July 14, 2009

நாகராஜன் சந்து

எங்கள் ஊர்ப்பகுதிகளில் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. வேறொன்றுமில்லை.ஊரின் பெயரைச் சுருக்கி வாடகை சைக்கிள் செயின் கார்ட்,கடை விளம்பரப் பலகை மற்றும் திருவிழா போஸ்டர்களில் எழுதுவது. வத்தலக்குண்டு என்னும் பெயரை வதிலை என்றும், கெங்குவார்பட்டியை கெங்கை, தும்மலப் பட்டியை துமிலை என்றும் சுருக்குவார்கள். அதில் தப்பொன்றும் இல்லை. சுருக்கத்துக்குப் பின்னால் மாநகர் என்னும் அடை மொழியைச் சேர்ப்பார்கள். அதைப் பார்க்கும் போதுதான் வயிறெறியும். 200 வீடுகள் இருக்கும் தும்மலப்பட்டியை துமிலை மாநகர் என்று சொன்னால் வேறு எப்படி இருக்கும்?

அப்படியொரு பெயரைப் பெற்ற வதிலை மாநகரில் எதற்கு குறைவிருக்கிறதோ இல்லையோ ருசியான சாப்பாட்டுக்கு மட்டும் குறைவிருக்காது. ஆறு, ஏரி ஏன் கடலே வத்தினாலும் வத்தாதது வதிலை மாநகர மாந்தரின் வயிறு.

காலை ஐந்துமணிக்கு குழந்தைகளுக்காக ஆரம்பிக்கும் பனியார,ஆப்பக்கடைகள் ஏழு மணியளவில் இட்லி தோசைக் கடையாக பரிணாம வளர்ச்சி அடையும். காலை பத்துமணிக்கு அங்கே இனிப்பு சிய்யம்,வெங்காய போண்டா போட ஆரம்பிப்பார்கள். 12 மணியளவில் மசால் வடையும், உளுந்த வடையும்.

ரன் ரேட் எப்படியிருந்தாலும் நாலைந்து ஓவரில் மேக்கப் செய்துவிடும் அதிரடி பேட்ஸ்மெனைப் போன்றவை இந்த வடைகள். ஆம் எவ்வளவு மட்டமான சாம்பார்,ரசத்தையும் ருசியாக்கி விடும் வல்லமை இவைகளுக்கு உண்டு. மாலை மூன்று மணிக்கு அவல் கேசரியும், தவளை வடையும் தங்கள் இன்னிங்சை ஆரம்பிக்கும்.

நடைபாதைக் கடைகளே இப்படியென்றால் நளனே வந்து ரெசிப்பி கேட்கும்படி சுவையாக இருக்கும் வதிலை மாநகர ஹோட்டல் அயிட்டங்கள். கறி வாங்கி சமைப்பது அவர்களுக்கு ஆகாது. தங்கள் டேஸ்டுக்கேற்ப ஆடுகளை வளர்த்து வெட்டிச் சமைப்பார்கள் அங்கே. ஒருவர் அகத்திக்கீரையை மட்டுமே போட்டு ஆட்டை வளர்ப்பார். இன்னொருத்தவர் ஆட்டுத்தீவனமே வீட்டில் தயார் செய்வார்.

காலை ஐந்து மணிக்கு ஆட்டை வெட்டியதும் ஸ்பெசலாக ரத்தப் பொறியலும், வெங்காய குடல் கறியும் தயாராகும். அதை வாங்க வரிசையில் நிற்பவர்கள் வீட்டிற்கு பெரும்பாலும் மாப்பிள்ளை வந்திருப்பார். இரவு ஏழு மணிக்கு தயாராகும் புரோட்டாக்கள். விண்டவர் கண்டிலர் என்னும் கம்பராமாயணப் பாட்டிற்கு அர்த்தம் வேண்டுபவர்கள் சாப்பிடுவோரின் இலைகளைப் பார்க்கலாம். இந்தக் கடைகளில் மாவு இரவு மூன்று மணி வரை இருக்கும்.

இரவு மூன்று மணிக்கும் காலை ஐந்து மணிக்கும் இடையே  பசியெடுத்தால் என்ன செய்வது? இருக்கவே இருக்கின்றன. காளியம்மன் கோயில் பகுதி டீக்கடைகள். பால் பன்,அச்சு பன்,தேங்காய் பன்னில் இருந்து செவ்வாழை,பச்சை,புள்ளி,கற்பூர,நாட்டு வாழை வரை சூடான டீயுடன் கிடைக்கும்.

இவ்வளவு சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் ஊரில் ஒரு டாய்லெட் கூட இல்லை என்றால் எப்படியிருக்கும்? ஆம். அதிர்ஷ்டவசமாக பெண்களுக்கு மட்டும் சில பொதுக்கழிவறைகள் இருந்தன. பாதாள சாக்கடைத் திட்டம் போன்ற எதுவுமில்லாத ஊரில் ஆண்கள் எங்கே தங்கள் கடன்களை கழிப்பது?

மூன்று வயதுவரை அந்த வைபவம் வீட்டிலேயே நடந்துவிடும். பக்குவமாக பார்சல் செய்யப்பட்டு வீதியில் டிஸ்போஸ் செய்யப்படும். அதனால் நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் அங்கே வேலைக்காகாது. மூன்று வயதுக்கு மேல் தெரு ஓரத்தில் குப்பைத் தொட்டிக்கு அருகில் அந்த சடங்கு நிறைவேற்றப்படும். அந்தப் பையனுக்கு வெட்கம் வரும் வரையிலோ அல்லது பார்ப்பவர்களுக்கு எரிச்சல் வரும் வரையிலோ அந்த இடம்தான்.

அடுத்தகட்ட பிர மோசன் நாகராஜன் சந்து என ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட நரகல் சந்து. நூறு நூற்றி இருபது மீட்டர் நீளத்தில் வளைந்து நெளிந்து இருக்கும் அந்த சந்தில் காலைக் கடன்களை கழிக்க பஞ்சாயத்து அனுமதி இருந்தது. நாம் போகும்போது யாராவது உட்கார்ந்திருந்தால் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து விடக்கூடாது. எவ்வளவு தூரம் தள்ளிப் போக முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளிப் போய்விட வேண்டும். அடுத்து வருபவன் இருவருக்கும் இடைப்பட்ட இடத்தில் உட்கார வேண்டும். இது அங்கே
உள்ள ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்.

பின் சுத்தம் செய்வதற்கு சந்தின் கடைசியில் இருக்கும் மழை நீர் தேங்கும் பள்ளத்துக்கு செல்ல வேண்டும். அங்கே தேங்காய் மூடி, பாதி உடைந்த பிளாஸ்டிக் மக், ஓட்டையிருக்கும் தகர ஆயில் டின் ஆகியவை இருக்கும். அவற்றில் நீர் வாரி வேலையை முடித்துக் கொள்ள வேண்டும். நேரடியாக பள்ளத்தில் இறங்கி விடக்கூடாது என்பது அக்ரிமெண்டின் உப சரத்து.

