December 26, 2014

ராம்கி

ராம்கி அடையாறு திரைப்பட கல்லூரியில் நடிப்புப் பயிற்சியில் பட்டயச் சான்று பெற்றவர். அவர் இண்டர்வியூவிற்கு சென்ற போது, மனோரமா அவர்கள் தான் அவரது திறமையை பரிசோதித்தவர். உனக்கு சீட் கிடையாதுப்பா என்று சொன்ன போது அவர் உடனே பொங்கி அழுது விட்டாராம். உடனே மனோரமா அவர்கள் இப்படி சென்சிட்டிவ்வாக இருப்பது ஒரு நடிகனுக்கு மிக அவசியம் என்று சொல்லி சீட் வழங்கினாராம்.  சின்னப்பூவே மெல்லப்பேசு படம் வெளியாகி பரவலான கவனிப்பை தமிழகம் முழுவதும் ராம்கி பெற்றிருந்த நேரம். எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் அவரின் பேட்டி இருக்கும்.  அதில் இந்த சம்பவத்தை தவறாமல் கூறியிருப்பார்.

சின்னப் பூவே மெல்லப் பேசு படத்தில் கல்லூரி மாணவன் வேடம். படம் பார்த்தவர்களில் பெரும்பாலோனோர், முதல் படம் மாதிரியே தெரியலையே? நல்லா நடிச்சிருக்கானே! என்று ஆச்சரியப்பட்டார்கள். தொடர்ந்து நாலு வருடங்கள் பலவிதமான கேரக்டர்களில் நடித்தார் ராம்கி. எல்லாமே தமிழக மக்கள் தங்கள் மனம் கவரும் நாயகனை அடையாளம் கண்டு கொள்ளும் வகையிலான கேரக்டர்களே.

பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தங்கை மேல் அளவிலா பாசம் கொண்ட அண்ணனாக “தங்கச்சி”,  ஆபாவாணன் உள்ளிட்ட திரைப்பட கல்லூரி மாணவர்களின்  தயாரிப்பில் உருவான ”செந்தூரப்பூவே”, அழகப்பன் இயக்கத்தில் உருவான “இரண்டில் ஒன்று”,  ஆர் சி சக்தி இயக்கத்தில் “அம்மா பிள்ளை”, ஆபாவாணனின் இணைந்த கைகள், முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசு கதை வசனம் எழுதிய மருதுபாண்டி, மனோஜ்குமார் இயக்கத்தில் வெள்ளையத்தேவன், பாரதி மோகன் இயக்கத்தில் “ஒரு தொட்டில் சபதம், மனோ பாலா இயக்கத்தில் போலிஸ் அதிகாரியாக “வெற்றிப்படிகள்”, கவலையற்ற இளைஞனாக ஏவிஎம்மின் பெண்புத்தி முன் புத்தி என ஒன்றுக்கொன்று வித்தியாசமான வேடங்களில் நடித்தார் ராம்கி.
1992 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலையின் அடிப்படையில் செல்வமணி இயக்கிய ”குற்றப்பத்திரிக்கை” படத்தில் ஒப்பந்தமானார். புலன் விசாரனை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி என தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் செல்வமணி இயக்கிய படம். இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருமே ஏதாவது ஒருவகையில் தங்கள் கேரியரில் இறக்கத்தை சம்பாதித்தார்கள்.அதில் ஒருவர் ராம்கி. குற்றப்பத்திரிக்கை படம் வெளியாவதில் இருந்த பிரச்சினைகள் காரணமாக ஓராண்டிற்கு எந்தப் படமும் ராம்கிக்கு வெளிவராமல் போனது.

அதன்பின்னர் ஆத்மா, பாஸ்மார்க் ஆகிய படங்களில் நடித்தார். அப்போது புதிதாய் வந்திருந்த ரசிகர்கள் இது பழைய ஆளுடா என்ற கண்ணோட்டத்தில் ராம்கியைப் பார்த்தார்கள். ஓராண்டு இடைவெளி என்பது சாதாரணமான ஒன்றுதான். விக்ரம் போன்ற நடிகர்கள் இரண்டாண்டுகள் வரை ஒரு படத்திற்காக மெனக்கெடுகிறார்கள். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் மார்க்கட் இழந்து மீண்டும் ரீ எண்ட்ரி ஆனவரைப் போலவே ராம்கியை பலர் கருதினார்கள்.

1994 ஆம் ஆண்டில் கேயார் இயக்கிய ”வனஜா கிரிஜா” வில் நெப்போலியனுடன் இணைந்து நடித்தார். கேயார் சற்று நவீனப்படுத்தப்பட்ட ராம நாராயணன். இந்தப் படத்தைத் தொடர்ந்து இரண்டு நாயகர்களில் ஒருவராக அல்லது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் வாய்ப்புக் கிடைத்தது ராம்கிக்கு. கேயார் தன்னுடைய படங்களில் தொடர்ந்து ராம்கியைப் பயன்படுத்தினார். மாயாபஜார், எனக்கொரு மகன் பிறப்பான், இரட்டை ரோஜா ஆகிய நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ராம்கி தொடர்ந்து நடித்தார். கேயார், விஜயசாந்தியை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்று போன ஜான்ஸியிலும் ராம்கிதான் ஹீரோ. ஆனாலும் இடை இடையே கருப்பு ரோஜா, ராஜாளி என இன்ஸ்டியூட் மாணவர்களின் படங்களில் ஆக்‌ஷன் ரோல்களிலும் நடித்து வந்தார்.

ரங்கநாதன் இயக்கிய ”ஆஹா என்ன பொருத்தம்”, ரமேஷ் கண்ணன் இயக்கிய தடயம், களஞ்சியம் இயக்கத்தில் கார்த்திக்குடன் இணைந்து நிலவே முகம் காட்டு ஆகிய படங்களில் நடித்தாலும் மக்களின் கவனத்தை கவர முடியவில்லை.

2000 ஆவது ஆண்டில் கேயாரின் ஒரிஜினலான ராம நாராயணனின் “பாளையத்து அம்மன்” படத்தில் நடித்தார் ராம்கி. தொடர்ந்து விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஷக்கலக்க பேபி ஆகிய நகைச்சுவை நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ராம நாராயணன் இயக்கிய படங்களில் நடித்தார். இந்தப் படங்களில் கிட்டத்தட்ட செட் பிராப்பர்டி போலவே ராம்கி பயன்படுத்தப் பட்டார். ஒஹோ இவர் இப்போ இந்த மாதிரிப் படங்களில் தான் நடிக்கிறாரோ என்பதை உறுதிப்படுத்துவது போல புகழ்மணி இயக்கிய “படை வீட்டு அம்மன்” படத்திலும் நடித்தார். அத்தோடு சரி. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாசாணி, பிரியாணி ஆகிய படங்களில் நடித்தார்.

முதல் படத்தில் நன்கு பெயர் வாங்கிய நடிகர், அடுத்தடுத்து வெரைட்டியான ரோலகளில் நடித்தவர், வெற்றி பெற்ற படங்களில் பங்கெடுத்த நடிகர், தொடர்ந்து தன்னை தக்க வைக்க முடியாமல் போக என்ன காரணம்? பின்னர் ஓரளவு வாய்ப்புகள் கிடைத்து நடித்துக் கொண்டு இருக்கும் போதே பத்தாண்டுகள் அளவிற்கு வாய்ப்பில்லாமல், திரைத்துறையினரால் மறக்கப் படுவதற்கு என்ன காரணம்?
முதற் காரணமாகத் தோன்றுவது சரியான மக்கள் தொடர்பு இல்லாமை. செந்தூரப் பூவே படத்தில் ராம்கியின் ஜோடியாக அறிமுகமானார் நிரோஷா. தொடர்ந்து சில படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தனர். அந்தக் காலகட்டத்தில் வந்த சினிமா பத்திரிக்கை மற்றும் வார இதழ்களில் ராம்கி/நிரோஷாவைப் பற்றிய கிசு கிசு வராத வாரமில்லை. தாலி கட்டாமல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிறார்கள், அடுத்த மாதம் கல்யாணம் என விதவிதமாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது. இப்போதைய காலகட்டத்தில் இம்மாதிரி கிசுகிசுக்கள் நடிகர்களுக்கு பலத்த கவனிப்பை மக்களிடையே பெற்றுத்தருகின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் கன்சர்வேடிவ் மனநிலையில் இருந்த 80களின் இறுதியில் மக்கள் இதை ஒவ்வாமையுடன் தான் பார்த்தார்கள்.

மேலும் நாயகன் என்றால் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் அல்லது உதவி செய்வது போன்ற செய்திகளையாவது பத்திரிக்கையில் வரவைக்க வேண்டும். வெற்றிபெற்ற நடிகர்கள் அனைவருமே இதில் தனி சிரத்தை எடுத்திருப்பார்கள். ஆனால் ராம்கி இம்மாதிரி வேலைகளை எல்லாம் செய்யவில்லை. குற்றப்பத்திரிக்கை படம் தாமதமான சமயத்தில் ஒரு அனுதாபம் ஏற்படுமாறு செய்திகளை வரவைப்பதில் ஏதும் ஆர்வம் காட்டவில்லை. முதல் படம் நடித்து  முடித்த நிலையில் தொடர்ந்து பத்திரிக்கைகளில் பேட்டி கொடுத்தவர் பின்னர் அதைக் கடைப் பிடிக்கவில்லை. அவ்வளவு ஏன்? 2000க்குப் பின்னர் செயற்கைக்கோள் தொலைக்காட்சி முதல் நிலை ஊடகமாக வளர்ச்சியடைந்த பின்னர் அதில் பங்கெடுப்பதில் ராம்கி எந்த ஆர்வமும் காட்டவில்லை. இதனால் பல ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் முடங்கிக் கிடக்கும் நிலை ராம்கிக்கு ஏற்பட்டது.

ஒரு நடிகனை, தமிழக மக்கள் கிராமத்து கதாபாத்திரத்தில்  ஏற்றுக்கொண்டாலோ அல்லது ஆக்‌ஷன் வேடத்தில் ஏற்றுக் கொண்டாலோ எளிதில் கைவிட்டு விட மாட்டார்கள். எஸ்,திருநாவுக்கரசு அவர்களில் கதையில் உருவான மருதுபாண்டி சி செண்டர் வரை நன்கு ஓடிய படம். ஒரு வீரமிக்க கிராமத்து இளைஞனாக ராம்கியை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். மனோஜ்குமார் இயக்கிய வெள்ளைய தேவன் படத்திலும் வீரமான கிராமத்து இளைஞன் வேடம் தான். ராம்கிக்கு அவருக்கு கிடைத்த வரவேற்பை தக்க வைக்கும் கலை கைகூடி வரவில்லை.

எத்தனை வேடங்களில் நடித்திருந்தாலும், ராம்கி என்ற உடன் நினைவுக்கு வருவது ஒரு துறுதுறுப்பான, துடுக்குத்தனமான இளைஞன் தான். சின்னப்பூவே மெல்லப் பேசு, பெண் புத்தி முன் புத்தி, பாஸ்மார்க் ஆகிய படங்களில் அதை சிறப்பாக பிரதிபலித்திருப்பார். ஆஹா என்ன பொருத்தம் படம் வரையிலும் கூட அந்த சார்ம் அவரிடம் இருந்தது. அந்த வேடத்தை அவரைவிட சிறப்பாக செய்யும் இளமையான ஆட்கள் வந்த உடன் அவர் இடம் பறிபோனது.

ராம்கிக்கு இருந்த இன்னொரு பிரச்சினை, அவருடன் நடிப்பவர்கள் அவரைவிட ஸ்கோர் செய்து விடுவது. செந்தூரப்பூவேவில் விஜயகாந்த், விஜயலலிதா, கேயாரின் படங்களில் நடிக்கும் போது குஷ்பூ, ஊர்வசி. அவ்வளவாக பெர்பார்மன்ஸ் கொடுக்க இயலாத அருண் பாண்டியன் கூட “இணைந்த கைகள்” படத்தில் நடிக்கும் போது, ராம்கியைவிட அதிக கவன் ஈர்ப்பு பெற்றார்.

ராம்கி நடிக்க வந்த புதிதில் ரஜினி, கமல், விஜயகாந்த் எல்லோரும் ரசிகர்களை கவரும் வயதில் இருந்தார்கள். அவர்களுக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு. ஓரளவு தாக்குப்பிடித்து வளர்ந்து வந்த நிலையில் ஒராண்டிற்குப் படங்கள் இல்லாமல் போனது பெரிய இழப்பு ராம்கிக்கு. மீண்டும் திரும்பி வந்த போது, அஜீத், விஜய் என ரசிகர்களை கவரும் அடுத்த செட் ஆட்கள் வந்துவிட்டார்கள். முந்தைய தலைமுறையோடு போட்டி போட்டு ரசிகர்களை கவரும் அளவிற்கு ராம்கியிடம் பெர்பார்மன்ஸ் இல்லை. அடுத்த தலைமுறையோடு போட்டி போட வயது தடையாகிவிட்டது.


பிரியாணி படத்தில் ராம்கியைப் பார்த்தவர்கள் ஆள் இன்னும் அப்படியே இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார்கள். 50 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் நாயகன் வேடத்துக்கு பொருத்தமான ஒரு உடலமைப்புடன் தான் இருக்கிறார்.நாயகனாக இல்லாவிட்டாலும் நல்ல துணை கதாபாத்திரங்களில் நடித்து தன்னை நிரூபிக்கலாம் சரியான மக்கள் தொடர்பு பணியினை மேற்கொண்டால்.


December 03, 2014

ஏ ஆர் ரஹ்மான்

இரண்டாம் ஆண்டில் கேரளா அல்லது கர்நாடகாவிற்கு ஒரு ஒரு வார டூர் நான்காம் ஆண்டில் ஒரு 15 நாள் ஆல் இந்தியா டூர் என்பது 90களில் பொறியியல் கல்லூரிகளில் எழுதப்படாத விதியாக இருந்த காலம். இரண்டாம் ஆண்டில் நுழைந்த உடனேயே முதலில் சிலபஸ் பார்க்கிறார்களோ இல்லையோ டூர் புரோகிராம் பிளான் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் கேரளா செல்வது என்று முடிவானது. பேருந்தில் கேட்பதற்காக பாடல் கேசட் ரெடி செய்யும் பொறுப்பு என்னிடம் வந்தது. காலையில பிளசண்டா இருக்கணும், மதியம் குத்து சாயங்காலம் சோக மெலடி இந்த டைப்புல நாலஞ்சு கேசட் ரெடி பண்ணு என்று டூர் கோ ஆர்டினேட்டர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள்.

அதன்படி செலக்ட் செய்து பதியக் கொடுத்திருந்த கேசட்டுகளை வாங்கப் போன போது, மணிரத்னத்தோட ரோஜா பாட்டு கேசட் வந்திருச்சு. நல்லா இருக்கு, வாங்கிக்குங்க என்றார் கடைக்காரர். இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் அதிகாரி துரைச்சாமி கடத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட படம். தளபதியின் கலெக்டர் நாயகனாக நடிக்கிறார், புது இசை அமைப்பாளர் அறிமுகமாகிறார் என்ற அளவில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த நேரம். மணிரத்னமுடைய படம் என்பதால் நம்பி வாங்கினேன்.

