January 19, 2016

இயக்குநர் சரண்

1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில் ஆசை, வான்மதி, காதல் கோட்டை என வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் 97ல் இருந்து வெளியான உல்லாசம் முதலான படங்களின் தோல்வியால் காதல் மன்னன் படத்திற்கு முதலில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது.

படத்தின் பாடல்கள் வெளியாகி, நல்லாயிருக்கு என்ற பேச்சு கிளம்பியது. எம்
எஸ் விஸ்வநாதன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், நடிகர் விவேக்
படத்தில் இணை இயக்குநராக பணிபுரிகிறார் என தொடர்ந்து பத்திரிக்கைகளில் அடிபட்ட செய்திகளாலும், பாலசந்தரின் அஸிஸ்டெண்ட், ஆனந்த விகடனின் முன்னாள் கார்டூனிஸ்ட் என்ற பின்புலங்கள் சரணுக்கு இருந்ததாலும் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உருவானது.

படமும் ஏமாற்றாமல் இருந்தது. தில்வாலே துல்ஹனியா லே ஜெயாங்கேயின் ஒன்லைன் தான். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காதலித்து கைப்பிடிக்கும் கதை.

ஆனால் படத்தின் முக்கிய அம்சமே படத்தில் கதையுடன் சேர்ந்து வந்த சென்னை பேக்டிராப் தான். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் இருந்த முருகேச நாயக்கர் மேன்சன் ஒரு கதாபாத்திரமாகவே வந்தது. நாயகன் ஒரு டூ வீலர் சர்வீஸ் செண்டரில் மெக்கானிக், நாயகியின் தந்தை செக்யூரிட்டி சர்வீஸ் வைத்து நடத்துபவர். பரதவாஜின் இசை, விவேக்கின் காமெடி கை கொடுக்க படம் ஓரளவு ஓடியது.

காதல் மன்னனின் தயாரிப்பாளருக்கே தன் அடுத்த படமான அமர்க்களத்தை
இயக்கினார் சரண். அஜீத்-ஷாலினி ஜோடி. காதல் மன்னன் படத்தில் உருவான ஈகோ பிரச்சினையால் சரணும் விவேக்கும் பிரிந்திருந்தார்கள். பிக்ஸ் யுவர்
எனிமி என்னும் கேப்சனோடு அமர்க்களம் படம் ஆரம்பமானது. தியேட்டரில் தங்கி இருக்கும் ஒரு ரவுடி, போலிஸ் கமிசனரின் மகளைக் காதலிக்கும் கதை. பட ஷூட்டிங்கின் போதே அஜீத்-ஷாலினி காதல் பத்திரிக்கைகளில் வெளியாகி படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. மாம்பலம் சீனிவாசா தியேட்டர் எனும் பேக்டிராப், வைரமுத்துவின் கேட்டேன் கேட்டேன் பாடல் என தொடர்ந்து செய்திகள் அடிபட்டு படமும் ஒரு எதிர்பார்ப்போடு வந்து நன்கு ஓடியது. அஜீத்துக்கு ஒரு ஆக்ஷன் ஹீரோ இமேஜை உருவாக்கியதில் இந்தப் படத்திற்கு பெரும்பங்கு உண்டு.

அடுத்து சரண் இயக்கிய படம் பார்த்தேன் ரசித்தேன். இந்தப் படம் முழுக்க
முழுக்க அன்றைய சென்னையை பிரதிபலித்த படம். கப்பல் வேலைக்காக கிராமத்தில் இருந்து வந்து தங்கியிருக்கும் நாயகன் (பிரசாந்த்) , பேஜர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகியை (லைலா) காதலிக்க, பிரசாந்த் தங்கியிருக்கும் வீட்டிலிருக்கும் மருத்துவ மாணவி (சிம்ரன்) பிரசாந்தை ஒரு தலையாய் காதலிக்கிறார். தன் காதலைப் பெற எந்த அளவுக்கு அவர் இறங்குகிறார் என்பதுதான் படம். லைலாவை ஒருதலையாய் காதலிக்கும் வேடத்தில் ராகவேந்திரா லாரன்ஸ்.

இப்போது புழக்கத்தில் இல்லாத அப்போது பிரபலமாயிருந்த பேஜர், 23 சி, 41 டி
பேருந்துகள், பஸ் டே என முழுக்க முழுக்க சென்னை பிளேவரோடு இருந்த படம் பார்த்தேன் ரசித்தேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது
நம்ம ஏரியாவைப் பார்த்த மாதிரியே இருந்தது என சென்னை இளைஞர்களை பீல் செய்ய வைத்த படம். நல்ல வெற்றியும் பெற்றது.

இதே ஆண்டுதான் பாரதிராஜா தன் மகன் மனோஜை நாயகனாக வைத்து இயக்கிய தாஜ்மஹால் படம் வெளியாகி தோல்வி அடைந்திருந்தது. தன் மகனை நிலை நிறுத்துவதற்காக சரணை அணுகினார் பாரதிராஜா. ஏ ஆர் ரஹ்மான் இசை அமைக்க, ஈவ் டீஸிங்கை மையமாக வைத்து “அல்லி அர்ஜுனா” படம் தயாரானது. இதில் சென்னையின் நடைபாதை உணவகம் ஒரு பகுதியின் பிண்ணனியாக வந்தது. ரஹ்மான் ஒரு இந்திப் படத்திற்கு கொடுத்திருந்த பாடல்களையே இதற்கு கொடுத்தார். இந்தப்
படம் படுதோல்வி,

இந்தப் படம் உருவாக்கத்தில் இருக்கும் போதே, ஏவி எம்மின் தயாரிப்பில்
படம் இயக்கும் வாய்ப்பு சரணுக்கு கிடைத்தது. அதற்கு சில மாதங்கள்
முன்புதான் அஜீத்குமாரை நாயகனாக வைத்து ஏறுமுகம் என்னும் படத்தை
தொடங்கினார் சரண். ஆனால் அதில் இருந்து அஜீத் விலகிக்கொள்ள படம்
கைவிடப்பட்டது. இதே கதையை, விக்ரமை நாயகனாக வைத்து ஜெமினி என்னும் பெயரில் இயக்கினார் சரண். பட பூஜையன்றே பட வெளியீட்டுத் தேதியை அறிவித்து களத்தில் இறங்கியது ஏவிஎம் நிறுவனம். இந்தப் படம் வட சென்னை ரவுடிகளை களமாகக் கொண்டு வந்தது. நாயகிக்கு சௌகார் பேட்டை பிண்ணனி. தில், காசி ஆகிய படங்களின் வெற்றியோடு இருந்த விக்ரம், ஹைப் ஏற்றிய ஓ போடு பாடல், ஏவிஎம்மின் விளம்பர உத்தி என பல அட்வாண்டேஜ்களோடு திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். விக்ரமுக்கு, தில் கொடுத்திருந்த ஆக்சன் ஹீரோ இடத்தை இந்தப்படம் உறுதி செய்தது. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எல்லா செண்டர்களிலும் தியேட்டர் நிரம்பியது இந்தப்படத்திற்குத்தான்.

அடுத்து மாதவனோடு ”ஜே ஜே” படத்தில் களமிறங்கினார் சரண். காதலைச் சொல்லாத காதலியைத் தேடிப் பயணிக்கும் கதைக்கு பக்கபலமாக எம் எல் ஏ ஹாஸ்டலில் தங்கியிருப்பது. அவ்வளவாக தமிழ் திரையில் வந்திராத சட்டக்கல்லூரி மாணவர் விடுதி, ஜாதிக் கட்சி நடத்தும் வில்லன்கள் என சுவராசியமான சென்னை பிண்ணனிகள். பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது.

மீண்டும் அஜீத்துடன் இணைந்து அட்டகாசம் படத்தை ஆரம்பித்தார் சரண்.
கமல்ஹாசனை வைத்து முன்னாபாய் எம் பி பி எஸ்ஸை ரீமேக் செய்யும் வாய்ப்பும் சரணுக்கு கிடைத்தது. குறுகிய காலத்தில் சரண் கமல்ஹாசனை வைத்து இயக்கிய வசூல்ராஜா நல்ல வெற்றியைப் பெற்றது. அடுத்து வெளியான அஜீத் இருவேடங்களில் நடித்த அட்டகாசமும் தோல்வியில் இருந்து தப்பியது.

அடுத்து ஜெயம்ரவி-காம்னா ஜெத்மலானி நடிக்க “இதயத் திருடன்” படத்தையும், ஆர்யா-கீரத் நடிக்க வட்டாரம் படத்தையும் இயக்கினார் சரண். இதயத்திருடன் படுதோல்வி. வட்டாரத்தில் வட சென்னை துப்பாக்கி வியாபாரம் என்னும் பிண்ணனி படத்தை ஓரளவு தப்பிக்க வைத்தது. அடுத்து மூன்றாடுகள் இடைவெளிக்குப் பிறகு வினய்-காஜல் அகர்வால் நடிக்க எஸ்.ராமகிருஷ்ணன் வசனத்தில் மோதி விளையாடு வெளியானது. இந்தப்படமும் படுதோல்வி.

அடுத்ததாக, சிவாஜி புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் தன் ஆஸ்தான ஹீரோ அஜீத்குமாரை வைத்து “அசல்” படத்தை இயக்கினார். இந்தப்படமும் தோல்விப் பட்டியலில் இணைந்தது. அடுத்ததாக வினய் நடிக்க, ஆயிரத்தில் இருவர் என்னும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் சரண்.

சரண் இயக்கத்தில் படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குநர், வசூல் சாதனைப்
படங்களும் கொடுத்தவர் அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே திணற என்ன காரணம்?

சரணின் படங்கள் எதுவுமே வலுவான கதையைக் கொண்ட படங்கள் இல்லை. ஆனால் எல்லாப் படங்களிலுமே ஒரு புதுமையான முடிச்சு இருக்கும். கதைப்
பிண்ணனியில் வலுவான சம்பவங்கள் இல்லாவிட்டாலும் சென்னைப் பிண்ணனியில் அதுவரை அவ்வளவாக திரையில் வராத சம்பவங்கள், உரையாடல்கள் இருக்கும்.

