November 30, 2008

ஐ ஐ டி யில் பி எச் டி படிப்பு – வாய்ப்புகள்

ஐ ஐ டி க்களில் கீழ்கண்ட துறைகளில் பி எச் டி படிப்பிற்க்கான வாய்ப்புகள் உள்ளன

1 அனைத்து பொறியியல் துறைகள்
2 உயிரி தொழில்நுட்பம்
3 இயற்பியல்,வேதியியல்,கணிதம்
4 மேலாண்மை

கல்வித்தகுதி

1 பொறியியல் துறை
பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓரளவு மதிப்பான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். (70 சதவீதத்துக்கு மேல்). இதில் வெட்டு மதிப்பெண் வரும் விண்ணப்பங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும். இளங்கலை, முதுகலை இரண்டிலும் சராசரியாக 75% இருந்தால் போதுமானது. கேட் மதிப்பெண் அவசியமில்லை. வரும் விண்ணப்பங்கள், இருக்கும் இடங்களின் அடிப்படையில் நுழைவுத்தேர்வும், பின் நேர்முகத்தேர்வும் நடைபெறும். தற்போது பெரும்பாலும் நேர்முகத்தேர்வே நடைபெறுகிறது.

2 உயிரி தொழில்நுட்பம்
இதில் முதுகலை பொறியியல்/தொழில்நுட்பம் பட்டம் பெற்றவர்களுக்கு கேட் மதிப்பெண் தேவையில்லை. முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர்களாயின் கேட் மதிப்பெண் தேவை.

3 இயற்பியல்,வேதியியல்,கணிதம்
முதுகலை பட்டத்துடன், கேட் மதிப்பெண்ணும் அவசியம்.

4 மேலாண்மை
மேலாண்மை முதுகலை, பொறியியல் முதுகலை, அறிவியல், கணிதம் முதுகலை போன்ற பட்டம் பெற்ற யாரும் விண்ணப்பிக்கலாம்.

நுழைவு முறைகள்

1 ரெகுலர் (Half Time Research Associate)

எங்கும் பணியில் இல்லாதவர்களுக்கான முறை. (தற்போது வேலையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம், சேர்க்கையின் போது பணியை ராஜினாமா செய்துவிட வேண்டும்). உதவித்தொகை நான்கு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையால் வழங்கப்படும்.

2 குவாலிட்டி இம்ப்ரூவ்மெண்ட் ப்ரொகிராம் (QIP)
கல்லூரிகளில் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், மத்திய அரசு பணியில் (DRDO,ISRO,DOS,DGAQA போல) இருப்பவர்கள் நுழைவு முறை. இங்கும் உதவித்தொகை தரப்படும், அவர்களின் பணியிடத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகை தரப்படும். தேர்வு பெற்றவுடன், முதல் பருவத்தில் குறிப்பிட்ட நாட்கள் வழிகாட்டியுடன் (GUIDE) ஆலோசனை மற்றும் பணிகள் செய்ய வேண்டும் (பணீயிடத்தில் இருந்து, வந்து போய்) . பின் மூன்று ஆண்டுகள் வளாகத்தில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். படிப்பு முடிந்ததும் தங்களின் பணியிடத்திற்க்கே கட்டாயம் திரும்பி செல்ல வேண்டும். இந்த முறையில் வருபவர்கள் வளாக வேலைவாய்ப்பில் பங்கு பெறமுடியாது.

3 ப்ராஜக்ட்
கல்வித்தகுதி இருந்து ரெகுலர் முறையில் தேர்வு பெற முடியாதவர்கள் இதை பின்பற்றலாம். பேராசிரியர்கள் தாங்கள் வெளியிடங்களில் இருந்து பெற்றுள்ள ப்ராஜக்ட்களில் உங்களை இணைத்துக்கொள்வார்கள். குறிப்பிட்ட அளவு அனுபவம் பெற்றவுடன் நுழைவுத்தேர்வில் பங்குபெற்று (எளிதாக இருக்கும்) பி எச் டி யாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்க்கான உதவித்தொகை ஐ ஐ டி யில் உள்ள Industrial Consultancy & Sponsored Research துறை மூலம் வழங்கப்படும். இவர்கள் வளாக வேலைவாய்ப்பில் பங்கு பெறலாம்.

4 ஸ்பான்ஸர்ட்/ எக்ஸ்டெர்னல் கேண்டிடேட்
பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய தனியார்/அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான முறை. இதில் உதவித்தொகை தரப்பட மாட்டாது. முதல் பருவத்தில் வளாகத்தில் தங்கி, ஆராய்ச்சிக்கு தேவையான பாடங்களை (இது எல்லா நுழைவு முறைகளுக்கும் பொது) படிக்க வேண்டும். பின்னர் தங்கள் பணியிடத்திற்க்கு திரும்பி சென்று ஆராய்ச்சியை தொடரவேண்டும். ஆராய்ச்சிக்கான கட்டமைப்பு உள்ள நிறுவனத்தில் பணிபுரிவோருக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும். மேலும் நிறுவனத்திற்க்கும், ஐ ஐ டிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இருக்கவேண்டும். இதற்க்கு கால உச்சவரம்பு கிடையாது.

தேர்வுகள்

நுழைவுத்தேர்வுக்கும், நேர்முகத்தேர்வுக்கும் பெரும்பாலும் அடிப்படையில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வுக்கே முக்கியத்துவம் அதிகம்.

உதவித்தொகை

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ 14,500ம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரூ 15,000ம் வழங்கப்படும். ஒவ்வொரு பருவத்திற்க்கும் கல்வி கட்டணமாக ரூ 9000 நாம் செலுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கு வளாகத்திலேயே குடியிருப்பு வசதி தரப்படும்.

November 29, 2008

நாகேஷின் வித்தியாச வேடங்கள்

தமிழ்திரையுலகம் கண்ட மாபெரும் கலைஞர்களில் முக்கிய மானவர் நாகேஷ். நகைச்சுவை நடிகராகவே பெரும் பாண்மையானோர் மனத்தில் இடம் பெற்றிருக்கும் நாகேஷ் ஆரம்ப காலத்தில் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தவர். பதினாறு வயதினிலே படத்திற்க்கு கூட பாரதிராஜா சப்பாணி வேடத்திற்க்கு நாகேஷைத்தான் மனதில் வைத்திருந்தார். தயாரிப்பாளரின் விருப்பத்தின் பேரிலேயே கமலிடம் கதை சொல்ல சென்றார். படம் முழுவதும் வராமல் நான்கு காட்சிகளில் நடித்தாலும் அதை மறக்க முடியாத அனுபவமாக மாற்றக் கூடியவர். பிணமாக (மகளிர் மட்டும்) நடித்து கூட கைதட்டல் வாங்கமுடியும் என காட்டியவர். இவர் நடித்த நகைச்சுவை வேடங்களை பட்டியலிடமுடியாது, புத்தகமாகத்தான் எழுதமுடியும் என்பதால் அவர் ஏற்று நடித்த நகைச்சுவை அல்லாத வித்தியாச வேடங்களைப் பற்றிய ஒரு பார்வை.

தில்லானா மோகனாம்பாள்

பெரிய மனிதர்களுக்கு பெண்களை ஏற்பாடு செய்து தரும் வைத்தி என்னும் வேடம். கையில் எப்போதும் ஒரு எழுமிச்சம் பழத்துடன் அலைவதும், பெரிய மனிதர்களை கண்டவுடன் அதை கொடுத்துவிட்டு கேள்விக்குறியாய் வளைந்து பேசுவதும், தன்னை விட அந்துஸ்து குறைந்தவரிடம் ஆச்சரியக்குறியாய் நின்று பேசுவதுமாய், பாடி லாங்குவேஜில் பின்னியிருப்பார். அந்த வேலைக்குத் தேவையான அத்தனை கல்யாண குணங்களையும் பிரதிபலிப்பார். ஒரு விருந்தில் சிவாஜியை நாகஸ்வரம் வாசிக்க வேண்டாமென சொல்லுவதும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளிலும் அசத்தியிருப்பார்.

திருவிளையாடல்

ஏழைப் புலவன் தருமி வேடம். இந்த படத்தில் இவர் பேசிய ஒவ்வொரு வசனமும் பள்ளி, கல்லூரி விழா நாடகங்களிலும், மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் கணக்கிலடங்கா முறை மறுசுழற்சி செய்யப்பட்டது. ஆயிரம் லட்டு,பெண்,கோழி என இருக்கும் எல்லா பொருள்களையும் பரிசாக கற்பனை செய்துகொண்டு அதற்கேற்ப சீன் எழுதுவார்கள். சாகாவரம் பெற்ற டிராக் இது.

தாமரை நெஞ்சம்

தாழ்வு மனப்பாண்மையால் அவதிப்படும் வேடம். சரோஜா தேவி நாயகியாய் நடித்த இப்படத்தில், தன் பர்சனாலிட்டி மற்றும் நோய் காரணமாக காதலை நாயகியிடம் சொல்லாமல் தவிக்கும் வேடம். நாயகனாக ஜெமினி கணேசன். தன் மனத்தை தைரியப் படுத்திக்கொண்டு ஒவ்வொரு முறை நாயகியிடம் காதலை சொல்ல முயற்சிப்பதும், பின்னர் பின் வாங்குவதுமாய் அசத்தியிருப்பார். பாலசந்தர் இயக்கிய இந்தப்படத்தில் நாயகனை விட அதிக கவனிப்பு பெற்றவர் நாகேஷே.

எதிர்நீச்சல்

சிறு சிறு வேலைகளை அக்கம் பக்கத்தாருக்கு செய்து கொடுத்து, படித்து முன்னேறும் வேடம். இடையில் ஒரு காதல். முறைவைத்து சாப்பாடு கொடுக்கும் வீடுகளுக்கு சென்று நான் மாது வந்திருக்கேன் என்று சொல்லும் போது அவர் முகத்தில் தோன்றும் உணர்ச்சியை விவரிப்பது கடினம்.

அபூர்வ ராகங்கள்

பாடகி பைரவிக்கு (ஸ்ரீவித்யா) மாரல் சப்போர்டராக இருக்கும் குடிகார டாக்டர் வேடம். தன் நிழலுடன் அவர் பேசும் காட்சியிலும், சியர்ஸ் சொல்லும் காட்சியிலும் டைமிங் பிரமாதமாக இருக்கும்.

மக்கள் என் பக்கம்

கடத்தல்காரனிடம் பணிபுரியும் வழக்கறிஞர் வேடம். ஒரு சிக்கலான வழக்கில் வழி சொல்ல முடியாமல் இவர் தவிக்க, மற்றொரு பெண் வழக்கறிஞர் அதற்க்கு தீர்வு சொல்கிறார். இதனால் அவமானப்படும் அவர் கடத்தல்காரனுக்கு எதிரான அரசியல்வாதியிடம் தஞ்சம் புகுகிறார். பெண் வழக்கறிஞர் தீர்வு சொல்லும் காட்சியில், மற்றவர்கள் ஏளனமாக பார்க்க அதை தாங்க முடியாமல் தன் உணர்ச்சிகளை மறைக்கும் காட்சியிலும், எதிரியிடம் சரணடையும் காட்சியிலும் நடிப்பில் அசத்தியிருப்பார்.

