February 21, 2012

பாக்யராஜும் எதார்த்த காதல்களும்

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் வரை காதல் என்று ஒன்று கிடையாது என்றே நம்பிக்கொண்டிருந்தேன். அக்காலத் திரைப்படங்களில் பறந்து பறந்து போடும் மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளைப் போலவே காதலும் மிகைப்படுத்தப் பட்ட ஒன்று என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு புறச்சூழலே காரணம். ஏனென்றால் எங்கள் தெருவிலும், அருகேயிருந்த தோட்டத்திலும் யாரும் குரூப் டான்ஸர்கள் புடை சூழ ஆடிக்கொண்டிருக்கவில்லை.

ஆனால் காதல் என்ற ஒன்று உலகில் இருக்கிறது என்று எனக்கு அறிமுகப்படுத்தியவர் தெருவில் இருந்த குமார் அண்ணன். எப்பொழுதும் என்னை பவுண்டரி லைனுக்கு வெளியிலேயே நின்று பீல்ட் செய்யுமாறு பணிக்கும் அவர், ஆச்சரியமாக பேட் செய்யும் வாய்ப்பை வழங்கினார். பின்னர் தான் தெரிந்தது, விக்டோரியா க்வின் என்று அந்த செட்டால் பெயர் சூட்டப்பட்டிருந்த கோடி வீட்டு நிர்மலா அக்காவுக்கு என்னைத் தூது அனுப்பத்தான் என்று.

ஆம். நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அதைச் சுற்றி ஒரு காதல் கதை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பத்தாண்டுகளில் அப்படி நடக்கும் பல காதல்கள் திரைப்படுத்தப் பட்டிருக்கின்றன. காதல், 7ஜி ரெயின்போ காலனி, அங்காடிதெரு என இப்போது பல படங்களில் சமூகத்தில் நாம் கேள்விப்படும் இயல்பான காதல்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன.


ஆனால் தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்தில் கடவுள்கள், அரச குடும்பத்தினர், செல்வந்தர்கள் வட்டாரத்தில் நடக்கும் காதல்களே பெரிதும் திரைப்படுத்தப் பட்டிருந்தன. பின் எம்ஜியார்,சிவாஜி கால கட்டத்தில் ஒரு ஹீரோவைச் சுற்றியே காதல் இருந்தது. அரிதாக ஹீரோயினியின் பார்வையிலும். ஸ்ரீதர் வருகைக்குப் பின் நடுத்தர வர்க்கத்துக் காதல் [கல்யாணப்பரிசு] கதைகளின் வரவு ஆரம்பித்தது. பாலசந்தரின் பெருநகர மத்திய தர வர்க்கக் காதல் கதைகள், பாரதி ராஜாவின் கிராமத்துக் காதல் கதைகள், மகேந்திரன், பாலு மகேந்திராவின் இயல்பான காதல் கதைகள் என அது தொடர்ந்தது.

இந்த வரிசையில் பார்த்தால், பாக்யராஜும் பல இயல்பான காதல் களங்களை தன் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய படங்கள் குழப்பமில்லா திரைக்கதை,மெல்லிய காமம் கலந்த நகைச்சுவை போன்ற அம்சங்கள் கொண்டதாக மட்டுமே இப்போது அடையாளப்படுத்தப் படுகின்றன. ஆனால் அவர் படங்களில் தான் பல இயல்பான காதல் களங்கள், அதுவரை யாரும் தொடாத களங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

