September 13, 2008

ஒரு நாள் கிரிக்கெட்டின் போக்கை மாற்றிய ஐவர்

37 வருடமாக ஆடப்பட்டு வரும் இது, தோன்றியதிலிருந்து பல மாற்றங்களை சந்தித்துள்ளது. அதில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் இவர்கள்.


ஜாவேத் மியான்டாட்


சாப்ட் ஹேண்ட் சிங்கிள் இவரது சிறப்பு. தட்டி தட்டி எடுக்கப்படும் இவருடைய சிங்கிள்கள் எதிர் அணியின் வசமிருக்கும் ஆட்டத்தை தட்டிப் பறித்து விடும். 15 முதல் 40 ஓவர் வரையில் இந்த வகை சிங்கிள்கள் எந்த அணிக்கும் கைகொடுக்கும். டீன் ஜோன்ஸ், பேவன் ஆகியோர் இதை அடுத்த தளத்துக்கு எடுத்து சென்றனர். இந்த வகை ஆட்டத்தை ஒரு நாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக முதலில் பயன்படுத்தியவர் இவரே.


ஜான்டி ரோட்ஸ்

இவர் வருகைக்கு முன் விக்கெட் கீப்பர் மட்டுமே ஸ்பெசலிஸ்ட் பீல்டர். பேக்வர்ட் பாயிண்ட்ம் ஒரு ஸ்பெசலிஸ்ட் ப்ளேஸ், 30 முதல் 40 ரன் தடுக்க முடியும் என காட்டியவர். இவர் வருகைக்கு பின்னர்தான் எல்லா அணிகளிலும் பீல்டிங் புரட்சி ஏற்பட்டது

கிரேட் பாட்ச்

நம்ம ஸ்ரீகாந்த்,அதற்கு பின்னால் ஜயசூரிய/கலுவித்தரன அப்படி ஆடியிருந்தாலும், வெற்றிகரமாக முதலில் நடத்திக்காட்டியவர் இவரே. அதிரடி துவக்க ஆட்டக்காரர்கள் இல்லாமல் இன்று எந்த அணியும் இல்லை. 1992 ல் இவர் அம்புரோஸ்,அக்ரம் போன்றோரை அடித்ததைப் பார்த்துதான் ரணதுங்காவுக்கே இந்த ஐடியா வந்திருக்க வேண்டும்.

பாப் ஊல்மர்

கிரிக்கெட்டில் கோச்சுகளின் முக்கியதுவத்தை உணர வைத்தவர். முதல் லேப் டாப் கோச். இவர் வருகைக்கு பின்னரே எதிர் அணியினரின் பலவீனத்தை அக்கு வேறு ஆணி வேறாக பலரும் அலசத்தொடங்கினர்.

கில்க்ரிஸ்ட்

பலத்த எதிர்ப்புக்கிடையில் ஹீலேவுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்தவர். அதற்க்கு முன்னால் விக்கெட் கீப்பர் எடுக்கும் ரன்கள் போனஸ் என்று இருந்த நிலையை மாற்றியவர். இப்பொதெல்லாம் எந்த அணியிலும் விக்கெட் கீப்பர் சிறந்த மட்டையாளராக இருக்க இவர் தான் காரணம்

ஐ சி சி ஆட்டத்தை பிரபலப்படுத்த பல புதிய விதிகளை கொண்டு வந்தது. அதில் பல தோல்வி அடைந்தன (எ.கா. சூப்பர் சப் ரூல்). ஆனால் இந்த தனிப்பட்ட சாதனையாளர்கள் தங்கள் திறமையால் ஆட்ட்டத்தை சுவராசியமாக்கினார்கள். அமைப்புகள் தேவை தான், ஆனால் அதை விட முக்கியம் ஆட்டக்காரர்கள்.

September 12, 2008

கர்ணன் -- ஒளிப்பதிவு மேதை?

உலக அறிவியல் வளர்ச்சியை இரண்டு கட்டங்களில் சொல்வார்கள். முதலில் தொலைநோக்கி மூலம் வானத்தை ஆராய்ந்தது, பின்னர் அதையே தலைகீழாய் திருப்பி நுண்ணோக்கியாய் மாற்றி அணு,வைரஸ் போன்றவற்றை ஆராய்ந்தது. ஆங்கில சயின்ஸ் பிக்சன் படங்களையும் இந்த இரண்டில் அடக்கி விடலாம். ஒன்று வானில் இருந்து ஏதாவது வரும். இல்லையென்றால் சாதாரண பிராணி அசுரத்தனமாகும்.