இதற்கடுத்த புர மோசனும் உண்டு. மூன்று கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் சுடுகாடு. பத்துவயதில் என்னுடைய கனவே, சைக்கிள் எடுத்துச் சென்று சுடுகாட்டில் காலைக் கடன் முடிக்க வேண்டும் என்பதே. கழுவுவதற்கு வசதியாக பம்ப்செட் தண்ணீர் அங்கே இருப்பது கூடுதல் வசதி.அந்தக் கனவு கைகூடும் முன்னரே நாங்கள் வேறு ஊருக்கு இடம்பெயர நேரிட்டது.

அங்கே துயரத்தின் உச்சமாக வீடுகள் எடுப்பு கக்கூஸுடன் இருந்தன. அதனாலேயே அந்த வீடு எனக்கு அன்னியமாகவே இருந்தது. இரண்டு மூன்று நாட்களில் நண்பர்கள் கிடைக்க, அந்த ஊர் நாகராஜன் சந்து அறிமுகமானது. அன்னியமான கூட்டுக்குடும்ப வீட்டில் கட்டிக்கொடுக்கப் பட்ட பெண், அங்கே வளைய வர எவ்வளவு கூச்சப்படுவாளோ, அதற்கு நிகரானது இந்த மாதிரி புது இடங்களில் புழங்குவதும். நான்கு நாட்களில் அந்த சந்திற்கான ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் பிடிபட்டுவிட ரிலாக்ஸானது காலைகள்.

பதினெட்டு வயதில் இந்தப் பிரச்சினை ஓய்ந்தது. கல்லூரி விடுதிக் கழிவறைகள் ஓரளவு வசதியாகவே இருந்தன. அந்தக் கதவில் கிறுக்கப்படும் கிசுகிசுக்கள், ஒன்லைனர்கள் கூடுதல் சுவராசியம்.

மூன்று ஆண்டுதான் நீடித்தது அந்த சுகம். பின் வேலைக்காக சென்னை மேன்ஷன். அப்பா எவ்வளவு சொல்லியும் ஐந்து மணிக்கு எந்திரிக்காத என்னை திருத்தியவை மேன்சன் கழிவறைகளே. பந்திக்கு கூட முந்தக்கூடாது, இதற்கு முந்துவது தான் அவசியம் என உணர்த்தியது அதன் சுத்தம். குடிக்கக் கூட மினரல் வாட்டர் உபயோக்கிக்காத நான், ஒரு முறை தண்ணீர் தீர்ந்ததால், கழுவ அதை வாங்கியது வாழ்க்கையின் நகைமுரண்.

இப்போது பரவாயில்லை, புறநகரில் தனி வீட்டில் வாடகைக்கு இருக்கிறேன். அதை விட முக்கியம் தனிக் கழிவறை.

சென்ற வாரம் அப்பா வந்திருந்தார். கிளம்பும் போது, பெண் பார்க்கப் போகிறோம். ஏதாவது அபிப்ராயம் இருந்தால் சொல் என்றார்.

”பொண்ணு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அந்த வீட்டில கக்கூஸ் கொஞ்சம் தனியா இருக்கணும் அவ்வளவு தான்” என்ற என்னை வித்தியாசமாகப் பார்த்தபடியே கிளம்பினார் என் அப்பா.

July 12, 2009

மோகன்லால் பிரியதர்ஷன் ஐபிஎல் டீம் ஆலோசனை

ஐபிஎல், டீம்களின் எண்ணிக்கையை உயர்த்தப் போவதாக வந்த செய்திகளை அடுத்து, மோகன்லாலும் பிரியதர்ஷனும் இணைந்து கேரளா டீமை ஏலத்தில் எடுக்கப் போவதாக செய்திகள்.

அவர்கள் தங்கள் மானேஜர்களுடனும் கிரிக்கெட் வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்த படகு வீட்டில் கூடுகிறார்கள்.

லால் : டீம் பேரு நம்ம பாரம்பரியத்தைக் காட்டுறமாதிரி இருக்கணும்

தர்ஷன் : சித்திரைத் திருநாள், சுவாதித் திருநாள் மகராஜாக்களை நினைவு படுத்துற மாதிரி கேரளா மகராஜ்ஸ்ன்னு பேர் வைக்கலாமா?

வல்லுநர் : சார், ஏற்கனவே ராயல்ஸ்,கிங்ஸ்ன்னு நாலு டீம் இருக்கு

லால் : அப்போ கேரளா சிப்ஸ் லெவன், கேரளா நேந்திரம்ஸ், கேரளா புட்டூஸ்னு ...

வல்லுநர் : சார், நாம என்ன ஹோட்டலா ஆரம்பிக்கப் போறோம்?


மானே 1 : சேட்டா, நம்ம டீமுக்கு கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ்னு பேர் வைப்போம். நாம தோத்தாலும் பத்திரிக்கை, டிவி எல்லாம் கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ் கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ்னு சொல்லுவாங்க.

லால் : எந்தா, ஈ ஆளுக்கு ரெண்டு இன்கிரிமெண்ட் சேர்த்துப்போடு

மானே 2 : சென்னை டீமுக்கு சிவமணின்னு ஒருத்தர் எங்க போனாலும் டிரம்ஸ் வாசிச்சு சப்போர்ட் பண்ணுறாரு.

தர்ஷன் : நாம பதினெட்டு பேரை பட்டு வேட்டி, துண்டு, கொண்டையோட செண்டை மேளம் வாசிக்க வச்சுருவோம். ஸ்டேடியமே அதிர்ந்துடும்.

மானே 1 : சியர்ஸ் லீடர்னு எல்லா டீமிலயும் டான்ஸர்ஸ் வச்சுருக்காங்க

லால் : ஆழப்புழா போட் ரேசில, ஓட்டுட்டி வர்றவங்கள துண்டைச் சுத்தி சியர்ஸ் பண்ணுவாங்களே, அந்த ஆளுங்கள நாம இறக்கிடுவோம்.

மானே 2 : அப்படியே கடலினக்கப் போறேரே கரையினக்கப் போறோரே பாட்டை ரீமிக்ஸ் பண்ணி

பேட் பிடிக்கப் போறோரே

பந்து வீசப் போறோரே

போய் வரும் போது என்ன கொண்டு வரும்?

போர் சிக்ஸ் அடிச்சு வரும்

விக்கட் எல்லாம் கொண்டு வரும்னு

தீம் சாங்கும் ரெடி பண்ணீருவோம்.

மானே 1 : பெங்களூருக்கு கத்ரினா மாதிரி நமக்கு ஒரு பிராண்ட் அம்பாசட்டர் வேணுமே

லால் : மத்த ஸ்டேட்டெல்லாம் அம்பாசடர் கடன் வாங்கணும். நம்ம ஸ்டேட்ல தடுக்கி விழுந்தா தேவதைகள். மீரா ஜாஸ்மின்ல ஆரம்பிச்சு நயன்,அசின், பாவனான்னு. யாரை செலக்ட் பண்ணுறதுகிறதுதான் கஷ்டம்.
வல்லுநர் : சார், நாம என்ன படமா எடுக்கப் போறோம்? டைட்டில், மியூசிக், ஹீரோயின்னு பேசிக்கிட்டே இருக்கீங்க. எந்த எந்த பிளேயர எடுக்கிறது? அவங்களுக்கு என்ன பட்ஜெட்? அப்படிங்கிறத சொல்லுங்க சார்.

லால் : இங்க எப்பவுமே லோ பட்ஜெட்தான்.