அவர் இயக்கிய முதல் படமான சுவரில்லாத சித்திரங்களில், ஒரு தெருவில் இருக்கும் அழகான பெண் மீது, அடுத்த தெருவில் இருக்கும் வசதி படைத்தவனுக்கு வரும் காதல், அது தொடர்ந்த காட்சிகள் இயல்பாக சொல்லப்பட்டிருக்கும். அப்பெண்ணை சந்திக்க, கவர அடிக்கடி அங்கு விஜயம் செய்வதும், அதற்காக அங்கு உள்ள கடையில் டாப் அடிப்பதும், அந்தக் கடைக்காரர் அதை உபயோகப் படுத்திக் கொள்வதும் இன்னும் கூட எங்காவது ஒரு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு தெருவில் உள்ள இளைஞர்கள் மற்றும் யூத்துகளின் அக/புறச் சமநிலையை குலைக்க வேறெதுவும் வேண்டாம். ஒரு அழகுப் பெண்ணுடைய குடும்பம் அங்கே குடியேறினாலே போதும். அந்தப் பெண்ணின் கவனம் கவர, காதலைப் பெற அம்மக்கள் எந்த நிலைக்கெல்லாம் இறங்குவார்கள் என்பதை காட்சிப்படுத்திய படம் ”இன்று போய் நாளை வா”. தன் குடும்ப அவசரத்திற்காகக் கூட கடைக்குப் போகத் தயங்கும் ஒருவன், பெண்ணுக்காக ரேஷன் கடைக்குப் போவதும், வடாம் பிழிவதும் உச்சகட்டமாக கழுதையைக் கூட அழைத்து வருவதும், யதார்த்தத்தை பிரதிபலித்த ஒன்று. இன்னொரு நாயகன் படித்த ஹிந்தி இன்று வரை நமக்கு இனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்போதும் கூட தெருவிலோ, அலுவலகத்திலோ ஒரு அழகுப் பெண்ணின் வருகை அங்குள்ள ஆண்களின் சமநிலையை குலைத்துக் கொண்டிருப்பது நாம் அறியாததா, என்ன?


ஸ்டிரீட் ஸ்மார்ட் என்னும் வகையிலான பெண்களையும் நம் அன்றாட வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கறாரான பேச்சு, தன் குடும்ப நலனுக்காக பல வழிகளும் சிந்திப்பது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு ஒரு அளவுக்கு மேல் மதிப்பு கொடுக்காதது, தன் கருத்தே சரி என்று அதற்கு வாதங்களை அடுக்குவது என்ற குணங்களுடன் வாழும் பெண். அவளுக்கு வரும் காதல், கணவன் இன்னொரு பெண்ணுடன் அசந்தர்ப்பவசமாக உறவு கொண்டதால் வந்த கோபம், பின்னர் வெல்லும் காதல் என ஒரு நடுத்தர வர்க்க ஸ்டிரீட் ஸ்மார்ட் பெண்ணின் காதல்தான் மௌன கீதங்கள்.

ஒரு பெண், இயற்கையாக அவளுக்குத் தோன்றும் காதல், அதை பகிர, குறைந்த பட்ச தகுதி [அழகு, குணம்]கொண்ட ஆண் அவசியம். வீடு, தெருவைத் தாண்டி செல்ல முடியாத சூழல். சுற்றிலும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஆண் இல்லை. அந்தச் சூழ்நிலையில் வீட்டில் வாடகைக்கு குடியிருக்க வருபவனிடத்தில் அவை இருக்கும் போது காதல் பூப்பது இயல்புதானே? அந்த ஏழு நாட்களிலும் அதுதான் நடந்தது.

பெண்ணைத் திருமணத்திற்காகப் போய் பார்த்த உடன் மிகவும் பிடித்து வருகிறது. ஆனால் லௌகீக, ஈகோ காரணங்களுக்காக அது தகையாமல் போய் விடுகிறது. ஆனாலும் அதை நனவாக்க முயற்சி எடுக்காமலா இருப்பார்கள் நம்மவர்கள்?. அப்படி காதல்வயப்பட்டவனின் முயற்சிகள் தூறல் நின்னு போச்சாக வந்து பலரின் மனசுக்குள்ளும் மழையடித்துப் போனது.

சிறு வயதில் தோன்றி, மனதில் ஆழமாக வேரூன்றிய காதலைப் பேசிய படம் ”டார்லிங்... டார்லிங்... டார்லிங்...” அக்கால பாக்யராஜ் படங்களுடன் ஒப்பிடும் போது இது பேன்ஸியான காதல்தான்.

