September 14, 2008

திருப்புமுனை இயக்குனர் விக்ரமன்

ஏகபோக அரசர்கள் இருக்கும் உலகிலே இந்த ஏகலைவன் பாட்டும் ஜெயிக்கும் நடுவிலே என்று புதுவசந்தமாய் வந்த விக்ரமன் திரைஉலகில் பலருக்கும் திருப்புமுனையை தந்தவர்.

புதுவசந்தம்

ஆணும் பெண்ணும் நண்பர்களாய் இருக்கமுடியும் என்று சொன்ன கதை. ஆர்.பி. சௌத்ரி என்ற தயாரிப்பாளரை உருவாக்கிய படம். அவர் இதற்க்குப்பின் 50 படங்களுக்கு மேல் தயாரித்து, பல இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள்,இசைஅமைப்பாளர்கள்,நடிகர்களை. அறிமுகப்படுத்தினார். எஸ் ஏ ராஜ்குமார் (இசை) அவர்களுக்கும் இப்படம் பெரும் திருப்புமுனை. பாலம் என்னும் படத்தின் மூலம் மறுவாழ்வு பெற்றிருந்த முரளிக்கு இப்படம் நல்ல ஏற்றத்தை தந்தது. சித்தாராவை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. சித்தாரா சேலை,தோடு ஒரு ரவுண்டு வந்தது. சார்லியின் காமெடியும் பாராட்டுபெற்றது.

புதியமன்னர்கள்

ரஹ்மான் இசையமைத்த படம். வைரமுத்துவின் ஆதிக்கத்தில் இருந்து அவர் வெளிவந்த படம். பழனி பாரதியின் பாடல்களை ரஹ்மான் இப்படத்தில் பயன்படுத்தினார். இதன் பின்னரே பழனி பாரதி மற்றும் பல புதிய பாடலாசிரியர்களுக்கு கதவு திறந்தது. விக்ரம்,ஸ்ரீமன்,விவேக்,மோகினி,தாமு,பாபு கணேஷ் நடித்த மாணவர்கள் அரசியலுக்கு வரும் கதை. கட்டும் சேலை மடிப்பிலே நான் கசங்கி போனேனே என்ற கலக்கல் பாடல் இடம் பெற்ற படம்

நான் பேச நினைப்பதெல்லம்

ஆனந்த்பாபு,மோகினி,விவேக் நடித்த காத்லர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் முன்னேறி இணையும் கதை. விவேக் தனி காமெடியனாக புரமோசன் ஆன படம்

கோகுலம்

ஜெயராமை மக்களிடம் கொண்டு சென்ற படம். காதலி, காதலன் இறந்தபின் அவன் வீட்டிற்க்கு உதவும் கதை. சின்னி ஜெயந்த்/வடிவேலு காமெடி பெரிதும் ரசிக்கப்பட்டது

பூவே உனக்காக


யுவராணி,சங்கவி,சுவாதி யின் புண்னியத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த விஜய்யின் வாழ்க்கையை மாற்றி அமைத்த படம். ஒரு மாதிரி படங்களில் நடிப்பவர் என்ற இமேஜ் மாறி பேமிலி ஆடியன்ஸ் விஜய்க்கு வந்தது இந்த படத்தில் இருந்துதான். இதன் பின்னரே காதலுக்கு மரியாதை மூலம் முண்னனி நடிகராய் மாறினார். காதல் என்பது எக்சாம் இல்லை வெற்றி தோல்வி பார்க்க, அது ஒரு பீலிங் என்பதே விஜய்யின் முதல் பன்ச் டயலாக்.

சூரிய வம்சம்

நாட்டமைக்குப்பின் சரத்குமார்க்கு வெற்றிப்படம் இதுதான். அதன்பின் இன்னும் கூட இப்படி ஒரு வெற்றிப்படம் தரவில்லை. நாடாளுமன்றத்தேர்தலில் திருனெல்வேலித் தொகுதியில் இவர் போட்டி போட்ட போது, நாட்டாமையையும்,இதையும் நெல்லை செல்லும் எல்லா அரசு பேருந்துகளிலும் போட்டு வெளுத்தனர். இந்தியில் அமிதாப் நடிக்க ரீமேக் செய்யப்பட்டு ஊற்றிக்கொண்டது. தந்தைக்குப் பிடிக்காத மகன் முன்னேறும் கதை. காதல் என்ன எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ஜா, தகுதி பார்த்து வர? என்ற வசனம் பல இளைஞர்களை அப்போது கனவில் ஆழ்த்தியது.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

கார்த்திக்குக்கு கடைசி சூப்பர் ஹிட் படம். திணறிக்கொண்டிருந்த அஜீத்தை ரெப்ரெஸ் செய்த படம். துண்டு துக்கடா வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ரமேஸ் கண்ணா வை முழு நீள காமெடியனாக மாற்றிய படம். நன்றி பாராட்டுதல் கதைக்கரு.

