March 21, 2016

இம்ரான் கான்

1992ல் நடந்த ஒரு நாள் உலக கோப்பை போட்டிகள் கிரிக்கெட்டில் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தை பிரித்த நிகழ்வு எனச் சொல்லலாம். 1970களுக்கு பின்னர் அறிமுகமான நட்சத்திர வீரர்கள் எல்லாம் தங்கள் பங்களிப்பை நிறுத்தி அல்லது குறைத்துக் கொண்ட காலம் அது. பல அணிகள் தங்கள் அணிவரிசையை இந்த போட்டிக்குப் பின்னர் மாற்றிக்கொண்டார்கள். புதிய ஹீரோக்கள் உருவானார்கள். இந்த போட்டியின் இன்னொரு சிறப்பு, பங்கேற்ற ஒவ்வொரு அணியும் மற்ற எல்லா அணிகளுடனும் ஒரு முறை மோதும் படி அமைக்கப்பட்டிருந்தது. செமிபைனலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் விளையாடும்.


நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, கோப்பையை வெல்ல எல்லா தகுதிகளுடன் களம் இறங்கிய இங்கிலாந்து ஆகிய அணிகளின் மீதுதான் ஆரம்ப கவனம் இருந்தது. பாதி போட்டிகள் முடிந்த நிலையில் 20 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களம் புகுந்த தென் ஆப்பிரிக்கா தொடர் வெற்றிகளை குவித்து கவனம் ஈர்த்தது, நியூசிலாந்து, கேப்டன் மார்ட்டின் குரோவ்வின் வியூகங்களால் வெற்றிப்பாதையில் சென்றது. ஆஸ்திரேலியாவோ தோல்வி முகத்தில் இருந்தது, இங்கிலாந்து தன் முன்னிலையை தக்க வைத்துக் கொண்டிருந்தது,


இந்நிலையில் நான்காவது அணியாக யார் தேர்வு பெறுவார்? யார் கோப்பையை வெல்வார் போன்ற ஹேஸ்யங்களை பலரும் பத்திரிக்கைகளில் எழுதி வந்தனர். அப்போது கவாஸ்கர் தான் எழுதிய பத்தியில் இவ்வாறு தெரிவித்திருந்தார் “எந்த அணி வேண்டுமானாலும் கோப்பையை வெல்லலாம், பாகிஸ்தான் அணியைத் தவிர என்று சொல்லி இருந்தார்,


அது அன்றைய நிலைமைக்கு சத்தியமான உண்மை. ஆடிய ஐந்து ஆட்டங்களில் ஒரே வெற்றி. மூன்று தோல்வி, ஒரு ட்ரா. அந்த ட்ராவும் எப்படி? பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 40 ஓவர்கள் ஆடி 70 சொச்சம் ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இங்கிலாந்து எத்தனை ஓவர்களில் வெல்லும் என்பது பற்றி மட்டும் பெட்டிங்குகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் வந்தது மழை. தப்பித்தோம் பிழைத்தோம் என மூன்றாவது பாயிண்டை எடுத்திருந்தது பாகிஸ்தான்.


அது மட்டுமல்ல, அந்த அணியில் அறிமுகமான உடனேயே நட்சத்திரப்பந்து வீச்சாளராக மாறி, வாசிம் அக்ரமுடன் இணைந்து டபுள் டெவில்ஸ் எனப் பெயர் பெற்ற வக்கார் யூனிஸ் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அருமையான ஸ்ட்ரோக் மேக்கரான சயீத் அன்வரும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இம்ரான்கானால் அடுத்த தலைமுறையின் சூப்பர் பேட்ஸ்மென் என ஆரவாரமாக அறிமுகப்படுத்தப் பட்டிருந்த இன்சமாம் ஒற்றைப்படையைத் தாண்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். அணியின் பீல்டிங் மகா மோசம். இன்னும் சொல்லப்போனால் அந்த உலக கோப்பைத் தொடரிலேயே பீல்டிங்கில் மோசமான அணி பாகிஸ்தான் தான்.