என் தந்தையின் பணி காரணமாக பல ஊர்களில் வசித்திருக்கிறோம். அதில் பல நண்பர்களைத் தந்த வரையில் மறக்க முடியாத ஊர் அருப்புக்கோட்டை. இரண்டாம் ஆட்டம் முடிந்து, எங்கள் குழு [ஐ டி சி என அப்போது பெயர் சூட்டப் பட்டிருந்தோம் தெருவால் : இண்டர்நேஷனல் தரிசு கோஷ்டி] திரும்பிய போது, தெருவே அல்லோல கல்லோலபட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தெருவின் பிரெஸ்டிஜ் பத்மனாபன் கதறிக் கொண்டிருந்தார். காரணம் அவர் பெண் ஜெண்ட்டாகி [கம்பி நீட்டுவது, எஸ்ஸாவதின் அருப்புக்கோட்டை ஸ்லாங்] இருந்தாள். உடன் போக்கு எய்தியவன், பக்கத்து தெரு அசடு ஒருவன். சில நாட்கள் தேடலுக்குப் பின் அவர்கள் சிக்கினார்கள். ஐ டி சி யின் உறுப்பினன் ஒருவன் தாங்க முடியாத மன வருத்தத்தில் அந்தக் காதலின் காரணத்தை அப்பெண்ணிடம் கேட்ட போது, எங்க வீட்டில அப்பா, பெரியப்பா, சித்தப்பா, ஏன் என் அண்ணன் உட்பட யாருமே கட்டுனவள மதிக்க மாட்டாங்க, மாடு, பன்னின்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, அவங்க வீட்டுல அப்படியில்ல, மரியாதையா நடத்துறதப் பார்த்தேன். அதுக்கு ஆசைப்பட்டுத் தான் அவன லவ் பண்ணினேன் என்றாள்.


முருங்கைக்காய்க்காக மட்டுமே நம் ஞாபகத்தில் இருக்கும் முந்தானை முடிச்சின் அடிநாதம் இது தான். ஒரு காட்சியில் ஊர்வசி சொல்லுவார், இந்த ஊரில எல்லோரும் பொண்டாட்டி இருக்கும் போது, இன்னொன்னை வச்சிருக்காங்க, எங்க அய்யனும்தான். ஆனா, இந்த வாத்தியாரு பொண்டாட்டி செத்தும் பிள்ளையை வளர்க்கணும்னு யோக்கியமா இருக்காரு, அதான் அவர் மேல ஆசப் பட்டேன் என்பார். குடும்பத்தில், சூழலில் காணக் கிடைக்காத பண்பை இன்னொரு ஆளிடம் பார்க்கும் போது பூக்கும் காதல் எல்லைகளையும் அறியாது.

இப்படி பெரும்பாலும் இயல்பான காதல்களன்களுடன் பயணித்த பாக்யராஜ், வணிக வெற்றிகளின் காரணமாக சிறிது திசை மாறினார்.

எங்க சின்ன ராசாவில் தம்பிக்கு என்று சொன்ன பெண்ணை தனக்கு என்று பார்த்து, திருமணத்திற்கு பின் அவள் காதலை உண்மையாக வெல்லும் கமர்சியல் பாத்திரம் பாக்யராஜுக்கு.

பாலகுமாரன் இயக்கத்தில், பாக்யராஜின் மேற்பார்வையில் வந்த படம் இது நம்ம ஆளு. இதில் புரோகிதம் செய்ய வேடமிட்டு வந்த ஒருவன் மீது அந்த வீட்டுப் பெண்ணுக்கு ஒரே நாளில் காதல் வந்தது டூ மச் தான்.

ஆராரோ ஆரிரரோ, வீட்ல விசேஷங்க ஆகிய படங்களில் மனநிலை தவறிய அல்லது நடிக்கும் பெண் அவளுடன் ஒரு நல்லவனுக்கு வரும் காதல், அதை ஊக்குவிக்கும் பொது மனிதர் என சினிமா காதலே பிரதானமாக இருந்தது.

சுந்தர காண்டத்தில் மாணவிக்கு ஆசிரியர் மேல் வரும் காதலைச் சொல்லி இருந்தார். இது ஓரளவு நடைமுறையில் நாம் பார்த்து வருவது. பவுனு பவுனு தான் படத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்து தன் மாமன் மேல் தீராக் காதல் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் காதல். இது மிகவும் மிகைப்படுத்தப் பட்டு சொல்லியதால் தோல்வி அடைந்தது.


