December 27, 2015

வீட்டோடு மாப்பிள்ளை



வீட்டோடு மாப்பிள்ளையாய் இருப்பவர்கள் அல்லது வீட்டில் மனைவியின் அம்மா உடனிருப்போரைக் கண்டறியும் வழிகள்.

அலுவலகத்திற்கு பெரும்பாலும் எல்லா நாட்களும் மதிய சாப்பாடு கொண்டுவந்து விடுவார்கள்.

மாலை அலுவலக வேலை எவ்வளவு நேரம் இழுத்தாலும் முகம் சுளிக்காமல் இருப்பார்கள்.

அனாவசியமாக லீவ் எடுக்க மாட்டார்கள்.

தீபாவளி,பொங்கல்,சரஸ்வதி பூஜை, புத்தாண்டு என எந்த விழாக்காலங்களிலும் பரபரப்பின்றி இயல்பாக இருப்பார்கள்.

அனாவசியமாக கடன் வாங்க மாட்டார்கள்.

வாசிங் மெசின், பிரிட்ஜ், டிவி இவற்றில் எது புது மாடல், விலை விபரம் போன்றவையெல்லாம் தெரியாது. அது குறித்து அலட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.

கெட்-டு-கெதர்களில் பங்கெடுக்க தயங்குவார்கள்,

சக வயது திருமணமான ஆசாமிகளிடம் இருந்து விலகி இருப்பார்கள். திருமணமாகாத இளைஞர்களிடம் ஓரளவு பழகுவார்கள்.

வேலையில் நன்கு கவனம் செலுத்துவார்கள்.

ரகசியமாக பணம் கையிருப்பு எப்போதும் வைத்திருப்பார்கள்.

December 25, 2015

திருவேடகம் விவேகானந்தா கல்லூரி

தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நண்பரொருவர் சொல்லுவார், ’என் ஒய்ஃப் கவர்மெண்ட் சர்வண்ட்டுங்க. தமிழ்நாட்டோட எந்த மூலைக்கு அவங்களை ட்ரான்ஸ்பர் பண்ணினாலும் கவலைப்படாம கிளம்பிடுவோம், ஏன்னா எப்படியும் அங்க ஒரு இஞ்சினியரிங் காலேஜ் இருக்கும்ல’. இது போன்ற சூழ்நிலை இல்லாத 80களில் எங்கள் ஊர் பையன்களுக்கு கனவே கலை அறிவியல் கல்லூரிகள் தான்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரி, மெஜுரா காலேஜ், தியாகராஜா கலை அறிவியல் கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி, திண்டுக்கலில் ஜிடி நாயுடு கல்லூரி, உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி, கருமாத்தூர் அருளானந்தா கல்லூரி, உத்தம பாளையம் காஜி கருத்த ராவுத்தர் கௌதியா கலைக் கல்லூரி, திருவேடகம் விவேகானந்தா கல்லூரி ஆகியவையே எங்கள் ஊரில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பாக இருந்த கல்லூரிகள். எங்கள் ஊர் பேஸ்கட்பால் விளையாட்டுக்கு புகழ்பெற்றது என்பதால் திருச்சி செயிண்ட் ஜோசப் போன்ற கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும்.

இவற்றுள் எந்த கல்லூரி கிடைத்தாலும் சேர்ந்துவிடும் எங்கள் ஊர்காரர்கள் திருவேடகம் விவேகானந்தா கல்லூரி என்றால் மட்டும் மிகவும் யோசிப்பார்கள்.

அது ஏனென்றால்…..

எங்கள் ஊரில் சங்கு பிரியாணி ஸ்டால் என்னும் ஒரு கடை இருந்தது. தினமும் நண்பகல் 12 மணிக்கு திறந்து மதியம் 2 மணிக்கு அடைத்து விடுவார்கள். மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, தால்சா, கரண்டி ஆம்லெட், தயிர் வெங்காயம், கொஞ்சம் தயிர்சாதம் இதுதான் மெனு. இதை சாப்பிட்டாலும் பார்சல் என்றாலும் ஒரே பேக்கேஜாகத்தான் கொடுப்பார்கள். ஞாயிறுகளில் பிளாக்கில் கூட பார்சல் போகும். வெள்ளாட்டு கறி மட்டும் தான் உபயோகிப்பார்கள். ஆம்லெட்டுக்கு நாட்டுக்கோழி முட்டை, தால்சாவுக்கு நெஞ்செலும்பு மட்டும், வீட்டு எருமைத்தயிர் தான் சாதத்துக்கும், தயிர் வெங்காயத்துக்கும்.

