November 30, 2012

சில அருமையான ஆண்ட்ராயிட் அப்ளிகேஷன்ஸ்

சில அருமையான ஆண்ட்ராயிட் அப்ளிகேஷன்ஸ்

அனுஷ்காய நம

இந்த அப்ளிகேஷன் தீவிர அனுஷ்கா வெறியரால் உருவாக்கப்பட்ட ஒன்று. நம்முடைய போட்டோ ஒன்றை இதில் அப்லோடு செய்துவிட்டால் போதும். நம் மொபைலில் அனுஷ்காவின் எந்தப் பாடலைப் பார்த்தாலும், ஹீரோவின் முகத்திற்குப் பதிலாக நம் முகத்தை அதில் சூப்பர் இம்போஸ் செய்து நம்மை கிளுகிளுக்க வைக்கும்

தங்கமணி டங் கட்

நம் மனைவியின் நம்பரை இந்த அப்ளிகேஷனில் கொடுத்து விட்டால் போது. அவர் எப்போது நமக்கு  போன் பண்ணினாலும் அம்சமான பெண் குரலில்

“நீங்க நல்லவரு,  வல்லவரு”
“உங்களை கல்யாணம் பண்ணினதால தான் நான் நல்லாயிருக்கேன்”
”உங்களுக்கு ஆயிரம் முத்தங்கள்”

என பேசி நமக்கு வரப்போகும் பிபியை குறைக்கும்

பேலன்ஸ் பிளாஸ்ட்

இந்த அப்ளிகேஷனில் நம்முடைய பேங்கில் இருந்து வரும் பணம் எடுத்த அலெர்டுகளின் நம்பரை கொடுத்துவிடவேண்டும்.

நாம் அதிகம் எடுத்தால், கிரெடிட் கார்டில் பொருள் வாங்கினால்

உடனே

“ஓட்டை டவுசரைப் போட்டுக்கிட்டு, இய்யப் பாத்திரத்துல கஞ்சி குடிச்ச உனக்கு இதெல்லாம் கேட்குதா?”

என வாய்ஸ் மெசெஜ் வந்து நம்மை குட்டும்

பிளஸ்ஸோமேனியா

இந்த அப்ளிகேசனில் நம் நண்பர்களின் கூகுள் பிளஸ், பேஸ்புக், ட்விட்டர், பிளாக் போன்றவற்றை உள்ளீடு செய்துவிட்டால் போதும்,

அவர்கள் பிளஸ் விட்டால் ஆட்டோமேட்டிக்காக +1 போட்டுவிடும்

பேஸ்புக்கில் லைக் செய்துவிடும்

ட்விட்டரில் ரீடிவிட் செய்துவிடும்

டெம்பிளேட் கமெண்டோ

இதில் ஃபிரண்ட்ஸ் பகுதியில் நம் நண்பர்களின் ஐடிக்களையும், எனிமீஸ் பகுதியில் பகைவர்களில் ஐடியையும், காமன் பகுதியில் மற்றவர்களின் ஐடியையும் கொடுத்துவிட்டால்

சூப்பர், அட்டகாசம்

மொக்கை, குப்பை

:-))

போன்ற கமெண்டுகளை முறையே போட்டு நம்மை லைவ்வாக வைத்திருக்கும்

தீனி தின்னி

இந்த அப்ளிகேஷன் +போன்றோரின் அருமுயற்சியால் உருவானது. இதில் உலகில் உள்ள எல்லா சாப்பாட்டு கடைகளின் விபரமும் துல்லியமாக இருக்கும். நம்முடைய மொபைலின் ஜிபிஎஸ்ஸில் இருந்து கிடைக்கும் தகவல்கள், மற்றும் நம் பேங்க் பேலன்ஸ், நேரம் இவற்றைப் பொருத்து அருகில் உள்ள ஆப்டான ஹோட்டல், அங்கு ஆர்டர் செய்யவேண்டிய அயிட்டம் இவற்றைக் கொடுக்கும்.