ஒரு கிரிக்கெட் அணியினுடைய கேப்டனுக்கு எவ்வளவு திறமைகள் தேவைப்படுமோ அதைவிட அதிகமான திறமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனுக்கு தேவை. நிலையில்லாத அரசியல் சூழல் நிலவும் நாடு. கிரிக்கெட் வாரியத்தலைமை, உறுப்பினர்கள் எல்லாம் அட்-ஹாக் முறையிலேயே பெரும்பாலும் நியமிக்கப் படுவார்கள். கேப்டனை மாற்றுவது எல்லாம் சாதாரணம். ஆஸ்திரேலியா அணியில் கடந்த 30 ஆண்டுகளில் பார்டர், டெய்லர் ,ஸ்டீவ் வாவ், ரிக்கிபாண்டிங், கிளார்க்,ஸ்மித் என விரல்விட்டு எண்ணும்படியான கேப்டன்கள்தான். கேப்டன் பதவியை விட்டு இறங்கிவிட்டால் அணியிலேயே இருக்க மாட்டார்கள். ரிக்கி பாண்டிங் விதிவிலக்கு. ஆனால் பாகிஸ்தான் அணி, அதிகபட்சம் ஆறு முன்னாள் கேப்டன்களுடன் கூட விளையாடி இருக்கிறது.

அணியில், ஒரு கேப்டனுக்கு சமமான திறமை உள்ளவர், முக்கியமாக முன்னாள் கேப்டனாகவோ, அல்லது அடுத்த வாய்ப்பில் உள்ள ஒருவராகவோ இருப்பின் அவரைச் சமாளிப்பது கேப்டனுக்கு சிக்கலான விஷயம். அணியே இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும். அவர்கள் மனம் கோணாமல் ஒருங்கினைக்க வேண்டும், சரியாக ஆடாதவர்களை திறமையாக கையாள வேண்டும்.


இம்ரான் கானுக்கு அடுத்து அணியில் நுழைந்தவர்தான் ஜாவித் மியாண்டாட். ஆனால் தொடர்ந்து தன்னுடைய பேட்டிங்கால் மிளிர்ந்து 79-80களில் கேப்டன் பதவியைப் பெற்றார். அவர் ஸ்டீரிட் ஸ்மார்ட் கிரிக்கெட்டர் மட்டுமல்ல. ஸ்டீரீட் பைட்டரும் கூட. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் டென்னிஸ் லில்லியை பேட்டால் அடிக்கச் சென்று பிரச்சினையை உண்டாக்கினார். அதனால் அணியின் மற்ற வீரர்கள் அவர் தலைமையில் விளையாட மறுத்தார்கள். எனவே இம்ரான் கான் அணிக்கு கேப்டன் ஆனார். அந்த நேரத்தில் தான் அவர் தன் பந்து வீச்சு பொற்காலத்தில் இருந்தார். டெஸ்டில் அந்த இரண்டாண்டுகளில் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்னுக்கு குறைவாகவே கொடுத்துக் கொண்டிருந்தார். இம்ரான் தலைமையில் அணி தலை நிமிரத் தொடங்கியது. இருந்தாலும் மியாண்டாட்டை சமாளிப்பது ஒரு தலைவலியாகவே இருந்தது இம்ரானுக்கு. போதாக்குறைக்கு இன்னொரு சீனியர் பேட்ஸ்மென் ஜாகிர் அப்பாஸ் வேறு, இந்த நேரத்தில் இம்ரானுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மியாண்டாட், ஜாகிர் அப்பாஸ் என கேப்டன் பதவி மாறி மாறிச் சென்று கொண்டு இருந்தது.


ஆனாலும் இம்ரான் அணியைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தார். மிட் ஆனில் நின்று கொண்டு பந்து வீச்சாளர்களை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருப்பார். வாய் வார்த்தைகள் குறைவுதான். இம்ரானின் சின்ன கண்கள் அவர் உணர்ச்சியை துல்லியமாக காட்டிவிடும். ஒயிட், நோபால் வீசினால், பீல்டிங் மிஸ்டேக் செய்தால் ஒரு முறை முறைப்பார். அந்த கண்ணில் புலியின் சீற்றம் தெரியும்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அப்போது இன்னொரு பிரச்சினை சம்பள விவகாரம். மற்ற நாட்டு வீர்ர்களைவிட குறைவான சம்பளம் தான். இந்திய அணி வீரர்கள் பலரும் ஸ்டேட் பாங்க், தனியார் நிறுவனங்களில் கௌரவ சம்பளம் பெற்று வந்தார்கள். விளம்பர வாய்ப்புகளும் உண்டு. பாகிஸ்தான் வீர்ர்களுக்கு அது கூட கிடையாது. எனவே அவர்களை வேறு எந்த வழிக்கும் சென்றுவிடாமல் மோட்டிவேசன் செய்ய வேண்டிய வேலை வேறு.


இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நட்த்திய 87 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெற்றி பெற எல்லாவித சாத்தியங்களோடும் அணியை உருவாக்கியிருந்தார் இம்ரான். அதோடு ஓய்வு பெறும் திட்டமும் வேறு, ஆனால் அரை இறுதியில்ஆஸ்திரேலியாவோடு தோற்று வெளியேறியது. இருந்தும் தன் ஓய்வை அறிவித்தார் இம்ரான். அடுத்ததாக அணியில் மியாண்டாட்டுக்கும் ரமீஸ் ராஜாவுக்கும் பிரச்சினை உண்டாக அணி தொடர்ந்து பல தோல்விகளைக் கண்டது. மக்கள் இம்ரானே மீண்டும் கேப்டனாய் வரவேண்டும் என போராட்டம் நடத்தாத குறை. அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்கே இம்ரானை அழைத்து மீண்டும் கேப்டனாக்கினார்.


அதன்பின்னர் நேரு கோப்பை வெற்றி, மேற்கிந்திய தீவுகளுடன் டெஸ்ட் வெற்றி என பீடு நடை போட்டார். கடைசியாக 92 உலக கோப்பை. இம்ரானுக்கும் 41 வயது ஆகியிருந்தது. கடைசி உலக கோப்பை வேறு.


இனி வரும் எல்லா ஆட்டங்களிலும் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தாலும் மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்துத்தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலை. எந்த கேப்டனும் துவண்டு போவார். ஆனால் இம்ரான் துவளவில்லை. மூலையில் சிக்கவைக்கப்பட்ட புலியைப் போல் நாம் எதிர்வினை காட்டவேண்டும் என்று அணியினரை உற்சாகப் படுத்தினார்..

இம்ரான் கேப்டன்ஷிப் பன்முகத்தன்மை கொண்டது என்றால் அதில் ஒரு முகம் பிரச்சினைகளை சந்திக்க தளபதிகளை அனுப்பாமல் தானே களத்தில் இறங்குதல். பாகிஸ்தானுக்கு நிலையில்லாத பேட்டிங்தான் அந்த உலக்கோப்பையில் பிரச்சினை. பொதுவாக மத்திய வரிசையில் இறங்கும் இம்ரான் முதல் விக்கெட் விழுந்த உடன் இறங்கத் துவங்கினார். காரணம் பந்து ஸ்விங் ஆகும். மற்றவர்கள் சொதப்பி விடுவார்கள் என. எல்லாப் பந்துகளையும் பிரண்ட் புட்டில் ஆடி ஸ்விங் எஃபெக்ட்டை குறைத்தார். நல்ல உயரமான வீரர் ஆகையால் அதை எளிதாக செய்ய முடிந்தது. அடுத்து ஏதாவது விக்கெட் விழுந்தால் மியாண்டாட் வருவார். இருவரிம் சேர்ந்து 40 ஓவர் ஆடிவிடுவார்கள். பின்னர் கடைசி 10 ஓவர்களில் ருத்ர தாண்டவம் தான்.


இதே இம்ரான் தான் முன்னாட்களில் பின்ச் ஹிட்டர் என்னும் கான்செப்டை திறம்பட கையாண்டவர். முக்கியமான மேட்சுகளில் வாசிம் அக்ரமை ஒன் டவுன் இறக்கி கன்னா பின்னாவென சுத்தச் சொல்வார். ஆனால் நிலைமையை அனுசரித்து பாஸிவ் ஹிட்டர் என்பதை 92 உலக்கோப்பையில் கொண்டுவந்தவரும் இவர்தான்.

இம்ரானின் இந்த அணுகுமுறையால் மீதமிருந்த அனைத்துப் போட்டிகளையும் வென்று கோப்பையைக் கைப்பற்றியது பாகிஸ்தான். இன்சமாம், மியாண்டாட், அக்ரம் எல்லோரும் தேவையான போது பெர்பார்ம் செய்த்து முக்கிய காரணம் என்றாலும் அந்த எபர்டை வெற்றியாக மாற்ற இம்ரான் தேவையாக இருந்தார்.


கேப்டன்ஷிப், பந்துவீச்சு, பேட்டிங் இதுதான் அவரின் தர வரிசை எனலாம். இம்ரான் தன் இளமையில் இருந்த போது வேகப்பந்து வீச்சாளர், பின்னர் அபாரமான இன்ஸ்விங்கர், பின்னர் ஆபத்தான ரிவர்ஸ் ஸ்விங்கர். இன்சுவிங் யார்க்கரும் போடுவார், முட்டி அளவு வரும் இன்சுவிங் புல்டாஸும் போடுவார், நெஞ்சுக்கும் பந்தை எகிறவிடுவார். ரிவர்ஸ் சுவிங்கின் ஸ்தாபகர்களில் ஒருவர். இவரும் சர்பராஸ் நவாஸும் சேர்ந்துதான் இதை பிரபலப்படுத்தினார்கள். ஆரம்ப காலங்களில் இது பந்தை சேதப்படுத்தியதால் ஆகிறது என குற்றம் சாட்டப்பட்டாலும் பின்னர் ஒரு கலையாகவே பரிமளித்தது.


இம்ரான் ஒரு முறை, தான் சோடா மூடியால் பந்தைத் தேய்த்து ரிவர்ஸ் சுவிங் செய்த்தாகவும், ஆனால் அது ஒரு நல நிதி மேட்ச், மேட்சை சுவராசியமாக்க அப்படி செய்ததாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து பலத்த விமர்சனங்களுக்கு ஆளானார்.

அந்தக் காலத்தில் இப்போது இருப்பது போல 360 டிகிரியிலும் காமிரா வைக்க மாட்டார்கள். இரண்டே காமிரா தான். அதுவும் அம்பயரின் தலைக்கு நேர் மேலே வைத்திருப்பார்கள். பேட்ஸ்மென் பேட்டை டொக் டொக் என தட்டிக்கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். திடீரென பவுலர் வந்து பந்தை வீசுவார். அதை பேட்ஸ்மென் அடிப்பார். கிரிக்கெட் தெரிந்த காமிராமேன் என்றால் காமிராவை பந்தை நோக்கி திருப்புவார். சில கேமிராமேன்கள் பேட்ஸ்மென் அருமையான கவர் ட்ரைவ் அடிக்கும் போது மிட் விக்கெட்டை நோக்கி காமிராவை திருப்பி நம்மை நோகடிப்பார்கள். இதாவது பரவாயில்லை. சில மேட்சுகளில் ஒரே ஒரு காமிரா மட்டும் இருக்கும். ஒரு ஓவரில் பேட்ஸ்மென்னை முன்னாலும், அடுத்த ஓவரில் பின்னால் இருந்தும் தரிசிக்கலாம்.


எனவே பந்தை யார் கண்ணிலும் படாமல் சேதப்படுத்த வாய்ப்பு அதிகம். ஆனால் இதே வாய்ப்பு எல்லா அணிகளுக்கும் தான் இருந்த்து. ஆனால் அவர்களால் ரிவர்ஸ் சுவிங் செய்ய முடியவில்லையே? கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து நாட்டு அணியினர் கூட பல ஆண்டுகள் கழித்தே ரிவர்ஸ் சுவிங்கை பாகிஸ்தானிடம் இருந்து கற்றுக் கொண்டார்கள். இன்றுவரை பாகிஸ்தான் ஒரு சவால் மிக்க அணியாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அவர்களின் வேகப் பந்துவீச்சும், ரிவர்ஸ் ஸ்விங்கும் தான். அதற்கு விதை போட்டவர்களில் ஒருவர் இம்ரான்கான்.


இம்ரான்கானுக்கும் சத்யம் சிவம் சுந்தரம் ஜீனத் அமனுக்கும் காதல் என அப்போது பாலிவுட் பத்திரிக்கைகளில் பலமான கிசுகிசு அடிபட்டுக் கொண்டிருந்த்து. இம்ரானும் அந்நாட்களில் ஒரு செக்ஸ் சிம்பலாக விளங்கியவர்தான். ஆனால் உலக கோப்பையை வென்றபிறகே தன் 42ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். தன் தாய் புற்று நோயால் இறந்ததால் ஒரு மருத்துவமனையைக் கட்டினார். பின் அரசியலுக்கு வந்தார். இயல்பாகவே அவரிடம் இருக்கும் தலைமைப் பண்பு அதற்கு கை கொடுத்தது.


நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது பேசிக்கொள்வோம் “நாங்கள்ளாம் பாகிஸ்தான் டீம் மாதிரி. முதல்ல படிக்க மாட்டோம், எக்ஸாமுக்கு கடைசி நாள் படிச்சு தட்டி தூக்கிடுவோம்” என்று. உண்மை. அந்நாட்களில் ஏராளமான மேட்சுகளை கடைசி நேர பேட்டிங்காலோ, பௌலிங்காலோ அந்த அணி ஜெயித்தது. அதன்பின்னால் இம்ரானின் எதையும் செய்யலாம் என்ற மன உறுதி இருந்தது.


இன்றும் கூட நாட்கள் கடந்து விட்டது. ஒன்றும் சாதிக்க வில்லையே? தோற்று விடுவோமோ என்கின்ற நினைப்பு வரும்போதெல்லாம். ஐந்து மேட்சுகளின் முடிவில், டோர்னமெண்டை விட்டு வெளியேறும் நிலையில் இம்ரான் கான் காட்டிய அந்த தைரியமும் நிதானமும் மனதில் தோன்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

1 comment:

ஆரூர் பாஸ்கர் said...

நல்ல அவதானிப்பு