June 09, 2025

ராமமூர்த்தி அண்ணன்

அண்ணன், மகள் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அது விஷயமாக அடிக்கடி பேசுவார். சென்ற வாரம் அப்படியான ஒரு அலைபேசி அழைப்பின்போது சொன்னார், முன்னாடி நகையெல்லாம் வாங்காம அசால்டா இருந்துட்டேண்டா. இப்ப விலையெல்லாம் கேட்டா தல சுத்துது. செய்கூலி,சேதாரம் அதுக்கப்புறம் ஜிஎஸ்டி. அப்படி இப்படின்னு டிசைனா வாங்கணும்னா பத்து பவுன் எட்டரை லட்சம் வருது. முன்னாடி நம்ம ஊர் கல்யாணம், விசேஷத்துக்கு எல்லாம் வருவாரே ராமமூர்த்தி, அவரு பழைய நகை எல்லாம் செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கி கொடுத்துட்டு ஒரு கிராமுக்கு இவ்வளவு ரூபா அப்படின்னு மட்டும் வாங்குவாரே, அவர் நம்பர் இருக்கா? அவர்கிட்ட கொஞ்சம் பழைய நகை வாங்குனா ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் குறைய வாய்ப்பிருக்கு. மத்த செலவுக்கு அது ஆகிவிடும் என்றார். ரெண்டு மூணு விசேஷத்துக்கு ஊர் பக்கம் போனபோது அவர பாக்க முடியல. பழைய போன் நம்பரும் மாத்திட்டாருன்னு சொன்னாங்க. வர ஞாயிறு வைகாசி வளர்பிறை கடைசி முகூர்த்தம். ஊரில் நிறைய கல்யாணம் இருக்கு. போறேன் எப்படியும் தட்டுப்படுவாரு பார்த்துட்டு கூப்பிடுறேன் என்றேன். ஞாயிற்றுக்கிழமை அட்டென்ட் செய்யப் போகும் விசேஷங்களுக்கு ஏற்ப மொய் கவர் வாங்கி வைத்துக்கொண்டு பஸ்ஸில் உட்கார்ந்தாயிற்று‌. பஸ் ஊரை நோக்கி கிளம்பியது. அரசு பேருந்து. டிரைவரும் கண்டக்டரும் சம 50 வயது ஆட்கள். அதைவிட இளையராஜா வெறியர்கள் போலும். அட்டகாசமான பாடல்களாக போட்டுக் கொண்டே வந்தார்கள். ரிக்ஷா மாமா படத்தின் தங்க நிலவுக்குள் பாடல் ஒலிக்க துவங்கியதும், ராமமூர்த்தி அண்ணனின் ஞாபகம் வரத்துவங்கியது. பேச்சுவாக்கில் தான் அண்ணன் ஆனால் அவருக்கு எப்படியும் தற்போது 70 வயது இருக்கும். 40 வருடங்களுக்கு முன்னர் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி எங்கள் ஊர் இருந்தபோது, விவசாயிகள் களை எடுக்க, உரம் போட, மருந்தடிக்க என்னும் செலவுகளுக்கு அல்லது அறுவடைக்கு நாள் இருக்கும் போது வந்துவிடும் சுப/அசுப செலவுகளுக்கு, நகையை அடகு வைத்து வட்டிக்கு பணம் வாங்குவார்கள். ஆனால் அவர்கள் அடகுக் கடைக்கு சென்று அங்கே நிற்பதை கௌரவ குறைச்சலாக கருதுவார்கள். பொதுவாக பெண்களை வெளியே அனுப்ப மாட்டார்கள். பொருளை எடுத்துக்கொண்டு அடகு கடையிலோ அல்லது கூட்டுறவு வங்கியிலோ உட்காருவது அவர்களைப் பொறுத்த வரை பெருத்த அவமானமாக இருந்த காலம் அது. அதேபோல நொடித்துப் போய் நகைகளை விற்கிறவர்களும் நகைக் கடைக்கு செல்ல மாட்டார்கள். ராமமூர்த்தி அண்ணனை நாடுவார்கள். அவர் நியாயமாக அடகு வைத்தோ விற்பனையோ செய்து கொடுப்பார். கஷ்டத்தில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகள் திருமணத்தின் போது ராமமூர்த்தி அண்ணனிடம் சொன்னால் விற்பனைக்கு வந்த பழைய நகைகளை பாலிஷ் செய்து சகாயமான விலைக்கு வாங்கி கொடுப்பார். எனவே ராமமூர்த்தி அண்ணன் அந்த ஏரியா முழுவதும் மிகப் பிரபலம். காதும் காதும் வைத்தார் போல இந்த டீல்களை எல்லாம் முடித்துக் கொடுப்பார். அதனால் பொதுவாக எல்லா விசேஷங்களுக்கும் சென்று விடுவார். அப்போது அவரிடம் தகவல் சொன்னால் போதும். வீடுகளுக்கு கூட வந்து வாங்காமல் ஏதாவது பொது இடத்திற்கு வந்து வாங்கிக் கொள்வார்.அவர் மீது மிக நம்பிக்கையாக எல்லோரும் இந்த வரவு செலவு வைத்துக் கொள்ள ஒரு காரணம் இருந்தது. அவர் இந்த தொழிலை ஆரம்பித்த சமயத்தில், ஒரு விவசாயி, விவசாயத்தில் தொடர் நஷ்டம் காரணமாக தன் வீட்டில் கடைசியாக இருந்த ஒரு பழைய கல் வைத்த செயினை அடகு வைக்க நினைத்தார். இவரைப் பற்றி கேள்விப்பட்டு, அந்த செயினை கொடுத்தார். இவரும் தான் வழக்கமாக செல்லும் அடகு கடைகளில் ஒன்றில் அந்த செயினை வைத்து பணம் வாங்கி கொடுத்தார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக அந்த விவசாயியால் வட்டி கட்ட முடியவில்லை. நகை மதிப்பில் கொஞ்சம் ரூபாய்தான் மீதம் இருந்தது. எனவே இவர் அந்த விவசாயியை சந்தித்து, ஒரு வருஷமா வட்டி கட்டல, நகை மூழ்கிடும் போல இருக்கு. என்ன செய்யலாம் என கேட்க, அவர் இந்த முறை போட்ட வாழையில் மேடேறி வந்து விடுவேன் என நினைத்தேன். ஒன்றும் நடக்கவில்லை. இந்த தோட்டத்தை வைத்தும் கொஞ்சம் கடன் வாங்கி இருக்கிறேன். அதையும் என்னால் இனி கட்ட முடியாது. அதனால் இந்த தோட்டத்தையும் விற்றுவிட்டு வேறு ஊருக்கு பிழைக்க செல்லலாம் என்று இருக்கிறேன். அடகு வைத்த நகை விற்று ஏதாவது மீதம் இருந்தால் கொடுங்கள் உதவியாக இருக்கும் என்றார். ராமமூர்த்தி அடகு கடைக்கு திரும்பி வந்து, விபரத்தை சொல்ல, அடகுக் கடைக்காரரோ, நீயே இந்த செயினை பஜாரில் விற்று பணத்தை எடுத்து, அசல் மற்றும் வட்டியை எனக்கு கொடுத்துவிட்டு, உன் கமிஷன் போக மீதத்தை அவரிடம் கொடுத்து விடு என்றார். நகையை வாங்கிக்கொண்டு பஜாரில் இருந்த அவர் வழக்கமாக பழைய நகைகளை விற்கும் ஒரு நாணயமான கடையில் செயினை கொடுத்தார். அதை பார்த்த முதலாளி, இன்னும் கொஞ்சம் பரிசோதித்து பார்த்துவிட்டு, இது எல்லாமே அசல் வைரக் கற்கள். அந்த காலத்துல பண்ணியிருக்காங்க. இப்ப ரொம்ப விலை போகும் என்று சொல்லி, அந்த நகையின் மதிப்பை விட பத்து மடங்கிற்கு மேல் பணத்தை கொடுத்து இருக்கிறார். உடனே இவர் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அடகு கடையில் செட்டில் செய்துவிட்டு, மீத பணத்தை பையில் கட்டி, பேருந்துக்கெல்லாம் காத்திருந்தால் நேரம் ஆகிவிடும் என்று, ஒரு வாடகை சைக்கிள் எடுத்து அந்த விவசாயியின் ஊருக்கு விரைவாகச் சென்று விவரம் சொல்லி பணத்தை கொடுத்து இருக்கிறார். அந்த வீட்டாரால் நம்பவே முடியவில்லை. ஊரைவிட்டு கிளம்ப மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருந்தவர்கள், அந்தப் பணத்தில் நிலத்தின் மீதான கடனை அடைத்து, மற்ற சிறு கடன்களையும் அடைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். இந்த சம்பவம் அப்போது அந்த கிராமத்தார்கள் மூலம் சுற்றுவட்டாரம் எல்லாம் பரவியது. அதிலிருந்து ராமமூர்த்தி அண்ணனுக்கு எல்லோரிடமும் பெரிய மரியாதை. எந்த விசேஷமாக இருந்தாலும் அழைப்பார்கள். அவசரத்திற்கு அவரிடம் தான் நகை கொடுக்க வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்கிற முடிவு தங்களை அறியாமலேயே எல்லோருக்கும் வந்து விட்டது. இளவெயில் ஆனால் லேசான காற்றுடன், இன்னும் சில பாடல்களை பேருந்தில் கேட்டு முடித்தபோது ஊர் வந்து சேர்ந்திருந்தது. இறங்கி, முதல் இரண்டு விசேஷங்களுக்குப் பின் மூன்றாவது விசேஷத்தில் ராமமூர்த்தி அண்ணன் காணக் கிடைத்தார். விவரத்தை சொல்லியதும், இல்ல தம்பி இப்பல்லாம் அந்த தொழிலை விட்டு விட்டேன் என்றார். என்னண்ணே என்ன ஆச்சு என்று கேட்டதற்கு, எங்களுக்கு மெயின் ரொட்டேஷன், பேங்க்ல அடமானத்துக்கு வச்சு மீட்க முடியாமல் ஏலத்துக்கு வர நகைகள் தான். முன்னாடி 500 ரூபா இப்போ ஐயாயிரம் ரூபாய் டெபாசிட் கட்டினால் யாரும் கலந்து கொள்ளலாம். நான் எனக்கு தெரிந்த நம்பிக்கையான நகை மதிப்பீட்டாளர கூட்டிக்கிட்டு போவேன். எல்லாம் செக் பண்ணி ஏலத்துல நகை எடுப்போம். ஆனா இப்ப உரசி பார்த்தா தங்கமா இருக்கு ஆனா உள்ளுக்குள்ள வேற மெட்டீரியல். ரொம்ப டெக்னிக்கலா செஞ்சு அடகு வைத்துவிட்டு போயிடுறாங்க. சில சமயம் பேங்க்ல இருக்கிறவங்களே இதுக்கு துணை போறாங்க. அந்த நகையோடு அதிகபட்ச மதிப்பீட்டுக்கு ஒரு கமிஷன் வாங்கிட்டு பணம் கொடுத்து விட்டுறாங்க. அப்படித்தான் நான் ஒரு தடவை வளையல் எடுத்தேன், அதுக்குள்ள வெள்ளி கம்பி இருந்திருக்கு. அதுக்கப்புறம் ஒரு 18 பவுன் காசு மாலை எடுத்தேன். அதிலும் உள்ள நிறைய வெள்ளி கம்பி. அதை எடுத்து சிலருக்கு மாத்தி கொடுத்தேன். ஆனா இப்ப இருக்கிற பெரிய நகைக் கடைகளில் தங்கம் குவாலிட்டி மெஷின்ல செக் பண்ணும் போது கண்டுபிடிச்சிட்டாங்க. இனி பேங்க்ல போய் அதை ஒன்னும் செய்ய முடியாது. ஏகப்பட்ட லட்சங்கள் என் கையில் இருந்து கொடுத்து தான் அந்த பிரச்சனையை முடிச்சேன். அதிலிருந்து இந்த தொழிலையே விட்டுவிட்டேன். நீங்க நகை கடையில் பார்த்து நல்லா பரிசோதித்து வாங்குங்க அதுதான் நல்லது என்று முடித்துக் கொண்டார். சரிண்ணே. இப்பொழுது என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டேன். நமக்கு தெரிந்தவர் பழைய பொருள்கள் கடை வச்சிருக்கார். ஒரு ட்ரை சைக்கிள் வச்சு பொதுவா சனி, ஞாயிறுகளில் ஏரியா பக்கம் போய் இருக்கும் பழைய பாத்திரம், பேப்பர், பிளாஸ்டிக் எல்லாம் எடை போட்டு வாங்கிட்டு வந்து அவர்கிட்ட கொடுக்கிறது. அவர் பொருளுக்கு ஏற்ற மாதிரி கமிஷன் கொடுப்பார் அத வச்சு வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. என்ன முன்னர் கிராம் கணக்குல நிறுத்து பார்ப்பேன். இப்ப கிலோ கணக்கு. எல்லோருக்குமே தேவைப்படுறதால அதுக்கு மதிப்பு அதிகம். இது தேவைப்படாத பொருள். ஏதாவது ஒரு காலத்துல தங்கமும் தேவைப்படாத பொருள் ஆகலாம் இல்லையா.. என்று சொல்லிவிட்டு, புது போன் நம்பரை கொடுத்து எந்தெந்த ஏரியாக்கள் கவர் செய்கிறார் என்று சொல்லிவிட்டு சாப்பிட கிளம்பினார்.

May 17, 2025

தக் லைஃப்

87 சமயத்தில் எங்கள் ஊர் பகுதியில் கல்லூரிகள் இல்லை. பெரும்பாலும் மதுரையில் இருக்கும் அமெரிக்கன், மெஜூரா, தியாகராஜா ஆர்ட்ஸ் மற்றும் வக்ஃப் போர்டு கல்லூரிகளில் தான் எங்கள் ஊர் காரர்கள் சென்று படிப்பார்கள். ஹாஸ்டலில் தங்கி இருக்கும் அவர்கள் சனி ஞாயிறு வரும்போது, அவர்கள் பார்த்த படங்களைப் பற்றி சொல்வது தான் எங்களுக்கு முதல் தகவல் அறிக்கை. ஏனென்றால் எந்த படமாக இருந்தாலும் எங்கள் ஊருக்கு நூறு நாள் கழித்து தான் வரும். 87 தீபாவளி சமயத்தில் போடப்பட்ட ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், மனிதன் படத்தின் வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன், உழவன் மகன் படத்தின் செம்மறியாடே செம்மறியாடே பாடல்கள் கொடுத்த தாக்கத்தை, நாயகனின் நான் சிரித்தால் தீபாவளி கொடுக்கவில்லை. என்னடா பாட்டு வரியே காதுக்குள்ள போக மாட்டேன் என்கிறதே என்பதுதான் அப்போது பேச்சாக இருந்தது. தீபாவளி முடிந்து அதிரசம் முறுக்கு ரவா லட்டு வாளிகளோடு ஹாஸ்டல் சென்ற சீனியர் அண்ணன்கள், திரும்பும் நாளை எதிர்பார்த்திருந்தோம். நான் கமல் ரசிகன் என்பதால் அண்ணே நாயகன் எப்படி இருக்கு என்று எல்லோரிடமும் போய் கேட்டேன். டேய் அதை கதை மாதிரி சொல்ல முடியாதுடா. அது பாட்டுக்கு போகும். கவனமா பாக்கணும். அவ்வளவுதான் என்றார்கள். சிலர் படம் புரியவில்லை என்றும் சொன்னார்கள். எங்கள் ஊருக்கு படம் வந்தபோது, ஊர் தியேட்டரில் சுமாரான சவுண்ட் சிஸ்டம். சில டயலாக்குகள் காதில் கேட்கவே இல்லை. ஆனால் அதன் பின்னர் ஒவ்வொருவராக நாயகனை பற்றி பேச ஆரம்பித்ததும் தான் அந்தப் படத்தின் பிரம்மாண்டம் உறைத்தது. அந்தப் படம் அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த பல பென்ச் மார்க்குகளை உடைத்து போட்டு புதிதாக பலவற்றை நிறுவியது. ஆர்ட் டைரக்சன் எப்படி இருக்க வேண்டும், ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டும் முக்கியமாக வயதானவர் என்று காட்ட வேண்டும் என்றால் தலை முடிக்கு சுண்ணாம்பு அடித்து விட்டு ஒரு கோட் மாட்டி விடக்கூடாது. உருவம்,குரல், நடை முதற்கொண்டு அப்படியே மாற வேண்டும் என்று தமிழ் சினிமாவிற்கு பாடம் எடுத்தது. சினிமா என்பது காட்சி ஊடகம். முடிந்தவரை வசனங்கள் குறைவாக இருக்க வேண்டும். அந்த வசனங்களும் அம்பு போல பாய வேண்டும். என்று பலவற்றை சொல்லாமல் சொல்லியது. அதன் பின்னர், மணிரத்னம் கமல் அடுத்து இணைவார்களா என்ற எதிர்பார்ப்பிற்கு, பதிலாக வந்தது ஆனந்தம் திரைப்படம். அதில் நானா படேகரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் கமல் - மணி creative difference காரணமாக, கமல் அதிலிருந்து விலகினார். நானாவும் விலகினார். பின்னர் அதே ஸ்கிரிப்ட்டை, மோகன்லால் பிரகாஷ்ராஜ் வைத்து இருவர் என இயக்கினார் மணி. கிட்டத்தட்ட நாயகன் வெளியாகி முப்பத்தி எட்டாவது வருடம். எவ்வளவோ மாற்றங்கள். அந்த சமயத்தில் பிறந்தவர்கள் தற்போது சினிமா பார்க்க தியேட்டருக்கு செல்ல வேண்டுமா என்று தயக்கம் கொள்ளும் அளவிற்கு காலம் மாறி விட்டது. வெகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முரட்டுத்தனமான இயக்குனர்- நடிகர் காம்போ. இன்று மாலை 5 மணிக்கு Thug life படத்தின் டிரைலர் வருகிறது. மீண்டும் அந்த மேஜிக் நடக்க வேண்டும் என்பது ஒரு கமல் ரசிகனாக எதிர்பார்ப்பு. அன்று ஒவ்வொரு அண்ணனாக சென்று, படம் எப்படி இருக்கிறது என்று கேட்ட மனம், இன்று ஜூன் 5ஆம் தேதி வரும் ஆன்லைன் விமர்சனங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

நானும் மகனும்

ஞாயிறு பிற்பகலில் வைகை எக்ஸ்பிரஸில் இருந்து இறங்கி, மகன் தங்கி இருந்த திருவல்லிக்கேணி மேன்சனை சென்றடைந்த போது, அவன் தூங்கிக் கொண்டிருந்தான். நான் சாப்பிட்டு விட்டேன். நீங்கள் பக்கத்தில் ஏதும் சென்று சாப்பிட்டு வருகிறீர்களா? என்றான்.ட்ரெயின்ல வரும்போது சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லி அறையில் இருந்த மகனின் ரூம் மேட் பெட்டில் படுத்து கொண்டேன். ஐம்பதை கடந்தாகி விட்டது. இதுவே 5-10 வருடம் முன்னால் என்றால் கூட, இப்படி வைகையில் இருந்து இறங்கினால் நாயர் மெஸ் அல்லது ஒரு நல்ல ஆந்திர மெஸ்ஸில் சாப்பாடு. முடித்தவுடன் அப்படியே பொடி நடையாக நடந்து தேவி தியேட்டரில் நாலு மணி ஷோ. படம் முடிந்ததும் சின்ன சமோசாவும் இராணி டீயும். இப்போது படுத்தால் போதும் என்று இருக்கிறது. ஆறு மணி அளவில் எந்திரித்தேன். மகன் லேப்டாப்பில் அவன் அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு டீ சாப்பிட்டு வருவோமா? கிரவுண்டுக்கு எதுத்தாப்புல ஒரு கடையில நல்லா இருக்கும் என்றேன். நீங்க போய் சாப்பிட்டு வாங்க எனக்கு வேலை இருக்கிறது என்றான். டீ சாப்பிட்டு வந்ததும் பையில், குறிப்பு எடுத்து வைத்திருந்த பேப்பர்களை புரட்ட துவங்கினேன். நல்லா பிரிப்ஃபேர் பண்ணிட்டீங்களா? நாளைக்கு கிடைச்சிருமா? என்றான் மகன். 25 வருஷமா பார்த்துக்கிட்டு இருப்பது தானே? இப்ப லேட்டஸ்ட் அட்மினிஸ்ட்ரேஷன் அப்டேட் மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கேன் என்றேன். இரவு 8 மணி ஆனது. ஏதாச்சும் ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிடலாமா என்று கேட்டேன்‌. அரை மனதுடன் உடன் வந்தான். சாப்பிட்டு முடித்ததும், அப்படியே பீச்சுல போய் கொஞ்சம் அலைகளை பார்த்துட்டு காத்து வாங்கிட்டு வரலாம் என்றேன். சரி என்று தலையசைத்து உடன் நடக்க துவங்கினான். அப்போது சிறிய மகனிடம் இருந்து அழைப்பு. சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டான். ஆச்சு நீ என்ன பண்ற ..என்ன.. அவனிடம் பேசிக் கொண்டே நடந்தேன்... கடற்கரையை நெருங்கி மணலில் நடக்க ஆரம்பித்தோம். அப்போது மகன் கேட்டான். என்னை விட அவன் மேல தானே உங்களுக்கு பாசம் அதிகம் என்று. எனக்கு ரெண்டு பேர் மீதும் ஒரே பாசம் தான். உனக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். உனக்கு நாங்கள் செய்ததெல்லாம் உன்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தம்பிக்கு செய்ததை நீ பார்த்துக் கொண்டு இருந்தாய். அதனால் உனக்கு அப்படி தோன்றுகிறது என்றேன். அது மட்டும் வச்சு சொல்லல. ஒரே செயலுக்கு நீங்க என்ன தண்டிக்கிற விதமும், அவன தண்டிக்கிற விதமும் வேற. அவ்வளவு ரியாக்ஷன் மாறுறது பார்த்திருக்கிறேன் என்றான். சில நிமிடம் எங்களுக்குள் ஒரு அமைதி நிலவியது. அப்படி இல்லடா. நான், நீ வளர்ந்து வரும் போது என் அப்போதைய வயதோடு உன்னை கம்பேர் செய்து பார்த்தேன். நான் செய்வது போலவே வேலைகள், ஒழுங்காக படிக்க வேண்டும், சேட்டை செய்யக் கூடாது என்று. அதனால் உன் மேல் எனக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு அது நடக்காத போது மிகக் கேவலமாக கூட உன்னை அடித்திருக்கிறேன் ‌ அத நெனச்சு இப்போ தினமும் மனசு கஷ்டப்படுகிறேன். ஆனால் உன் தம்பி வளர்ந்து வரும் போது உன்னைத்தான் அவனுக்கு பெஞ்ச் மார்க்காக மனம் நினைத்தது. அவன மாதிரி தானே இருக்கான் அல்லது அவனைவிட பரவாயில்லை என்று தோண ஆரம்பித்தது. அதனால், நீ செய்த அதே தவறுக்கு அவனை குறைவாக தண்டித்திருக்கிறேன் ‌ என்னுடைய தவறுதான் என்றேன். நாளை காலை உங்களுக்கு எத்தனை மணிக்கு இன்டர்வியூ என்று கேட்டான். பத்து மணிக்கு அங்கே இருக்க வேண்டும் என்றதும், சீக்கிரம் தூங்குங்க ட்ரெயின் டயர்ட் வேற இருக்கும். காலைல எந்திரிச்சு சீக்கிரம் கிளம்பனும் என்றான். திரும்பி ரூமுக்கு வரும்போது, நான் நல்லாத்தான் உங்கள பாத்துகிட்டேன், எங்க அப்பாவ கம்பேர் பண்ணும் போதெல்லாம் நான் எவ்வளவோ மடங்கு மேல் என்றேன். ஆத்திரமான குரலில் பேச ஆரம்பித்தான். இப்படி கம்பேர் பண்ணாதீங்க. அவர் அந்தக் கால ஸ்டாண்டர்டுக்கு உங்கள பாத்துகிட்டார். நடத்தினார். ஒரு தலைமுறை தாண்டி எவ்வளவோ மாறிவிட்டது. நீங்கள் அவரை விட கொஞ்சம் பெட்டர் என்று தான் சொல்லலாமே தவிர, இந்தத் தலைமுறை பெற்றோர்களோடு ஒப்பிட்டால் நீங்கள் மோசம் தான் என்றான். இப்படித்தான் தாத்தா அந்த காலத்தில், பாட்டியை நடத்தியதை விட நான் நல்லாத்தான் வச்சிருக்கேன் என்று என் அம்மாவையும் நீங்கள் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. உங்கள் ஒப்பீடு இந்த தலைமுறையில் தங்கள் மனைவியை, குழந்தைகளை பார்ப்பவர்களோடு இருக்க வேண்டுமே தவிர போன தலைமுறையோடு அல்ல என்றான். மேன்சனை நெருங்கினோம். அப்படியே, இந்தப் பக்கம் ஒரு கடை இருக்கும் இல்ல அங்க பால் குடிச்சிட்டு போயிடலாம் என்றேன். இதுதான் இதுதான் உங்ககிட்ட பிடிக்காதது. வந்ததுல இருந்து உங்க சுகத்தை பத்தியே தான் யோசிக்கிறீங்க, பேசுறீங்களே தவிர, எனக்கு என்ன வேணும்? எனக்கு என்ன பிடிச்சிருக்கு? சாப்பிடறியான்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா என்றான். இல்லப்பா நான் நல்லதா தானே செலக்ட் பண்ணி சொல்றேன். அது உனக்கும் பிடிக்கும்ல என்றேன். அதுதான், எல்லாத்தையுமே உங்க கோணத்திலேயே தான் பாக்குறீங்க. ஒரு தலைமுறை மாறிடுச்சு. என்னோட விருப்பம் என்ன?எது தேவையா இருக்கும்னு கூட உங்களுக்கு தோணல. அதுதான் இந்த குடும்பத்தை இப்படி சரியில்லாம வச்சிருக்கு. இந்த வயசுலயும் இருக்கிற வேலையோடு சேர்த்து வேற என்ன சம்பாதிக்கலாம்னு நினைக்காம, சம்பளம் பத்தல, மெட்ராஸ்ல வேலை தேடுறேன்னு வர்றீங்க. குடும்பத்தோடையும் இப்ப இருக்க சூழலில் வர முடியாது. அப்படி வந்தா பத்தவும் செய்யாது. இங்க மேன்சனில் தங்கிட்டு வீட்டுக்கு கொஞ்சம் பணம் அனுப்பிவிட்டு ஜாலியா இருக்கலாம் என்று தான் உங்கள் மனசு சொல்லுது என்றான். சத்தியமா இல்லடா. அங்க குடுக்குற சம்பளம் பத்த மாட்டேங்குது. விலைவாசி கூடிக்கிட்டே போகுது. சம்பளம் ஏறுற மாதிரியே தெரியல. உன் தம்பியை இன்னும் நாலு வருஷம் எப்படியும் படிக்க வைக்கணும். அதனாலதான் இந்த முயற்சி என்றேன். இந்த யோசனை எல்லாம் வயசு காலத்தில் இருந்திருக்கணும். அப்ப சுகமா ஊரிலேயே இருந்து நல்லா தின்னுட்டு இப்ப பத்தல பத்தலன்னா எப்படி என்றான்? ரூமுக்கு திரும்பி சிறிது நேரம் படித்துக்கொண்டிருந்தேன். அவன் முறைத்துப் பார்ப்பது போலவே உள்ளுணர்வு சொல்லியது. காலை எழுந்ததும், இப்ப டிஃபன் எங்க நல்லா இருக்கும் என்ற கேள்வி நாக்கு வரை வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவனுடனேயே சென்றேன். அவன் வழக்கமாக சாப்பிடும் இடத்தில் ஒரு தோசை வாங்கி கொடுத்து பஸ் ஏற்றி விட்டான். இன்டர்வியூ முடிந்தது. பெரிய திருப்தி இல்லை. மேன்சனுக்கு திரும்பி, அவன் வரவுக்காக காத்திருந்தேன்.‌ வேலை முடிந்து களைப்பாக வந்தான். நைட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணிக்கு. இப்போ கிளம்பி போனா சரியா இருக்கும். கிளம்புகிறேன் என்றேன். ஸ்டேஷனுக்கு நான் வருகிறேன் என்றான். உங்களுக்கு சங்கீதா தானே பிடிக்கும் இங்கே சாப்பிடுவோம் என்றான். இல்ல உனக்கு பிடிச்ச இடத்தில் சாப்பிடுவோம் என்றேன். பரவாயில்ல சங்கீதாவே போவோம் என்றான். சாப்பிட்டு பிளாட்பாரத்திற்கு வந்தோம். நான் ஒரு சூப்பர் அப்பான்னு நினைச்சுகிட்டு நிறைய தப்பு பண்ணிட்டேன். ரொம்ப ஸாரி என்றேன்.‌ அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஒன்றும் சூப்பர் மகன் இல்லை. எனக்கு சூப்பர் அப்பாவும் தேவையில்லை. எங்க அப்பா மாதிரி இல்ல நான். எல்லாத்தையும் உங்களுக்காக விட்டுக் கொடுத்தேன் என்று மட்டும் இனி நினைத்துக் கொள்ளாமல் முக்கியமாக சொல்லாமல் இருங்கள் போதும் என்றான். சரி என்று கம்மிய குரலில் சொல்லிவிட்டு, தலை குனிந்தவாறு ட்ரெயினில் ஏறி உட்கார்ந்தேன். ட்ரெயின் கிளம்பியதும் ஹெட் செட்டில் பாடல் கேட்போமே பேக்கை திறந்தேன். எனக்கு பிடித்த பாஷா அல்வா பாக்கெட் இருந்தது.