வல்லுநர் : பாரின் பிளேயர்ஸ்ஸ எடுக்கணும்னா கோடிக் கணக்குல செலவாகுமே?

தர்ஷன் : நாங்க, மத்த இடங்கள்ள கோடிக் கணக்குல வாங்குறவங்களுக்கு லட்சத்துலதான் சம்பளம் கொடுக்குறது வழக்கம்.

லால் : ஏன் பாரின் பிளேயர்ஸ்க்கு போறீங்க. இந்தியன் பிளேயர்ஸ்?

வல்லுநர் : ஏழுபேர் டீமில வேணும் அது இதுன்னு பல ரூல்ஸ் இருக்கிறதால இந்தியன் பிளேயர்ஸ்க்கு தான் ரேட் இன்னும் அதிகம். வாசிம் ஜாஃபர்னு ஒருத்தர், அவரு ஒன் டேக்கே லாயக்கிலேன்னாங்க. அவரவே எவ்வளவு காசு கொடுத்து எடுத்திருக்காங்கன்னு தெரியுமா?

லால் : கேரளா பிளேயர் யாரு இருக்குறாங்க?


வல்லுநர் : ஸ்ரீசாந்த்துன்னு ஒருத்தர் இருக்காரு. அவரயும் பஞ்சாப் டீமில பிரீத்தி எடுத்திருக்காங்க.

தர்ஷன் : பிரீத்தி கிட்ட நான் பேசுறேன். எவ்வளவுக்கு அவர எடுத்தாங்களோ அத கொடுத்து அவர வாங்கிடுவோம். மானேஜர் ஒரு பேக்ஸ் அனுப்பிடுங்க.

வல்லுநர் : அப்போ மீத ஆட்களெல்லாம்?

லால் : இந்த ஸ்டேட்ல கிரிக்கெட் தெரிங்சவங்களே இல்லையா?

மானே 1 : சேட்டா, ஸ்டார் கிரிக்கெட் நடக்கும்போது கூட தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் தான் நடக்கும். அந்த அளவுக்கு நம்ம ஸ்டேட் கிரிக்கெட்ல வீக்.

தர்ஷன் : கவலைய விடுங்க. கலாபவன்னு ஆரம்பிச்சு நடிக்க கத்துக் கொடுக்குறமாதிரி கிரிக்கெட் பவன்னு ஒன்னு ஆரம்பிச்சுக்கிடலாம்.

வல்லுநர் : அப்படி புது ஆளுகளா சேர்த்துக்கிட்டா நல்ல கோச் இருந்தாத்தான் வின் பண்ண முடியும்.

லால் : அது எப்படி?

வல்லுநர் : உங்க பாணிலயே சொல்லுறேன். ஸ்டார் இல்லாம, செலவு பண்ணாம ஸ்க்ரிப்ட வச்சு ஜெயிக்கிறீங்கள்ளயா? அதுமாதிரி யாரு எப்போ இறங்கணும், யாருக்கு யாரு பவுல் பண்ணனும், எங்கே பீல்டிங் நிக்கணும்னு ஸ்கிரிப்ட் எழுதுறவங்க தான் கோச். அதுமாதிரி நல்ல பாரின் கோச் வேணும்.

தர்ஷன் : ஓகே. கொஞ்சம் விலை மலிவான கோச்சா பாருங்க.

வல்லுநர் : ஏற்கனவே நல்ல கோச்சை எல்லாம் மத்தவங்க வளைச்சுப் போட்டுட்டாங்க. ஜான் புக்கானன், கிரேக் சேப்பல்னு ரெண்டு பேர் இருக்காங்க. ஆனா அவங்க எல்லாம் பயங்கரமா பாலிடிக்ஸ் பண்ணுறவங்க.

லால் : சார், ஒண்ணு தெரியுமா, எல்லா நாட்டுக்கான தூதர்களும் எங்க ஆளுங்க தான். ஏன் ஐநா சபை பிரதிநிதி வரைக்கும் எங்க ஆளுங்கதான்.

மானே 2 : துபாய்ல ஆரம்பிச்சு தமிழ்நாடு வரைக்கும் எங்க ஆளுக பண்ற அரசியல்ல அங்க இருக்குறவங்களே ஆடிப்போயிருக்காங்க.
லால் : அதனால தான் சொல்லுறோம். ஜான் புக்கானன் என்ன, அவங்க அப்பா முழம் புக்கானன் வந்தாலும் எங்க கிட்ட புட்டு வேகாது.

வல்லுநர் : சரி, அவரவே போட்டுடுவோம்.

மானே 2 : சார், பிரீத்திகிட்ட இருந்து பதில் பேக்ஸ் வந்திருக்கு.
நம்ம கண்டிஷனுக்கு அவங்க ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.


தர்ஷன் : ஏன் இன்னும் அதிகம் பணம் எதிர்பார்க்குறாங்களா?

மானே 2 : அதில்லை சார். எவ்வளவுக்கு வாங்கினாங்களோ, அதவிட பத்து மடங்கு அதிகம் பணம் அவங்க தர்றாங்களாம். உடனே அவர எடுத்துக்கங்கண்ணு சொல்றாங்க சார்.


அனைவரும் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

July 08, 2009

அஜீத்,விஜய்,விஷால்,சிம்பு திடீர் சந்திப்பு

2009ன் முதல் ஆறு மாதங்களில் கமர்சியல் படங்களில் அயன் மட்டுமே ஹிட். மற்றபடி கதை,நடிப்பு உள்ள படங்களே வெற்றி என்ற ரிப்போர்ட்டைக் கண்டு குமுறும் பார்முலா நாயகர்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள்.

அஜீத் : அயன்ல சூர்யா தப்பிச்சுட்டாரு. எங்கப்பா இந்த தனுஷ், ஜெயம் ரவி எல்லாம்?

சிம்பு : அவங்களுக்கு அவங்க அண்ணங்க இருக்காங்க. எப்படியாச்சும் தேத்தி விட்டுடுவாங்க.

விஷால் : எனக்கும் ஒரு அண்ணன் இருக்கானே?.

அஜீத் : சிம்புக்கும் விஜய்க்கும் அவங்க அப்பா காமெடி பீஸு, உனக்கு அண்ணன்.

விஷால் : என்ன ஜி இப்படி சொல்லிட்டீங்க.

சிம்பு : தலை சொல்லுறது சரிதான். இவ்வளோ செலவழிச்சு உன்னைய வச்சு படமெடுக்குறதும் இல்லாம நீ டைரக்டர ஆட்டி வைக்கிறத பொறுத்துப் போறான்ல.

விஜய் : அட அத விடுங்கப்பா. படம்தான் ஓடமாட்டெங்குதுன்னா நமக்கு பப்ளிசிட்டியும் கிடைக்க மாட்டேங்குதே. ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் நடிக்கிறாரு விக்ரம், அவர் பாடுறாரு, கெட்டப் போடுறாருன்னு ஒரு கவர் ஸ்டோரி. பிரபுதேவா கூட நயன வச்சு பிலிம் காட்டுறாரு.

இங்க ஒருத்தன் கட்சி ஆரம்பிக்கிறேன்னு கத்திக்கிட்டு இருக்கேன்.
எவனும் கண்டுக்க மாட்டேங்கிறான்.