சி சென்டர் ரசிகர்களால் காமிரா மேதை என புகழப்பட்ட கர்ணனும் இதே தத்துவத்தை பின்பற்றினார். தரையில் குழி தோண்டி காமிராவை வைத்து வைத்து எடுக்கும் லோ ஆங்கிள் ஷாட், மரத்தின் மேல் காமிராவை வைத்து எடுக்கும் டாப் ஆங்கிள் ஷாட் இரண்டையும் அவர் தன் கதாநாகியர் மீது பிரயோகித்தார். ரசிகனை குதூகலப்படுத்தினார்.

மீனாவின் தாயார் ராஜ் மல்லிகா, சித்தி ராஜ் கோகிலா, ஜெயமாலா, மாதவி,சுகந்தி ஆகியோரை மற்றோர் கோணத்தில் காட்டியவர்.
இவரது ஜம்பு, எங்க பாட்டன் சொத்து,ரெட்டை குழல் துப்பாக்கி,ஜான்ஸி போன்ற படங்கள் எம்ஜியாரின் படங்களுக்கு இணையான ரீ ரீலீஸ் மதிப்பு
பெற்றவை.

இவர் பட சண்டைக்காட்சிகளை பார்த்தவர்கள் யாரும் தலைவலியில் இருந்து தப்ப முடியாது. பட இடைவேளையில் அதிக டீ விற்பனை ஆனதே இதற்க்கு ஆதாரம். சமவெளியில் தொடங்கும் சண்டைக்காட்சி பள்ளத்தாக்குகள்,மலைகள்,பாலைவனம் என பிரயாணித்து மீண்டும் சமவெளியில் முடியும்.இதன் மூலம் பார்வையாளனுக்கு குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை போன்ற அனைத்து நிலப்பிரிவுகளுக்கும் சென்ற திருப்தி வரும். ஒரு வகையில் பார்த்தால் அவர் பின்னவீனத்துவ வாதி. கட்டுடைப்புக்கு அவர் பட சண்டைக்காட்சிகளே உதாரணம். பல வகை நிலங்களை காட்டுவதையும் அடிபடுவோரின் உணர்ச்சிகளையும் நாம் தொடர்புபடுத்திக்கொள்லலாம்.

ஆறு,குளம்,குட்டை என சகல நீர்நிலைகளிலும் நாயகியரை குறைந்த வெள்ளை உடையில் குளிக்கவைத்தவர். பரிகாராமாக நாயகர்களுக்கு தொப்பி முதல் ஷூ வரை கடின ஒளி ஊடுருவாத தோல் ஆடை அணிவித்தவர். ஆணை புனிதமாக போற்றிய கட்டுடைப்பு.

அவருடன் அதிகப்படங்களில் பணியாற்றியவர்கள் அசோகன் மற்றும் ஜெய்சங்கர். விஜயகாந்த்,கார்த்திக்,ராதாரவி ஆகியோருடனும் கலைச்சேவை புரிந்துள்ளார். சி சென்டர் ரசிகர்கள் கதானாயகனுக்காகவும்,மசாலாவுக்காகவும் தான் படம் பார்ப்பார்கள். இயக்குனருக்காக அவர்கள் படம் பார்த்தால் அது விட்டலாச்சார்யாக்காகவும், கர்ணனுக்காகவும் தான்.

September 11, 2008

தமிழ் சினிமாவின் தங்க ஆண்டு - 1989

1989 ஆம் வருடம் சினிமா துறையில் இருந்த எல்லொருக்கும் தங்க வருடமாயிருந்தது. அந்த ஆண்டு வெளியான பல படங்கள் (டப்பிங்) உட்பட பெரு வெற்றி பெற்றன. அந்த படங்கள் அதில் இடம் பெற்ற புதியவர்களுக்கு முகவரியாகவும், மற்றவர்களுக்கு ஒரு மைல்கல் படமாகவும் அமைந்தன. அதில் முக்கிய படங்களைப் பார்ப்போம்