அபூர்வ சகோதரர்கள்

வில்லனாக நடிக்க வேண்டுமென்றால் அஜானுபாகுவான உடலமைப்பு வேண்டும் இல்லையென்றால் மிரட்டும் குரல் வேண்டும். இவை எதுவும் இல்லையென்றாலும் புதுமுகமாக இருந்தால் கூட போதும், தேவையான எபெக்டை கொண்டுவந்து விடலாம். காமெடியனாக மனதில் பதிந்து போனவரை கொடூர வில்லனாக மாற்ற முடியுமா?. முடியும் அது நாகேஷாக இருந்தால். பிரதான வில்லனாக மிரட்டியிருப்பார் இந்த படத்தில்.

மைக்கேல் மதன காம ராஜன்

எட்டு பென்களின் தந்தை, அவர்களின் திருமணத்திற்க்காக பொய்கணக்கு எழுதி முதலாளியின் பணத்தை சுருட்டும் அவினாசி என்னும் கேரக்டரில் அதகளப்படுத்தியிருப்பார். தூக்கி எறிந்தால் கூட பந்து போல் திரும்பிவரும் போதும் சரி, எல்லா சிக்கல்களையும் சமாளிக்கும்போதும் சரி அனாயாசமாக நடித்திருப்பார்.

சேரன் பாண்டியன்

தன்னை மதிக்காவிட்டாலும் தன் மகன் ஊர் போற்ற வர வேண்டும் என துடிக்கும் தந்தை, அதற்க்காக ஊர் பெரிய மனிதர்களான சகோதரர்களை மேலும் சண்டைக்காரர்களாக தன் குயுக்தியால் மாற்றுகிறார். காட்சிக்கு தகுந்தவாறு பாடி லாங்வேஜ், வாய்ஸ் மாடுலேஷனை மாற்றி அசத்துவார்.

கட்டபொம்மன்

தன் மகனை வில்லனின் சூழ்ச்சிக்கு இழந்திருப்பார். அவரின் நம்பிக்கை பேரன் தான். அந்த ஊரிலேயே இருக்கும் வில்லனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என தன் கையாலாகதனத்தை எண்ணி மறுகுவார். ஒருமுறை வில்லனை நேரில் பார்க்கும் போது அவனை அடித்து நொறுக்குவது போல மனக்கண்ணில் பார்ப்பார் (வால்டர் மிட்டி போல) . அந்த காட்சியில் அவர் நடிப்பை பார்த்தால் தான் புரியும்.

நம்மவர்

இந்த வேடத்திற்க்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். கல்லூரி பேராசிரியர் வேடம். ஆசையாய் வளர்த்த மகள் (பிருந்தா), சக மாணவனின் பழி வாங்கலால் (விபச்சார குற்றச்சாட்டு) தற்கொலை செய்துகொள்ள அதை தாங்க முடியாமல் திணறும் வேடத்தில் எல்லோரையும் அழ வைத்திருப்பார். இறந்த மகளுக்கு லேசான தலையனை வையுங்கள் என்று சொல்லும் போதும், அவள் உடன் ஆடுவதாக எண்ணி பாலே ஆடும் போதும் அழாதவர் தியேட்டரில் இல்லை.

தமிழ்சினிமாவின் முக்கிய காதல் படங்கள் பகுதி - 3

அன்புடன்

அருண்விஜய், ரம்பா, வினுசக்கரவர்த்தி,வையாபுரி நடிப்பில் வெளிவந்த படம். கதையின் நாயகியை கடைசிவரை காட்டாமல்,பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை திரையில் கொண்டுவந்த படம் இது. இதற்க்கு முன்னால் தாமரைநெஞ்சம் (நாகேஷ்), சொல்லாமலே (லிவிங்ஸ்டன்), அலைபாயுதே (விவேக்) என ஆண்கள் தாழ்வுமனப்பாண்மையை சித்தரித்த பல படங்கள் வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் பெண்களின் தாழ்வுமனப்பான்மை என்பது அவர்களின் பொருளாதார நிலையாகவே காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. தனக்கு அழகில்லை என்பதால் காதலனை சந்திக்க தயங்கும் பெண்ணை இப்படம் காட்டியது.

காவல்துறை ஆய்வாளரின் (வினுசக்கரவர்த்தி) மகள் கறுப்பு நிறமுடையவள். அவள் ஒரு ஓவியனை(அருண் விஜய் அப்போது அருண்குமார்) காதலிக்கிறாள். அவனின் முன்னேற்றத்துக்கு தன் முகம் காட்டாமல் உதவுகிறாள். நண்பர் குழாமோ அவ்வாறு உதவுவது தங்களின் தோழியோ (ரம்பா) என சந்தேகித்து பின் தெளிவடைகிறார்கள். தன்னை காதலிப்பவளை சந்திக்க பெருமுயற்சி எடுக்கிறான் ஓவியன். நோய்வாய்ப்பட்ட தாயையும் மறக்கிறான். அப்பெண்ணின் தந்தையின் தவறான புரிதலால் நிலைமை சிக்கலாகிறது. காதலி முகம் காட்டாமலேயே உலகை விட்டு செல்கிறாள்.

தன்னை பார்க்க துடிக்கும் காதலனுக்காக கடிதம் அனுப்புகிறாள் பெண். இன்று மாலை கோவிலுக்கு குறிப்பிட்ட நிற உடையில் வருவதாக. காதலன் நண்பர் குழாமுடன் சென்று கோவிலையே அலசுகிறார்கள். அவள் வரவில்லை. தன் இறுதி கடிதத்தில் அவள் சொல்லுகிறாள் "அன்று நான் கோவிலுக்கு சொன்னபடியே வந்திருந்தேன், நீங்கள் நிறமான பெண்ணாகவே தேடி தேடி கேட்டீர்கள். என்னை கேட்கவேஇல்லையே நீயா என்று?" படத்தின் மையமே இதுதான். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அருமையான படமாக வந்திருக்க வேண்டிய கதைக்கரு. பட்ஜெட் மற்றும் பல காரணங்களால் போதிய கவனம் பெறப்படாமல் போனது இந்த படம்.

இந்த படம் நம்மிடம் கேட்கும் கேள்விகள் பல.

ஊடகங்கள் (சிகப்பழகு கிரீம்) தொடர்ந்து சிகப்பு தான் அழகு என அனைவர் மனதிலும் பதிய வைக்கிறதே, இதனால் கறுப்பு நிறமுடைய பெண்களின் மனம் என்ன பாடுபடும்?

முதலில் 36 26 36 என்றார்கள், இப்பொழுது சைஸ் ஜீரோவில் வந்து நிற்கிறார்கள். குண்டாக இருக்கும் பெண்கள் சாபம் பெற்றவர்களா?

பெற்றோர் கூட இவ கறுப்பா பிறந்துட்டா, நெறைய சேர்க்கனும் என்று சொல்லி வளர்க்கும் போது அவளுக்கு எப்படி சுயமரியாதை வளரும்?

ஒரு தெருவில், கல்லூரியில்,அலுவலகத்தில் சிகப்பு நிற பெண்ணுக்கு கிடைக்கும் அதே மரியாதை நிறம் குறைந்த பெண்ணுக்கு கிடைக்கிறதா?

7 G ரெயின்போ காலனி

வாழ்ந்து கெட்ட குடும்பத்து பெண்(சோனியா அகர்வால்), அவளை வெறித்தனமாக காதலிக்கும் (ரவிக்ருஷ்ணா) லோயர் மிடில் கிளாஸ் பையன். அவள் மனமும் கரைகிறது, ஆனால் குடும்ப சூழ்நிலையால் செல்வந்தனை மணக்க வேண்டிய நிலை. உன் காதலுக்கு என் உடலை கொடுக்கிறேன், எடுத்துக்கொண்டு என்னை மறந்து விடு என செயல்படுத்துகிறாள். தொடரும் விபத்தில் அவள் இறக்க, புத்தி பேதலிக்கிறான் நாயகன்.

செல்வராகவன் இயக்கத்தில், யுவனின் இசையில், அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஏ எம் ரத்னம் தயாரித்த படம். நான் முன்பு பணிபுரிந்த இடத்தில், பயிற்சிக்கு வந்த பெண்கள் இந்த படம் பார்க்க போவதால் மாலை ஒரு மணி நேரம் பெர்மிஷன் வேண்டும் என கேட்டு வந்தார்கள். நான் இந்தப்பட தீம் நன்றாக இருக்காது, வேறு படத்துக்கு போங்கள் என சொன்னேன். அவர்களோ கேட்பதாயில்லை. அடுத்த நாள் அவர்களிடம் படம் பற்றி விசாரித்தேன். எங்கள் அனைவருக்கும் படம் பிடித்திருந்தது, க்ளைமாக்ஸில் சோனியா பயன்படுத்திய தலையணை,பாயை தூக்கிகொண்டு அவன் ஓடிவரும் போது அழுதுவிட்டோம் என்று கூறினார்கள்.

எனக்கு காதல் தோல்விப் பாடல்கள் மிக பிடிக்கும். பூங்காற்றிலே (உயிரே), உன்னை நினைச்சேன் (அபூர்வ சகோதரர்கள்), எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்), டீ ஆரின் ஆரம்பகால படங்களின் காதல் தோல்விப் பாடல்கள் என கலைவையாக போல்டரில் போட்டு வைத்து கேட்டுக்கொண்டிருப்பேன். நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலை மட்டும் மூன்று முறை காப்பி செய்து அதில் வைத்திருக்கிறேன்.

இயற்கை

ஜனநாதன் இயக்கத்தில், ஏகாம்பரம் ஒளிப்பதிவில், வித்தியாசாகர் இசையில், அருண்குமார், ஷாம், குட்டி ராதிகா, சீமா பிஸ்வாஸ், கருணாஸ் நடிப்பில் வெளிவந்த இந்தப்படம் மாநில, மத்திய அரசு விருதுகளை பெற்றது. தஸ்தவாஸ்கியின் வெண்ணிற இரவுகளின் சாயல் இந்த படத்தில் இருக்கும். சஞ்சய் லீலா பன்ஸாலி இயக்கத்தில், ரண்பீர் கபூர் (ரிஷிகபூர் மகன்), சோனம் கபூர் (அனில் கபூர் மகள்) நடிப்பில், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் வெளியான சவாரியா படம் இப்பட கருவை தழுவியதே.

துறைமுகப் பகுதியில் வியாபாரம் செய்யும் குடும்பபத்துப் பெண்(குட்டி ராதிகா), ஒரு கப்பல் கேப்டனை (அருண்) காதலிக்கிறாள். அவன் திரும்பி வருவதாக சொல்லிப் போகிறான். மாதங்கள் கடக்கின்றன. அத்துறைமுகத்துக்கு வரும் மாலுமி (ஷாம்) ஒருவன் அவளிடம் காதல் கொள்கிறான். அவளோ தன் பழைய காதலை சொல்லி மறுக்கிறாள். காப்டன் கடல் புயலில் இறந்து விட்டதாக தகவல். மாலுமியை அவள் மணமுடிக்க அரை மனதுடன் சம்மதிக்கிறாள். பின்னர் என்ன ஆனது?
ஷாமின் காதல், ராதிகாவின் உணர்ச்சிப் போராட்டம் என அருமையாக கொண்டு சென்றிருப்பார் ஜனநாதன். இப்படத்தில் வரும் காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் காதலியிடம் நல்ல சிக்னல் கிடைக்காதவர்கள் காலர் டியூனாக வைத்துக்கொள்ள ஏற்றது.

