February 07, 2020

கமல் ரசிகர்கள் - விஸ்வரூப பிரச்சினை அன்று.

சென்னையில் 95ல் இருந்து 2010 வரை இருந்திருக்கிறேன். எல்டாம்ஸ் ரோட்டின் வழியாகச் செல்லும் போது, கமல்ஹாசன் வீட்டருகே வரும்போதெல்லாம் இப்போது உள்ளே இருப்பாரா என்று மனதில் ஒரு ஆவல் எட்டிப்பார்க்கும். தலை தன்னிச்சையாக அவர் வீட்டின் பக்கம் திரும்பிப் பார்க்கும்.

இளம் பருவத்தில், நமக்குப் பிடித்தமான பெண் இருக்கும் வீட்டின் தெருப்பக்கம் போனாலே நமக்கு ஜிவ்வென்றிருக்குமே ஏதாவது வேலையைச் சொல்லிக்கூட அந்த தெருவில் நுழைந்து எங்காவது நம் ஆள் தென்படுகிறாளா என கண்ணைச் சுழற்றுவோமே அதுபோல எனக்கு எல்டாம்ஸ் ரோடு சாம்கோ ஹோட்டல் ஏரியா. 2005 வாக்கில் அடையாறில் உள்ள ஐஐடி மெட்ராஸில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன். நண்பர்களுடன் வெளியில் சாப்பிடவேண்டும் என்றால் நான் சாம்கோ போலாம்டா நல்லா இருக்கும் என்று மற்றவர்களை கன்வின்ஸ் செய்து கூட்டி வந்துவிடுவேன். கமல்ஹாசனுக்கு பிடித்தமான ஹோட்டல் என்பது மட்டுமல்லாமல் அடிக்கடி அங்கே வந்து சாப்பிடுவார் என்பதும் காரணம். நண்பர்களும் எப்படியாவது உங்க தலைவரை பார்த்திடணும்னு எங்களை ஊறுகாய் ஆக்குற என்பார்கள். இருந்தாலும் சாம்கோ பிரியாணி அருமையானது என்பதால் வந்துவிடுவார்கள்.

2008-09 ஆம் ஆண்டில் உரையாடல் என்னும் அமைப்பினர் எல்டாம்ஸ் ரோட்டில் இருந்த பார்வதி மினி ஹாலிலும் பின்னர் அதன் எதிரே இருந்த கிழக்கு பதிப்பக மொட்டை மாடியிலும் உலகத்திரைப்படங்களை ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறில் திரையிடுவார்கள். பதிவர்கள் கே என் சிவராமன் மற்றும் ஜியோவ்ராவ் சுந்தர் இதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார்கள். சென்னையில் இருந்த பதிவர்கள் சந்திக்கும் வாய்ப்பாகவும் இது இருந்தது. படம் பார்த்துவிட்டு காலாற நடந்து கமல்ஹாசன் வீட்டு கேட்டின் முன் நின்று எங்காவது தென்படுகிறாரா என்று பார்ப்பேன்.

இந்தச்சூழ்நிலையில் தான் 1959ல் ஆரம்பிக்கப்பட்ட ஐஐடி மெட்ராஸின் பொன்விழா கொண்டாட்டங்கள் 2009ல் தொடங்கியது. நிகழ்வின் ஒரு பகுதியாக ஆங்கிலத் துறை, திரைக்கதை பயிற்சி பட்டறையை ஒரு வாரம் நடத்தியது. என் ஆராய்ச்சி வழிகாட்டி இது மாதிரியான நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்பதை விரும்ப மாட்டார். அதிலும் குறிப்பாக என்னை. ஒரு நாள் விடுமுறை கேட்டாலே கல்யாணம் ஆயிருச்சு, பையன் ஸ்கூல் போறான், காலாகாலத்துல முடிச்சிட்டு வேலைக்குப் போறத விட்டுட்டு என்பார். அதனால் அதில் நான் பங்கேற்க முடியவில்லை.