பாக்யராஜின் படங்களிலேயே நம்ப முடியாத காதல் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தான். அரண்மனை இளவரசி, ஒருவன் செய்யும் நல்ல காரியத்தைப் பார்த்து ஒரே நாளில் காதல் கொள்வதும், அவனை அடைய பல முயற்சிகள் எடுப்பதும் பேண்டஸி வகையில் இந்த படத்தைச் சேர்க்கச் சொல்லி நம்மைத் தூண்டுகிறது.

ஒரு நேர்மையான பத்திரிக்கையாளன் மீது, பணக்காரப் பெண்ணுக்கு வரும் காதல் ஞானப்பழம். இது இந்தக் காலத்தில் நடக்குமா என்ன?

சொக்கத் தங்கத்தில் விஜயகாந்த்துக்கு சவுந்தர்யா மேல் வரும் காதல் முதியோர் கல்வியை ஞாபகப்படுத்தியது.

தன் வாரிசுகளை களம் இறக்கும் போதும், இந்த பாணியை மாற்றவில்லை. பாரிஜாதத்தில் அம்மாவிற்கு பிடித்ததனால் பெண்ணை மணக்கும் மகன் கூட நிஜத்தில் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் சித்து+2 சினிமா காதல்தான்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு சறுக்கினாலும் தமிழ் சினிமாவுக்கு பல வகையான காதல் களங்களை அறிமுகப்படுத்தியவர்களில் பாக்யராஜும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது.

பண்புடன் இணைய இதழில் வெளியான கட்டுரை

நன்றி

பிப்ரவரி 15 பண்புடன் இதழின் ஆசிரியர் திரு வெயிலான் ரமேஷ்

பண்புடன் ஆசிரியர் குழுமம்

February 20, 2012

அக்கிரிடிடேசன் – பகுதி 2 [வாஷிங்டன் அக்கார்ட்]

முதல் பகுதியை வாசிக்க

சென்ற பகுதியில் பொறியியல் கல்லூரிகளுக்கான அக்கிரிடிடேசன் பற்றிப் பார்த்தோம். அதில் பாடப்பிரிவுகளுக்குத்தான் [டிபார்ட்மெண்ட்] தர நிர்ணயம், கல்லூரிக்கு அல்ல என்பதைப் பார்த்தோம்.

ஒரு டிபார்ட்மெண்டில் இருந்து குறைந்தது இரண்டு பேட்ச் வெளியில் சென்றிருந்தால்தான் தர நிர்ணயக் கமிட்டிக்கு அப்ளை செய்யமுடியும்.

தரநிர்ணயம் என்பது தன்னார்வத்தில் [வாலண்டரி] செய்யக்கூடியது. கட்டாயமில்லை. பொறியியியல் கல்லூரிகளுக்கு ஏ ஐ சி டி ஈயின் அனுமதிதான் கட்டாயம்.

அந்த அப்ரூவலானது, கல்லூரியில் குறைந்த பட்ச கட்டுமானம் இருக்கிறதா, நடத்த பணம் இருக்கிறதா? தகுதியான ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பரிசோதித்து கொடுக்கப்படுவது. ஆனால் என் பி ஏ தர நிர்ணயமானது, படித்து முடித்து வெளியேறும் மாணவரிடத்தில் தரம் இருக்கிறதா என்று பரிசோதித்து அளிக்கப்படுவது.

எனவே தர நிர்ணயத்துக்கு அப்ளை செய்யும் கல்லூரிகள் இரண்டு பகுதிகளாக ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும்.

முதல் பகுதியில் கல்லூரியின் அடிப்படை கட்டுமானங்கள், ஆசிரியர் தகுதி, எண்ணிக்கை, அவர்களில் சம்பள பட்டியல், ஆடிட்டோரியம், பிளேஸ்மெண்ட் செல், விடுதி வசதி, உடற்பயிற்சி வசதி, மினரல் வாட்டர், வங்கி, தபால் அலுவலக வசதி (கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயேயிருந்தால்) போன்றவற்றைச் சொல்லவேண்டும்.