டூரில் முதல் நாள் பிரியாணி சாப்பிட்டவர்கள் மூன்றாம் நாளில் மீல்ஸுக்கும் ஐந்தாம் நாளில் தயிர்சாதத்துக்கும் மாறியிருந்த நேரம். மலம்புழா டேம் செல்லும் வழியில் மதிய நேரம் ஒரு ஆற்றின் கரையில் வண்டியை ஹால்ட் செய்தோம். ஆகஸ்ட் மாத கேரள ஜிலீர் கிளைமேட், குளிக்க பதமாக ஓடும் ஆறு, அருகிலிருந்த ஓலை வேய்ந்த நாயர் மெஸ்ஸில் சுடச்சுட சாப்பாடு. 5 மணிக்கு கிளம்புவதாக பிளான் என்பதால் அவரவர் செட்டுடன் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருந்தார்கள். எங்கள் குரூப் பஸ்ஸில் ரம்மி விளையாடத் துவங்கினோம். வேற கேசட்டே இல்லையாடா என்ற நண்பனின் வேண்டுகோளுக்காக ஒலிக்க விடப்பட்டது ரோஜா படப் பாடல்.

வாழ்வின் இனிமையான தருணங்களில் ஒன்றாகிப் போன நிகழ்வு அது. அந்த கிளைமேட்டிற்கும், நட்பு அரட்டைக்கும் பிண்ணனியாக ரோஜா பாடல்கள். நல்லா இருக்கில்ல என்று பேசிக் கொண்டோம். அதன்பின் சில நாட்களில் ஆகஸ்ட் 15 அன்று படம் ரிலீஸானது. ஏ சைடு பூராம் ரோஜா பாட்டு பதிஞ்சு வச்சிருக்கோம். பி சைடுல பெரும்பாலும் சூரியன், அண்ணாமலை, தெய்வவாக்கு இல்லையின்னா செம்பருத்தி போட்டு கொடுத்திடுவோம் என்பார் கேசட் கடைக்காரர். கல்லூரி விழாக்கள், விசேஷ வீடுகள் என ரோஜா பாடல்கள் மெல்ல ஊடுருவி ரஹ்மானின் பெயர் பரிச்சயமாகத் தொடங்கியது.

ஒரு மனிதனின் வெயில் தாங்கும் திறமையை சோதிக்கும் பரிசோதனை களங்களில் ஒன்றான விருதுநகர் அருகே ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டு விசேஷம். 20 பேர் பிரயாணிக்கும் வசதி கொண்ட மெட்டடார் வேனில் நண்டு சிண்டுகளோடு முப்பதுக்கும் அதிகமானோர் மத்தியான உச்சி வெயிலில் வறண்ட கந்தகபூமியின் வழியே திரும்பி வந்து கொண்டிருக்கிறோம். இரவில்  ராட்சஷர்கள் பல்லாங்குழி  விளையாடுவார்களோ என்று நினைக்கும் அளவில் குழியும் சரளைக்கற்களும் நிறைந்த சாலை. ஆரத்திக்காக முன் யோசனையில் ஒரு குளிர்பான பாட்டிலில் மஞ்சள் குங்குமம் கரைத்து வைத்திருந்தார்கள். அதை குளிர்பானம் என்று நினைத்து ஒரு வாண்டு குடித்து, தான் காலையில் வெஜிடபிள் பிரியாணிதான் சாப்பிட்டேன் என்பதை வேனில் அனைவருக்கும் சந்தேகமின்றி நிரூபித்திருந்தான். சுற்றிலும் அவுங்க விசேஷத்துக்கு 101 ரூபாய் எழுதியிருந்தேன். இன்னைக்கு 51 ஓவாதான் எழுதியிருக்காங்க என்ற புலம்பல்கள் என ஐம்புலன்களும் சோதனைக்குள்ளான நேரம். அப்போது, வேன் ட்ரைவர் ஒரு பாடல் கேசட்டை ஒலிக்க விட்டார். அத்தனை சிரமங்களும் குறைந்தாற்போல ஒரு உணர்வு. வேனில் இருந்த பலரும் அதை அனுபவித்தனர். அதுதான் ஜெண்டில்மேன்.

அதன்பின் ஒரு மூன்று மாதங்கள் எல்லாப் பக்கமும் ஜெண்டில்மேன் பாடல்கள் தான். அந்தக்காலம் சிடி பிளேயர்களின் வருகைக்கு சற்றே சற்று முன்னாலான காலம். பிலிப்ஸ் நிறுவனம் டைனமிக் பேஸ் பூஸ்ட் அது இது என பல மாடல்களை இறக்கியிருந்த நேரம். அந்த டேப் ரிக்காடர்களின் டெமோவுக்கு எல்லாம் ஜெண்டில்மேன் ஒரிஜினல் காசட்டைத்தான் கடைக்காரர்கள் உபயோகப் படுத்துவார்கள். உசிலம்பட்டி பெண்குட்டியும், ஒட்டகத்தை கட்டிக்கோ பாடலும் ஒலிக்காத விழாக்கள் எதுவுமேயில்லை.

அதே ஆண்டு தீபாவளிக்கு மணிரத்னத்தின் திருடா திருடாவும், பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலேவும். ரோஜா, ஜெண்டில்மேன் வரிசையில் திருடா திருடா எதிர்பார்த்த மெகா ஹிட். ஆனால் கிழக்கு சீமையிலே? டெண்டுல்கர் அறிமுகமாகி பலரையும் விளாசி பெயர் பெற்ற நேரத்தில் அவரை இன்னும் வெகுவாக நம்பலாம் என்ற மாற்றத்தை ஏற்படுத்தியது 92ல் பெர்த் டெஸ்டில் அவர் அடித்த சதம். எகிறும் பிட்ச்சில் ஆஸ்திரேலிய வேகங்களை அவர் ஆடிய விதத்தைக் கண்டபின்னர் அவரை சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதுபோலத்தான் கிழக்குச்சீமையிலே ரஹ்மானுக்கு. மானுத்து மந்தையிலேதான் இன்னும் மதுரையில் காதுகுத்துக்கு தாய் மாமன் சீர் பாடல். இது மாற வெகு காலமாகும். தென்கிழக்கு சீமையிலேவும், எதுக்கு பொண்டாட்டியும் இவன் இருப்பான்யா இருப்பான் என எல்லோர் மனதிலும் ஓர் எண்ணத்தை ஏற்படுத்தியது.

அடுத்த ஆண்டில் டூயட், கருத்தம்மா மற்றும் காதலன். ரெக்கார்ட் எழுதணும்டா அந்த டூயட் கேசட்டைக் குடுடா, அலுப்பில்லாம எழுதலாம் என்று சகஜமாக ஹாஸ்டல் அறையில் பேச்சு கேட்கும். கருத்தம்மா அந்த அளவுக்கு இளைஞர்களை வசீகரிக்கவில்லையென்றாலும் போறாளே பொன்னுத்தாயியும், அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆம்பிளையா நீ பிறந்தா பூமியிலே இடமிருக்கும் போய்வாடி அன்னக்கிளியேவும் உலுக்கத்தான் செய்தது.

ஒரு அலை போல அப்போதைய கல்லூரி,பள்ளி மாணவர்களை கிறங்கடித்தது காதலன் தான். இரண்டாம் மாடி கடைக்கோடி ரூமில் இருந்து கிரவுண்ட் புளோர் மெஸ்ஸுக்கு வந்து சேர்வதற்குள் காதலன் படத்தின் எல்லாப் பாடல்களும் காதில் விழுந்துவிடும். என்னவளேவும் முக்காப்புலாவும் கேட்டிராத காது கேட்காத காது மட்டும்தான். எந்த கல்லூரி கல்சுரலுக்கு போனாலும் சோலோவுக்கு என்னவளே பாடுவார்கள், வெஸ்டன் டான்ஸுக்கு முக்காப்புலா, போக் டான்ஸுக்கு கோழிக்குஞ்சு தேடிவந்த கோபாலா. டேக் இட் ஈஸி ஊர்வசி எல்லாம் ஆத்திச்சூடி போல அனைவருக்கும் மனப்பாடம்.

ஊசி மூலம்
உடலில் பச்சை குத்துவது போல்
காது மூலம்
மனதில் பாட்டு குத்தும்
மாயக்காரன் நீ

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
உன் இசையோ
செவிப் பழக்கம்

என்று திடீர்க்கவிஞர்கள் உருவாகும் அளவுக்கு அந்த ஆண்டு முழுவதும் ரஹ்மானின் இசை கொடிகட்டிப் பறந்தது.


95ல் பம்பாய். பாஸ்கட் பால் விளையாட்டில் அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் ஐந்து பத்து பாயிண்ட்களுக்குள் இருந்தால் அது நிலையான முண்ணனி கிடையாது. ஒரு தம் பிடித்தால் எளிதில் அதை எட்டிப்பிடித்து விடலாம். இருபத்தைந்து, முப்பது பாயிண்ட் முண்ணனி என்றால் துரத்திப் பிடிப்பது கடினம். இதை துண்டாகப் போய்விடுவது என்று சொல்வார்கள். திரைக்கலைஞர்களின் புகழும் அப்படித்தான். மக்களின் ரசனைக்கு கொஞ்சம் மேலே இருப்பவர்கள் எல்லாம் கால வெள்ளத்தில் துரத்தி பிடிக்கப்பட்டு அமிழ்ந்து விடுவார்கள். தொடர்ச்சியாக சிறப்புகளை தருபவர்கள் தமிழ் சமுதாயத்தால் மறக்க முடியாதவர்கள் ஆவார்கள். ரஹ்மான் பம்பாய் பாடல்களின் வெற்றிக்கு பின்னால் துரத்தி பிடிக்க முடியாத அளவுக்கு சென்று தமிழர்களால் மறக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டார்.

November 22, 2014

சந்திர சேகர்

மதுரை மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்த, இப்போது வாகை சந்திரசேகர் என்று பெயர்மாற்றம் செய்துகொண்ட சந்திரசேகர், தமிழ்சினிமாவில் முக்கிய நாயகன்களில் ஒருவராக வருவார் என்று அவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் பலரும் எதிர்பார்த்தார்கள். தனது நடிப்புலக வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாமே அக்கால கட்டத்திற்கு புதுமையான களனைக் கொண்ட படங்கள். அவற்றில் பல வணிகரீதியான வெற்றியைப் பெற்றவை மற்றும் பொதுமக்களிடம் சென்று சேர்ந்தவை. ஆனால் சில ஆண்டுகளிலேயே அவர் சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் படங்களில் நடிப்பது படிப்படியாக குறைய ஆரம்பித்தது.  இப்படி எதிர்பார்க்கப்பட்ட ஒருவர் தமிழ்சினிமாவில் நிலைக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கும். ஆனால் சந்திரசேகருக்கு அவரின் மீது விழுந்த முத்திரைகள் முக்கிய காரணமாய் அமைந்தது.

தமிழ்சினிமாவில் ஒருவருக்கு முத்திரை குத்துவது என்பது சகஜமான ஒன்று. தங்கை வேடம், நண்பன் வேடம் ஆகியவற்றை ஏற்றவர்கள் அதிலிரிருந்து வெளியேற பிரம்ம பிரயத்னம் செய்யவேண்டும். நாயகன், சத்யா படங்களில் நடித்த ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டி அப்போது நடித்து வந்த படங்களில் எல்லாம் இறந்து போவதுபோலவே காட்சி அமைப்பு இருக்கும். ஒருமுறை அவர் ஷூட்டிங்கில் இருந்து திரும்பிவரும் பொழுது, அவருடைய மகன் “அப்பா, இந்தப் படத்தில் நீங்கள் எப்படி சாகப்போகிறீர்கள்” என்று கேட்டாராம். கமலா காமேஷ் என்றாலே வயதான ஏழைப் பெண், தலைவாசல் விஜய் என்றாலே குடிகாரர் என்று இயக்குநர்களே முன்முடிவுடன் தான் இங்கே சிந்திப்பார்கள்.

ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட முத்திரை வாங்கியவர்கள் தமிழ்சினிமாவில் வெகு சிலரே. அவர்களுள் ஒருவர் சந்திரசேகர்.

70களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் வந்த, அப்போதைய காலகட்டத்திற்கு புது முயற்சியான படங்கள் எல்லாவற்றிலும் சந்திரசேகர் பிரதான பாத்திரமாக இருந்தார். பாரதிராஜாவின் இயக்கத்தில் புதிய வார்ப்புகளில் அறிமுகமான சந்திரசேகர் நிழல்கள், கல்லுக்குள் ஈரம், சுமை, ஒருதலை ராகம், பாலைவனச்சோலை, சிவப்பு மல்லி என தொடர்ந்து அந்த நேரத்தில் புது கதைக்களமாக இருந்த படங்களில் எல்லாம் அவர் நடித்தார்.

இந்த படங்களில் நடித்த போது, அவருக்கு மூன்றுவகையான முத்திரைகள் குத்தப்பட்டது. இதுபோக கலைஞரின் வசனத்தில் உருவான “தூக்கு மேடை” படத்தில் நடித்த போது இன்னுமொரு முத்திரை குத்தப்பட்டது. சோகம் என்றவென்றால் இந்த முத்திரைகளில் இருந்து இந்த 35 ஆண்டுகளாக அவரால் மீண்டுவரவே முடியவில்லை.
முதல் முத்திரை என்பது தியாகம்/உதவி செய்யும் நண்பன் என்னும் கேரக்டர்.  சந்திரசேகர் என்றாலே ஒரு சோகமயமான, உயிர்கொடுக்கும், உதவும் நண்பன் என்ற பிம்பம் இயக்குநர்களுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கே உண்டு. அவர் நடிக்க ஆரம்பித்த காலம் தொட்டு, இப்போதுவரை அந்த கேரக்டர் அவருடனேயே தொடர்ந்து வருகிறது. ஊமை விழிகள், செந்தூரப்பூவே, ஜெய்ஹிந்த் என அது தொடர்கதையாகவே வருகிறது. இதற்கெல்லாம் மகுடமாக 2002ல் வெளிவந்த சார்லி, சந்திரசேகர் இணைந்து நடித்த ”நண்பா நண்பா” வில் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசியவிருது கிடைத்தது. இந்தப் படத்திலும் நட்புதான் பிரதானம். ஒரே வித்தியாசம், சந்திரசேகருக்காக சார்லி நிறைய தியாகம் செய்வார்.

இன்னொரு முத்திரை இவர் ஒரு கம்யூனிசவாதி என்பது. இவர் ஆரம்பத்தில் நடித்த சுமை, சிவப்பு மல்லி, பட்டம் பறக்கட்டும் ஆகியவற்றால் இந்த முத்திரை கிடைத்தது. சுமை படத்தில் ஏழைக் குடும்பத்தை காப்பாற்ற போராடும் மூத்த மகன், சிவப்பு மல்லியில் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடும் மில் தொழிலாளி, பட்டம் பறக்கட்டும் படத்தில் வேலை இல்லா பட்டதாரி. இந்த படங்கள் கொடுத்த பாதிப்பால், அநியாயத்துக்கு எதிராக போராடி அநியாயமாக அடிவாங்கும்/சாகும் கேரக்டர்களில் எல்லாம் சந்திரசேகருக்கு இயக்குநர்கள் வாய்ப்பளித்தார்கள். மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம், கோமல் சுவாமிநாதனின் கதையில், சிவகுமார் நடித்த “இனி ஒரு சுதந்திரம்” போன்ற படங்களில் நடித்தார். சிவப்பு மலர்கள், சிவப்பு நிலா என அவர் நடித்த படங்களின் டைட்டில் கூட சிவப்பாகவே இருந்தது.
ஒண்ணு படத்துல சிவப்பு இருக்கும் இல்லையின்னா அவர் உடம்புல இருந்து சிவப்பு ரத்தம் வெளிய வரும் என்று என்னும் அளவுக்கு அவரின் பெரும்பாலான படங்கள் இருந்தன.