ஆனால் நான் யாரைச் சந்திக்க வேண்டும் என்று 20 ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருந்தேனோ அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதை முன்னின்று நடத்தியவர் வேறு யாருமல்ல கமல்ஹாசன் தான். ஐஐடி வளாகத்திலேயே அவர் ஒரு வாரம் தங்கியிருந்தார். சக அமைப்பாளர்களுடன் காலையில் வாக்கிங் செல்லும் போது, தேநீர் இடைவேளைகளில், மாலை அரங்கத்தின் முன் என தினமும் நான்கைந்து முறை அவரைப் பார்த்து விடுவேன். பயிற்சி பட்டறை முடியும் நாளன்று அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.

பின் படிப்பு முடிந்து மதுரைக்கு வேலைக்குச் சென்றுவிட்டேன். 2013 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் சென்னை திருவல்லிக்கேணியில் வேலை விஷயமாக தங்க நேர்ந்தது. அப்போது விஸ்வரூபம் பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருந்தது. கமல்ஹாசன் பேட்டி, ஜெயலலிதா பதில் பேட்டி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு, நீதிபதி படம் பார்த்தார் என பிரச்சினை சுழன்று கொண்டே இருந்தது. அன்றைய நாள் வேலை மதியமே முடியவும், ஹோட்டல் ரூமுக்கு திரும்பி வரும் வழியில் நீண்ட நாட்களுக்குப் பின் திருவல்லிக்கேணி நாயர் மெஸ்ஸில் சாப்பிடச்சென்றேன். அங்கே என் ஊர்க்காரரும் கமல்ஹாசன் நற்பணி மன்ற தீவிர செயல்பாட்டாளருமான ராசண்ணனை சந்தித்தேன். எங்கடா இங்க என்றவாறு அளாவளாவத் தொடங்கினார்.

அவர் மட்டுமல்லாமல் நற்பணி மன்ற நிர்வாகிகளும் நிறைய வந்திருந்தனர். தலைவர்க்கு பிரச்சினைனதும் மனசே சரியில்லை. அதான் ஆளுக்கு ஒரு லட்சம் போட்டு பத்து லட்சம் கொண்டு வந்திருக்கோம். நாமல்லாம் இருக்கோம்னு அவர்க்கு காட்டணும் என்றவர்கள் ஆழ்வார்பேட்டைக்கு கிளம்பிட்டோம் என்று என்னையும் அள்ளிப்போட்டுக்கொண்டனர். மூன்றரை மணி அளவில் அங்கே சென்றடைந்தோம். அருகேயிருந்த டீக்கடைகள், ஜூஸ் கடைகள் நிழல்தரும் இடங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் கமல் ரசிகர்கள். டீ குடிக்கப் போகும்போது நாம் கவலையுடன் தலைவரைப் பற்றிப் பேசுவதைக் கேட்டால் நமக்கும் சேர்த்து பணம் கொடுக்கிறார்கள், ஒன்றரை லிட்டர் குளிர்பானங்களை யாரோ வாங்கிக் கொண்டுவந்து வெயிலில் நிற்பவர்களுக்கு கொடுக்கிறார்கள். ஊர் திருவிழா அட்மாஸ்பியர் போல அது ,மாறிக்கொண்டிருந்தது.

மாலை ஆனது, கூட்டம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது. வேலைக்குப் போனவர்கள் எல்லாம் வீட்டுக்குப் போகாமல் தங்கள் அலுவலகப் பையுடன் வந்துவிட்டார்கள். அருகில் மென்பொருள் நிறுவன மேலாளர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். தமிழ்நாட்டுல எப்படியும் நம்மாளுக ஒரு லட்சம் பேர் நல்ல நிலைமையில் இருப்பாங்க, ஆளுக்கு பத்தாயிரம் போட்டாலே 100 கோடி வந்திடும். கொடுத்துருவோம் என அருள் வந்தவர் போல் பேசிக்கொண்டிருந்தார். உடன் வந்தவர்கள் அருகேயிருந்தவர்கள் எல்லாம், அக்கவுண்ட் நம்பர சொல்ல சொல்லுங்க ஆன்லைன் ட்ரான்ஸ்பர் பண்ணிடுவோம் என சொல்லி, யாருகிட்ட அக்கவுண்ட் நம்பர் கேட்கலாம் என விசாரிக்கத் தொடங்கினார்கள். உத்தேசமாக ஏழு மணி அளவில் ஐந்தாயிரம் பேருக்கு மேல் இருந்தார்கள். எல்லோரிடமும் இதே உத்வேகம்தான் இருந்தது. யார் கிட்ட கொடுக்கணும் என்பதுதான் ஒரே கேள்வியாக இருந்தது.