November 27, 2008

வண்ணநிலவனின் கடல்புரத்தில்



அதிகாரம் என்பதே ஒருவன் வாழ்வதற்க்கான பலத்தையும், மன திடத்தையும் தருகிறது. அந்த அதிகாரம் குறையும் போது அவன் வாழ்வதற்க்கான காரணம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. முற்றிலும் அதை இழக்கும்போதோ கிட்டத்தட்ட நடைப்பிணமாகிறான். நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான அலுவலக அதிகாரிகள்/ஊழியர்களிடம் நாம் காண்பது, இதை உறுதிப்படுத்துகிறது. இது இவர்களுக்கு மட்டுமா பொருந்துகிறது?. ஆட்சியாளர்கள், கலைத்துறையினர், வர்த்தகர்கள், விவசாயிகள், நெசவாளிகள் என அனைத்து பிரிவினருக்கும் இது பொருந்துகிறது.



வண்ணநிலவன் எழுதிய கடல்புரத்தில் புதினத்தில் இதுபோல் அதிகாரம் குறையும் ஒரு மீனவனுடைய குடும்பத்தார் வாழ்க்கை அந்த வட்டார மொழியில் சொல்லப்பட்டிருகிறது. இங்கே அவனது அதிகாரமாக இருப்பது அவனுடைய மீன்பிடி படகும், அதை செலுத்தக்கூடிய உடல் வலிமையும் தான். இயந்திரப்படகுகள் வருகையால் நாட்டுப்படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் அடையும் பின்னடைவும் இதில் ஊடுபாகாக சொல்லப்பட்டுள்ளது. அவ்வூர் மீனவர்களின் காதல்,காமம், பாசம், ஏமாற்றம், அரவணைப்பு ஆகியவை இக்கதை மாந்தர்கள் மூலம் நம்மனதில் படியவைக்கப்படுகிறது.




எனக்கு கடலும் மீனவர்களும் அவ்வளவு பரிச்சியமில்லை. தென் தமிழ்நாட்டில் ஒரு விவசாய கிராமத்தில் பிறந்த எனக்கு விவசாயிகளின் வாழ்க்கை மட்டுமே அறியப்பட்டிருந்தது. சிறு விவசாயத்திற்க்கு செய்யும் செலவு ஒரு வழிப்பாதை ஆனபின், வாரிசுகள் வேறு இடத்திற்க்கு பிழைப்புக்கு சென்றபின் மீதமுள்ள பெண்ணின் திருமணத்திற்க்கோ, விட்டுப்போன சீர்வரிசைக்காகவோ பூர்விக நிலத்தை விற்க டவுனுக்கு வரும் பலரை பார்த்திருக்கிறேன், பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் இருக்கும் பாலமுருகன் பிரியாணி ஸ்டாலில். பதிவு முடிந்தவுடன் அங்கே அரை பிளேட் மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, குடும்பத்தார்க்கு பார்சல் வாங்கி டவுன் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் போதுகூட அவர்கள் முகத்தில் சலனம் இருக்காது.



மறுநாள் காலை உடல் கடிகாரம் ஐந்து மணிக்கு எழுப்பிவிட்டுவிட, வழக்கம் போல் கருவிகளை எடுத்துக் கொண்டு நிலத்தை நோக்கி நாலடி வைத்தவுடன் உண்மை உறைத்து தோள் துண்டால் வாயைப் பொத்தி கேவும் போது, மனதளவில் இறந்துவிடுவார். அடுத்து யார் பாலமுருகன் கடையில் பிரியாணி சாப்பிடப்போகிறார்கள் என்பது ஊர் சாவடியில் வருத்ததுடன் பேசிக்கொள்ளப்படும். அதே போல் இங்கும் கதையின் நாயகன் மிக்கேல் குரூஸ் தன் பூர்விக படகையும் வீட்டையும் விற்றுவிட்டு மகளுக்கு விருப்பமானதை வாங்கிக்கொண்டு வருவதும் அதை தொடரும் நிகழ்வுகளும் குறிஞ்சி,முல்லைக்கு மட்டுமல்ல நெய்தலுக்கும் இதே நிலைதானோ என வருந்த வைக்கிறது.


எங்கள் ஊர் பக்கம் சேனைத்தண்ணீர் வைப்பது என்னும் பழக்கம் உண்டு. பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இருக்கும் என நினைக்கிறேன். பிறந்த குழந்தைக்கு சர்க்கரை கலந்த நீரை கொடுப்பதுதான் அது. அதை கொடுப்பவருடைய குணாதியசங்கள் குழந்தைக்கு வரும் என்பது ஒரு நம்பிக்கை. எனவே நன்கு படித்த, வாழ்வில் வெற்றியடைந்தவர்களையே சேணை வைக்கச் சொல்வார்கள். சில சமயம் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒருவனை சிலாகிக்க இப்படி சொல்வார்கள் "அவனுக்கு சேணை வச்சது யாரு?, நம்ம கிழக்கு வீட்டுக்காரரில்ல" என்று. இங்கும் சேணை வைக்கிறார்கள். சர்க்கரை நீரை அல்ல, கடல் நீரை. ஆணாயிருந்தால் அவனுக்கு கடலில் பிழைப்பதற்க்கான உடல் வலுவையும், பெண்ணாய் இருந்தால் எந்த கஷ்டத்தையும் தாங்கும் மனத்திடத்தையும் கடலம்மா தருவாள் என்ற நம்பிக்கை இங்கே. உண்மையிலேயே இங்கே பெண்ணுக்குத்தான் அதிக மனதிடம் வேண்டும். சென்றவன் என்ன ஆனான்? என ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்க வேண்டுமே?



கடல்புரத்தில் வரும் பெண்களில் முக்கியமானவர்கள் மிக்கேல் குருஸ்ஸின் கடைசி மகள் பிலோமினாவும், அவளது தோழி ரஞ்சியும். இருவருக்கும் காதல் தோல்வி இருக்கிறது. ஆனால் அதை கடக்கும் மன உறுதியும் வாய்க்கப்பட்டவர்கள். இவர்களை வண்ணதாசன் வர்ணிக்கும் விதம் அலாதியாக இருக்கும். அவர்களை வர்ணிக்கும் போது சொல்வார், "பிலோமியின் உடல் நிறம் கறுப்பாக இருந்தாலும் உதடுகள் மின்னும் கறுப்பாக இருக்கும்" என்று. பொதுவாக தமிழர்களுக்கு வெள்ளை நிற பெண்ணும் பிடிக்காது, கறுப்பு நிற பெண்ணும் பிடிக்காது. மாநிற மேனி என்றால் மயங்கி விடுவார்கள். எங்கள் ஊர்பக்கம் அதை புதுநிறம் என்பார்கள். அந்த நிறத்தில் முகம் லட்சணமாக இருக்கும் பெண்கள் திருவிழா காலங்களில் தாவணி அணிந்து வளைய வரும் போது ஊரே வெறிக்கும். ஆனால் முழு கறுப்பு என்றால்???. பிலோமி சொல்கிறாள் " ரஞ்சி உன் சிரிப்புல என்னவோ இருக்குடி, இல்லாட்டி இந்த கறுப்பிய யாரு கட்டிக்கிருவா?" இதைப் படித்தபின் யோசித்துப் பார்த்தேன் கடைசியாக நம்மை கவர்ந்த கறுப்பான பெண் யார்? டி ஆர் ராஜகுமாரி,ரோஜா முதல் சினேகா வரை புதுநிறத்து பெண்கள் தானே?. நாம் ரசிக்கும் அழகுகூட சமுதாயத்தின் கருத்தாகவே நம்மீது படிகிறதோ?. சுற்றம் நட்பு என எல்லோரும் கறுப்புதான் அழகு என கற்பித்திருந்தால் நமது ரசனை மாறியிருக்குமோ?


இயந்திரப்படகுகள்வந்ததால் தொழில் நசிந்து வெளியேறுகிறார்கள் நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள். உடனே நமக்குள்ளே கேள்வி வருகிறது. ஏன் இவர்கள் வருங்காலத்தை மனதில் வைத்து வாழ்க்கை நடத்தியிருக்க கூடாது? இந்த எண்ணமே பொருளை மட்டுமே பார்க்கும் பலருக்கும் முதலில் தோன்றும். இயந்திரப்படகுகள் இல்லாமல் வல்லத்தில் மட்டும் சென்று எல்லோரும் மீன் பிடித்தால்? யாவரும் நலமாய் இருக்கலாமே?. அரிய மீன் வகைகள் அழியாது.சுற்றுச்சூழல் நிலை நிறுத்தப்படும். இதைதான் அவர்கள் கடலம்மா கோபித்துக்கொள்வாள் என்ற எளிய மொழியில் சொல்லுகிறார்கள். உண்மையில் இருப்பதோடு அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்வதில் வரும் தலைமுறைக்கு உலகத்தை தருகிறார்கள். தொழிலில் இம்ப்ரூவ்மெண்ட் என்று பேச ஆரம்பிக்கும் போது, நாம் செய்யும் எந்த முயற்சியும் சூழலை பாதிப்பதாகவோ இருக்கும் சமனிலையை சிதைப்பதாகவோதானே முடிகிறது. அதற்கு பாதிப்பில்லமல் செய்ய வழி இருந்தாலும் பொருள் கண்ணை மறைக்கிறதே. அதற்க்கு இந்த கடல்புரத்து வல்லத்துக்காரர்கள் எவ்வளவோ மேல்.




கதையில் வரும் மற்ற பாத்திரங்களான செபஸ்டி,ஐசக்,சிலுவை,வாத்தி, பவுலுபாட்டா போன்றவர்களின் பிம்பத்தை குறைவான வர்ணனைகள் மூலமே ஆசிரியர் நம் மனதில் ஏற்றிவிடுகிறார். அந்த கதாபாத்திரங்கள் பேசும் மொழியும் அவர்களின் இயல்புக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது.
கதையின் மையக்கதாபாத்திரமான மைக்கேல் குருஸ்ன் மனைவி மரியம்மை- ஊர் வாத்தி இடையேயான இலை மறை காய் மறை உறவு, அது தெரிந்திருந்தும் குறைந்துவிடாத மைக்கேலின் மனைவி பாசம், பிலோமிக்கும் தரகருக்கும் இடையே நடக்கும் ஒளிவுமறைவில்லாத பேச்சு, ரஞ்சிக்கும் அவளது கொளுந்தனுக்கும் இடையேயான பாசம் என பல காட்சிகளின் மூலம் அம்மக்களிடையே இருந்த நீக்கு போக்கான தன்மையும் வெளிப்படுகிறது.
இந்த கதை நடக்கும் காலகட்டம் 1970 என்பதால் இதில் சொல்லப்படும் படகின் விலை 350 ரூபாய், திருவிழாகாசு 10 பைசா என்பதெல்லாம் நம்மை ஆச்சரியப்படுத்துபவை. மேலும் அக்காலத்திலேயே ஆசிரியர்கள் உபதொழில்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியப்படுத்தப்படுகிறது. அப்போதைய முக்கிய லாபம் தரும் வியாபாரங்களில் ஒன்றாக சைக்கிள் ஸ்பேர்பார்ட்ஸ் கடை சொல்லப்படுகிறது.