இவையெல்லாம் கூட பரவாயில்லை. மூன்றாவது முத்திரைதான் அவரை இன்றுவரை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. அதுதான் நடுத்தர வர்க்க/ஏழை கேரக்டர். நண்பனின் கேரக்டரில் கூட பணக்கார நண்பன் என்னும் வெரைட்டியில் சிலர் தப்பி விடுவார்கள். பணக்காரராய் இருந்து கம்யூனிசம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சந்திர சேகருக்கு தமிழ்சினிமா முத்திரை குத்திய இந்த கேரக்டர், அதுவும் லோ-பட்ஜெட் படங்களுக்கே செதுக்கி வைத்தாற்போன்ற கேரக்டர், அது அவருக்கு மட்டுமே செப்புப் பட்டயத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று. இந்த முத்திரையால், அவர் சிறு/குறு முதலீட்டுப்படங்களிலேயே நடிக்க முடிந்தது.

எத்தனை படங்கள்?. இதுவரை சந்திர சேகர் நடித்துள்ள படங்களில் 99 சதவிகிதம் படங்கள் சிறு/குறு முதலீட்டுப் படங்கள் தான். ராம நாரயணன். விசு, சங்கிலி முருகன் என 80களில் சிறு முதலீட்டுப் படங்களை எடுத்து குவித்தவர்கள், முதலில் பிலிம் வாங்குவார்களோ இல்லையோ சந்திரசேகரின் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். ஊமை விழிகள், செந்தூரப் பூவே தவிர்த்துப்பார்த்தால் எல்லாமே சிறு முதலீட்டுப் படங்கள் தான். அர்ஜூன் இயக்கிய ஜெய்ஹிந்த் ஒரு மீடியம் பட்ஜெட் படம். கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த “மகராசன்” கூட ஒரு லோ-பட்ஜெட் படம்தான்.

சம்சாரம் அது மின்சாரம், அவள் சுமங்கலிதான், சகல கலா சம்மந்தி, பெண்கள் வீட்டின் கண்கள் என விசுவின் படங்கள், சுமையில் தொடங்கி சிவப்பு மல்லி, நாகம் (தயாரிப்பு : இராம நாராயணன், இயக்கம் : சோழ ராஜன்) துர்கா வழியாக ராம நாராயணனின் 100 வது படமான “திருப்பதி ஏழுமலை வெங்கடேசா” வரை  ராம நாராயணனின் பெரும்பாலான படங்கள். சங்கிலிமுருகன் தயாரித்த படங்கள், ஏன் இப்பொழுதுகூட மாஞ்சா வேலு வரை சிறு முதலீட்டுப் படங்கள்தான்.
சந்திரசேகரும் வெவ்வெறு கேரக்டர்களும் அவ்வப்போது முயற்சித்துப் பார்த்தார். ஆனால் அவை அவ்வளவாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சந்திரசேகர் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்த படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் ஒரு நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளில் சேனா படத்தில் அப்படி ஒரு கேரக்டரிலும், மாஞ்சா வேலு படத்தில் பிரதான வில்லனாக நடித்தார். கரகாட்டக்காரனில் நெகட்டிவ்வாக இருந்து திருந்திவிடும் பாத்திரம். சந்திர சேகரை வில்லனாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதேபோல சந்திரசேகரை காதலன் கேரக்டரிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலவனச் சோலை வரை அவரது முகத்தில் ஒரு ஷைனிங் இருந்தது. அது நாளாக நாளாக குறைந்துவிட்டது. இல்லம் படத்தில் ஒரு ரொமாண்டிக் இன்ஸ்பெக்டர் வேடம். அமலாவை காதலிப்பது போல். அவர் முகத்தில் காதலைத் தவிர எல்லா உணர்ச்சிகளும் வந்தன.

இந்த முத்திரை மட்டும் குத்தப்படாமல் இருந்தால், விஜயகாந்த்துக்கு அடுத்த நிலையில் ஒரு மினிமம் கேரண்டி கமர்சியல் ஹீரோவாக சந்திரசேகர் வந்திருக்கலாம்.

80களில் விஜய் அமிர்தராஜ், ஆனந்த் ராஜ், ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் டென்னிஸ் விளையாடிய காலங்களில் ஒரு வெளிநாட்டு விளையாட்டு விமர்சகர் சொன்னார், “இந்தியர்கள் ஒரு நல்ல போர் ஹேண்ட் ஷாட்டோ அல்லது நல்ல  பேக் ஹேண்ட் ஷாட்டோ அடித்துவிட்டால் போதும். ஒரு நாற்காலி போட்டு அதைத் தாங்களே ரசித்துவிட்டுத்தான், அடுத்த ஷாட் விளையாடுவார்கள். ஆனால் மற்ற நாட்டினரோ அடுத்த ஷாட்டை எப்படி ஆடுவது என்ற சிந்தனை மற்றும் செயலில் இறங்கிவிடுவார்கள்.” இதனால் தான் இந்தியர்களால் அதிகமான வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை என்பார். அந்த கால கிரிக்கெட் அணி, ஏன் ரசிகர்கள் கூட அப்படித்தான். செமி-பைனல் போனா போதும் என்பார்கள். இந்த மனநிலை பெரும் பாலோனோர்க்கு அவ்வாறே இருந்தது.

சந்திரசேகரும் அப்போதைய இந்த மனநிலைக்கு விதிவிலக்கு பெற்றவர் அல்ல. கிராமத்தில் இருந்து நடிப்பதற்காக வந்தோம். கஷ்டப்பட்டு நாடக வாய்ப்பு பெற்றோம், பாரதிராஜா மூலம் அறிமுகமானோம், நான்கைந்து வெற்றிப்படங்களில் நாயகனாக நடித்துவிட்டோம். இது போதும் என்று நினைத்திருக்கக் கூடும். தொடர்ந்து சிறு முதலீட்டுப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவும், கதை, தன்னுடைய வேடம் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கேட்டவர்களுக்கெல்லாம் கால்ஷீட் கொடுத்து நடித்திருகிறார். தன்னுடைய அடுத்த கட்ட உயர்வு என்னவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலேயே.

மருமகளே வாழ்க, இனிமை இதோ இதோ, வீட்டுக்காரி, பூம் பூம் மாடு, அர்ச்சனைப் பூக்கள் என குறு/சிறு முதலீட்டுப் படங்களிலேயே நடித்தார். மூன்றே வருடங்களில் ஒரு ஹீரோ என்ற அந்தஸ்தை இழந்து துணை நடிகர் என்ற கேட்டகிரிக்கி மாறினார். சந்திரசேகர் துணை வேடங்களில் நடித்த சம்சாரம் அது மின்சாரம், ஊமை விழிகள், கரகாட்டக்காரன் போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றதால் துணை நடிகர் என்ற முத்திரை அழுத்தம் திருத்தமாக விழுந்தது.

ஹீரோவாக இருந்து, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்ஸாக மாறியபின்னர், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்த வாய்ப்புகளும் அவருக்கு குறையத் தொடங்கின. அரசியலில் ஏதாவது ஒரு நிலையை நாம் எடுத்துத்தான் ஆகவேண்டும்.ஆனால் சினிமாவில் எல்லாத்தரப்பிலும் இருப்பதே கேரக்டர் ஆர்டிஸ்ட்களுக்கு நல்ல வாய்ப்புகளுக்கு உத்திரவாதம் கொடுக்கும். சந்திரசேகர், கருணாநிதி வசனத்தில் தூக்குமேடை படத்தில் நடித்தபிறகு பரவலாக திமுக சார்புடையவராக அறியப்பட்டார். கட்சியிலும் இணைந்தார்.

நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளராக போட்டியிட்டார். உண்மையில் அந்த 20 ஆண்டுகளும் அவர் திமுககாரராகவே பார்க்கப்பட்டார். திமுக சார்பு திரைப்படங்கள், திமுக பிரமுகர்கள் தயாரித்த/இயக்கிய பெரும்பாலான படங்களில் அவர் நடித்தார். இதனால் மாற்றுக் கட்சியினர் தயாரிக்கும்/பங்குபெறும் படங்களில் அவருக்கு ஏற்ற நல்ல வேடங்கள் இருந்தாலும் அதைப் பெறும் வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை.
சந்திர சேகரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான அம்சம், அவர் தொடர்ந்து சிலருடன் பணியாற்றியதுதான். ராம நாராயணன், விசு, ஆர் சி சக்தி போன்ற இயக்குநர்களுடனும், பிரபு, விஜயகாந்த், கார்த்திக் போன்ற ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார். இது சாதகமான அம்சம் என்றாலும், மற்ற புதிய இயக்குநர்கள்/நடிகர்கள் இவரை அழைப்பதில் மனத்தயக்கம் உண்டாக காரணமாகவும் இது அமைந்தது. 

80களின் பிற்பகுதி தொடங்கி 90களின் இறுதிவரை வந்த படங்களைப் பார்த்தோமேயானால் பெரும்பாலும் பணக்கார வீடுகளை மையப்படுத்தியே கதைக்களம் இருக்கும். அந்த சூழலுக்கு சந்திரசேகர் மிக அன்னியமாகத் தெரிந்தார். கிழக்கு கரை, பெரிய குடும்பம், பெரிய தம்பி,பாண்டவர் பூமி போன்ற கிராமிய படங்களில்கூட  அவர் ஒட்டாமல்தான் தெரிவார்.
ஆடுமேய்க்கும் கீதாரிப்பாக அவர் நடித்த பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் மட்டும் அசலாக பொருந்தியிருந்தார்.

பணக்காரத் தோரணை என்பது தோற்றத்தால் மட்டும் வருவதல்ல. சில பாடி லேங்வேஜில், கண் பார்வையில் அதை எளிதாக கொண்டுவந்து விடலாம். அதுவும் முடியாவிட்டால்வாய்ஸ் மாடுலேஷனிலேயே கொண்டுவந்து விடலாம். சந்திரசேகருக்கு அந்த பணக்காரத் தோரணை வரவேயில்லை. அவரின் ஒரு தோள்பட்டை லேசாக கீழிறங்கியே இருக்கும்.சிரிப்பு ஒரு அப்பாவித்தனமான சிரிப்பாகவே வெளிப்படும். தமிழ் உச்சரிப்பு சரியாக இருந்தாலும் கிராமியத் தனமாக இருக்கும். இதனால் அவருக்கு நிறையப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
1999 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பின்னால் அவர்  மிகச் சில படங்களிலேயே நடித்துள்ளார். ராம நாராயணன், விசு, ஆர் சி சக்தி, மணிவண்ணன்  போன்ற இயக்குநர்களும், சங்கிலி முருகன் போன்ற தயாரிப்பாளர்களும், பிரபு, விஜயகாந்த், கார்த்திக் என அவருடன் இணைந்து நடித்த முக்கிய நடிகர்களும் தங்கள் படங்களைக் குறைத்துக் கொண்டதால் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
தனியார் தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களின் வருகைக்கு முன்னால், மிமிக்ரி என்பது பொதுவாக ஆர்கெஸ்ட்ரா குழுக்களின் பாடல்களுக்கு இடையேதான் இடம்பெறும். கல்லூரி விழாக்களிலும் கூட கலை நிகழ்ச்சிகளின் இடையே இடம்பெறும். ஒருவர் தமிழ்நாட்டில் புகழ் பெற்று வருகிறார்/அனைத்து தரப்பிலும் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்  என்பதை உணருவதற்கு இருக்கும் அளவுகோல்களில் ஒன்று, அவருடைய குரல் மிமிக்ரி நிகழ்ச்சிகளில் இடம்பெறுவது.

பெரும்பாலும், தனித்துவமான குரல்களையே அப்போதெல்லாம் மிமிக்ரி கலைஞர்கள் தேர்ந்து எடுத்துக்கொள்வார்கள். தனித்துவமான குரல்களில் சந்திரசேகரின் குரலும் ஒன்று. ஆனால் அந்த குரலை/மாடுலேசனை பெரும்பாலும் யாரும் கையாண்டதில்லை. இத்தனைக்கும் அவர் நிறைய வெற்றிப்படங்களில் இருந்திருக்கிறார். அவர் ஏற்று நடித்த கேரக்டர்களை பகடி செய்வதும் எளிது. பின்னர் தனியார் தொலைக்காட்சிகளில் பொழுது  போக்கு அம்சமாக உருவெடுத்த ரியாலிட்டி ஷோக்களில், தங்களுடைய தனித்தன்மையை காட்டுவதற்காக மக்கள் மறந்து போயிருந்த குரல்களை எல்லாம் போட்டியாளர்கள் மிமிக்ரி செய்தார்கள்.


கர்ணனில் சல்லியனாக நடித்து, கரகாட்டக்காரனில் கனகா தந்தையாக. கிழக்கு வாசலில் குஷ்புவின் தந்தையாக நடித்து, சென்ற தலைமுறைவரை நன்கு அறியப்பட்ட சண்முகசுந்தரம், சிறந்த டப்பிங் கலைஞர். பல மொழிமாற்றுப் படங்களுக்கு குரல் கொடுத்தவர். அவருடைய கரகாட்டக்காரன் வசனம் ஒன்றைக்கூட ஏராளமான மிமிக்ரி கலைஞர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் சந்திரசேகரை யாரும் கண்டுகொள்வதில்லை என்பது ஆச்சரியம். 1998க்குப் பிறகு அவர் திரைத்துறையில் இருந்து பெருமளவு விலகியிருந்தது ஒரு காரணம். மேலும் பொது மக்களிடம் சந்திரசேகர் நடிகராக சிறிதளவுகூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லையோ? என யோசிக்க வைத்த விஷயம் இது. தமிழ்சினிமா குத்தும் முத்திரைகள் ஒருவரின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி வாய்ந்தது மட்டுமல்ல, ஒருவரை மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது போலும்.


October 23, 2014

ஆனந்த்பாபு

குறைந்தபட்ச தகுதிகளோடு இருக்கும் ஒரு தொழிலதிபரின் வாரிசு மிக எளிதாக அந்த நிறுவனத்தின் பொறுப்பிற்கு வந்துவிடலாம். ஆனால் அந்த நிறுவனம் சரியாமல் காக்கவும், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் கடின உழைப்பு தேவை. நாள் தோறும் மாறும் வணிக நிலவரங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அரசியல்வாதியின் வாரிசிற்கும் அரசியலில் நுழைவது எளிது, அதன்பின்னர் அவரது நடவடிக்கைகளே அவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இதைப் போலவே திரைத்துறையிலும் வாரிசுகளுக்கு அறிமுகம் எளிதில் கிடைத்துவிடும். ஆனால் அவர்களின் திறமையை வைத்தே அதை தக்க வைக்க வேண்டும்.
ஒரு தொழில் அதிபரின் மகனை தொழில் அதிபராக ஏற்றுக் கொள்வதில் மக்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அரசியல்வாதியின் வாரிசையும், குறைந்த பட்ச தகுதிகள் இருந்தாலே ஒப்புக் கொள்கிறார்கள். ”ராஜாவின் மகன் ராஜா” என்ற மனப்பாவம் நம்மிடம் இருந்து மறைய நாளாகும். ஆனால் கலைஞனின் மகன் கலைஞன் அல்ல, தன்னை நிரூபித்தாலொழிய.

1930களில் இருந்து படம் தயாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தாலும் 50களில் இருந்துதான் அதிகமாக படங்கள் வெளியாகின. இந்த 50களில் சினிமாவில் இருந்தவர்களின் வாரிசுகள் பலரும் பல்வேறு காலகட்டங்களில் அறிமுகமானார்கள். இந்த போக்கு இன்றுவரை நீடித்து வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 80களில் இருந்துதான் இது அதிகரித்தது. 1960 மற்றும் 70களில் தமிழகத்தை தன் நகைச்சுவை நடிப்பால் மகிழ்வித்த நாகேஷ், 80கள் தொடங்கிய உடன் தன் இடத்தை இழந்தார். பிரதான காமெடியன் வேடம் மிகச் சில படங்களில் மட்டுமே கிடைத்தது. குணசித்திர வேடங்கள் மட்டுமே அவருக்கு நிறைய கிடைத்தது. இந்த காலத்தில் தான் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு 1983ல் தங்கைக்கோர் கீதம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த வாரிசுகளில் கூட கதாநாயகனின் மகன், இயக்குநரின் மகன், தயாரிப்பாளரின் மகன் என்றால் அவனை சற்று நாயக கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். ஆனால் நகைச்சுவை நடிகரின் மகன் என்றால் தமிழர்களின் மனது, அவனை முழு நாயகனாக ஒப்புக்கொள்வதில்லை.

நம்மால்  முடியாததை நம் வாரிசாவது செய்யட்டும் என்பது பெற்றோர்களின் ஆசை. டாக்டருக்குப் படி, ஐ ஏ எஸ் ஆகு என அப்படி ஆக முடியாத தகப்பன்கள் தன் மகனிடம் சொல்வார்கள். தன் வீட்டிலும், புகுந்த வீட்டிலும் மிக கட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்ட பெண்கள், தங்கள் மகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். எந்த நடிகனுக்கும் ராஜபார்ட் போட வேண்டுமென்பதுதான் கனவாக இருக்கும். அதனால்தான் எல்லோரும் தங்கள் வாரிசுகளை நாயகனாகவே அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஆனந்த்பாபு, அவர் அறிமுகமான காலகட்டத்தில் தமிழ்சினிமாவிற்கு ஏற்ற மெட்டீரியல்தான். அப்போதைய நாயகர்களில் கமல் மட்டும்தான் நன்கு நடனம் ஆடுபவர். மற்றவர்கள் நடனம் ஆடுவதைப் போல் பாவனை செய்து வந்தார்கள். ஆனந்த்பாபு, தன்னுடைய தந்தை நாகேஷின் பிரத்யேக அடையாளங்களில் ஒன்றான மேற்கத்திய தாக்கம் உடைய ஒரு நடன அசைவை கற்று வைத்திருந்தார்.

அந்த நடனமே அவரது உடனடி அடையாளமாக அவர் மீது ஒரு கவனக் குவிப்பை ஏற்படுத்தியது. இந்த ஆரம்பகால கட்டங்களில் அவரை அரவணைத்தது டி ராஜேந்தர் மற்றும் இராம நாராயணன். டி ராஜேந்தரின் தங்கைக்கோர் கீதமில் ”தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது” என்ற துள்ளலிசைப் பாடல் மற்றும் நடனத்தின் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனந்த்பாபு நாயகனாக நடித்த “நியாயம் கேட்கிறேன்”  சுமாராகவே ஓடியது. இராம நாராயணன் ஜெய்சங்கர்,ஸ்ரீபிரியா, ஆனந்த்பாபு, அர்ஜூனை வைத்து இயக்கிய ”கடமை” பி மர்றும் சி செண்டர்களில் நன்கு ஓடி, ஆனந்த்பாபுவுக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத்தந்தது.

1982ல் இந்தியில் பப்பிலஹரி இசையில் மிதுன் சக்கரவர்த்தி நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்றிருந்த டிஸ்கோ டான்சர் படத்தை “பாடும் வானம்பாடி” என தமிழில் ஆனந்த்பாபுவை வைத்து 1985ல் ரீமேக் ஆனது. படம் தமிழ்நாடு முழுவதும் நன்கு ஓடியது. சில செண்டர்களில் 100 நாட்கள் என்ற மைல்கல்லையும் தொட்டது. ரங்கராஜன் இயக்கத்தில் மோகன், ரேவதி, ஆனந்த்பாபு நடித்த “உதயகீதம்” படமும் தமிழகம் முழுவதும் ஆனந்த்பாபு ரீச்சாக உதவியது.

அதன்பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ, விஸ்வநாதன் வேலை வேண்டும், ராமநாராயணின் இளமை, சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து நடித்த பந்தம், கார்த்திக் உடன் நடித்த அர்த்தமுள்ள ஆசைகள், சுரேஷுடன் நடித்த மௌனம் கலைகிறது என எல்லாமே தோல்விப்படங்கள். இதனுடன் அவரை மக்கள் கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள். வெற்றி இருக்கும் இடத்தில்  இல்லாவிட்டால் யாருக்கும் வரும் நிலைமைதான். ஆனந்த்பாபுவின் இந்த கால கட்டத்தில் அவருடன் இணைந்து நடித்தவர்கள் எல்லாமே ஆரம்ப நிலையினர் அல்லது தங்கள் பொற்காலத்தில் இல்லாதவர்கள். தனியாக ஒரு படத்தை தன் நடிப்பால் தாங்கும் அளவுக்கு அவர் அப்போது வளர்ந்திருக்கவில்லை. பெரிய இயக்குநர்களும் அவருக்கு தங்கள் படங்களில் வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆர் பி சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸால் நிறைய இயக்குநர்கள், நடிகர்கள் வாழ்வு பெற்றார்கள். அவர்களில் ஆனந்த்பாபு முக்கியமானவர். சூப்பர்குட்டின் முதல் தயாரிப்பான விக்ரமனின் புது வசந்தம் ஆனந்த்பாபுவுக்கும் ஒரு வசந்தத்தை கொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையில் இருந்து காணாமல் போயிருந்த ஆனந்த்பாபு இந்த படத்தின் மூலம் மறு அறிமுகமே ஆனார். தொடர்ந்து கே எஸ் ரவிகுமாரின் புரியாத புதிரில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.  பாலசந்தரின் உதவி இயக்குநராகவே பல ஆண்டுகள் இருந்து பெரும் திறமை கொண்டிருந்த, கமல்ஹாசனின் ஆசான்களில் ஒருவராக இருந்த அனந்து முதன் முதலாக இயக்கிய “சிகரம்” படத்திலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் கிட்டத்தட்ட ஆனந்த்பாபுவின் கேரக்டர் என்றே சொல்லலாம். இதன் பின்னர் கே எஸ் ரவிகுமாருக்கு பெரிய பிரேக் தந்த “சேரன் பாண்டியன்” படத்தில் நாயகன் மாதிரியான வாய்ப்பு.  அடுத்த ஆண்டு கே பாலசந்தர் இயக்கித்தில் வெளிவந்த  ”வானமே எல்லை”யில் நாயகர்களில் ஒருவராக வாய்ப்பு.  தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த அஷ்ரப் இயக்கிய ”எம்ஜியார் நகரில்” கே எஸ் ரவிகுமாரின் “புத்தம் புது பயணம்”, விக்ரமனின் “நான் பேச நினைப்பதெல்லாம்” என ஓரளவு ஓடிய படங்களில் எல்லாம்  அவர் நாயகனாகவே, நாயகர்களில் ஒருவராகவோ இருந்தார். இதன் மூலம் லோ பட்ஜெட் படங்களின் நாயகனாக அவருக்கு ஒரு முகம் கிடைத்தது.

அடுத்து வந்த ஆண்டுகளில் சூரியன் சந்திரன், மணி-ரத்னம், பட்டுக்கோட்டை பெரியப்பா, வாட்ச்மேன் வடிவேலு ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இவை எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. மீண்டும் பலத்த சரிவு. இக்காலகட்டத்தில் சில தெலுங்குப் படங்களில் நடித்தார். பின் தமிழுக்கு திரும்பிவந்து 1998ல் செந்தமிழன் இயக்கத்தில் ரஞ்சித், வடிவேலு உடன் இணைந்து “சேரன் சோழன் பாண்டியன்” படத்தில் நடித்தார். இவரது சமகால நாயகனான மோகனின் மறு பிரவேசமான “அன்புள்ள காதலுக்கு” படத்திலும் ஒரு கேரக்டர் செய்தார். அத்துடன் தமிழகமும் இவரை மறந்து போனது.
கே எஸ் ரவிகுமாருக்கும் இவருக்கும் பூர்வ ஜென்ம பந்தமோ என்னவோ பத்தாண்டுகள் கழித்து “ஆதவன்” படத்தில் இவருக்கு ஒரு வேடம் கொடுத்தார்.

ஆனந்த்பாபு நாகேஷின் மகன் என்பதற்காக அறிமுகத்தை தவிர வேறு எந்த சலுகையும் யாரிடமும் பெறவில்லை என்பதே உண்மை. எல்லோரும் அவர் அவர்களின் தேவைக்கேற்ப வாய்ப்பைக் கொடுத்தார்கள். அது அவர்களின் தவறும் அல்ல. 1980களில் தங்கள் படங்களில் நடனம் ஆடும் ஒரு ரோலுக்கு ஏற்ற நடிகராக அவருக்கு வாய்ப்பளித்தார்கள். 1990களில் சில நாயகர்கள் சேர்ந்து நடித்த படங்களுக்கு, நடிப்பில் மிகவும் சொதப்பாத, மக்களுக்கும் அறிமுகமான நடிகர் வேண்டுமன்பதற்காக அவரை தேர்ந்தெடுத்தார்கள். விக்ரமன் “பெரும்புள்ளி” படத்தின் தோல்விக்கு பின்னர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எடுத்த “நான் பேச நினைப்பதெல்லாம்” படத்தில் நாயகன் வாய்ப்பையே கொடுத்தார்.

கே எஸ் ரவிகுமாரைத் தவிர வேறு யாரும் தாங்கள் உச்சத்தில் இருக்கும் போது, ஆனந்த்பாபுவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. 80களின் பிற்பகுதியில் முன்வரிசை கதாநாயகர்களாக விளங்கியவர்கள், இயக்குநர்கள் எல்லோருமே நாகேஷிடம் பெரு மதிப்பு கொண்டிருந்தவர்கள். இவ்வளவு ஏன்? எண்ணற்றவர்களுக்கு தொடர் வாய்ப்புகள் கொடுத்து தூக்கிவிட்ட  கே பாலசந்தர், தன் உற்ற துணையாக விளங்கிய நாகேஷின் மகனுக்கு பிற்காலத்தில் தான் வாய்ப்பு கொடுத்தார், அதுவும் அவருக்கு தேவைப்பட்டதாலேயே.

அது அவர் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பு. ஆனால் ஆரம்ப காலத்திலேயே  ஒரு நூறு நாள் படம் கொடுத்தும் சுதாரிக்காமல் போனது யார் குற்றம்? ஆனந்த்பாபுவுக்கு ஆக்‌ஷன் ஹீரோவாக ஆகும் அளவுக்கு ஆகிருதியான உடல்வாகு இல்லை. கனவுக் கண்ணனாக ஆகும் அளவுக்கு கவர்ச்சியான தோற்றம் இல்லை. உயரமும் சற்றுக் குறைவு. ஆனால் அவரிடம் நடனம் ஆடும் திறமையும், ஓரளவுக்கு உணர்ச்சிகளை திரையில் கொண்டுவரும் நடிப்புத்திறமையும் இருந்தது. அதைக் கொண்டு  மோகன் போல சில ஆண்டுகள் நாயகனாக கோலோச்சியிருக்கலாம். ஆனால் அவர் ஒரு துணை கதாபாத்திரமாகத்தான் மக்கள் மனதில் பதிய முடிந்தது.

உவமைக் கவிஞர் சுரதா ஒரு கவியரங்கிற்கு தலைமை வகித்திருந்த போது, பங்கேற்ற ஒரு கவிஞர் ஒரே  வரியை திரும்ப திரும்ப வாசித்தாராம். அப்போது சுரதா தன் அருகில் இருந்தவரிடம், இவன் ஏன் ஒற்றைப் பல்லை வைத்தே சிரிக்கிறான் என்றாராம். ஆனந்த்பாபுவும் அது போலத்தான். தன்னுடைய நடனத்தில் சில ஸ்டெப்புகளை மட்டுமே தொடர்ந்து ஆடிவந்தார். நான்கைந்து படங்களிலேயே அது சலித்துவிட்டது. ஒரு இடைவெளிக்குப் பின் புதுவசந்தத்தில் ஆடியபோது மீண்டும் ரசிக்கப்பட்டது. பின்னர் அதுவும் அலுத்தது.

சினிமா துறை என்பது, அரசாங்க அலுவலக வேலை அல்ல. பணியில் சேரும்போது இருக்கும் திறமை போதுமானது. மேலும் வளர்த்துக் கொள்ள தேவையில்லை, சீனியாரிட்டி அடிப்படையில் பிரமோஷன் கிடைக்கும் என்பதைப் போல. தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொண்டேயிருக்கவேண்டும். இப்போது அரசு அலுவலகங்களில் கூட தன்னை வளர்த்துக் கொள்ளாதவர்கள் பின் தங்க நேரிடுகிறது. இந்நிலையில் ஆனந்த்பாபு தன் திறமையை வளர்க்க தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். மேலும் அவருடைய தனிப்பட்ட வாழ்வும் சிறப்பாக இல்லை. ஒரு துறையில் ஈடுபடுபவர் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டுமெனில் தனிப்பட்ட வாழ்வின் தவறுகள், சோகங்கள் வேலையில் இருக்கும் போது தலைகாட்டக் கூடாது.  ஆனந்த்பாபுவின் சில தனிப்பட்ட பழக்கங்கள் அவருடைய முன்னேற்றத்துக்கு தடையாய் இருந்தது.


தற்போது, ஆனந்த்பாபுவின் மகன் கஜேஷ் நாயகனாக “கல்கண்டு” என்னும் படத்தில் அறிமுகமாகிறார். நகைச்சுவை நாயகனின் மகனைத்தான் ஏற்றுக்கொள்ள மக்கள் யோசிப்பார்கள். பாலையா முதல் சிங்கமுத்து வரை அதற்கு உதாரணங்கள் உண்டு. கஜேஷ் நாயகனின் மகனாகத்தான் அறிமுகமாகிறார். அவருடைய தந்தை போல் இல்லாமல் தாத்தா போல் அழியாப்புகழ் பெற வாழ்த்துக்கள்.

October 06, 2014

படையப்பா

படையப்பா பற்றிய முதன் முதல் செய்தி 98ஆம் வருடம் வந்தது. வழக்கம்போல் ஒரு பிரஸ் மீட் வைத்து, படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர் போன்றோரை சம்பிரதாயமாக அறிவித்து படப்பிடிப்புக்கு கர்நாடகா நோக்கி பயணப்பட்டனர் படக்குழுவினர். அவ்வளவுதான் தமிழகமே தீப்பிடித்துக்கொண்டது.