பகுதி 2ல் தரநிர்ணயம் கோரும் துறையின் ஆசிரியர் தகுதி, அவர்களின் சாதனைகள், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆய்வுச்சாலை வசதிகள், நடத்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவுகள், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை ஆராயும் என் பி ஏ அலுவலகம், திருப்தியடைந்தால் ஆய்வுக்கு வரும் தேதியை கல்லூரிக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கான குழுவிற்கு ஒரு சேர்மன் இருப்பார். எந்த டிபார்ட்மெண்ட் தர நிர்ணயம் கோருகிறதோ, அதில் எக்ஸ்பர்ட்டான இருவர் (கல்விப்பணியில் இருந்து ஒருவர், தொழிற்சாலை பணியில் இருந்து ஒருவர்) குழுவில் இருப்பர். இவர்கள் யாரென வந்து சேரும் வரை தெரியாது.


அவர்கள் வந்து, இரண்டு பகுதிகளில் கொடுத்துள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என சரி பார்ப்பார்கள். இதற்காக கல்லூரியின் முதல்வர் முதல் பகுதிக்கும், துறைத்தலைவர் இரண்டாம் பகுதிக்கும் பிரசண்டேஷன் கொடுக்க வேண்டும். பின்னர் வளாகத்தையும், குறிப்பிட்ட துறையையும் நேரடியாக ஆய்வு செய்வார்கள்.

இதன் பின்னர் அந்தத்துறையின் ஆசிரியர்களை தனியே சந்திப்பார்கள்.

பின்னர் மாணவர்களை தனியே சந்தித்து கிராஸ் செக் செய்வார்கள்

பின்னர் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திப்பார்கள்.

முந்தைய பேட்ச் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் (எம்ப்ளாயர்ஸ் மீட்) விசாரணை செய்வார்கள்.



இதன் அடிப்படையில் தான் தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்படும்.


இதில் வாசிங்டன் அக்கார்ட் ஒப்பந்தப்படி ஒரு டிபார்ட்மெண்டுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தர நிர்ணயம் தரப்படும்.

அவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு பரிசோதிப்பார்கள். அதில் 10 பிரிவுகள் இருக்கும். ஆசிரியர் தகுதி, தேர்ச்சி விகிதம் இப்படி. ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 60 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். மொத்தமாக 750 மதிப்பண்கள் வாங்க வேண்டும். 750க்கு மேல் வாங்கினால் ஐந்தாண்டுகள் கிடைக்கும். அதற்கு குறைந்தால் இரண்டாண்டுகள் கிடைக்கும்.

பின்னர் ரீ-அக்கிரிடிடேஷசன் (அதாவது இரண்டோ, அல்லது ஐந்தோ காலம் முடிந்தவுடன்) செல்லும் போது, சென்ற முறையை விட சற்றேனும் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இந்த முறையில் ஆசிரியர்களின் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

1. படிப்பு
2. ஆராய்ச்சி கட்டுரைகள்
3. கலந்து கொண்ட கருத்தரங்குகள்
4. வெளியில் அளித்த சிறப்பு சொற்பொழிவுகள்
5. இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்சி
6. அறிவுசார் உரிமைகள்
7. பதிப்பித்த புத்தகங்கள்

என பல அளவுகோலின்படி ஆசிரியரின் தரம் எடை போடப்படுகிறது.

பின்னர் அந்த துறையில் எத்தனை பேர் நீண்ட காலமாக பணியாற்றுகிறார்கள் (எம்பிளாயி ரிடன்சன்) என்பதும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.


மாணவர்களின் தரத்திற்கு

1. தேர்ச்சி விகிதம்
2. பல்கலைகழக ரேங்குகள்
3. பெற்றுள்ள வேலை வாய்ப்புகள்
4. வேலையின் உயர்ந்தபட்ச, குறைந்தபட்ச சம்பளம்
5. கலந்துகொண்ட கருத்தரங்குகள்

ஆகியவை அளவுகோலாக பார்க்கப்படுகின்றன.


