July 10, 2015

எழுதியதால் ஆன பயன்

இப்போது போல செமெஸ்டர் பேட்டர்ன் இல்லாமல் பொறியியல் கல்லூரிகளில் இயர் பேட்டர்ன் இருந்த காலம். அப்போது முதலாமாண்டு மாணவர்கள் வகிடெடுத்து சீவி, சுருட்டி விடாமல் முழுக்கை சட்டை அணிந்து, கழுத்து வரை பட்டன் போட்டு, இன் செய்யாமல், மேல் பாக்கெட்டில் எதுவும் வைத்துக் கொள்ளாமல்,ஹவாய் செப்பல் அணிந்து, மஞ்சப்பையில் நோட்புக் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றும், மாணவிகள் சேலை அணிந்து, ஒற்றை ஜடை போட்டு வரவேண்டும் என்றும் ராக்கிங் சட்டம் அமலில் இருந்தது. மேலும் சீனியர்களை “சார்” என்றுதான் அழைக்க வேண்டும். இந்த ராக்கிங்கானது சரியாக கல்லூரி ஆண்டுவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் ”வெல்கம் பார்ட்டியுடன்” முடிவுக்கு வரும். 

இந்த ராக்கிங்கில் முதலாமாண்டு மாணவிகளின் பயோ டேட்டாவை சீனியர்களுக்கு வாங்கிக் கொடுப்பது என்று ஒரு வைபவம் உண்டு. என்னை “லட்சுமி பிரியா” என்னும் மாணவியிடம் வாங்கித் தரச்சொன்னார்கள். நானும் தயங்கியபடியே சென்று “சீனியர் சார் உங்க பயோ டேட்டா கேட்டாரு” என்று கேட்டேன். யோசிக்காமல் ஒரு ஏ4 ஷீட்டை எடுத்து சரசரவென்று எழுதி நீட்டினாள். அதை வாங்கி வரும்போது தான் எனக்கு உறைத்தது. அக்கா, தங்கை என்ற உறவில்லாமல் நான் பேசிய முதல் இளம் பெண் லட்சுமி பிரியாதான்.

அந்த ஆண்டு விழாவின் இளவரசி லட்சுமி பிரியாதான். கிளாசிக்கல் டான்ஸ், வோக்கல் சோலோ, ஸ்கிட் என எல்லாவற்றிலும் ஸ்டார் பெர்பார்மன்ஸ் அவளுடையது தான். அதன்பின் கல்லூரியே அவள் பின்னால் சுற்றியது. இரண்டாம் ஆண்டில் அவளுக்கு கடிதங்கள் எழுத பல காடுகள் அழிக்கப்பட்டன. இந்த நேரத்தில் நான் ”டிபைன் தயிர்” என்ற கேட்டகிரியில் இருந்தேன். முட்டாளாக இருப்பவர்களை தேங்காய்க்கு டிபனிசனே இவன்தாண்டா என கலாய்க்கும் நோக்கில் ”டிபைன் தேங்கா” என அழைப்பார்கள். நான் தயிர்சாத வகையறா. வகுப்பில் முதல் பெஞ்சிலும் இல்லாமல், கடைசியிலும் இல்லாமல் நடு பெஞ்ச். படிப்பும் அப்படித்தான். ஆனால் தினமும் கல்லூரிக்கு வந்துவிடுவேன். டாப்பர், கோ-கரிகுலர், எக்ஸ்ட்ரா கரிகுலர் என்று எதிலும் அடிபடமாட்டேன். அதேபோல் ராக்கிங், மாஸ் கட், லேட் சப்மிஷன் என்ற கேட்டகிரியிலும் இல்லை. கிளாஸில் சந்தேகம் வந்தால் கூட கேட்க மாட்டேன். அதனால் என் பெயர் வகுப்பு எடுக்கு ஆசிரியர்களுக்கு கூட பரிச்சயமில்லாமல் இருந்தது. 

