August 21, 2014

நிலைக்க முடியாத நாயகர்கள்

தமிழ்சினிமாவில்  கதாநாயகனாக அறிமுகவாவது எவ்வளவு கடினம் என்பது அதை முயற்சித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். தயாரிப்பாளர்கள், வெற்றிகரமான இயக்குநர்கள், முண்ணனி நடிகர்களின் வாரிசு என்றால் கோடம்பாக்கத்தின் கதவு எளிதாக திறந்து கொள்ளும். அதுவும் முதல் படத்திற்கு மட்டும்தான். அரசியல்வாதி மற்றும் பெரும் பணக்காரர்களின் வாரிசுகளுக்கும் முதல் பட வாய்ப்பு எளிதுதான்.
தமிழ்சினிமா ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை கவனித்துப் பார்த்தால், கதாநாயக வாய்ப்பு பெறுவது என்பது எளிதாகிக் கொண்டே வருகிறது. பாடவும் நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் கூடுதலாக முக லட்சணமும் வேண்டும் என்பது பாகவதர் காலகட்ட தகுதிகள். நாடக மேடை அனுபவமும் முகலட்சணமும் இருக்க வேண்டும் என்பது எம்ஜியார்-சிவாஜி காலகட்டம். எல்லிஸ் ஆர் டங்கனிடம் எம்ஜியார் வாய்ப்பு வாங்க கஷ்டப்பட்டார். சிவாஜி கணேசனும் பராசக்தியில் கிடைத்த வாய்ப்புகூட பறிபோகும் நிலைக்குச் சென்று தயாரிப்பாளரின் ஆதரவால் தப்பித்து பின்னர் சகாப்தம் படைத்தவர்.

முகலட்சணமும் சிகப்பு நிறமும் தகுதியாகப் பார்க்கப்பட்டது ஸ்ரீதர்-பாலசந்தர் காலகட்டம். இந்த காலகட்டத்தில் தான் இயக்குநர்க்கு பிடித்திருந்தால் போதும் கதாநாயகன் வேடம் கிடைத்துவிடும் என்ற நிலைமை வந்தது. பாரதிராஜாவிற்கு பிந்தைய காலகட்டத்தில்தான் நாயகனாக நடிக்க தகுதி,நிறம் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டது. பாலசந்தர் அறிமுகப்படுத்தினாலும் ரஜினி நாயகன் வாய்ப்பு பெற்றது இதன்பின்னர்தான்.

தொண்ணூறுகளில் தொலைக்காட்சி  முக்கிய ஊடகமாக அறியப்பட்ட நேரத்தில், மாடலாக இருப்பவர்கள் திரையுலகுக்கு வரும் வழி உருவாகியது. புதிய இயக்குநர்கள் சிலர் தங்கள் படங்களுக்கான நடிகர்,நடிகைகளை விளம்பர ஏஜென்ஸிகள் மூலமும், விளம்பரங்கள் மூலமும், மாடலிங் ஷோக்கள் மூலமும் தேர்ந்தெடுத்தனர்.
எனவே 80களில் இருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னால் வரை கூட இயக்குநரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலையே நிலவியது. தன்னுடைய தேவையை விட அதிகமாக பணம் வைத்திருப்பவரே ஒரு படத்தை தயாரிக்க முன்வருவார். சில லட்சியவாதிகள் மட்டும் விதிவிலக்கு. எனவே ஒருவர் இயக்குநர் ஆவதற்கு நிச்சயம் ஒரு பணக்காரரை சம்மதிக்க வைத்திருக்க வேண்டும்.  இந்தக் காலகட்டத்தில் ஒருவர் அவ்வளவு பணத்தை வைத்திருந்தால் நிச்சயம் அவரிடத்தில் ஒரு தெளிவு இருக்கும். மது,மாது,சூது, கூடா நட்பு என பலவற்றிடமிருந்து தப்பித்து அதிகப்படியான பணத்தை பாதுகாத்து வைத்திருப்பவர் ஒரு சமநிலையில் தான் இருப்பார். அவரது பணத்தை ஒரு நிச்சயமில்லாத தொழிலில் முதலீடு செய்ய சம்மதிக்க வைக்க எவ்வளவு திறமை வேண்டும்?. அந்த அளவு திறமை உள்ளவர்களே இயக்குநர் ஆகிறார்கள். அவர்கள் தங்கள் படத்திற்கு புது கதாநாயகன் தேடும்போது எவ்வளவு மெனக்கெடுவார்கள்?. ஏனென்றால் படத்தின் வெற்றிதானே அவர்களை திரையுலகில் நிற்க வைக்கும்?

டிஜிட்டலில் படம் எடுக்கும் வசதி மற்றும் குறும்படம் மூலம் வாய்ப்பு பெறும் வசதியால் அதிக அளவு படங்கள் குறைந்த முதலீட்டில் தயாராவதால் கதாநாயகன் வாய்ப்பு கிடைப்பது இப்போது இன்னும் எளிதாகிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு தொலைக்காட்சி தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பவரின் முகம் கூட பொதுமக்களின் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர்களின் முகம் ஞாபகத்தில் இல்லை. அவ்வளவு ஏன்? தொடர்ந்து திரைப்படங்களை பார்த்து வருகிறவர்களால் கூட சில நடிகர்களை அடையாளம் காண முடிவதில்லை.

இந்த நிலையில் ஒரு படத்தில் நடித்தாலே வீதியில் சுதந்திரமாக நடக்க முடியாத நிலை இருந்த நாட்களில் இயக்குநரை திருப்திசெய்து நாயகனாக அறிமுகமானவர்கள், அதிர்ஷ்டவசமாக இயக்குநர்களின் கடைக்கண் பார்வைபட்டு கதாநாயகன் ஆனவர்கள், குக்கிராமங்கள் வரை சென்று மக்கள் மனதில் சேர்ந்த பின்னரும் சோபிக்காமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய ஒரு பார்வையே இந்த கட்டுரை.
பாக்யராஜ்,பாண்டியராஜன்,பார்த்திபன் போன்றோர் தங்கள் படங்களில் பெரும்பாலும் தாங்களே நடித்துக் கொண்டார்கள். பாரதிராஜா, பாலசந்தர், டி ராஜேந்தர், மணிரத்னம் ஆகியோர் அப்படிச் செய்யமுடியவில்லை. வீர தீரம், சிறந்த நடிப்பு தேவைப்படாத தாங்கள் படைத்த பாத்திரங்களுக்கு  சில  கதநாயகர்களை அறிமுகப்படுத்தினார்கள். டி ராஜேந்தர் சில படங்கள் கழித்து தானே களத்தில் குதித்துவிட்டார்.

அப்படி பாரதிராஜா அறிமுகப்படுத்திவர்களில் கிழக்கே போகும் ரயில் சுதாகர் பல படங்களில் நாயகனாக தொடர்ந்து நடித்தார். அதில் இரண்டு மூன்று மட்டுமே வெற்றிப்படங்கள். பின்னர் அவர் தனது பூர்வீகமான ஆந்திரத்துக்குச் சென்று காமெடியனாக வெற்றி பெற்றார். நிழல்கள் ரவி, ராஜா ஆகியோர் கதாநாயக வேடத்தில் நடித்தாலும் அவர்களை நாயகனாக யாரும் பார்க்கவில்லை. பாரதிராஜாவின் இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகம் பாண்டியன்.

பாண்டியன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடை வரிசையில் வளையல் மற்றும் அழகு பொருட்கள் கடை உரிமையாளராக இருந்த பாண்டியன், பாரதிராஜாவின் கண்ணில் பட்டு மண்வாசனை பட நாயகனானார். அதற்கு முன்னால் ஜாதி சார்ந்த பேச்சு வழக்குகள், சம்பிரதாயங்களை வைத்து படம் எடுத்திராத பாரதிராஜா, காதல் ஓவியம், வாலிபமே வா வா போன்ற படங்களின் தோல்வியை அடுத்து தேவர் இன முறைமாமன், தாய்மாமன் சீர் ஆகிய சம்பிரதாயங்களைச் சரணடைந்து இயக்கிய படம் மண்வாசனை.  ஒரு வகையில் பார்த்தால் தேவர் இனத்தை தூக்கிப்பிடித்து வந்த முதல் படம் இது என்றும் சொல்லலாம். (சிவாஜி கணேசனின் பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்களில் ஜாதி சொல்லப்பட்டாலும் சம்பிரதாயங்கள் டீடெயிலாக காட்சிப்படுத்தப் பட்டிருக்காது).  படமும் வெற்றி பெற்றது. பாண்டியன் தமிழகம் அறிந்த நடிகராக மாறினார்.
அதன் பின் மண்சோறு, நேரம் நல்லாயிருக்கு, பொண்ணு பிடிச்சிருக்கு,தலையணை மந்திரம், கடைக்கண் பார்வை, கோயில் யானை, ஆண்களை நம்பாதே போன்ற படங்களில் நடித்தார். இவை எதுவும் கலை ரீதியாகவும், வணிக ரீதியாகவும் எடுபடாத படங்கள். பாரதிராஜாவின் புதுமைப் பெண், பாண்டியராஜனின் ஆண்பாவம், மணிவண்ணனின் முதல் வசந்தம், ராமராஜனின் மண்ணுக்கேத்த பொண்ணு போன்ற வெற்றி பெற்ற படங்களிலும் நடித்தார். வெற்றி பெற்ற படங்களில் அவ்வப்போது நடித்திருந்தாலும், நான்கு ஆண்டுகளிலேயே ஊர்க்காவலன், குரு சிஷ்யன், பூந்தோட்ட காவல்காரன்  போன்ற படங்களில் துணை நடிகர் போல நடிக்க வேண்டியிருந்தது. பின்னர் எம்ஜிஆர் நகரில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடிக்க வேண்டி வந்தது.

மீண்டும் பாரதிராஜா நாடோடி தென்றலில் ஒரு சிறிய வாய்ப்பு கொடுத்தார். பின்னர்  கிழக்கு சீமையிலே படத்தில் வில்லன்களில் ஒருவராக நல்ல வேடம் கொடுத்தார். ஆனால் அவரால் எதிலும் பிரகாசிக்க முடியவில்லை.  அடுத்த சில ஆண்டுகள் கழித்து குரு தனபால் இயக்கிய “பெரிய இடத்து மாப்பிள்ளை” படத்தில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக கூட நடிக்க நேர்ந்தது. கடைசியாக அவரது வாழ்க்கையிலேயே ”ஆண்பாவம்” மூலம் பெரிய ஹிட் கொடுத்த பாண்டியராஜனின் “கை வந்த கலை” யில் நடித்தார். பின்னர் தீராத குடிப்பழக்கத்தால் இவ்வுலகை விட்டு மறைந்தார்.  