இந்த நாவலின் சிறப்பே, இதில் வரும் சம்பவங்கள், குடும்பத்தில் நடக்கும் வாத பிரதி வாதங்கள் எல்லாம் எந்த சமூகத்திற்க்கும் தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் அமைந்திருப்பதேயாகும். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் கடலைப் பார்த்தேன். இன்றுவரை கடற்கரையை தாண்டி எதையும் யோசித்ததில்லை. ஆனால் இதை வாசிக்கும்போது, கடல்புர மக்களின் பேச்சுவழக்கு, உடல்மொழி ஆகியவை என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தன. இனி எப்பொழுதாவது மீனவர் குடியிருப்பு பக்கம் போனால் அங்கே குரூஸையும், பிலோமியையும், பவுலுபாட்டாவையும் என் கண்கள் தேடும்.


நூலின் பெயர் : கடல்புரத்தில்


ஆசிரியர் : வண்ணநிலவன்


பக்கங்கள் : 128


விலை : ரூ 75.


வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,


ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701

நூலை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்



நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

November 26, 2008

என் சகியே

திருமணமான புதிதில் உன்னிடம் பேசிக் கொண்டேயிருப்பேன். ஒரு தொடர்வண்டி பயனத்தில் அதே போல் நான் பேசிக்கொண்டே வந்தபோது, எதிர் இருக்கை பயணி புருவம் உயர்த்தினார். அவரிடம் நான் சொல்லலாம் என நினைத்தேன். " நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன். இந்த 25 ஆண்டுகளில் காதலாக யாரிடமும் பேசியதில்லை. இப்போது சேர்த்து வைத்து பேசிக்கொண்டிருக்கிறேன்".

ஒருமுறை அலுவலகத்தில் இருந்து திரும்பிவந்த போது கோபமாய் இருந்தாய். திருமணத்துக்கு இரு ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்த மொக்கை கவிதைகளை காட்டி, "யாரை நினைத்து எழுதுயது இது?" என சண்டையிட்டாய். அப்பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே, இன்று வரை அதை அனுபவித்ததில்லை நான். ஆஹா நம் மீதும் பொசசிவ்வாய் இருக்க ஒரு பெண் இருக்கிறாளே!!! . நம்மாலும் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்க முடிந்திருக்கிறதே!!! என்று.

உறவிலும் சரி, நட்பு வட்டாரத்திலும் சரி என்றும் நான் முதன்மையாகவோ, முக்கியமான நபராகவோ கருதப்பட்டதில்லை. வந்தால் சரி என்பார்கள். வராவிட்டால் அதைப்பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். நீ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்டா என்ற பூச்செண்டை யாரும் எனக்கு கொடுத்ததில்லை. ஒரு முறை உன் ஊர் திருவிழாவுக்கு சென்றிருந்தாய். நான் தொலைபேசியில் அழைத்த போது சொன்னாய் "போன தடவை ஒவ்வொண்ணுக்கும் கமெண்ட் அடிச்சு சிரிக்க வச்சீங்க, இந்த தடவை நீங்க இல்லாம ஒரே போர்". கால காலமாய் பூச்செண்டு எதிர்பார்த்தவனுக்கு ஆர்கிட் மலர் தோட்டம் அந்த பதில்.

ஜாதி, ஜாதகம் பார்த்து திருமணம் செய்கிறார்களே என்று சமுதாயத்தின் மீது ஒரு வெறுப்பு இருந்தது. காதல் திருமணங்கள் மட்டும் தான் நடக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் இப்போதோ சமுதாயத்தை வணங்கிக்கொண்டிருக்கிறேன். பெண்களை துளியளவு கூட இம்ப்ரெஸ் பண்ண இயலாத தோற்றம், ஆரம்பித்த உடனேயே அறுக்காதடா என நண்பர்களே புலம்பும் அளவுக்கு போரான என் பேச்சு, சராசரி அறிவு, அதற்கும் கீழான வசதி என இருந்த எனக்கு உன்னைப்போல் ஒரு தேவதையை எப்படி காதலித்து அடையமுடியும். வாழ்க ஜாதி,ஜாதகம்.

இதுவரை நான் அடைந்த தோல்விகளெல்லாம் உன்னை திருமணம் செய்ததால் அர்த்தமற்றதாகிப் போய்விட்டது.

எவ்வளவு அழைப்பு வார்த்தைகள் இருந்தாலும் உன்னை அழைப்பது சகி என்று தான். தொடர்ந்து இதுபோலவே என்னை சகித்துக்கொள் என்று வேண்டிக்கொள்ளத்தான்.

November 22, 2008

1979 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள்

கடந்த 75 ஆண்டுகளில் சிறந்த 10 தமிழ்படங்களை பட்டியலிடுமாறு எந்த பிரபலங்களைக் கேட்டாலும் இரண்டு படஙகள் மட்டும் தவறாமல் அந்த பட்டியலில் இடம் பெறும். அவள் அப்படித்தான் மற்றும் உதிரிப் பூக்கள். இந்த இரண்டுமே 79 ஆம் ஆண்டு வெளிவந்தவை. இவை தவிர இன்னும் ஏராளமான வித்தியாச கதைக் கருவை கொண்ட படங்கள் இந்த ஆண்டு வெளிவந்தன.

அவள் அப்படித்தான்

பெண் நதியைப் போல. ஆணாதிக்கம் எனும் பெரும் பாறை அவள் போக்கில் குறுக்கிட்டு அவளின் இயல்பு மாறி பயணிக்க வைக்கிறது. அவளின் எல்லைகளை சுருக்குகிறது. மெதுவாக ஓடும் நதியால் அந்த பாறையை என்ன செய்ய முடியும்?. பல யுகங்களின் முடிவில் தான் கூழாங்கல்லாக மாற்ற முடியும். ஆனால் அவளே புதுவெள்ளமாக புறப்பட்டு பிரவாகமாக பொங்கினால் பாறையை உருட்டி விடலாமே?. அவ்வாறு பொங்குபவள்தான் இந்த மஞ்சு [ஸ்ரீபிரியா]. ருத்ரைய்யா இயக்கத்தில், கமல்ஹாசன்,ரஜினி நடித்து வெளியான படம். ஒரு ஆவணப்படம் எடுக்கும் நிகழ்வை கதைக்களமாக வைத்து பெண்ணுரிமையை பேசியபடம். உறவுகள் தொடர்கதை என்னும் இனிமையான பாடலும் உண்டு. ஸ்ரீபிரியா பேசும் பெண்ணிய வசனங்கள் அப்போது அதிகப்பிரசங்கித்தனமாக தோன்றினாலும் அதில் இருந்த நிஜம் அனைவரையும் சுட்டது.

உதிரிப் பூக்கள்

மணிரத்னம் சில காலம் முன் ஒரு பேட்டியில் சொன்னது “ உதிரிப் பூக்கள் போல ஒரு படம் கொடுத்து விட்டால் சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்ததற்கு எனக்கு ஒரு நிறைவு கிடைக்கும்”. எனக்கென்னவோ அதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மகேந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் விஜயன், அஸ்வினி,சரத் பாபு, சாருஹாசன் நடிப்பில் வெளியான இந்தப்படம் தமிழ்சினிமாவின் மைல்கல் படம். ஊர் பெரிய மனிதரும், பள்ளி தாளாளருமான விஜயன், மனைவி உடல் நலமின்றி இருப்பதால் தன் மைத்துனியை திருமணம் செய்ய நினைக்கிறார். மனைவி இறக்க, பின் இவர் பல தவறுகள் செய்ய, ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத ஆனால் மறக்கவே முடியாத கிளைமாக்ஸ். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் ஹாஜா ஷெரிப்,அஞ்சு. இவர்கள் பங்கு பெறும் அழகிய கண்ணே எனும் பாடலில் காட்டப்படும் தாய், குழந்தைகளுக்கு இடையேயான அன்னியோன்யம் கண்ணில் நீரை வர வழைத்து விடும். மிக குறைவான வசனங்கள். ஆனால் எல்லாமே கத்தியின் கூர்மை. என்றும் இல்லாத திருநாளாய் கடுகடு கணவன் பூ வாங்கி அனுப்புகிறான். அதை பெற்றுக் கொண்ட மனைவி வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்க்கிறாள். மழை வருகிறதா என்று?. இதுபோல பெரும்பாலான காட்சிகள் வசனமே இல்லாமல் சிம்பாலிக்காகவே அமைக்கப்பட்டிருக்கும்.


ரோசாப்பூ ரவிக்கைக்காரி

சிவகுமாரின் 100 வது படம். தீபா நாயகி,இது ஒரு பீரியட் பிலிம். சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் வண்டிச்சோலை என்னும் கிராமத்தில் நடைபெற்ற கலாசார மாற்றங்களை திரையில் பிரதிபலித்த படம். செம்பட்டை (சிவகுமார்) அந்த கிராமத்தில் சிறு சிறு வேலை செய்துவருபவர். அவருக்கு நகரத்து நாகரீகப் பெண் (தீபா) மனைவியாக அமைகிறார். தீபாவுக்கு, தன் தந்தையின் நண்பரும் வனத்துறை அதிகாரியுமான சிவசந்திரனுடன் தொடர்பு ஏற்படுகிறது. சிவகுமாருக்கு இது தெரியவந்ததும் தற்கொலை செய்து கொள்கிறார். வெத்தலை வெத்தலை வெத்தலையோ, உச்சி வகுடெத்து பிச்சிபூ வச்ச கிளி போன்ற பாடல்கள் கொண்டது. இப்படத்தின் பல காட்சிகள் சிம்பாலிக்காக அமைக்கப்பட்டிருக்கும்.

சுவரில்லாத சித்திரங்கள்

இயக்குனராக பாக்யராஜின் முதல் படம். சிறுநகரத்தில் கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்கள் குடியிருக்கும் தெருவொன்றில் நடைபெறும் சம்பவங்களே படம். கதானாயகியை ஒரு தலையாக காதலிக்கும் பாக்யராஜ், அவளை காதலிக்க அந்த தெரு தையல் கடையில் டாப் அடிக்கும் சுதாகர். தையல் காரர் கவுண்டமணி என இயல்பான பாத்திரங்கள். தண்ணி எடுக்கப்போகும் போது காதலனுக்கு சிக்னல் கொடுக்கும் காட்சிகள் யதார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கும். பாக்யராஜ் தான் ஒருதலையாய் காதலித்தவளுக்காக ஒரு ஊமை கைம்பெண்ணை மணந்து கொள்வதும், ஆனால் இவர் செய்த தியாகம் அர்த்தமற்றதாகி விடுவதுமாய் முடிவு அமையும். காதல் வைபோகமே என்னும் துள்ளல் பாடல் இப்போது சுந்தர் சி யின் படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.


அழியாத கோலங்கள்

பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரதாப், ஷோபா மற்றும் சிறு வேடத்தில் கமல் நடித்த படம். இந்தி இசை அமைப்பாளர் சலீல் சௌத்ரி இசை அமைத்த படம். 15 வயதில் இருக்கும் விடலை பையன்களுக்கு வரும் காமத்தைப் பற்றி பேசிய படம். பூவண்ணம் போல நெஞ்சம் என்னும் காவியமான பாடல் கொண்ட படம்.