அந்த பிரஸ்மீட்டில், ரஜினி படையப்பா என்றால் படைகளுக்கு அப்பன், கமாண்டர்-இன் – சீஃப் போல என்று சொல்லிவிட்டு, இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் கட்டமைப்பு இல்லாத பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று சொல்லிவிட்டு,. ”படிங்கப்பா இருக்கிறான் படையப்பா” என்று ஒரு பஞ்ச்சையும் சொன்னார். ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்ட ஸ்டில்லில் ரஜினி, ஜீன்ஸ் அணிந்து, சுருட்டு குடிப்பது போல இருக்கவும், குமுதம் அரசு பதிலில், அவர் எதையோ (கோட்டை) பிடிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க, அவர் எதைப் பிடிக்கிறார் பாருங்கள் என்றார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதைப்பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை. எப்போது படம் வரும் என்ற ஒரு எதிர்பார்ப்பு மட்டும் தான் அவர்களுக்கு.. 96ல் வெளியான முத்து மெகா ஹிட். ஆனால் அடுத்த படமான அருணாசலம் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. நாங்கள் அப்போது அருப்புக்கோட்டையில் இருந்தோம். எங்கள் தெரு ஒரு ரஜினி கோட்டை. அதிலும் என் உயிர் நண்பன் ரமேஷ் பாபு ரஜினியை தெய்வமாகவே கொண்டாடுபவன். டிடியில் அண்ணாமலை போட்டபோது, சுத்த பத்தமாக குளித்து பட்டையடித்து, விளம்பரத்துக்கு கூட அசையாமல் அவன் படம் பார்த்ததைப் பார்த்து திகைத்துப் போயிருக்கிறேன். அதற்குமுன் குறைந்தது 50 முறையாவது அந்தப் படத்தை அவன் பார்த்திருப்பான்.

அவனே ஆச்சரியப்படும் ரஜினி ரசிகன் ஒருவனும் அருப்புக்கோட்டையில் இருந்தான். முத்துக்குமார். அருணாச்சலம் படத்தை அந்தப் படம் ஓடிய 45 நாட்களும் குறைந்தது ஒரு ஷோவாவது பார்த்தவன். படத்தின் ஆரம்பத்தில் வரும் பொன்னம்பலத்தின் பஞ்சு டயாலாக்கான “நாலு கொலை, ஏழு ……, பண்ணின அம்பலம், பொன்னம்பலம்” தைக்கூட மனப்பாடம் செய்தவன்.  அவனுக்கும் கூட அருணாசலம் பற்றிய அதிருப்தி இருந்தது. எனவே படையப்பாவை, பத்தாண்டு ஜெயிலில் இருந்தவன் ரிலீஸை எதிர்பார்ப்பதைவிட அதிகம் எதிர்பார்த்தான். படையப்பா பற்றி எந்த செய்தி எந்தப்பத்திரிக்கையில் வந்தாலும், அதை வாங்கிவிடுவான். பாடல்கள் வெளியான தினத்தன்று , தெருவையே அலறவிட்டார்கள் இருவரும் சேர்ந்து.

இந்நிலையில் என் தந்தையின் பணி மாறுதல் காரணமாக நாங்கள் கோவைக்கு குடிபெயர்ந்தோம். எங்கள் குடும்பம் அந்த நேரத்தில் சில பிரச்சினைகளால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வுற்று இருந்தது. செல்போன் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத காலம். திடீரென்று ஒருநாள் ரமேஷும், முத்துக்குமாரும் என்னைப் பார்க்க வந்தார்கள். ரெண்டு மாசமாச்சு, பார்த்து அதான் வந்தோம் என்றார்கள். உண்மையிலேயே நான் அன்றிருந்த நிலைக்கு கடவுள்களே நேரில் வந்தது போல் இருந்தது. என் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டி போக வர என்று அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். ஆறுதலும் சொன்னார்கள். மூன்று நாள் கழித்து அவர்கள் கிளம்புகிறோம், நாளன்னிக்கு படையப்பா ரிலீஸ் என்று சொன்னார்கள்,

என் தந்தை, இன்னும் நாலு நாள் இருந்திட்டுப் போங்கப்பா. இங்கயே படையப்பா பாருங்களேன் என்றார். மதுரை, திண்டுக்கல், விருதுநகரில் எல்லாம் தலைவர் படம் ரிலீஸைப் பார்த்திருக்கோம். கோயம்புத்தூர்ல பார்த்தது இல்லை, பார்த்துடுவோம் என அவர்களும் உற்சாகமானார்கள்.
கோவையில் ராகம் தியேட்டரிலும், நடிகை அம்பிகாவுக்கு ஒரு காலத்தில் சொந்தமாயிருந்த அம்பாலிகா காம்ப்ளக்ஸிலும் படம் வெளியானது. ஒரு பட்டாலியனே வந்து கியூவை மேனேஜ் செய்ய வேண்டியிருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு படம் முதலில் பிடிக்கவில்லை. என்னடா இது பயங்கர பிற்போக்குத்தனமா இருக்கே என நினைத்தேன். ஆனால் 50 நாட்கள் ஆகியும் ராகம் தியேட்டரில் சனி, ஞாயிறுக்கு டிக்கட் வாங்குவது பெரிய விஷயமாக இருந்தது.

படையப்பா படத்தின் வெற்றி என்பது சாதாரணமானது அல்ல என இன்றுவரைக்கும் அந்தப் படம் காட்டிக்கொண்டேயிருக்கிறது. சிவாஜி படம் ஓடி முடிந்த போது, கே எஸ் ரவிகுமாரிடம் அதைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார், “உணமையில் படையப்பா படத்தை சிவாஜியை விட அதிகமானோர் பார்த்துள்ளார்கள். இது டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட் பார்த்தால் தெரியும் என்றார்”. மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால் கோவை புறநகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் நூறு நாட்களுக்கு பின்னர் படையப்பாவை திரையிட்டார்கள். இரண்டு வாரம் ஹவுஸ்புல். மூன்றாம் வார முதல் நாள் வெள்ளிக்கிழமை மாலைக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் நூறு பேருக்கு மேல் திரும்பினார்கள். என்னய்யா இந்தப் படம் இந்த ஓட்டம் ஓடுது என்று தியேட்டரைச் சுற்றியுள்ள கடைக்காரர்கள் பேசிக்கொண்டதைப் பார்த்து, ஏரியா ரஜினி மன்ற நிர்வாகி, ஒரு மூட்டை மிளகாயை வாங்கி வந்து, நெருப்பில் போட்டு படத்திற்கு திருஷ்டி கழித்தார். ஏரியாவே கமறி விட்டது. அகில உலகிலேயே ஒரு திரைப்படத்திற்கு திருஷ்டி கழிக்கப்பட்ட நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்.

அப்போது எங்கள் தெருவில் இருந்த சிலர், திருப்பதிக்கு போனார்கள். திரும்பிவந்த அவர்கள், இங்கதான் கூட்டம் அம்முதுன்னா, அங்க நரசிம்மான்னு டப் பண்ணியிருக்கான், அத விட கூட்டம் என்று சிலாகித்தார்கள். படையப்பா கூல் ட்ரிங்ஸ், படையப்பா சோப்பு என ஏராளமான லோக்கல் மார்க்கெட்டுகு தயாராகும் பொருட்கள், எல்லா காலேஜ் பங்சன்களிலும் மைம் பண்ணுபவர்கள், மாணவன் திருந்தி படிக்க ஆரம்பித்துவிட்டான் என்பதைக் குறிக்க போடும் “வெற்றிக் கொடு கட்டு” பாடல் என சொல்லிக் கொண்டே போகலாம். சன் குழுமத்திற்கு பெரும் செல்வத்தை கொடுத்த படையப்பா, அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நல்லதையே கொடுத்தது. இப்போது யோசித்துப் பார்த்தால் இந்தப் படம் தமிழகம் முழுவதுமே ஒரு நல்ல வைப்ரேசனை ஏற்படுத்தியது என்றே சொல்லத் தோணுகிறது.

படம் வெளியாகி 60 நாட்கள் சென்றிருக்கலாம். என் அம்மாவின் அக்கா, அவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். இருவரும் தற்போதைய தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் பெரியகுளத்தில் இருந்த ரஹீம் தியேட்டருக்கு வண்டி கட்டி சென்று படம் பார்த்தவர்கள், எம்ஜியார் மற்றும் சிவாஜியின் ரசிகைகள். அடுத்த காலகட்ட நடிகர்களில் ரஜினியை மட்டுமே அவர்களுக்குப் பிடிக்கும். அந்த வாரம் அவர்கள் இருவரையும் மாலைக்காட்சி படையப்பா படத்திற்கு அழைத்துச் சென்றிருந்தேன். லயித்து படம் பார்த்தார்கள். படம் முடிந்து தியேட்டர் அருகேயிருந்த மெஸ் ஒன்றிற்கு சாப்பிடப் போனோம். என் அம்மா “மொதோ பாட்டில பொண்ணு மாப்பிள்ளையும் கூடச் சேர்ந்து ஆடுறதுதான் பிடிக்கல. ஆனா படம் அப்பப்பா” என்று ஆரம்பித்தார். இருவரும் படத்தைப் பற்றி சிலாகிக்க ஆரம்பித்தனர். கேட்டுக் கொண்டிருந்த சர்வர், கெட்டிச் சட்னி, பொடி என சிறப்பாக கவனிக்கத் தொடங்கினார். எதிரில் ஒரு ஆட்டோக்காரர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எங்களுடனே வெளிவந்த அவரிடம், டாடாபேட் போகணும் என்றேன். 65 ரூபா வாங்குவேன், நீங்க 40 கொடுங்க, என்று சொன்னார்.


வீட்டிற்கு வந்தும் அவர்கள் சிலாகிப்பு நிற்கவில்லை. என் பெரியம்மா சில வருடங்கள் முன்புதான் கணவனை இழந்திருந்தார். சொத்து பிரச்சினை ஒன்றில் ஏமாற்றப்பட்டதாக/ஏமாந்ததாக நம்பும் குடும்பம். நம்ம சொத்து நம்மளைவிட்டுப் போகாது, பிள்ளைக கொண்டுவந்து சேர்த்திடும் என்று படையப்பாவை உதாரணமாக காட்டி பேசினார். நீ கவலைப் படாதடி, உன் பிள்ள இருக்கான், ரஜினி மாதிரி, அவன் பார்த்துக்கிடுவான் என்று தேத்தினார்.  அடடா நாம ரஜினி ரசிகனா இருந்திருக்கலாமே என என்னை இரண்டாவது முறையாக எண்ண வைத்தது என் அம்மாவின் முகத்தில் தோன்றிய நிம்மதி.

September 23, 2014

ரகுமான்

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே அரசியல், சமுதாய ரீதியில் பல பிணக்குகள் இருக்கலாம். ஆனால் திரைப்படத்துறை மட்டும் விதிவிலக்கு. நமக்கு தண்ணீரைத் தர மறுக்கும் கேரளா, நாயகிகளை மட்டும் தர தயங்குவதே இல்லை. அந்தக்கால பத்மினி முதல் இடைக்கால ராதா,ரேவதி, நதியா, இந்தக்கால நயன் தாரா, லட்சுமி மேனன் வரை கேரள நாயகிகள் தமிழ்நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை வந்துள்ள படங்களில் அதிக படங்களில் நாயகிகளாக நடித்தவர்கள் கேரள பெண்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் நாயகர்களில் அப்படிச் சொல்ல முடியாது. மலையாளத் திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்த நாயகர்கள் தமிழ்சினிமாவில் வெற்றி பெற்றதில்லை. ஆனால் மலையாள திரைப்படங்களில் நடிக்காமல் நேரடியாக இங்கு வந்த எம்ஜி ராமச்சந்திரன், அஜீத் ஆகியோர்  இங்கே அளப்பரிய வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.


தமிழ்சினிமாவுக்கு பல நல்ல கதைகளைக் கொடுத்த மலையாளத்திரை உலகம், கமல்ஹாசன் மற்றும் விக்ரமை அவர்களது ஆரம்ப நாட்களில் பட்டை தீட்டிக் கொடுத்தது. ஆனால் தங்களின் கேரியரில் உச்சத்தில் இருக்கும் போது, தமிழில் இருந்து யாரும் கேரளா செல்ல விரும்புவதில்லை. காரணம் சம்பளம். ஆனால் கேரளத் திரையுலகில் உச்சத்தில் இருப்பவர்கள் தமிழுக்கு வர தூண்டுதலாய் இருப்பதும் இதே சம்பளம்தான்.

மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற திறமைசாலிகள் கூட இங்கே நாயகனாக நிலைபெற முடியவில்லை. ஆனால் இவர்களுக்கு முன்னரே தமிழுக்கு வந்த ரகுமானுக்கு இவர்களுக்கு இல்லாத ஒரு அட்வாண்டேஜ் இருந்தது. மேற்குறிப்பிட்டவர்களுடன் ஒப்பிடுகையில் மிக இளவயதிலேயே தமிழுக்கு நாயகனாக வந்தவர் இவர்.


தன் 16 வயதிலேயே மலையாளத் திரைப்படங்களில் இளைஞனாக நடிக்க ஆரம்பித்த இவர், சில வருடங்களுக்குள்ளாகவே பத்மராஜன், சத்யன் அந்திக்காடு, கே எஸ் சேதுமாதவன், பரதன் போன்ற  இயக்குநர்களின் படங்களில் மம்முட்டி, மோகன்லால், பரத்கோபி, நெடுமுடி வேணு போன்ற திறமை மிகுந்த நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

86ஆம் ஆண்டு தன் 20ஆவது வயதில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில், அப்போது உச்சத்தில் இருந்த நதியாவின் ஜோடியாக ரகுமான் நிலவே மலரே படத்தில் அறிமுகமானார். பின் தொடர்ந்த ஆண்டுகளில் கண்ணே கனியமுதே, வசந்தராகம் (விஜயகாந்த் உடன்), அன்புள்ள அப்பா (சிவாஜி கணேசனுடன்) போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் ஷண்முகபிரியன் இயக்கிய ஒருவர் வாழும் ஆலயம் பிரபுவுடன் இணைந்து நடித்தார். படத்தில் நடித்தார். இந்த ஆரம்பகாலப் படங்களில் எல்லாம் கதையின் நாயகனாகவும், இரண்டாம் நாயகனாகவுமே நடித்து வந்தார்.

கே.பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரேக் கொடுத்த ”புதுப்புது அர்த்தங்கள்” தான் ரகுமானுக்கு தமிழில் நல்ல பிரேக் கொடுத்த படம். அழகான இளம் பாடகன்(ரகுமான்), பொஸ்ஸிவ்னெஸ் அதிகம் உடைய அவனது மனைவியால்(கீதா) வரும் பிரச்சினைகளால் வெறுப்புற்று தனிமை தேடிச் செல்கிறான். செல்லும் வழியில் கணவனால் துன்பப்படும் ஒரு பெண்ணைச்(சித்தாரா) சந்திக்கிறான். இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. ஆனால் பின்னர் நடக்கும் சம்பவங்களால் இருவரும் தத்தம் துணையுடனே மீண்டும் இணைகிறார்கள். ஜெயசித்ரா ரகுமானின் மாமியார் வேடத்தில் நடித்தார். சித்தாராவிற்கும் தமிழில் நல்ல அறிமுகம் கொடுத்த இந்தப்படத்தில், ஜனகராஜ் மற்றும் விவேக்கின் காமெடி பேசப்பட்ட ஒன்று. அனைத்திற்கும் மேலாக இளையராஜாவின் இசை. நூறு நாட்கள் ஓடிய இந்தப் படம் மூலம் ரகுமான் தமிழில் ஒரு நிலையான இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதைத் தொடர்ந்து அவர் நடித்த படங்களான பாக்யராஜின் உதவி இயக்குநர் கோலப்பன் இயக்கிய பட்டணந்தான் போகலாமடி, ரூபிணி, கவுண்டமணியுடன் இணைந்து நடித்த பட்டிக்காட்டான், மற்றும் மனைவி வந்த நேரம், ஆரத்தி எடுங்கடி என பெரும்பாலான படங்கள் சரியாகப் போகவில்லை. கே எஸ் ரவிகுமார் இயக்கிய முதல் படமான “புரியாத புதிர்” மட்டும் ஆவரேஜாக ஓடியது.  இதே நேரத்தில் அவர் மலையாளப்படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்து வந்தார்.
1991 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் நீ பாதி நான் பாதி, ஜெயசித்ராவின் இயக்கத்தில் புதிய ராகங்கள் போன்ற படங்களில் நடித்தார். புதுப்புது அர்த்தங்களில் மாமியாராக நடித்த ஜெயசித்ராவுடன் ஏறத்தாழ ஜோடி போன்ற கேரக்டரில் நடித்தார்.

இதுதான் ரகுமான் சறுக்கிய இடம். புதுப்புது அர்த்தங்களில் கிடைத்த வெற்றியை அவர் தக்கவைக்க விரும்பவேயில்லை. தமிழில் மட்டும் கவனம் குவிக்காமல் மலையாள, தெலுங்குப் படங்களிலும் நடித்தார். தமிழிலும் நடித்து தன்னை நிரூபிப்பதற்கான வேடங்களை தேர்ந்தெடுக்கவில்லை. இரண்டு மூன்று நாயககர்களுடனும் இணைந்து நடித்தார். இதனால் அவருக்கென ஒரு தனித்தன்மையோ, ரசிகர்களின் ஆதரவோ கிட்டவில்லை.

ஆனாலும் அவருக்கு மும்மொழிகளிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. மாப்பிள்ளை வந்தாச்சு, நானே வருவேன் (நீயா படத்தின் இரண்டாம் பாகம்), ஆத்மா (ராம்கியுடன்), உடன்பிறப்பு (சத்யராஜுடன்), அதிரடிப்படை (சுமன்), பொன் விலங்கு (ரஞ்சித்), கறுப்பு வெள்ளை, டியர் சன் மருது, பாட்டு பாடவா (எஸ்பிபியுடன்) இணைந்து படங்களில் நடித்து வந்தார். இவற்றில் எந்தப் படமும் வெற்றிபெறவில்லை.

1996ஆம் ஆண்டு பாலசந்தரின் இயக்கத்தில் “கல்கி” படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் ஆவரேஜாகத்தான் ஓடியது. அதிலும் எல்லாப் புகழையும் உடன் நடித்த பிரகாஷ்ராஜே எடுத்துக் கொண்டார். இதே ஆண்டில் இந்தியில் பெருவெற்றி அடைந்த சஞ்சய்தத் நடித்த “கல்நாயக்கின்” ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பும் ரகுமானுக்கு கிடைத்தது. அந்தப் படம் மூத்த இயக்குநர் ஏ ஜெகன்னாதனின் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படமும் தோல்வி.

கடைசி வாய்ப்பாக ரகுமானுக்கு கிடைத்த படம் சங்கமம். பிரமிட் நடராஜன் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரகுமானின் சகலையான ரஹ்மானின் இசை அமைப்பில் வெளியான படம். தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் வரிசையில் கலைஞர்களுக்கு இடையேயான போட்டியை அடிப்படையாக வைத்து உருவான படம்.
இந்தப் படத்தில் எத்தனை குறைகள் இருந்தாலும், கடைசியில் வரும் கிளைமாக்ஸ் பாடல் மட்டுமே படத்தை தூக்கி நிறுத்த போதுமான வலிமையோடு இருந்தது.

1980 மற்றும் 90களில் இருந்த மலையாள ஹீரோக்கள் யாரும் நடனத்தில் வித்தகர்கள் இல்லை. அவர்களுக்கு நன்றாக நடிப்பு வரும், நகைச்சுவையிலும் பிரமாதப்படுத்துவார்கள். ஆனால் நடனம் அவர்களுக்கு ஒரு வீக்னெஸ்ஸாகவே இருந்தது. மேலும் அப்போதைய மலையாள படங்களில் தேர்ந்த நடனத்திற்கு அவசியமிருக்கவில்லை. இதே காலகட்டத்தில் உருவான ரகுமானும் அப்படித்தான். நடனம் சரியாக வரவில்லை. அதுபோலவே நகைச்சுவை காட்சிகளிலும் அவருடைய பங்களிப்பு மிகக் குறைவே.

சங்கமத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு ஆக்ரோசமான நடனம் தேவைப்பட்டது. அதைத்தர ரகுமானால் முடியவில்லை. படத்தின் கதாநாயகியான விந்தியாவும் கதைப்படி ஒரு கிளாசிக்கல் டான்ஸர். அவருக்கும் சுத்தமாக பரதநாட்டியம் தெரியாது. சுரேஷ்கிருஷ்ணா தன் அனுபவத்தைக் கொண்டு, அது தெரியாமல் பார்த்துக் கொண்டார். நல்ல பரதநாட்டியம் தெரிந்த நாயகியும், பிரபுதேவா போன்ற நடனத்தில் விற்பன்னரும் அந்தப் படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் சங்கமம் வெற்றி பெற்றிருக்கும். கேரள நாயகர்கள் யாருக்கும் நடனம் கைகூடவில்லை. அதனால் தான் இப்போதைய கேரள இளைஞர்கள் விஜய்யை ரசிக்கிறார்கள் போலும்.

அதற்குப்பின் ரகுமானுக்கு இறங்குமுகம் தான். 2004ல் கே எஸ் ரவிகுமார் இயக்கிய எதிரி படத்தில் ஒரு நெகடிவ்வான போலிஸ் அதிகாரி வேடம் கொடுத்தார். அடுத்த ஆண்டு வெளியான அமீரின் ராமில் போலிஸ் இன்ஸ்பெக்டர் வேடம், பின் 2007ல் வெளியான பில்லா வில் நெகட்டிவ்வான போலிஸ் அதிகாரி வேடம். ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் 2 லும் ஒரு நெகட்டிவ் கேரக்டர். இதுதான் ரகுமானுக்கான பாதையாகிப் போனது. மேலும் இவர் இந்த காலகட்டத்தில் இருந்து  தான் தன்னுடைய சொந்தக்குரலில் பேசி படங்களில் நடிக்கிறார்.
ஆரம்பகாலத்தில் இருந்தே நல்ல டைரக்டர்கள், நடிகர்களுடன் நடித்து வந்த ரகுமான், ஒரு குறிப்பிடத்தக்க கதாநாயகனாக மாறவே இல்லை. தமிழில் அவருக்கு கிடைத்த ஒரே ஹிட் என புதுப்புது அர்த்தங்களை மட்டுமே சொல்லமுடியும். உணர்ச்சிகளை ஓரளவு வெளிப்படுத்தக்கூடிய முகம், நல்ல உயரம், சிவந்த நிறம் இருந்தும் அவரால் தமிழ் திரைப்பட உலகில் எந்த முத்திரையும் பதிக்க முடியவில்லை.
அதற்கான காரணங்கள் என்று பார்த்தால்,

ரகுமான், தனக்கான படங்களை/கதைகளை/வேடங்களை தேர்ந்தெடுப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதனால் அவருடைய படங்கள் வெற்றிபெற வில்லை. வெற்றி பெற்ற நடிகருக்குத்தான் இங்கே அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வரும்.
ரகுமான் அறிமுகமான காலத்தில் இருந்து 15 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் நடனக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் அவர் அதில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. புதுப்புது அர்த்தங்களில் வரும் நல்ல தாளக்கட்டு உடைய பாடலான “எடுத்து நான் விடவா”வில் அவர் ஜனகராஜுக்கு இணையாகவே ஆடுவார். அது இன்று வரை மாறவில்லை.

தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இன்னொரு அம்சம் நகைச்சுவை. நாயகனாக இருந்து தனியாக நகைச்சுவை செய்யாவிட்டாலும், உடன் இருப்போர் செய்யும் போது, அதற்கு ஏற்ப ரியாக்‌ஷன் கொடுத்து, காட்சியை சிறப்பாகவாவது செய்யவேண்டும். ரகுமானின் பட்டணந்தான் போகலாமடியும் பட்டிக்காட்டானும் நல்ல நகைச்சுவை ஸ்கிரிப்ட் கொண்டவை. அதிலும் பட்டிக்காட்டானில் கவுண்டமணி டாக்டர் டென் சொங்கப்பாவாக அதகளம் பண்ணுவார். ரகுமான் தேமே என்றிருப்பார். தமிழில் வெற்றி பெற்ற நாயகர்கள் பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளில் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதில் சரியாக இருப்பார்கள்.


விஜயகாந்த், அர்ஜூன், சரத்குமார் எல்லாம் இன்றுவரை தங்கள் நாயக அந்தஸ்தை இழக்காமல் இருக்க காரணமே அவர்கள் ஆக்‌ஷன் படங்களில் நடித்ததுதான். ஏனென்றால் 1980கள் மற்றும் 90களில் சினிமாவின் முக்கிய வருவாய் கேந்திரங்களாக விளங்கிய பி மற்றும் சி செண்டர்களில் ஆக்சன் படங்களே பிரதானமாய் ஓடின. ரகுமானும் நல்ல உயரம், ஓரளவு நல்ல உடலமைப்பும் கொண்டவர்தான் (ஆரம்ப காலங்களில், பின்னர்தான் தொப்பை வந்தது). மேலும் பாரத் பந்த் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கில் வேறு அவருக்கு நல்ல அறிமுகம் இருந்தது. எனவே அவர் ஏதாவது சில ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தால் கூட அவர் நாயகனாக தமிழ் மண்ணில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பார். இன்றும் கூட நாயகனாகவே இருந்திருக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கும்.

August 25, 2014

சீனத் தொழில்நுட்பம் – ஒரு பார்வை

கொசு அடிக்கும் பேட் சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு இறக்குமதி ஆகி 10 வருடங்கள் ஆகப்போகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஏன் இங்தியாவில் அதன் பயன்பாடு  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இன்னமும் கூட அந்த பேட்டை இந்தியாவில் யாரும் தயாரிக்க முடியவில்லை. அதற்கான பேடண்ட் உரிமம் யாரிடம் இருக்கிறது? எந்த மாதிரி உரிமை? என்பது கூட பெரிய பிரச்சினை இல்லை. சில மாறுதல்களோடு நாம் தயாரிக்கலாம். சீனர்கள் எந்த கோர்ட்டுக்கும் போகப் போவதில்லை.

அந்த கொசு பேட்டானது, இங்கே 150 ரூபாய் முதல் கிடைகிறது. இரண்டு மூன்று நிறுவனங்கள் அதை தயாரிக்க முற்பட்டன. ஆனால் விலை ஐநூறு ரூபாயை நெருக்கி வந்தது. எனவே அதனை கைவிட்டு விட்டனர். கோவையில் உள்ள பல தொழிற்சாலைகள், வெளிநாட்டு பொருட்களை குறுக்கு வாக்கில் அறுத்து, அதன் பாகங்களையும், இயங்கும் விதத்தையும் காப்பியடித்து, இங்கே உருவாக்கி சந்தைக்கு கொண்டு வருவார்கள். அவற்றின் விலை, அந்த வெளிநாட்டுப் பொருட்களின் விலையை விடக் குறைவாகவே இருக்கும். ஆனால் சீனத் தயாரிப்புகளிடம் மட்டும் அவர்களின் பாச்சா பலிக்கவில்லை.

தற்போது, சீனர்கள் கொசுவை இழுத்துப் பிடித்து கொல்லும் மெஷினை உருவாக்கி சந்தைக்கு அனுப்பியிருக்கிறார்கள். 1 கிலோ ரசகுல்லா டப்பா அல்லது பழைய பாமாயில் 1 லிட்டர் டப்பா போல இருக்கும் அந்த மெஷினின் பக்கவாட்டின் மேற்புறம் ஒரு திறப்பு இருக்கும். அதில் அல்ட்ரா வயலட் கதிரியக்கம் இருக்கும். கொசுக்கள் அந்த கதிரியக்கத்தால் இழுக்கப்பட்டு (பகலிலும் கூட) மெஷினின் திறப்பு அருகே வந்ததும்,  அடியில் உள்ள புளோயரால் விருட்டென உள்ளே இழுக்கப்பட்டு, சொர்க்கத்துகோ நரகத்துக்கோ போய்விடும்.  நாம் பொதுவாக உபயோகிப்பது மஸ்கிடோ ரிப்பல்லண்ட். இவை கொசுவை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு துரத்தவே செய்யும். துரத்தப்படும் கொசுவானது, தன்னுடைய வாழ்க்கையில் 10000 கொசுவாக இனப்பெருக்கம் அடையும் வல்லமை வாய்ந்தது. ஆனால் இம்முறையிலோ சந்ததி பெருக்கம் கட்டுப்படுத்தப் படுவதால், நாளடைவில் கொசுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப் படுகிறது. இந்த பொறி 500 ரூபாய்க்கே கிடைக்கிறது.

இதே போல் எலியை கொல்லும் எலெக்ட்ரானிக் இயந்திரமும் சந்தைக்கு வந்துள்ளது. நம்முடைய எலிப்பொறியைப் போன்றே இருக்கும் இதில், தேங்காய் சில்லோ, மசால் வடையோ வைக்க வேண்டியதில்லை. எலிகளுக்குப் பிடித்தமான வாசனையால் இழுக்கப்பட்டு உள்ளே வரும் எலி மின்னழுத்தத்தால் உயிரிழக்கும். இந்தியா தான் இதற்கு மிகப்பெரிய மார்க்கெட். எத்தனை ஆயிரம் மளிகைக் கடைகள் உள்ளன. ஆளுக்கு ஒன்று வாங்கினாலே போதும்.

இதுமட்டுமல்ல, தற்போது மிகப்பெரிய பில்டர்கள் எல்லோரும் சீனாவில் தான் பினிஷிங் செய்வதற்கான பொருட்களை வாங்கிகிறார்கள். கட்டிடத்திற்கு அடிப்படைத் தேவையான மணல், செங்கல், சிமெண்ட் மட்டும் தான் இங்கே வாங்குகிறார்கள். மற்ற கட்டுமானப் பொருட்கள் எல்லாம் சீனாவில் இருந்துதான். சின்ன பில்டர்கள் கூட தங்கள் கட்டிட பிளானை எடுத்துக் கொண்டு சீனாவிற்கு செல்லுகிறார்கள். சுற்றிப்பார்த்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஆங்காங்கே உள்ளவர்களிடம் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள். இந்தியா திரும்பிவந்து, அந்த விலாசங்களை கொடுத்துவிட்டால் போதும். ஏஜெண்டுகள், அந்தப் பொருட்களை வாங்கி, தேவைக்கேற்ப  கண்டெய்னர்களில் போட்டு சீனத் துறைமுகத்தில் கிளியரன்ஸ் வாங்கி அனுப்பிவிடுவார்கள். இங்கே சென்னைத் துறைமுகத்தில் இருந்து, நாம் எடுத்துக் கொள்ளவேண்டியது. இவ்வளவு தூரம் அதை கொண்டுவந்தாலும், இங்கே வாங்கும் விலையை விட  குறைவாகவே இருக்கும்.

80களில் வெளிவந்த திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், பணக்காரராக சித்தரிக்கப்படுபவரின் வீட்டிலோ அல்லது கதாநாயகியின் அறையிலோ வால் பேப்பர்களை சுவற்றில் ஒட்டியிருப்பார்கள். சில அலுவலகங்களிலும் கூட நீங்கள் பார்த்திருக்கலாம்.  இப்போதும் அப்படிப்பட்ட வால் பேப்பர்கள் சென்னையில் கிடைக்கின்றன. ஒரு சதுர அடி 120 ரூபாய் விலை. ஆனால் சுவரில் பெயிண்டிங் செய்ய சதுர அடிக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைதான் ஆகும். அதனால் எல்லோரும் பெயிண்ட் செய்யத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள். ஆனால் இப்போது சீன வால் பேப்பர்கள் சதுர அடி 10 ரூபாய்க்கு கிடைக்கும் தருவாயில் உள்ளன. 10 ஆண்டுகள் உத்திரவாதம் தருகிறார்கள். அந்த வால் பேப்பரை ஒட்டுவதற்கான பசை மற்றும் ஆட்கூலி சேர்த்து அதிகபட்சம் சதுர அடி 20 ரூபாய்க்குள் முடிந்துவிடும். எனவே தற்போது தங்கள் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் உத்தேசத்துடன் இருப்பவர்கள் சற்று பொறுமை காக்கவும். விதவிதமான வண்ணங்களில், ஏராளமான டிசைன்களில் வால்பேப்பர்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைப் போலவே ஆஃபீஸ் பர்னிச்சர்களும். அருமையான மாடல்களில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த விலையில் கிடைக்கின்றன.

எப்படி சீனர்களுக்கு இது கட்டுப்படியாகிறது?  எந்த சாதனமாய் இருந்தாலும், அதன் தயாரிப்பு விலையில் மூன்று காரணிகள் அடங்கியிருக்கும். ஒன்று அந்த சாதனத்தை கண்டுபிடித்ததற்கு ஆகும் ஆராய்ச்சி செலவு, இரண்டாவது அதை தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை, மூன்றாவது அதை தயாரிக்க ஆகும் செலவு.

நம் நாட்டில் தான் ஆராய்ச்சி என்பது, குறைந்தது 25 வயதுக்கு மேல் ஆரம்பிக்கும் விஷயமாக இருக்கிறது. 17 வயது வரை பாடம் மட்டும். பி ஈ படிக்கும் போது கடைசி செமஸ்டரில் கூட்டத்தோடு கோவிந்தாவாக ஒரு காப்பியடிக்கப்பட்ட/விலைக்கு வாங்கப்பட்ட பிராஜக்ட், எம் ஈ யில் ஏதாவது ஒரு கான்பரன்ஸ்ஸில் பிரசண்ட் பண்ணும் அளவிற்கு, மேக்கப் செய்து விட்டால் போதும். பி எச்டி படிக்கும் போதுதான் ரிஸர்ச் மெதடாலஜியே தெரிய வரும். அங்கேயும் நான்கு கோர்ஸ், பின்னர் காம்பெரஹென்சிவ் வைவா என்று இரண்டு ஆண்டு ஓடிவிடும். பின்னர் ஒரு இண்டர்நேஷனல் ஜர்னலில் பேப்பரை அடித்துப் பிடித்து போட்டு விட வேண்டியது. பழைய சமன்பாட்டில் டெல்டா எக்ஸ் இப்போ நான் கண்டு பிடிச்சது டெல்டா எக்ஸ் பை ரூட் டூ. இதனால என்னய்யா பிரயோஜனம்னு? கேட்டா, அடுத்து பண்றவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்னு பதில் வரும்.

அடுத்து வர்றவன் இந்த லிட்டரேச்சரையெல்லாம் படிச்சிட்டு வழக்கமான சடங்கையெல்லாம் பண்ணிட்டு டெல்டா எக்ஸ் பை ரூட் டூ மைனஸ் 1 ந்னு தீஸிஸ் எழுதி முடிப்பான். கேட்டா ரிஸர்ச் எல்லாம் உடனே உலகத்தை தலைகீழா மாத்திடாது, சின்ன சின்ன சேஞ்ச் எல்லாம் சேர்ந்து தான் ரிசல்டண்ட் கிடைக்கும்னு வியாக்கியானம் பேசுவான்.
அன்றாட வாழ்க்கைக்கு என்ன தேவை? எப்படி நம்ம வாழ்க்கையை எளிமையாக்கலாம் என்று யோசித்தாலே ஏகப்பட்ட பிராடக்ட்களுக்கு ஐடியா கிடைக்கும். சீனர்கள்  அப்படித்தான் பிராக்டிக்கலாக யோசிக்கிறார்கள். இந்த தேவையை எப்படி சமாளிப்பது? அதற்கு என்ன தீர்வு? அவ்வளவுதான். நூற்றுக் கணக்கில் ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஒரு முடிவெடுப்பதற்கு பதிலாக, சிந்திக்கிறார்கள். செயல்படுத்துகிறார்கள். பள்ளி அளவிலேயே சிந்தனையை தூண்டும்படி அங்கே பாடத்திட்டம் இருக்கிறது. சுற்றுப்புறத்திலும் ஏராளமான உதாரணங்கள் கிடைக்கின்றன. நம் நாட்டிலோ, படி,படி,படி. சுற்றுப்புறத்திலும், உறவு வட்டத்திலும் பெரும்பாலும் படித்து முன்னேறியவர்கள் பற்றியே சிலாகிக்கப்படும். இதனால் போட்டு வைத்த பாதையிலேயே நம் பயணம்.

சின்ன வயதில்தான் மூளை கட்டுப்பாடுகள் இல்லாமல் யோசிக்கும். முப்பது வயதுக்குப் பின்னர், பி எச் டி முடித்தபின்னர், எதை எடுத்தாலும் கன்ஸ்ட்ரயின்கள் தான் நம் மனதில் முதலில் தோன்றும். இது முடியாது, அது கஷ்டம் என்றேதான் ஆரம்பிப்போம்.எனவே யூஸ்புல்லான, வாழ்வுக்கு தேவையான பிராடக்ட் நம்மிடம் இருந்து உருவாகாது. பிராய்லர் கோழி இறக்கை பிய்க்கும் மெசின் ஒரு பி ஈ பிராஜக்ட்தான். மிக உபயோகமான கண்டுபிடிப்பு. ஆனால் இப்போதோ, பிராஜக்டை விலைக்கு வாங்கும் கலாச்சாரம் மலிந்துவிட்டது.

அடுத்த விஷயம், மூலப் பொருள். முன்னர் சீனாவின் துயரம் என்று வர்ணிக்கப்பட்ட மஞ்சள் நதி, இப்பொழுது மற்ற நாடுகளுக்கு பொருளாதார துயரத்தை கொடுக்கிறது. நதி நீர் இணைப்பை அவ்வளவு அருமையாக செயல்படுத்தி இருக்கிறார்கள். பஞ்சாப் கோதுமை, பெல்லாரி வெங்காயம், ராஜஸ்தான் மார்பிள் எல்லாம் கன்னியாகுமரிக்கு வந்து சேரும்பொழுது போக்குவரத்து செலவு, பொருளின் விலையில் முக்கிய அங்கமாய் மாறிவிடுகிறது. அங்கே மஞ்சள் நதி சீனாவின் முக்கிய நகரங்களை எல்லாம் இணைக்கின்றது. எரிபொருள் செலவு இல்லாமல், நதியின் போக்கிலேயே பொருட்களை கொண்டு செல்லும்படி நீர்வழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் பொருட்களை கொண்டு செல்லும் செலவு அவர்களுக்கு மிச்சமாகிறது. முன்னர் சென்னையிலும் பக்கிங்ஹாம் கால்வாய் அப்படித்தான் பயன்பட்டது. இப்பொழுது காமெடி சீன் எடுக்க மட்டும்தான் பயன்படுகிறது.

மூன்றாவது தயாரிக்கும் முறை. முன்னர் இந்திய அணியில் வெங்கடபதி ராஜு என்ற இடதுகை சுழற்பந்து வீச்சாளர் இருந்தார். பீல்டிங் செய்யும்போது, பவுண்டரி லைன் அருகே நிற்பார். எந்த பக்கம் பந்து மிகக் குறைவாக வருமோ அந்தப் பக்கத்தில்தான் கேப்டன்கள் அவரை நிறுத்துவார்கள். ஏனென்றால், பந்தைக் கண்டதும் அவர், காதலில் விழுந்த கதாநாயகிகளைப் போல ஸ்லோ மோசனில் ஓடிச்சென்று, பந்தை எடுப்பார். ஒரு வேளை வலது கையில் பந்தை எடுத்து விட்டால், அதை மெதுவாக இடது கைக்கு கொண்டுவந்து, கையை வாகாக ஒரு சுழற்று சுழற்றி விக்கெட் கீப்பருக்கு எறிவதற்குள் இரண்டு ரன்களை எதிரணியினர் கூடுதலாக எடுத்து விடுவார்கள்.

ஆனால் சில பீல்டர்கள் பந்தை எடுக்கும் போதே, தங்கள் துரோயிங் ஆர்மால் தான் எடுப்பார்கள். எடுத்த உடனே பிக்கப் துரோ செய்து விடுவார்கள். இரண்டு ரன் எடுக்க நினைக்கும் எதிரணியினர் கூட ஒரு ரன்னுடன் திருப்தி பட்டுக் கொள்வார்கள். இடையில் ஆஸ்திரேலிய அணியில் கூட ஒரு பிராக்டீஸ் செய்து பார்த்தார்கள். இரண்டு கைகளாலுமே பிக் அப் துரோ செய்ய முடிந்தால், ரன்களை குறைக்கலாம், ரன் அவுட் வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என. சீனர்கள் தங்கள் பொருட்களை தயாரிக்கும் போது, இப்படித்தான் நேரம் குறைவாகப் பிடிக்கும்படி வேலை செய்யும் பொசிசன்களை அமைத்துக் கொள்கிறார்கள். வேலைக்குத்தகுந்தபடி அதை மாற்றியும் கொள்கிறார்கள்.

வேலையை விரைவாக செய்து முடிக்கும் உபகரணங்களையும் அவர்கள் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் வேலை நேரம் மிகவும் குறைகிறது. தற்போது கூட சுவர்களுக்கு சிமெண்ட் பூசும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்து உள்ளார்கள். இரண்டு பில்லர்கள் அதில் இரண்டு பிரேம்கள் மேலும் கீழும் செல்லும். எந்த பொசிசன் வேண்டுமென்றாலும் எளிதில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். கீழே சிமெண்ட் கலவையை வைத்து விட்டால் போதும்.நாம் செட் செய்த ஏரியாவில் சீராக, விரைவாக கலவையை பூசி விடும். இப்போதைய அடக்க விலை 5 லட்ச ரூபாய் ஆகிறது. விரைவில் பில்டர்கள் இங்கே அதை கொண்டுவந்து விடுவார்கள். இப்போதைய கட்டடங்களில் ஆட்களுக்கு கொடுக்கப்படும் கூலி 30 முதல் 40 சதவிகதம் வரை ஆகிறது. அது இனி விரைவாக குறையும்.

மேலும் சீன அரசு சிறப்பு உறபத்தி மண்டலங்களை பல இடங்களில் அமைத்துள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும். ஒரு நல்ல ஐடியா உடன் இருப்பவர், பொருளுக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு ஏற்ப தொழிற்சாலை வசதிகளை லீசுக்கு எடுத்து உற்பத்தியை தொடங்கி விடலாம். தொழிற்சாலை அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு மற்ற நாடுகள் செலவழிக்கும் தொகை, அந்த சாதனத்தில் ஏறிவிடும். இங்கே குறைவான வாடகை மட்டுமே கொடுப்பதால், மூலப் பொருளின் விலை மட்டுமே சாதனத்தின் விலையில் பெரும்பங்காக இருக்கிறது.

நம் நாட்டில் பட்டாசு இறக்குமதிக்கு தடை இருப்பதால் சீன பட்டாசுகளை நேரடியாக இங்கே கொண்டுவர முடியவில்லை. சென்ற இரண்டு ஆண்டுகளாக பீகார், உத்திரப்பிரதேச இண்டீரியர் கிராமங்களில் சீனப் பட்டாசுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு கூட ஏகப்பட்ட சீன பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. பட்டாசுகள் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் சிவகாசியினர் எல்லோரும் காசிக்கு செல்ல வேண்டியதாகி விடும். ஒரு சீனி வெடி விலைக்கு சீனாக்காரர்கள் ஒரு லட்சுமி வெடியே கொடுப்பார்கள். கண்டுபிடித்ததே அவர்கள் தானே.


பாதுகாப்பாக இருக்குமா என யோசிக்கலாம். மாவுக்கேத்த பனியாரம் என்பதற்கு சீனாதான் உதாரணம். ஒரே டிசைனில், ஒரே நிறத்தில் ஒரு லிட்டர் பெட் பாட்டில்களை தயாரிக்கிறார்கள், ஆனால் ஐந்து விதமான குவாலிட்டியில். முதல் தரமானவை, நார்த் அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும். அவர்கள் கொடுக்கும் விலைக்கு, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் மூன்றாம் தரத்தைத் தான் தயாரிக்கமுடியும். நம் நாட்டில் உள்ள இறக்குமதி வணிகர்கள் பெரும்பாலும் தரம் குறைந்த பொருட்களையே பெரும்பாலும் வாங்கி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறார்கள். அதனால்தான் பொது மக்களிடம் சைனா பீஸ் என்றாலே மட்டம் என்ற எண்ணம் நிலவுகிறது. சீனாவோடு ஒப்பிடுகையில் தொழில்நுட்பத்தில் நாம் தான் பின் தங்கி இருக்கிறோம்.

August 23, 2014

புகழ் தின்னி

கட்டப்படும் போது நகரின் எல்லையில் இருந்து, நகர் வளர்ந்தவுடன், தற்போது மத்தியில் அமைந்திருக்கும்  ஆண்களுக்கான மேல் நிலைப்பள்ளி அது. ஆறாம், ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பில் மட்டுமே மாணவர் சேர்க்கை. முதலிரண்டுக்கும் நுழைவுத் தேர்வு, பதினொன்றுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண். நுழைவுத்தேர்வுக்காக தனியார் நடத்தும் கோச்சிங் கிளாஸ்களில் சேரவே தனிப்பயிற்சி தேவைப்படும் அளவுக்கு பிரபலமான பள்ளியாக 25 ஆண்டுகளில் அது வளர்ந்து விட்டிருந்தது.