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாயிருக்கும். பட வெளியீட்டுக்கு முன்னதாக படம்
பற்றி ஒரு பாசிட்டிவ்வான ஹைப் ஏற்படுத்தப்பட்டிருக்கும். மேலும் இவற்றை
எல்லாம் தாங்கிப்பிடிக்க ஒரு வலுவான ஹீரோவும் படத்தில் இருப்பார்.
இவற்றில் எது குறைந்தாலும் படம் நிச்சயம் தோல்வி அடையும்படிதான்
இருக்கும். அல்லி அர்ஜுனாவை எடுத்துக் கொண்டால் படத்தின் திரைக்கதையை வலுவாக்கும் காட்சிகள் மிக சாதாரணமாக அமைந்திருந்தன. அதற்கு காரணம் நாயகன் – நாயகி. ஒரு உணர்ச்சிமயமான ஈவ் டீசிங் தொடர்பான பகுதி இருந்தும் படம் மனதில் ஒட்டவில்லை.

இதயத்திருடனும் வட்டாரமும் அப்படித்தான். சரணின் சாதாரண காட்சி, வசனங்களை தூக்கி நிறுத்த ஜெயம் ரவியாலும், ஆர்யாவாலும் முடியவில்லை. மோதி விளையாடு வினய்யும் பெர்பார்ம் செய்யக்கூடிய அளவு பெரிய நடிகரில்லை. மேலும் இந்தப் படங்களில் சரணின் பலமான சென்னை பிண்ணனி ஏதும் சிறப்பாக அமையவில்லை. பார்வையாளர்களால் படத்தில் காட்டப்பட்ட பிண்ணனியுடன் ஒன்ற முடியவில்லை.

அசல் படம் இன்னும் மோசம். நல்ல தயாரிப்பாளர், பெரிய ஹீரோ இருந்தும் மிக சாதாரணமான கதையை தேர்ந்தெடுத்திருந்தார். சிவாஜியை மனதில் வைத்து எழுதப்பட்ட பாட்டு என வைரமுத்துவால் சிலாகிக்கப்பட்ட “என் தந்தை தான்” பாடல் ஒரு நியாயமான கடத்தல்காரருக்கு?! வைக்கப்பட்டது. சரணின் பலமே சென்னைப் பிண்ணையில் கதை அமைப்பதுதான். அசலில் சம்பந்தமில்லாத இடம், கதாபாத்திரங்களின் பெயர்களைக் கூட பரிச்சியமில்லாமல் வைத்திருந்தார்.

நல்ல பாடல்களை இசை அமைப்பாளரிடம் இருந்து வாங்குவது, கேட்சியான வரிகளை பாடல் ஆசிரியரிடம் இருந்து வாங்குவது, என திறமைகள் கொண்ட சரண், கதைகளையும் நன்கு செலக்ட் செய்திருந்தால் இந்தக் கடைசி 11 ஆண்டுகளில் ஒரு படமாவது சொல்லிக் கொள்ளும்படி கொடுத்திருக்கலாம். காதல் மற்றும் தாதா சம்பந்தமான கதைகளையே தொடர்ந்து கையாண்டு வந்திருக்கார் சரண். எனவே சில படங்களுக்குப் பின்னர், தன் ஆரம்பகாலப் படங்களுக்கு ஏற்படுத்திய படம் பார்க்கும் ஆர்வத்தை மக்களிடையே அவரால் அதற்குப் பின்னர் ஏற்படுத்த முடியவில்லை.

சரண் இயக்கும் படங்களுக்கான பார்வையாளர்கள் என்று பார்த்தால் நகர
இளைஞர்களும், நடுத்தர வர்க்க மக்களும் தான். அவர்களுக்கு அப்பீலாகும்
கதைகளை விட்டு விலகி எடுத்த படங்களில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.

மேலும் சென்னையின் அடையாளங்களும் விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளில் சென்னையின் அடையாளமாக கருதப்பட்ட பல இடங்கள் தங்கள் இடத்தை இழந்துவிட்டன. அதற்குப்பதிலாக பல புதிய இடங்கள் வந்துவிட்டன. வெங்கட் பிரபுவின் “சென்னை-28” மற்றும் பா.ரஞ்சித்தின் அட்ட கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்கள் சென்னையை பிண்ணனியாக மட்டும் கொள்ளாமல் சென்னையின் அசல் வாழ்க்கையையே இறங்கி காட்டி விட்டன.

சரண் தற்போது இயக்கி வரும் “ஆயிரத்தில் இருவர்” கூட ஹவாலா பிண்ணனியில் அமைந்த கதைதான் என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்திருக்கிறது. தாதாயிசம்,ஹவாலா கதைகளில் எல்லாம் இப்போது மிகவும் இறங்கி, அக்கு வேறு ஆணி வேறாக அலசி படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சரண் தன் மேலோட்டமான பாணியில் இந்தப் படத்தை இயக்காமல் ஆழமான காட்சி அமைப்புடன் இயக்கினால் வெற்றி நிச்சயம் அவருக்கு.

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான அலசல்!