பாலும் கொடுப்பதால் நாம் அதிக நேரம் படிக்கும் அளவுக்கு பாடம் குவிந்துவிடும்.

வைடு – கல்லூரி உள்ளே வந்துவிட்டு வகுப்புக்குச் செல்லாமல், கேண்டீன் செல்வது, மதியம் கட் அடித்து விட்டு சினிமா செல்வது. இதனாலும் நாம் படிக்க வேண்டிய நேரம் கூடும்.

பைஸ் – கிளாஸில் உட்கார்ந்து கொண்டு சுத்தமாக கவனிக்காமல் கற்பனையில் மிதப்பது.

கேட்ச் மிஸ் – எப்படி ஒரு பேட்ஸ்மேனுக்கு காட்ச்சை விட்டால் அவர் வீறு கொண்டு எழுந்து அதிக ரன்னை குவிப்பாரோ அதுபோல, சில ப்ராப்ளமாட்டிக் சப்ஜெக்ட்களின் அடிப்படைகளை சொல்லித்தரும் போது, கவனிக்காமல் விட்டுவிட்டால் படித்துப் புரியவேண்டியது மலை போல குவிந்துவிடும்.

ரன் அவுட்/ஸ்டம்பிங் – சரியான நேரத்தில் பந்தை எறிந்து அவுட்டாக்குவது போல அசைன்மெண்டுகள்/செமினார்களை குறித்த நேரத்தில் முடித்துவிடவேண்டும்.

கிரவுண்ட் பீல்டிங் – இது சிறப்பாக இருந்தால் எப்படி நம்மால் 30-40 ரன்களை எதிரணியின் ஸ்கோரில் இருந்து குறைத்து விட முடியுமோ, அது போல கிளாஸில் ஆக்டிவ்வாக கவனித்துக் கொண்டேயிருந்தால் நாம் மாலையில் வீட்டில் படிக்க வேண்டியது மிகக் குறைந்து விடும்.

நாம் படிக்கும் போது (நம்ம பேட்டிங்)

ரன்ரேட் - கடைசி 10 ஓவரில் அடித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பே கூடாது. கடைசி நேரத்தில் விக்கெட் விழுந்தால் டீம் கொலாப்ஸ் ஆவதைப் போல காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவுகள் வந்தால் நாம் காலி. எனவே சீராக ரன்ரேட் மெயிண்டெயின் செய்வதைப் போல தினமும் படிக்க வேண்டும்.

ஸ்ட்ரைக் பவுலர்கள் – எல்லா டீம்களிலும் ஸ்ட்ரைக் பவுலர்கள் இருப்பது போல எல்லா செமெஸ்டரிலும் சில கில்லர் சப்ஜெக்ட்கள் இருக்கும். அதைக் கவனமாகப் படிக்க வேண்டும்.

ஆவரேஜ் பவுலர்கள் – இவர்கள் ஓவரில்தான் நாம் ரன்களைக் குவிக்க முடியும், அதுபோல இவற்றை நன்கு படித்து சிஜிபிஏ வை ஏற்றிக் கொள்ள வேண்டும்.

பார்ட் டைம் பவுலர்கள் – இவர்கள் வீச்சில் ஒரு பந்தையும் வீணாக்கக் கூடாது. இது பிராக்டிக்கலை போன்றது. எஸ் கிரேடுக்கு குறைந்து விடக் கூடாது.

கேட்ச் – நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் போது தேவையில்லாத பாலை தூக்கி அடித்து அவுட்டாவது போல, எதிர் பாலிடம் மயங்கி படிக்காமல் விட்டு விடுவது.

ரன் அவுட் – தேவையில்லாத ரன்னுக்கு ஓடுகிறேன் பேர்வழி, என்று அவுட்டாவதைப் போல, சக மாணவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபட்டு படிக்கும் நேரம் குறைந்து போவது.

ஹிட் விக்கெட் – தேர்வுக்கு நீண்ட நேரம் கண்விழித்துப் படித்து காலை எக்ஸாம் ஹாலில் தூங்கி விழுந்து கோட்டை விடுவது.

மெய்டன் ஓவர் – தீபாவளி, பொங்கல், பூஜா ஹாலிடேஸ் என பல்க்காக லீவு வரும் போது படிக்காமல் விட்டு விடுவது. இதனால் நாம் படிக்க வேண்டிய ரன்ரேட் எகிறிவிடும்.

சிங்கிள்ஸ் – சேசிங்கில் முக்கியமே சிங்கிள்ஸ்தான். தினமும் குறைந்த அளவு நேரமாவது புத்தகத்தை திறப்பது, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது போல இரண்டு மூன்று சம்ஜெக்ட்களை தொட்டுப் பார்த்து விடவேண்டும்.

பவுண்டரிகள் – வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ச்சியாக இரண்டு, மூன்று மணிநேரம் தொடர்ந்து படிப்பது.

பவர்பிளே – தேர்வுக்கு முந்தைய ஸ்டடி ஹாலிடேஸ். விக்கெட் இருந்தால் தான் இதில் அதிரடியாக ஆடமுடியும். அதுபோல முன்னர் இருந்தே படித்து சப்ஜெக்ட்களின் அடிப்படைகளைத் தெரிந்திருந்தால் விரைவாக எல்லாவற்றையும் படித்து முடித்து விட முடியும்.


இன்னும் சில நாட்களில் கல்லூரிகளில் கால் பதிக்கப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். 

July 24, 2014

மானா மூனா கூட்டம்

பழுத்த வேலை நாளான திங்கட் கிழமை காலை 10.30 மணி அளவில் மட்டுமே சலூனுக்குச் சென்று முடி வெட்டுபவர்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்தக் காலத்தில் பெற்ற தாய் தந்தை இறந்தாலே மொட்டையடிக்க யோசிக்கும் மகன்களுக்கு மத்தியில் அங்காளி பங்காளிகளோடு சேர்ந்து மொட்டையடிக்கும் பாசக்கார உறவுகளைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ட்ராபிக் கான்ஸ்டபிளின் வாடையே இல்லாத சாதாரண முட்டுச்சந்தில் டிவிஎஸ் 50யில் கூட ஹெல்மெட் போட்டு ஓட்டுபவர்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இல்லையென்றால், இது உங்களுக்கானதுதான். மானா மூனா கூட்டம் என்று சொந்தபந்தங்களால் அழைக்கப்படுபடும்  கூட்டத்தைப் பற்றிய பதிவுதான் இது.

ம.முத்துச்சாமி என்பவர்தான் இந்த கூட்டத்தின் எள்ளுத்தாத்தா. அவருடன் பிறந்த அண்ணன் தம்பிகள் எல்லோருமே நல்ல முடிவளத்துடன் இருக்க இவருடைய ஜீனில் மட்டும் ஏதோ  மியூட்டேசன் நடந்து இளவயதிலேயே முடிகொட்டத்துவங்கியது. இளவயது என்றால் மிக இளவயதிலேயே. அந்த சாபம் அவருடன் நின்றுவிடாமல், அவர் பெற்ற பிள்ளைகளின்  மூலம் ஐந்து தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது.

15 வயது ஆகும்போது, உச்சி மண்டையில் உள்ள சுழியில் இருந்து அவர்களுக்கு முடி கொட்ட ஆரம்பிக்கும். கன்னியின் தொப்புளைப் போல சிறு வட்டமாக இருக்கும் அந்த சுழி, நாலா பக்கமும் மெல்ல விரிய ஆரம்பிக்கும். ஒரு தேர்ந்த சமையல்காரர் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் போட்டு, கையை எடுக்காமல், சென்ற வழியிலேயே செல்லாமல், கரண்டியால் அழகான தோசை ஆக்குவாரே அதுபோல முடி சீராக கொட்டிக்கொண்டே போகும்.

இது தரைப்படைத் தாக்குதல் என்றால், முன் நெற்றி வகிடு வழியாக முடி கொட்டிக்கொண்டே செல்லும் விமானப்படைத் தாக்குதலும் உண்டு. 17 வயதில் எல்லாம் இரண்டு வகிடின் வழியாகவும் முடி கொட்டிக்கொண்டே சென்று தோசைவட்டத்துடன் இணையத் துடிக்கும். இரண்டு புருவங்களுக்கு மத்தியின் நேராக நெற்றியில் இருக்கும் முடிக்கொத்து மட்டுமே 21 வயது வரை தாக்குப் பிடிக்கும். அதை மூன்றாகப் பிரித்து,  மூன்று புறமும் பரப்பி முடி இருப்பது போல் டகல்பாஜி வேலை செய்து கொள்வார்கள். அதுவும் 25 வயதுக்கப்புறம் பெப்பே காட்டிவிடும்.

மானா மூனா கூட்ட ஆண்வாரிசுகளுக்கு 25 வயது பூர்த்தி ஆகும் போது, காதின் மேல் ஒரு அங்குலம் மட்டுமே முடி இருக்கும். காதை தாண்டிய உடன், பானுப்பிரியா, ரம்யா கிருஷ்ணன், சிம்ரன் ஆகியோர் இடையழகிகளாக இருந்த இளவயதில் லோஹிப் கட்டும் போது, ஜிலீரென ஒரு அழகு வளைவாக சேலை இறங்கி, தொப்புள் தரிசனம் கிட்டுமே அதே மாதிரி வளைவில் பின் மண்டையின் நடுப்புறத்தை நோக்கி முடி பகீரென இறங்கும். பின் நடுப்புறத்தில் இருந்து மறுபக்க காதை நோக்கி அதே வளைவில் மேலேறும்.

பொம்பளைப் புள்ளைய பெத்து வச்சிருக்கோம், காலா காலத்துல ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துடணும்னு வயத்துல நெருப்பக் கட்டிட்டி இருக்கோம்னு ஒரு காலத்தில் பெற்றோர்கள் சொல்வார்களே. அதுபோல மானாமூனா கூட்டத்தாரும் 22 வயசுக்குள்ள எப்படியாச்சும் மகன்களுக்கு  கல்யாணம் கட்டி வச்சுரணுமே எனத் துடிப்பார்கள்.
ஆனால் ஒரு வகையில் இந்த சாபம் இந்தக்கூட்ட ஆண்வாரிசுகளுக்கு ஒரு மோட்டிவேஷனாக மாறியது. பிளஸ் 2 வில் படிச்சதப் போலவே காலேஜிலும் படிச்சா நம்ம வாழ்க்கை எங்கேயோ போயிரும்ணு பெரியவங்க சொல்லுவாங்க. மானா மூனா கூட்டம் பிளஸ் 2 வரைக்கும் சரியாப் படிக்காட்டியும், காலேஜ்ல நுழைஞ்ச உடனே, வெறித்தனமா படிக்க ஆரம்பிப்பாங்க. 21 வயசுல எப்படியும் ஒரு வேலைக்குப் போயிடணும், தலை சஹாரா ஆகுறதுக்குள்ள, சிம்லாக்கு ஹனிமூன் போயிடணும்னு துடிப்பாய்ங்க.

ஒருத்தனுக்கு சரியாப் படிக்காம 25 வயசுலதான் வேலை கிடச்சது. அவன் பொண்ணு கிடைக்காம அலைஞ்சு, ஒரு பால்வாடி டீச்சருக்கு ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்பட்டான். அதுல இருந்து உஷாராயிட்டாங்க. இதெல்லாம் எப்படி டீடெயிலாத் தெரியும்னு கேக்குறீங்களா? நானும் அந்தக் கூட்டத்துல ஒருத்தந்தேன்.

ஒரு பெரியப்பா பையனுக்கு 23 வயசாச்சு. தரகர் கேக்குறாரு, தம்பி பொண்ணு சிவப்பா வேணுமான்னு? யானைச் சிகப்பா இருந்தாக்கூட சரிதான். ஏன் யானையா இருந்தா கூடச் சரிதான். ஆனா அவங்க வீட்டில அப்பா, அண்ணன் தம்பி எல்லாம் கரடியாட்டம் இருக்கணும்னான். ஏண்டான்னா?, தலை, உடம்பு பூராம் முடியா இருக்கிற ஜீன் உள்ள குடும்பப் பொண்ணா இருந்தா, என் பிள்ளையாச்சும் வழுக்கை இல்லாம பிறக்கட்டும்ணான். கரடி மாதிரி இருக்கிற குடும்பம் இல்ல, கரடியவே நீ கட்டுனாலும் பையன் சொட்டையாத்தான் போவான்னு தரகர் பார்வை சொல்லாம சொல்லுச்சு.

ஆனாலும் இந்தப் பொண்ணுங்களுக்கு நுண்ணறிவு அதிகம்தான். பொண்ணு பார்க்கப்போனா, கூட வர்ற ஆளுகள வச்சு, பையன் முக அமைப்ப வச்சு இவன் சீக்கிரம் சொட்டையாயிருவான்னு ரிஜக்ட் பண்ணிடுறாங்க. அவ்வளவு ஏன்? காலேஜ் படிக்கும் போது, பாவமேன்னு ஒரு லுக்கு கூட விடுறதுல்ல. அதுமட்டுமில்லாம “ஆகாயச் சூரியனை உச்சந்தலையில் சூடியவன்னு” நக்கல் பாட்டு வேற.

ஆனா இந்தப் பசங்களுக்கு அவ்வளவு பத்தாது. சில வருஷத்துக்கு முன்னாடி எங்க தெருவுக்கு ஒரு பேங்க் மேனேஜர் குடி வந்தாரு. அவங்க நிச்சயம் சிண்டெக்ஸ் கம்பெனியோட சொந்தமாவோ அல்லது பங்குதாரராகவோ இருக்கணும். மேனேஜர் சம்சாரமும், அவங்களோட ரெண்டு மூத்த பொண்ணுங்களும் அப்படி ஒரு சைஸூ. மூணாவது பொண்ணு மட்டும் ஒல்லியா இருக்கும். அந்த ஒல்லிக்கு நெறையா கில்லிங்க, ஜல்லிங்க புரபோஸ் பண்ணினாங்க. அவங்க குடிவந்த ஒரு மாசத்துல லோக்கல் கிரிக்கெட் டோர்ணமெண்ட் பைனல். ரெண்டு மணிக்கு மேட்ச். ரோலர்லாம் போட்டு பிட்ச்ச ஒரு மாதிரி செட் பண்ணி இருந்தாங்க. ஒரு மணி வாக்குல லேசான தூறல். விழாக்கமிட்டி பரபரபாயிட்டாங்க.

ஏதாச்சும் லாரி ஷெட்டுல போயி, தார்ப்பாய் கிடைச்சா தூக்கிட்டு வாங்கடா, பிட்ச கவர் பண்ணனும்னு ஆர்டர் போடுறாய்ங்க. அப்ப எங்க தெருக்காரன்,  பாங்க் மேனெஜர் வீட்டுல போயி  நாலு நைட்டி வாங்கிட்டு வாங்கடா, மொத்த கிரவுண்டையுமே கவர் பண்ணிடலாம்னான். ஆனாலும் அந்த ஒல்லி பொண்ணு மேல யாருக்கும் கிரேஸ் போகலை.
ஆனா எங்களுக்குத் தெரியும்டா வம்சக்கூறு. நாலு வருசத்துல அந்த ஒல்லிக்கு பாட்டியாலா பேண்டே லெக்கின்ஸ் ஆயிடும்னு மானா மூனா கூட்டம் மட்டும் சிரிச்சுக்கிட்டோம்.

ஆனா எங்க கூட்டத்தப் பார்த்து ஊர் சிரிக்கிறது எங்களுக்கு மரத்துப்போச்சு. பின்னாடி அசிங்கமா கசகசன்னு தொங்குற முடிய வெட்டணும்னா கூட யாருமே இல்லாத நேரத்துல சலூனுக்குப் போக வேண்டியிருக்கு.

இப்படித்தான் எங நெருங்கிய சொந்தக்காரர் கல்யாணத்துல, மண்டப மானேஜர், இந்த தலை பால்டா இருக்குமே அவர்கிட்டதாங்க ஸ்டோர்  ரூம் சாவிய குடுத்தேன் என்று சொல்ல, எங்கள் மாமா “நாமக்கல் முட்டையில கூட ஒரு முட்டையை தனியா கண்டுபிடிச்சிடலாம், இந்த சொட்டைங்க கூட்டத்துல கண்டுபிடிக்கிறது கஷ்டம்னு” பஞ்ச் அடிச்சாரு.
மொதல்ல இவிங்க தலைல எருவா மேட்டின தேச்சு பார்க்கணும்டா, முடி வளர்ந்திருச்சுன்னா கந்து வட்டிக்கு கடன் வாங்கி கூட அதை வாங்கலாம்டா என வியாக்கியானம் செய்யும் நண்பர்கள் வேறு.

பொதுவா மத்த வீடுகள்ல இருக்குற சண்டையோட சேர்த்து எங்க வீடுகள்ல இன்னொரு சண்டையும் நடக்கும். வழுக்கைய மறைச்சு ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு மருமகள்கள்ளாம் குமுறுவாங்க.  என் மனைவி கூட இது போர்ஜரி கேஸில் வருமா என அவர்கள் வீட்டாருடன் சேர்ந்து சில ஆண்டுகள் ஆலோசனை நடத்திவந்தார்.  கையில் காலில் விழுந்து, கெஞ்சிக் கதறி என்னை விட சிறப்பான அடிமை உனக்கு கிடைக்கமாட்டான் என்பதை புரிய வைத்து காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் கூட வெளியிடங்களுக்குச் கூட்டிச்செல்ல வேண்டுமென்றால், விக் வைச்சுக்கிட்டு வாங்க என்கிறார்.

என்னோட இன்னொரு சித்தப்பா பெரிய உஷார் பார்ட்டி. தன் மகனுக்கு இது மாதிரி நேர்ந்திடக்கூடாதுன்னு ஒரு ட்ரிக் பண்ணுனார். அவன் பிறந்ததுல இருந்து, கோயில் கோயிலா போயி மொட்டை அடிக்க ஆரம்பிச்சார். ஒண்ணு விட்ட பாட்டிக்கு ஒத்த தலைவலின்னாக் கூட, தன் மகனுக்கு மொட்டை அடிப்பதாய் நேர்ந்து கொள்வார். தினமும் அவனுக்கு நெல்லிக்காய் ஜூஸ். நல்ல சுத்தமான கொழும்பு தேங்காய் எண்ணெய் வாங்கி, அதில் முடி வளர உதவும் பல மூலிகைகளை காய்ச்சி ஊற்றி, அந்த எண்ணையை தினமும் அவன் தலையில் தேய்த்து வந்தார். அந்த எண்ணெயின் வீரியத்தால் அந்த பாட்டிலுக்கு கூட முடி முளைத்ததாக கேள்வி.

அவனுக்கு 15 வயது ஆனபோது சித்தப்பா வீடு கட்டத்தொடங்கி இருந்தார். பால் காய்ச்சும்வரை மொட்டை அடிக்கக்கூடாது என்று ஒரு சாஸ்திரத்தைக் கேள்விப்பட்டு அவனுக்கு தற்காலிகமாக மொட்டை அடிப்பதை நிறுத்தியிருந்தார். இரண்டு மாதத்தில் அவனுக்கு முடி கருகருவென வளர்ந்து வெயிலுக்கு அரிக்கத் தொடங்கியது. அதனால் முதன் முறையாக  அவன் சலூனுக்கு போகவேண்டிய நிலை ஏற்பட்டது.  
ஒரு வழியாக பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்தார். பையனும் பத்தாம் வகுப்பில் பள்ளி முதல் மாணவனாக தேறியிருந்தான். ரெட்டிப்பு சந்தோஷத்தில் மிதந்தவர், மானா மூனா கூட்டத்தின் முக்கிய சம்பிரதாயத்தை மறந்து விட்டார். எல்லோருமே பத்தாம் வகுப்பு  முடிக்கும் போது, எங்களுக்கும் ஒரு காலத்தில் முடி இருந்தது என்பதற்கு ஆதாரமாக ஸ்டியோவுக்குச் சென்று போட்டோ எடுத்து வைத்துக் கொள்வோம். அதைச் செய்யாமல் விட்டு விட்டார்.

சில நாட்கள் கழித்து, மாடியில் நின்று காற்று வாங்கிக்கொண்டிருக்கும் போது, அவர் பையன் சைக்கிளில் வந்து வாசலில் இறங்குவதைப் பார்த்தேன். அவன் உச்சந்தலையில் மானா மூனா கூட்டத்தின் உறுப்பினர் படிவம் பிரசுரமாகத் தொடங்கி இருந்தது.



July 14, 2014

ராமராஜன் எழுச்சியும் வீழ்ச்சியும்

1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நாட்டியால தான் போட்டிருக்கான். நாலு தடவ பார்த்துட்டேன். சலிக்கவே இல்லை. இன்னும் கொஞ்சம் நேரம் பார்ப்பேன். இதெல்லாம் விக்காட்டி உன்கிட்ட கொடுத்துடுறேன். ஆறு மணி ஆட்டத்துக்கு போகணும்”  அந்தப் பெண் குறிப்பிட்ட படத்தை நீங்கள் யூகித்திருக்கலாம். கரகாட்டக்காரனேதான்.  

1991 ஆன் ஆண்டு. கரகாட்டக்காரன் ஓராண்டு ஓடிய காம்ப்ளக்ஸில் இருக்கும் நர்த்தனா தியேட்டரில் ராஜ்கிரண் நடித்த ”என் ராசாவின் மனசிலே” பார்ப்பதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அது ஒரு முகூர்த்த நாள். நல்ல கூட்டம். பேருந்து முழுக்க கிராம மனிதர்கள். அதில் ஒருவர், அருகிலிருந்த நண்பரிடம், ராசாவின் மனசிலே பாட்டுல்லாம் நல்லாயிருக்கு போகலாமா? என கேட்க, ராமராஜன் படமா? மூஞ்சிய மாத்தாம ஞொய ஞொயன்னு பேசிக்கிட்டு இருப்பான். எனக்குப் பிடிக்காது என்றார். ஏய் இல்லப்பா இது இன்னொரு ஆளு நடிச்சிருக்கான் என்று அவரின் நண்பர் விளக்க, எனக்கு மிக ஆச்சரியம்.

இரண்டே ஆண்டுகளில்  எப்படி இப்படி ஒரு மாற்றம்.? (கி)ராமராஜன் என முண்ணனி பத்திரிக்கைகளால் சிலாகிக்கப்பட்ட ஒருவர் இரண்டாண்டுகளில் ஒதுக்கப்பட என்ன காரணம்?

சரியாக சொல்வதென்றால், ஐந்து வருடங்கள் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் முதலாளிகள் அனைத்துக்கும் மேலாக பி&சி என்று அப்போது அழைக்கப்பட்ட சிறுநகர, கிராமிய மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒருவர், ஆறாம் ஆண்டில் விரும்பப்படாமல் போக என்ன காரணம்?

பாரதிராஜா ஓரளவு யதார்த்த கிராமத்தை சினிமாவுக்குள் 77ல் கொண்டு வந்தார். அதன்பின்னர் பல கிராமக்கதைகள் வந்தாலும், கிராமத்து இளைஞர்கள் தங்களை ஐடெண்டிஃபை செய்து கொள்ளும் அளவுக்கு ஒரு கதையோ, நாயகனோ வரவில்லை. ரஜினி,கமல், விஜயகாந்த் ஆகியோர் சில கிராமிய கதைகளில் அப்போது நடித்தாலும், அவர்கள் நகரத்துக்கதைகளிலேயே அதிகம் நடித்ததால் எளிய கிராமத்து இளைஞர்களை அவர்கள் ஈர்க்கவில்லை.

இந்நிலையில், ராம நாராயணனிடம் 30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த ராமராஜன், 85ஆம் ஆண்டு மண்ணுக்கேத்த பொண்ணு படத்தை இயக்கினார். படம் வெற்றி. அதன் பின்னர் ஹலோ யார் பேசுறது? மருதாணி ஆகிய படங்களை இயக்கினார். இப்படங்களை இயக்கும்போது, பாரதிராஜாவின் கண்ணில் பட்டிருந்தார். இயக்குநர் அழகப்பன், தான் இயக்கவிருந்த கிராமத்துக் கதைக்காக நாயகன் தேடிக்கொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட பாரதிராஜா, உங்க ஆபிஸ்க்கு அடிக்கடி வருவாரே? அவர் இந்த கதைக்கு செட்டாவார் என்றார். அவர் குறிப்பிட்டது ராமராஜனைத்தான்.  இப்படி வாய்ப்புக் கிடைத்து, ராமராஜன் நடித்து வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படம் 100 நாட்கள் ஓடி நல்ல வெற்றி பெற்றது.

அந்நேரத்தில் ராமராஜன், அடுத்த ஐந்து ஆண்டுகள் தான் ஹீரோவாக கொடிகட்டி பறப்போம் என்றோ, பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவோம் என்றோ நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். அடுத்த ஆண்டு வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் பெரிய வெற்றி. பின்னர் என்னை விட்டு போகாதே, என்னப் பெத்த ராசா என வெற்றிப் படங்கள். பொங்கி வரும் காவேரி, எங்க ஊரு காவக்காரன் என மீடியம் வெற்றிப்படங்கள். உச்சமாக கரகாட்டக்காரன்.

ராமராஜன் ஏற்று நடித்த வேடங்கள் எல்லாமே எளிய, யதார்த்த, பாஸிட்டிவ் அப்ரோச் உடைய, குடும்பப் பாசம் கொண்ட கேரக்டர்களே. அந்த கேரக்டருடன் கிராம இளைஞர்கள் ஒன்றிப்போனதே அவரின் அப்போதைய வெற்றிக்கு காரணமானது.

ராமராஜன் கதாநாயகனாக அறிமுகமான காலத்தில் தான் மௌனராகம், நாயகன் போன்ற படங்கள் வந்தன. திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படங்களும் வந்தன. பாரதிராஜாவின் கிராமியப் படங்களும் வந்து கொண்டிருந்தன. இருந்தாலும் எளிய, பொழுது போக்கு அம்சம் கொண்ட கிராமத்துப் படங்களுக்கு ஓரிடம் இருந்தது. அதில் ராமராஜன் சரியாகப் பொருந்திக் கொண்டார். மேலும் அப்போது சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் தொலைக்காட்சி என்பது ஆடம்பரப் பொருளாக இருந்த நேரம். முக்கிய பொழுது போக்கு என்பது சினிமாதான். குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்தால் யாருக்கும் தர்ம சங்கடம் கொடுக்காமலும், போரடிக்கவும் செய்யாமல் இருந்தால் படம் ஓடிவிடும் என்ற நிலை. ராமராஜன் தன் படங்களில் தாய்க்கு அன்பானவராகவும், பொறுப்பானவராகவும், பெண்களிடம் கண்ணியம் காப்பவராகவும், தீய பழக்கங்கள் இல்லாதவராகவும் நடித்தது குடும்பத்தோடு படம் பார்ப்பவர்களை கவர்ந்தது.

இளையராஜா எப்படியும் நல்ல பாடல்களைக் கொடுத்து விடுவார். கவுண்டமணி அவர் பங்கை செய்து விடுவார். மையக் கதை மட்டும் சுமாராக இருந்து விட்டால் போதும் படம் நஷ்டமில்லாமல் கரை சேர்ந்து விடும். கங்கை அமரன், டி கே போஸ், ரங்கராஜன், டி பி கஜேந்திரன் போன்ற ஓரளவு கதை சொல்லும் திறமையுள்ள இயக்குநர்களுடன் படங்கள் செய்ததால் எப்படியும் படம் மோசமாக போய் விடாது. எனவே ராமராஜனுக்கு என தனியாக ஒரு மார்க்கட் உருவானது.

ஆனாலும் ராமராஜன் வக்கீலாக, துப்பறியும் போலிஸாக, நிலபிரபுத்துவத்தை எதிர்க்கும் புரட்சியாளனாக நடித்த படங்கள் எல்லாம் சுத்தமாக எடுபடவில்லை. அவர் கோட் சூட் அணிந்தாலோ, கொள்கை பேசினாலோ யாருக்கும் பிடிக்கவில்லை. சாதாரண கிராமத்து வாலிபன் வேடம் மட்டுமே அவர்க்கு கைகொடுத்தது.

ராமராஜனின் 100 நாள் படங்கள் என்று எடுத்துக் கொண்டால் கை விரல்களுக்குள் எண்ணிக்கை அடங்கிவிடும். ஆனால் பெரும்பாலான படங்கள் 50 நாள் படங்கள், மற்றவை நான்கு வாரப் படங்கள். ராமராஜன் திரைப்படங்களின் தயாரிப்புச் செலவு என எடுத்துக் கொண்டால் அப்போது மிகவும் குறைவு. பெரும்பாலும் இளையராஜாவின் இசை. பத்துக்கு மிகாத குரூப் டான்சர்கள், எதையும் தவறிக்கூட உடைத்து விடாத ஒன்றிரண்டு சண்டைக் காட்சிகள், அதிக சம்பளம் வாங்காத கேரக்டர் ஆர்டிஸ்ட்கள், ரேகா, கவுதமி, கனகா என அதிகம் டிமாண்ட் செய்யாத நாயகிகள், கண்ணைப் பறிக்கும் நிறத்தில் நாலைந்து மீட்டர் சட்டைத்துணி, ரோஸ் பவுடர், உதட்டுச் சாயம். கவுண்டமணி செந்தில் ஆகியோர் அப்போது உச்சத்தில் இருந்ததால் அவர்களுக்கு  மட்டும் நாள் கணக்கில் சம்பளம். 
தயாரிப்பு செலவு குறைவு என்பதால் நாலுவாரப் படங்கள் கூட எல்லோருக்கும் லாபம் கொடுத்தன. அதனால் தான் தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் அவரை மொய்த்தனர்.