புதிய வார்ப்புகள்

இப்படபிடிப்பிற்கு ஹீரோயின் உட்பட அனைவரும் லொக்கேஷனுக்கு சென்று விட்டார்கள். இரண்டு, மூன்று நாள் படபிடிப்பும் முடிந்து விட்டது. ஹீரோ யார் என்று இயக்குனர் பாரதிராஜா யாரிடமும் சொல்லவில்லை. உதவி இயக்குனர் பாக்யராஜ் வாய் விட்டு கேட்டு விட்டார். நீதான்யா ஹீரோ என்கிறார் இயக்குனர். படமும் வெற்றி. இப்படத்தில் இடம் பெற்ற தந்தன தந்தன தாளம் வரும் பாடல் பல ஆண்டுகளுக்கு திரையில் காதல் வரும்போது குறிப்பால் உணர்த்த பயன்பட்டது.

பசி

இப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஷோபா பெற்றார். துரை இயக்கிய இந்தப் படம் சென்னை குடிசை வாழ் மக்களை ஓரளவு எதார்த்தமாக பிரதிபலித்தது. விஜயன், டெல்லி கணேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஏழ்மையிலும் கண்ணியம் தவறாதவர்கள் குடிசை வாழ் மக்கள் என்ற கருத்தை சொன்ன படம்.

கன்னிப்பருவத்திலே

ராஜேஷ்,வடிவுக்கரசி,பாக்யராஜ் நடித்த படம். பாலகுரு இயக்கி சங்கர் கணேஷ் இசைஅமைத்த படம். வடிவுக்கரசியின் கணவர் ராஜேஷ் தாம்பத்ய வாழ்வில் ஈடுபடும் தகுதி இல்லாமல் இருக்கிறார். பாக்யராஜ் இடையில் வருகிறார். சிக்கல்கள். இப்படத்தில் இடம்பெற்ற நடையை மாத்து சரியான நாட்டுப்புற பாணி குத்துப் பாடல். பட்டு வண்ண ரோசாவாம் என்ற அருமையான மெலடியும் உண்டு.

மாந்தோப்புக்கிளியே

சுருளிராஜனை மக்கள் இன்னும் மறக்காமல் இருக்கும்படி செய்த படம். இதில் அவர் ஏற்று நடித்த கஞ்சன் கதாபாத்திரம் ஒரு டிரெண்ட் செட்டர். எம் ஏ காஜா இயக்கிய இப்படத்தில் தீபா,சுதாகர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

நிறம் மாறாத பூக்கள்

பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் விஜயன்,ரத்தி,ராதிகா, சுதாகர் நடித்த படம். ரத்தி இதில்தான் அறிமுகம். ஆயிரம் மலர்களே மலருங்கள், முதன் முதலாக காதல் டூயட் போன்ற இனிமையான பாடல்கள்.

ஆறில் இருந்து அறுபது வரை

நான் கமல் ரசிகனாக இருந்தாலும், ரஜினி நடிப்பிற்க்கும் மிகப் பெரிய ரசிகன் நான். ரஜினியின் ஆன்மீக, பெண்ணடிமை மற்றும் அரைகுறை அரசியல் கருத்துக்களுக்காகவே அவரை விமர்சிப்பேன். நண்பர்களுடனான விவாதங்களில் ரஜினியின் நடிப்பை யாராவது விமர்சித்தால் நான் சொல்லுவது ”முள்ளும் மலரும், ஆறில் இருந்து அறுபது வரை எல்லாம் பார், பின் பேசு”. ஒரு கண்டிப்பு மிகுந்த அண்ணனாக அமர்க்களப்படுத்தியிருப்பார் இந்த படத்தில். இந்த ஆண்டில் ரஜினியின் அன்னை ஓர் ஆலயம், தர்மயுத்தம்[ ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு] போன்ற படங்களும் வந்தன.

கல்யாண ராமன்

ஜி ரங்கராஜன் இயக்கிய முதல் படம். கமல் இருவேடம், ஒன்று எத்துப்பல். ஸ்ரீதேவி இணை. எத்துப்பல் அப்பாவி கமல் கலக்கியிருப்பார். பின் இந்த இயக்குனர் மீண்டும் கோகிலா, கடல்மீன்கள் போன்ற படங்களையும் இயக்கினார். இவருக்கு உதவவே கமல் மகராசன் படத்தில் நடித்தார்.

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

ஸ்ரீதர் இயக்கத்தில் விஜயகுமார், லதா,ஜெய்கணெஷ் நடிக்க வெளியான படம். நானே நானா, அபிசேக நேரத்தில், என் கல்யான வைபோகம் உன்னோடுதான், குறிஞ்சி மலரில் போன்ற இளையராஜாவின் அதி பயங்கர ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.

நினைத்தாலே இனிக்கும்

பாலசந்தர் இயக்கம். கமல்,ரஜினி,ஜெயபிரதா, எம் எஸ் வி இசை, கண்னதாசன் பாடல்கள். வேறெதுவும் சொல்ல வேண்டுமா?
பாலசந்தர் இயக்கிய நூல் வேலியும் இந்த ஆண்டுதான் வந்தது. கமல் ரஜினி இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் இந்த ஆண்டில் வந்ததே.

இப்படி பல வித்தியாச படங்கள் வந்தாலும் வசூலில் சாதனை படைத்த படம் சிவாஜியின் திரிசூலம். இப்படத்தில் மூன்று வேடம். அதில் அப்பா வேடம், சூழ்னிலையால் பிரிந்துவிட்ட தன் மனைவியிடம் தொலைபேசியில் பேசும் காட்சியின் வாய்ஸ் மாடுலேஷன் மிமிக்ரி கலைஞர்களால் இப்பொழுது உபயோகிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பல படங்கள் வணிக ரீதியிலும் சிறப்பாக இருந்தாலும் பஞ்ச கல்யாணி என்னும் படமும் பாப்பாத்தி என்னும் படமும் வினியோகஸ்தர்களை மகிழ்சிப்படுத்தியது. அழகிய சலவைத் தொழிலாளி, அவள் வளர்க்கும் கழுதை, ஒரு மைனர், ஒரு காதலன் இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதை பி சி செண்டர்களை கலக்கியது. ரதி தேவி நாயகியாக நடித்த பாப்பாத்தி படம் வயது வந்தவர்களுக்கு மட்டும். நாயகி மேலாடை இன்றி நடித்த படம். இதுவும் பரபரப்பாக ஓடியது.

எந்த ஆண்டிற்க்கும் டாப் டென் பாடல்களை பட்டியலிடலாம். இந்த ஆண்டிற்கு அதை செய்தால் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியதுதான். இந்த ஆண்டின் சிறந்த மெலடி மற்றும் துள்ளல் இசைப் பாடல்களை ஒரு எம்பி3 ஆக பதிந்தால் விற்பனை ஓகோவென இருக்கும்.

November 21, 2008

காதலர் ஈகோவை மையமாக கொண்ட காதல் திரைப்படங்கள்

பெருநகர காதலர்களுக்கு ஜாதி,மதம்,பெற்றோர் போன்ற டிரடிசனல் வில்லன்கள் எல்லாம் இப்போது இல்லை. பல புதிய வில்லன்கள் வந்துவிட்டார்கள். அவர்களில் முக்கியமானவராக இருப்பவர் திருவாளர் ஈகோ. ஈகோவை அடிப்படையாக கொண்டு வந்த திரைப்படங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
அன்பே வா

பீல் குட் படம் என்றாலே ஞாபகத்துக்கு வரும் படம். எம் ஜி யார், சரோஜா தேவி நடித்த இப்படத்துக்கு பல சிறப்புகள். ஏவிஎம் நிறுவனத்தில் எம்ஜியார் நடித்த ஒரே படம், காதலுக்காக எம்ஜியார் வருந்திய படம், ஏ சி திருலோகசந்தர் இயக்கத்தில் எம்ஜியார் நடித்த ஒரே படம், காதலர் ஈகோவை காட்சிப்படுத்திய முதல் படம் என.

பல திறமைகள் கொண்ட நாயகனை நாயகி வியக்கிறாள். ஆனால் காதலைச் சொல்லவிடாமல் ஈகோ தடுக்கிறது. நாயகனும் சொல்வதாய் இல்லை. ஒரு கட்டத்தில் நாயகி தனது முறைப்பையனை மணக்க ஒத்துக்கொள்கிறாள். பின்னர் அனைவருக்கும் உண்மை தெரிய சுபம்.

இப்படத்தில் எம்ஜியார் பேசும் காதல் தோல்வி வசனம் " இதுவரை நான் அடைந்த வெற்றிகளெல்லாம் இந்த ஒரே தோல்வியில் அர்த்தமற்றதாகிப் போய்விட்டதே" . பாடல்களும், நாகேஷின் நகைச்சுவையும் மிகவும் ரசிக்கப்பட்ட ஒன்று. லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் என்று சரோஜா தேவி பாடுவதும், அதற்க்கு எம்ஜியாரின் ரியாக்ஷன்களும் கலக்கலாக இருக்கும். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,அன்பே வா போன்ற காதல் பாடல்களும், ஏ நாடோடி என்ற கலாட்டா பாடலும் இப்பொழுதும் கேட்கத் தூண்டுபவை.
எதிர்பாராத விபத்தாக அஜித்தின் ஆழ்வார் படத்தை ஒரு முறை பார்க்க நேர்ந்தது. அப்பொழுது எனக்கு தோன்றியது "இந்த கதையை எடுத்ததுக்கு பதிலா அன்பே வா படத்தை ரீமேக் பண்ணியிருக்கலாமெ இவங்க என்று?" நாகேஷ் வேடத்துக்கு விவேக், அசோகன் வேடத்துக்கு அப்பாஸ் இல்லையென்றால் வினீத். புண்ணாக்கு புண்ணியகோடி யாக (நாயகியின் அப்பா) மணிவண்ணன் அல்லது வேறு காமெடியன் என போட்டு எடுத்திருக்கலாம். லவ் பேர்ட்ஸ் பாட்டை யுவனை வைத்து ரீமிக்ஸ் செய்து, அசின் அபினயம் பிடிக்க, அதை அஜீத் கலாய்க்க அடடா.
ஏவிஎம் கூட திருப்பதி படம் எடுத்ததற்க்கு பதிலா இப்படி ஒரு படம் எடுத்திருக்கலாம்.
நிழல் நிஜமாகிறது

கமல்,சுமித்ரா,சரத்பாபு, அனுமந்து நடித்து எம் எஸ் விஸ்வனாதன் இசையமைத்த இந்தப்படத்திலும் நாயகியின் ஈகோவே காதலுக்கு தடையாய் அமைகிறது. சுமித்ராவின் அண்ணன் சரத்பாபு, அவரின் நண்பர் கமல். சுமித்ரா தனக்குத்தானே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகளுடன் வாழும் பெண். அவளுக்கு கமலின் யதார்த்தமான வாழ்க்கைமுறை பிடிக்காமல் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவமானப்படுத்துகிறாள். காலப்போக்கில் கமலின் திறமைகளைக் கண்டு (பரதனாட்டியம், பாடல்) காதலிக்க நினைக்கிறாள். ஆனால் ஈகோ. பின் தான் நல்லவனாக நினைக்கும் தன் அண்ணனைவிட கமல் நல்லவன் என உணர்ந்து ஈகோவை தூக்கியெறிந்துவிட்டு வாழ்க்கையில் இணைகிறாள்.

இப்படத்தில் கம்பன் ஏமாந்தான், இலக்கணம் மாறுதோ போன்ற அருமையான பாடல்களை எம் எஸ்வி அமைத்திருந்தார்.
கமல் பாடுவதாக வரும் "ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானோ, ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே" போன்ற வரிகள் கதானாயகியை கடுப்பேற்றும்.
கம்பன் ஏமாந்தான் பாடலில் " இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே" எனவும் வெறுப்பேற்றுவார்.

குஷி

ஜோதிகாவுக்கு நட்சத்திர அந்துஸ்து வழங்கிய படம். மும்தாஜ்க்கு கவர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்திய படம். என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு என வீழ்ச்சியை நோக்கி போய் கொண்டிருந்த விஜய்யை நிமிர்த்திய படம்.

சூர்யாவின் குறும்பான வசனம்,இயக்கம், ஜீவாவின் ஒளிப்பதிவு, வெளி நாட்டு பாடல்களை சுட்டு தேவா அமைத்த துள்ளலான இசை என இளைமைத்துடிப்போடு வந்த படம்

நாயகன்,நாயகி சந்திக்கிறார்கள். தவறான புரிதல்கள் பின்னர் அதை உணர்ந்து நேசிக்கத் தொடங்குகையில், நாயகியின் ஈகோ குறுக்கே வருகிறது. தங்களின் நண்பர்களான காதல் ஜோடியை சேர்த்துவைக்க முயலுகையிலும் சண்டை. இறுதியில் இணைகிறார்கள்.

படத்தின் கதையை முதலில் சொல்லி ஆரம்பிக்கும் படம் இது. பின்னர் தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகா நடிக்க வெற்றி பெற்றது. இந்தியில் கரீனா கபூர் நாயகி. ஆனால் படம் வெற்றி பெறவில்லை.
இயக்குனர் மகேந்திரனின் புதல்வர் ஜான் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் விஜய்,ஜெனிலியா நடிப்பில் உருவான சச்சின் படத்திலும் ஈகோவே காதல் தடையாக வருமாறு அமைக்கப்பட்டிருந்தது.

உன்னாலே உன்னாலே

ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வந்த படம். வினய் நாயகனாகவும், கஜோலின் கஸின் தனுஷா இணை நாயகியாகவும் அறிமுகமானார்கள். சதா நாயகி. இப்படத்தில் காதல் வந்த பின்னர் ஈகோ வருகிறது.

கதாநாயகி பொசசிவ் கேரக்டர் உள்ளவரா?, இல்லை ஈகோ அதிகமானவரா? அல்லது பெண்களுக்கே உண்டான இன்செக்யூரிட்டி மனப்பானமை கொண்டவரா என குழம்புமாறு காட்சி அமைப்புகள் இந்த படத்தில். எது எப்படியோ ஈகோவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
கதாநாயகியால் நாயகனை புரிந்துகொள்ள முடியவில்லை. காம்ப்ளக்ஸ் இல்லாத மற்றொரு நாயகி அவனை புரிந்து கொள்கிறாள்.

நாயகியின் எந்த குணம் காதலனை புரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது?
கதாநாயகி பொசசிவ் கேரக்டர் உள்ளவரா?, இல்லை ஈகோ அதிகமானவரா? அல்லது பெண்களுக்கே உண்டான இன்செக்யூரிட்டி மனப்பானமை கொண்டவரா என குழம்புமாறு காட்சி அமைப்புகள் இந்த படத்தில். எது எப்படியோ ஈகோவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
உன்னாலே உன்னாலே, ஜுன் போனால், ஒரு நாள் இன்றுன் போன்ற சிறப்பான பாடல்களும், எஸ் ராமகிருஷ்ணனின் வசனங்களும் படத்தின் பலம்.

November 16, 2008

ஐ ஐ டியில் எம் எஸ் படிப்பு - வாய்ப்புகள்

ஐ ஐ டி களில் எம் எஸ் (ஆராய்ச்சி) முதுகலை படிப்புகள் எல்லாத்துறைகளிலும் (பொறியியல்,அறிவியல்,கணிதம்) கற்பிக்கப்படுகின்றன. இதைல் பயில்வோருக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் உதவித் தொகை (ரூ 8000) மாதம் தோறும் வழங்கப்படுகிறது.


இதற்கும் எம் டெக்குக்கும் உள்ள வித்தியாசம்


எம் டெக் கில் துறை சம்பந்தமான பாடங்கள் முதல் மூன்று செமெஸ்டெர்கள் இருக்கும். மூன்றாவது மட்டும் நான்காவது செமெஸ்டரில் ப்ராஜக்ட் ஒர்க் இருக்கும்.
எம் எஸ்சில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆய்வுக்கு தொடர்பான பாடங்கள் (இது ஆய்வு வழிகாட்டியும், பொதுத் தேர்வு கமிட்டியும் தேர்ந்தெடுக்கும்) முதல் செமெஸ்டரில் கற்பிக்கப்படும். பின்னர் ஆராய்ச்சி மட்டுமே.
எம் டெக் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. எம் எஸ் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள், அதிகபட்சம் 3- 3.5 ஆண்டுகள்.

அடிப்படை தேவைகள்


1. கேட் தேர்வில் நடப்பு மதிப்பெண் வைத்திருக்க வேண்டும்.
அல்லது
2. இளங்கலை முடித்தபின் தொழிற்சாலை அனுபவம்


எப்பொழுது விண்ணப்பிக்க வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான நேர்முக தேர்வுகள் முறையே நவம்பரிலும், ஏப்ரலிலும் நடைபெறும். விண்ணப்பங்கள் முறையே செப்டெம்பெர் மற்றும் பிப்ரவரியில் வழங்கப்படும்.

கேட்டில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் முதலில் எம் டெக் கில் அக்கறை காட்டுவார்கள்


காரணம்

1. வேலைவாய்ப்பில் எம் டெக் கிற்க்கெ அதிக வாய்ப்பு

2. குறிப்பிட்ட கால அளவு (2 ஆண்டுகள்)

3. எங்கும் வேலை கிடைக்காவிட்டாலும் விரிவுரையாளராகும் வாய்ப்பு உள்ளது. (எம் எஸ் படிப்பு, விரிவுரையாளர் பணிக்கான தகுதியாக இந்திய தொழில் நுட்ப கவுன்சிலால் அங்கீகரிக்கப்படவில்லை)
எனவே எம் டெக் கிடைக்காத மாணவர்கள் (மதிப்பெண் 94 முதல் 97 வரை உள்ளவர்கள் ) எம் எஸ் படிப்பிற்க்கு வருவார்கள்.

சரி, என்னால் கேட்டில் அவ்வளவு மதிப்பெண் பெற முடியாது. என்ன செய்யலாம்?

ஐ எஸ் ஆர் ஓ, டி ஆர் டி எல், டி எஸ் ஓ போன்ற அரசு நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சிகளை பல பிரிவுகளாக பிரித்து உயர் கல்வி நிறுவங்களுக்கு வழங்கும். (இதற்க்கு பல காரணங்கள் உள்ளன. அவை தனிப்பதிவில்). இந்த ஆராய்ச்சிகள் பேராசிரியர்களிடம் ஒப்படைக்கப் படும். அவர்கள் தங்களிடம் உள்ள ஆய்வுக்கூட வசதிகள், ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் (எம் எஸ் மற்றும் பி எச் டி) உதவியுடன் அதற்க்குறிய தீர்வை அளிப்பார்கள்.

இவ்வாறு ஆய்வு செய்யும் பேராசிரியர்களை சந்தித்து, வாய்ப்பு கேட்டால் அவர்கள் இணைத்துக் கொள்வார்கள். பின் நம்மிடம் ஓரளவு கேட் ஸ்கோர் இருந்தாலும் நேர்முகத்தேர்வில் நம்மை நிருபித்தால் எம் எஸ் படிக்க அனுமதிப்பார்கள். ஆய்வுக்கு தேவையான பாடங்களை அங்கு படிக்க வேண்டும். பின் ஆராய்ச்சி, அது முடியும் போது எம் எஸ் வழங்கப்படும். இம்முறை துரு ப்ராஜெக்ட் எனப்படும்.

சரி, என்னிடம் கேட் ஸ்கோர் இல்லை. ஆனால் அனுபவம் இருக்கிறது. என்ன செய்யலாம்? நீங்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் ஆய்வு செய்யுமளவுக்கு வசதிகள் இருந்து, உங்கள் மேலாளர் அனுமதித்தால் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். வெற்றி பெற்றால் உங்கள் ஆய்வுக்கு தேவையான பாடங்களை மட்டும் ஒரு செமெஸ்டெர் படித்துவிட்டு, பின் கம்பெனிக்கு திரும்பிச்சென்று வழிகாட்டி உதவியுடன் ஆய்வை தொடரலாம். இதற்க்கு எக்ஸ்டெர்னல் ரெஜிஸ்ட்ரேஷன் முறை என்று பெயர். ஆனால் இவர்கள் வளாக வேலைவாய்ப்பில் பங்கு பெற முடியாது.

இம்முறையில் டி வி எஸ், ஜி ஈ, லேலண்ட் போன்ற தனியார் நிறுவஙகளில் இருந்தும், ஐ எஸ் ஆர் ஓ, டி ஆர் டி எல் போன்ற அரசு பணியில் இருப்பவர்களும் இடம் பெற முடியும்.

எம் எஸ் சாதகங்கள்
1. நன்கு ஆய்வு செய்து இரண்டு,மூன்று ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தவ்ர்கள் வெளிநாட்டு பல்கலை கழகங்களில் பி எச் டி படிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்கும். அங்கு உதவித்தொகை அதிகமாக இருக்கும். அதை முடிப்பவர்களுக்கு உச்ச பட்ச வாய்ப்புகள் கிடைக்கும்

2. இந்திய அரசு நிறுவன்ங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஐ ஐ டி எம் டெக் கிற்க்கு அடுத்து எம் எஸ் க்கே முன்னுரிமை கொடுக்கும். அதன் பின்னரே மற்ற கல்லூரி எம் டெக், எம் ஈ க்கு வாய்ப்பு கொடுக்கும்

3. தற்போது பெரும்பாலான மாணவர்கள் மென்பொருள் துறைக்கே செல்கின்றனர். இதனால் கோர் துறைகளில் திறைமை பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஏற்படும் என கணிக்கிறார்கள். பல பெரிய நிறுவனங்களில் நிபுணர்கள் இல்லாததால் தங்கள் சப் காண்டிராக்டர்கள்/ வெண்டார்கள் ஆகியோரிடம் இருக்கும் திறமையான்வர்களை டெபுடேஷனில் எடுத்துக்கொள்கிறார்கள். எனவே ஒரு பிரிவில் நன்கு ஆய்வு செய்து நிபுணத்துவம் பெற்றுவிட்டால் அருமையான வாய்ப்புகள் கிடைக்கும்.
மென்பொருள் துறைக்கு பல துறைகளில் இருந்து ஆட்கள் வருகிறார்கள். சர்வைவ் ஆகிறார்கள். ஆனால் கோர் துறைகளுக்கு மற்றவர்கள் எளிதில் வர இயலாது. போட்டி குறையும். ஆயிரம் வேலையிடம் எனில் இரண்டாயிரம் நபர்கள் தான் திறமையுடன் இருப்பார்கள். ஆனால் மென்பொருள் துறையில் வேலையிடம் குறைந்தால், அந்த வேலை இடங்களுக்கு போட்டியிட அதிகம் பேர் இருப்பார்கள். பின்னாட்களில் கடினம்.

எனவே இயந்திரவியல், அமைப்பியல், மின்னியல், மிண்ணனுவியல், தகவல் தொடர்பு, கணிப்பொறி அறிவியல் போன்றவற்றில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளவர்கள் இத்ற்கு முயற்சி செய்யலாம். பெரும்பாலோனரை தடுப்பது குறைந்த உதவித்தொகையே. முன்பு ரூபாய் 5000 ஆக இருந்தது தற்போது 8000ம் ஆக உயர்ந்துள்ளது. எனினும் மென்பொருள் துறையில் கொடுக்கப்படும் சம்பளத்துடன் ஒப்பிட்டு யாரும் தமிழ்னாட்டில் முயற்சி செய்வதில்லை. ஆந்திர,கேரள,வட மாநில மானவர்களே இந்த பயனை அனுபவிக்கிறார்கள்.

இயற்பியல், வேதியியல், உயிரியல் தொழில்னுட்பம், கணிதம்,மேலாண்மை போன்ற பிரிவுகளிலும் எம் எஸ் வழங்கப்படுகிறது.

November 13, 2008

வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது சுலபமா – பகுதி 2

தமிழ்சினிமாவில் நடைமுறையில் இருக்கும் வினியோக முறைகள்.

நேரடி வெளியீடு

தயாரிப்பாளரே நேரடியாக திரையரங்குகளில் வெளியிடுவது. இதற்க்கு தயாரிப்பாளரிடம் பெரிய நெட்வொர்க் இருக்க வேண்டும். தமிழக திரையரங்குகள், அவற்றின் கேட்ச்மெண்ட் ஏரியா [அந்த குறிப்பிட்ட திரையரங்குக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் – எங்கெல்லாம் இருந்து? எவ்வளவு பேர்? அவ்ர்களின் பொருளாதார பலம்?] போன்ற விபரங்கள் தெரிய வேண்டும்.

உதாரணமாக சென்னை – சத்யம் எனில் – அர்பன் பேமிலி ஆடியன்ஸ், நல்ல வேலை பார்ப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், காதலர்கள் என பணத்தை பற்றி கவலைப்படாதவர்கள். நகரம் முழுவதிலும் இருந்து வருவார்கள்.

சென்னை – கமலா எனில், வடபழனி,கே கே நகர், சாலிகிராமம், கிண்டி,அசோக் நகர் ஆகியவற்றில் உள்ள நடுத்தர வகுப்பினர், மேன்ஷனில் தங்கியுள்ள வேலை பார்க்கும்/படிக்கும் மாணவர்கள்

அம்பத்தூர் – ராக்கி எனில் அம்பத்தூர்,ஆவடி,அண்ணா நகர்,திருமங்கலம் பகுதி மக்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள்.

அருப்புக்கோட்டை – மகாராணி என்றால் அந்த ஊர் மக்களும், சுற்றியுள்ள கிராம மக்களும்.

இதுபோல தமிழக திரையரங்குகளின் ஜாதகத்தை அறிந்திருந்தால் தான் தங்களின் படத்திற்க்கேற்ற திரையரங்கில் படத்தை வெளியிடமுடியும். இதில் சங்கரிடம் இணை இயக்குனராக இருந்து பின் சாக்லேட் படத்தை தயாரித்தவரும், மதுர, அரசாங்கம் படங்களின் இயக்குனருமான மாதேஷ் கில்லாடி. முதல்வன் படத்தை இவ்வாறு வெளியிட்டு நல்ல லாபம் பெற்றனர். பாபா,சிவாஜி படங்களுக்கும் இவரிடம் ஆலோசனை பெறப்பட்டது என்பார்கள். பெரிய நடிகர், இயக்குனர் படங்களை இம்முறையில் வெளியிடுவது எளிது. சிறிய/புதுமுகங்கள் நடிக்கும் படமெனில் தியேட்டர் கிடைக்காது. தயாரிப்பாளர் தியேட்டர் வாடகையை கொடுத்து படத்தை ஓட்டிக் கொள்ள வேண்டும்.

கமிஷன் முறை

இதில் இருந்து தான் வினியோகஸ்தர்கள் வருகிறார்கள். தயாரிப்பாளரிடம் இருந்து பெட்டியை வாங்கிச் சென்று அவர்கள் ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவார்கள். தியேட்டர் உரிமையாளர் பங்கு போக மீத தொகையை தயாரிப்பாளரிடம் சேர்ப்பிப்பார்கள். தயாரிப்பளாரிடம் கமிஷன் பெற்றுக்கொள்வார்கள்.

இன்னொரு முறையில், பட தயாரிப்பின் போதோ அல்லது லேபில் படம் இருக்கும் போதோ குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளருக்கு கொடுத்து பெட்டியை வாங்கிச் செல்வார்கள். பின் தியேட்டர் உரிமையாளர் பங்கு, தன் பணம் போக மீத தொகையை மட்டும் தயாரிப்பாளரிடம் கொடுப்பார்கள். பின் தயாரிப்பு, அவர்களுக்கு கமிஷன் தொகையை கொடுக்கும். இம்முறையில் முன்னதை விட கமிஷன் சதவீதம் அதிகம். ஏனெனில் முன்னதாக பணம் கொடுத்து உதவுவதால்.

எம்ஜி - மினிமம் கேரண்டி

இம்முறையில் வினியோகஸ்தர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு, குறிப்பிட்ட ஏரியாவுக்கு எம்ஜி கொடுத்து பெட்டிகளை வாங்கிக் கொள்வார். உதாரணமாக ஏகன் படம் கோவை ஏரியாவுக்கு 2 கோடி, 5 வருடத்திற்க்கு என்று வைத்துக் கொள்வோம். படத்தை திரையரங்கில் வெளியிட்டு விளம்பரம் செய்து வசூலான தொகையை கணக்கெடுத்துக் கொண்டே வருவார்கள். தியேட்டர் பங்கு போக வரும் வசூலில் வினியோகஸ்தர் கொடுத்த எம்ஜி+ அவரது கமிஷனை முதலில் எடுத்துக்கொள்வார். அதற்க்குப் பின் வரும் வசூலில் [வசூல் ஆனால்] தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் பிரித்துக் கொள்வார்கள். படம் படுத்துக்கொண்டால் தயாரிப்பாளர் எம்ஜி யில் இருந்து ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை. எல்லா ரிஸ்க்கும் வினியோகஸ்தருக்கே. இம்முறையில் ரஜினியின் பல படங்களை வாங்கி லாபம் சம்பாதித்தவர்கள், குசேலன் படம் ஊற்றிக்கொண்டதும் எம்ஜியை கவர் செய்ய வில்லை யென நெருக்கடி கொடுத்தார்கள். அவர்களின் முக்கிய வாதம் தவறான தகவலை கொடுத்தார்கள் என்பதே.

எம்ஜியார் அவர்களை மினிமம் கேரண்டி ராமச்சந்திரன் என்றே சொல்வார்கள். அவரது படங்கள் எம்ஜியை எளிதாக கவர் செய்து விடும். சிலர் விளையாட்டாக சொல்வார்கள் அவர் மேக்ஸிமம் கேரண்டி ராமசந்திரன் என்று. அது உண்மைதான் என இப்பொழுதும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அவுட்ரைட்

இம்முறையில் வினியோகஸ்தர் படத்தை பார்த்தோ/ பார்க்காமலோ ஒரு தொகையை கொடுத்து குறிப்பிட்ட ஏரியாவுக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு படத்தை வாங்குவது. இதில் எவ்வளவு லாபம் வந்தாலும் வினியோகஸ்தருக்கே. நஷ்டமும் அவருக்கே. பெரும்பாலான படங்கள் இம்முறையில் தான் வினியோகம் செய்யப்படுகின்றன. சின்னதம்பி,கரகாட்டக்காரன்,காதலுக்கு மரியாதை,வாலி,காதல் கோட்டை, உள்ளத்தை அள்ளி தா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற எதிர்பார்ப்பு இல்லாத படங்களை இம்முறையில் வாங்கிய வினியோகஸ்தர்கள் பண மழையில் நனைந்தார்கள். இம்முறையில் படம் வாங்க நல்ல அனுபவம் தேவை. கணிப்பு சரியாக செய்பவர்கள் உச்ச்த்திற்கு செல்வார்கள். ஏரியா தியேட்டர் உரிமையாளர்களிடம் நல்ல தொடர்பும், மக்கள் ரசனையை கணிக்கும் ஆற்றலும் தேவை.


இனி வினியோகஸ்தர்கள் படத்தை கணிக்கும் விதத்தைப் பார்ப்போம். இதற்க்கு முக்கிய கருவியாய் இருப்பது டிசிஆர் [டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட்].

ஒரு திரையரங்கில் தினமும் ஆகும் கலெக்‌ஷன் பற்றிய ரிப்போர்ட் இது. எந்த காட்சியை எவ்வளவு பேர் பார்த்தார்கள், எந்த வகுப்பு நிறைந்தது? பெண்கள்/ஆண்கள் டிக்கெட் எவ்வளவு? போன்ற விபரங்கள் இதில் இருந்து கிடைக்கும்.

இதில் நமக்கு கிடைக்கும் விபரங்கள்

1. ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் இந்த ஏரியாவில் எவ்வளவு நாள் ஓடும்?
2. படத்திற்க்கு முதல் வகுப்பு கலெக்‌ஷன் எந்த நடிகருக்கு நன்றாக இருக்கும், பெண்கள் கூட்டம் யாருக்கு வருகிறது?, கீழ் வகுப்பு ரசிகர்கள் யாருக்கு வருகிறார்கள்?
3. ஒரு நடிகரின் தோல்வி பட கலெக்‌ஷன்/ வெற்றி பட கலெக்‌ஷன் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?. இந்த வித்தியாசம் குறைவாக உள்ளவர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும் [அஜீத்].
4. நகரத்தில் யார் படம் [கமல்,மணிரத்னம்], கிராமத்தில் யார் படம் [விஜயகாந்த்,ராமராஜன், ஹரி, கே எஸ் ரவிகுமார்] நல்ல கலெக்‌ஷன் கொடுக்கும்?.
5. கவர்ச்சி [பத்து பத்து, வேள்வி, மேகம்], ஹாரர் (சிவி, மை டியர் லிசா], பக்தி [பாளையத்தம்மன், ஆடிவெள்ளி] போன்ற படங்களுக்கு குறிப்பிட்ட ஏரியாவில் எவ்வளவு பொடென்ஷியல்?
6. ஜாதி போன்ற காரணங்களால் (கார்த்திக், சரத்குமார்] குறிப்பிட்ட ஏரியாவில் வசூல் எப்படி?