என்னடா இவ்வளவு வெறியா இருக்காங்க என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்ன செய்துவிட்டார் இவர்? எதை நம்பி இப்படி இறங்கி வருகிறார்கள் என்று. பெரும்பாலும் மக்களின் பொது நம்பிக்கைக்கு எதிராகவே பேசி வந்துள்ளார். அவரால் பணம் சம்பாதித்த ரசிகர்கள் என்பது மிகக்குறைவு. ரசிகர் மன்ற ஷோவில் வரும் பணத்தையெல்லாம் கூட ரத்ததான முகாம், நிழற்குடை, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் என்று செலவழித்து விடுவார்கள். தங்கள் கைக்காசை போட்டவர்கள் எனக்குத் தெரிந்தே ஏராளம் உண்டு.

அந்தக் கூட்டத்தில் என் நண்பர்கள் பலரை மீண்டும் சந்திக்க முடிந்தது. எதையும் கிண்டலாகவே அணுகும் நபர் அதில் ஒருவர். ஒரு குயர் நோட்டு ஒண்ணு வாங்கிட்டு வந்து மொய் மாதிரி எழுத ஆரம்பிப்போம். எப்படியும் ரெண்டு மூணு கோடி தேத்திரலாம் என்றார். அப்போது எங்கள் குழாமில் சீரியஸான ஒருவர், கையில் ஒரு பாலீத்தின் கவர் வைத்திருந்தார். என்ன என கேட்டதற்கு வீட்டுப் பத்திரம் கொடுக்கலாம்னு வந்தேன் என்றார். அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது. எச் ஐ ஜி எனப்படும் ஹையர் இன்கம் குரூப் வீடு அது, பெசண்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் அருகே. இரண்டு கோடிக்கு குறையாத மதிப்புள்ளது அது. அவரே இதை விரும்பமாட்டார்யா வேலையைப் பாரு என அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்தோம்.

ஆனால் சுற்றி வந்த போது அவரைப்போல சிலரைக் காண முடிந்தது. வீடு, மனை பத்திரங்களுடன் வந்திருந்தார்கள். எனக்கு சிறிது வெட்கமாகக் கூட இருந்தது. நம்மளும் கமல் ரசிகர்னு சுத்திக்கிட்டு இருக்கோம். ஒரு ஆயிரம் ரூபா கூட குடுக்க மனசு வரல்லியே என்று.

ஒரு வழியாக கமல் வீட்டு உச்சிப்படியின் மீது தோன்றினார், கறுப்பு உடை. எல்லோரும் போய் அவங்க அவங்க வேலையைப் பாருங்க. நான் என் வேலையைப் பார்க்கிறேன் என்பதுதான் அவர் பேச்சின் சாராம்சம்.
கூட்டம் மெல்ல கலையத் தொடங்கியது. என் ஊர்க்காரர்கள் வண்டியில் ஏறி திரும்பும் போது நாளைக்குத்தான் போறோம் நம்ம ரூமுக்கு வா பேசிக்கிட்டு இருப்போம் என்றார்கள்.

ரூமை அடைந்த உடன், அவர் அவர் தொழில், வேலை சார்ந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு பிறப்பித்தார்கள். நானும் சிறிது நேரம் என் பணி சம்பந்தமாக அலைபேசியில் பேசினேன். அடுத்த நாள் வேலைகள் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

ஒரு வழியாக சாப்பிடக் கிளம்பினோம். போகும் வழியிலும் அவரவர் தொழிலில் என்ன செய்யலாம் என்ற விவாதம் தொடர்ந்தது. கமல்ஹாசன் செய்த்து என்ன என்பதற்கு அப்போது எனக்கு விடை கிடைத்தது. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் தங்கள் தொழிலில்/வேலையில் புதுமையாக, ஆர்வமாகச் செய்து சாதிக்க வேண்டும் என்பதை அவரைத் தொடர்பவர்களிடம் புகுத்தி இருக்கிறார். அந்த வழிகாட்டலுக்காகத்தான் அவருக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்ற துடிப்பு எல்லோருக்கும்.

No comments: