May 15, 2012

கலகலப்பு

கடந்த ஒரு மாதமாக நான் பல உறவினர் வீடுகளுக்கு/விசேஷங்களுக்கு செல்ல நேர்ந்தது. அத்தை பெண்கள், பெரியம்மா/சித்தி பெண்கள் மற்றும் மதினி, மைத்துனி வகையறாக்கள் எல்லோருமே பொதுவாக சொன்ன விஷயம்


 “இப்பல்லாம் குடும்பத்தோட பார்க்குற மாதிரியா படம் வருது, என்னேரமும் ஹீரோ குடிக்கிறான், தம் அடிக்குறான், பரட்டத்தலை, தாடியோட திரியுறான்”

 அவர்கள் கவலை அவர்களுக்கு, எல்லோருக்குமே பதின்ம வயதில் பையனோ பெண்ணோ இருக்கிறார்கள். அவர்கள் சீரியல் பார்ப்பதில்லை. விளையாடுவதில்லை. இணையம் மற்றும் அலைபேசி தான் பொழுது போக்கு. அவர்களை அழைத்துக் கொண்டு திரையரங்குக்கு போகும் போது பையன்கள் ஹீரோவையும், பெண்கள் தறுதலையை காதலிக்கும் ஹீரோயினையும் ஆதர்சமாகக் கொள்ளக் கூடாதே என்று.

 அதற்காக அவங்களை சோட்டா பீமையா பார்க்கச் சொல்ல முடியும்? என்று கேட்டேன்.

 இல்லை, ரொம்ப விரசம் இல்லாம, தலை வலிக்கிற மாதிரி சண்டை இல்லாம லைட்டா கருத்து சொல்லுற மாதிரி படம் வந்தா எல்லோரும் போய் உட்காரலாம் என்றார்கள்.


 நானும் யோசித்துப் பார்த்தேன் தேனி மாவட்டம், விருதுநகர் சந்திப்பு, மை, பச்சை என்கிற காத்து, ஒத்தவீடு, ஒத்த குதிரை, சேட்டை தனம், சங்கர் ஊர் ராஜபாளையம், பத்திரமா பாத்துக்குங்க, சூரிய நகரம், நண்டு பாஸ்கர், மாட்டுத்தாவணி எல்லாமே மதுரையைச் சுத்தின ரவுடி படம். ஒரு பாட்டு கேக்குற மாதிரி இருக்கா? ஒரு மூஞ்சியாச்சும் நினைவுல நிக்குதா?

 பருத்திவீரனையும், சுப்ரமணிய புரத்தையும் பார்த்து நம்மளை சோதிக்கிறாங்க என்று என் மனம் என்னை அறியாமலேயே புலம்பியது.

 டிஜிடல் வந்ததுக்கான விலை இது. தலைவர் கவுண்டமணி தொழிலதிபர்களை சொன்ன மாதிரி ரியல் எஸ்டேட் பண்ணவன், வட்டி வாங்கினவேன் எல்லாம் புரட்யூசர்ன்னு வந்துடுறாங்க.

 பல குடும்பங்களின் இந்த மனநிலையே ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்கும், கலகலப்புவின் வெற்றிக்கும் காரணம்.

 சென்ற ஞாயிறு கலகலப்புக்கு போயிருந்த போது 30+ பெண்களை இல்லத் தலைவிகளாக கொண்ட குடும்பங்கள் பல வந்திருந்தன. அவர்கள் மாதம் ஒரு முறையாவது படம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பை தமிழ்சினிமா கொடுப்பதில்லை என்று தான் தோன்றியது.


 திரையில் கேபிளாரின் பெயர் வந்த போது கை தட்டி மகிழ்ந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தார்கள். சாப்பாட்டு கடை எழுதியவருக்கு பேக் டிராப்பும் ஹோட்டலாக அமைந்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன்.


 ஓவியாவுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன ராசி என்று தெரியவில்லை.
 களவானியில் திண்பண்டம் வாங்க நெல் திருடுகிறார்
மன்மதன் அம்புவில் பஜ்ஜி சாப்பிடுங்கோ என்ற ஒரே ஒரு வசனம் மெரினாவில் சாப்பாடு சீதை
இதில் ஓட்டலில் பணி புரிகிறார்.

 அஞ்சலி ரம்மியமாக இருக்கிறார்

 சிவா, விமல், சந்தானம், மனோபாலா வழக்கம் போல.

 சுந்தர் சி சின்னாவில் மன்சூர், பொன்னம்பலத்தை காமெடியன் ஆக்கினார். இதில் தளபதி தினேஷ்ஷை காமெடி பீஸ் ஆக்கிவிட்டர்.

 இளவரசு மற்றும் பச்சை பெருமாளாக வரும் கான்ஸ்டபிள் சர்பிரைஸ் பேக்கேஜ்

  ரசித்த சில விஷயங்கள்

 நாய்க்கு கூகுள் என்ற பெயர்

 சந்தானம் சொல்லும் “பொண்ணுகளைப் பத்தின முக்கியமான விஷயம் எல்லாம் முறை மாமன்களுக்குத்தான் தெரியும்” வசனம். (ஒரு பதிவுக்கான அருமையான மேட்டர்)


ஒரு வருத்தம்

தோஷ நிவர்த்திக்காக அஞ்சலி ஆற்றில் இன்னும் ஒரு முறை முங்கி எந்தரித்து இருக்கலாம்.

 பல வசனங்கள் கேபிளின் பங்களிப்பு என மனதில் பட்டுக் கொண்டே இருந்தது.

 (வெட்டுப்புலி படத்தை வைத்து சந்தானம் பேசும் வசனம்) படம் நல்ல ரிலாக்சேஷன்.

 நன்றி கேபிள், நன்றி சுந்தர்.

May 10, 2012

சச்சினை ஏன் பிடிக்கும்?

பொதுவாகவே நான் இணைய மக்களுக்குத் தீனி போடும்

ரஜினி-கமல், அதிமுக-திமுக, ஆரிய-திராவிடம், ரஹ்மான் – ராஜா, டெண்டுல்கர்-கங்குலி+இதர ஆட்டக்காரர்கள் விவாதங்களில் பங்கெடுப்பதே இல்லை.


 அதற்கான வாதிடும் திறமை, தரவுகளை சாமர்த்தியமாக அடுக்குதல் போன்றவற்றில் கொஞ்சம் வீக் என்றாலும் முழு முதல் காரணம் அதனால் என்ன பயன்? என்பது தான் .


 இந்த 35 ஆண்டுகால பொதுவாழ்க்கையிலும் சரி, 10 ஆண்டுகால மண வாழ்க்கையிலும் சரி, 5 ஆண்டுகால இணைய வாழ்க்கையிலும் சரி நான் உணர்ந்து கொண்டது யாருடைய அபிப்பிராயத்தையும் வாதத்தால் மாற்ற முடியாது என்பதே. (முக்கியமாக என்னால்).

 ஆனால் ஏன் நான் அதை விரும்புகிறேன் என்று சொல்வதற்கு அல்லது ஒரு நிகழ்வு எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை பகிர்வதற்கு முழு உரிமையும் எனக்கு உண்டு. அந்த உரிமையிலே பகிர்ந்து கொள்வதுதான் இந்த பதிவு.



 அது 1986ஆம் வருடம். அப்பொழுதுதான் தொலைக்காட்சி வழியாக கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. முதல் இரண்டு ஆண்டுகள் வெறித்தனமாக பார்த்த எனக்கு 89 ஆம் ஆண்டில் கிரிக்கெட் பார்க்கவே பிடிக்கவில்லை. 87 உலகக் கோப்பை தோல்விக்கு பின் பொறுப்பேற்றுக் கொண்ட வெங்சர்க்கார் தலைமையில் அணி இன்னும் சொதப்பியது. ஒருவருடைய ஆட்டம் மட்டுமே பார்க்கும் படி இருந்தது. அவர் ஸ்ரீகாந்த். ஆனால் அவருக்கு கன்சிஸ்டென்ஸி கிடையாது மேலும் எல்லாவிதமான ஷாட்டும் ஆட மாட்டார். குவாலிட்டி சுவிங் பவுலிங் முன் அவர் ஒரு கைப்பிள்ளை. அசார், வெங்கி, அமர்நாத் எல்லாம் பொறி பறக்க ஆட மாட்டார்கள். சாஸ்திரி கால்குலேட்டட் ரிஸ்க் மட்டுமே எடுப்பார். கபில்தேவ் தன் வசந்த கால இறுதியில் இருந்தார். நல்ல பிளேயர் கிடைக்காமல் கல்லறையில் இருந்த அன்சுமான் கெயிக்வாட் என்பவரை யட்சினியை வைத்து எழுப்பி கூட்டி வந்து விளையாட விட்டார்கள். டபிள்யூ வி ராமன், அஜய் சர்மா என ரஞ்சி கிங்குகளையெல்லாம் கூட்டி வந்தார்கள். அவர்களும் சோபிக்கவில்லை. பவுலிங் அதை விட மோசம். கோபால் சர்மா என்றெல்லாம் கூட ஒரு ஆப் ஸ்பின்னர் இருந்தார், வேகப் பந்து வீச்சாளரே கிடைக்காமல் சஞ்சீவ் சர்மா என்பவரை வைத்து ஒப்பேற்றினார்கள்.


 ஆனால் இதே சமயத்தில் பாகிஸ்தானில் இம்ரான், வாஸிம், வக்கார், காதர் என்று ஜாம்பவான்கள் இருந்தார்கள். பேட்டிங்கிலோ சலிம் மாலிக், மியான் டாட் போன்ற பெருங்கைகளும் இருந்தன. இலங்கையில் டி சில்வா,ரணதுங்கா, மகனாமா போன்றவர்கள் அபாரமாக ஆடினார்கள். மேலும் ரிச்சர்ட்ஸ், மார்டின் குரோவ், அலன் லாம்ப், டீன் ஜோன்ஸ் எனப் பல அதிரடி ஆட்டக்காரர்கள் (அந்நாளைய கணக்கிற்கு) மற்ற அணிகளில் இருந்தார்கள். என்னடா நம்மாளுக இப்படி மழுமட்டயா விளையாடுறாங்களேன்னு ஆதங்கத்தில் இருந்த போதுதான் அந்த செய்தி வந்தது.



 டெண்டுலகர்ன்னு ஒருத்தண்டா, 16 வயசு, 13 பால்ல ஆப் சென்சுரி, அதுவும் அப்துல் காதிர் ஒவர்ல தொடர்ந்து நாலு சிக்ஸ் என்று.

 சிறு நகரங்களில் அந்நாளில் வசித்த டீன் ஏஜ் பையன்களுக்கு என்ன பொழுது போக்கு இருந்தது? வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், தாவணி போட்டு டைப்பிங் போகும் பெண்கள், மாதத்துக்கு ஒரு படம், பிளஸ் டூ மார்க்கை நோக்கிய பயணம்.


 இந்த சூழ்நிலையில் மோட்டிவேட் செய்ய, நம்மாளும் உலக தரத்துக்கு நிற்க முடியும் என்று காட்ட, தொடர்ந்து ஆர்வத்துடன் கிரிக்கெட்டை பார்க்க உதவியது சச்சின் தான். நான் அவரை மற்ற பிளேயர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதில்லை, ரெக்கார்ட் வைத்து அளப்பதில்லை. இன்று வரை யார் கேட்டாலும் எனக்குப் பிடித்த நடிகை ரோஜா என்றுதான் சொல்லுவேன். எத்தனை உலக அழகி வந்தாலும் எனக்கு ரோஜாதான் அழகு. கிரிக்கெட் தவிர எதுவும் தற்போது டிவியில் பார்க்காத நான் இன்றும் கூட ஜீ தமிழில் லக்கா கிக்கா பார்க்கிறேன்.

 எனக்கு சச்சின், மோகன் தாசுக்கு பாண்டிங், கார்க்கிக்கு கங்குலி எனக்கு கமல், கிரிக்கி ரஜினி, கார்க்கிக்கு விஜய் எனக்கு இளையராஜா புருனோக்கு ரஹ்மான் அது அவர் அவர் கால கட்டம், சூழ்நிலை, ஆல்டர்நேட் இல்லாமல் இருத்தல் குறித்தது. எனக்கு இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும், மத்ததுவும் பிடிக்கும் என்பதே என் நிலைப்பாடு.