(தொடரும்)

February 19, 2012

தீப்பொறி ஆறுமுகம் பொதுக்கூட்டம் – ஒரு பார்வை

பிப்ரவரி 18, 2012 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுகவின் பொதுக்குழுத் தீர்மானங்களை விளக்கி தீப்பொறி ஆறுமுகம் உரையாற்றினார். அந்த பொதுக்கூட்டம் குறித்த ஒரு பார்வை.

கூட்டம் நடந்த இடத்தில் சென்ற மாதம் தான் எம்ஜியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எண்ணி பத்து பேர்தான் பார்வையாளர்கள்.

ஆனால் நேற்று இரவு 7.30 மணிக்கு மேல் கூட்டம் சிறுக சிறுக வர ஆரம்பித்தது. கிடைக்கும் கேப்பில் எல்லாம் தங்கள் டூ வீலர்களை பார்க் செய்துவிட்டு ஆங்காங்கே பொதுமக்கள் நின்று கொண்டிருந்தார்கள். மேடைக்கு எதிரே உள்ள சேர்களில் கட்சியினர் அமர்ந்திருந்தனர். கட்சியினரைவிட பொதுமக்கள் கூட்டம் 10 மடங்கு இருக்கும்.

முதலில் பேசிய ஒருவர் சொன்னது.

விஜயகாந்த் மாதிரியே நாங்களும் கேட்குறோம். இன்னைக்கு நிலமைக்கு கவர்னர் ஆட்சியை கொண்டு வந்திட்டு திருமங்கலம் நகராட்சி தேர்தல நடத்து, நாங்க அசால்டா ஜெயிப்போம் என்று.

மாவட்ட துணை செயலாளர் எம் எல் ராஜ் பேசும் போது,
கப்பலூர் தொழில் பேட்டை மின்வெட்டால் கடுமையாய் பாதிக்கப்பட்டு இருப்பதையும், விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இருப்பதையும் குறிப்பிட்டு, இன்னும் ஆறு மாதங்களில் விலைவாசி உயர்வு எங்கோ போய்விடும் என்று புளியை கரைத்தார்.

சரியாக ஒன்பது மணி அளவில் தீப்பொறியார் பேச்சைத் தொடங்கினார்.

தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார், குரேஷி, தற்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி முதற்கொண்டு தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், சட்டங்கள், தீர்ப்புகள் என ஏகப்பட்ட தகவல்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார்.


பேச்சில் இருந்து

ஜெ, சங்கரன்கோவிலுக்கு 26 மந்திரிகளை அனுப்புகிறார். ஆனால் தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு எத்தனை பேரை அனுப்பினார்?

இப்ப சங்கரன் கோவிலுக்கு வந்திருக்கிற 26 பேர் கிட்டயும் கேளுங்க, யாராவது தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா மாவட்டத்தையும் சொல்லிட்டா நான் அரசியல் இருந்தே விலகிக்கிறேன்.

இந்த ஊர் நகரச்செயலாளர் கிட்ட இரவு 9.50க்கு மேல பேசக்கூடாதுன்னு எழுதி வாங்குனாங்களாம். முந்தா நாள் கரூரில் பத்தரை வரைக்கும் பேசினேன்.

கரூருக்கு ஒரு சிஎம், திருமங்கலத்துக்கு ஒரு சி எம்மா? ஒரே சட்டம்தானே?

பை எலெக்‌ஷன் நடக்குற தொகுதியில கட்டுப்பாடு வை. இல்ல அந்தத் தொகுதி இருக்குற நெல்லை மாவட்டத்துக்கு வை. அத்வும் இல்லையா முந்தி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில இருந்ததால தூத்துக்குடி மாவட்டத்துக்கும் கட்டுப்பாடு வை. திருமங்கலத்துல ஏன் கட்டுப்பாடு?