ஷிஃப்டிங்

ஒரு ஏரியாவில் மொத்தம் 200 தியேட்டர் எனில் ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு வீதம் அதிக பட்சம் 30-40 தியேட்டர்களில் மட்டுமே படம் போடப்படும். இதில் முதலில் அதிக கேட்ச்மெண்ட் ஏரியா உள்ள 10 தியேட்டர்களில் ஓட்டப்பட்டு, பின்னர் குறைவான கேட்ச்மெண்ட் உள்ள ஏரியாவுக்கு மாற்றப்படும். இதுவே ஷிஃப்டிங் எனப்படும். முதலில் பெரிய ஊர்களில் திரையிடப்பட்டு பின்னர் சிறு ஊர்களுக்கு மாற்றப்படும்.

எந்த நடிகர், எந்த கதை, எவ்வளவு செலவு செய்து எடுத்தால் லாபம் கிடைக்கும் என வினியோகஸ்தருக்கு அனுபவ அறிவு இருப்பதால் அவர் தயாரிப்பாளர் ஆவது எளிதாக இருக்கிறது. ஆனாலும் சினிமாவின் வெற்றி விதியை யாராலும் சுலபமாக கணிக்க முடியாததால் அவர்கள் தோல்வியும் அடைகிறார்கள்.

November 12, 2008

வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது சுலபமா?

தற்போதுள்ள பல தயாரிப்பாளர்கள் வினியோகத்துறையில் இருந்து வந்தவர்களே. முன்பு இருந்த வினியோக கட்டமைப்பு அவர்கள் தயாரிப்பாளார்கள் ஆவதற்கு தேவையான விவரங்களை கொடுத்தது. இப்போது மாறி வரும் வினியோகமுறைகளும், கார்பொரேட் நிறுவனங்களின் நுழைவும் சமன்பாட்டை மாற்றியுள்ளன. இத்துறையில் முன் இருந்த நிலைமை, தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முக்கிய வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாக மாறியது, அதன் சாதக பாதகம் இவற்றை பார்க்கலாம்.

வினியோக ஏரியாக்கள்

சிட்டி – சென்னை நகரம்
என் எஸ் சி – பழைய வட ஆற்காடு, தென் ஆற்காடு,
செங்கல்பட்டு மாவட்டங்கள்
சேலம் – பழைய சேலம்,தர்மபுரி மாவட்டங்கள்
கோவை – பழைய கோவை (கொங்கு பெல்ட்)
டிடி - திருச்சி,தஞ்சாவூர்
எம் ஆர் - பழைய மதுரை ராமனாதபுரம் மாவட்டம்
டிகே - திருனெல்வேலி, கன்னியாகுமரி

இதுதவிர ஆந்திர,கேரள,கர்னாடக மாநில உரிமை மற்றும் எஃப் எம் எஸ் எனப்படும் வெளினாட்டு வினியோக உரிமை

கலைப்புலி தாணு

ஜி சேகரன் உடன் இணைந்து என் எஸ் சி, சிட்டி ஏரியாவில் பழைய, புதிய படங்களை வினியோகித்துக் கொண்டிருந்தவர். பழைய படங்களுக்கும் சிறப்பாக விளம்பரம் செய்து ஓட்டியதில் புகழடைந்தவர். சூப்பர் ஸ்டார் என்னும் அடைமொழியை பைரவி படத்துக்காக ரஜினிக்கு சூட்டியவர். முதலில் தயாரித்த யார் பட வெற்றியை தொடர்ந்து நல்லவன், புதுப்பாடகன்,கூலிக்காரன் போன்ற விஜயகாந்த் படங்களையும், கிழக்கு சீமையிலே,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க போன்ற படங்களையும் தயாரித்தவர். ஆளவந்தான், சக்கரகட்டி என ரிஸ்க் எடுக்கவும் இவர் தயங்கியதில்லை. வைகோ கட்சி தொடங்கியதில் இருந்து மதிமுக வில் உள்ளார். 94 மயிலை இடைத்தேர்தலில் கடும் போட்டிக்கிடையேயும் 10,000 க்கும் அதிக வாக்குகள் பெற்றவர். இசை அமைப்பிலும் இவர் ஆர்வம் கொண்டவர். ஜி சேகரன் பின் இவரிடம் இருந்து பிரிந்து ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் மற்றும் பல திகில் படங்களை தயாரித்தார்

ராஜ்கிரண்

எம் ஆர் ஏரியாவின் வினியோகஸ்தரான இவர் ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் என்னும் நிறுவனம் தொடங்கி என்ன பெத்த ராசா (ராமராஜன்), என் ராசாவின் மனசிலே (ந்டிப்பு), அரண்மனைகிளி (இயக்கம் + நடிப்பு) போன்ற படங்களை தயாரித்தார். வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர். இளையராஜாவின் ஆப்த நண்பர்.

கே டி குஞ்சுமோன்

ஒரு மாதிரி மலையாள படங்களை பினாமியாக தயாரித்தவ்ர் என்ற வதந்தி உண்டு. நாயகன் (1987) படத்தை என் எஸ் சி ஏரியாவில் வினியோகித்தது இவருக்கு திருப்பு முனையை தந்தது. பின் வசந்த கால பறவை, சூரியன், ஜெண்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற படங்களை தயாரித்தார். காதலனில் அப்போதைய கவர்னர் சென்னா ரெட்டியை கிண்டல் செய்ததால் ஜெயலலிதாவின் பாசத்துக்கு உரிமையாகி கேரள மாநில அதிமுக பொறுப்பாளர் ஆனார். ரட்சகன் காலை வாரியதாலும், புத்திர பாசத்துக்காக கோடீஸ்வரன் என்னும் படத்தை தயாரித்ததாலும் காணாமல் போனார். இப்போது காதலுக்கு மரணமில்லை என்னும் படத்தை தயாரிக்கிறார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன்

என் எஸ் சி ரவி என அறியப்பட்டவர். ஜாக்கி சானின் பல படங்களை இங்கு வெளியிட்டவர். காதலுக்கு மரியாதையில் ஜாக்பாட் அடித்தவர் இவர். சங்கிலி முருகன் தயாரித்த இப்படத்திற்க்கு பிண்ணனி இசை அமைக்கும் போது இளையராஜா இது கண்டிப்பாக வெற்றிபெரும் என கணித்து தாணுவை வாங்கச் சொன்னாராம். தாணுவோ இதுபோலத்தான் கற்பூர முல்லைக்கும் (உண்மையில் அது ஓரளவு நல்ல படம், சின்ன தம்பி, கேப்டன் பிரபாகரன் அலையில் காணாமல் போனது). சொன்னார். பாசில் மேல் நம்பிக்கை இல்லை என மறுத்துவிட்டார். ரவிச்சந்திரன் இதை சரியாக கணித்து வாங்கி பெரிய லாபம் அடைந்தார். பின்னர் விக்ரமன் படங்கள் மூலமும் நன்கு சம்பாதித்தார். அதனால் தான் முதன் முதல் பட தயாரிப்பில் இறங்கும்போது விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்க வானத்தை போல படத்தை தயாரித்தார். காரணம் விஜயகாந்துக்கு பி சி ஆடியன்ஸ், விக்ரமனுக்கு பேமிலி ஆடியன்ஸ். எனவே படம் மினிமம் கேரண்டி. பின்னர் ரமணா,ரோஜாகூட்டம்,அன்னியன்,உன்னாலே உன்னாலே,தசாவதாரம், வாரணம் ஆயிரம் (தற்போது கை மாறிவிட்டது) என பல ஹிட் படங்களை தயாரித்தார். சிட்டி என் எஸ் சி ஏரியாவில் பல தியேட்டர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

சிவசக்தி பாண்டியன்

பாடியில் உள்ள சிவசக்தி என்னும் தியேட்டரை லீசுக்கு எடுத்து அங்கு படங்களை திரையிட்டதால் இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது. இவரும் தாணுவைப்போலவே பழைய படங்களை ஓட்டுவதில் வல்லவர். வான்மதி,காதல் கோட்டை,காலமெல்லாம் காதல் வாழ்க, கண்ணெதிரே தோன்றினாள், காதலே நிம்மதி, கனவே கலையாதே, வெற்றிக் கொடு கட்டு ஆகிய படங்களை தயாரித்தவர்.

சேலம் சந்திரசேகரன்

திருடா திருடி படத்தை அங்கு வினியோகித்தவர். பின் சுள்ளான், கஜினி போன்ற படங்களை தயாரித்தார்.

இது போல தியேட்டர் அதிபர்களும் வினியோகத்துறைக்கு வந்து பின் தயாரிப்பாளர்கள் ஆகியுள்ளனர். சென்னை அபிராமி ராமனாதன் ராஜாதி ராஜா, சிவாஜி போன்ற படங்களை வினியோகித்தார். இப்போது பஞ்சாமிர்தம் என்னும் நகைச்சுவை படத்தை தயாரிக்கிறார். உதயம் திரையரங்க பார்ட்னர் மந்திர மூர்த்தியும் தயாரிப்பாளர் ஆனார். கோவையின் புகழ்பெற்ற கேஜி காம்ப்ளக்ஸ், பாபா காம்ப்ளக்ஸ் காரர்களும் பல படங்களை வினியோகித்துள்ளார்கள். இவர்கள் தயாரிப்பாளர்கள் ஆவார்களா என பார்க்கலாம்.

வினியோகத்துறையில் சப்ளை செயின் மானேஜ்மெண்ட் எப்படி நட்க்கிறது என பார்ப்பதற்க்கு முதலில் சிட்டி, எம் ஆர் எப்படி எப்படி பிரிக்கப்பட்டுள்ளது என பார்க்கலாம்.

சிட்டி

முன்பு இது நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

மௌண்ட் ரோட் – சத்யம்/தேவி/ஆல்பட் வகையறா
கீழ்பாக்/புரசை - அபிராமி/சங்கம்/ஈகா
கே கே நகர்/வடபழனி – உதயம்/கமலா/காசி/ஏவிஎம்
ராஜேஸ்வரி
வட சென்னை – மகாராணி/பிருந்தா

90 களின் இறுதி வரையிலும் எந்த படமாக இருந்தாலும் சிட்டியில் நான்கு தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும். திருவான்மியூர், தாம்பரம், அம்பத்தூர் எல்லாம் என் எஸ் சி யை சார்ந்தது.

எம் ஆர்
மதுரை- 2, திண்டுக்கல் -1, தேனி-1, கம்பம்-1, ராம்னாட்-1, விருதுநகர்-1, ராஜபாளையம்-1, காரைகுடி-1 என 10 முதல் 12 பிரிண்ட் வரை மட்டுமே ஒரு படத்துக்கு போடப்படும். படத்துக்கு மொத்த பிரிண்டே 80 தான். இப்போது அது மாறிவிட்டது. சின்ன சின்ன இடங்களிலும் ரீலீஸ் ஆகிறது.

பழைய முறை வினியோகத்தில் சப்ளை செயின், தற்போது அது எப்படி மாறியுள்ளது என்பதும் எம்ஜி, அவுட்ரேட், ஷிஃப்டிங், டிசிஆர் போன்றவையும் அடுத்த பதிவில்.