ராஜாதி ராஜா
ராஜ் டிவிக்காகவே எடுத்த படம் என்று கூட சொல்லலாம். இது வரை அவர்கள் 100 முறைக்கு மேல் ஒளிபரப்பியிருப்பார்கள். அவர்கள் வீடியொ கேசட் வெளியிட்ட போது அதிகம் விற்பனையானவற்றில் இதுவும் ஒன்று.அருமையான பாடல்கள், ரஜினியின் அப்பாவி நடிப்பு என களைகட்டிய படம்

வருஷம் 16
சைனீஸ் பட்லர் குஷ்பூவையும், கார்த்திக்கின் குறும்பான நடிப்பையும் மறக்க முடியுமா?. பாடல்கள் இன்றும் பலரால் கேட்கப்பட்டு வருகின்றன. அப்பொதெல்லாம் பல உதவி இயக்குனர்கள் "வருஷம் 16 மாதிரி ஒரு பேமிலி சப்ஜெக்ட் வச்சிருக்கேன்" என்று தான் ஆரம்பிப்பார்கள்

அபூர்வ சகோதரர்கள்
இன்றும் பல கல்லூரி விழாக்களில் யாராவது அப்பு வேஷம் போடுகிறார்கள். காதல் தோல்வி அடைந்தவர்களின் (இப்பல்லாம் தோல்வி அடையுதா காதல்?) தேசிய கீதமான உன்னை நெனைச்சேன் பாடலை யாரால் மறக்க முடியும்?.

கரகாட்டக்காரன்
வாழைப்பழம், இப்ப யாரு வச்சுருக்கா? எல்லாம் சாகாவரம் பெற்றுவிட்டன. பாடல்கள் பஞ்சாமிர்தம். ராமராஜன் என்றாலே நினைவுக்கு வருவது.

புதுப் புது அர்த்தங்கள்
சித்தாராவை இங்கு அறிமுகப்படுத்திய படம். விவேக்கிற்க்கு கவனக் குவிப்பை ஏற்படுத்திய படம். யாரால் மறக்க முடியும் கேளடி கண்மனியையும்,கல்யாண மாலையையும்?

புதிய பாதை

பார்த்திபன் நடித்து,இயக்கி அறிமுகமான படம். 40 படம் நடிச்சு எங்களுக்கு கிடைச்ச ஆக்‌ஷன் இமேஜ் ஒரு படத்திலேயே உனக்கு கிடச்சுருச்சே என ரஜினி பாராட்டிய படம். அனாதையாக்கப்படுதலின் சோகத்தை கன்னத்தில் அறைந்து சொல்லியிருப்பார்கள். இன்று வரை இதுதான் பார்த்திபனின் சிறந்த படம்.

இதயத்தை திருடாதே
இன் அன்ட் அரௌண்ட் 35 எல்லோரும் கட்டாயம் பார்த்திருப்பார்கள். தியேட்டர் எல்லாம் வாலிப அலை. காவியம் பாடவா தென்றலே, ஓம் நமஹா, ஓ பாப்பா லாலி இப்பவும் காதுக்குள் கேட்கிறது.

இதுதான்டா போலிஸ்
கவர்ச்சி, காமெடி இல்லை, பாடல் ஆவரேஜ், யாரோ நடிச்சது, டப்பிங் இப்படி எல்லாமே மைனஸ். ஆனால் படம், பட்டி தொட்டி எல்லாம் பட்டை மட்டுமில்லாமல் லவங்கம்,கிராம்பு எல்லாவற்றையும் கிளப்பி ஓடியது. இன்னும் இவர் பெயர் இதுதான்டா போலிஸ் ராஜசேகர் தான்.

இது தவிர வெற்றிவிழா,மாப்பிள்ளை,ராஜா சின்ன ரோஜா,பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற வெற்றி படங்களும் வந்தன.
இந்த படங்கள் எல்லாமே (இ. போ தவிர) இசை - இளையராஜா.

இதெல்லாம் போதாதென்று இந்தியில் இருந்து கயாமத் ஸே கயாமத் தக், தேஸாப் போன்ற படங்களும் டப் செய்யப்பட்டு அவையும் இங்கு வெற்றி பெற்றன.


1989 போல இன்னொரு வருடம் வருமா என வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் மட்டுமல்ல ரசிகன் ஆகிய நானும் காத்திருக்கிறேன்