December 31, 2013

மூன்றாம் இடம்

மஹாபாரதத்தில் தனக்கு, எந்த இடத்திலும் இரண்டாம் இடமே வாய்த்திருக்கிறது என பீமன் வருத்தப்பட்டு இருப்பானோ என்னவோ? ஆனால் அவன் தமிழ்சினிமாவில் இருந்திருந்தால் நிச்சயம் இரண்டாம் இடத்திற்கு அகமகிழ்ந்து இருப்பான். ஏனென்றால், தமிழ்சினிமாவில் மூன்றாம் இடம் தான் பாவப்பட்டது.

அந்த அந்தக் காலத்தில் மட்டும் மூன்றாம் இடத்தில் இருந்தவர்களைப் பற்றிய பேச்சுகள் இருக்கும். அடுத்த தலைமுறை வந்ததும் அந்தப் பெயர் தமிழக மக்களின் வக்காபுலரியில் இருந்து விடுபட்டுவிடும். சில ஆர்வலர்கள் மட்டுமே அந்தப் பெயர்களைப் பற்றி தொங்கிக்கொண்டு இருப்பார்கள்.

பத்திரிக்கைகள் , இணையத்தில் சினிமா பற்றி எழுதுபவர்கள், சினிமா விவாதங்கள் எல்லாவற்றிலும் முதல் இரண்டு இடங்களில் இருந்த நாயகர்களைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
எப்போது பார்த்தாலும் எம்கேடி-பியுசி, எம்ஜியார்-சிவாஜி, ரஜினி-கமல், அஜீத்-விஜய், தனுஷ்-சிம்பு.

எம் கே தியாகராஜபாகவதர்-பி யு சின்னப்பா காலத்தில் மூன்றாவதாக ஒரு நடிகர் இல்லவே இல்லையா? அவர் அந்தக்காலத்துக்கு மட்டுமே செல்லுபடியா? அதை மற்ற தலைமுறைகளுக்கு கடத்தும் பணியை செய்யவேண்டிய ஊடகங்கள் ஏன் இரண்டு இடங்களுடன் நிறுத்தி விடுகின்றன? டி ஆர் மகாலிங்கம் பற்றியோ செருகளத்தூர் சாமா பற்றியோ ஏன் அவர்கள் பேசுவதேயில்லை?

எம்ஜியார்-சிவாஜி காலத்திலும் ஜெமினி கணேசன் என்பவர் இருந்தார். அவருக்கும் மூன்றாம் இடம் வாய்த்திருந்தது. ஆனால் அவரது இடத்தை இப்போதைய தனுஷ்-சிம்பு கால மக்கள் ஊடகங்கள் வழி அறிய வாய்ப்பில்லை. ரவிசந்திரன் என்பவர் கூட வெள்ளி விழா நடிகர் என எம்ஜியார்-சிவாஜி காலத்தில் அறியப்பட்டார். அவர் கூட சில காலம் மூன்றாமிடத்தில் இருந்திருக்கலாம்.

ரஜினி-கமல் காலத்தில் மூன்றாமிடத்தில் இருந்த விஜயகாந்த் இப்போதைய தலைமுறையால் கிண்டல் தொனியிலேயே பார்க்கப்படுகிறார். அவரால் பல தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், இரண்டாம் நிலை தியேட்டர் உரிமையாளர்கள் பலர் வாழ்ந்தார்கள். கார்த்திக், ராமராஜன் ஏன் சரத்குமார் கூட சூரியன், சாமுண்டி, நாட்டாமை காலத்தில் மூன்றாமிடத்தில் சில காலம் சஞ்சரித்து இருக்கிறார்.
இவர்கள் அடுத்த தலைமுறையின் போது டி ஆர் மகாலிங்கம் போல மறக்கப்பட்டு விடக்கூடும்.

அஜீத்-விஜய் காலகட்டத்தில் விக்ரம், சூர்யா ஆகியோர் மூன்றாம் இடத்துக்கு முக்கியமான போட்டியாளர்களாக இருந்தவர்கள். இப்போதே விக்ரம் பெயர் சிறிது சிறிதாக மறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் அப்பாஸ்,மாதவன் கூட ஏதோ ஒரு நாளிலாவது மூன்றாமிடத்தில் இருந்தவர்கள் தானே?

தனுஷ்-சிம்பு காலத்தில் விஷால், ஜீவா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் மூன்றாமிடத்தில் அவ்வப்போது இருக்க வாய்ப்பிருக்கிறது.

முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள் எவ்வளவு தோல்விகள் கொடுத்தாலும், அவர்களை அந்த இடத்தில் இருந்து இறக்க மிக யோசிக்கும் தமிழகம், மூன்றாமிடத்தில் இருப்பவர்களின் சிறு சறுக்கலையும் பெரிதாக்கி விடுகிறது.

தனுஷின் கடைசி 11 படங்களில் 10 படங்கள் தோல்வி. சிம்பு நடித்த படங்களைவிட, அவரை வைத்து பூஜை போட்ட படங்கள் அதிகமாயிருக்கும் போல. ஆனால் இன்னும் இவர்களுக்கு லட்டு லட்டான ஆபர்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதை நன்கு உபயோகப்படுத்திக் கொண்டால் இவர்கள் 50 ஆண்டுகள் கடந்தாலும் ரெபர் செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இந்த மூன்றாமிடத்தைப் பிடித்த நாயகர்களை பார்த்தோமென்றால், அப்போடைய வெகுஜன ரசனை நன்கு விளங்கும். டி ஆர் மகாலிங்கம் காலத்தில் இசையும்,கதையும் மக்களின் தேர்வாய் இருந்தது.

ஜெமினி கணேசன் காலத்தில் குடும்ப வாழ்க்கை கதைகள், மிதமான காதல் கதைகள் மக்களின் தேர்வாய் இருந்திருக்கிறது. விஜயகாந்த் காலத்தில் ஆங்கிரி யங் மேன் கதைகளுக்கு  வரவேற்பு.
சூர்யா, விக்ரம் காலத்தில் முதல் இரண்டு இடத்தைத் தவிர மற்றவர்கள் நன்கு பெர்பார்மன்ஸ் கொடுக்கவேண்டுமேன்பது மக்களின் எதிர்பார்ப்பு.
தனுஷ்-சிம்பு காலத்தில், யதார்த்தப் படங்களில் நடிப்பவர்களுக்கு மூன்றாமிடம் தகைய வாய்ப்பிருக்கிறது.

இந்த மூன்றாமிடக்காரர்களுக்கு என்றே சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அந்தந்த காலகட்டத்தில் இருப்பார்கள். அதைப் போலவே ரசிகர்களும்.

இதில் அந்த ரசிகர்களின் நிலைதான் பாவம். மூன்றாமிடக்காரரின் ரசிகரை மட்டும் முதலிரண்டு இடக்காரர்களின் ரசிகர்கள் சேர்ந்து கும்மி விடுவார்கள்.

ஜெமினிகணேசன் ரசிகர்களை சாம்பார் ஆளுடா என கலாய்த்தார்கள் எம்ஜியார்-சிவாஜி ரசிகர்கள். எங்களுடன் விடுதியில் தங்கிப்படித்த,ஒரு விஜயகாந்த் ரசிகன் தன்னை கடைசி வரை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான். ரகசியமாய் அவனது பெட்டியில் ஒரு விஜய்காந்த் புளோ அப்பை வைத்திருந்தான். ஹாஸ்டலில் நடந்த ஒரு திருட்டின் காரணமாக எல்லோரது பெட்டியையும் சோதனை செய்த போது, இதைக் கண்டுபிடித்தோம். பின்னர் அந்த திருடனை விட இவன் தான் அதிகம் பாதிக்கப்பட்டான்.

இப்போது கூட சூர்யாவை, சூர்யா ரசிகர்களை நன்கு கலாய்க்கிறார்கள்.
அந்தளவுக்கு பாவப்பட்ட இடமாக இருக்கிறது இந்த மூன்றாமிடம்.

நீ ஏன் இவ்வளவு பொங்குகிறாய் என்கிறீர்களா?
பள்ளிக்கூடத்தில் படித்த போது, கல்லூரியில் படித்த போது முதல் இரண்டு இடங்களுக்குள் வராதவன் நான். அந்தக் கால ஆசிரியர்கள் முதல், வகுப்புத் தோழர்கள், சீனியர், ஜூனியர்கள் எல்லாம் முதல் இரண்டு இடத்தில் இருந்த மாணவர்களையே ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அவன் செட்டா நீ எனத்தான் எல்லோரும் கேட்கிறார்கள்.


அய்யா, திரையுலகம் சார்ந்த எழுத்தாளர்களே, விமர்சகர்களே நீங்கள் இனி எழுதும் போது மூன்று இடங்கள் வரை எழுதி வாருங்களேன். மூன்றாம் இடம் வாங்கும் பலர் சந்தோஷப்படுவார்கள்.

December 24, 2013

ராகவ்வின் ஜன்னல்

ராகவ்வின் அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளில் ஞாயிற்றுக்கிழமை கூட அவன் அப்படி தூங்கியதில்லை. ஆறரை மணிக்கு அலாரம் அடித்தது போல் எழுந்து கொள்வான். ஆறே முக்கால் ஆகியும் இன்னும் எழவில்லை. ஏழு இருபதுக்கு அவனது கல்லூரி பேருந்து தெரு முனைக்கு வந்துவிடும். படுக்கை அருகில் சென்று ராகவ் எழுந்திரு, மணியாச்சு என்று சொல்லிப் பார்த்தாள். அசைவில்லை. என்னாச்சு இவனுக்கு என்று வியந்தபடியே லேசாக உலுக்கினாள்.

முழித்துப் பார்த்தவன், “அம்மா இன்னைக்கு நான் காலேஜ் போகல்லை”  என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான். அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராகவ்வின் அப்பா சிவராமன், ”விடு மைதிலி, தூங்கட்டும். உடம்பு சரியில்லையோ என்னவோ” சாயந்திரம் வந்து பார்த்திக்கிடலாம். நீ ஆபிஸ்க்கு கிளம்பு” என்றபடி தன் வேலையைத் தொடர்ந்தார்.

மாலை அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இனிமேல் காலேஜ்க்கே போகமாட்டேன் என ராகவ் திட்ட வட்டமாக சொல்லிவிட்டான்.

அலுவலக மேனேஜ்மெண்ட் வகுப்புகளில் ஊட்டப்பட்ட பாடங்கள் சிவராமனுக்கு நினைவுக்கு வந்தன. ஒரு வாரம் ராகவ் லீவில் இருப்பதால் பெரிய சிக்கல் ஏது வரப்போவதில்லை. இப்போ இரண்டாம் ஆண்டுதான். அவன் வீட்டிலேயே இருக்கட்டும். ஒரு வாரத்தில் பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டறிந்து தீர்த்து வைத்துவிடலாம் என முடிவு செய்து, மைதிலியிடமும் தெரிவித்து விட்டார்.

அடுத்த நாள் ராகவ்வின் வகுப்புக்கு பொறுப்பான பேராசிரியரிடம் சென்று பேசினார். ராகவ்வுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல அட்டென்டென்ஸ், நல்ல சிஜிபிஏ, எல்லார்கிட்டயும் நல்லா பிகேவ் பண்ணுவானே என்று தெரிவித்தார் அவர்.

அடுத்ததாக ராகவ்வின் வகுப்பு நண்பர்கள், பஸ் மேட்கள், அபார்ட்மெண்ட் பிரண்ட்ஸ் அனைவரிடமும் மாலை விசாரித்தார். ஏதும் லவ் கிவ்னு இருந்தாலும் சொல்லிடுங்கப்பா, பரவாயில்லை என்றார். இல்ல அங்கிள், ராகவ்வ நாங்க பழம்னு தான் சொல்லுவோம். கேர்ள்ஸ்ங்க்கிட்ட அவன் மூவ் பண்ணவே மாட்டான் என்றார்கள்.

அன்று இரவு ராகவ் தூங்கிய பின் அவன் செல், லேப்டாப் எல்லாவற்றையும் துருவிப் பார்த்தார். கிளீன் சிலேட். இப்போதுதான் சிவராமனுக்கு பயம் வரத் தொடங்கியது. விசாரிச்ச பிரச்சினைகள் எல்லாம் ஈஸியா சால்வ் பண்ணக் கூடிய மேட்டர். டிரக் மாதிரி பழக்கமும் இருக்கிறதாத் தெரியலை. வேற எதுவும் சைக்காலஜிக்கல் பிராப்ளமா இருக்குமோ? எனத் தோன்றியது.

மைதிலியிடம் விவாதித்தார். ஏதாச்சும் சைக்ரியாஸ்ட்கிட்ட போலாமா என்று யோசித்தார்கள். சென்சிட்டிவ் மேட்டர். அவனோட பிரண்ட்ஸுக்கு, அபார்ட்மெண்ட் அக்கம் பக்கத்துக்கு தெரிஞ்சா இவன் பீல் பண்ணுவான். நம்மகிட்ட ஷேர் பண்ணாட்டியும், அவனோட இன்னர் சர்க்கிள்ல யார்கிட்டயாச்சும் சொல்லத்தான செய்வான்? அந்த மாதிரி ஒரு மெச்சூர்டான ஆளுகிட்ட பேசச் சொல்லணும். இன்னும் ரெண்டு வருஷம் இவன் படிச்சாகணுமே? என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

தொடர் யோசிப்பில், ராகவ்வின் பர்த்டே செலிபரேஷனுக்கு வந்திருந்த சந்தோஷின் ஞாபகம் சிவராமனுக்கு வந்தது. சென்ற ஆண்டு இஞ்சினியரிங் முடித்து, இப்போது ஒரு எம் என்சியில் இருப்பவன். ராகவ்வின் பஸ் மேட். ராகவ்வின் முதலாமாண்டு பயங்களை பெருமளவு போக்கியவன் அவன் தான் என ராகவ்வே அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான்.

ராகவ்வின் பேஸ்புக் அக்கவுண்ட் வழியே, சந்தோஷின் இன்பாக்ஸுக்கு தகவல் அனுப்பி, சந்தித்தார் சிவராமன். பிரச்சினையை விவரித்து, அவன்கிட்ட பேசுப்பா என்றார்.

அடுத்த நாள், தன்னுடைய  இன்கிரிமெண்ட்டுக்கு ட்ரீட் கொடுப்பதாகச் சொல்லி, ராகவ்வையும் இன்னும் சில நண்பர்களையும் எக்ஸ்பிரஸ் மாலுக்கு அழைத்துச் சென்றார் சந்தோஷ். பேச்சினூடே ராகவ்வின் பிரச்சினையும், அவனையறியாமல் வெளிவந்தது.

வேறொன்றுமில்லை. ராகவ்வுக்கு பஸ்தான் பிரச்சினை. பஸ் கூட இல்லை. பயணம்தான் பிரச்சினை. எல் கே ஜியில் ஆரம்பித்தது அது. பிரைவேட் வேன், ஸ்கூல் வேன், இப்போது காலேஜ் பஸ்.    காலை எழுந்து காலைக்கடன்கள் முடித்து, அவசர அவசரமாய் சாப்பிட்டு, வேனோ பஸ்ஸோ பிடித்து, பின் அதே போல மாலை திரும்பி, சாப்பிட்டு, படித்து. இந்த 16 ஆண்டுகளில் ஒரே ரோட்டில் பயணம் மட்டுமே செய்து கொண்டிருப்பது போல் உணர்ந்திருக்கிறான் ராகவ்.

இந்த செமெஸ்டர், கேம்பஸ் ஆரம்பித்த உடன் தான் அவனுக்கு இன்னொன்றும் தெரிந்தது. அவன் சீனியர்கள் எல்லோரும், சென்னையிலும் இயங்கும் எம் என் சிக்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களிலேயே பிளேஸ் ஆகிக்கொண்டிருந்தது. அந்த கம்பெனி பஸ்களையும் அவன் சென்னையில் பார்த்திருக்கிறான். அவையும் காலை ஏழு மணிக்கெல்லாம் அவன் ஏரியாவில் கிளம்பி, மாலை திரும்பி வருபவை.  இன்னும் இரண்டு ஆண்டுகள் கல்லூரி பேருந்து, பின் அலுவலக பேருந்து. வாழ்க்கை இப்படி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே செல்வதில் கழிந்து விடும் என்ற எண்ணம் வந்ததும் அவனுக்கு கல்லூரி செல்வதே வெறுப்பாகத் தோன்றிவிட்டது.


இந்த தகவல்களை சந்தோஷ், சிவராமனிடம் போனில் சொன்னான். கூடவே அவன், “சார், உள்ளூர்ல இருக்கமேன்னு ஹெஸிடேட் பண்ணாதீங்க. ராகவ்வை ஹாஸ்டலில் சேர்த்துடுங்க. பஸ் ட்ராவல் டைம் மிச்சமாகும், ஹெல்த்தும் இம்ப்ரூவ் ஆகும்,படிக்கவும் நிறைய டைம் கிடைக்கும். அப்புறம் அவனும் ரியலைஸ் பண்ணிக்குவான். பஸ்ல ட்ராவல் பண்ணாம நிறைய வேலை இருக்குன்னு புரிய வச்சிடலாம்” என்றான். சிவராமனுக்கும் அதுவே சரி என்று பட்டது.

December 23, 2013

வத்தலகுண்டு இங்கிலீஸ்

எண்பதுகளில் எங்கள் ஊருக்கு முதன்முறையாக வருபவர்கள் அசந்து போய்விடுவார்கள். ஏதோ, ஒரு ஐரோப்பிய கிராமத்திற்குள் நுழைந்த பீல் அவர்களுக்கு கிடைக்கும். கொடைக்கானலின் அடிவாரத்தில் இருந்ததால் நிலவிய இதமான வானிலை. மார்க்கெட்டில் கொட்டிக் கிடக்கும் பிளம்ஸ், திராட்சை, கேரட், பீட்ரூட், காலிபிளவர், பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள். டென்னிஸ் பேட்டுடன் நடமாடும் ஆடவர்கள், பக்காவான கிரிக்கெட் செட்டுடன் சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், ஹாக்கி ஸ்டிக், பேஸ்கட் பால் மற்றும் பேஸ் பால் மட்டைகளுடன் பள்ளி செல்லும் மாணாக்கர்கள். இவற்றையெல்லாம் விட ஊர் முழுவதும் தாராளமாகப் புழங்கும் ஆங்கில வார்த்தைகள்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, கொடைக்கானலில் தங்கியிருந்த பிரிட்டிஷார் குளிர்காலங்களில் அவர்கள் டென்னிஸ் விளையாடுவதற்காக அடிவாரத்தில் இருந்த வத்தலக்குண்டில் அருமையான கிளே கோர்ட்டுடன் டென்னிஸ் கிளப்பை ஆரம்பித்திருந்தனர். நூறாண்டு தாண்டி செயல்பட்டுக் கொண்டிருக்கு அந்த கிளப் வாயிலாக டை-பிரேக்கர், மேட்ச் பாயிண்ட், செட், டபுள் பால்ட் என பல வார்த்தைகள் வத்தலகுண்டு வக்காபுலரியில் இடம் பிடித்திருந்தன.

வத்தலக்குண்டு அக்ரகாரம் மூன்று தெருக்களைக் கொண்டது. அங்கிருந்த விக்டரி கிரிக்கெட் கிளப் என்ற ஒன்று ஐம்பது ஆண்டுகளாக லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. அந்த அக்ரகாரம் வழி போனாலே சில்லி மிடாஃப், லாங் லெக், டீப் எக்ஸ்ட்ரா கவர் போன்ற வார்த்தைகள்தான் காதில் விழும். வீடுகளுக்குள் நுழைந்து பார்த்தால் சர்வ சாதாரணமாக பிரிட்ஜ் ஆடிக்கொண்டிருப்பார்கள்.

இன்னொரு பக்கம் பலமுறை ஸ்டேட் சாம்பியன்ஷிப் வாங்கிய பேஸ்கட் பால் டீம். பக்காவான இரண்டு சிமிண்ட் கோர்ட்டுகள். பேஸ்கட் பால் நெட் சாதாரணமாக ஒரு மாதம் உழைக்கும் என்றால், இங்கே ஒரு வாரம் கூட தாங்காது. கண்ணே தெரியாத கும்மிருட்டாகும் வரை விளையாடிக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் பல இடங்களுக்கு விளையாடச் சென்று ரொட்டேட், மேன் ஆன் யூ, பிளாக், அபென்ஸ் போன்ற வார்த்தைகளை ஊர் முழுதும் புழக்கத்தில் விட்டிருந்தார்கள். பொங்கல் பண்டிகையின் போது, அகில இந்திய அளவில் கூடைப்பந்தாட்டப் போடிகள் நான்கு நாட்கள் நடக்கும். பல மாநில ஆட்டக்காரர்கள் தங்கள் பங்கிற்கு பல ஆங்கில வார்த்தைகளை அங்கே விதைந்திருந்தார்கள்.

வத்தலக்குண்டின் அரசு மேல்நிலை பள்ளியும் நூறாண்டுகளுக்கு முன்னர் முழுக்க முழுக்க பர்மா தேக்கால் பிரிட்டிஷ் பொறியாளர்களால் கட்டப்பட்ட அருமையான கட்டிடம். சுற்றிலும் மைதானங்கள் மைதான எல்லை முழுவதும் மரங்கள். சுற்றுப்பட்டு கிராமங்களில் இருக்கும் மாணவர்கள், எப்போதடா ஐந்தாம் வகுப்பு முடியும், ஆறாம் வகுப்பிற்கு அங்கே செல்லலாம் என காத்திருப்பார்கள். ஏராளமான ஹாக்கி மட்டைகள், பேஸ்பால் மட்டைகள் மற்றும் எல்லா விளையாட்டு உபகரணங்களும் குவிந்திருந்த பள்ளி அது. எனவே விளையாட்டுத் தொடர்புகளால் ஆங்கிலம் வத்தலகுண்டில் சரளமாக புழங்கியது.

ஆனால் எல்லாம் பேச்சில் மட்டும்தான். எழுத்து என்று வரும் போது குப்புற அடித்து விழுந்து விடுவார்கள். ஒரு எஸ்ஸேயை மனப்பாடம் செய்வதற்குள் அவர்களுக்கு நாக்கு தள்ளிவிடும். என்னடா இது பிரசண்ட் கண்டினியஸ் பெர்பெக்ட் டென்ஸ்ங்கிறான், வுட் ஹேவ் பீன் சிங்கிங்கிறான் என டரியலாகிவிடுவார்கள். பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தேர்வை முதல் அட்டெம்டில் பாஸ் பண்ணியவர்களை அங்கே விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த பள்ளியைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் மட்டும் இதைக் கேள்விப்பட்டு இருந்தால் அவரின் ஆத்மா சாந்தி அடைந்திருக்காது. ஊரில் இருந்தததே இரண்டே இரண்டு மேல்நிலைப்பள்ளிகள்தான். ஆனால் பன்னிரெண்டு டுட்டோரியல் கல்லூரிகள் இருந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பள்ளிகளை விட அமர்க்களமாக ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளை நடத்தும் அளவிற்கு அங்கே கூட்டம் நிரம்பி வழியும்.

அதற்காக மக்கள் அங்கே மக்கு என்று அர்த்தமில்லை. மற்றவற்றில் எல்லாம் புகுந்து விளையாடுவார்கள். வாடிவாசல் எழுதிய சி சு செல்லப்பா, பி எஸ் ராஜம் அய்யர் போன்ற இலக்கியவாதிகள் பிறந்த ஊர் வத்தலக்குண்டு தான். அந்நாளிலேயே பல சிறு பத்திரிக்கை குழுக்களும் இருந்தன. பின்னர் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆக்டிவ்வாக இருந்தது. லியோனி, தன் முதல் பட்டிமன்றத்தை அரங்கேற்றியது கூட வத்தலக்குண்டில்தான்.

வத்தலக்குண்டில், யாருக்கு பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தேர்வு நடக்கும் நாள் முதலில் தெரியும் என்றால், அது மஞ்சளாற்றங்கரையில், குட்லக் விநாயகர் கோவில் வாசலில் பூஜை சாமான் கடை வைத்திருந்த செல்வத்திற்குதான்.

80களில் தினத்தந்தியில் பத்தாம் வகுப்பு கால அட்டவணையை தலைப்புச் செய்தியாக வெளியிடுவார்கள். செல்வம் அதில் ஆங்கிலத் தேர்வு நாளை மட்டும் தனியாகக் குறித்து விடுவார். ஆமாம். அவர் ஆயிரத்துக்கும் மேல் தேங்காய் ஆர்டர் செய்ய வேண்டுமே.

தேர்வுக்கு முதல் நாளில் இருந்தே குட்லக் விநாயகர் கோவிலில் கூட்டம் நிரம்பி வழியும். சிதறுகாய் பொறுக்க அக்கம் பக்க ஊர்களில் இருந்து கூட ஆட்கள் வருவார்கள். டுட்டோரியல் கல்லூரிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கும். தங்கள் டுட்டோரியல் மாணவர்கள் அனைவரும் பாஸாக வேண்டும். மற்ற மாணவர்கள் எல்லாம் பெயிலாகி, நம்மிடம் வரவேண்டும் என்று கேரளா சென்று செய்வினை வைத்தவர்கள் கூட உண்டு. மாரியம்மன் கோவிலில் தன் மகன் இங்கிலீஸில் பாஸாக வேண்டும் என அம்மாமார்கள் போட்ட மாவிளக்கை அனுப்பி வைத்தால் சோமாலியா பஞ்சமே தீர்ந்து விடும்.

பள்ளியில் வேறு மாதிரியான பிரச்சினை நடக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே டெஸ்க் அரேஞ்ச்மெண்ட் செய்து நம்பர் போட ஆரம்பிப்பார்கள். எல்லா வகுப்பறையையும் நன்கு பூட்டி, அந்த வளாகத்தையே கிட்டத்தட்ட சீல் செய்து விடுவார்கள். இல்லாவிட்டால் டெஸ்கில் பிட் பதுக்குவது போன்றவைகள் நடந்துவிடும். காலை பள்ளி வளாகத்திற்கு வெளியே தற்காலிக டீக்கடைகள் வேறு முளைக்கும். காவல் நிலையத்தில் இருந்து சில கான்ஸ்டபிள்களும் வருவார்கள். கத்தி, கபடா போன்ற ஆயுதங்களுடன் உள்ளே வந்து இன்விஜிலேட்டரை மிரட்டும் ஆட்களும் உண்டே.


வட்டார கல்வி அலுவலகத்தில் இன்னைக்கு மட்டும் பிளையிங் ஸ்குவாட் வத்தலகுண்டுக்கு கண்டிப்பாக போகவேண்டும் என்று கட்டளை இட்டுவிடுவார்கள். வத்தலகுண்டுக்கு இங்கிலீஸ் இன்விஜிலேசனுக்கு ஆட்கள் போடும் போது மிலிட்டரி செலக்சன் மாதிரி தான் செய்ய வேண்டியிருக்கும் என டீஇஒ அலுத்துக் கொள்வார்.

டுட்டோரியல் கல்லூரிகள், சிலரை தற்கொலைப்படை போல தயார் செய்து அனுப்புவார்கள். அவர்கள் அரை மணி நேரம் முடிந்த பின் வெளியே செல்லலாம் என்ற விதியைப் பயன்படுத்தி வெளியே வந்து கொஸ்டினை அவுட் செய்வார்கள். சில கேள்விகளுக்கான விடையை தயார் செய்து, கேட்டிற்கு வெளியே மரத்தில் இருந்து கத்துவது, மைக்செட்டில் விடை அறிவிப்பது கூட நடக்கும்.

இத்தனை இருந்தும், அந்த 35 வாங்குவதற்கு, 35 வயது வரை போராடியவர்களும் உண்டு.

நான் மூன்றாம் வகுப்புக்குச் சென்ற உடன் தான் ஆங்கில வகுப்பு ஆரம்பித்தது. ஏ பி சி டி என எட்டு வயதில் எழுத ஆரம்பித்து, வார்த்தைகளை வாசிக்க எட்டாம் வகுப்பு ஆகிவிட்டது. 

அப்போது இந்த அளவுக்கு மினி ஜெராக்ஸ் வசதி இல்லாததால், எங்கள் தெருக்காரர்கள் இங்கிலிஸ் எஸ்ஸேயை சின்ன பாண்டில் பிட்டாக எழுதிக் கொள்வார்கள். அந்த திருப்பணியில் நானும் ஈடுபட்டு, இரண்டாண்டுகள் ஏராளமான எஸ்ஸேக்களை பலருக்கும் எழுதிக்கொடுத்திருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு வந்ததும், ஆங்கிலத்துக்கு டியூசன் சேர்ந்தேன். இரவில் கூட ஹேஸ் பீன், ஹேவ் பீன் என உளறிக் கொண்டே இருந்ததாக வீட்டார் தெரிவிப்பார்கள். ஒருவழியாக நானும் பிரசித்தி பெற்ற பத்தாம் வகுப்பு இங்கிலீஸ் பரிட்சையை எழுதி முடித்தேன்.

ரிசல்ட் வெளியாகும் நாள் நெருங்கியது. காலையிலேயே மாலை முரசுக்கு டோக்கன் வாங்கியாயிற்று. மாலை மூன்று மணி அளவில் ஜேஸி பஸ்ஸில் தான் பேப்பர் வரும். எங்கள் ஊர் நம்பர்கள் மட்டும் தனியாகத் தெரியும். ஏனென்றால் அவற்றுக்கு இடையே மட்டும், இடையில் உள்ளவர்கள் அனைவரும் பாஸ் என்ற கோடு இருக்காது. எல்லாமே ஒத்தை நம்பராகத்தான் வரும். 100 பேருக்கு 20 என்ற விகிதத்தில்தான் மக்கள் பாஸாவார்கள். மதியம் சாப்பிடக்கூட போகாமல் பஸ்ஸ்டாண்டிலேயே பழியாய் கிடந்து, அடிதடி கூட்டத்தில் பேப்பரை வாங்கி, பிரித்து பார்த்தால் என் நம்பர் இருந்தது. எத்தனையோ பேருக்கு, பிட்டுக்கு எஸ்ஸே எழுதிக் கொடுத்த புண்ணியம் தான் என்னை பாஸ் செய்ய வைத்ததாக இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

பத்தாம் வகுப்புக்குப் பின் தந்தையின் பணியிட மாறுதல் காரணமாக பல ஊர்களில் வசித்து, பின் எனக்கு கிடைத்த நடுத்தர வகுப்பு வாழ்க்கையை தக்க வைப்பதற்காக பல ஊர்களில் கஜகர்ணம் அடித்துக் கொண்டிருக்கிறேன்.

நீண்ட இடைவேளைக்குப் பின் ஊருக்குச் சென்றிருந்தேன். என் நண்பன் ஒருவன் ஊருக்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அவனை சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது, இப்ப எப்படிடா இங்கிலீஸ் இங்க இருக்கு? என்றேன்.

ம்.அதெல்லாம் நல்ல மார்க் எடுத்துடுறாங்க. ஆனா கேம்பஸ் இண்டர்வியூவில கம்யூனிகேசன் சரியில்லைன்னு ரிஜக்ட் ஆயிடுறாங்க என்றான்.

December 15, 2013

தளபதி பற்றி நானும்

தளபதி படம் பார்க்கப் போனது பற்றி, அந்தப் படம் அளித்த அனுபவம் பற்றி, அதன் சிறப்புகள் பற்றி கடந்த 20 ஆண்டுகளில் பலரும் எழுதிவிட்டார்கள். அதுவும் இணையத்தில் தமிழ் வந்த பின்னால், கடந்த ஆறேழு ஆண்டுகளில் இந்த மேட்டரை சக்கையாகப் பிழிந்து விட்டார்கள். நானும் சில மாதங்களாகவே தளபதி படத்தைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தாலே, அப்படத்தைப் பற்றி மலையளவு குவிந்திருக்கும் கட்டுரைகள் அந்த எண்ணத்தை அழித்துவிடும்.

திடீரென்று நேற்று, மேல்நிலை வகுப்பில் படித்த ஆங்கிலப் பாடம் ஞாபகம் வந்தது. தாஜ்மஹாலின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லும் அந்தப் பாடத்தில், “எத்தனையோ புகைப்படக்காரர்கள் தாஜ்மஹாலைப் படமெடுத்து விட்டார்கள், என்ன என்ன சாத்தியப்பட்ட கோணங்களோ அனைத்திலும் எடுத்துவிட்டார்கள், எத்தனையோ கவிஞர்கள் தாஜ்மஹாலைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகள் பாடிவிட்டார்கள். ஆனாலும் இன்னும் யாரேனும்  அதைப் படமெடுத்துக் கொண்டோ, பாடிக் கொண்டோ தான் இருக்கிறார்கள்” என்று ஒரு வரி வரும்.
அடடா, அப்போ நாமும் தளபதி பற்றி எழுதினால் தப்பில்லை என்று தோன்றியது. வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைத்து, டெல்லிக்கு நான் சுற்றுலா போனால், தாஜ்மஹால் முன் நின்று போட்டோ எடுக்காமல் திரும்பி வருவேனா? என்ன?

முதன் முதலில், தளபதியின் பாடல்கள் வெளியாகும் போதே எங்கள் ஊரான வத்தலக்குண்டில் கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டது. ”ராஜ பந்தா ரஜினிகாந்த்” மன்றத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் ஊருக்கு மாலைதான் கேசட் வந்து சேரும் என்பதால், மதுரைக்கு கிளம்பினார்கள். காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பும் “பார்வதி ட்ரான்ஸ்போர்ட்” வண்டியில் முதல் நாளே சொல்லி வைத்து விட்டார்கள். “கேசட் வாங்கிட்டு நம்ம வண்டியில நாங்க 20 பேர் வருவோம். எங்க கேசட் மட்டும் தான் வண்டியில பாடணும்” என்று. 10.30க்கு ஏராளமான கேசட்டுகளையும், சாக்லேட்டுகளையும் வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள்.  

பஸ்ஸே அதகளப் பட்டது. பிரயாணிகள் அனைவருக்கும் சாக்லேட் கொடுத்து கொண்டாடினார்கள். வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் வந்ததும், வெடி வெடித்து கேசட்டை வரவேற்றார்கள். எல்லா மியூசிக்கல் கடைகளுக்கும் ரசிகர் மன்றம் சார்பிலேயே கேசட் வழங்கப்பட்டது.
அப்போது தளபதியுடன் ரிலீசாகவிருந்த குணா, பிரம்மா, தாலாட்டு கேட்குதம்மா பட கேசட்களும் முன் பின்னாக வெளிவந்தன. கேசட் கடைகளில் எல்லாம் தளபதி-குணா, தளபதி-பிரம்மா, தளபதி-தாலாட்டு கேட்குதம்மா என்றே 60 நிமிட காம்பினேசன் கேசட்டுகள் பதியப் பெற்றன. அதுவும் தளபதியின் எல்லாப் பாடல்களும், மற்றும் மீதமிருக்கும் இடத்திலேயே மற்ற படங்களின் பாடல்கள். இன்னும் சிலர் தளபதி-தளபதி யே பதிந்தார்கள். எல்லாப் பாடல்களும் போக மீதமிருக்கும் இடத்தில் ராக்கம்மாவும், காட்டுக்குயிலும்.

அடுத்த கட்ட நடவடிக்கை, பட ரிலீஸாகும் தியேட்டர்கள் மற்றும் ஊரின் முக்கிய இடங்களில் தட்டி போர்டு வைப்பது. இப்போது போல பிளக்ஸ் காலம் இல்லை அது. நடிகர்களின் பெரிய சைஸ் படங்களும், சின்ன சைஸ் படங்களும் ரசிகர் மன்ற இதழ்களின் மூலமாகவே கிடைக்கும். அந்தப் படங்களை அழகாக வெட்டி தட்டியில் ஆங்காங்கே ஒட்ட வேண்டும். இதற்காகவே எங்கள் ஊரில் ரஜினி ரசிகன், மய்யம், புரட்சிகலைஞர் விஜய்காந்த் போன்ற இதழ்களை வாங்குவார்கள். மய்யம் தவிர மற்ற புத்தகங்களில் நிச்சயம் புளோ-அஃப் இருக்கும்.

இப்போது கூட அக்‌ஷயா பதிப்பகம் அஜீத் ரசிகன், விஜய் ரசிகன் ஆகிய புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றும் இன்றும் தொடர்ந்து வெளிவரும் ரசிகர்களுக்கான இதழில் எம்ஜியாரின் இதயக்கனி க்கு தனி இடம் உண்டு.

நக்கீரன் ஆசிரியர் கோபால் தான் ரஜினி ரசிகனையும் நடத்தி வந்தார். அவரின் மற்ற எல்லா இதழ்கள் கொடுக்கும் மொத்த லாபத்தை விட ரஜினி ரசிகனே அவருக்கு அதிக லாபம் கொடுத்தது. அப்போதே அந்த இதழ் 10 ரூபாய்க்கும், சிறப்பிதழ் 20 ரூபாய்க்கும் விற்றது.
தளபதி ரிலீஸின் போது சிறப்பு புளோ அஃப்களுடன் பல புத்தகங்கள் வந்தன. ஹைலைட்டாக தினமலர் தீபாவளி மலருடன் சாமுராய் ஸ்டைல் ரஜினியின் புளோ அஃப் வந்தது. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னரே ஏராளமான தட்டிகள் அந்த புளோ அஃப்களை ஒட்டி தயாராகின.

திண்டுக்கல் நாகா லட்சுமி திரையரங்குகளில் தளபதி ரிலீஸ். ரசிகர் மன்ற ஷோவுக்கான 50 டிக்கட்களை எங்கள் ஏரியா மன்றத்தினர் வாங்கி வந்திருந்தனர். அப்போதே ஒரு டிக்கட் ரூ 100. அதுபோக திண்டுக்கலுக்கு சென்று வர ஏற்பாடு செய்யும் வேன், மதிய சாப்பாடு செலவு எல்லாம்  தனியாக கொடுத்து விட வேண்டும். நானும் ஒரு டிக்கட்டை அடித்துப் பிடித்து வாங்கி விட்டேன். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னர், மன்றத்தாரிடம், ”என்னப்பா, கேசட் ரிலீஸுக்கே சாக்லேட் கொடுத்தீங்க, பட ரிலீஸுக்கு என்னய்யா?” என்று கேட்க. தியேட்டர்ல ஓப்பனிங் ஷோ வர்ற எல்லாருக்கும் லட்டு என அறிவித்தார் மன்ற தலைவர் முருகேசன்.
ஊரில் இனிப்பு வகைகள் செய்வதில் வித்தகரான, கைலாசம் அவர்களிடம் 2000 லட்டு செய்ய ஆர்டர் அளிக்கப்பட்டது. 

தீபாவளிக்கு முதல் நாள் மன்றத்தார் பணம் வசூல் செய்து, லட்டு செய்யும் முஸ்தீபுகளில் இருக்க, ஏற்பாடுகளையெல்லாம் பார்த்து, வயிறு எரிந்த என்னுடன் சேர்ந்த கமல் ரசிகர்கள் சிலருடன் மதுரைக்கு ஷாப்பிங் கிளம்பினேன். மதுரை நேதாஜி ரோட்டில் ஆரம்பித்து விளக்குதூண், கீழவாசல் வரை நீளும் தீபாவளி ஸ்பெசல் நடைபாதைக் கடைகளை பார்வையிட்டுக் கொண்டே நடந்தோம். ஆங்காங்கே கடைகளில் ஸ்பீக்கர்களில் ராக்கம்மா பாடல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. பாடலுக்கு இடையில் கடை சம்பந்தமான விளம்பரம். எந்தப் பக்கம் திரும்பினாலும் தளபதி டி சர்ட், முண்டா பனியன் போட்டவர்கள் தெரிகிறார்கள்.

என்னடா ஒரு பக்கி கூட நம்மாளு பாட்ட போட மாட்டேன்கிறான் என கடுப்பாகி, எதுவும் வாங்காமலே திரும்பினோம். பஸ்ஸிலும் திரும்ப திரும்ப ரஜினி பாடல்கள்.

தீபாவளியன்று காலை 6 மணிக்கு, மூன்று மெட்டடார் வேன்களில் ரசிகர் படை கிளம்பியது. வேனின் டாப்பில் ஏராளமான தட்டி போர்டுகள். ஒரு வேனின் பாதி கொள்ளளவில் லட்டு கூடைகள்.

7 மணி அளவில் திண்டுக்கல் சென்றடைந்தோம். தியேட்டரில் 5 மணி சிறப்பு காட்சி ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டரைச் சுற்றி மீத மிருக்கும் இடங்களில் எல்லாம் எங்கள் ஊர் மன்ற தட்டிகள் வைக்கப்பட்டன. தியேட்டர் மேனெஜரிடம் சொல்லி, ரசிகர்கள் உள்ளே நுழையும் போது, லட்டு கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.

படம் தொடங்கியது. சின்னத்தாயவள் பாட்டு ஒலிக்கத் தொடங்கியதும், என்னையறியாமல் படத்துக்குள் சென்றுவிட்டேன். ராக்கம்மாவுக்கும், காட்டுக்குயிலுக்கும் எல்லோரும் எழுந்து ஆடியபோது, ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். வயிற்றெரிச்சலை மீறி, மனதிற்குள் ஒரு மெல்லிய சோகம்.  

படம் முடிந்ததும், திண்டுக்கலில் எல்லோரும் வான்கோழி பிரியாணி சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடங்கினோம். அந்த சீன் சூப்பர், இப்படி திரும்புவாரு பாரு என்று நண்பர்கள் சுற்றிலும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உற்சாகத்தில் முழுமனதோடு பங்கேற்க முடியவில்லையே என மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது.

சிவாஜி, எந்திரன் படங்களின் ரிலீஸின் போது சென்னையில் இருந்திருக்கிறேன். ஆனால் தளபதி படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு, ரசிகர்களின் தயாரிப்புகளுக்கு முன்னால் மேற்கண்ட படங்களின் ரிலீஸ் கோலாகலம் ஒரு மாற்றுக் குறைவே.  


கமல் ரசிகராக இருக்கும் இந்த 30 ஆண்டுகளில், நாம ரஜினி ரசிகரா இருந்திருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்? என்று மூன்று முறை நினைத்திருக்கிறேன். அதில் தளபதி ரிலீஸ் நேரமும் ஒன்று.

December 01, 2013

விகடன் 3டி அவசியமா?

மூன்று வாரங்களுக்கு முன் விகடன் 3டி எஃபெக்டில் படங்களைப் பிரசுரித்து, அதைக் காண கண்ணாடியும் கொடுத்த போது, மகிழ்ச்சியாகவே இருந்தது. இரண்டாவது இதழ் வந்தபோது, இதற்கு என்ன அவசியம்? எனத் தோன்றியது. மூன்றாவது இதழ் எரிச்சலே ஊட்டியது எனலாம்.

முதல் காரணம், கண்ணாடி அணிந்து பார்த்தால் எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. எழுத்துக்களை மட்டும் படிக்கலாம் என்று பார்த்தால் அருகில் 3டி எஃபெக்டுக்காக பிரிண்ட் செய்யப்பட்ட  படம் உறுத்துகிறது. ஒரு வேளை இதழ் முழுக்க முழுக்க 3டி எஃபெக்டில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்னவோ?

இரண்டாவது, படங்கள் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளதால் கண்டெண்ட் குறைவாக உள்ளது. இரண்டு வரி ஜோக்கிற்காக ஒரு பக்கம், ஏன் இரண்டு பக்கம் கூட ஒதுக்கியுள்ளார்கள். சினிமா பிரபலங்களின் பேட்டியிலும் படங்களே பெரிதும் ஆக்ரமித்துள்ளன. நான்கு ரூபாய் கொடுத்து வாங்கும் தி இந்து தினசரியை படித்து முடிக்கும் நேரத்தை விட, 20 ரூபாய் விகடனை விரைவில் வாசித்து முடித்து விட முடிகிறது.

மூன்றாவது கண்டெண்ட் குவாலிட்டி :
இதுதான் மிக கவலையூட்டும் அம்சமாக இருக்கிறது. பொக்கிஷம் என கொஞ்சம் பக்கம் போய்விடுகிறது. வலைபாயுதே, இன்பாக்ஸ் என இணையத்தில் இருந்து சில பக்கம், ஐம்பது கிலோ அஸ்கா, குழைந்து விட்ட குஸ்கா என நாயகிகளை வர்ணித்து டெம்பிளேட் சினிமா செய்திகள் என பாதி பக்கத்துக்கு மேல் ஃபில் அப் செய்கிறார்கள். முன்பெல்லாம் விகடனைப் படித்தால் நமக்கு ஏதாவது, தகவல் கிடைக்க வரும். ஆனால் இப்போதோ தகவல் பிழைகள் தான் கண்ணுக்குத் தெரிகின்றன.

நான் வழக்கமாக விகடன் வாங்கும் கடைக்காரரிடம் விசாரித்த போது, இதனால் ஒரு புத்தகம் கூட அதிகம் விற்கவில்லை என்று சொன்னார். புது வாசகர்கள் வேண்டாம். இருக்கிற வாசகர்களையாவது தக்க வைத்துக் கொள்ளுங்கள் விகடனாரே.

இப்போது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும், 1950ல் இருந்து 1990 வரை பிறந்தவர்கள் தான் விகடனை வாங்கிப் படிக்கிறார்கள். 90க்குப் பின் பிறந்த யாரும் புத்தகம் அதுவும் விகடன் வாங்கிப் படிப்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்னும் ரயிலில், பஸ்ஸில் படிக்கும் நடுத்தர வர்க்கமே விகடனை தாங்கிப் பிடிக்கிறது. இளைஞர்கள் கைபேசியைத்தான் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் படிக்க வைக்க என்ன வழி? விகடனை கையில் வைத்திருந்தால் பெருமை என அவர்களை உங்களால் எண்ண வைக்க முடியுமா?


ஒரு நல்ல கதையோ, கட்டுரையோ கொடுக்கும் வாசிப்பின்பத்தை இந்த 3டி ஜில்லாக்கி வேலை கொடுத்து விடுமா? என்ன?.

November 27, 2013

அஜீத்தின் மாஸ்

ஆரம்பம் வெளியாகி இருவாரங்கள் கழித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் சென்றிருந்தேன். வாரத்தின் முதல் வேலை நாள். மதியக் காட்சி. டிக்கட் வாங்கிக்கொண்டு அரங்கில் நுழைந்த எனக்கு ஆச்சரியம். ஏறத்தாழ 50% சதவிகித இருக்கைகள் நிரம்பியிருந்தன. தெருவுக்கு தெரு படம் ரிலீஸாகும் இந்நாட்களில் இவ்வளவு கூட்டமா என நினைத்துக் கொண்டிருக்கும் போதே படம் போடத் தொடங்கினார்கள்.  அதைவிட ஆச்சரியம்,  அஜீத்தின் அறிமுக காட்சியின் போது, ஐந்து நிமிடங்களுக்கு இடைவிடாமல் கைதட்டலும், விசிலும் தூள் பறந்தது.

அஜீத் அறிமுகமான அமராவதி, சோழா பொன்னுரங்கத்திற்காக பார்த்த படம். ஏனென்றால் அவர் தயாரிப்பில் ஏற்கனவே வெளியாகி இருந்த தலைவாசல். கிட்டத்தட்ட அதே டெக்னிக்கல் டீமுடன் அவர் களமிறங்கிய படம் என்பதால் போய் பார்த்த படம். அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலான அஜீத் படங்களைப் பார்த்தாயிற்று. அவர் படங்களில் 25% அளவிற்கே வெற்றிப்படங்கள். மீதம் அனைத்தும் தோல்விதான். சில படங்களை எல்லாம் ஆயிரம் ரூபாயும் அனாசினும் கொடுத்தால் கூட பார்க்க முடியாது. ஆனாலும் இப்படி ஒரு மாஸ் எப்படி சாத்தியமாயிற்று?

அமராவதிக்குப் பின் பவித்ரா, பாசமலர்கள் போன்ற படங்களில் அஜீத் நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு வண்ணத்திரை கொடுத்த பட்டம் “ஏழைகளின் அரவிந்தசாமி”. ஆசை படம்தான் கேரியரில் குறிப்பிடத்தக்க முதல் படம் என்றாலும், அவருக்கு இளம் ரசிகர்களை பெற்றுத்தந்த படம் அகத்தியனின் வான்மதி தான். அதில் ஏற்றிருந்த கேஸுவலான இளைஞன் கேரக்டர் கல்லூரி மாணவ ரசிகர்களை பெற்றுத்தந்தது. பின் அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை. அப்பட வெற்றிக்குப் பின்னரும் சுமாரான படங்களிலேயே அஜீத் நடித்து வந்தார்.

விஜய்,பிரசாந்த், விக்ரம்,கார்த்திக், ரஞ்சித்,சத்யராஜ்,பார்த்திபன்,அப்பாஸ் என அப்போது ஹீரோவாய் நடித்துக் கொண்டிருந்த நடிகர்களுடன் எல்லாம் சேர்ந்து நடித்தார்.

99ல் வெளியான வாலி, நல்ல திருப்புமுனை. அந்தப் படத்திற்குப் பின்னால் தான் எல்லா நகரங்களிலும் அஜீத் ரசிகர் மன்றங்கள் பெருமளவில் துவங்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் அஜீத் கொடுத்த சில பேட்டிகளால் “வாய்க் கொழுப்பு நடிகர்” என்ற கிசுகிசு அடைமொழி அவருக்கு கிடைத்தது. அமர்க்களம் படம் மூலம் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ இமேஜ் மெல்ல மெல்ல உருவானது. முகவரி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் மூலம் பேமிலி ஆடியன்ஸிடம் ரீச் கிடைத்தது.

2001ல் வெளியான தீனா தான் மிகப் பெரும் திருப்புமுனை ஆனது. ஏராளமான ரசிகர்களை அஜீத்துக்கு தந்து, தலை என்னும் பட்டத்தையும் தந்தது. அதன்பின்னரும் அவருக்கு ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை தான் வெற்றிப்படம் கிடைத்தது. விஜய்யின் வெற்றிப்படங்களுடன் ஒப்பிட்டால் அஜீத், அதில் 40% தான் வெற்றி கொடுத்திருப்பார். அஜீத் தலையைக் காட்டினாலே போதும் படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, பார்க்க நாங்கள் ரெடி என்னும் ஒரு கூட்டமே இப்போது உருவாகியிருக்கிறது.

இவ்வளவு ரசிகர்களை அஜீத் பெற்றிருப்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தோன்றிய சில காரணங்கள்.
இயல்பாகவே ஒரு நடிகர் மீது பார்வையாளர்களுக்கு வரும் ஈர்ப்பு. இதற்கு காரணங்கள் தேவையேயில்லை. ஆனால் அந்த ஈர்ப்பு காலாவதி ஆகாமல் அந்த நடிகன் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த 20 ஆண்டுகளில் அஜீத்துக்கு தன் பர்சனாலிட்டி மூலமும், ஏற்ற வேடங்கள் மூலமும் புதிது புதிதாய் ரசிகர்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

தானே கையூன்றி, சுற்றத்தார் ஆதரவு இல்லாமல் வாழ்க்கையில் எழுந்தவர்களுக்கு அஜீத் தங்களைப் போல என்னும் ஓர் எண்ணம் இருக்கும். பல போராட்டங்களை/அவமதிப்புகளை வாழ்க்கையில் சந்தித்து எழுந்தவர்களுக்கு அஜீத் இடைக்காலத்தில் திரைஉலகம்/மீடியா மூலம் பட்ட கஷ்டம் ஒரு சார்பைக் கொடுத்திருக்கலாம்.

எந்த இடத்திலும் எதிர் அரசியல் என்று ஒன்று இருக்கும். திமுக பிடிக்காதவர்கள் எல்லாம் அதிமுகவிற்கு ஓட்டுப்போடுவது போல, விஜய்யைப் பிடிக்காதவர்கள் எல்லாம் அஜீத்தின் பக்கம் சாய்வது. மசாலா படம் தான் கொடுப்பேன்னு திமிரா சொல்லி நடிக்கிறான், டான்ஸைத்தவிர ஒண்ணும் இல்லை- அடுத்த சூப்பர் ஸ்டாருன்னு சொல்லுறாங்களேன்னு எரிச்சல் அடைபவர்கள் அஜீத்தை ஆதரிக்க தலைப்படுகிறார்கள். இதற்கிடையே என் பையன் தான் அடுத்த சி எம் என்னும் ரேஞ்சுக்கு விஜய்யின் தந்தையார் முன்னாட்களில் கொடுத்த ஸ்டேட்மெண்டுகள் பலருக்கும் கடுப்பைக் கிளப்பியிருக்கும்.

தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அஜீத்துக்கு தங்களது போஸ்டர்கள், பிளக்ஸ்களில் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் எதிர் அரசியலே.

நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம், தலை நிமிர்ந்து இருப்போம், எங்களுக்கு யார் தயவும் தேவையில்லை. என சிலர் இருப்பார்கள். அதுபோன்ற கெத்தை திரையிலும் ஓரளவு நிஜ வாழ்விலும் பிரதிபலிப்பவர் அஜீத். அதனால் அந்த வகையறாவும் அஜீத்துக்கு ரசிகராக இருக்கிறார்கள்.

இப்போது வரும் விளம்பரங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னராக வந்த விளம்பரங்களுக்கும் ஒரு வித்தியாசத்தைக் கவனிக்கலாம். ஆக்ஸ் எஃபெக்ட், உள்ளாடை, ஆயத்த ஆடை வகையறா விளம்பரங்களைத் தவிர மற்ற விளம்பரங்களில் வரும் ஆண்கள் முன் வழுக்கையுடன், லேசான தொந்தியுடன் இருப்பதைக் கவனிக்கலாம். முகம் மட்டும் சிகப்பாக, ஓரளவு களையுடன் இருக்கும் (பற்கள் துருத்தாமல், கன்னம் டொக்கு விடாமல்). பல விளம்பரங்களில் ஆண்கள் கண்ணாடியுடனும் இருப்பார்கள். ஆனால் முன்னர் வந்த விளம்பரங்களில் எல்லாம் ஆண்கள் நல்ல சுருள் முடியுடன், தட்டை வயிறுடன் இருப்பார்கள்.
தற்போது ஆணுக்கு பார்க்க சகிக்கிற முகமும், நல்ல வேலையுமே ஒரு அடிப்படைத் தகுதியாக பார்க்கப்படுகிறது (திருமண மார்க்கட்டிலும்) முன் வழுக்கை, இளம் தொந்தி, இள நரை, பித்த நரை, சாளேசுவர கண்ணாடி யெல்லாம் அவன் உழைப்பின் அடையாளமாகப் பார்க்கப் படுகிறது.
தற்போது 30+ ஆண்கள் பெரும்பாலும் மேற்கூறிய டிராபேக்குகளுடன் தான் இருக்கிறார்கள். தொப்பை, நரை இவற்றுடன் பெரும் கமர்சியல் ஸ்டாராக பிரகாசிக்கும் அஜீத்தை அவர்களுக்கு ஆதர்சமாக பிடித்துப் போகிறது.

தமிழ்நாட்டில் பலர், நாங்கள் கஞ்சனாக இருப்போம், சுயநலமாக இருப்போம்,அடுத்தவனை மதிக்க மாட்டோம் ஆனால் நாங்கள் ஆதரிக்கும்/ரசிக்கும் நபர் கொடை வள்ளலாக, அடுத்தவர் துன்பத்தைக் கண்டு இரங்குபவராக, மனிதனுக்கு மதிப்பளிப்பவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள்.

எம்ஜியார் இதை சரியாக புரிந்து வைத்து, மக்களை ஈர்த்தார். அவரின் சினிமா போட்டியாளரான சிவாஜி கணேசனும், அரசியல் போட்டியாளரான கருணாநிதியும் இந்த விஷயத்தில் அவரிடம் தோற்றுப் போனார்கள். ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் எம்ஜியார் பார்முலாவை பின்பற்றினார். ஆரம்பத்தில் விஜய் இந்த பார்முலாவை பின்பற்றினாலும், பின்னர் அவரது சாயம் அவ்வப்போது வெளுத்தது.

ஆனால் அஜீத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த விஷயத்தில் நல்ல மைலேஜ் கிடைக்கிறது. பல பத்திரிக்கைகளில் அவர் செய்த உதவிகள் அடிக்கடி வெளிவருகின்றன. 15 நாட்களுக்கு ஒருமுறை அவர் யாருக்காவது பிரியாணி செய்து போட்டு விடுகிறார். படம் வெளியாகும் சில வாரம் முன்பு “எனக்கு விளம்பரம் பிடிக்காது/ பேட்டியெல்லாம் எதுக்கு” என்ற தொனியில் முண்ணனி பத்திரிக்கைகளில் பேட்டி வருகிறது. நலிவடைந்த தயாரிப்பாளர் பயன் பெற்றார் போன்ற செய்திகளும் எல்லா ஊடகங்களிலும் பிளாஷ் ஆகிறது. இதன் மூலமும் குறிப்பிட்ட அளவிலான ரசிகர்கள் அவருக்கு உருவாகிறார்கள்.
ரேஸ் ஓட்டுவது, பொம்மை விமானம் பறக்க விடுவது போன்ற சில செயல்களும் அஜீத்துக்கு நடிகரைத் தாண்டிய ஒரு இமேஜைக் கொடுத்துள்ளது. வேல்யூ ஆடட் கோர்ஸ் என்பதைப் போல இந்த தகுதிகளும், ரசிகர்கள் அஜீத்தைப் பின் தொடர, மற்றவர்களுடன் வாதிட ஒரு வாய்ப்பைத் தருகின்றன.

ஆரம்பத்தில் பக்க பலமாக இருந்து பின் உபத்திரமாக மாறிய நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் பிடியில் இருந்து அஜீத் வெளியேறியபின் அதிகப்படியான உயர்வு அஜீத்துக்கு.  நிக் ஆர்ட்ஸ்க்காக அஜீத் நிறைய கஷ்டப்பட்டதால், நண்பர்களுக்காக எதையும் செய்பவர், நட்பைப் பேணுவதில் வல்லவர் என்ற பிம்பம் அஜீத்துக்கு நன்கு உருவாகியிருந்தது. இதுவும் தம்ழ்நாட்டு மக்களுக்கு மிகப் பிடித்த பிம்பம். விஜய்க்கு செல்பிஷ் ஆனவர் என்ற பிம்பமே இப்போது இருக்கிறது (புவர் மார்க்கெட்டிங் டெக்னிக்ஸ்).

எனவே இயல்பாக உருவான ரசிகர் கூட்டம், மற்றும் இது போன்ற காரணங்களால் ஆதரிக்க தலைப்பட்ட கூட்டமும் சேர்ந்து அஜீத்தை மிகப் பெரும் கமர்சியல் ஸ்டார் ஆகிவிட்டார். தொடர்ந்து இதுபோல கவனமாக இருந்து வந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் ரஜினி இப்போது இருக்குமிடத்தில் அஜீத் இருப்பார்.

November 25, 2013

பிரசாந்தும் ஆர்யாவும்

90ஆம் வருடம். தினமலர் துணுக்கு மூட்டையில் ஒரு செய்தி. மம்பட்டியான் மகன் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் அறிமுகமாகிறார். சம்பளம் 50,000 ரூபாய். இதுவரை எந்த புது முகத்திற்கும் கிடைத்திராத தொகை இது என்று. படம் வெளியாகி வெள்ளி விழா கண்டது. பிரசாந்துக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

அதற்குப்பின் இரண்டு சுமாரான படங்களில் நடித்தாலும், பெரிய இயக்குநர்களின் கண்பார்வையில் பட்டார்.

பாலுமகேந்திரா, மணிரத்னம், அகத்தியன், ஷங்கர், மணிவண்ணன், செல்வமணி, சுசி கணேசன், வசந்த், சுந்தர் சி, ஹரி, பி வாசு, வெங்கடேஷ் என வெரைட்டியான இயக்குநர்கள்.

காவேரியில் ஆரம்பித்து, ரோஜா, சிம்ரன், லைலா, சிவரஞ்சனி,ஷாலினி, சினேகா, ரியா சென்,  rinky கண்ணா, நிலா என வெரைட்டியான நடிகைகள். சூப்பர் ஸ்டாரே 10 ஆண்டு காத்திருந்த ஐஸ்வர்யா ராயுடன் அசால்டாக நடித்தவர்.

என் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைக்க மாட்டாரா என அவரின் செட் நடிகர்கள் ஏங்கும் போது, திருடா திருடா, ஜீன்ஸ், ஜோடி என ஏ ஆர் ஆரின் அசத்தல் பாடல்களுடன் நடிக்கும் வாய்ப்பு.

இப்படி பல வாய்ப்புகள். நல்ல உயரம், சிகப்பு, வழுக்கையில்லாத தலைமுடி, மோசமென்று சொல்ல முடியாத முகம், நாலு பேரை அடித்தாலும் நம்பும் படியான ஆகிருதி, நடனமும் மோசமில்லை. பிண்ணனியில் படம் இயக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்ற தந்தை தியாகராஜன்

இத்தனை இருந்தும் பிரசாந்த்தை ஒரு நடிகராக ஏற்றுக் கொள்ளவே முடியாதபடிக்கே இருந்தது அவரின் பெர்பார்மன்ஸ். இளமை தேயத் தொடங்கியதும் அவருக்கான ரோல்களும் மறையத் தொடங்கி விட்டன. சாக்லேட் பாய்க்கு நடிப்பு தேவையில்லை. ஆனால் 35 வயதுக்கு மேல் ஏற்கும் கேரக்டர்களுக்கு நடிப்பு குறைந்தபட்ச அளவாவது இருக்க வேண்டும். இல்லையென்றால் சினிமாவில் நிலைக்க முடியாது என்பதற்கு பிரசாந்த் தான் உதாரணம். அவரால் என்ன செய்ய முடியும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதில் தவறிவிட்டார் பிரசாந்த்.



ஆர்யாவுக்கும் அப்படித்தான். பாலா, செல்வராகவன், விஷ்ணுவர்தன், ஜீவா என பல இயக்குநர்கள். நல்ல வாய்ப்புகள். ஆனால் இன்னும் நடிப்பில் முன்னேற்றம் எதுவுமில்லை.

 35 வயதை கடந்த பின் ஆர்யாவுக்கும் பிரசாந்தின் நிலைமைதான் வரும்.

November 05, 2013

மிஸ்டரி பீவர்

திடீரென பூபாலனுக்கு விழிப்பு வந்தது. எழ முயற்சித்தான். முடியவில்லை. பத்துபேர் கைகளையும், கால்களையும் பிடித்து அமுக்குவது போல் ஒரு உணர்ச்சி. பிரயத்தனப்பட்டு எழுந்தரித்துப் பார்த்தான். மருத்துமனையில் இருப்பது புரிந்தது. அருகில் யாருமில்லை. குரல் எழுப்ப யத்தனித்தும் பலவீனமானமாகவே எழும்பியது. அப்படியே விழித்தவாறே படுத்திருந்தான். கை,காலெல்லாம் தளர்ந்து தனக்கு நூறு வயது கூடியிருந்ததைப் போல் உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து வந்த செவிலிப்பெண் அவன் விழித்திருந்தைக் கண்டு, வியந்து இண்டர்காமில் மருத்துவருக்கு தகவல் சொன்னாள்.

சிறிது நேரம் கழித்து சிறு மருத்துவர்கள் குழு ஒன்று வந்தது. பூபாலனைப் பரிசோதித்த பின்னர், தங்களுக்குள் விவாதித்துக் கொண்டார்கள். சில மருந்துகளை பரிந்துரைத்து விட்டு, உளவியல் ஆலோசனை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

பூபாலன் உளவியல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான். அங்குதான் அவனுக்குத் தெரியவந்தது, தான் ஒரு கோமா நோயாளியாக 40 வருடங்கள் மருத்துவமனையில்  இருந்து வந்தது. ஒரு விபத்தில் சுயநினைவை இழந்திருந்த பூபாலனுக்கு  அப்போது 25 வயது. திருமணம் ஆகியிருக்கவில்லை. அவனது பெற்றோர்களும் 25 வருடம் அவனை கோமா நிலையிலேயே பராமரித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இறப்புக்குப் பின் அவனது கேர் டேக்கராக இருந்து வருபவன் அவன் நண்பன் சிவானந்தன். மாதமொருமுறை அவனை வந்து பார்த்து தேவையானவற்றை செய்து வருபவன். அவன் தற்போது வேறு ஊரில் வசித்து வருவதாகவும், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். பின் அவனது பல கேள்விகள்,சந்தேகங்களுக்கு பதிலளித்து, படிப்படியாக சாந்தப்படுத்தினார்.

அவனை கவனித்து வந்த மருத்துவர், படிப்படியாக பேச, நடக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறினார். ஒரு வாரம் கழித்து மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளலாம் என்றும் கூறினார்.  இதற்கிடையில் சிவானந்தனும் வந்து சேர்ந்தான். அவனின் முதிய தோற்றத்தைக் கண்டதும் தான் பூபாலனுக்கு சமாதானம் ஆனது. ஒரு வாரம் கழித்து பூபாலனை தன் வீட்டிற்கு அழைத்துப் போவதாகவும், ஓரிரு மாதங்களில் பூபாலனின் பழைய வீட்டிற்கு சென்று விடலாம் என்றும் கூறினான்.

மாலை நேரங்களில் மருத்துவமனை வளாகத்தை பூபாலன் சுற்றி வரும்போது, அது அரசு பொது மருத்துவமனை என்று அறியவந்தது. மிக குறைவான நோயாளிகளே இருப்பதும், அவர்களும் விபத்து, வயதானதால் வரும் பிரச்சினைகள் என்றே இருப்பதும் தெரியவந்தது. பிரசவத்துக்கு வந்தவர்களையும் பார்க்க நேர்ந்தது.  கேண்டீன் என்ற ஒன்றையும் பார்க்க முடியவில்லை. பூபாலன் நினைவு வந்த பின் மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும் சத்து மாவு உருண்டையும், நீரும் மட்டுமே பணியாளர்கள் மூலம் கிடைத்தது.

ஒரு வாரம் கழித்து, மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், பேருந்தில் ஏறி சென்னையின் தெருக்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்த பூபாலனுக்கு இரண்டு விஷயங்கள் உறைத்தது. ஒன்று, தான் விபத்தில் அடிபட்ட 2013க்கும் இப்போதைய 2053க்கும் தொழில்நுட்பத்தில் பெரிய வேறுபாடு தெரியவில்லை. இன்னொன்று சென்னை நகரத்தின் வீதிகளில் ஒரு உணவகமோ  ஏன் ஒரு டீக்கடை கூட கண்ணுக்கு தென்படவில்லை.

சிவானந்தனின் ஊருக்கு  வந்த பின்னரும் அவனால் வித்தியாசம் உணரமுடிந்தது.அங்கும் உணவகங்களோ, டீக்கடைகளோ தென்படவில்லை.  பத்தாண்டுகளில் எப்படி தொழில்நுட்பம் வளர்ந்தது எனப் பார்த்தவன் பூபாலன். ஆனால் இந்த 40 ஆண்டுகள் அப்படியே தொழில்நுட்பச் சக்கரம் இயங்காமல் போய்விட்டது போல் உணர்ந்தான். மதிய உணவு நேரம் வந்தது. தட்டில் சில சத்து மாவு உருண்டைகளை எடுத்துக் கொண்டு வந்தார், சிவானந்தனின் மனைவி. என்னடா, சிவா, இன்னும் பத்தியம் இருக்கணும்னு சொன்னாரா? டாக்டர்?, என வினவினான் பூபாலன்.

மௌனமாக இருந்தான் சிவானந்தன். பின் அவர்கள் தங்கள் இளமைக்காலம், நண்பர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மாலை ஆனது, டீ கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தான் பூபாலன். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்துதான், அந்த வீட்டில் சமையலறையே இல்லை என அவனுக்கு உறைத்தது.
என்னடா சிவா இது? என்று வினவினான் பூபாலன்.

”உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆன சில மாசத்திலேயே ஒரு விசித்திர காய்ச்சல் திடீர்னுன்னு பரவிச்சு. எந்த மருந்துக்கும் கட்டுப்படல. ரெண்டு மாசம் மூணு  மாசம் கூட ஒரே டெம்பரேச்சர்ல அப்படியே இருந்துச்சு. அதுக்கு விஞ்ஞானிகள் ஒரு மருந்து கண்டுபிடிச்சாங்க. அந்த இஞ்சக்‌ஷன் போட்ட உடனே படிப்படியா சரியாயிடுச்சு. அப்புறம் திரும்ப இன்னொரு குரூப்புக்கு அந்த காய்ச்சல் வந்தது. திரும்பவும் அதே இஞ்சக்‌ஷன். சரியாயிடுச்சு. அப்புறன் தெரிஞ்சது, ஒவ்வொரு பிளட் குரூப்புக்கா அந்தக் காய்ச்சல் வருதுன்னு. கிட்டத்தட்ட உலகத்துல இருக்குற எல்லா மக்களுக்கும் அந்தக் காய்ச்சல் வந்து இஞ்சக்‌ஷன் போட்டுக்கிட்டாங்க. அதுக்கு மிஸ்டரி பீவர்ன்னு பேரும் வச்சாங்க. காய்ச்சல் வராதவங்க, முன் னெச்சரிக்கையா அந்த இஞ்சக்‌ஷன் போட்ட பின்னாடி காய்ச்சல் வரல்லை. அதனால அத பரிசோதிச்ச உலக சுகாதார நிறுவனம், அந்த இஞ்சக்‌ஷன தடுப்பு மருந்தா அறிவிச்சு, பிறந்த குழந்தைககளுக்கும் போடச் சொல்லி பரிந்துரை பண்ணுச்சு. பிறந்து 30 நாள்ல அந்த இஞ்சக்‌ஷன குழந்தைகளுக்கு உலகம் பூராம் போட ஆரம்பிச்சாங்க.

அப்புறம் சில மாதங்கள்ல தான் தெரிய வந்தது, அந்தக் குழந்தைகளுக்கு டேஸ்டே தெரியல்லைன்னு. உப்பா இருந்தாலும், சர்க்கரையா இருந்தாலும் எதையும் சாப்பிடுச்சுக. எந்த சாப்பாடையும் ஒதுக்கல. ஒரு வருசம் கழிச்சு, லேஸ் வேணும், குர்குரே வேணும், நூடுல்ஸ்,சிக்கன், மட்டன், பிட்சா,பர்கர் தான் சாப்பிடுவேன் அடம் பிடிச்சிக்கிட்டிருந்த பிள்ளைக கூட எதக் குடுத்தாலும் சாப்பிட ஆரம்பிச்சிருச்சுங்க. உலகம் பூராம் இருந்தும் பேஸ்புக், டிவிட்டர்ல எல்லாம், என்னோட குழந்தை மாறிட்டான். எதையும் சாப்பிடுறன்னு ஸ்டேட்டஸ் மெசேஜ்கள்.
கொஞ்சம் கொஞ்சமா, ஜங்க் புட்டோட விற்பனை சரிய ஆரம்பிச்சுச்சு. எல்லோர் வீட்டிலேயும் பிள்ளைக எந்த ருசியில குடுத்தாலும், ஒரே மாதிரிதானே சாப்பிடுறாங்கண்ணு சத்தான ஐயிட்டமா செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சாங்க. தாங்களே அதையும் சாப்பிட ஆரம்பிச்சாங்க. சாக்லேட், பேக்கரி ஐயிட்டம்,கே எஃப் சி, சைனீஸ், காண்டினென்டல் புட்னு எல்லாத்தோட மார்க்கட்டும் குறைய ஆரம்பிச்சிருச்சு. பெரிய புட் செயினெல்லாம் லாபத்துல அடி வாங்குச்சு. பிள்ளைகளே ருசிச்சு சாப்பிடலைன்னு மக்கள் தங்களுடைய ஹோட்டல் விசிட்டுகளையெல்லாம் கொறச்சிக்கிட்டாங்க.

 பேச்சிலர்ஸ், ருசிய விட முடியாத சில குடும்பஸ்தர்கள் அப்புறம் ஆபிஸ் பார்ட்டிகள் போன்ற விழாக்கள்ல பங்கெடுத்தவங்க தான் ருசியான சாப்பாடு சாப்பிட்டாங்க.
அதுக்கப்புறம் சில வருஷத்துலேயே பெரியவங்களுக்கும் டேஸ்ட் பட் காலியாக ஆரம்பிச்சிச்சு. எத சாப்பிட்டாலும் ஒரே மாதிரிதான் இருந்துச்சு. அறு சுவைங்கிறதெல்லாம் புத்தகத்துலயும் இண்டர்நெட்டுலயும் மட்டும் பார்க்கிற வார்த்தையாச்சு. எதச் சாப்பிட்டாலும் ஒரே மாதிரிதானே இருக்குன்னு, பெரிய ஹோட்டல்களுக்கு மக்கள் போகிறத நிறுத்த ஆரம்பிச்சாங்க. தினமும் மது குடிக்கிறவன்கூட, சைட் டிஸ் டேஸ்ட் இல்லைன்னு, குடிக்கிறத குறைக்க ஆரம்பிச்சாங்க.

புட் இண்டஸ்டிரியே ஸ்தம்பிச்சுப் போச்சு. அப்போதைய கவர்ன்மெண்ட் கொடுத்த விலையில்லா அரிசியை வாங்கி மாட்டுக்கு போட்டவன் கூட அதைச் சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சான்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எல்லோரும் கிடைச்ச உணவ சாப்பிட ஆரம்பிச்சாங்க. தலப்பாகட்டி,சரவண பவன், அடையார் ஆனந்த பவன் அப்படிங்கிற பிராண்ட்டெல்லாம் காலாவதி ஆச்சு.

தடுப்பூசி போட்டு வளர்ந்த ஜெனரேஷன் சிகரெட், மது பக்கமே போகலை. ஹோட்டல், டீக்கடைகள் இல்லாததால, அது தொடர்பான தொழில்களும் நடக்கலை. அதனால அரசாங்கத்துக்கு வரியெல்லாம் குறைஞ்சிடுச்சு.  அரசாங்கமே மக்களுக்கான உணவை, சத்து மாவு மாதிரி செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஒரே மாதிரி உருண்டை, வயசு கூட கூட எண்ணிக்கை கூடும். அப்புறம் 50 வயசுக்கு அப்புறம் எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வரும்.

வீட்டில சமையல் அறை, தேவையே இல்லாம போயிடுச்சு. ஒவ்வொரு உணவுக்கும், ருசிக்கும், நம்ம கோபம், இச்சைகளை தூண்டுற சக்தி உண்டு. ஆனா இந்த மாவு உருண்டைய சாப்பிடுறவனுக்கு பெரிய இச்சைகள் வர வாய்ப்பில்லாம போயிடுச்சு.பெரிசா சாதிக்கணும்கிற வெறி, நிறைய சம்பாதிக்கணும்கிற வெறி எல்லாம் குறைஞ்சிடுச்சு. சாப்பாட்டுக்கு பெரிய பிரச்சினை இல்லைன்ன உடனே அவன் அவன் தனக்கு பிடிச்சத மட்டும் செஞ்சான். சிலர் சோம்பேறி ஆனான்.

அதனால பெரிய கண்டுபிடிப்பு எல்லாம் அப்புறம் நடக்கவே இல்லை. ஒரே மாதிரி வாழ்க்கை ஓடிக்கிட்டி இருக்கு.இதுக்கெல்லாம் அந்த இஞ்சக்ஷன்தான் காரணம்னு, ஒரு குழு போராடி, பிறக்கிற குழந்தைகளுக்கு அதைப் போடக்கூடாதுன்னு முயற்சி பண்ணாங்க. இஞ்சக்‌ஷன் போடாத குழந்தைகளுக்கு அந்த காய்ச்சல் வரவும், எல்லோரும் பின் வாங்கிட்டாங்க.

என்று சிவானந்தன் சொல்லி முடித்தான்.

தலை சுற்றியது பூபாலனுக்கு. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்தான். அவனுடைய சுவை மொட்டுக்கள் இரண்டு நாட்களாக தூண்டப்பட்டு இருந்து வந்தது. குறிப்பிட்ட ரத்த பிரிவிற்கான காய்ச்சல் வந்தபோது, அவன் ஐ சி யூவில் இருந்திருக்கிறான். காய்ச்சல் தாக்கவில்லை. அந்த இஞ்சக்‌ஷனும் அவனுக்கு போடப் படாமல் விட்டுப் போய் இருந்திருக்கிறது.

சில நாட்களுக்கு மேல் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ருசியில்லா உருண்டை அவன் தொண்டையில் இறங்கவில்லை. எங்காவது சாப்பாடு கிடைக்குமா? என அலைய ஆரம்பித்தான். சாப்பாடு கூட வேண்டாம், ஒரு டம்ளர் டீ குடித்தால் கூட போதும் என்றானது அவனுக்கு. டீ என்றால் அப்படி ஒரு பிரியம் அவனுக்கு.
வீட்டில் காலை பல் விளக்காமல் குடித்த டீ, டீக்கடையில் மசால் வடையை கடித்துக் கொண்டு, அடுத்தவன் கையில் இருந்த தினத்தந்தியை எட்டிப்பார்த்துக் கொண்டே குடித்த டீ, ஸ்டடி ஹாலிடேஸ்களில் மதியம் தூங்கி, மாலை எழுந்தரித்து, விட்டத பிடிக்கணும்டா என்று சபதம் எடுத்துக் கொண்டே குடித்த டீ, எக்ஸாம் டைமில் பிளாஸ்கில் வாங்கி வைத்து குடித்த டீ, அலுவலகத்தில் மீட்டிங்குகளில் போது, அலங்காரக் கோப்பைகளில் பரிமாறப்பட்ட டீ எல்லாம் அவன் மூளையில் உட்கார்ந்து கொண்டு ஆட்டிப்படைத்தது.

சிவானந்தனிடம் டீக்காக கெஞ்சினான். ”நான் டீயை பார்த்து 20 வருடத்துக்கு மேல் இருக்கும் அதைப் பயிரிடுவதையே நிறுத்திட்டாங்க: என்றான். மாடெல்லாம் இப்போ ஜூல தான் இருக்கு. சிங்கம் புலி மாதிரி என்றான். அவனின்  அப்போதைய நண்பர்கள் அனைவரையும் சிவானந்தன் மூலம் அறிந்து ஒரு டீக்காக பெரு முயற்சி எடுத்தான். கிடைக்கவேயில்லை.

பால் அதிகம் சுரக்காத பெண்களின் கைக் குழந்தைகளுக்கு மட்டும், அரசாங்க பால் பண்ணையில் இருந்து முதல் மூன்று மாதங்களுக்கு பால் வினியோகிக்கப் படுவதாக ஒரு நண்பன் மூலம் அறிந்தான்.
அதைத தவிர வேறு எதுவும் கிடைக்காது, என்ற நிலையில் அந்த இஞ்சக்‌ஷனை தயாரிக்கும் கம்பெனியின் உயர் அலுவலரை பெரும் முயற்சிக்குப் பின் சந்தித்தான்.

மர்மக் காய்ச்சல் பரவியதும், அதை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டபோது, அந்த மருந்தைக் கண்டுபிடித்ததாகவும், அதன் பின் விளைவுகள் அவர்களுக்கு அப்போது தெரியவில்லை என்றும் அவன் அறிந்து கொண்டான். மேலும் அவர்களால், சுவை மொட்டுக்களை பாதிக்கும் குறிப்பிட்ட என்சைமை தனியே பிரித்து எடுக்க முடியவில்லை என்றும், வேறு எந்த புது காம்போசிஷனலாலும் அந்தக் காய்ச்சலை குணப்படுத்த முடியவில்லை என்றும் அறிந்து கொண்டான்.
முன்னிலும் தளர்ந்த நடையுடன் வெளியே வந்தவனுக்கு மூளையில் ஒரு மின்னல் அடித்தது. இந்த ஒரு இஞ்சக்சன் நாட்டில் என்னவெல்லாம் நல்லவற்றை ஏற்படுத்தி உள்ளது என்று.

சமையல் என்ற ஒன்றே இல்லாததால், பெண்கள் சம உரிமையுடன் நடமாடினார்கள். அலுவலகம் சென்று வந்து சமைக்கத் தேவையில்லை.   தேவையில்லாத உணவு வகைகளை உண்டு, மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு நோய் வருவது குறைந்துள்ளது. சமுதாய ஏற்றத்தாழ்வுகள் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. உணவுப் பழக்கத்தின் பெயரால் மக்களை பிரிப்பது நடக்கவில்லை. சொத்து சேர்க்கும் ஆர்வம் குறைந்து சுற்றுச்சூழல் பிழைத்துள்ளது. நாடுகளுக்கிடையே சண்டை இல்லை. இந்தக் காய்ச்சல் வராமல் இருந்திருந்தால் 2053 இப்படியா இருந்திருக்கும்?


மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்று, எனக்கு மிஸ்டரி பீவர்க்கான தடுப்பூசி ஒன்று போடுங்கள் என்று கேட்டுக் கொண்டான் பூபாலன்.

October 28, 2013

தனுஷின் ஓப்பனிங்

தமிழ் திரையுலகில் தங்களை நிலை நிறுத்திக் கொண்ட நடிகர்களுக்கு,முதல் மூன்று நாட்களில், திரையரங்குகளில் கிடைக்கும் வரும் வசூலே, அவர்களுடைய  படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை நிர்ணயிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

தனுஷ் 2002ல் அறிமுகமாகி 11 ஆண்டுகள் கடந்து விட்டன. அசாருதீன் முதல் மூன்று டெஸ்டுகளில் சதம் அடித்தது போல, அவரும் முதல் மூன்று படங்களில் ஹேட்ரிக் வெற்றியை கொடுத்தார். இடையிடையே ஹிட்டுகள். தேசிய விருது வாங்கும் அளவுக்கு நடிப்புத்திறமை என தமிழ் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை அறிமுகமான முகம். எனவே படம் லேட் பிக்கப் ஆகும் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. ஓப்பனிங் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

சமீபத்தில் வெளியான நய்யாண்டி படத்துக்கு ஓப்பனிங் வெகு சுமாராகவே இருந்தது. மதுரை ஏரியாவில் பல தியேட்டர்களில் முதல் நாள் காலை, மதிய காட்சிகளுக்கு 40 சதவிகிதத்துக்கும் குறைவாகவே கூட்டம் இருந்தது. படம் சுமார் என்ற தகவல் வெளியே பரவியதும் சனி, ஞாயிறிலும் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

அம்பிகாபதி (ராஞ்சனாவின் டப்பிங்) வெளியான போது, மதுரை புறநகர் தியேட்டர்களில், அந்தந்த தியேட்டர்களில் வேலை பார்ப்பவர்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். சரி இந்திப்படம் என்று சமாதானம் கொண்டாலும், அடுத்த வந்த மரியானுக்கும் இதே நிலைமைதான். முதல்நாளிலேயெ பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. இத்தனைக்கும் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஹிட். ட்ரைலரும் நன்றாகவே இருந்தது.

திருடா திருடிக்குப் பின்னர் அவர் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுள்ளான், ட்ரீம்ஸ், தேவதையை கண்டேன், அது ஒரு கனாக் காலம், புதுப்பேட்டை வரை எதுவும் பெரிய கமர்ஷியல் ஹிட் கிடையாது. திருவிளையாடல் ஆரம்பம் தான் தனுஷுக்கு அடுத்து கிடைத்த கமர்சியல் ஹிட். அதன் பின்னர் வந்த பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன் மட்டுமே எல்லாத்தரப்புக்கும் நிம்மதியைக் கொடுத்த படங்கள்.

2010க்குப் பின்னர் வந்த எந்தப் படமும் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களை குஷிப்படுத்த வில்லை. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, இணையதள பயனாளர்களால் சிலாகிக்கப்பட்டு, தனுஷ்க்கு தேசிய விருது வாங்கித்தந்த ஆடுகளம் கூட சில ஏரியாக்களில் சுமாராகவே போனது. (உடன் வந்த கார்த்தியின் சிறுத்தையும், விஜய்யின் காவலனும் கமர்சியலாக தப்பித்தன).

குட்டி, உத்தம புத்திரன், சீடன் (இதில் கௌரவ வேடம்), மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, மரியான், நையாண்டி என தொடர் பாக்ஸ் ஆபிஸ் பெயிலியர்கள் தான் தனுஷுக்கு.

இதில் சிங்கம் படத்தின் வெற்றிக்குப் பின் ஹரி இயக்கிய படம் வேங்கை. ராஜ்கிரண், பிரகஷ்ராஜ், தமன்னா என நல்ல ஸ்டார் காஸ்ட். இருந்தும் மதுரை புறநகர் ஏரியாக்களில் முதல் நாள் மாலை காட்சிக்கே ஆவரேஜான கூட்டம் தான். மயக்கம் என்னவுக்கு செல்வராகவன் மற்றும் ஜிவி பிரகாஷின் ஹிட்டான பாடல்கள் இருந்ததால் ஓரளவு கூட்டம் வந்தது, ஆனால் இரண்டாம் நாள் படம் படுத்துவிட்டது. 
கொலைவெறியால் 3 க்கு நல்ல கூட்டம் முதல் நாள் இருந்தது. ஆனால் அதுவும் இரண்டாம் நாளே காலி.

எதிர் நீச்சல் திரைப்படம் வெளியாகும் போது சிவகார்த்திகேயனுக்கு அதற்கு முன் நாயகனாக நடித்து மூன்று சுமாரான படங்களே வந்திருந்தன. ஆனாலும் நல்ல ஓப்பனிங் இருந்தது, வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கும் நல்ல ஓப்பனிங். இது ஏன் தனுஷுக்கு இப்போது சாத்தியம் ஆகவில்லை?

தனுஷின் காதல் கொண்டேன் வெற்றிக்குப் பின்னர் வெளியான திரைப்படம் திருடா திருடி. இயக்குநரும் புதுமுகம். திருச்சியிலேயே அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்கம் கலையரங்கம். அங்கேயே முதல் நாள் காலை காட்சி ஹவுஸ்புல் ஆனது. அதன்பின்னர் தான் தனுஷுக்கென ஒரு மார்க்கெட் உருவானது. ஆனால் 10 ஆண்டுகள் கழித்து, தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பின்னரும் அவருக்கு ஓப்பனிங் குறைந்து கொண்டே வருகிறது.

முதல் மூன்று நாள்களில் அதிக எண்ணிக்கையில் படம் பார்ப்பவர்கள் கல்லூரி மாணவர்கள் (கல்லூரி மாணவிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்), வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் வேலைக்குச் சென்று திருமணம் ஆகாமல் இருக்கும் வாலிபர்களே. சனி, ஞாயிறு மதியம், மாலைக் காட்சிகளுக்கு குடும்பத்தோடு வருபவர்கள் கூட்டம் இருக்கும்.

இதில் சிறுவர்களுக்கு தனுஷை அவ்வளவாக பிடிப்பதில்லை. விஜய், கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரை பிடிக்கிறது. ஏன் சிம்புவைக்கூட சிலருக்கு பிடிக்கிறது. கல்லூரி மாணவிகள் மத்தியிலும் தனுஷ்க்கு கிரேஸ் இல்லை. தற்போதைய கல்லூரி மாணவர்களுக்கும் அவ்வளவாக தனுஷைப் பிடிக்க மாட்டேன் என்கிறது. வேலைக்குச் செல்லும் கல்யாணமாகாத இளைஞர்கள் மட்டுமே தனுஷ் படங்களை முதலில் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களும் மாலை, இரவு காட்சிக்கு மட்டுமே வருகிறார்கள்.

இணையத்தில் தமிழில் புழங்குகிறவர்கள் மத்தியில் தனுஷ்க்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. அவர்கள் மொத்த தமிழ் சமூகத்தில் மைனாரிட்டியே.


கே வி ஆனந்தின் அனேகன் வந்து தனுஷ்க்கு பரந்து பட்ட ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தால் நல்லது. ஏனென்றால் என்ன தான் நல்ல நடிகர் என்றாலும் தியேட்டருக்கு ஆள் வராவிட்டால் தயாரிப்பாளர் தயங்கத்தானே செய்வார்

October 26, 2013

தண்ணி மீனாட்சி


செக்குக்கு மாடு கொடுத்தாலும் திண்டுக்கல்லுக்கு பொண்ணு கொடுக்கக்கூடாது என்ற பழமொழி நிலவி வந்த காலம் அது. காரணம் 80களில் திண்டுக்கல்லில் நிலவி வந்த கடும் தண்ணீர் பஞ்சம். பொண்ணு கொடுத்தா தண்ணி தூக்க வச்சே கொன்னுபுடுவாங்கப்பேய் என்று சுற்று வட்டார மக்கள் எல்லாம் பேசிக்கொள்வார்கள். நல்ல தண்ணி என்று சொல்லப்படும் தண்ணீர் வாரத்துக்கொருமுறை நகராட்சி பொதுக் குழாயில் வரும். அதற்கு இப்போது மண்ணெண்ணெய்க்கு வரிசை போடுகிறார்களே கேன்களை, அது போல குடங்களை வரிசையாய் வைத்திருப்பார்கள். ஆளுக்கு நாலு குடத்துக்கு மேல் பிடிக்க விட மாட்டார்கள். சில சமயம் சண்டை வந்துவிட்டால் அவ்வளவுதான். இந்த பேச்சு வாங்கி  தண்ணி பிடிக்கிறதுக்கு பதிலா பூச்சி மருந்த குடிச்சிட்டு குடும்பத்தோடு போய்ச் சேர்ந்துடலாம் என்று நினைக்கும் அளவுக்கு வைது தீர்த்து விடுவார்கள்.


இப்போது போல் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திராத காலம் அது. வீட்டுக்கொரு குழாய் போடவும் முடியாது. கனெக்‌ஷன் வாங்குவதும் லேசு பட்ட பாடில்லை. மோட்டார் பம்ப் வைத்து தண்ணீர் எடுப்பதெல்லாம் பெரும் லக்சுரியாக கருதப்பட்ட காலம். மேலும் போர் போடவும் இடம் வேண்டுமே. வரிசையாக இடைவெளி இல்லாமல் வீட்டைக் கட்டி வைத்திருப்பார்கள்.


இந்த நாலு குடம் நல்ல தண்ணி, குடிக்கவும் சாம்பார் வைக்கவும் மட்டும்தான். மற்றதுக்கெல்லாம் உப்புத்தண்ணி எனப்படும் கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீர்தான். நாலைந்து தெருவுக்கு பொதுவாக அப்படி ஒரு கிணறு அமைந்திருக்கும். வடுகமேட்டுராசா பட்டிக்கும் யாதவ மேட்டுராசா பட்டிக்கும் நடுவே அப்படி அமைந்த கிணறுதான் ராணி மங்கம்மா கிணறு. மங்கம்மாள் மதுரையை ஆண்ட போது தோண்டிய கிணறு என்று சொல்வார்கள். 20 ஆள் மட்டம் என்று ஆழத்தைச் சொல்வார்கள். அறுவதுக்கு நாப்பது என நல்ல அகலம் சகலமாக இருந்த கிணறு. பக்கத்துக்கு பத்து பேர் நின்று தண்ணீர் இறைக்கலாம்.
அந்த ஏரியாவில் இருந்த வீட்டுப் பெண்கள் எல்லோருமே அந்தக் கிணற்றில் நீர் இறைத்திருப்பார்கள். ஆளுக்கு 10 நடை எடுத்தாத்தான் பொழப்பு ஓடும். இளந்தாரிகள் அருகாமையில் நல்ல தண்ணி கிடைக்கும் இடத்துக்கு சைக்கிளின் இரண்டு பக்கமும் குடங்களை வைத்து சைக்கிள் டியுபால் கட்டி நாலு நடை போய்வருவார்கள். தண்ணீர் எடுப்பதிலேயே தங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்கள் உண்டு. நதிக்கரை நாகரீகத்தால் கலைகள் செழித்து வளர்ந்தன என்பார்கள். திண்டுக்கல்லில் தண்ணீர் பஞ்சத்தால் மக்களின் நாகரீகம் தான் குறைந்தது.


இந்த விதிக்கும் மீறிய ஒரு வீடு அந்தப் பகுதியில் இருந்தது. அதுதான் லாரி செட்டுக்காரர் வீடு. பெயர் சுந்தரம். சுந்தரத்தின் வசதி அப்போது குறைவு என்றாலும் பழைய மெதப்பிலேயே இருப்பவர்.
அவர் மனைவி ஒரு நிரந்தர நோயாளி. சமையல் மட்டும் எப்படியாவது தட்டித்தடுமாறி செய்து விடுவார். ஒரு மகன் அடுத்து இரண்டு மகள்கள். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம்.அதில் மூத்தவள் தான் தங்க மீனாட்சி.

இந்த மீனாட்சிதான் அந்த வீட்டில் தண்ணீர் எடுக்க நேர்ந்து விடப்பட்டவள். அவள் அண்ணனும் தங்கையும் ஒரு பாத்திரத்தைக் கூட நகட்டி வைக்க மாட்டார்கள். காலையில் 20 நடை பின் பள்ளிக்குப் போய் வந்து 20 நடை மீனாட்சிதான் மாங்கு மாங்கென்று தண்ணீர் எடுப்பாள். அந்தக்காலத்தில் சைக்கிளில் வந்து பால் ஊற்றும் பால்காரர்களுக்கு சைக்கிளை மிதித்து மிதித்து தொடை சிறுத்து, முழங்காலுக்கு கீழ்  பகுதி வலுவேறி காணப்படுமே, அதுபோல, தங்க மீனாட்சிக்கு தண்ணீர் இறைத்து இறைத்து கையெல்லாம் காய்ப்பு காய்த்திருக்கும். புஜங்கள் எல்லாம் வலுவேறி இருக்கும். பாவாடையின் மேல் அப்பா அல்லது அண்ணனின் சட்டையை போட்டுக் கொண்டு, பர பர வென்று நடந்து போவாள்.
நம் நாட்டில் தான் ஒரு பழக்கம் இருக்கிறதே. யாராவது ஒருவர் ஒரு வேலையை பங்கமின்றி செய்து விட்டால், அவர் தலையிலேயே அந்த வேலையை கட்டி விடுவது என்று, அதுபோல அவர்கள் வீட்டிலும் தண்ணி எடுக்க மீனாட்சி என்று ஆகிப்போனாள். பள்ளிக்கு போக, தண்ணி எடுக்க, வீட்டு வேலைகளையும் செய்ய என நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பாள். தலையை சீவக்கூட நேரமிருக்காது அவளுக்கு. உண்மையில் அந்தத் தெருவிலேயே அவள்தான் அழகி ஆனால் வேலைகளால் நைந்து நளினம் இழந்து போனவள் அவள்.


அவள் மீது அக்கறை கொண்ட சில தெருப்பெண்கள், அவளின் அம்மாவிடம் , அதான் ஓரளவு வசதியா இருக்கீங்கல்ல, தண்ணி எடுக்க ஒரு ஆளக்கூட போடலாமில்ல, சின்னவ மெழுமையா இருக்கா, பாவம் மீனாட்சி உருக்குலைஞ்சு போயிட்டா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.

எங்க வீட்டுக்காரரப் பத்தித்தான் தெரியுமில்ல. வேத்தாளு உள்ள வரக்கூடாதும்பாரு. எங்க ஆளுகள்ள யாரு தண்ணியெடுக்க வருவா? முடியாட்டியும் நீதான் சமைக்கணும்னு என்னயவேற பாடாப் படுத்துறாரு என்று அவளாலும் புலம்பத்தான் முடிந்தது.

மீனாட்சியின் சோட்டுப் பெண்களும், என்னடி இப்படி இளிச்சவாச்சியா இருக்க? உன் தங்கச்சி தண்ணியெடுக்க மாட்டாளா? உங்கண்ணன் சைக்கிள்ல போயி பிடிக்கக் கூடாதா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். நீ நாலு நாளைக்கு தண்ணி எடுக்காத என்றும் சொல்லிப்பார்த்தார்கள். அவர்கள் பேச்சைக்கேட்டு இரண்டு நாள் தண்ணி எடுக்காமல் இருந்தாள் மீனாட்சி. ஆனால் அவளின் அண்ணனும் தங்கையும் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் மீனாட்சியின் அம்மா தண்ணி எடுக்க வந்து, கிணற்றில் வழுக்கி விழுந்தது தான் மிச்சமாயிற்று.
சில தெருப்பெண்கள், இந்த நிகழ்வுக்குப் பின், பொட்டச்சிக்கு இவ்ளோ ஆங்காரம் ஆகாதுடி, வீட்டுக்கு தண்ணியெடுத்தா குறைஞ்சா போயிடுவ? என்றும் பேசினார்கள்.

மீண்டும் தண்ணிக்குடம் மீனாட்சியின் இடுப்பில் ஏறியது. காலம் ஓடியது. மீனாட்சியின் அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. மீனாட்சியின் படிப்பு பிளஸ் 2 உடன் நிறுத்தப்பட்டது. சுந்தரத்தின் மிச்சமிருந்த சொத்துக்களும் கரையத் தொடங்கி இருந்தது. மீனாட்சியின் தங்கை அடம்பிடித்து கல்லூரியில் சேர்ந்தாள். பின் ஒருவனை காதலித்து மணம் செய்து கொண்டாள். நான் மட்டும் மட்டமா என்ன, என்று மீனாட்சியின் அண்ணனும் ஒரு வேற்று சாதி பெண்ணை காதலித்து மணந்து கொண்டான்.

சுந்தரத்துக்கு, மகன் வேறு சாதிப் பெண்ணை மணந்து கொண்டது பெரும் வருத்தத்தை தந்தது. இவள்லாம் எனக்கு காரியம் செஞ்சு, அமாவாசை சாப்பாடு சாப்பிடணுமா என்று புலம்புவார். என்னமோ பெரிய மகராஜா போல.

தொடர் சோகங்களால் மீனாட்சியின் அம்மாவும் காலமானார். ஆனால் மீனாட்சி தண்ணீர் எடுப்பது மட்டும் நிற்கவில்லை. எழவுக்கு, காரியத்துக்கு கூட அவள்தான் தண்ணீர் எடுக்க வேண்டி இருந்தது. அவள் சோட்டுப் பெண்கள் எல்லாம் கல்யாணம் ஆகிப் போன பின்னர், அந்தக் கிணறுதான் அவளின் தோழியாகிப் போனது. இறைக்கும் போது கிணற்றுடன் பேசிக் கொண்டேயிருப்பாள்.

சுந்தரம் திவாலாகும் நாளும் வந்தது. இருந்த வீட்டை கடனுக்கு கொடுத்து விட்டு நாலுதெரு தள்ளி ஒரு லைன் வீட்டுக்கு குடி போனார்கள். தன் மெதப்பில் இருந்து இறங்கி, ஒரு கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பித்தார். ஒரு நடைப்பிணமாகத்தான் அவரின் செயல்பாடுகள் இருந்தது. மீனாட்சிக்கு இப்போது நாலு நடையோடு வேலை முடிய ஆரம்பித்து இருந்தது.

கொஞ்சநாள் தான் ஆகியிருக்கும். மீண்டும் மீனாட்சி தண்ணீர் எடுக்க ஆரம்பித்தாள். இம்முறை பேய் மாதிரி. காலை முதல் மாலை வரை. சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஹோட்டல்களுக்கும் தண்ணீர் எடுத்து ஊற்ற ஆரம்பித்தாள். ராத்திரி ஆனால் பேய்த்தீனி தின்பாள். தண்ணீர் ஊற்றும் கடைகளில் இருந்து சாப்பாடை வாங்கி வந்து கிணற்றடியில் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள். இருளில் இது நடப்பதால் முதலில் யாருக்கும் தெரியவில்லை. பின் சில பெண்கள் விவரம் அறிந்து விசாரித்த போது காரணம் சொல்ல மறுத்தாள். தண்ணி எடுத்து ஊற்றுவதால் தண்ணி மீனாட்சி என்றே அவள் பெயர் அங்கே மாறிப்போனது.
சில மாதம் கழித்து, அவளின் நெருங்கிய தோழியை சந்தித்த  போது மட்டும் அதைப் பகிர்ந்து கொண்டாள். அந்தக் காலத்தில் லைன் வீடுகளில் வாடகைக்கு விடும்போது ஒரு சின்னக் குழந்தை இருப்பவர்களுக்கோ அல்லது புது மணத்தம்பதிகளுக்கோ தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அப்படி மீனாட்சியின் வீட்டுக்கு இரண்டு பக்கமும், புது மணத்தம்பதிகள். பொது சுவர் என்பதால் அவர்கள் சரசம் இவள் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது. இத்தனை காலம் அடக்கி இருந்த உணர்ச்சிகள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கவும் அவளால் தாங்க முடியவில்லை. தூக்கம் தொலைந்திருந்தது. அதனால் பகல் முழுவதும் பேயாய் உழைத்து, ராத்திரியில் அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டு தூங்கி விரகத்தை கட்டுப்படுத்த பழகிக் கொண்டாள்.


ஏண்டி, உன் தந்தையிடம் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லலாமிலே என்று தோழி கேட்டதற்கு, அப்பனிடம் எப்படி இதைக் கேட்க முடியும்? நான் குஷ்டரோகியா இருந்தாக் கூட பரவாயில்லை கட்டிக்கிடுவேண்டி. ஆனா, எங்கப்பா குஷ்டரோகியா இருந்தாலும் நம்ம ஆளுகளா இருக்கணும்பார். சொந்தம்னு இருக்கிற  அவரையும் விட்டுட்டு நான் என்ன செய்யுறது என்று விரக்தியுடன் பதிலளித்தாள்.

பின் ஒரு நாளில், ஹோட்டல்கள், வீடுகள் எல்லாம் மோட்டர் பம்ப்செட் புகுந்து, வேலை கிடைக்காத நேரத்தில், தன் தோழியாய் இருந்த ராணி மங்கம்மாள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இப்போதும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இறங்கி வடுக மேட்டுராசா பட்டி போய் தண்ணி மீனாட்சி கிணறு என்று கேட்டால், யாராவது வழி காட்டுவார்கள்.

July 27, 2013

சகலகலா வல்லவன் – சில நினைவுகள்

நான் நான்காவது படிக்கும் போது வந்த படம் இது. ஒரு சிறுவனின் மனதில் நீங்காமல் தங்கிவிட்ட திரைப்படத்தினைப் பற்றிய பதிவே இது.

ஒரு படத்தின் உண்மையான வெற்றி தெரிய நான்கு வாரங்கள் கூட ஆகிய காலம் அது. 40 பிரிண்ட் போடுவதெல்லாம் பெரிய விஷயமாக, பத்திரிக்கைகளில் துணுக்குச் செய்தியாக வரும். ஓல்ட் எம் ஆர் என்று அழைக்கப்பட்ட பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆறு அல்லது எட்டு பிரிண்ட்தான் வரும்.

படம் வெளியாகி 50 நாட்களுக்குள் எங்கள் ஊருக்கு வந்துவிட்டால், அது சுமாரான படம். 100 நாட்கள் கழித்து வந்தால் வெற்றிப்படம், 175 நாள் கழித்து வந்தால் தான் சில்வர் ஜூப்ளி.

ஆனால் எங்கள் ஊரில் அந்தந்த காலகட்டத்தில் இளவட்டமாக இருப்பவர்கள் மதுரைக்கோ திண்டுக்கலுக்கோ சென்று படம் பார்த்து விட்டு வந்து படத்தைப் பற்றி சொல்லிவிடுவார்கள். படம் எப்படா வருமென மற்றவர்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். சில படங்களை எதிர்பார்த்து பசலையே வந்திருக்கிறது.

எதிர் வீட்டு ஞானசெல்வம், கமலின் விசிறி. அவர் திண்டுக்கலுக்கு போய் படம் பார்த்து விட்டு அதை விவரித்த விதத்தில், உடனேயே படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எங்கள் தெருவுக்கே ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் என்விஜிபி திரையரங்கில் படம் திரையிடப்பட்டு இருந்தது. ஏழு பேர் உட்காரும் பேக் பெஞ்சில் பத்துப்பேருக்கு மேல் நெருக்கியடித்து உட்கார்ந்து படம் பார்த்தார்களாம். மதியக்காட்சிக்கு கதவை மூடமுடியாதபடி மக்கள் நின்று கொண்டு படம் பார்த்தார்களாம். மாலைக் காட்சிக்கு வெளியில் நின்ற வரிசையை போலிஸாலேயே கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

அவர் சொன்னதில் சகதி சண்டை, கம்பு சண்டை, கார் சேஸிங், நியூ இயர் பாட்டு இவைதான் அந்தப் பிராயத்தில் என்னை கவர்வதாய் இருந்தது,
மதுரையில் என் சித்தப்பா இருந்தார். சென்ட்ரல் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே சைக்கிள் பார்க் செய்து டோக்கன் வாங்குபவர்களுக்கு டிக்கட்டில் முதல் மரியாதை. அவரிடம் அடம் பிடித்து, தியேட்டருக்கு கூட்டிப் போய்விட்டேன். தியேட்டர் வாசலையே நெருங்க முடியாத அளவுக்கு கூட்டம். திரும்பி வந்து விட்டோம்.

பின் ஒரு திருமணத்துக்கு திண்டுக்கலுக்கு குடும்பத்தோடு சென்று இருந்தோம். மண்டபத்தில் ராத்தங்கல். அங்கு இருந்த உறவினர்களை தாஜா செய்து அந்த படத்துக்கு போன குழுவோடு இணைந்து கொண்டேன். அப்போது படம் வந்து 50 நாளாயிருக்கும். ஆனாலும் டிக்கட் கிடைக்கவில்லை.

வாழ்க்கையில் முதன் முதலில் சந்தித்த ஏமாற்றம் இதுதான் என நினைக்கிறேன். எனக்குத்தெரிந்தவர்கள் எல்லாம் படத்தைப் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்று சொல்ல என்னுள் ஆர்வம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

டீக்கடை ஸ்பீக்கர்கள், திருமண, சாமி கும்பிடு விழா ஒலிபெருக்கிகள் என எங்கும் சகலகலா வல்லவன் பாடல்கள் தான். பற்றாக்குறைக்கு சினிமாவைப் பற்றி தங்களுக்கு அதிகம் தெரியும் என பறைசாற்றிக்கொள்ளும் கல்லூரி மாணவர்கள் வேறு, நியூ இயர் சாங்குக்கு செட்டுக்கு ஒன்றரை லட்சம், கமல் அதில் ஆட ஒரு லட்சம் என்றெல்லாம், கிளப்பி விட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

ஒரு வழியாக பெட்டி, பெரியகுளம் அருளில் ஓடிவிட்டு, உசிலம்பட்டி மலையாண்டிக்கு வந்து விட்டது. அடுத்து வத்தலகுண்டு கோவிந்தசாமிக்குத்தான் என விவரமறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்திவிட்டன.

யோசித்துப் பார்த்தால், என்னுடைய திருமணத்துக்கு கூட அவ்வளவு எக்ஸைட்மெண்டுடன் காத்துக் கொண்டிருந்ததில்லை. வீட்டில் கூட அடுத்த வாரம் கோவிந்தசாமியில சகலகலா வல்லவன் வருதாம் என புலம்ப ஆரம்பித்து இருந்தேன்.

என்னுடைய தந்தை சாரதா, துலாபாரம், சுமைதாங்கி போன்ற படங்களையெல்லாம் பார்த்து விட்டு அழுதுகொண்டேதான் வீட்டுக்கு வருவாராம். அதனால் அவரும் என்னை இந்த விஷயங்களில் கண்டிக்க மாட்டார்.

அந்த நாள் மிக நெருங்கி விட்டது. நாளை முதல் நான்கு காட்சிகளாக, என குதிரை வண்டியில் வந்து தெருவெங்கும் அனவுன்ஸ் செய்துவிட்டுப் போனார்கள். ஊரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையெல்லாம் குழாமாகப் போய் பார்த்து விட்டு வந்தோம். எங்கு தட்டி வைப்பது என்று பார்ப்பதற்காக ஒரு தியேட்டர் விசிட் வேறு. கூட்டத்தைக் கட்டுப்படுத்த, வழக்கமான கவுண்டரின் நீளப் போதாது, என சவுக்குக் கட்டைகளைக் கொண்டு நீளமான கவுண்டர்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

சேட் ஆர்ட்ஸில் சொல்லி எங்கள் தெரு கமல் ரசிகர்கள் பெரிய தட்டி ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தார்கள். பழைய சைக்கிள் டயர்களின் இடையே கம்புகளை எக்ஸ் வடிவில் வைத்து, அதன்மீது பேப்பர் ஒட்டி தயாரிக்கப்படும் ரவுண்டு தட்டிகளும் ஏற்பாடாகிக் கொண்டிருந்தன. களைப்புத் தெரியாமல் மக்கள் வேலை செய்ய படுக்கை வசத்தில் இருக்கும் டெல்லி செட்டில் திரும்பத் திரும்ப சகலகலா வல்லவன் பாடல்கள்.

”படத்தைக் காண வரும் அன்பு உள்ளங்களை வருக வருக என வரவேற்கும் சிகப்பு ரோஜா கமல் ரசிகர் மன்றம்” என எழுதி வரிசையாக பெயர்களை எழுதிக் கொண்டே வந்தார்கள். ஞான செல்வம் அண்ணன் “இவன் பெயரையும் எழுதுங்க” என்று சொன்னார். நோபல் பரிசு பட்டியலில் என் பெயர் இருந்தால் கூட அவ்வளவு சந்தோஷம் வருமா என்று தெரியாது. அன்று வந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.  
அன்று எனக்கு கமல் ரசிகனாக வழங்கப்பட்ட ஞானஸ்நானம் இன்று வரை என்னை செலுத்திக் கொண்டேயிருக்கிறது. இண்டர்வியூவை விட இந்தியன் முக்கியம் என்று சொன்னது, தலை தீபாவளி அன்று காலை 5 மணிக்கு ஆளவந்தான் கியூவில் நிற்கச் சொன்னது, விஸ்வரூபத்துக்கு பார்டர் தாண்ட வைத்தது.

ஒருவழியாக படத்தைப் பார்த்துவிட்டேன். அதன்பின் சுமார் பத்து வருடங்களுக்கு எங்கள் ஏரியாவில் நடைபெற்ற கோவில் விழாக்களின் போது, சிறப்புத் திரைப்படமாக  சகலகலா வல்லவன் திரையிடப்பட்டுக்கொண்டேயிருந்தது. நானும் சளைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
படம் வெளியாகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளும் ஆங்கில புத்தாண்டு, இளமை இதோ இதோ பாடல் கேட்டுத்தான் விடிகிறது.

சிறு பத்திரிக்கையாளர்கள்/ இலக்கியவாதிகள்/ திரைப்பட ஆய்வாளர்கள் இந்தப் படம் தமிழ் சினிமா வளர்ச்சியில் ஏற்படுத்திய தடைக்கற்களைப் பற்றி புலம்பியே ஓய்ந்து விட்டார்கள்.

இப்போது இந்தப் படத்தை, இந்தத் தலைமுறையினர்  பார்த்தால், வி கே ராமசாமியின் காமெடி ரசிக்கும் படி இருக்கும். டைட்டில் பாட்டுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று விழிப்பார்கள். நல்ல மசாலா பேக்கேஜ் என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள்.


என்னுடைய ஒரே சந்தேகமெல்லாம், இப்படத்தில் வரும் நிலாக் காயுது பாடலில்தான். மிக பட்டவர்த்தனமாக உறவின் ஓசை இந்தப் பாடலில் வருகிறது. இதை எப்படி 30 ஆண்டுகளுக்கு முந்தைய சமூகம் ஏற்றுக்கொண்டது? இப்படத்தின் பாடல்களை வீட்டில் உள்ள எல்லோரும் வேறு சேர்ந்து கேட்பார்கள். பூக்கட்டும்/தீப்பெட்டி ஒட்டும்/ பல்பொடி பாக்கட் போடும் வீடுகளில் எல்லாம், டேப் ரிக்கார்டர் நடு நாயகமாக இருக்கும். சுற்றி அமர்ந்து வேலை செய்து கொண்டு இருப்பார்கள். கேசட்டில் நிலாக்காயுது பாடல், இரண்டு முறை வேறு வரும். எப்படி இதை ஏற்றுக் கொண்டார்கள்? என்பதே?.