ஆனால் 90கள் ஆரம்பமான உடனேயே எதுவெல்லாம் அவரின் பலமாகக் கருதப் பட்டதோ, அதெல்லாம் பலவீனமாகியது. அதனால்தான் ஒரே ஆண்டில் உச்சத்தில் இருந்து, தரைக்கு இறங்கினார்.   

90களுக்குப் பின்னர் பெரும்பாலான ஏன் எல்லாப் படங்களுமே சினிமாஸ்கோப்பில் தான் திரையிடப்பட்டன. பாலு மகேந்திரா போன்ற சிலர் மட்டும்தான் விடாப்பிடியாக 35 எம் எம் மிலேயே படமாக்கினர்.
80களின் கடைசியில் வந்த புது இயக்குநர்கள் பலர் பாடல் காட்சிகள் படமாக்குவதிலும், சண்டைக் காட்சிகளிலும் அதீத கவனம் செலுத்தினர். பாடல் காட்சிகள் நல்ல பொருட்செலவில், வேகமான நடன அசைவுகளோடு படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிகளும் உக்கிரமாக, அடி எங்கே நம் மீது விழுந்து விடுமோ என்னும் அளவுக்கு படமாக்கப்பட்டது. கவர்ச்சியான கதாநாயகிகளும் அவர்களின்  நடனமும் பார்வையாளரைக் கவரும் அம்சமாக மாறியது.

ராமராஜனும் ஒரு கதாநாயகியும் மட்டும் சினிமாஸ்கோப் திரையில் நடந்து கொண்டே பாடல் காட்சியில் தோன்றுவதை 90களின் இளைஞர்கள் எப்படி பார்ப்பார்கள்? பிரபுதேவா, ராஜு சுந்தரம் பாணி ஆட்டம் ராமராஜனுக்கு எப்படி ஒத்து வரும்? சரத்குமார், ராஜ்கிரண் என முரட்டு அடி அடிக்கும் நாயகர்கள் மத்தியில் ராமராஜனுக்கு என்ன இடம் இருக்கும்? காட்சியின் தன்மைக்கேற்ற கேமரா கோணங்கள்,ஒளிப்பதிவு தரம் எல்லாமே 80களின் இறுதியில்   முன்னேறியது. ராமராஜன் படங்களுக்கு கேமராவை ஒரு இடத்தில் பிக்ஸ் செய்திருந்தால் போதும். வேறு வேலை இருக்காது. அது பார்வையாளனுக்கு சலிப்பூட்டத்துவங்கியது.

மற்ற இடங்களில் எப்படியோ? ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வேகம் கூடிவருவதை உணரலாம். மதுரையில் இருந்து சென்னைக்கு பயணநேரம் குறைந்து கொண்டே வருகிறது. நாலு சக்கர, இரு சக்கர வாகனங்களின் வேகம், மனிதர்களின் நடை வேகம், பாடல்களிலும் வேகமான பீட்டுகள் ஏன் சராசரி சாப்பிடும் நேரம் கூட குறைந்து வருகிறது, மக்கள் வேகமாக சாப்பிட பழகிக் கொண்டார்கள்.
திரைக்கதையிலும் அப்படித்தான். பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைக்கதையின் வேகம், காட்சிகள் மாறும் வேகம் அதிகரித்து வருகிறது. ஆற அமர துவங்கி இடைவேளையின் போது ஒரு முடிச்சு விழுந்து, பின் அது மெல்ல மெல்ல இறுக்கமாகிக் கொண்டே போய், கடைசியில் அவிழ்வதையெல்லாம் மக்கள் பொறுமையாக பார்க்க தயாரில்லை.
ராமராஜனின் கதையோட்டப் பாணியானது, தேவர் பிலிம்ஸ் தயாரித்த எம்ஜியார் படங்களின் கதையோட்டத்தை ஒட்டியிருக்கும். நல்ல குணமுடைய நாயகனுக்கு வரும் ஒரு பிரச்சினை, அதன் தீர்வு அவ்வளவுதான். குறைந்த செலவு, காதில் வார்த்தை விழுகும் பாடல், எளிய நகைச்சுவை,பார்க்கச் சகிக்கும் வகையில் ஒரு நாயகி. இது 70,80 களில் வெற்றிக்கான பார்முலா. ஆனால் 90களுக்கு?
பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அட என்று சொல்லி நிமிரும் படி திரைக்கதை இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். தொடர்ச்சியாக வெளிவந்த நல்ல கதை அம்சம், கமர்சியல் அம்சம் கொண்ட திரைப்படங்களால் மக்களின் ரசனையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த சிறு முன்னேற்றத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ராமராஜன் படங்கள் இல்லையென்பதும் முக்கிய காரணம்.

இதேபோலத்தான் மக்களின் ரசனையில் சிறு முன்னேற்றம் ஏற்படும் போதெல்லாம் அதற்கு ஈடு கொடுக்க முடியாத இயக்குநர்கள், நடிகர்கள் பின் தங்கி விடுவார்கள். சமாளித்து ஈடு கொடுப்பவர்கள் அடுத்த ரசனை மாற்றம் வரும் வரையில் தாக்குப்பிடிப்பார்கள். மக்களின் எதிர்பார்ப்பைவிட அதிக தகுதி கொண்டிருப்பவர்களே காலத்தை வென்று தாக்குப்பிடிப்பார்கள்.

ராமராஜனின் ஏழெட்டு படங்கள் மட்டுமே அப்போதைய வெற்றி எல்லையான 100 நாட்களை தாண்டியவை. கடைசிப் வெற்றிப்படம் கொடுத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் இன்றும் எவ்விதத்திலாவது உச்சரிக்கப்படுவதாக ராமராஜனின் பெயர் இருக்கிறது. அரசியல் பிரச்சாரம் செய்கிறார். அடுத்து ஒரு படம் வரும் என்று கூட சொல்கிறார்கள். அந்த ஐந்து ஆண்டுகளில் அவர் வசீகரித்து வைத்திருந்த கூட்டம் இப்போது வெகுவாக சிறுத்திருந்தாலும் அவர் படத்தை பார்க்க வருகிறது.


இப்போது சிவகார்த்திகேயன் கூட அப்படித்தான். சராசரி இளைஞனுக்காக உருவான காலியிடத்தில் நடித்து வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறார். ரசனை மாற்றம் ஏற்படும்போது, தன்னை மேம்படுத்திக்கொள்ளாவிட்டால் இன்னொரு ராமராஜன் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.





July 06, 2014

வத்தக்குழம்பான கறிக்குழம்பு

சென்ற வாரம், வழக்கமாக காய்கறி வாங்கும் கடையில் வாரத்தேவைக்கானவற்றை வாங்கிவிட்டு, கொசுறாக அவர்கள் கொடுக்கும் கருவேப்பிலை-கொத்தமல்லிக்காக பையை அகலமாகத் திறந்தபோது, அதில் கருவேப்பிலை மட்டும் விழுந்ததைப் பார்த்து, மல்லி? என கடைக்காரரிடம் கேட்டேன்.

கிலோ 200 ரூபாய். நாலு தழை பத்து ரூபாய் ஆகுது. அதான் போடலை என்றார். வேறுவழியில்லாமல் 10 ரூபாய் கொடுத்து மல்லி வாங்கும் போது, 25 வருடம் மனம் பின்னால் சென்றது. அப்போது ஆட்டுக்கறியின் விலை கிலோ 24 ரூபாய். 10 ரூபாய் கொண்டு சென்றால் கால்கிலோ கறி, ஒரு தேங்காய்,காய்கறிகள் என பை நிறைய வாங்கிக்கொண்டு வந்து விடலாம். ,அவ்வளவு ஏன்? பத்தாண்டுகள் முன்னர் கூட வெறும் 50 ரூபாய்க்கு பை நிறைய காய்கறி சென்னை வேளச்சேரியில் கிடைத்தது.

அதுக்கேத்தமாதிரி தான் சம்பளம் கூடியிருக்கே? எனச் சொல்லலாம். மேலோட்டமாகப் பார்த்தால் இது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் எப்படி குறைவாக மதிப்பிட்டாலும் ஒரு 30% சதவிகிதம் பேர், இந்த விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வரும் நாட்களில் இந்த சதவிகிதம் கூட வாய்ப்பிருக்கிறது.

நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் போன்ற அத்தியாவசிய காய்கறிகளுடன் கத்தரிக்காய், வாழைக்காய், முட்டை கோஸ் போன்ற பெரும்பாலோனோருக்கு பிடிக்காத காய்கறிகளை மட்டும் வாங்கினால் கூட மாதம் ஒன்றுக்கு ரூ 1000 முதல் 1200 வரை ஆகும். பட்டர்பீன்ஸ், சோயா பீன்ஸ், பச்சை பட்டாணி,காலிபிளவர் என வெரைட்டியாக வாங்கினால் 1500 வரை ஆகும்.
அசைவம் சாப்பிடுகிறவர்கள் என்றால் வாரம் ஒருமுறை குறைந்தபட்சமாக கால் கிலோ வாங்கினாலும், மாதம் 500 ரூபாய் வந்துவிடும். இதில் பழங்கள் வாங்கி சாப்பிட்டால் காய்கறி பட்ஜெட் 4000த்தை தொட்டு விடும். (கால் கிலோ நாவல் பழம் – 50 ரூபாய், கால் கிலோ கொடுக்காப்புளி – 50 ரூபாய், வாழைப்பழம் ஒன்று 4 ரூபாய் விற்கிறது).

நாம் குறைந்த பட்சமாக சுமாரான காய்கறிகளுடன் இருக்கும் முதல் ஆப்சனையே எடுத்துக் கொள்ளலாம். 1000 ரூபாய் மாதம் ஒன்றிற்கு. இதன் பின்னர் மளிகை சாமான்கள் குறைந்தபட்சம் 1500 ரூபாய் ஆகும். பால் ஒரு நாளைக்கு அரை லிட்டர் வாங்கினால் கூட 500 ரூபாய். ஒண்டுக்குடித்தன வீட்டு வாடகை, மின் கட்டணம்,எரிபொருள், போக்குவரத்து, நல்லது கெட்டதுக்குப் போதல், பிள்ளைகளின் கல்விகட்டணம் முக்கியமாக உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டால் அந்த செலவு என எப்படியும் மாதம் 10,000 வந்துவிடும்.

இந்த 10,000 என்பது இருப்பதிலேயே மிகக் குறைந்த வாழ்க்கைத்தரம். அசைவம் உண்ணாமல், பழங்கள் ஏதும் சாப்பிடாமல், தியேட்டருக்குச் சென்று படம் பார்க்காமல், எதிர்காலத்திற்கான/ பிள்ளைகளின் கல்விக்கான/திருமணத்திற்கான  சேமிப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

சிறு/குறு தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், அரசு பணியாளர்கள், மருத்துவம்/பொறியியல்/தணிக்கை போன்ற தொழிற்படிப்பு முடித்து பணியில் இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த விலையேற்றமானது பாதிக்காது. ஏனென்றால் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இவர்களின் வருமானமும் கூடிவிடும்.

ஆனால் கலை-அறிவியல் கல்லூரிளில்/பள்ளிப்படிப்பு படித்து தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்போர், தனியார் பள்ளிகளில் வேலை பார்ப்போர், சிறு தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், சிறிய கடைகளில்/சர்வீஸ் செண்டர்களில் பணிபுரிவோர்களுடைய சம்பளம் என்பது பெரும்பாலும் நான்கு இலக்கங்கள் தான். ஐந்தாம் இலக்கம் பல ஆண்டுகளுக்குப் பின்னரே சாத்தியமாகிறது.

இவர்களுக்கு  திருமணமாகதவரை பிரச்சினை இல்லை. பெற்றோர்களிடம் ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு ஜாலியாக இருந்து கொள்ளலாம். ஆனால் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால் கஷ்ட ஜீவனம் தான். இதைச் சமாளிக்க தங்கள் வாழ்க்கைத்துணையையும் பணிக்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. ஆனால் இவர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு கிடைப்பதில்லை. அதிகமான ஆட்கள் இம்மாதிரி  வேலைக்கு கிடைப்பதால் சொற்ப சம்பளமே வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு இருக்கும் இன்னொரு ஆப்சன் – மாலை வேளைகளில் வேறு தொழில் பார்ப்பது. ஆனால் இப்போதெல்லாம் பணியில் இருந்து வீட்டிற்குத் திரும்பவே ஏழு மணி ஆகிவிடுகிறது.  அதனால் இந்த வாய்ப்பும் பறிபோகிறது.

மின்கட்டணம், கல்வி கட்டணம், பஸ் டிக்கட், வீட்டு வாடகை இதையெல்லாம்  குறைக்க முடியாது என்ற நிலையில் இவர்கள் குறைத்துக்கொள்வது உணவுப் பொருட்களில்தான். .  

20கிலோ ரேசன் அரிசி விலையில்லாமல், ஐந்து கிலோ பச்சரிசி கிலோ 2 ரூபாய் விலையில், உளுந்தம்பருப்பு துவரம்பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் போன்றவை ரேசன் கடைகளில் வாங்குவதின் மூலம் சிறிது தாக்குப்பிடிக்கிறார்கள்.

இந்தப் பொருட்களின் தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்களுடன் கலந்து உபயோகிக்கிறார்கள். உதாரணத்திற்கு ரேசனில் கிடைக்கும் துவரம்பருப்பில் சாம்பார் செய்தால் விழுவிழுவென சுவைகுன்றி இருக்கும். இதனுடன் வேறு துவரம்பருப்பு கொஞ்சம் சேர்த்து, தக்காளி கூடுதலாகச் சேர்த்தால் பரவாயில்லாத சுவை கிடைக்கும்.

முகூர்த்த நாட்களில் சாம்பாரில் போடும் காய்கறிகளின் விலையும் கூடுதலாகிவிடும். அந்நாட்களில் சுண்டவத்தல், மிதுக்க வத்தல், பாக்கெட் கருவாடு (5 ரூபாய்) போன்றவற்றைக் கொண்டு குழம்பு வைத்து சமாளித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர், இரண்டாம் தரத்தில் இருக்கும் (நடைபாதையில் கூறுகட்டி விற்கப்படும்) காய்கறிகளை மட்டும் வாங்குகிறார்கள். அசைவம் பெரும்பாலும் மாதம் ஒருமுறை. அதுவும் பிராய்லர் கோழிதான்.

ரேசன் அரிசியில், உளுந்து மிகக்குறைவாகப் போட்டு  தயாரிக்கப்பட்டு தெருவில் விற்கப்படும் இட்லிமாவு இவர்களுக்கு ஆபத்பாந்தவன். ஒரு கப் 15 ரூபாய்க்கு வாங்கி பசியாறிக் கொள்வார்கள். பழங்கள் என்றால் வாழைப்பழம் அதிகபட்சம் கொய்யாப்பழம்.

இம்மாதிரியான உணவுப் பழக்கம் நாளடைவில்  பலவகையான நோய்களை கொண்டுவரவல்லது. பெற்றோர்களுக்குப் கூட பரவாயில்லை. குழந்தைகள் பாடுதான் பாவம். ஊட்டச்சத்து மிகக் குறைவாக உள்ள உணவை தொடர்ந்து உண்டு பின்னாட்களில் எதிர்ப்பு சக்தியில்லாமல் நடமாடுவார்கள்.

ஆனால் 25 வருடம் முன்னால் இப்படியில்லை. தனியாரில் சின்ன வேலை பார்த்தவர்கள் கூட ஆரோக்கியமாக சாப்பிடும்படியே விலைவாசி இருந்தது. சாதாரண தொழிலாளிகூட ஞாயிறு தோறும் ஆட்டுக்கறி வாங்கி குடும்பத்தோடு சாப்பிட்டு முக்கியமாக பழங்கள் ஏராளமாக சாப்பிடும் வகையில் சூழல் இருந்தது.

ஆனால் இன்று? தொழில் அதிபர்கள். அரசு ஊழியர்கள், தொழிற்படிப்பு படித்து பணியில் உள்ளோர் மட்டுமே ஆரோக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவை சாப்பிடும் நிலை உள்ளது. ஆடம்பரமான அல்ல ஒரளவு ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிடவேண்டுமானால் மேற்கூறிய ஒன்றாக நீ மாறவேண்டும் என்ற நிலையில் தமிழகம் உள்ளது.

விலைவாசி உயர்வுக்கு அரசின் தவறான கொள்கைகள், மழையின்மை, வியாபார முறைகள் மாறியது என பல காரணம் சொல்லலாம். ஆனால் விவசாயி நிச்சயம் காரணமல்ல. இன்னும் சொல்லப் போனால் அவரும் அதிகம் பாதிக்கப்பட்டே இருக்கிறார். காய்கறிகளை விளைவித்து, ஆள் வைத்து அறுவடை செய்து, பேருந்தில் லக்கேஜ் கொடுத்து, கமிசன் கடை வரை தலையில் வைத்து/ வண்டியில்  கொண்டு வந்து கொடுத்து, ஏஜெண்ட் கமிசன் போக அவருக்கு கிடைக்கும் பணம் அவரின் மனித உழைப்புக்கான கூலியை விட குறைவாகவே இருக்கிறது. அவரும் கூட வெயிலுக்கு இளனி வாங்கி சாப்பிடமுடியாமல் டீ குடிக்கத்தான் முடிகிறது.


இனி தமிழகம் சாதாரண வேலையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் உகந்த மாநிலமாக இருக்கப் போவதில்லை.  அப்படி இருந்தால் தொழில் திறமை உடையவர்கள், புத்திசாலிகள், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலை செய்பவர்கள் வேண்டுமானால் ஒரளவு சமாளிக்கலாம். இல்லையென்றால் முட்டை மட்டும் தான் அசைவம், வாழைப்பழம்மட்டும் தான் பழம், பிஸ்தா,முந்தரி பருப்பெல்லாம் நவரத்தினக் கற்கள், வத்தக்குழம்புதான் கறிக்குழம்பு என்று பழகிக்கொள்ள வேண்டியதுதான்.