வானத்தை போல

சின்ன கவுண்டருக்குப்பின் பெரிய வெற்றி இல்லாமல் தவித்த விஜயகாந்துக்கு அதை கொடுத்தபடம். ஆஸ்கார் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய படம். தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், இப்படம் வெற்றி பெற்றால் பத்து படமாவது எடுப்பேன் இல்லையென்றால் வினியோகத்துக்கே போய் விடுவேன் என்றார். படம் ஓடி ரமணா,அன்னியன்,தசாவதாரம் போன்ற மெகா பட தயாரிப்பாளராய் மாறினார்.

அதன்பின் இவர் எடுத்த உன்னை நினைத்து சுமாராய் ஓடியது. ப்ரியமான தோழி, சென்னைகாதல் போன்றவை தோல்வி அடைந்தது. இவரின் இரண்டாம் படமான பெரும் புள்ளி இவருக்கு கரும்புள்ளியாய் அமைந்தது. அது மாணவன் ஆசிரியையை காதலிக்கும் கதை. என் உயிர்த் தோழன் புகழ் பாபுவும்,சுமா ரங்கனாத்தும் நடித்தது.

இவரின் பலம்

பேமிலி ஆடியன்ஸ்க்கு ஏற்ற வகையில் கதை பண்னுவது
இனிமையான பாடல்கள், நகைச்சுவை யுடன் அதை கொடுப்பது
எல்லோரும் நல்லவரே என்னும் வகையில் கதாபாத்திரங்களை அமைப்பது
இவரின் எல்லா படங்களும் தெலுங்கில் பெரு வெற்றி பெற்றவை. இங்கு அடிவாங்கிய ப்ரியமான தோழி அங்கே வசந்தம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி அடைந்தது. (இருமொழி படமாகவே இது எடுக்கப்பட்டது. இங்கே மாதவன், அங்கே வெங்கடேஷ்).

இவரின் பலவீனம்

பிண்னனி இசை. இன்னும் லலலா லலல்லா வையே பிடித்து தொங்குவது.புதிய தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தாது

தற்போது விஜயகாந்த்,மீரா ஜாஸ்மின் நடிப்பில் மரியாதை என்னும் படம் இயக்க உள்ளார். தன் குறைகளை களைந்து அதை வெற்றிப்படமாக கொடுக்க வாழ்த்துக்கள்.

September 13, 2008

மக்கள் கலைஞர் – ஜெய்சங்கர்

ஒரு நடிகர் தன் திரைவாழ்க்கையை தொடங்கி குறிப்பிட்ட காலம் வரை ரசிகர்களை ஈர்க்கிறார். ஒரு கட்டத்தில் புதிய ரசிகர்கள் வருவது நிற்கிறது. காரணம், முதலில் பார்வையாளனாக வந்து ரசிகனாகுபவன் தன் வயதுக்கு அருகாமையில் உள்ள நடிகர்களையே ஆதர்சமாக கொள்ளுகிறான். அடுத்த காரணம் ரசனை மாற்றம். இதன் காரணமாகவே நடிகர்கள் குறிப்பிட்ட வயதுக்குப்பின்னால் வெற்றி பெறுவது கடினமாகிறது. உச்ச நடிகர்கள் மட்டுமே இதனைத் தாண்டி தாக்குப்பிடிக்கிறார்கள். இங்கு எம்ஜியார்,சிவாஜி,ரஜினி,கமல் போன்றோரால் மட்டுமே தலைமுறையைத்தாண்டி ரசிகர்களை ஈர்க்க முடிகிறது. மற்றவர்கள் பீல்ட் அவுட் ஆகிறார்கள் அல்லது வில்லன்/ குணசித்திர நடிகர்களாக பதவியிறக்கம் பெறுகிறார்கள். இந்த தலைமுறையில் பிரபு,கார்த்திக் போன்றோரை இதற்கு உதாரணமாய் சொல்லலாம். இந்த காலகட்டத்தை நடிகர்களின் மெனோபாஸ் என்றும் சொல்லலாம்.

