August 09, 2021

காதலுக்கு மரியாதை

இயக்குநர் பாசில் மலையாளத்தில் ஒரு படம் எடுப்பார். அது ஹிட்டான உடன் தமிழுக்கு அந்தப் படம் செட் ஆகுமா என யோசித்து, அதற்கேற்ற நடிகர்களை வைத்து இங்கே மீண்டும் எடுப்பார். பூவே பூச்சூட வா, பூ விழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருசம் 16 என. அது போல மலையாளத்தில் அவர் குஞ்சாகோ போபன், ஷாலினியை வைத்து அவர் எடுத்த அனியத்திப் பிறாவு படத்தை இங்கே இயக்க வந்தார். ஹீரோயின் ஷாலினி என பிக்ஸ் ஆகிக் கொண்டார். சிவகுமார், ஸ்ரீவித்யா ஆகியோரையும் பிக்ஸ் செய்து விட்டார். நாயகனாய் நடிக்க அவருக்கு ஒரு இளமையான ஹீரோ தேவைப்பட்டர். சிலர் சூர்யாவை சொன்னதாகவும், ஆனால் சிவகுமார் அப்பா-மகனாக நடிக்க விரும்பவில்லை என்று சொல்லி மறுத்து விட்டதாகவும் சொல்வார்கள். அடுத்து விஜய்யை புக் செய்ய போனார்கள். அப்போது விஜயின் கால்ஷீட் சங்கிலி முருகனிடம் இருந்தது. விஷ்ணு படம் பி & சி செண்டரில் நன்கு ஓடியதைப் பார்த்து அவர் விஜய்யின் கால்ஷீட்டை எஸ் ஏ சந்திரசேகரனிடம் இருந்து வாங்கியிருந்தார். சங்கிலி முருகன் தயாரிப்பு, பாசில் இயக்கம், விஜய்-ஷாலினி ஜோடியில் காதலுக்கு மரியாதை உருவாகத் தொடங்கியது. இசை பாசிலின் மனம் கவர்ந்த இளையராஜா. பாசில் என்றாலே பட்டாசாக பாடல்களைப் போட்டுக் கொடுப்பார் இளையராஜா. சங்கிலி முருகனுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தமே உண்டு. சங்கிலி முருகனின் நாடகங்களுக்கு இளையராஜா இசை அமைத்த காலத்தில் இருந்தே அவர்களின் நட்பு ஸ்ட்ராங். சங்கிலி முருகனுக்கு எங்க ஊர் பாட்டுக்காரன், எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டுத் தங்கம், பெரிய வீட்டுப் பண்ணக்காரன் என பல ஆல்பம் ஹிட்களை கொடுத்தவர். அவர் ஆர்மோனியப் பெட்டியை சும்மா திறந்தாலே இனிமையான பாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. மனதிற்குப் பிடித்தவர்களுக்கு என ஆர்மோனியத்தை திறந்தால்? கேட்கவா வேண்டும். படம் விரைவாக ஷூட்டிங் முடிந்தது. படத்திற்குப் பிண்ணனி இசை அமைக்க உட்கார்ந்த இளையராஜாவிற்குப் பொறி தட்டியது. இந்தப் படம் நிச்சயம் ஹிட் ஆகும் என. உடனே தன் நண்பர்களுக்கு இது பற்றி தெரிவித்து விநியோக உரிமை வாங்குங்கள் என்று சொன்னார். அப்படி அவர் சொன்னவர்களில் தாணுவும் ஒருவர். ஆனால் தாணுவோ, அவர் பார்ம்லாம் போயிருச்சு. இப்படித்தான் கற்பூர முல்லைக்குச் சொன்னார். படம் தேறவே இல்லையே என தயங்கினார். தாணு சொன்னதிலும் நியாயம் உண்டு. பாசிலுக்கு அப்போது தமிழில் கடைசி கமர்சியல் ஹிட் வருசம் 16 தான். அதன்பின் அவர் எடுத்த அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா என தொடர்ச்சியாக வசூல் ரீதியாக சுமாரான படங்கள் தான். இளையராஜாவும் அப்போது கமர்சியலாக தன் முதல் இடத்தை ரஹ்மானிடம் இழந்திருந்தார். ரஹ்மான் பெயர் இருந்தாலே விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் போட்டி போட்டி படத்தை வாங்கிய நேரம். காதலுக்கு மரியாதையில் அன்றைக்கு மார்க்கெட் வேல்யூ விஜய்க்கு தான் இருந்தது. 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக விஜய்க்கு பெரிய வெற்றி. ஆனால் அதற்கடுத்து வசந்த வாசல். மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன் என சுமாரான படங்களைக் கொடுத்து சறுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்து லவ் டுடே படம் வெளிவந்து அவரை மீண்டும் தூக்கி நிறுத்தியது. அதற்கடுத்து சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஒன்ஸ்மோர், வசந்தின் நேருக்கு நேர் படங்களின் கமர்சியல் வெற்றி, விஜய்க்கு ஒரு மார்க்கெட் வேல்யூவை கொடுத்திருந்தது. இந்த நேரத்தில் தான் படத்தை ப்ரிவியூ பார்த்தார் என் எஸ் சி ஏரியாக்களின் முக்கிய விநியோகஸ்தரான என் எஸ் சி ரவி என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரன். ஜாக்கிசான் படங்களை தமிழ்நாட்டில் விநியோகம் செய்தும் பரவலாக அறியப்பட்டவர். அவருக்கும் இந்தப் படம் ஹிட் ஆகும் எனத் தோன்றியது. அன்றைய