பாண்டியனின் சினிமா வாழ்க்கை நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். அது இந்த நடிகரால் தான் இந்தப் படம் ஓடியது என்று ஒருபடத்திலாவதுதான் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நடிகனுக்கு இங்கே மரியாதை. அப்படி நிரூபிக்காவிட்டால் எத்தனை படம் ஹிட் கொடுத்தாலும், ஒரு சில சறுக்கலிலேயே காணாமல் போக நேரிடும். நமக்கு என்ன நடிக்க வரும் என்பதை ஒருமுறை நிரூபித்து விட்டால் போதும், நமக்காக இயக்குநர்கள் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள், நாம் தொடர்ந்து பீல்டில் நிலைக்கலாம்.
தமிழகம் முழுக்க அறிமுகமாகி இருந்தாலும், வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், சிலருக்காவது, நடிகனின் மீது அபிமானம் வர வேண்டும். நடிகனுக்கு அழகு,ஸ்டைல் இதையெல்லாம் விட நல்ல ஆண்மையான குரல் இருக்க வேண்டும். அந்த குரலே அவர்களுக்கு ரசிகர்களைச் சேர்க்கும். துரதிஷ்டவசமாக பாண்டியன் குரலில் ஆளுமை இல்லை. தன் கடைசி காலம் வரை மாடுலேசனை மாற்றாமல் ஒரே மாதிரி பேசிவந்தார். அதுவும் ரசிக்க முடியாத குரலில். இப்போது விமலும் அப்படித்தான் பேசி வருகிறார். ரேவதி,சீதா, ரம்யா கிருஷ்ணன்,இளவரசி என இவருடன் கதாநாயகியாக நடிகைகள் எல்லாம் இன்றும் வெள்ளித்திரை/சின்னத்திரையில் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சுரேஷ்

பன்னீர் புஷ்பங்களில் பள்ளி மாணவனாக அறிமுகமாகிய சுரேஷ், அடுத்த ஆண்டிலேயே சில வெற்றிப்படங்களில் நடித்தார். அதில் முக்கியமானது இளஞ்சோடிகள். இராம நாராயணன் இயக்கத்தில் கார்த்திக்கும் சுரேஷும் இணைந்து நடித்த இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம். ஆனால் அதற்கடுத்து கோழி கூவுது. வெள்ளை ரோஜா போன்ற படங்களில் இரண்டாம், மூன்றாம் நாயகனாகவும், ராம நாராயணன் இயக்கிய உரிமை போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்தார். பின் பூக்களைப் பறிக்காதீர்கள் படத்தில்  நதியா உடன் இணைந்து நடித்தார். அப்போதைய முண்ணனி நாயகிகளான ரேவதி, நதியா உடன் சில படங்களில் நடித்தார். நதியாவுக்கு ஏற்ற ஜோடி எனவும் சிலாகிக்கப்பட்டார்.  சில ஆண்டுகள் தான் ஆளே காணவில்லை. பின் புது வசந்தம் படத்தில் சிறிய நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். 94ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷங்க படத்தில் சிறிய வேடம். இப்போது தெலுங்கு திரையுலகில் சில வேடங்களில் நடித்து வருகிறார். காதல் சொல்ல வந்தேன், தலைவா ஆகிய படங்களிலும் சிறிய வேடத்தில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டு ஷோக்களில் தலை காட்டிக் கொண்டிருக்கிறார்.


பொதுவாகவே தமிழர்களுக்கு சிவப்பான நாயகனைப் பிடிக்காது என்று சொல்வார்கள். எம்ஜியார் கூட கறுப்பு வெள்ளை காலத்தில் அறிமுகமாகி மக்களின் அபிமானத்தைப் பெற்றதால் தப்பித்தார். கமல்ஹாசன் கஜகர்ணம் போட்டாலும் பெருவாரியான மக்களின் அபிமானத்தைப் பெற முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் தான் இது மாறியுள்ளது. முதல் சில ஆண்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாத அஜீத் இப்போது மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார். ஆனால் 2000 வரையிலும் நல்ல சிகப்பான, பர்சனாலிட்டி உள்ளவர்கள் சாக்லேட் ஹீரோவாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் மனம் கவர் நாயகனாக சினிமாவை அதிகம் பார்க்கும் இளவயது ஆண்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சுரேஷுக்கு நல்ல பர்சனாலிட்டி, குரலும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் வெரைட்டியான வேடங்கள் செய்யவில்லை. நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்கவில்லை என்பது அவரின் சரிவுக்கு காரணமாய் அமைந்து விட்டது.


1 comment:

ravikumar said...

The Point of Success of MGR was the selected Roles (represented as Lower end people) and character name
In spite of his Fairness he shined Which was lacking with all other Hero's. It is not due to Black & white movie