சிம்பு : எந்திரன் பட லொக்கேஷனுக்கு அஸிஸ்டென்ட் டைரெக்டர் போறதுக்குள்ள மீடியா ஆளுங்க போயி உட்கார்ந்த்துக்கிறாங்க. சன் டிவி, எந்திரன் ரிலீஸாகும் போது விளம்பரம் போட ஒரு தனி சானலே ஓப்பன் பண்ணப் போறதா பேசிக்கிறாங்க.

விஷால் : கமல் கூட ஏதோ திரைக்கதை பட்டறை அது இதுன்னு லைம்லைட்லயே இருக்காரு.

அஜீத் : அது என்னப்பா திரைக்கதை?

விஜய் : உனக்கு கதைன்னா என்னன்னே தெரியாது. திரைக்கதை பத்தியெல்லாம் நீ ஏம்பா கவலைப் படுறே?

சிம்பு : இந்த பாருங்க, எங்க தலைக்கு கதை கேட்கத் தெரியாதுதான். ஆனா நடிப்புல நடந்து, திரும்பி எப்படியாவது சமாளிச்சுருவாரு. ஆனா உங்களுக்கு நடிப்பே சுத்தமா வரல்லியே.

விஜய் : நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன்.

விஷால் : ஏற்கனவே நெலமை சரியில்ல. நல்ல கதை, நடிப்பு இருக்கணும்னு மக்கள் எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதப்பத்தி பேசுங்க.

விஜய் : ஆமா ஆமா. டிரெண்ட் இப்படியே இருந்துச்சுன்னா நாம பேக் அப் ஆயிடுவோம்.

சிம்பு : போட்டிக்கு சசிகுமார் வேற வந்துட்டாரு. ஹேட்ரிக் அடிச்சிட்டாரு. அவரை எப்படியாவது மட்டயாக்கணுமே.

விஷால் : அது விஜயோட அப்பாவாலதான் முடியும்.

சிம்பு : எப்படி?

விஷால் : நரேன், நிதின் சத்யா ஹிட் ஆனவுடனே அவங்களை புக் பண்ணி மொக்கையாக்குனாரே? அதுமாதிரி சசியையும் வச்சு ஒரு படம் எஸ் ஏ சி எடுத்தா, அந்தாளு காலி.

அஜீத் : சசி மதுரைக்காரரு. சும்ரமணியபுரம் ஆட்டோ சீன் ஞாபகம் இருக்கில்ல?

விஜய் : நமக்குள்ள ஏன்? மக்கள் நல்ல படம் பார்க்குறத நிறுத்தணும், அதுக்கு என்ன வழின்னு பாருங்க

சிம்பு : நல்ல படமா வரும்போது ஏவிஎம் ஒரு மசாலா படத்தக் குடுத்து கெடுக்குமே, அது மாதிரி நாமளும் செய்ய வேண்டியதுதான்.

விஷால் : நாம எடுத்த வில்லு,ஏகன்,தோரணை எல்லாம் மசாலா தானே?

சிம்பு : அதெல்லாம் சாதா மசாலா. ஸ்பெசல் மசாலாவுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.

விஜய் : என்ன?

சிம்பு : இந்தியாவிலேயே பெரிய மசாலா ஹிட்டுன்னா அது ஷோலே தான். அதை நாம ரீமேக் பண்ணுவோம்.

விஷால் : சூப்பர். நான் தான் இந்த குரூப்லயே ஹைட்டு. அமிதாப் கேரக்டர் எனக்கு.

சிம்பு : எனக்கு தர்மேந்திரா கேரக்டர். ஹேமமாலினியா நயன்தாரா.

அஜீத் : எனக்கு?

சிம்பு : உங்களுக்கு டான் கேரக்டர்தான் கிளிக்காகுது. அதனால கப்பர் சிங் நீங்கதான்.

விஜய் : அப்போ நான்?

சிம்பு : சஞ்சய் கபூர் கேரக்டர் நீங்க எடுத்துக்குங்க.

விஜய் : அய்யோ, அந்த கேரக்டருக்கு நடிப்பு தேவைப்படுமே. அதுபோக கையில்லாம நடிச்சா என் இமேஜ் என்னாகும்?

சிம்பு : கையில்லாட்டி என்ன? கால் இருக்குல்ல? வழக்கம் போல ரெண்டு குத்துப்பாட்டுக்கு ஆடி தப்பிச்சுக்குங்க.

விஜய் : ஏன் இவ்வளோ பேசுறயே நீ நடிக்க வேண்டியதுதான அந்த கேரக்டர்ல?

சிம்பு : எனக்கு தெரிஞ்சதே விரல் வித்தைதான். கையில்லாத கேரக்டர்ல நான் எப்படி நடிக்கிறது?

அஜீத் : வழக்கம் போல தப்பா கதை கேட்டு நான் மோசம் போக மாட்டேன். ஏன் நான் தர்மேந்திரா கேரக்டர் பண்ணுறனே. விஜய் வேணா கப்பர் சிங் கேரக்டர் பண்ணட்டும்

விஷால் : கப்பக் கிழங்கு சிப்ஸ் மாதிரி ஒல்லியா இருக்காரு. இவர எப்படி?

சிம்பு : சரிங்க சமாதானமாப் போவோம். கப்பர் சிங்கா பிரகாஷ் ராஜ், சஞ்சய் கபூர் கேரக்டருக்கு கிஷோர், ஹேமமாலினியா நயன்தாரா, ஜெயாபாதுரி கேரக்டர்க்கு அசின்.

விஷால் : அப்பக்கூட நயன விடமாட்டேங்கிறானே. பிரபுதேவாவுக்கு எஸ் எம் எஸ் அனுப்பிட
வேண்டியதுதான்.

விஜய் : அதெல்லாம் சரி. மெயின் கேரக்டர்ஸ்?

சிம்பு : அங்க தான் நிக்குறான் சிம்பு. ஒரே நேரத்துல ரெண்டு ஷோலே எடுக்குறோம். ஒன்னுல நானும் விஷாலும் மெயின் கேரக்டர்ஸ். இன்னொன்னுல நீங்களூம் அஜீத்தும்.

அஜீத் : ஓகே நான் தர்மேந்திரா, விஜய் அமிதாப். சரி எங்க ஷோலேக்கு எங்களுக்கு ஏத்த ஆளுகள செலெக்ட் பண்ணிக்கிறோம்.

விஜய் : அருமையான ஐடியா. ரெண்டு படம் வருதுன்னா தமிழ்நாடே பரபரப்பாகும். இது மட்டும் ஹிட் ஆச்சு. ரியாலிட்டி படம் எடுக்குறேன்னு எவனும் இனி வர மாட்டான்.

விஷால் : நம்மனால தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவோ கொடுமைகள அனுபவிச்சுட்டாங்க. அதுல இதுவும் சேரட்டும். ஷூட்டிங்க ஆரம்பிச்சுடுவோம்.

July 06, 2009

நண்பன் சார்லி

ஒரு வீடு இரு வாசல் என்னும் படத்தில் சார்லிக்கு துணை நடிகர் வேடம். அவர் நடிக்க வந்திருக்கும் காட்சி ஒரு துக்க வீட்டுக் காட்சி. இறந்தவர் கிடத்தப்பட்டிருக்க சுற்றி நின்று அழ வேண்டும்.

இயக்குநர் அழுங்கள் என்று சொல்லிவிடுவார்.

சார்லி உடனே கேட்பார்.

சார், இறந்தவர் எந்த மொழிக்காரரு?, நாங்கள்ளாம் அவருக்கு என்ன உறவு முறை வேணும்?, இறந்தவன் நல்லவனா? கெட்டவனா? இதெல்லாம் தெரிஞ்சாத்தானே நாங்க கரெக்டா பீல் பண்ணி அழ முடியும்?

கேமராவ டாப் ஆங்கிள்ல வச்சாத்தானே எங்க பீலிங்லாம் ஆடியண்சுக்கு கன்வே ஆகும்?

எனக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு துளைப்பார்.

உண்மையிலேயே சார்லி தான் நடிக்க வந்த இந்த 26 வருடங்களில் நடித்த 550க்கும் அதிகமான படங்களில் சில படங்களைத்தவிர பெரும்பாலான படங்களில் இதே மாதிரிதான் இயக்குநர்களிடம் கதறியிருப்பார் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு எந்த விதமான கேரக்டரைசேஷனும் இல்லாமல் நாயகனின் நண்பன், நாயகனின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர் , நாயகனின் உருப்படாத அண்ணன், மச்சினன் என பொதுப்படையான கேரக்டர்களைக் கொடுத்தே அவரை நோகடித்தது தமிழ்த்திரையுலகம்.

இதனால்தான் 40 வயதிலும் கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டிய கட்டாயம் சார்லிக்கு ஏற்பட்டது. 40 வயதுக்குமேற்பட்ட நாயகன் திருமணம் ஆகாதவனாக நடிக்கும் போது, அவனை இளமையாகக் காட்ட அவனை விட வயது கூடியவர்களை துணைக்கு வைக்க வேண்டிய கட்டாயம். ரஜினியின் படையப்பாவில் அவரை வயது குறைந்தவராகக் காட்ட நண்பர் குழாமில் நாலைந்து பெரியப்பாக்களை இறக்கி விட்டிருப்பார்கள்.
அதுபோல கார்த்திக்,முரளி,சரத்குமார்களின் இளமைக்காக இவர் நண்பனாகவே நடிக்க வேண்டி வந்தது.

சார்லி நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். தகவல் ஒலிபரப்புத் துறையின் நாடகப் பிரிவில் நடிகராக பணியாற்றிக் கொண்டிருந்த சார்லி, ரஷ்யன் கல்சுரல் சென்டரின் நூலகத்தில் உறுப்பினர். தான் எடுத்துப் படித்த புத்தகத்தை திரும்பக் கொடுக்கச் சென்ற சார்லி, அங்கு நடந்து கொண்டிருந்த ஹுயுமர் கிளப்பின் கூட்டத்தை வேடிக்கை பார்த்தார். இங்கே தன் திறமையையும் காண்பிக்கலாமே என் நினைத்து அமைப்பாளர்களை அணுகிணார். வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த மோனோ ஆக்டிங்கையும் மிமிக்ரியையும் அங்கே பார்த்த கலாகேந்திரா கோவிந்தராஜன் பாலசந்தரிடம் சிபாரிசு செய்ய பொய்க்கால்
குதிரை பட வாய்ப்பு சார்லிக்கு கிடைத்தது. அதன்பின் பாலசந்தர்,பாசில்,விக்ரமன் ஆகியோரது படங்களில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கப் பெற்றார்.

சத்யராஜ் அடிக்கடி சொல்லுவார், ”நமது திறமை என்ன என்பதை மற்றவர்களுக்கு காட்டும் வரையில் தான் தமிழ் சினிமாவில் கஷ்டப்படவேண்டும். ஒருமுறை நமது திறமை வெளியே தெரிந்துவிட்டால் பின் நமக்கேற்ற கேரக்டர்களை அவர்களே உருவாக்கித் தந்துவிடுவார்கள்” என்று.

ஆனால் இது சார்லி விஷயத்தில் மட்டும் பொய்த்துப் போனது. தன்னால் என்னவெல்லாம் முடியும் என்று முடிந்தவரை அவரும் திறமையைக் காட்டிப்பார்த்தார். ஆனால் அவருக்காக என்றுமே கேரக்டர்களை தமிழ்சினிமா உருவாக்கவில்லை. அவரை ஒரு ஆயத்த ஆடையாகவே தமிழ்சினிமா இன்றுவரை உபயோகித்து வருகிறது. அறிமுகமோ, முடிவோ தேவையில்லாத நண்பன் வேடமா, வயது 30 சமீபமா?
சார்லியை போட்டுக்கிருவமா? சரியா இருப்பாருல்ல? அவர் நம்பர் என்னா? இதுதான் பெரும்பாலும் நடந்து வந்திருக்கிறது.

புதுப் புது அர்த்தங்களில் தோண்டித் துருவும் நிருபன் வேடம். கேள்வியைக் கேட்கும் விதம், பதிலில் இருந்து இன்னொரு கேள்வியைக் கேட்கும் விதம், வேடத்துக்குப் பொருத்தமாக நாலு நாள் தாடி, சோடா புட்டிக் கண்ணாடி என இரண்டு சீனில் வரும் கேரக்டருக்கு அவ்வளவு மெனக்கெட்டிருப்பார்.

வண்ணக் கனவுகள் வேடம்,ஜெயபாரதி இயக்கி சந்திரசேகருக்கு துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த நண்பா நண்பா திரைப்படத்தில் படுக்கையில் இருக்கும் நண்பனுக்க ஆறுதல் காட்டுபவன், வெற்றிக் கொடி கட்டில் துபாய் செல்ல பணம் கட்டி ஏமாந்த கிராமத்தான்,என்னவளே திரைப்படத்தில் தன் உடல் ஊனத்தை மறைத்து நடிக்கும் இசைக் கலைஞன்,ஜெமினியில் பாலியல் தொழில் ஏற்பாட்டாளான், அமர்க்களத்தில் குருடன்,
கோபாலா கோபாலா செட்டியார் என அவ்வப்போது வித்தியாச வேடங்களில் தன் திறமையை நிரூபித்து வந்தாலும் நாயகனின் நண்பன் கூட்டம் என்னும் வட்டத்தை தாண்டுவது அவருக்கு பெரும்பாடாகவே இருக்கிறது. அன்னியன் போன்ற திரைப்படங்களில் அவருக்கு வேறு வகை வேடம் கொடுத்தலும் அரை ரீலுக்கு மேல் அவர் வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.

சார்லி, தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு : 1937 முதல் 1967 வரை என்ற தலைப்பில் எம் பில் ஆய்வு செய்துள்ளார். வருங்காலத்தில் அவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளாமல் இருக்கும் வரையில் அவருக்கு ஏற்ற வேடங்களை தமிழ்சினிமா கொடுக்கட்டும்.

புதுவசந்தம் திரைப்படத்தில் அவர் பேசும் பிரபல வசனம்

“எனக்கு நிலாச் சோறு சாப்பிடமும்னு ஆசை. வாழ்க்கை பூராம் நிலா இருந்துச்சு, ஆனா சோறுதான் இல்லை”

அதுபோல நல்ல ரோல்ல நடிக்க ஆசை. நடிப்பு மட்டும்தான் இருந்துச்சு, ஆனா வாய்ப்புதான் கிடைக்கலை என்று மாற்றி அவர் புலம்பிவிடாமல் இருக்க தமிழ்சினிமா ஏதாவது செய்யட்டும்.