காமாட்சி அவ்வா என்று ஒருவர். மதிய சாப்பாட்டை கணவனுக்கு பரிமாறிவிட்டு இரண்டரை மணியளவில் வீட்டிலேயே தன் வடைக்கடையைத் திறப்பார். ரெண்டே அயிட்டங்கள் தான். தவலை வடை மற்றும் பஜ்ஜி. சட்னி சாம்பார் எதுவும் கிடையாது. அவ்வளவு பக்குவமாக தவலை வடைக்கு எப்படி அரைப்பார் என்றே தெரியாது, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தைக் கூட ஈஸியாக வாங்கிவிடலாம் ஆனால் இந்த பார்முலாவை கடைசிவரை யாராலும் வாங்கமுடியவில்லை. மதியம் 2 மணியில் இருந்தே கையில் தூக்குச் சட்டி, பாத்திரங்களுடன் சிறுவர்கள் காத்திருப்பார்கள். இந்தக் கடையும் நான்கு மணிக்கு மூடப்படும்.

இது போல இன்னும் பல கடைகள். சரசவ்வா ஆப்பம், கோவிந்தம்மா பாட்டி பணியாரம், தாயார் அவ்வா காரச்சீயம் என வகைக்கொன்றாக ஸ்பெஷாலிட்டி கடைகள் இருக்கும். ராஜு ஆப்பக் கடையில் புரோட்டாவிற்கு மட்டும் ஆறு வகைகளில் குழம்பு சட்டிகள் இருக்கும். சாப்பிடுபவர் தேவைக்கேற்ப பல வித பெர்முடேசன் காம்பினேசன்களில் அதைக் கலந்து தருவார்கள்.

இப்படித் தின்றே பழகியவர்களுக்கு ஹாஸ்டல் சாப்பாடு என்பது தூக்கு தண்டனைக்குச் சமம். அதனால் மதுரையில் உள்ள கல்லூரிகளில் மட்டுமே சேருவார்கள். ஏனென்றால் மாலை வேளைகளில் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடலாம். அப்படியும் சனி, ஞாயிறுகளில் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவார்கள். திங்கட் கிழமை போகும்போதும் முறுக்கு,சீடை,இட்லிப் பொடி, பருப்புப் பொடி என அள்ளிக்கொண்டு போவார்கள். இத்தனைக்கும் ஹாஸ்டல் சாப்பாடு நன்றாகவே இருக்கும்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியானது சைவ மடத்தால் நடத்தப்படும் கல்லூரி. அங்கே கைக்குத்தல் அரிசி சாப்பாடுதான் போடுவார்கள். சிற்றின்ப ஆசையை தூண்டவல்ல லாகிரி அயிட்டங்கள் எல்லாம் சமையலில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். சப்பென்றே சாப்பாடு இருக்கும். சுற்றி 5கிமீ தூரத்துக்கு கடையே இருக்காது. அதனால் இரண்டே நாட்களில் எங்கள் ஊர்ப் பையன்கள் சுவரேறி குதித்தாவது ஓடிவந்து விடுவார்கள்.

அதிகாலை எழுந்து பச்சைத் தண்ணீரில் குளிப்பதும் எங்களுக்கு ஒவ்வாமை. சித்திரை மாதத்தில் கூட வெந்நீர்தான். அதிலும் என்னைப்போன்ற சிலர் வெறும் வயிற்றில் பல் கூட துலக்க மாட்டோம். உமட்டிக்கிட்டு வருது என்று சொல்லி, காபி குடித்துவிட்டுத்தான் பல் விளக்குவோம். ஆனால் விவேகானந்தாவில் அதிகாலை எழுந்து பச்சைத்தண்ணியில் குளித்து பிரேயர் செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும்.

அதுவும் எல்லோருக்கும் பரிமாறி முடித்த உடன் தான் சாப்பிட வேண்டும். ஆனால் எங்கள் மக்கள் அடுப்படியில் இருந்து வந்தால் கூட தோசை ஆறிவிடும் என்று சமையல்கட்டிலேயே சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள். சூட்டை விடுங்கள். உணவைப்பார்த்து விட்டால் ஏன், உணவு இருக்கிறது என்று தெரிந்தாலே தேடி எடுத்து தின்று விடுவார்கள். அமாவாசை போன்ற விரதங்களுக்கு கூட சுத்தபத்தமாக சமைக்க முடியாது. கொதிக்கும் வடைச்சட்டியில் கூட கைவிட்டு வடை எடுத்து விடுவார்கள், அவ்வளவு ஏன்? ,எங்கள் ஊரில் பெண்கள் அவ்வை நோன்பு என்று ஒன்று இருப்பார்கள். அதற்கு கொழுக்கட்டை செய்து வழிபடுவார்கள். அந்தக் கொழுக்கட்டையை ஆண்கள் சாப்பிடக்கூடாது ஏன் பார்க்கவே கூடாது என ஒரு ஐதீகம். பார்த்தால் கண் போய்விடும் என அக்காக்கள் பயமுறுத்தி ஒளித்து வைப்பார்கள். ஆனால் எங்கள் பையன்களோ அந்த பாத்திரத்தை தேடி எடுத்து கொழுக்கட்டையைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிடுவார்கள்.

இப்படிப்பட்ட பையன்களுக்கு பசியோடு தட்டை முன்னால் வைத்து காத்திருக்கச் சொன்னால்?. மேலும் எங்கள் ஊரில் மூட்டிய கைலி மட்டும் தான் கட்டுவார்கள். வேஷ்டி எல்லாம் விசேஷங்களுக்குத்தான். அங்கே ஒற்றை வேஷ்டி கட்டவேண்டும். இதையெல்லாம் கேட்டுக் கேட்டு பள்ளிக்கூட பையன்களுக்கு ஒரு வைராக்கியமே பிறந்துவிடும். மதுரை காலேஜ்ல சீட் வாங்குற அளவுக்கு படிச்சிடனும்டா என களத்தில் இறங்கிவிடுவார்கள்.

சில பெற்றோர்கள் மட்டும் வற்புறுத்தி அங்கேயே படிக்க வைத்து விடுவார்கள். இப்போது கவனித்துப் பார்த்தால், அந்த குருகுல முறைக் கல்லூரியில் படித்ததால் கெட்ட பழக்கத்தை விட்டவர்கள் என்பது குறைவு. அங்கு செல்லும் முன் என்னவெல்லாம் செய்தார்களோ அதை திரும்பிவந்தும் செய்தார்கள், என்ன புதிதாக எந்தக் கெட்ட பழக்கத்தையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள்.

17 முதல் 20 வரையிலான வயது ஒரு மாதிரியான வயது. எதையும் செய்யாதே என்றால் செய்யத்துணியும் வயது. அலைபாய்வது, எதையும் முயற்சி செய்யத் துடிப்பது. அந்த வயதில் அதற்கான வாய்ப்புகளை குறைப்பது என்ற வகையில் விவேகானந்தா கல்லூரி நல்ல கல்லூரி.

மனத்திற்கான பிரீசர் என்று கூட சொல்லலாம். 17 வயதில் இருக்கும் கெட்ட பழக்கங்களோடே 20 வயதில் வெளிவருவார்கள். 20 வயதில் 17 வயதுக்கான தீய பழக்கங்களோடு இருப்பதும் ஒரு நல்லதுதானே?
மற்றவற்றை விடுங்கள். உடல்நலத்தை சீராக்கி விடுவதில் வல்லது இந்தக் கல்லூரி. எந்த பட்டை தீட்டலும் இல்லாத கைக்குத்தல் அரிசியில் தேவையான சத்துக்கள் இருக்கும். புரதச்சத்துக்காக அவித்த பயறு வகைகள், கொண்டைக்கடலை என உப்புக் குறைவாகப் போட்டு, எண்ணெய் குறைத்து தாளித்து தருவார்கள். காலை விரைவாக எழுதல், உடற்பயிற்சி, யோகா, தியானம் என உடல்நலத்துக்கு நன்மை பயக்கும் விஷயங்கள் அங்கு பல உண்டு.

சரியான நேரத்துக்கு சாப்பிடுவதும் அங்கே கிடைக்கும் இன்னொரு நன்மை. பொதுவாக எல்லா ஹாஸ்டல்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் சில இடங்களில் பிளெக்சிபிள் டைமிங் இருக்கும். இங்கே அதே நேரத்தில் பிரேயருக்கு அப்புறம் சாப்பாடு என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் சாப்பிட்டுவிடுவார்கள்.

ஒரு பிரபலமான ஆய்வுச்சாலை சோதனை நிறையப்பேர் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு சோதனைச் சாலையில் இருந்த விலங்குகளுக்கு தொடர்ந்து ஆறு மாதம் ஒரு மணியை அடித்து விட்டு சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.

ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் உணவுப்பொருளின் வாசனையை விட மணிச்சத்தத்திற்கே வயிற்றில் ஜீரணிப்பதற்கான என்சைம்கள் சுரக்கத் தொடங்கியதாம். அதுபோலவே விவேகானந்தா மாணவர்களுக்கும் பிரேயர் சாங்கை எங்காவது கேட்டாலே பசிக்கத் துவங்கிவிடும்.

இப்போதும் பி,காம் போன்ற துறைகளுக்கு இடம் கிடைப்பது அங்கு கடினம் தான். தன்னாட்சி பெற்று, NAAC அக்கிரிடிடேசன் பெற்று நன்கு நடந்து வரும் கல்லூரி. ஆனால் இந்த தலைமுறை நடுத்தர வகுப்பு மாணவர்கள் மிகவும் தயங்கும் அளவுக்கு சட்டதிட்டங்கள் இருக்கிறது.

December 24, 2015

சத்துணவு



நான் படித்த துவக்க பள்ளியில் கரும்பலகைக்கு கரி பூசுதல் என்பது ஒரு முக்கியமான சடங்கு. கரும்பலகையில் சில மாத உபயோகத்திற்குப்பின் சாக்பீசால் எழுதும்போது கிரீச் என்ற ஒலி கேட்க ஆரம்பிக்கும். எழுத்து சரியாக விழாது. எனவே காலாண்டு,அரையாண்டுத் தேர்வு முடியும் நாளில் கரி,ஊமத்தை இலை போன்றவற்றை நீர் சேர்த்து  மருதாணி போல அரைத்து சீராக கரும்பலகையில் பூசுவார்கள். ஒரு நாள் காய்ந்து விட்டால் புதுப்பொலிவுடன் கரும்பலகை இருக்கும். இதற்கு ஐந்தாம் மற்றும் நான்காம் வகுப்பு லீடர்கள் தான் இன்சார்ஜ். எப்பொழுதும் கடைசி நாள் பரிட்சையாகநீதி போதனைதான் இருக்கும். அதுவும் மதியத்துடன் முடிந்துவிடும்

நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது என் தெருப்பையன் ஒருவன் தான் கிளாஸ் லீடர். விரைவாக எழுதிவிட்டு கரி அரைக்க வருமாறு டீச்சர் சொல்லவும், அவன் என்னையும் துணைக்கழைத்துப் போனான். ஐந்தாறு பேர் சேர்ந்து எல்லாப் பலகையையும் பூசி முடிக்க 2 மணிக்கு மேலாகிவிட்டது. அந்தக் காலகட்டம் இப்போது போல ஸ்கூல் வேன்,ஸ்கூல் பஸ் இல்லாத காலம். பெரும்பான்மையான மாணவர்கள் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போய்த்தான் சாப்பிடுவார்கள்.
கைகழுவி விட்டு கிளம்ப எத்தனித்த போது, ஒருவன் மட்டும் சாப்பிடலைடா என்றான். அவன் மதிய உணவுத்திட்ட மாணவன். டீச்சரும் எல்லாரும் சாப்பிட்டுட்டு போங்கடா எனச் சொல்ல சாப்பிடப் போனோம்.
அரிசியா, கோதுமையா எது என பிரித்து அறிய முடியாமல் கொழ கொழவென இருந்த ஒரு சாதக்கலவையை, கரிப்பிடித்த ஈய வட்டாவில் இருந்து ஒரு கரண்டி வைத்தார்கள். அந்தப் பசியிலும் என்னால் இரண்டு வாய்க்கு மேல் சாப்பிடமுடியவில்லை. நண்பனிடம் நைஸாக தள்ளிவிட்டுவிட்டேன்.

இத எப்படிடா அவன் சாப்பிடுறான் என வீடு திரும்பும்போது நண்பனிடம் கேட்டேன். அவன் அதற்குஅவங்க வீட்டுல ரொம்ப கஷ்டம்டா, இது இல்லாட்டி இவன் ஸ்கூலுக்கே வரமாட்டாண்டாஎன்றான்.
அதுபோல அப்போது நிறைய மானவர்கள் இருந்தார்கள். 83ஆம் ஆண்டில் எனது பள்ளிக்கட்டணம்  ஆண்டுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே. அவ்வளவு ஏன்? 1989ல் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டுக்கட்டணம் பன்னிரெண்டு ரூபாய்தான், அதைக் கூட செலுத்த முடியாத மாணவர்கள் ஏராளமாக இருந்தனர். படிப்புத்தான் ஒரு மனிதனை முன்னேற்றும் என்ற கருத்தில், எப்படியாவது பள்ளிக்கு கொண்டுவந்து சேர்த்துவிடவேண்டும் என்று காமராஜரால் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் நல்ல பலனைக் கொடுத்துவந்தது. அப்போது இருந்த நிதி ஆதாரத்திற்கு காமராஜரால் அந்த அளவு தரத்தில்தான் உணவுதான் கொடுக்க முடிந்த்து. இன்றும் கூட நான் சந்திக்கும் பல அதிகாரிகள் அந்த திட்டத்தின் மூலம் ஆளானவர்கள்தான்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் ஒரு பரபரப்புத் தோன்றியது. அஞ்சாப்பு வரைக்கும் இருக்குற பிள்ளைகளுக்கெல்லாம் சத்துணவு போடப்போறாங்களாம் என பேச்சு அடிபட்டது. அரிசி சாப்பாடு, பருப்பு கலந்து சாம்பார் மாதிரி கொடுக்கணுமாம்,காயும் கொஞ்சம் இருக்குமாம் என பேசிக் கொண்டார்கள்.  ஏற்கனவே காமராஜரின் மதிய உணவுத்திட்டத்தில் இருந்த மாணவர்களுடன் புதிதாகவும் மாணவர்களை அவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப லிஸ்ட் எடுக்க ஆரம்பித்தார்கள். அரசுப்பணியாளர்கள், வியாபாரிகள், தோட்டம் துறவு வைத்திருப்பவர்களின் பிள்ளைகள் தவிர மற்றவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். சமையல் அறை வெள்ளை அடிக்கப்பட்டது. புதிதாக பாத்திரங்கள், விறகு வந்திறங்கியது

இப்போதைய மதுரை,திண்டுக்கல்,தேனி ஆகிய மூன்று மாவட்டங்களும் இணைந்து ஒரே மதுரை மாவட்டமாக அப்போது இருந்தது. அதன் அப்போதைய ஆட்சித்தலைவர் சந்திரலேகா எஸ். எம்ஜியாருக்கு ராசியானது திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி. அந்த தொகுதிக்கு உட்பட்ட எங்கள் ஊரான வத்தலக்குண்டில் இந்த திட்டத்திற்கான ஆரம்பவிழா நடத்த முடிவானது. அன்னை தெரசா அவர்கள் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். உண்
மையிலேயே வரலாறு காணாத கூட்டம்

மூன்றே மாதம் தான். இந்த திட்டத்தின் வெற்றி உளவுத்துறை மூலம் கோட்டையை எட்டியது. உடனே எம்ஜியார் இதை உயர்நிலைப்பள்ளி வரை  விரிவாக்கச் சொன்னார். நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் ஆடிப்போனார். அதிகாரிகளும் தான். ஆனால் எம்ஜியார் அதில் உறுதியாய் இருந்தார். அடுத்த ஆண்டிலேயே அந்தத் திட்டம் அமுலுக்கு வந்தது,
சத்துணவுக்கென தனி துறை உருவாக்கப்பட்டது. எப்படியாவது அதற்கு நிதி ஆதாரம் கொண்டுவரவேண்டும் என அவர் உறுதியாய் இருந்தார். பட்ஜெட்டில் சில துறைகளின் நிதியை இதற்கு திருப்பிவிட்டார். பல தொழிலதிபர்களிடம் நிதி கேட்டார், பரிசுச்சீட்டு குலுக்கல் நடத்தினார்

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சத்துணவு அமைப்பாளர், சத்துணவு பணியாளர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டது, ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஒரு ஒன்றியத்தில் உள்ள  பள்ளிகளுக்கு சேர்த்து ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். நிறைய பேருக்கு வேலை கிடைத்தது. ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றனர். ஒரு மினி எமர்ஜென்ஸிக்கு இணையான வேகத்துடன் இந்தத் திட்டத்துக்கான கோப்புகள் பறந்தன. 

இந்த திட்டத்தின் மூலம் எம்ஜியாருக்கு பெரும்பாலான மக்களின் மனதில் பெரிய இடம் கிடைத்தது. இதை அப்போதைய மக்களின் பொருளாதார நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். நாங்கள் இப்போது குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் தங்கள் பகுதியில் தளத்தை இடித்துவிட்டு டைல்ஸ் பதிக்கும் வேலையைத் தொடங்கினார். தளத்தை பெயர்த்தெடுக்கவந்த பணியாளர்கள் கிறுகிறுத்துப் போய் அடுத்த நாள் வேலைக்கே வரவில்லை. அவ்வளவு கெட்டியான தளமாக அது இருந்தது.
இதைப்பற்றிச் சொல்லும் போது வீட்டு உரிமையாளார், ‘’85 வாக்குல இந்த வீட்டைக் கட்டுனேன்பா, வேலைக்கு அவ்ளோ பேர் வருவாங்க. பணப்புழக்கம் இப்ப மாதிரியா இருந்துச்சு? நல்லா வேலை பார்க்கலைன்னா ஆள மாத்திடுவோம்னு விழுந்து விழுந்து வேலை பார்ப்பாங்க” என்றார், கூலியும் மிகக் குறைவாகவேதான் இருக்குமாம்.

இப்போது போல ஏராளமான சிறு வேலை வாய்ப்புகள் அப்போது இல்லை. இப்போது தண்ணீர் கேன் சப்ளை முதல்  செக்யூரிட்டி வரை ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடி ஒரிஸ்ஸா,பீகார்காரர்கள் வருமளவுக்கு தமிழ்நாட்டில் இப்போது நிலவரம் இருக்கிறது.
எனவே அந்தக் காலகட்டத்தில் பலருக்கு வாழ்வு கொடுதத்தாக இந்த சத்துணவுத் திட்டம் இருந்தது. இப்போது இந்த அளவு தமிழகம் செழிப்பதற்கான (மற்ற வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில்) காரணங்களில் ஒன்றான சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும் 84ல் எம்ஜியார் யதார்த்தமாக ஆரம்பித்ததுதான். 

1989ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் சத்துணவில் மாத்த்திற்கு 2 முட்டை கொடுத்தார். பின் அது வாரத்திற்கு ஒரு முட்டை ஆகி, இரண்டாகவும் ஆனது.  அடுத்து வந்த ஜெயலலிதா  முட்டை போடும் நாட்களில் அதற்கு ஈடாக சைவ அயிட்டம் ஒன்றையும் வழங்க உத்தரவிட்டார். 

எவ்வளவோ தொலை நோக்குடன் திட்டங்கள் வகுக்கலாம். ஆனால் எப்போதும் உடனடியாகச் செய்ய வேண்டிய ஒன்றும் இருக்கும். அந்த காலகட்டத்தில் தேவைப்பட்ட மாணவர்க்கான உணவை ஒரு கடமையாகச் செய்யாமல் ஆத்மார்த்தமாகச் செய்தார் எம்ஜியார்.
அரிசி,பருப்பு கொள்முதலில் இருந்து, அது உணவாக மாறி மாணவனுக்குப் போய்ச் சேரும் வரை கவனம் செலுத்தினார். சத்துணவு தொடர்பாக எந்த புகார் வந்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகளிடம் ஆய்வுக்கூட்டங்களில் பேசும்போது நான் கையேந்தியாவது நிதி சேர்த்துத் தருகிறேன் என்று உறுதி அளித்தார். அந்த விஷயத்தில் அவர் காட்டிய உறுதி ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு பயத்தைக் கொடுத்து இந்தத் திட்டம் கொடுத்து குறைவான தவறுகளுடன் மட்டுமே செயல்பட வைத்தது.