January 15, 2017

அங்கீகாரம்

திங்கட் கிழமை காலை வேளையில் முடி திருத்தம் செய்யப் போவது

தீபாவளி, பொங்கலுக்கு புதுப் படங்கள் வெளியாவதற்கு முதல் நாள் திரையிடப்பட்டிருக்கும் ஓடித் தேய்ந்த படத்தை மதியக் காட்சி பார்ப்பது

பரபரப்பான உணவகம், தேநீர் விடுதி தவிர்த்து, அதன் அருகேயிருக்கும் ஆளரவமில்லா கடையைத் தேர்ந்தெடுப்பது

உறவிலும் நட்பிலும் பெரிய முக்கியத்துவம் பெறாதவர் விசேஷங்களுக்கு முன்னரே செல்வது
கைராசியான மருத்துவரை தவிர்ப்பது

அமாவாசை, செவ்வாய்கிழமைகளில் அசைவம் வாங்கச் செல்வது

என நீளும் என் பழக்கங்கள்

யோசித்துப் பார்த்தால் ஊரில் சிறு வயதில் எல்லோரும் விரும்பிக் குளிக்கும் படித்துறையை விட்டு ஆழமில்லா, நீர் போக்கும் குறைவான ஆற்றுக்கரையிலேயே குளித்திருக்கிறேன்.

யாரும் விரும்பிச் சேராத டியூசனில் சேர்ந்திருக்கிறேன்

அந்த வரிசையில் இப்போது ஞாயிறு அன்று பணிக்குச் செல்வதும் சேர்ந்து விட்டது

ஞாயிறன்று பணிக்கு வருபவரின் மீது எந்த மேலாளரும் கடுஞ்சொற்களை பிரயோகிப்பதில்லை

வார நாட்களில் பயமுறுத்தும் எந்த கோப்பும் ஞாயிற்றுக்கிழமைகளில் மென்மையாகவே நடந்து கொள்கிறது

குறைவாகச் சமைப்பதால் நன்றாகச் சமைக்கும் அலுவலக உணவகத்தின் சமையல்காரர் வாஞ்சையுடன் பரிமாறுவார். யாரிடமும் பகிரமுடியாமல் இருப்பவற்றை இறக்கி வைப்பார்.

மற்ற நாட்களில் எடுக்கவே அச்சமூட்டும் அலுவலகத் தொலைபேசி கூட கனிவாகவே பேசுகிறது

நேரடிப் போட்டியில் இந்த இடங்களிலெல்லாம் உனக்கு அங்கீகாரம் கிடைக்காது என்பதால்தானே இந்த பழக்கமெல்லாம்? என புத்தி கேட்கிறது

அங்கீகாரம் வேண்டா மனது மனிதனின் மனதல்லவே என பதிலளிக்கிறது மனது