July 03, 2009

டெல்லி கணேஷின் வித்தியாச வேடங்கள்

93ஆம் ஆண்டு, தனியார் தொலைக்காட்சிகள் தமிழ் வானில் தடம் பதித்திராத நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்வாசிகளுக்கு பொழுதுபோக்குக்கு துணையாய் விளங்கியது தூர்தர்ஷனின் டிடி 2 மெட்ரோ அலைவரிசையே. அதில் ஒரு மணி நேரம் நல்ல சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அதில் புகழ் பெற்றவர்தான் மெட்ரோ பிரியா. இவர்தான் தமிழ் சின்னத்திரையின் முதல் நட்சத்திர தொகுப்பாளினி. நடிகர் ராதாரவி அவர்களும் ஒரு 13 வார ஸ்லாட் வாங்கி வாராந்திர நிகழ்ச்சி ஒன்றை அளித்தார். அதில் கதாநாயக, நாயகியர் தவிர்த்த திரைஉலக புள்ளிகளின் பேட்டியை ஒளிபரப்பினார். இதன் விசேஷம் பேட்டி அந்த பிரபலங்களின் வீட்டில்தான். கலைப்புலி தாணு, டிஸ்கோ சாந்தி ஆகியோரது பேட்டிகள் மிக சுவராசியமாய் அமைந்திருந்தன. டிஸ்கோ சாந்தி தன் வீட்டு வேலைகளை செய்த படியே கொடுத்த பேட்டி மிகப் பிரபலம்.

அதில் ஒருவாரத்தில் இடம் பெற்றது, டெல்லி கணேஷின் பேட்டி. அவர் வீட்டில் காய்கறி நறுக்கிக் கொண்டே பேட்டியளித்தார், அவரது திரை இமேஜுக்கு ஏற்றபடியே.


பாலசந்தர் மற்றும் அவர் சிஷ்யர் விசு ஆகியோரது படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.

டெல்லி கணேஷ் என்றாலே நமக்கு தோன்றும் பிம்பம் ஒரு மிடில் கிளாஸ் சாதுவின் பிம்பம். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஸ்டீரியோ டைப்பாக இந்த வேடத்தைக் கொடுத்து மக்கள் மனதில் அப்படி பதியவைத்து விட்டார்கள். நாடக பின்புலம் கொண்ட டெல்லி கணேஷால் எந்த வேடத்தையும் சிறப்பாக செய்ய முடியுமென நம்பி வித்தியாச வேடங்களை அவருக்கு கொடுத்த சிலரில் கமல்ஹாசனும் ஒருவர்.

அருமையான காமெடி டைமிங் உடைய டெல்லிகணேஷுக்கு தமிழ் சினிமா கொடுத்த ட்ரேட்மார்க் வேடங்களை முதலில் பார்ப்போம்.


சமையல்காரர் வேடங்கள்

இந்த வேடம் இவருக்கு அல்வா போல. புன்னகை மன்னன் படத்தில் கமலின் தந்தை. ஆனால் வேலைக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் வேலையைக் காட்டி சித்திகளை அதிகப்படுத்துவார். மைக்கேல் மதன காமராஜனில் பாலக்காட்டு சமையல் காரராக அசத்தியிருப்பார். ஆஹா படத்திலும் நிஜ சமையல்காரராகவே மாறியிருப்பார்.

குருக்கள் வேடம்

இந்த வேடமும் இவருக்கு பொருத்தமாக அமையும் ஒன்று. ராகவேந்திரர் படத்தில் இயல்பாக நடித்திருப்பார். அரசு படத்தில் வரும் வேணு சாஸ்திரிகள் வேடமும் இவரைத் தவிர யாருக்கும் பொருந்தாது.

கணக்குப் பிள்ளை/ நியாயமான பிஏ

இதுவும் இவரது கோட்டை. நாயகனில் இந்தி மொழிபெயர்ப்பாளராக கமலிடம் சேர்ந்து அவருடனே காலம் கழிப்பவர். கமலைக் காட்டிக் கொடுக்காமல் போலிஸிடம் அடி வாங்கி விட்டு, எவ்வளவோ அடிச்சாங்க நாயக்கரே, ஆனா நான் சொல்லலை என குழறியபடி இவர் பேசும் வசனம் அபாரம்.

நடுத்தர குடும்ப அப்பா

இதுதான் அவரது ஆஸ்தான வேடம். எண்ணற்ற படங்களில் இந்த கேரக்டரில் நடித்திருந்தாலும், எதிரி படத்தில், தன் மகளை யாரும் காதலித்து விடக்கூடாது என்ற நடுத்தர வர்க்க மனபாவத்தை அருமையாக திரையில் கொண்டு வந்திருப்பார்.மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் இவருக்கு அமைந்த அப்பா வேடமும் நல்ல ஒன்று.


இவற்றில் இருந்து விலகி அவர் ஏற்று நடித்த சில வித்தியாச வேடங்கள்

சிதம்பர ரகசியம்

இதில் வில்லன் வேடம். ஒரே நாள் இரவில் ஒரு கொலை, கற்பழிப்பு, சிலை திருட்டு ஆகியவை நடை பெறுகின்றன. இந்த மூன்றிலும் சம்பந்தப்பட்டவர் என ஒரு அப்பாவியை (எஸ் வி சேகர்)போலிஸ் கைது செய்கிறது. அதை துப்பு துலக்க வருகிறார் விசு. அவருக்கு துணையாக இருக்கிறார் அருண்பாண்டியன். இவர் டெல்லி கணேசின் மகன். விசு போடும் திட்டங்களையெல்லாம் முறியடிக்கிறார் டெல்லி. இறுதியில் மாட்டிக் கொள்கிறார்.

அபூர்வ சகோதரர்கள்

இதிலும் வில்லன் வேடம். நேர்மையான போலிஸ் அதிகாரியைக் கொன்று, பின் அவரது மகனால் பழி வாங்கப்படும் வேடம். முதல் பலி இவர்தான். சத்யா திரைப்படத்திலும் வில்லனுக்கு துணை போகும் அரசாங்க வக்கீல் வேடம்.

பட்டத்து ராணி

கவுண்டமணியின் குடியிருப்பில் யாரும் அவருக்கு வாடகை தருவதில்லை. செந்தில் கொடுக்கும் ஐடியாவின் படி வயதான விஜயகுமாரைத் திருமணம் செய்திருக்கும் கௌதமி தம்பதியனரை குடிவைக்கிறார். முதல் தேதிக்கு முன்னதாகவே அலறியடித்து அனைத்து ஆண்களும் வாடகை தருகிறார்கள், இமேஜ் பில்டப் செய்ய. கவுண்டரும் விதிவிலக்கல்ல. டெல்லியும் இந்த லிஸ்டில் அடக்கம். கௌதமிக்காக உருகுவதையும், காதல் வசனம் பேசுவதையும் சிறப்பாக செய்திருப்பார். ஜனகராஜ்,கவுண்டமணி, இயக்குநர் மணிவாசகம் ஆகியோர் கௌதமியைக் கவிழ்க்க கொடைக்கானல் டூர் போவதும், அங்கே
மனைவிகளிடம் சிக்கிக் கொள்வதும் நான் ஸ்டாப் காமெடி.

அவ்வை சண்முகி

சபல புத்தியுடைய பி ஏ. இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆனபோது இந்த கேரக்டரை செய்தவர் ஓம்பூரி என்ற ஒன்றே போதும், இந்தக் கேரக்டரின் அருமை தெரிய. அனாயாசமாக செய்திருப்பார். ஒரு காதில் பூவும், கையில் செல்போனுமாக அவர் செய்யும் சேட்டைகள் அழகு.

டௌரி கல்யாணம்

ஏழ்மையின் காரணமாக, ஏதாவது திருமண மண்டபத்துக்கு சென்று, ஏதாவது உறவு முறை சொல்லி புகுந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து ஒரு வேளை சாப்பிடும் பாத்திரம். இந்த கௌரியின் திருமணத்திலும் மாடாக உழைக்கிறார். ஆனால் டௌரி பிரச்சினையால் பெண் வீட்டார் பிரச்சினையில் இருக்கும் போது குட்டு வெளிப்பட அந்த ஒரு வேளையும் சாப்பிடாமல் வெளியேறுகிறார். முடிவில் திருமணம் சுபமாக முடிகிறது. இவர் நிலை தான் கண்ணீரில்.

தெனாலி

மனநோய்க்கு மருத்துவம் பார்க்கும் வைத்தியர் பஞ்சபூதம் வேடம். தன் சக மருத்துவர் ஜெயராமுக்கு கிடைக்கும் புகழைப் பார்த்து கொதிப்படைந்து அவரை கவிழ்க்க சிக்கலான நோயாளியான தெனாலியை அங்கே அனுப்பும் வேடம். படாத் பாடு பட்டு கோர்த்து விடுகிறார். எதிர்பார்த்தது நடந்ததா?


அழகான நாட்கள்


மிக அரிதாகக் கிடைத்த பணக்கார அப்பா வேடம். மகளாக மும்தாஜ். கேட்ட போதெல்லாம்
மணிவண்ணனுக்கு பணம் கொடுத்து விட்டு அவர் மகன் கார்த்திக் தன் மகளை திருமணம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார். மிரட்டுகிறார். முடிவில் விட்டுக் கொடுக்கிறார்.

சிந்து பைரவி

குடிப்பழக்கம் உடைய மிருதங்க வித்வான் வேடம். கச்சேரிக்கும் குடித்து விட்டு வந்து ஜாதிக்காயை வைத்து சமாளிக்கும் வேடம். வித்வான் கோபப் பட்டு வெளியேற்றிவிட, வித்வான் வீட்டு முன்னால் உட்கார்ந்து அவர் அனுமதிக்கும் வரை மிருதங்கம் வாசிக்கும் காட்சியில் பின்னியிருப்பார்.


மூன்று முகம்


ரஜினி டி எஸ் பி. இவர் எஸ் ஐ. ரஜினிக்கு துணையாக நேர்மையான போலிஸ் வேடம்.

தமிழன்

விஜயின் சீனியர் வக்கீல் வேடம்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா

தன் மகன் பிறந்ததில் இருந்து ஆன செலவை கணக்கு வைத்து கேட்கும் தந்தை வேடம்.

தற்போது பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். வருங்கால இயக்குநர்களாவது ஸ்டீரியோ டைப் வேடங்களை இவருக்கு கொடுக்காமல் வித்தியாசமான வேடங்களைக் கொடுத்தால் நன்றாயிருக்கும்.

July 01, 2009

நீங்க எங்கேயோ போயீட்டீங்க சார் - ஜனகராஜ் - பகுதி 2

80களில் தமிழ்சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த காமெடி நடிகர்களை அவர்கள் நடித்த படங்களின்
வழியாக இப்படியும் பிரிக்கலாம்.

கவுண்டமணி

ஆர் சுந்தர்ராஜன், ரங்கராஜன், பாலு ஆனந்த்,ராமராஜன் போன்று பெரிய நடிகர்களை நம்பாமல் ஓரளவு கதை
மற்றும் இளையராஜாவின் இசையை நம்பி படம் எடுத்தவர்கள். இவர்களது படங்களின் மூன்றாவது
தூணாக கவுண்டமணியின் நகைச்சுவை டிராக் இருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பின்னரே
இவர் கதாநாயகனின் நண்பன் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.


எஸ் எஸ் சந்திரன்


திராவிட முன்னேற்ற கழகத்தின் அறிவிக்கப்படாத திரையுல கொ ப செ வாக அக்காலத்தில் இருந்தவர்.
அதனால் திமுக சார்புள்ள இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் தவறாமல் இடம்பிடித்து வந்தார்.
ராம நாராயணன் மற்றும் அவர் இணை,துணை இயக்குநர்களின் படங்களிலும், டி ராஜேந்தர்,
கலைப்புலி தாணு,விஜயகாந்த் ஆகியோரின் படங்களிலும் தொடர்ந்து இடம் பெற்று வந்தார்.

ஜனகராஜ்

ஜினி,கமல் ஆகிய முண்ணனி நடிகர்கள், முண்ணனி இயக்குநர்களின் தேர்வாக இருந்தவர் ஜனகராஜ்தான்.
கவுண்டமணி 89க்குப் பின் பெரிய நடிகர்களின் படங்களில் இடம்பிடித்ததும் ஜனகராஜின் இடம் ஆட்டம்
கண்டது. ஆனாலும் ரஜினிகாந்த் அவரை விட்டுக்கொடுக்கவில்லை. அதனால்தான் 80களிலும் பின் 90
களின் மத்தி வரையிலும் வந்த பல பிளாக் பஸ்டர்களில் ஜனகராஜ் இடம்பிடித்திருந்தார்.

இந்தப் பகுதியில் ஜனகராஜ் இடம்பெற்றிருந்த சில பிளாக் பஸ்டர்களைப் பார்ப்போம்.

நாயகன்

ஒரு காட்பாதர் உருவாவதில் இருந்து அவரின் இறப்புவரை உடனிருக்கும் பாத்திரம். கமலுக்கு கெட்டப்
மாற்றுவது போலவே ஜனகராஜுக்கும் கெட்டப், பாடி லாங்குவேஜ் எல்லாம் மாற்றி மெனக்கெட்டுருப்பார்கள்.
ஒரு பிரச்சினையில் கமலின் மகள் கன்னத்தில் அறைந்ததும் நீயா அடித்தாய் என்பது போல ஒரு
கேள்வியுடன் தன் இயலாமையையும், குற்ற உணர்ச்சியையும் சேர்த்து ஒரே ரியாக்‌ஷனாக காட்டியிருப்பார்.

அபூர்வ சகோதரர்கள்

இடைவேளைக்குப் பின்னால்தான் படத்தில் எண்ட்ரி. இப்போது படத்தைப் பார்த்தால் இடைவேளைக்குப்
பின்னால் உள்ள சுவராசியமே ஜனகராஜ்தான். இவரும் ஆர் எஸ் சிவாஜியும் சேர்ந்து அடிக்கும் லூட்டி
மறக்க முடியாதது. ஆர் எஸ் சிவாஜி சொல்லும் நீங்க எங்கியோ போயிட்டீங்க சார் இருபதாண்டு
கழித்தும் எங்கேயாவது யாராலாவது உச்சரிக்கப் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. வெற்றி விழா, விக்ரம்
ஆகிய படங்களிலும் பெயர்சொல்லும் படியான வேடமே. குணாவில் அபிராமியைப் பற்றி ஏற்றி
விடுவதே ஜனகராஜ்தான்.

அண்ணாமலை

ரஜினியின் ஒன்றுவிட்ட அண்ணன் பாத்திரம். அரைகுறை ஆங்கில டீகடை ஓணர். ஒரு காட்சியில்
வெளிநாட்டுக்காரர் ஒருவரிடம் “நவ் ஐயாம் கோயிங் டு எக்ஸ்பிளைன் வாட் ஆர் த ஐட்டம்ஸ் வீ ஆர்
ஹேவின் இன் அவர் .....” எனத் தொடங்கி ஒரு சொற்பொழிவே ஆற்றி முடிக்க, வெளிநாட்டுக் காரரோ
ஒரு மசால் வடை என தூய தமிழில் ஆர்டர் கொடுக்க, ஜனகராஜ் கொடுக்கும் ரியாக்‌ஷன் இருக்கிறதே?

பாட்ஷா

தாதா ரஜினியின் முக்கிய கை வேடம்.படத்தி ஆரம்ப காட்சிகளில் மட்டும் நகைச்சுவையை காட்டி விட்டு
பின்னர் சீரியஸ் ஆக மாறும் பாத்திரம். இதுதவிர வீரா,அருணாசலத்திலும் ஜனகராஜின் பங்கு உண்டு.

ராஜாதிராஜா

ரஜினியின் தோழன். பணக்கார ரஜினிக்கு மாற்றாக நடிக்கப் போனாலும் தன் சென்னைத் தமிழை மறக்க
முடியாமல் சிக்கலில் மாட்டும் வேடம். சைனா டீ மசால் வடையை மறக்க முடியுமா?. இதே
ஆண்டு வெளிவந்த சிவாவிலும் ஜனகராஜ்தான் காமெடி. ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தபின்
அவரது படங்களில் மற்றவர்களுக்கு தனிப்பாடல் வைப்பது இல்லை.

நல்லவனுக்கு நல்லவனில் கார்த்திக், இணை வேடத்தில் நடித்ததால் சில படங்களில் பிரபுவுக்கு,
தயாரிப்பாளர் மட்டும் இணை நடிகர் என்பதால் ரவிசந்திரன் (கன்னடம்) ஆகியோருக்கு மட்டும் ரஜினி
படங்களில் தனிப்பாடல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிவாவில் ஜனகராஜுக்கு டிஸ்கோ சாந்தியுடன்
ஒரு டூயட்டே கொடுத்தார்கள் என்றால் அண்றைய நிலையில் ஜனகராஜின் மார்க்கெட்டை நாம்
கணக்கிட்டுக் கொள்ளலாம்.

வருஷம் 16

ஒரு பெரிய குடும்பம். ஈகோ பிரச்சினைகளால் சிதறுண்டு போகிறது. அதைக் கட்டி காக்கத் துடிக்கும்
நாயகனுக்கு உதவியாய் வேலைக்காரர் ஜனகராஜ். வி கே ராமசாமியுடன் சேர்ந்து அடிக்கும் கூத்தாகட்டும், உணர்ச்சிகர
காட்சிகளில் வெளிப்படுத்தும் பாவனைகளாகட்டும் கிளாஸ்.

சிந்து பைரவி

கர்நாடக இசை வித்வானுக்கு பக்க வாத்தியம். ஆனால் மெயின் வேலை பொய் சொல்வது. ஒரு கட்டத்தில்
பொய் சொல்ல மாட்டேன் என சத்தியம் செய்கிறார். அதனால் உண்மையையும் மறைக்கக்கூடாது. விதி
துரத்துகிறது. சொல்லும் உண்மை திருப்பு முனையாகிறது. பக்க வாத்தியக்காரரின் பாவங்கள் பாடகரையே
தூக்கிச் சாப்பிட்டுவிட்டன இந்தப் படத்தில்.

படிக்காதவன்

துப்புரவுத் தொழிலாளி கபாலி கள்ளக்கடத்தல் செய்து கே பாலி யாக மாறுகிறார். நண்பனான கார் ட்ரைவர்
ரஜினிக்கு டிப்பு கொடுக்கிறார். பின்னர் பேக் டு பெவிலியன். இப்படத்தில் ஜனகராஜ் பேசும் என்
தங்கச்சிய நாய் கடிச்சிடுப்பா வசனம் மிமிக்ரி ஆட்களின் பேவரைட். பணக்காரன் திரைப்படத்திலும்
ரஜினிக்கு நண்பன் வேடம்.

முதல் மரியாதை

இங்கும் கயிறு திரிக்கும் வேடம். மனைவியை யாரும் சீண்டாமல் பாதுகாக்கும் வெள்ளந்தித்தனம் வேறு.
சொல்லியா கொடுக்க வேண்டும் ஜனகராஜுக்கு?. அடுத்து வந்த பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகளில்
நாயகியின் அப்பா வேடம். எங்கே சம்பாதிக்கும் தன் மகளை ரவுடி திருமணம் செய்து கொள்வானோ என
அஞ்சுவதும் அதற்க்கு இறைஞ்சும் காட்சியிலும் சொல்லும் படி நடித்திருப்பார்.

ஆண்பாவம்

அண்ணனைக் கண்டு பொறாமைப்பட்டு தொழில் தொடங்கும் தம்பி. செய்யும் தொழிலெல்லாம்
ஊற்றிக் கொள்ள அல்லல்படுகிறார். பந்த் அன்று கடை திறப்பதும் அதைத் தொடரும் நகைச்சுவைக்
காட்சிகளும் பாதாம் அல்வா.


நான் புடிச்ச மாப்பிள்ளை


முதல் படம் ஓடாத வி.சேகருக்கு கை கொடுத்த படம். பின்னர் இம்மாதிரி படங்களே அவர் அடையாளம்
ஆகியது. தரகரின் நேர்மைக்காகவே அவர் மகளை மணமுடிக்கிறார் பண்னையார். முறைப் பெண்
வைத்திருக்கும் அக்கா வீட்டுக்காரர் முறைக்கிறார். தரகரின் மகள் இறந்துவிட குழப்பம். ஆனால் இவரின்
அருமையை உணர்ந்த முறைப்பெண் இவரையே தந்தையாக தத்தெடுக்கிறார். இந்தப் படத்தின்
கதாநாயகன் தரகர் வேடத்தில் நடித்த ஜனகராஜே.

வாய்க்கொழுப்பு

இளைய சகலைகள் இருவர் மூதத சகலையால் சொல்லொண்ணா துன்பம் அடைகிறார்கள். அவனை கொலை
செய்துவிட வேண்டும் என வாய்க்கொழுப்பாக பேச, அவர் உணமையிலேயே கொல்லப் படுகிறார்.
இளைய சகலைகளான ஜனகராஜும், பாண்டியராஜனும் பதறி ஓடுகிறார்கள் வாழக்கையின் எல்லைக்கே.
நான் ஸ்டாப் காமெடி படம்.

மற்றவை நிறைவுப் பகுதியில்