November 17, 2012

துப்பாக்கி விதைக்கும் நஞ்சு

நேற்று இரவு முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் பார்த்துவிட்டு நானும் என் 9 வயது மகனும் திரும்பிவந்து கொண்டிருந்தோம். அவன் என்னிடம் 

“ஏம்பா, இந்த முஸ்லிம் எல்லாமே  இந்தியாவை அழிக்கத்தான் இருக்காங்களா? என்று கேட்டான்.

படம் பார்க்கும் போதே நெருடலாக இருந்த விஷயம் அப்போது விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. 

இந்து, கிறிஸ்துவ, சீக்கிய மதங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் குடும்பத்தோடு, பாசமாக, சக மனிதர்களைப் பற்றி அக்கறையோடு இருப்பதாகவும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள் அதற்கு நேர் மாறாக இருப்பதாகவும் காட்சிகள் அமைக்கப்படுள்ளன.

சரி ஒரு வாதத்துக்காக ஆக்‌ஷன் மசாலா படம் என்று சொல்லலாம் என்றால்.

ஆக்‌ஷன் மசாலாவின் அடிப்படைத் தத்துவம் ஒரு கெட்டவன்  அல்லது கெட்டவன் ஆக்கப்பட்டவனை ஹீரோ எதிர்த்து நிற்பது. இல்லையென்றால் பேட்மேன் ஜோக்கர் மாதிரி கேரக்டர்களை எதிர்த்து ஹீரோ ஜெயிப்பது.

இங்கே காட்டப்படும் வில்லன் முதல் கேட்டகிரியாகவே காட்டப்படுகிறான். அவனை தனிமனிதனாக காட்டினால் கேள்வியே இல்லை. மதம் சார்ந்து காட்சிப்படுத்தும் போது அது முழுக்க முழுக்க தவறே.

மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது மதம் சார்ந்த அடையாளங்களை அணிந்து கொண்டும், மத வாசகங்களை பேசியும் செய்கிறார்கள்.

அப்படியென்றால் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று நேரடியாக சொல்லப்படுகிறது. மற்ற திரைப்படங்களில் சில முஸ்லிம்களை நல்லவர்களாகக் காட்டி எல்லோருமே கெட்டவர்கள் இல்லை என்று சொல்லியிருப்பார்கள். இங்கே அது மிஸ்ஸிங்.

எம்ஜியார், ரஜினியை 50 படங்களுக்கு அப்புறம் எந்த வித பில்ட் அப் காட்சிகளும் இல்லாமலேயே நல்லவராக ஏற்றுக் கொண்டதைப்போல

இங்கே முஸ்லிம்கள் எந்தவித ஜஸ்டிபிகேஷன் காட்சிகளும் இல்லாமலேயே கெட்டவர்களாக காட்டப்படுகிறாள். இது ஆபத்தான போக்கு.

நான் பார்க்கும் போது அருகே ஒரு முஸ்லிம் குடும்பமும் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.  சில காட்சிகளின் போது எழுந்த சப்தம் அவர்களை அங்கே சங்கடப்படுத்தியது.

தற்போதுஎன்னைப்போன்ற வயதில் உள்ளவர்கள் ஆக்‌ஷன் படத்திற்குப் போவதே சிறுவர்களின் பொழுதுபோக்கு/வற்புறுத்தல் காரணங்களுக்காத்தான்.  அவர்கள் இதற்கும் நிறைய அளவில் வந்திருந்தார்கள். எத்தனை சிறுவர்களின் மனதில் இந்த கேள்வி எழுந்ததோ?

படத்தில் டைட்டிலுக்கு முன் ”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” என்று போட்டார்கள். எவ்வளவு பேரை மனச் சித்திரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள் முருக தாசரே?
தாணு மலயமாமணிக்கும், சந்தோஷ சிவனுக்கும் கூட இது உறைக்காதது ஆச்சரியமே!

சென்சார் சர்டிபிகேட்டில் ஒரு முஸ்லிம் அன்பரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. பிரிவியூ தியேட்டர் ஏசியில் உறங்கியிருந்திருப்பார் போலும்.

படம் நல்ல லாஜிக்கோடு இருக்கிறது என்று வேறு சொன்னார்கள். பல இடங்களில் ஓட்டை இருக்கிறது.

அருகாமையில் வசிக்கும் முஸ்லிம் நண்பர்கள்/அன்பர்களிடம் மாற்று மத குழந்தைகள் தள்ளி இருக்கச் செய்யும்படி இருக்கிறது இந்தப் படம்.

November 05, 2012

பிரதாப் போத்தன்


சின்ன வயதில் தெரியவில்லை. இப்போது பிரதாப் போத்தனை நினைத்தால் சற்று பொறாமையாய்த்தான் இருக்கிறது.

சிவாஜி கணேசன், திலகன், கமல்ஹாசன், மோகன்லால்,சத்யராஜ்,கார்த்திக்,பிரகாஷ்ராஜ்  மற்றும் ரகுவரன் போன்ற அற்புதமான நடிகர்களை இயக்கியிருக்கிறார்.  

ஆரம்ப காலத்தில் இருந்தே விளம்பர உலகில் இருந்து, டெண்டுல்கர், லாரா போன்ற லெஜண்டுகளை இயக்கியவர்.

கவுண்டமணி, ஜனகராஜ், எஸ் எஸ் சந்திரன் போன்ற காமெடியர்களை இயக்கியவர்.

மகேந்திரன்,பாலு மகேந்திரா, பரதன், மணிரத்னம், செல்வராகவன்,பிளஸ்ஸி போன்ற திரை மொழி தெரிந்தவர்களிடமும், பாலசந்தர், விசு போன்ற நாடக மொழி தெரிந்தவர்களிடமும் மணிவண்ணன், கே எஸ் அதியமான், ராஜசேகர், சந்தான பாரதி, பி வாசு, விஷ்ணுவர்தன், சிங்கீதம் சீனிவாசராவ், பில்லா கிருஷ்ணமூர்த்தி போன்ற கமர்ஷியல் இயக்குநர்களிடமும் நடித்திருக்கிறார்.


கரையெல்லாம் செண்பகப்பூ போன்ற நாவல்கள் திரைப்படமாகும் போது கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சில்க் ஸ்மிதா, அமலா போன்ற  பேரழகிகளையும் ரஞ்சிதா, குஷ்பூ, கௌதமி,கஸ்தூரி போன்ற அழகிகளையும் லட்சுமி, ராதிகா போன்ற பெர்பார்மன்ஸ் ஆர்டிஸ்டுகளையும் இயக்கியிருக்கிறார்.


கேரளாவின் மிகப்பெரும் கோடீஸ்வரரின் பிள்ளையாகப் பிறந்த பிரதாப் தமிழ்சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையான எம் ஆர் ராதாவின் மருமகனும் ஆவார்.

பிரதாப் இயக்கிய படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான ஜெனரில் அமைந்தவை.

மீண்டும் ஒரு காதல் கதை மன நலம் குன்றிய இருவரின் காதல், அவர்களின் உறவு, கர்ப்பம், அதனால் உருவாகும் சிக்கல்கள்

ஜீவா ராணுவ சதி- அப்பாவியின் மீது பழி மீண்டு வருதல்
வெற்றி விழா காவல்துறையின் ரகசிய ஆப்பரேஷன் ஆப்பரேசன் மேற்கொண்டவருக்கு ஏற்படும் மறதி வெற்றி

மைடியர் மார்த்தாண்டன் அரச பரம்பரை வாரிசு சாமான்யமாக வாழ நினைத்தல் காதல்

மகுடம் கிராமிய கதை

ஆத்மா அமானுஷ்ய திரில்லர்

சீவலப்பேரி பாண்டி சூழ்நிலையால் குற்றவாளியாக்கப்பட்டவனின்  ஆட்டோபயோக்ராபி

லக்கி மேன் எமன் பிரம்மசுவடி பிழை -  காமெடி

தமிழில் இவர் இயக்கிய அனைத்துப் படங்களும் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்டவை.

இவற்றில்
மீண்டும் ஒரு காதல் கதை தேசிய விருதுக்கு போட்டியிட்டது

ஜீவா திரைப்படம் அக்கால மட்டுமல்ல எக்கால இளைஞர்களாலும் மறக்கப்படாமல் இருக்கும். சில்க் ஒரு மாடலாகவும், சத்யராஜ் போட்டோ கிராபராகவும் இருப்பார்கள். போட்டோ எடுக்கும் ஒரு பாடல் காட்சியில் திரையரங்கமே ஜொள்ளால் ஈரமாயிருக்கும். அந்த ஆண்டு வெளியான எல்லா சினிமா பத்திரிக்கைகளின் தீபாவளி ஸ்பெசலையும், நடுப்பக்கத்தையும் ஜீவா சில்க்கே ஆக்ரமித்திருந்தார். ஸ்பெஷல் போனஸாக அமலாவின் நீச்சலுடை தரிசனம்.

போர்ன் சூப்பர்மஸி நாவலின் பாதிப்பில் இயக்குநர் ஷண்முகசுந்தரம் எழுதிய கதையை வெற்றிவிழாவாக எடுத்தார். அபூர்வ சகோதரர்களின் பெரு வெற்றிக்குப் பின் வந்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படம். இந்தப் படத்தில் போலிச்சாமியாரை (ஜனகராஜ்) ஒரு சூப்பர் பவராக காமித்திருப்பார். அது இப்போது வெகு உண்மையாக மாறிவிட்டது.

கோயிங் டு அமெரிக்கா பட்டி டிங்கரிங் பார்த்து பிரதாப் இயக்கிய மைடியர் மார்த்தாண்டன் ஒரு கலகல காமெடி காதல் பிலிம். குஷ்பூவை தமிழில் வெகு கிளாமராக காட்டியபடம். தத்துவம் எண் 10001, ஏழைகள் போன்ற இன்னும் மறக்க முடியாத காமெடிகள் கொண்ட படம்.

விகடனில் தொடராக வந்து, ராஜேஸ்வரின் திரைக்கதை வசனத்தில் பிரதாப் இயக்கிய சீவலப்பேரி பாண்டி நெப்போலியனுக்கு கதாநாயக அந்தஸ்து கொடுத்த படம்.  

பிரதாப் இயக்கத்தில் சோடை போன படம் என்றால் அது மகுடம் தான். ஆத்மா, லக்கிமேன் போன்றவை வெற்றி பெறவில்லையென்றாலும் பார்க்க போரடிக்காது.

மலையாளத்திலும் இவர் திலகனை வைத்து இயக்கிய ரிதுபேதம், லட்சுமியை வைத்து இயக்கிய டெய்ஸி, சிவாஜி, மோகன்லாலை வைத்து இயக்கிய யாத்ரா மொழி என எல்லாமே வித்தியாச களங்கள்தான்.

பெரும்பாலும் மற்ற இயக்குநர்களின் படங்களில் அப்பவித்தனமான குடும்பஸ்தன், மைல்ட் சைக்கோ போன்ற கேரக்டர்களில் நடித்தாலும் இயக்கத்தில் புத்திசாலி. மலையாளி என்பதால் நல்ல தமிழ் கதை வசனகர்த்தாக்களிடம் தேவையானதைப் பெற்று போரடிக்காத படங்கள் கொடுத்தவர். தன் பட நாயகிகளை அழகாகக் காண்பிக்கும் கலைக்கண்ணும் உண்டு.

1980ல் தொடங்கி தற்போது மலையாளத்தில் ஹிட்டான 22 பீமேல் கோட்டயம் வரை நல்ல படங்களில், நல்ல இயக்குநர்களிடம் நடித்துக் கொண்டிருக்கும் பிரதாப் மேல் ஏன் பொறாமை கொள்ளக்கூடாது?