எம்ஜியார், சிவாஜி என்ற மலைகள் இருந்த போது தனக்கென ஒரு பாணியை வகுத்து தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட், மக்கள் கலைஞன் என்று பெயர் பெற்ற ஜெய்சங்கர் அவர்களும் இந்த காலகட்டத்தில் திணறி வில்லன் நடிகராக மாறினார். கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்த அவர் வெள்ளிக்கிழமை ஹீரோ எனவும் புகழப்பட்டவர். அவர் உச்சத்தில் இருந்த போது வருடத்துக்கு 20 படங்களுக்கு மேல் நடித்தார். விஜய் டிவியை ஸ்டார் குழுமம் வாங்கும்முன் அந்த டிவிக்கு ஆபத்பாந்தவனாக இருந்தவர் இவரே. இவரின் படங்களைப்போட்டே அந்த டிவி கிராமங்களில் ஜெய்சங்கர் டிவி என பெயர் பெற்றது.

இவர் வருகைக்கு முன் திரைஉலகில் சீனியர்களை அண்ணா,சார் போன்ற அடைமொழிகளில் அழைக்கும் பழக்கம் இருந்தது. ஹாய் என்று வர்க்கபேதமில்லாமல் அனைவரையும் அழைத்து ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்தினார். (பின்னர் சத்யராஜ் வந்து – தலைவா என மாற்றினார்). துப்பறியும் படங்கள், கௌபாய் படங்கள் என்றால் அப்போதைய இயக்குநர்களின் முதல் சாய்ஸ் இவரே.

பட்டணத்தில் பூதம், துணிவே துணை, பூவா தலையா, வைரம், கங்கா, சி ஐ டி சங்கர், வல்லவன் ஒருவன்,யார் நீ, இருவல்லவர்கள், ஊமை விழிகள், குழந்தையும் தெய்வமும், நூற்றுக்கு நூறு,வீட்டுக்கு வீடு,நான்கு கில்லாடிகள் போன்ற படங்கள் இவரின் முக்கிய படங்கள். முரட்டுக்காளையில் வில்லனாக மாறி பின்னர் ரஜினியின் ஆஸ்தான வில்லனானார் (தனிக்காட்டு ராஜா, பாயும்புலி, துடிக்கும் கரங்கள்). கமலுடன் சவால், அபூர்வ சகோதரர்கள் என ஒரு ரவுண்டு வந்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இவர் 2000 ல் மறைந்தார். மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் இவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. பல சமூக சேவைகளை மூன்றாம் நபர் அறியாமல் செய்தவர். தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தாதவர். ஜெண்டில்மேன் என புகழப்பட்டவர்.

குறிப்பிட்ட வயதுக்குப்பின் தங்களுக்கு ஏற்ற கதைக்களங்களை உருவாக்கி அதில் மிளிர வேண்டும் அல்லது உருவாக்கத்தெரிந்த இயக்குநர்களின் ஆதரவு வேண்டும். இல்லையெனில் பதவியிறக்கம் தான் இங்கே.

வெள்ளிவிழா இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்


தற்போதைய தலைமுறைக்கு வெறும் குணசித்திர/காமெடி நடிகராக அறியப்படும் ஆர்.சுந்தர்ராஜன், பா வரிசை இயக்குனர்கள் என அறியப்பட்ட பாலசந்தர்,பாரதிராஜா,பாலுமகேந்திரா,பாக்யராஜ் ஆகியோர் தங்கள் உச்சத்தில் இருக்கும் போதே தன் முத்திரையை பதித்தவர். குறுகிய இடைவெளியில் ஏழு வெள்ளிவிழா படங்களை தந்து அனைவரையும் அசத்தியவர்.

இயல்பான திரைக்கதை,மென்மையான பாடல்கள்,அருமையான நகைச்சுவை இந்த மூன்றும் இவர் படங்களின் வெற்றிக்கு காரணம். அதில் சில முக்கிய படங்களை பார்க்கலாம்

பயனங்கள் முடிவதில்லை

கமல் நடித்த வாழ்வே மாயமும் இதே கதைதான். சாகப்போகும் வியாதி உள்ள காதலன், காதலியின் நல்வாழ்வுக்காக அவளை வெறுப்பது போல் நடிப்பது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன. இரண்டும் வெற்றி என்றாலும் பயனங்கள் முடிவதில்லை சூப்பர் டூப்பர் ஹிட். அந்த காலத்தில் புதியதாக டேப் ரிக்காடர்கள் வாங்கியவர்கள் முதலில் வாங்கும் பாடல் கேசட் இந்தப்பட கேசட்தான். கவுண்டமனியின் 'இந்த சென்னை மாநகரத்திலே' காமெடி சிறப்பாக பேசப்பட்ட ஒன்று.