மூன்றாம் ஆண்டு படிக்கும் போது, ஆண்டு விழாவில் இன்னொரு நட்சத்திரம் உருவாகியது. ஆனந்த செல்வி. லட்சுமி பிரியாவுக்கு இணையாக அவளுக்கும் பெரிய பெயர் கிடைத்தது. நான்காம் ஆண்டு ஆரம்பிக்கும் போது, லட்சுமி பிரியாவுக்கு இணையாக ஆனந்த செல்விக்கும் பாலோயர்கள் அதிகமானார்கள். அது லட்சுமி பிரியாவுக்கு பெரிய மன வலியைக் கொடுத்தது. வெளி கல்லூரிகளில் நடைபெறும் கல்சுரல் ஈவெண்டுகளில் ஆனந்த செல்வியுடன் சேர்ந்து பங்கேற்க மாட்டேன் என மறுத்தாள். கேட் பிரிப்பரேசன் என சாக்குச் சொன்னாள். கல்சுரல் செக்கரெட்டரி கூட இவளுக ரெண்டு பேரும் இறங்குனா எல்லா ஷீல்டும் நமக்குத்தான். வாசிம் அக்ரமும் கர்ட்லி அம்புரோசும் மாதிரி டெட்லி காம்பினேஷன். இந்த ஈகோனால நம்ம காலேஜுக்குத்தான் லாஸ் என்று புலம்பினான்.

எங்கள் கல்லூரிக்கு வரும் நகரப் பேருந்துகளில் ஒரு வழக்கம் இருந்தது. சீனியர் மாணவர்கள் நின்று கொண்டிருந்தால் ஜூனியர்கள் எழுந்து இடம் கொடுத்து விடுவார்கள். நான் ரெகுலராக கல்லூரிப் பேருந்தில் மட்டுமே செல்பவன். ஒரு நாள் கல்லூரிப் பேருந்தை தவற விட்டு விட்டு நகர பேருந்தில் ஏறி வந்தேன். நல்ல கூட்டமாகையால் நின்று கொண்டு வந்தேன். முன்னால் அமர்ந்திருந்த என் கிளாஸ்மேட், திரும்பிப் பார்த்து, உட்கார்ந்திருந்த ஜூனியரிடம், டேய் பைனல் இயர் மெக்குடா, நிக்க வைச்சிருக்கீங்க என சத்தம் போட்டான். அலறியடித்து எழுந்த இரண்டு ஜூனியர்கள் சாரி கேட்டு என்னை உட்காரச் சொன்னார்கள். அதில் ஒருவன் மூன்றாம் ஆண்டு எங்கள் துறை மாணவன்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. மொத்தமே 700 பேர் படிக்கிற காலேஜ். நாலு வருசமா இங்க இருக்கோம். நம்ம டிபார்ட்மெண்ட் இம்மீடியட் ஜூனியர்க்கே நம்மை தெரியலை. என்னத்த கிழிச்சோம் என்று உறுத்திக் கொண்டே இருந்தது. காலேஜ விட்டுப் போகுறதுக்குள்ள நம்ம கிளாஸ் தவிர பத்திருபது பேருக்காச்சும் நம்மை தெரிய வைத்து விடவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.

இந்நிலையில் கல்லூரி ஆண்டுவிழாவுக்கான ஆடிசன் தொடங்கியது. பெண் விடுதலை சம்பந்தமாக எனக்குள் ஒரு நாட் இருந்தது. அதை சிறிது டெவலப் செய்து என்னைப் போன்ற சில நண்பர்களிடம் கெஞ்சி ஒரு டீம் அமைத்துப் போனோம். உள்ளே போன உடனேயே எந்த இயர்? என்று செலக்ஷன் கமிட்டி கேட்ட எங்கள் சுருதி கொஞ்சம் இறங்கியது. சமாளித்து நடித்தோம். ரிஜக்டட் என்று சொல்லிவிட்டார்கள். 

அடுத்த நாள் கேண்டீனுக்கு சென்று கொண்டிருக்கும் போது, லட்சுமி பிரியா எதிரில் வந்து புன்னகைத்தாள். நான் அனிச்சையாக, யாரைப் பார்த்து சிரிக்கிறாள் என பின்னால் திரும்பி பார்த்தேன். ஹலோ, உங்களைப் பார்த்துத்தான் சிரித்தேன் என்றவாறு அருகில் வந்தாள். உங்க தீம் நல்லா இருந்தது. ஆனா சில பொண்ணுங்களும் நடிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமே என்றாள். எனக்கு யாரும் அவ்வளவு பழக்கமில்லை என்றேன். எனக்கு உங்க ஸ்கிட்டைக் கொடுக்க முடியுமா? எங்க பிரண்ட்ஸோட சேர்ந்து பண்ணிக்கிறேன் என்றாள். தேவதை கேட்கும் வரம். மறுக்க முடியுமா? 

அவளுக்கு ஆனந்த செல்வியை விட ஒரு படி தான் மேல் என்று காட்டிவிட்டுப் போகவேண்டும் என்ற வெறி இருந்தது. அப்போது அவள் கணையாழியில் சில கவிதைகள் கூட எழுதி இருந்தாள். ஆனால் மாண்வர்களிடம் அது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆடல் பாடலில் வேண்டுமானால் என்னுடன் நீ போட்டி போடலாம் ஆனால் அறிவுத் தளத்தில் நான் ஒரு படி மேல் என்று பொதுவெளியில் நிரூபிக்க வேண்டும் என்ற ஈகோ அவளிடம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதற்கு உதவும் வகையில் என் ஸ்கிரிப்ட் இருந்தது. “இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால் நன்றாய் இருக்கும்” என கேட்டுக் கொண்டாள். 

மூன்று நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து திரும்ப எழுதினேன். அவள் செட்டுடன் சேர்ந்து செலக்ஷன் கமிட்டி முன்னால் அதை அரங்கேற்றம் செய்தாள். அந்த ஆண்டு வரும் சீஃப் கெஸ்ட், சம்பிரதாய ஆரம்ப உரைகளுக்குப் பின்னால் ஒரு புரோகிராம் மட்டும் பார்க்கிறேன் என்று சொல்லி இருந்தாராம். அதற்குரிய புரோகிராமாக இதை செலக்ட் செய்தார்கள்.

ஒரு வாரம். சொர்க்கத்தில் இருந்த மகிழ்ச்சியை அனுபவித்தேன். காலை முதல் மாலை வரை ரிகர்சல், திருத்தம், ரிகர்சல் என. கேண்டீனில் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்தினோம், டீ குடித்தோம், பேருந்தில் திரும்பும் போது அருகருகே நின்று கொண்டு பேசினோம். கேசட்டுகள்,புத்தகங்கள் பரிமாறிக் கொண்டோம். அந்த வாரம் முழுக்க யாருடா இவன் என்ற கேள்வியோடு காம்பஸ் முழுக்கப் பார்க்கப் பட்டேன். என் செட் மக்களிடம் பொறாமையும், ஜூனியர்களிடம் மரியாதையும் கிடைத்தது. ஆண்டு விழாவிற்கு வந்திருந்த சீஃப் கெஸ்ட் தன் ஏற்புரையில் நாடகத்தையும் முக்கியமாக லட்சுமி பிரியாவின் நடிப்பையும் சிலாகித்தார். லட்சுமி பிரியாவிடம் இருந்து நழுவிக் கொண்டிருந்த இளவரசி கிரீடம் அவள் தலையிலேயே சம்மணம் போட்டு அமர்ந்தது.

ஆண்டு விழா கொண்டாட்ட லீவ் முடிந்து, கல்லூரி தொடங்கியது. என்னைத் தேடிவந்து ஒரு காட்பரிஸ் டெய்ரி மில்க் கொடுத்து தேங்க்ஸ் சொல்லிச் சென்றாள்.

இப்போதும் கூட இரவுகளில் பேஸ்புக், ட்விட்டரில் நான் ஏதாவது டைப்பிக் கொண்டிருக்கும் போது, என் மகன் வந்து எப்பவுமே இதுதானா? இதுனால ஒரு யூஸும் இல்லை என்று சலித்துக் கொள்வான்.

அவனுக்குத் தெரியுமா? தயிர்சாதமாக இருந்த என்னை கல்லூரியில் ஒருவாரம் ராஜகுமாரனாக உணர வைத்தது இந்த எழுத்தார்வம் தான் என்று.

1 comment:

க கந்தசாமி said...

சூப்பர்.. இது புனைவு என்று நினைக்கிறேன். நிஜமாக இருந்தாலும் சரிதான். Andy Warhol சொன்னது போல் (ஒரு சிலரைத் தவிர) நம்மில் பலருக்கும் பதினைந்து நிமிடப் புகழ் மட்டுமே.