அண்ணா கிட்ட என்விஎன் வந்து சொல்லுறாரு, 67ல, அண்ணா ”நாம தனி மெஜாரிட்டியில ஜெயிச்சுட்டோம்”னு. உடனே அண்ணா அழுதார். ஆட்சி வந்திருச்சு. கட்சி போயிருச்சுன்னு.

எப்பல்லாம் நாம ஆட்சிக்கு வர்றோமோ அப்ப எல்லாம் கட்சி போயிறுது.
விஜயகாந்தை மிகவும் புகழ்ந்தார். (கூட்டணி வரும் போலிருக்கே?]

பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு பற்றியும் பேசினார்.

நாலு மணி நேரம் இருந்த மின்வெட்டு, அப்புறம் கஷ்டப்பட்டு மூணு மணி நேரமா குறைச்சோம், அப்புறம் இரண்டு மணி நேரம். அதுக்கே பொறுக்காம மாத்தீட்டிங்க. இப்ப அனுபவீங்க. (அவருக்கு முன் பேசிய அனைத்து உள்ளூர் பேச்சாளர்களும் இதையேதான் பேசினார்கள்]

மின்வெட்டு பற்றிய அவரின் பஞ்ச்

ராத்திரியில ஒரு மணி நேரம் அணைக்கிறான், ஒரு மணி நேரம் போடுறான் (இதையே பலமுறை சொல்லிக்காட்டி]

7 கோடியா இருக்குற தமிழ்நாட்டு ஜனத்தொகை 12 கோடியா ஆயிடும் போலிருக்கே.



19 வயதில் மேடை ஏறி தற்போது 72 வயது வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசியும் தீப்பொறிக்கு இன்னும் கரிஸ்மா குறையாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. ஏகப்பட்ட விசயங்களை அப்டேட் செய்து கொண்டேயிருக்கிறார். எத்தனை பேரூராட்சி, இப்போது மாநகராட்சியில் இணைந்தது, அவை என்ன என்றெல்லாம் லிஸ்ட் போடுகிறார்.

பேப்பரே படிக்காத ஆட்களுக்கு மட்டுமல்ல, என்னேரமும் இணைய செய்திகளை மேய்ந்து கொண்டிருப்பவர்களுக்குக் கூட அவரிடம் தகவல்கள் இருக்கிறது.


கூட்டத்துக்கு வந்தவர்களின் குறைந்த வயது 35. பெரும்பாலும் 45+ தான் கண்ணில் பட்டார்கள். திமுக விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. 25 வயது ஆட்கள் யாருகே இல்லை. அழகிரி பிறந்த நாளான ஜனவரி 30க்கு அவரை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர்களில் நகரபொறுப்பில் உள்ள பலரது மகன்களின் படம் பட்டத்தோடு இருந்தது. ஆனால் அவர்கள் யாரையும் கூட்டத்தில் காணவில்லை. தீப்பொறியின் 90 நிமிட பேச்சில் அவர்கள் பல தகவல்களை உள் வாங்கியிருக்கலாம்.

நான் சிறுவனாக இருந்தபோது, பார்த்த கூட்டங்களில் எல்லாம் இளவயதினர் தான் அதிகம் இருப்பார்கள். அவர்கள் தான் இன்னும் வருகிறார்களோ என்ற எண்ணமே ஏற்பட்டது.

ஆசைத்தம்பி, மதியழகன், என்விஎன் பற்றி எல்லாம் சொன்னார். ராஜாஜி, மவுண்ட் பேட்டன், மோதிலால், ஜவஹர்லால் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் இவர்களின் பெயர்கள் எல்லாம் பேனரில் சிரித்துக் கொண்டிருக்கும் பி ஏ, பி எஸ்ஸி, பி ஈ க்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்காது.

பொதுஜனத்தின் ஆதரவு அமோகமாக இருந்தது. மின் வெட்டு அவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது. (மின் வெட்டினால் கூட இவ்வளவு கூட்டம் கூடியிருக்கலாம்].

இன்றைய நிலையில் நியாயமாக ஒரு இடைத்தேர்தல் நடந்தால் அது நிச்சயம் ஆளுங்கட்சிக்கு கசப்பான முடிவையே தரும் என்பது மட்டும் நிதர்சனம்.