வைதேகி காத்திருந்தாள்

விஜயகாந்துக்கு தாய்க்குலத்தின் ஆதரவு இந்த படத்தில் இருந்து தான் தொடங்கியது எனலாம். மூன்று கதைகளை இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஒருவருக்கு இல்லதாதால் சோகம். ஒருவருக்கு அதிகம் இருந்ததால் சோகம் (தண்ணீர்). ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடலை மெல்லிசைக்குழுக்களும்,அழகு மலராட பாடலை கல்லூரியின் ஆண்டு விழாக்களில் ஆடும் பெண்களும் தத்து எடுத்துக்கொண்டனர். கவுண்டர் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக வந்து ஆல் தியேட்டரையும் அதிரவைத்த படம்

நான் பாடும் பாடல்

விதவை சென்டிமென்ட் படம். கெடா எப்ப வெட்டுவாங்க? ரெண்டு ரூவாய்க்கு இவ்வளோ கொடுக்கும் போதேய் நெனைச்சேன், பீஸ் போயிருச்சா? போன்ற கவுண்டரின் பன்ச் டயலாக்குகள், பாடவா உன் பாடலை,மச்சானை வச்சுக்கடி போன்ற பாடல்கள் எல்லம் சேர்ந்து நல்ல பொழுதுபோக்கு படம்.

குங்குமசிமிழ்

மோகன்,ரேவதி,இளவரசி மற்றும் சந்திரசேகர் நடித்தது. நிலவு தூங்கும் நேரம் என்ற சூப்பர் ஹிட் பாடல் இடம்பெற்ற படம்.

அம்மன் கோவில் கிழக்காலே
விஜயகாந்துக்கு மற்றுமொரு பிரேக் தந்த படம்.


ராஜாதி ராஜா
இளையராஜா தயாரித்த படம். பிறகென்ன சொல்ல வேண்டும் பாடல்களைப் பற்றி.

மெல்லத் திறந்தது கதவு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன், இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்த படம். மோகன்,அமலா,ராதா நடித்தது. குழலூதும் கண்னனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா?, வா வென்னிலா உன்னைத்தானே மேகம் தேடுதே போன்ற மறக்க முடியாத பாடல்கள் நிறைந்த படம். இந்த படத்தில் இருந்தது போல் எந்தப் படத்திலும் அமலா அவ்வளவு அழகாக இருந்ததில்லை என்பது அமலா ரசிகளின் கருத்து. ஏவிஎம் தயாரித்த படமிது.


இவை தவிர நினைவே ஒரு சங்கீதம்,என் ஆசை மச்சான்,திருமதி பழனிச்சாமி, சாமி போட்ட முடிச்சு போன்ற படங்களையும் இயக்கினார்.

90 களில் பெரும்பாலான கதானாயகர்கள் ஆக்சன் கதைகளில் நடிப்பதையே விரும்பியது,இவரது படங்களுக்கு ஆதாரமான லேடிஸ் ஆடியன்ஸ் தொலைக்காட்சிகள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியது, ரஹ்மானின் வருகையால் மெலடி பாடலை ரசிப்பவர்கள் குறைந்தது மற்றும் பொதுவாகவே குடும்பப்பாங்கான படங்களை ரசிப்பவர்கள் குறைந்தது இவற்றால் இவரது சில கடைசி படங்கள் தோல்வி அடைந்தன.
ஒயிலாட்டம் என்ற படத்தை இயக்கி,நடித்து தயாரித்தார். படம் வெற்றி பெறவில்லை. ஆனால் நடிப்பு என்னும் பாதை திறந்தது. அறியப்பட்ட நடிகராய் மாறிவிட்டார்.

அருமையான பாடல்களை ராஜா தந்திருந்தாலும், கவுண்டரின் நகைச்சுவை இருந்தாலும் இவரின் கதையும்,இயக்கமுமே அந்த படங்களை வெற்றி பெற வைத்தது. ஏனென்றால் அதைவிட நல்ல பாடல்களும்,நகைச்சுவையும் இருந்த படங்கள் பல தோல்வி கண்டுள்ளனவே?,