பள்ளியின் பிரதான நுழைவாயிலைக் கடந்த உடன் நிர்வாகக் கட்டிடம். அதில் பத்துக்கு ஆறு என்ற அளவில் ஒரு கரும்பலகை. ஆறில் இருந்து பிளஸ் 2 வரை பள்ளித் தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவனின் பெயர் அதில் எழுதப்படும். பள்ளிக்குள் நுழையும் எவர் கண்ணிலிருந்தும் தப்பி விடாதபடி அது அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

ராஜேஷ் ஆறாம் வகுப்பு அட்மிசனுக்காக பள்ளிக்குள் நுழைந்த போது, அவனைக் கவர்ந்தது அந்தப் பலகைதான். அதில் ஒருமுறையாவது தன் பெயர் வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக் கொண்டான். பர்ஸ்ட் மிட் டெர்ம் டெஸ்டிலேயே ஆறு செக்சன் மாணவர்களிடையே முதல் மதிப்பெண் வாங்கி அவனுடைய பெயர் அந்த போர்டில் ஏறியது. மற்ற ஆண்டு மாணவர்களின் பெயர் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்க, ராஜேஷின் பெயர் மட்டும் காலாண்டு,அரையாண்டு உள்ளிட்ட எல்லாத் தேர்வுகளிலும் மாறிலியானது. ஒன்பதாம் வகுப்பிற்கு ராஜேஷ் வந்தபோது, புது திறமை சாலிகள் எல்லாம் சேர்ந்து 10 செக்‌ஷன்கள். அதிலும் ராஜேஷே போர்டுக்கு வந்தான். பத்தாம் வகுப்பில் கல்வி மாவட்டத்தில் முதலிடம்.

பதினொன்றாம் வகுப்புகள் முதன் முதலாக ஆரம்பிக்கும் போது, தலைமை ஆசிரியர் நிகழ்த்திய சம்பிரதாய உரையின் போது, மருத்துவப் படிப்பின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, நம் பள்ளி மானவர்கள், மருத்துவக் கல்லூரியில் அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பிளஸ் 2 பாடங்களை பிளஸ் 1லேயே கற்பிக்கும் போக்கு இல்லாத காலகட்டம் அது. சில இடங்களில் அப்படி நடைபெறுவதாய் செய்திகள் கசிந்தாலும், நம் பள்ளி அப்படி இருக்கக் கூடாது என நிர்வாகம் உறுதியாய் இருந்தது. அப்போதெல்லாம் பதினொன்றாம் வகுப்பை, வெளிநாட்டிற்கு கிரிக்கெட் ஆடச்செல்லும் அணிகள், அங்குள்ள உள்ளூர் அணிகளோடு மோதுவது போலவே எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால், அதிலும் ராஜேஷ் குறைவைக்கவில்லை. காலை நாலரை மணிக்கு எழுந்தரிப்பவன், குறைந்தது இரண்டு மணி நேரமாவது படித்து விட்டு, மேத்ஸ் டியூசன் போவான். மாலை பள்ளி முடிந்ததும் பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி டியூசன். டியூசன் முடிந்ததும் இரவு பத்தரை வரை இடைவிடாமல் படிப்பு. பயாலஜி அவனுக்கு தலைகீழ் பாடமானதால் அதற்கு மட்டும் டியூசன் இல்லை. ”பிடிச்சா ஸ்டெத் இல்லாட்டி டெத்” என்று பஞ்ச் டயலாக் மட்டும் தான் சொல்லவில்லை. மற்றபடி டாக்டராக வேண்டுமென்பது அவனது ஒவ்வொரு செல்லிலும் பச்சை குத்தப்பட்டிருந்தது. குளிக்கும் போதும் சாப்பிடும் போதும் கூட படித்த பாடத்தை அசை போட்டபடியேதான் இருப்பான். இவ்வளவு ஏன் அந்த ஆண்டு நடந்த அவனது அக்கா கல்யாணத்தில் கூட அமைதியாக உட்கார்ந்து பத்திரிக்கை கவர்களில் பார்முலாக்களை எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தான். இதனால் அவனுக்கும் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவனுக்கும் இடையேயான இடைவெளி முன் எப்பொழுதையும் விட இப்போது கூடியது.

அவனுடைய வீட்டில் அவனை தங்கத்தட்டில் வைத்து தாங்கினார்கள். அவனுடைய தந்தை ஒரு அரசு ஊழியர். அந்த சமயம் வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவனது அம்மா அவனை அவசரத்துக்கு ஒரு அனாசின் வாங்கக்கூட அனுப்பியதில்லை. ராஜேஸம்மாவை கொண்டு போக எமன் வந்தாக்கூட, கொஞ்சம் பொறுப்பா, பையன் பரிட்சை முடியட்டும்னு ஜாமீன் வாங்கிடும் என தெருவில் பேசிக் கொள்வார்கள். பிளஸ் டூ காலாண்டுத்தேர்வு வரை ராஜேஷை யாரும் நெருங்கமுடியவில்லை.

அந்த பள்ளியின் ஏ ஹெச் எம் அழகு வாத்தியார் அடிக்கடி சொல்லுவார். பிளஸ் டூ லேசுப்பட்டதில்லடா. டென்த்ல கணக்குல நூறும்பான், ஆனா இங்க ஆறும்பான். சில பக்கிக பிளஸ் ஒன் வரைக்கும் மந்தமா இருக்குங்க. பிளஸ் டூவில சண்டமாருதம் பண்ணிடுங்க. வயசு மாறுதில்ல என்பார். அப்படி சண்டமாருதமாய் மாறியவன் சிவகுமார். மட்டமான கேரளா பென்சிலைக் கொடுத்தாலும் அதில் ஐந்தாறு திக்னெஸ்களில் கோடு இழுக்கக் கூடியவன். டைம்ஸ் நியூ ரோமன் 12 என்று செலக்ட் செய்தால் எப்படி டாக்குமெண்ட் பூராவும் ஒரே மாதிரி மாறுகிறதோ, அதே போல ஒரே அச்சாக எழுதத் தெரிந்த வித்தைக்காரன். தலைப்புக்கு ஒரு ஃபாண்ட், உப தலைப்புக்கு ஒரு ஃபாண்ட் என பேப்பர் முழுவதும் சீராக மெயிண்டைன் செய்யக் கூடியவன். ஆறாம் வகுப்பிலிருந்தே இங்கு படித்தவன். எப்போழுதும் ஐந்து ரேங்குக்குள் வருபவன்.

பிளஸ் 2 அரையாண்டு பேப்பர்கள் கொடுக்கப்பட்டது. மொத்தத்தில் சிவகுமார், ராஜேஷைவிட ஒரு மதிப்பெண் கூடுதலாய்ப் பெற்று போர்டில் இடம் பிடித்தான். ராஜேஷால் மட்டுமல்ல மொத்த பிளஸ் 2 மாணவர்களாலும் அதை முதலில் நம்பவே முடியவில்லை. அவனுடைய பேப்பர்களை வாங்கிப் பார்த்தான். டோட்டல்களை வெறியுடன் மீண்டும் மீண்டும் சரிபார்த்தான். மற்ற எல்லாவற்றிலும் இருவரும் ஏறத்தாழ ஒரே மதிப்பெண்கள். கணிதத்தில் சிவகுமார் முந்திவிட்டான். பள்ளியில் நுழையும் போதெல்லாம் அந்த போர்டை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான் ராஜேஷ். கிட்டத்தட்ட ஏழாண்டுகள் இடைவிடாமல் பிடித்து வைத்திருந்த இடம்.

அவனுக்கு அந்த போர்டில் மீண்டும் இடம் பிடிக்க ஒரே வாய்ப்புதான் இருந்தது. பிளஸ் 2 விற்கு பர்ஸ்ட் ரிவிசன் டெஸ்ட். மற்ற வகுப்புகளுக்கு தேர்ட் மிட் டெர்ம். அதனுடன் அந்த ஆண்டு ரோல் ஆஃப் ஹானர் முடிந்துவிடும். கணிதத்தில் எப்படியாவது முதல் மதிப்பெண் பெற்றுவிட்டால் போதும். போர்டில் மீண்டும் வந்துவிடலாம் என ராஜேஷ் எண்ணினான். கணிதத்தில் அசுர சாதகம் செய்ய ஆரம்பித்தான். தேர்வுக்கு முதல் நாள் இரவு முழுவதும் கண் விழித்து படித்து சிவந்த கண்களோடு தேர்வுக்கு வந்தான். முதல் கணக்கில், இண்டெகிரேசனில் மைனஸ் எக்ஸ்ஸை தவறாக பிளஸ் எக்ஸ் என வாசித்து செய்தான். ஆன்சர் வரவில்லை. பதட்டமானான். மீண்டும் மீண்டும் முயற்சித்து நேரத்தை வீணாக்கினான். கொஞ்சம் புத்தி வந்து, மற்ற கணக்குகளுக்குப் போனான். ஆனான் அவனின் ஆழ்மனதில் போர்டில் பேர் வராதே பேர் வராதே என்ற குரல் கேட்க கேட்க எந்த கணக்குக்கும் விடை வரவில்லை.

அந்த பேப்பரை வகுப்பில் கொடுக்கும் போது, யாருமே நம்பவில்லை. ராஜேஷ் பெயிலா என்ற ஆச்சரியம் பள்ளி முழுவதும் பரவியது. ”அழகு வாத்தியார் அவனை கவுன்சிலிங் செய்தார். மூணு நாலு லட்சம் பேர் தமிழ்நாடு பூராம் எழுதுறாண்டா. அதுல முன்னூறுக்குள்ள வந்திட்டாலே உனக்கு மெடிக்கல் சீட் நிச்சயம். நீ அசால்டா அப்படி வந்துடுவ. இங்க ரேங்க் வாங்குறது ஒரு விஷயமே இல்லை. இதத் தாண்டி உலகத்தில சாதிக்க எவ்வளவோ இருக்கு. எதைப் பத்தியும் கவலைப் படாம படி. ஸ்கூல்க்கு கூட வரவேண்டாம். எக்ஸாமுக்கு மட்டும் வா. என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் அவன் கேட்கவில்லை. ஒவ்வொரு நாள் பள்ளிக்குள் நுழையும் போதும், நிமிர்ந்து அந்த போர்டை வெறித்துப் பார்ப்பான். பின் தலையை குனிந்தபடி வகுப்பிற்குச் சென்றுவிடுவான்.

தேர்வு முடிவுகள் வெளியானது. மெடிக்கலுக்கு வாய்ப்பில்லை. இஞ்சினியரிங் வாய்ப்பு இருந்தது. நான் கீழிறங்க விரும்பவில்லை. ஐ ஏ எஸ் ஆகி  யாரென்று காட்ட விரும்புகிறேன் என பெற்றோரிடம் சொல்லி விட்டான். இதுவரை எதுவும் வாய்விட்டு கேட்காத மகன், எந்த சொல்லையும் தட்டாத மகன், போட்ட எந்த சாப்பாட்டையும் புன்னகையோடு சாப்பிட்ட மகனின் சொல்லைத் தட்ட அவர்களால் முடியவில்லை.

அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற கலை அறிவியல் கல்லூரியில் பி ஏ பொலிடிக்கல் சயின்ஸ் சேர்ந்தான். முதல் பருவத்தில் வைக்கப்பட்ட எல்லாத் தேர்வுகளிலும் அட்டகாசமான மதிப்பெண்கள். ஆனால் இரண்டாம் பருவத்திலேயே கீழிறங்கினான்.

உண்மையில் ராஜேஷுக்கு படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கிளறியது அவன் மீது விழுந்த பெருமித, ஆச்சரிய, பாராட்டிய, பொறாமை கொண்ட பார்வைகள் தான். அந்தப் பார்வைகள் படப்பட அவனுடைய சக்தி வளர்ந்து கொண்டே போனது. சாதகப் பறவைக்கு இசை, சக்கரவாகத்திற்கு மழை, ராஜேஷுக்கு புகழ், புகழ்ப்பார்வை. வீட்டில், தெருவில், பள்ளியில், டியூசனில் அவன் மீது விழுந்த புகழ்ப்பார்வைகளை உண்டு வளர்ந்தவன் அவன். எப்பொழுது அந்தப் பார்வைகள் இரக்க, பச்சாதாப, கேலிப் பார்வைகளாக மாறியதோ அப்போதே அவனுடைய சக்தி குறையத் தொடங்கியது.

அவனுடைய கல்லூரி வகுப்பு எந்த நாளிலும் நிறைந்திருந்ததில்லை. சிலர் விளையாட்டுப் போட்டிகளுக்கு, சிலர் கல்சுரல்ஸ்களுக்கு, சிலர் சினிமாக்களுக்கு என அறுபது சதவிகிதம் பேர் வெளியில் தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். முதல் பருவத் தேர்வு முடிவு வெளியானவுடன் தன் மீது மீண்டும் புகழ்ப் பார்வை படியும் என எதிர்பார்த்தவனுக்கு, யாரும் அதைப் பொருட்படுத்த வில்லை என்பது அதிர்ச்சியாய் இருந்தது. இண்டர் காலேஜ் வோக்கல் சோலோ பர்ஸ்ட் பிரைஸ்க்கு இருந்த புகழ்ப்பார்வையில் ஒரு சதவிகதம் கூட எல்லா சப்ஜெக்ட்களிலும் எஸ் கிரேட் எடுத்த ராஜேசுக்கு கிட்டவில்லை.

புகழைத் தின்னாத ராஜேஸ் வெகு சாதாரணன் ஆகிப் போனான். ஒரு வழியாக டிகிரியை முடித்தவனை அவனுடைய தந்தை வற்புறுத்தி குடிமைப் பணிகளுக்கான ஒரு கோச்சிங் செண்டரில் சேர்த்து விட்டார். இரண்டு மணி நேர கிளாஸ் போக மீத நேரம் வீட்டில் படிக்க ஆரம்பித்தான் ராஜேஸ். வகுப்பிலும், யாரையும் சுட்டாமல் பாடம் எடுப்பார்கள். தேர்வு பேப்பர்களையும் மூன்றாம் நபர் அறியாமல்தான் கொடுப்பார்கள். உண்மையில் ராஜேஷின் காலிபருக்கு அந்த தேர்வுகள் எல்லாம் சாதாரணம். ஆனால் வீட்டில் அவன் படிக்கும் போது, பெற்றோரின் பச்சாதாப பார்வை, தெருவில் கிடைத்த கிண்டல், கேலி பார்வைகள் அவனுடைய கீழே இறக்கவே செய்தன.

கடைசியில் அவனுடைய தந்தையின் சிபாரிசில் சில இடங்களுக்கு வேலைக்குப் போனான். அவன் வளர்த்திருந்த திறமைக்கும், அவர்கள் புகழ்ப்பார்வை பார்க்க நினைத்தால் தேவைப்படும் திறமைக்கு ஒரு பெரிய இடைவெளி இருந்தது. பத்தோடு பதினொன்றாகவே பணி புரிந்தான்.
விடுமுறை நாட்களில் தான் படித்த பள்ளிக்கு வெளியே நின்று, அந்த போர்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். ஒருமுறை பள்ளி நடந்து கொண்டிருக்கும் போது, உள்ளே புகுந்து சாக்பீஸால் அந்த போர்டில் தன் பெயரை எல்லா வகுப்புக்கும் நேராக எழுத ஆரம்பித்தான்.


இப்போது அந்த பள்ளிக்குச் சென்றால் நீங்கள் கவனிக்கலாம். போர்டு இருந்த இடத்தில் புத்தனின் பொன்மொழி ஒன்று இருப்பதை.