July 27, 2013

சகலகலா வல்லவன் – சில நினைவுகள்

நான் நான்காவது படிக்கும் போது வந்த படம் இது. ஒரு சிறுவனின் மனதில் நீங்காமல் தங்கிவிட்ட திரைப்படத்தினைப் பற்றிய பதிவே இது.

ஒரு படத்தின் உண்மையான வெற்றி தெரிய நான்கு வாரங்கள் கூட ஆகிய காலம் அது. 40 பிரிண்ட் போடுவதெல்லாம் பெரிய விஷயமாக, பத்திரிக்கைகளில் துணுக்குச் செய்தியாக வரும். ஓல்ட் எம் ஆர் என்று அழைக்கப்பட்ட பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆறு அல்லது எட்டு பிரிண்ட்தான் வரும்.

படம் வெளியாகி 50 நாட்களுக்குள் எங்கள் ஊருக்கு வந்துவிட்டால், அது சுமாரான படம். 100 நாட்கள் கழித்து வந்தால் வெற்றிப்படம், 175 நாள் கழித்து வந்தால் தான் சில்வர் ஜூப்ளி.

ஆனால் எங்கள் ஊரில் அந்தந்த காலகட்டத்தில் இளவட்டமாக இருப்பவர்கள் மதுரைக்கோ திண்டுக்கலுக்கோ சென்று படம் பார்த்து விட்டு வந்து படத்தைப் பற்றி சொல்லிவிடுவார்கள். படம் எப்படா வருமென மற்றவர்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். சில படங்களை எதிர்பார்த்து பசலையே வந்திருக்கிறது.

எதிர் வீட்டு ஞானசெல்வம், கமலின் விசிறி. அவர் திண்டுக்கலுக்கு போய் படம் பார்த்து விட்டு அதை விவரித்த விதத்தில், உடனேயே படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எங்கள் தெருவுக்கே ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் என்விஜிபி திரையரங்கில் படம் திரையிடப்பட்டு இருந்தது. ஏழு பேர் உட்காரும் பேக் பெஞ்சில் பத்துப்பேருக்கு மேல் நெருக்கியடித்து உட்கார்ந்து படம் பார்த்தார்களாம். மதியக்காட்சிக்கு கதவை மூடமுடியாதபடி மக்கள் நின்று கொண்டு படம் பார்த்தார்களாம். மாலைக் காட்சிக்கு வெளியில் நின்ற வரிசையை போலிஸாலேயே கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

அவர் சொன்னதில் சகதி சண்டை, கம்பு சண்டை, கார் சேஸிங், நியூ இயர் பாட்டு இவைதான் அந்தப் பிராயத்தில் என்னை கவர்வதாய் இருந்தது,
மதுரையில் என் சித்தப்பா இருந்தார். சென்ட்ரல் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே சைக்கிள் பார்க் செய்து டோக்கன் வாங்குபவர்களுக்கு டிக்கட்டில் முதல் மரியாதை. அவரிடம் அடம் பிடித்து, தியேட்டருக்கு கூட்டிப் போய்விட்டேன். தியேட்டர் வாசலையே நெருங்க முடியாத அளவுக்கு கூட்டம். திரும்பி வந்து விட்டோம்.

பின் ஒரு திருமணத்துக்கு திண்டுக்கலுக்கு குடும்பத்தோடு சென்று இருந்தோம். மண்டபத்தில் ராத்தங்கல். அங்கு இருந்த உறவினர்களை தாஜா செய்து அந்த படத்துக்கு போன குழுவோடு இணைந்து கொண்டேன். அப்போது படம் வந்து 50 நாளாயிருக்கும். ஆனாலும் டிக்கட் கிடைக்கவில்லை.

வாழ்க்கையில் முதன் முதலில் சந்தித்த ஏமாற்றம் இதுதான் என நினைக்கிறேன். எனக்குத்தெரிந்தவர்கள் எல்லாம் படத்தைப் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்று சொல்ல என்னுள் ஆர்வம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

டீக்கடை ஸ்பீக்கர்கள், திருமண, சாமி கும்பிடு விழா ஒலிபெருக்கிகள் என எங்கும் சகலகலா வல்லவன் பாடல்கள் தான். பற்றாக்குறைக்கு சினிமாவைப் பற்றி தங்களுக்கு அதிகம் தெரியும் என பறைசாற்றிக்கொள்ளும் கல்லூரி மாணவர்கள் வேறு, நியூ இயர் சாங்குக்கு செட்டுக்கு ஒன்றரை லட்சம், கமல் அதில் ஆட ஒரு லட்சம் என்றெல்லாம், கிளப்பி விட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

ஒரு வழியாக பெட்டி, பெரியகுளம் அருளில் ஓடிவிட்டு, உசிலம்பட்டி மலையாண்டிக்கு வந்து விட்டது. அடுத்து வத்தலகுண்டு கோவிந்தசாமிக்குத்தான் என விவரமறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்திவிட்டன.

யோசித்துப் பார்த்தால், என்னுடைய திருமணத்துக்கு கூட அவ்வளவு எக்ஸைட்மெண்டுடன் காத்துக் கொண்டிருந்ததில்லை. வீட்டில் கூட அடுத்த வாரம் கோவிந்தசாமியில சகலகலா வல்லவன் வருதாம் என புலம்ப ஆரம்பித்து இருந்தேன்.

என்னுடைய தந்தை சாரதா, துலாபாரம், சுமைதாங்கி போன்ற படங்களையெல்லாம் பார்த்து விட்டு அழுதுகொண்டேதான் வீட்டுக்கு வருவாராம். அதனால் அவரும் என்னை இந்த விஷயங்களில் கண்டிக்க மாட்டார்.

அந்த நாள் மிக நெருங்கி விட்டது. நாளை முதல் நான்கு காட்சிகளாக, என குதிரை வண்டியில் வந்து தெருவெங்கும் அனவுன்ஸ் செய்துவிட்டுப் போனார்கள். ஊரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையெல்லாம் குழாமாகப் போய் பார்த்து விட்டு வந்தோம். எங்கு தட்டி வைப்பது என்று பார்ப்பதற்காக ஒரு தியேட்டர் விசிட் வேறு. கூட்டத்தைக் கட்டுப்படுத்த, வழக்கமான கவுண்டரின் நீளப் போதாது, என சவுக்குக் கட்டைகளைக் கொண்டு நீளமான கவுண்டர்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

சேட் ஆர்ட்ஸில் சொல்லி எங்கள் தெரு கமல் ரசிகர்கள் பெரிய தட்டி ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தார்கள். பழைய சைக்கிள் டயர்களின் இடையே கம்புகளை எக்ஸ் வடிவில் வைத்து, அதன்மீது பேப்பர் ஒட்டி தயாரிக்கப்படும் ரவுண்டு தட்டிகளும் ஏற்பாடாகிக் கொண்டிருந்தன. களைப்புத் தெரியாமல் மக்கள் வேலை செய்ய படுக்கை வசத்தில் இருக்கும் டெல்லி செட்டில் திரும்பத் திரும்ப சகலகலா வல்லவன் பாடல்கள்.

”படத்தைக் காண வரும் அன்பு உள்ளங்களை வருக வருக என வரவேற்கும் சிகப்பு ரோஜா கமல் ரசிகர் மன்றம்” என எழுதி வரிசையாக பெயர்களை எழுதிக் கொண்டே வந்தார்கள். ஞான செல்வம் அண்ணன் “இவன் பெயரையும் எழுதுங்க” என்று சொன்னார். நோபல் பரிசு பட்டியலில் என் பெயர் இருந்தால் கூட அவ்வளவு சந்தோஷம் வருமா என்று தெரியாது. அன்று வந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.  
அன்று எனக்கு கமல் ரசிகனாக வழங்கப்பட்ட ஞானஸ்நானம் இன்று வரை என்னை செலுத்திக் கொண்டேயிருக்கிறது. இண்டர்வியூவை விட இந்தியன் முக்கியம் என்று சொன்னது, தலை தீபாவளி அன்று காலை 5 மணிக்கு ஆளவந்தான் கியூவில் நிற்கச் சொன்னது, விஸ்வரூபத்துக்கு பார்டர் தாண்ட வைத்தது.

ஒருவழியாக படத்தைப் பார்த்துவிட்டேன். அதன்பின் சுமார் பத்து வருடங்களுக்கு எங்கள் ஏரியாவில் நடைபெற்ற கோவில் விழாக்களின் போது, சிறப்புத் திரைப்படமாக  சகலகலா வல்லவன் திரையிடப்பட்டுக்கொண்டேயிருந்தது. நானும் சளைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
படம் வெளியாகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளும் ஆங்கில புத்தாண்டு, இளமை இதோ இதோ பாடல் கேட்டுத்தான் விடிகிறது.

சிறு பத்திரிக்கையாளர்கள்/ இலக்கியவாதிகள்/ திரைப்பட ஆய்வாளர்கள் இந்தப் படம் தமிழ் சினிமா வளர்ச்சியில் ஏற்படுத்திய தடைக்கற்களைப் பற்றி புலம்பியே ஓய்ந்து விட்டார்கள்.

இப்போது இந்தப் படத்தை, இந்தத் தலைமுறையினர்  பார்த்தால், வி கே ராமசாமியின் காமெடி ரசிக்கும் படி இருக்கும். டைட்டில் பாட்டுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று விழிப்பார்கள். நல்ல மசாலா பேக்கேஜ் என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள்.


என்னுடைய ஒரே சந்தேகமெல்லாம், இப்படத்தில் வரும் நிலாக் காயுது பாடலில்தான். மிக பட்டவர்த்தனமாக உறவின் ஓசை இந்தப் பாடலில் வருகிறது. இதை எப்படி 30 ஆண்டுகளுக்கு முந்தைய சமூகம் ஏற்றுக்கொண்டது? இப்படத்தின் பாடல்களை வீட்டில் உள்ள எல்லோரும் வேறு சேர்ந்து கேட்பார்கள். பூக்கட்டும்/தீப்பெட்டி ஒட்டும்/ பல்பொடி பாக்கட் போடும் வீடுகளில் எல்லாம், டேப் ரிக்கார்டர் நடு நாயகமாக இருக்கும். சுற்றி அமர்ந்து வேலை செய்து கொண்டு இருப்பார்கள். கேசட்டில் நிலாக்காயுது பாடல், இரண்டு முறை வேறு வரும். எப்படி இதை ஏற்றுக் கொண்டார்கள்? என்பதே?.