தேதிக்கு படத்தின் மொத்த தயாரிப்பு செலவு 90 லட்சம் என்பார்கள். அதற்கு மேல் ஒரு தொகையை வைத்து சங்கிலி முருகனிடம் இருந்து தமிழ்நாடு ஏரியா முழுவதையும் வாங்கினார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். சங்கிலி முருகனும் படம் வெளிவரும் முன்னரே லாபம் வந்து விட்டதே என திருப்தியடைந்து விட்டார். படம் வெளியானது. விஜய்க்கான கூட்டம், பாசில் படம் என்பதால் எதிர்பார்ப்பில் ஒரு சிறு கூட்டம் படத்திற்கு வந்தது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நல்ல பீல்குட் படம், இனிமையான பாடல்கள், படம் முடிந்து வெளிவரும் போது மனசு லேசான உணர்வு. அவ்வளவு தான். முழுக்க முழுக்க வாய்மொழி விளம்பரத்தாலேயே படம் பற்றிக் கொண்டது. எப்படிப்பட்ட ஹிட் என்றால் நாகர்கோவில் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது, ஓரிரு மாதம் கழித்து வெளியான அருப்புக்கோட்டையிலும் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கெல்லாம் ஐந்து மடங்கு வரை லாபம் என்றார்கள். இந்தப் பட வெற்றிக்குப் பின்னால் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இனி நாமளும் படம் தயாரித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்தார். முதல் படமே விஜய்காந்த் – விக்ரமன் காம்போவில் வானத்தை போல, அடுத்தடுத்து பெரிய படங்கள் தான். ஷங்கரின் அந்நியன், கமல்ஹாசனின் தசாவதாரம் என. பாசிலுக்கு ஒரு ராசி உண்டு. அவர் படத்தின் மூலம் அறிமுகமாகும் / நடிக்கும் சில நடிகைகளுக்கு கிட்டத்தட்ட தேவதை ஸ்டேட்டஸ் கிடைத்து விடும். அவர்கள் தமிழ்நாட்டில் மூலை முடுக்கில் உள்ள வீடுகளுக்கும் சென்று சேர்ந்து விடுவார்கள். அப்படி ஒரு கேரக்டர் ஆர்க் அமைக்கக் கூடிய வல்லமை பாசிலுக்கு உண்டு. பூவே பூச்சுடவாவில் அவர் அறிமுகப்படுத்திய நதியா 35 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் ஒரு ஸ்டேட்டஸோடுதான் இருக்கிறார். வருசம் 16 குஷ்பூ இத்தனை பொலிட்டிகல் ஸ்டேண்டுகளுக்கு அப்புறமும் ஒரு பெர்சனாலிட்டியாக முக்கிய படங்களில் நடிக்கிறார். காதலுக்கு மரியாதை ஷாலினிக்கு அப்படி ஒரு ஸ்டேட்டஸை கொடுத்தது. அவர்க்கு காதலுக்கு மரியாதையின் மூலம் கிடைத்த கிரேஸை அமர்க்களம் பட ஓப்பனிங் ஷோவில் கண்டு கொள்ள முடிந்தது. அமர்க்களம் படத்தில் முதல் காட்சியே ஷாலினியின் பாடல் தான். அதற்கு கிடைத்த கை தட்டல் வரவேற்பு ஹீரோக்களுக்கு இணையானது. காதலுக்கு மரியாதை, இளையராஜாவுக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது எனலாம். திரையுலகமே ரஹ்மான் ரஹ்மான் என்று அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்த போது, என்னாலும் ஒரு கமர்சியல் ஹிட் படத்தைக் கொடுக்க முடியும் என காட்ட ஒரு வாய்ப்பாய் காதலுக்கு மரியாதை அமைந்தது. எக்கச்சக்க கேசட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. விஜய்க்கு பூவே உனக்காக ஒரு மேக் ஓவர் கொடுத்தது என்றால் காதலுக்கு மரியாதை ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. ஏராள பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் விஜய்யின் ரசிகர்களாக மாறினார்கள். பம்பாய் ரொட்டி சுக்கா ரொட்டி, தொட்ட பெட்ட ரோட்டு மேல முட்ட பரோட்டா என குத்துப் பாடல்களாய் பாடிக்கொண்டிருந்த விஜய்க்கு ஒ பேபி, ஓ பேபி என்ற பாடலை இளையராஜா பாடக் கொடுத்து இன்னும் விஜயை மெருகேற்றினார். பாசில் அதற்கடுத்து விஜய்யை வைத்து கண்ணுக்குள் நிலவு, ஸ்ரீகாந்தை வைத்து ஒரு நாள் ஒரு கனவு ஆகிய படங்களை இயக்கினார். இரண்டும் சரியாகப் போகவில்லை. அதோடு இங்கு வருவதை நிறுத்திக் கொண்டார். யோசித்துப் பார்த்தால் தமிழில் பாசிலின் மிகப்பெரிய ஹிட் காதலுக்கு மரியாதை தான். வருசம் 16 கூட அதற்கடுத்து தான் வரும். காதலுக்கு மரியாதையின் வெற்றிக்கு படத்தின் கதை, இசை போன்ற அம்சங்கள் காரணமாய் இருந்தாலும் படத்தை தாங்கி நிற்க நல்ல இளமைத் துடிப்பான ஒரு நாயகன் தேவைப்பட்டார். அதை சிறப்பாக விஜய் செய்தார். அவருடைய கேரியரில் மறக்க முடியாத படமாகவும் அமைந்தது.

No comments: