November 25, 2009

3500

குணா கமல் மன்ற
குருதிக்கொடையின் போதுதான்
தெரிந்தது அபூர்வ பிரிவென்று

அன்று நிமிர்ந்த நெஞ்சு
பலமுறை நிமிர்ந்திருக்கிறது

ராஜகுமாரனைப் போலத் தான்
நுழைவேன் ஒவ்வொருமுறையும்
இன்று நடைப்பிணமாய்

மூன்று மாதம் முன்
நின்ற சம்பளம்
தீரப்போகும் லாக்டோஜன்

November 24, 2009

இந்தியா ஆல் டைம் லெவென் பகுதி 2 துவக்க ஆட்டக்காரர்கள்

முதல் பகுதி இங்கே

இந்திய ஆல் டைம் டெஸ்ட் அணிக்கு யார் துவக்க ஆட்டக்காரர்கள்?

துவக்க ஆட்டக்காரர்களுக்கும் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்? முதல்
பந்தில் ஓப்பனர் அவுட் ஆகிவிட்டால் உடனே நம்பர் த்ரி உள்ளே வந்து விடுகிறாரே?

நிச்சயம் இருக்கிறது.

துவக்க ஆட்டக்காரர் உள்ளே நுழையும் போது (அது எந்த இன்னிங்ஸாக இருந்தாலும்) வேகப்பந்து வீச்சாளர்கள் தன் முழு ஆற்றலுடன் இருப்பார்கள். அனலைக் கக்குவார்கள். அவர்களை சமாளிக்க வேண்டும். பந்தும் புதிதாக இருக்கும். அருமையாக ஸ்விங்கும் ஆகும். எனவே நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்க வேண்டும்.

பிட்ச் எந்த கண்டிஷனில் இருக்கிறது என்று தெரியாது. எவ்வளவு எம்பும்? இல்லை தாழும் எனத் தெரியாது.விக்கெட் விழாமல் ஆட வேண்டும்.

முதல் இன்னிங்ஸில் எதிர் அணி இரண்டு நாட்கள் ஆடி கடைசி நாலு ஓவர் மட்டும் கொடுக்கும் போது, பேடைக் கட்டிக்கொண்டு போய் நிற்க ஸ்டாமினா வேண்டும். விக்கெட் கொடுக்காமல் ஆட கான்சண்ட்ரேஷன் வேண்டும். ஆனால் பவுலர் பிரெஷாக இருப்பார்.

இதுமாதிரியான சிக்கல்களினால் தான் அது ஸ்பெஷலிஸ்ட் பொசிஷனாக கருதப்படுகிறது.

71ல் இருந்து நம் அணியில் ஆடிய துவக்க ஆட்டக்காரகளில் யாரை தேர்ந்தெடுக்கலாம்?

1. சுனில் கவாஸ்கர்

பேட்டிங் ஆவரேஜ் 50க்கு மேல். 10000ஐ முதன் முதலில் பார்த்தவர். 34 சதத்தையும்
முதலில் பார்த்தவர். வேகப் பந்து பிசாசுகளான ஆண்டி ராபர்ட்ஸ்,மைக்கேல் ஹோல்டிங்,கார்னர் மற்றும் மார்ஷல் போன்றோரை அனாசியமாக ஆடியவர். ஸ்விங்கில் வல்லவர்களான லில்லி,ஹேட்லி, போத்தம் ஆகியோரையும் இம்ரான்,அக்ரம் போன்ற வல்லவர்களையும் எளிதாக எதிர் கொண்டவர்.

நீ வேகமாப் போடு. அப்பதான் எனக்கு ஈஸி. தட்டி விட்டாலே போர் போயிடும் என்று அவர்களைப் பார்த்து சிரித்தவர்.

கவாஸ்கர் ஸ்டம்புக்கும், மிட் ஆனுக்கும் இடையே உள்ள 'வி' யில் பந்துகளை அருமையாக ட்ரைவ் செய்வார். பவுலரும் தொட முடியாது, மிட் ஆன் பீல்டருக்கும் வாய்ப்பிருக்காது. இது எப்படி எனக் கேட்ட போது அவர் சொன்னது

“ நான் தெருவில் விளையாடும் போது மிட் ஆனில் இரண்டு கார்கள் நிற்கும். அந்த கண்னாடியில் அடிக்கக் கூடாது என்பதற்காக அந்த வி யில் அடித்தே பழகினேன்”. என்றார்.

ஸ்பின்னர்களையும் தெளிவாக ஆடுவார்.நல்ல ஸ்லிப் பீல்டரும் கூட.


2. எம் எல் ஜெயசிம்மா


அசாருதீனுக்கும் லட்சுமணனுக்கும் உள்ள ஒற்றுமை ஹைதராபாத் அணி மற்றும் ரிஸ்டி பிளே. அந்த மணிக்கட்டு திருப்பு ஆட்டத்துக்கும்,லெக் ஸ்டம்பில் போடும் பந்தை நோகாமல் தட்டி பவுண்டரிக்கு அனுப்பும் ஸ்டைலுக்கும் குரு இவர்தான். இவரும் ஹைதராபாத் தான். இவரது லெகஸிதான் அசாருக்கும் பின் லட்சுமணனுக்கும் வந்தது. இவர் முதலில் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்தான். ஆனால் நமது அணியில் மிடில் ஆர்டருக்கு எப்போதும் இருக்கும் அடிதடியால் மேக்‌ஷிஃப்ட் ஓப்பனர் ஆகி பின் அதையே நிரந்தரமாக்கிக் கொண்டவர். அப்பொதைய அணியில் பிரசன்னா,வெங்கட்ராகவன்,பேடி,சந்திர சேகர் போன்ற ஸ்பின் ஜாம்பவான்கள் இருந்ததால் மித வேகப் பந்து வீசும் இவரையே துவக்க பந்து
வீச்சாளாராக உபயோகப் படுத்தினார்கள். ஓப்பனிங் பேட்டிங், ஓப்பனிங் பவுலிங் என வாழ்ந்தவர்.

அதன்பின் இலங்கையின் ரவிரத்னாயகே வும்,நம் மனோஜ் பிரபாகரும் அந்த வாழ்வை அனுபவித்தவர்கள்.

3. சேட்டன் சௌகான்

செஞ்சுரியே அடிக்காமல் 40 டெஸ்ட் ஆடியவர். ஆனால் கவாஸ்கருக்கு நல்ல துணையாக விளங்கியவர். கவாஸ்கர் ஒருமுறை இந்திய கனவு அணியை தேர்வு செய்த போது இவரைத்தான் துவக்க ஆட்டக்காரராக தேர்வு செய்தார். (இன்னொருவர் கவாஸ்கரேதான்). இவர் எப்படி ஆடுவார் என பார்க்க வேண்டுமென்றால் ஸ்டார் டிவியில் கிளாசிக் தொகுப்பில் பார்க்கலாம். ஆனால் அகால வேளையில் போடுகிறார்கள்.

நான் விளக்குமாற்றை கிரிக்கெட் பேட்டாக கற்பனை செய்து ஆடி அம்மாவிடம் திட்டு வாங்கினேன். கல்யாணத்தன்று கிப்ட் கொடுத்த நண்பனிடம் ஸ்கோர் என்னாச்சு என்று மணமேடையில் கேட்டு மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். இப்போது கிரிக்கெட் பார்க்க கார்ட்டூனை மாத்தாதே என மகனிடமும் திட்டு வாங்குகிறேன். மூன்று தலைமுறையும் என்னை கிரிக்கெட் பார்க்க விடாமல் சதி செய்கிறது.
சௌகான் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

4. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

ஒரு முறை அரசு பதிலில் எஸ் ஏ பி (ஐராசு,ராகிரா வாகவும் இருக்கலாம்) சொன்னது, “ ஸ்ரீகாந்த் அடிச்சா நாமே அடிச்சமாதிரி இருக்கும்”. அது உண்மைதான். சராசரியை விட அதிக அகலத்துக்கு காலை அகட்டி நிற்பதும், மூக்கை உறிஞ்சிக்கொள்வதும்,சூரியனை பார்ப்பதும், ரெஸ்ட்லெஸாக லெக் அம்பயரை நோக்கி நடப்பதும் சிரிப்பாகத்தான் இருக்கும். ஆனால் ஆண்டி ராபர்ட்ஸை அவர் அடித்த ஸ்கொயர் ட்ரைவ் இன்னும் கண்ணுக்குள் தான் இருக்கிறது.

சார்ஜாவில் மார்ஷலை முதல் பந்தில் மிட்விக்கெட்டில் சிக்சரும், அடுத்த பந்தில் ஸ்கொயர்கட்டில் போரும் அடித்தவுடன், ஸ்லிப்பில் நின்ற ரிச்சர்ட்ஸ் காலில் வென்னீரைக் கொட்டியதுபோல் மார்ஷலிடம் ஓடினார். மார்ஷல் வாழ்க்கையிலேயே கேப்டனிடம் சுடு சொல் வாங்கியது அந்த ஒரு சந்தர்ப்பத்திலாகத்தான் இருக்கும்.

சிட்னியில் ஸ்ரீகாந்த் அடித்த 123ம், சேப்பாக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த் 123ம் தான் அவர் செஞ்சுரிகள். ஆனால் இரண்டும் பல ஆண்டுகளுக்கு பேசப்பட்டவை.

5. நவ்ஜோத் சிங் சித்து


மே இந்திய தீவுக்கு எதிராக அங்கே போய் 201 அடித்தாலும், இந்தியாவில் சில செஞ்சுரிகள்
அடித்திருந்தாலும் இவருக்கு ஒரு வீக்னெஸ் இருக்கிறது.

நல்ல லெங்த்தில் போடப்பட்டு வேகமாக இன்கட் ஆகி உள்ளே வரும் பாலை ஆட மிகவும்
சிரமப்படுவார். பெரும்பாலான முறை இம்மாதிரி பந்துகளில் அவுட் ஆகி உள்ளார். ஆனால் ஸ்பின்னர்களை ஆடுவதில் கிங்.

6. விரேந்திர சேவாக்


ஜெஃப்ரி பாய்காட் துவக்க ஆட்டக்காரர் என்றாலே வேகப் பந்து வீச்சாளர்கள் நொந்து போய் விடுவார்கள்.அப்படி ஒரு கட்டை பார்ட்டி. ரன் அடிப்பதில் அவருக்கு சந்தோஷமில்லை. நங்கூரம் பாய்ச்சி நிற்பதில் தான் ஆசை. காமம் இல்லாத காதல்தான் பாய்காட்டின் சாய்ஸ். நம்மாள் இவருக்கு ஆப்போசிட் பார்ட்டி. இவரைக் கண்டும் வேகப் பந்து வீச்சாளர்கள் நொந்து போவார்கள். அடிக்கும் அடி அப்படி. நிற்பதில் ஆசை இல்லை.

சேப்பாக்கத்தில் இவர் அடித்த 300ன் போது தென் ஆப்பிரிக்க கோச் சொன்னது “எங்களிடம் இருந்த எல்லா அஸ்திரத்தையும் ஏவி விட்டோம், எங்களுக்கு தெரிந்த எல்லா வியூகத்தையும் அமைத்து விட்டோம், முடியவில்லை”.

ஆனால் இவர் யாரும் எதிர் பார்க்காத பந்தில் அவுட் ஆகி அவர்கள் நெஞ்சில் பாலை வார்ப்பார்.

இவரது ஆவரேஜும் 50க்கு மேல். இன்று (24-11-09) அடித்த சதத்துக்கு முன்னால் அடித்த
கடைசி 15 சதமும் 150 க்கு மேல்தான்.

இவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் ஆக இருந்து மேக் ஷிஃப்ட் ஓப்பனாராக மாறியவர் (உபயம் :கங்குலி)

7. கவுதம் காம்பீர்

கணவனின் சம்பாத்தியத்தில் திருப்தி அடையாத சராசரி இந்திய மனைவியின் மனநிலையில்
இருப்பவர் இவர். எவ்வளவு ரன் அடித்தாலும் திருப்தி இருக்காது. ரன் வெறி கொண்டவர்.
செஞ்சுரி அடித்து விட்டு வந்தாலும் கமாண்ட்ரேட்டரிடம் சிரிக்க மாட்டார். கடைசி ஒன்பது மேட்சுகளில் ஏழு சென்சுரி. இந்த மேட்சோடு சேர்த்து (24-11-09) தொடர்ந்து நாலு மேட்ச் சென்சுரி. நல்ல டெம்பெர்மெண்ட். ஸ்பின்னர்களையும் அனாயாசமாக ஆடக்கூடியவர்.

தனது பார்மை அப்படியே டீமுக்கு உபயோகமாக திருப்பக் கூடியவர்.

இந்த ஏழில் இருந்து இருவரை தேர்ந்தெடுங்கள் கண்மணிகளே.

November 23, 2009

இந்தியா ஆல் டைம் லெவென்

கிரிக் இன்போ இணையதளம் முதலில் ஆஸ்திரேலியா ஆல் டைம் லெவென் கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் விவாதத்தை துவக்கிய போது, அடுத்த அணி இந்திய அணியாகத்தான் இருக்கும் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் அடுத்து இங்கிலாந்து,நியுசிலாந்து என தேர்வு செய்து இப்போது தென் ஆப்பிரிக்க அணியில் வந்து நிற்கிறார்கள்.

அதையெல்லாம் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தால் எப்படி. நாமே தேர்வு செய்துவிடுவோம், காசா பணமா என்று இறங்கிவிட்டேன்.

கிரிகின்போ படா படா ஆட்களிடம் இருந்து தேர்வுப் பட்டியலைப் பெறும். ஓட்டெடுப்பும் நடக்கும். அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி என்று ஆட்களுக்காக ஏங்குபவர்களா நாம்?. திரிஷா இல்லைன்னா திவ்யா என சமாதானம் அடைந்து கொள்பவர்கள் தானே நாம்.

அதனால் நாமே ஒரு அணியை தேர்வு செய்து விடுவோம்.


முதல் குழப்பம் எந்த வருடத்தில் இருந்து துவங்குவது என்று. ரஞ்சித்சிங்ஜி,துலிப்சிங்ஜி ஆகியோர் எப்படி விளையாடுவார்கள் என்று பார்த்ததில்லை. சாதனைகளை கேள்விப்பட்டதோடு சரி.

சி கெ நாயுடு வின் அதிரடி ஆட்டம், ரஙகாச்சாரியின் ஸ்டம்புகளை உடைத்தெறியும் பந்து வீசு என பழைய இதழ்களில் படித்ததும் கேள்விப்பட்டதும் உண்டு.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக லாலா அமர்நாத் செஞ்சுரி அடித்தார். சரி எதும் புட்டேஜ் இருக்கா? இல்லையே.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லாம் ஒன்றாக இருந்ததால் நாம் சுதந்திரத்திற்க்குப் பின்னால் தொடங்குவோம்.

சுதந்திரத்துக்குப் பின்னால் பல ஆண்டுகள் சென்ற இடமெல்லாம் சிராய்ப்பு என்னும் அளவுக்கு அடி வாங்கியதால் அந்த காலகட்டத்தை சாய்ஸில் விட்டு விடுவோம்.

முதன் முதலில் வெளிநாட்டு மண்ணில் (இங்கிலாந்து மற்றும் மே இந்திய தீவுகள்) டெஸ்ட் தொடர் வெற்றிக்கனியைப் பறித்த 1971ல் இருந்து தொடங்குவோம். அப்பொதைய கேப்டன் அஜித் வடேகர் மற்றும் அவரது அணியில் இருந்து தற்போதைய அணி வீரர்கள் வரை மட்டுமே நமது இலக்கு.



நம் அணியில் ஒரு வசதி என்னவென்றால் சில பொசிஷன்களுக்கு பெரிய போட்டியே இருக்காது. எடுத்துக்காட்டு வேகப்பந்து வீச்சு. இரண்டே இரண்டு ஏரியா தான் கடுமையான போட்டி நடைபெறும் இடம். மிடில் ஆர்டர் மற்றும் சுழல்பந்து வீச்சு.

முதலில் விக்கெட் கீப்பிங்கில் துவங்குவோம்.

1.பரூக் எஞ்சினியர்
2.கிர்மானி
3.சதானந்த் விஸ்நனாத்
4. சந்திரகாந்த் பண்டிட்
5.கிரன் மோர்
6.நயன் மோங்கியா
7.மகேந்திர சிங் டோனி
8.திணேஷ் கார்த்திக்

அடுத்தது துவக்க ஆட்டக்காரர்கள்

2.சுனில் கவாஸ்கர்
3.சேட்டன் சௌகான்
4.எம் எல் ஜெய்சிம்மா (மேக் ஷிப்ட்)
5.கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
6. விரேந்திர சேவாக் (மேக் ஷிப்ட்)
7.கௌதம் காம்பிர்
நவ்ஜோத் சித்து

கொடுமை ரெண்டு பிளேசுக்கு ஏழு பேருக்கு மேல தேறலை.


வேகப்பந்து வீச்சு

1.கபில்தேவ்
2.கர்சன் காவ்ரி
3.ரோஜர் பின்னி
4.சேட்டன் ஷர்மா
5.மனோஜ் பிரபாகர்
6.ஜவகல் ஸ்ரீனாத்
7.வெங்கடேச பிரசாத்
8.ஜாகிர் கான்
9.இஷாந்த் சர்மா


இனி வர்றது ஸ்பின்னர்ஸ்

1.சந்திரசேகர்
2.பிஷன் சிங் பேடி
3.பிரசன்னா
4.வெஙகட்ராகவன்
5.சிவலால் யாதவ்
6.எல் சிவராமகிருஷ்ணன்
7.மனீந்தர் சிங்
8.ரவி சாஸ்த்ரி
9. நரேந்திர ஹிர்வாணி
10.அர்ஷாத் அயூப்
11.அனில் கும்ப்ளே
12.வெங்கடபதி ராஜு
13.ஹர்பஜன் சிங்
வி வி குமார்
சுபாஷ் குப்தே



அடுத்தது தான் கோர் ஏரியா, செலக்டர்ஸ் டரியல் ஆகுற இடம். மிடில் ஆர்டர்

1. அஜீத் வடேகர்

2.குண்டப்பா விஸ்வனாத்
3.மன்சூர் அலிகான் பட்டோடி
4.மொஹிந்தர் அமர்னாத்
5.திலிப் வெங்சர்க்கார்
6. முகமது அசாருதீன்
7. சஞ்சய் மஞ்சிரேக்கர்
8. சச்சின் தெண்டுல்கர்
9. ராகுல் திராவிட்
10.சௌரவ் கங்குலி
11.வி வி எஸ் லட்சுமண்

சந்தீப் பாட்டில்
யுவராஜ் சிங்


திலீப் சர்தேசாய்

சரி வரும் பகுதிகள்ல இவங்களை எடை போடுவோம். பின்னூட்டத்தில் விட்டுப் போனவர்களையும் (நல்ல ஆட்டக்கார்கள்), நீங்கள் இதில் இருந்து தேர்வு செய்யும் அணியையும் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

ஆகுறோம்டா நாங்களும் ஒரு செலக்டர்.

November 22, 2009

மாற்றம்

எரிச்சலாக வந்தது. கணேஷிடம் புலம்பினேன்.

"நேத்து நான் ஏல சீட் எடுக்கணும், யாராச்சும் அல்டெர்னேட் பாருங்கடான்னு கெஞ்சினேன். ஒருத்தனும் தலையாட்டலை. இன்னைக்கு சிவா பாண்டிச்சேரிக்கு தண்ணியடிக்க செட்டு சேர்த்துட்டு போறான். அவனுக்கு அல்டெர்னேட் ஈசியா கிடைக்குது"

என்னடா உலகம் இது? என்று.

கணேஷ் பதிலளித்தான். "இது நம்ம நாட்டு சைகாலஜிடா. தியேட்டர்ல பார்த்திருப்பியே பில்லியனர் மாதிரி ஒருத்தன் நின்னுக்கிட்டு இருப்பான். அவன்கிட்ட பக்கிரி மாதிரி இருக்கிற ஒருத்தன் போய் பீடிக்கு நெருப்புக் கேட்பான். இவனும் அவன் அடிச்சுக்கிட்டு இருக்குற பாரின் சிகரெட்டையே பத்தவைக்க கொடுப்பான்".

அவன் என்ன சோஷலிச சிற்பியா? இல்லை ஒருத்தன் கெட்டுப் போறான்னா அதுக்கு ஹெல்ப் பண்ணுறதில்ல ஒரு அல்ப சந்தோஷம். அதுதான்.

என் மனம் திருப்தியடையவில்லை. இந்த சிவா இருக்கிறானே, அவனும் நானும் ஒண்ணாத்தான் சேர்ந்தோம், இந்த கம்பெனியில. சின்சியரா வேலை பார்த்த என்னை விட்டுட்டு அவனுக்கு பிரமோஷன் கொடுத்ததால அவன் மீது எனக்கு கொஞ்சம் கடுப்பு.

"தேர் இஸ் மோர் பிளட் இன் மை ஆல்கஹால் சிஸ்டம் " என்று அடிக்கடி உதார் விட்டுக் கொள்வான். ஒருமுறை மானேஜர் வீட்டு விசேஷத்துக்கு போயிருந்தபோது அங்கிருந்த தாஜ்மஹால் போர்ட்ராயிட்டைப் பார்த்து அவன் அடித்த கமெண்ட் " தெ கிரேட்டஸ்ட் எரெக்சன் ஆப் எ மேன் பார் எ வுமன்"

எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவன் வைத்திருக்கும் மூன்று கேட்டகிரி ஸ்கேலில் தான் அளப்பான். கட்டில்,கூபே மற்றும் காட்டேஜ் தான் அது.

ஒருமுறை கணேஷ் தான் அதைப் பற்ரி விசாரித்தான். அதென்னடா கட்டில்,கூபெ,காட்டேஜ் என்று?

சிவா பொறுமையாக விளக்கினான்.

"இப்ப ஒரு பிளாட்பாரக் கடையில பஜ்ஜி போட்டுக்கிட்டு இருக்கான். பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு என்ன பண்ணுவ?

அதற்கு கணேஷ் " ரெண்டு வாங்கி சாப்பிட்டு கையை கழுவிட்டு போயிக்கிட்டே இருப்பேன்"

அதுமாதிரிதான் கிடைக்கிற கேப்பில ரூமிலயோ,லாட்ஜிலயோ முடிக்குற அளவுக்கு அழகா இருக்குற பொண்ணுங்க கட்டில் கேட்டகிரி.

சரி. கூபே?

மதுரைல இருந்து ட்ரைன்ல வந்துக்கிட்டு இருக்க, மணப்பாறை முறுக்கு விக்குது. செம டேஸ்டா இருக்கு. என்ன பண்ணுவ?

நாலு பாக்கெட் வாங்கி மெட்ராஸ் வர்ற வரைக்கும் சாப்பிட்டுக்கிட்டே வருவேன்.

ஆமா. அதுமாதிரி ஒரு நாள் பூராம் ரசிச்சுக்கிட்டே இருக்குற மாதிரி அழகான பொண்ணுங்க கூபே கேட்டகிரி. அதுங்களையெல்லாம் ட்ரெயின்ல கூபே புக் பண்ணி கூட்டிட்டுப் போயி சந்தோஷமா இருக்கணும்.


போன மாசம் தீபாவளிக்குப் போயிட்டு வந்தியே, என்ன கொண்டு வந்த?

வீட்டில செஞ்ச அதிரசமும் முறுக்கும்.

என்ன பண்ணின?

பத்து நாள் வச்சு சாப்பிட்டேன்.

ம்ம். அதுமாதிரி பத்துநாள் பக்கத்திலேயே இருந்தாலும் சலிக்காத பிகர்னா மகாபலிபுரம்,கோவான்னு காட்டேஜ் புக் பண்ணிப் போயி சந்தோஷமா இருக்கணும்.

இதைக்கேட்டு கிறு கிறுத்து வந்தவனிடம் நான் கேட்டேன்

"சரிடா கல்யாணத்தப் பத்தி என்ன சொல்லுறான்?"

போடா அதப்பத்திக் கேட்டா இட்லி,கல்தோசைன்னு ஏதாச்சும் எக்சாம்பிள் கொடுத்து என்னைக் காய வைப்பான். வேற வேலை இல்லை என்று அலுத்துக் கொண்டான்.

நான் அதைக்கேட்க காரணம் இருந்தது. அப்போது எனக்கும் அவனுக்கும் அவரவர் வீடுகளில் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிகரெட்,குடி மற்றும் பெண் சகவாசம் இல்லாததால் அவனை விட எனக்கு விரைவில் பெண் கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். பிரமோஷனில் அவன் என்னை முந்தியதால் இதிலாவது நாம் முந்த வேண்டும் என்ற அல்ப வெறி.


அவனில்லாத நேரங்களில் நண்பர்கள் பேசிக்கொள்வார்கள். டேய் அவனுக்கெல்லாம் ரெண்டு மாசத்துக்கு ஒரு சிம் கார்டு மாத்துற பொண்ணுதாண்டா கிடைப்பா என்று.

எனக்கு அவர்கள் மேல் அளவு கடந்த எரிச்சல் வந்தது. அவன் கேரக்டர் சரியில்லையின்னா ஏண்டா வரப்போற பொண்ணப் பத்தி கேவலமா பேசுறீங்க என்று சண்டை கூட போட்டேன்

நினைத்ததற்க்கு மாறாக அவன் என்னை இதிலும் முந்தி விட்டான். எல்லோரும் பெண் போட்டோ கேட்ட போது அப்புறம் தருகிறேன் என மழுப்பி விட்டான்.

அட்டு பிகரா இருக்கும் போல, அதாண்டா காட்ட மாட்டேங்குறான் என்ற வதந்தியும் அதனால் பரவியது.

சில நாள் கழித்து பெண்ணின் பெற்றோர் போட்டா மட்டும் காட்டினான். குரங்க பாத்தா பத்தாதா? குட்டிய வேற பார்க்கணுமா என சலித்துக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் இருந்தார்கள்.



திருமணத்திற்க்கு போணோம். மணப்பெண் நாங்கள் போட்ட கணக்கை யெல்லாம் தவிடு பொடியாக்கும் அபார அழகுடன் இருந்தாள்.

முடிந்து திரும்புகையில் பாருக்குள் நுழைந்தது குழு, "நீதான் தயிர் சாதமாச்சேடா இங்க என்ன பண்ணப் போற? என்று கலாய்த்தார்கள்.ஒரு நிமிடம் யோசித்தேன்.

எனக்கும் ஒரு கிளாஸ் வைங்கடா என்ற குரல் என்னையும் மீறி வந்தது.

November 11, 2009

சட்டை

அரவிந்த் என் அறை நண்பன்.சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ். அவனுக்கு, அவன் கம்பெனிகளின் கிளைகள் எங்கெங்கே இருக்கின்றன, எந்த பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதெல்லாம் கூட சரியாகத் தெரியுமா என்பது சந்தேகம். ஆனால் அலன் சாலி, லூயி பிலிப், குரொக்கடைல், பேசிக் ஷோ ரூம்கள் எல்லாம் எங்கெங்கு இருக்கின்றன, அங்கே எவ்வளவு ஆபர், செகண்ட் சேல்ஸ் எப்போது என்ற தகவல்கள் எல்லாம்
விரல் நுனியில் இருக்கும். நண்பர்களுக்கு மெசேஜாக அனுப்பித் தள்ளுவான்.

அவன் முதன் முதலில் அறை நண்பனாக உள்ளே நுழைந்த உடனேயே என் செல்போனைத் தான் கவனித்தான்.என்ன பாஸு போயும் போயும் டபுள் ஒன் டபுள் ஜீரோவா, என அதை எடுத்துப் பார்த்தவன், சிம் கார்ட் பி எஸ் என் எல் என்றதும் தலையில் அடித்துக் கொண்டான். நீங்க எங்கெங்கே பேசுவீங்க, அந்த நம்பர்லாம் என்ன, ஒரு நாளைக்கு எவ்வளவு மெசேஜ் அனுப்புவீங்க? என்று கேள்விகளாய் கேட்டு கடைசியில்
இந்த சிம் வாங்குங்க, செல்ல நாளைக்கு மாத்திடுங்க என்று முடித்தான்.

ஆம் அரவிந்த் அப்படித்தான். தகவல் களஞ்சியம். தேர்ந்தெடுப்பு ரசனை அதிகம்.மேலும் நாட்டாமை மாதிரி பாரபட்சம் இல்லாமல் யாருடனும் ஒரே அளவிலான நட்பு பாராட்டுவான். அவனைத்தேடி வாரம் இரண்டு பேராவது வருவார்கள்.

“மாப்பிள்ளை, அண்ணன் கல்யாணம், துணி எடுக்கணும்”,
“இவன் என் பிரண்டு, அடுத்த மாசம் கல்யாணம், துணி எடுக்கணும்”

கூட வாடா

என கோரிக்கைகளோடு வருவார்கள். இவனும் சலிக்காமல் நிறைவேற்றுவான்.

ஆனால் அவன் துணி எடுக்க கூட வராத நண்பன் நான் மட்டும்தான்.

”போதும்டா, நான் கிழிக்கிற கிழிக்கு” என்று மறுத்து விடுவேன்.

அவன் யுனிகார்னை சர்வீஸுக்கு விட்டிருந்த நாளில் என்னுடைய ஸ்பிளெண்டரை எடுத்துக் கொண்டு போனவன், திரும்பி வந்து காய்ச்சினான்.

என்னடா இது, வண்டி இப்படி வச்சிருக்க என்றவன்,அவனின் ஆஸ்தான மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றான். அவர் கொடுத்த லிஸ்டுடன் கிளம்பினோம். ஸ்பேர்பார்ட்ஸ் கடை ஒரு மார்வாரிக்கு சொந்தமானது. அவர் கட்டமும் இல்லாமல் கோடும் இல்லாமல் ஒரு டிசைனில் சாயம் போன கலரில் சட்டை போடிருந்தார். இவனுக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்தன.

இந்த மாதிரி ஒரு டிசைன்ல தாண்டா சட்டை போடணும். எனக்குத் தெரிஞ்சு மெட்ராஸ்ல இந்த டிசைன் ரேர்டா என்றான். அவரிடமே, ”எங்கே எடுத்தது” எனக் கேட்க

”ரொம்ப நாளாச்சு மறந்துட்டேன்” என்றார்.

எனக்கென்னவோ அது மரண மொக்கை டிசைனாக தெரிந்தது.

ஆனால் அவனோ,

“ அந்த கலர் தாண்டா சரியில்லை. சிகப்புக்கும் மெஜண்டா வுக்கும் இடையில ஒரு கலர் இருக்குமே, அந்த கலர்ல இந்த டிசைன்ல சட்டை போட்டா, அப்படியே அள்ளும்” என்றான்.

அன்றிலிருந்து அவன் தேடல் ஆரம்பித்தது. மார்வாடி என்பதால் சௌகார்பேட்டை பக்கம் எடுத்திருக்க வாய்ப்பிருக்கு என்று அந்த ஏரியாவை அலசினான். எனக்கு மாலை வேளைகளில் கொறிப்பதற்கு பல குஜராத்திய இனிப்பு வகைகள் கிடைத்தன. தமன்னாவின் உறவுப் பெண்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைதத்து. ஜெயின் கோவிலில், என் திருமணத்திற்காக ஒரு பிரார்த்தனை செய்ய முடிந்தது.

ஆனால் சட்டை தான் கிடைக்கவில்லை. இந்நிலையில் தன் நண்பன் திருமணத்திற்கு துணி எடுக்க துணைக்குப் போனவன் ஆலா பிளீச் போட்ட அங்க வஸ்திரம் போல பளிச் புன்னகையுடன் வந்தான்.

வேறொன்றுமில்லை. தன் தந்தையின் பிறந்த நாளுக்கு துணி எடுத்துக் கொடுத்து அவரை அசத்த நினைத்த ஆரணங்கு ஒன்று ஆடை செலக்ட் செய்யத்தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது அந்த ஷோ ரூமில். இவன் உடைகளுக்கு அடித்துக் கொண்டிருந்த கமெண்டுகளைக் கேட்டு இவனிடம் அபயம் புகுந்தது. இவனும் அவளிடம் அவர் நிறம்,உயரம்,குண்டா,ஒல்லியா, தொப்பையா, வழுக்கையா,
சுருள் முடியா, கண்ணாடி போட்டிருப்பாரா என மச்சத்தை தவிர எல்லா விபரத்தையும் கேட்டு ஒரு செட் எடுத்துக் கொடுத்திருக்கிறான். இலவச இணைப்பாக தன் நம்பரையும் கொடுத்திருக்கிறான்.

இரண்டு நாளில் அவளிடமிருந்து போன். அவள் தந்தை உடையைப் போட்டுப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டாராம். காதல் கண்ணீரில் தான் முடியக் கூடாது. ஆரம்பிக்கலாம். அதுவும் ஆனந்தக் கண்ணீரில்.தப்பில்லை.

துணைவி சிக்கியும் துணி சிக்கவில்லை அவனுக்கு. ஒரு முறை மும்பை போன போது கூட அந்த சட்டையை தேடி சலித்து வந்தான்.

இரண்டு வாரம் கழித்து அவள் பிறந்த நாள் வருகிறது, என பரிசுப் பொருள் தேடி சேகரிக்க ஆரம்பித்தான். எங்கள் அறையே கிப்ட் ஷாப்பாக மாறிக் கொண்டிருந்தது.

பிறந்த நாளுக்கு இரு நாள் முன்னால் அதே ஆலா பிளீச் சிரிப்புடன் வந்தான். என்னடா புரமோஷனா? என்றேன். இல்லடா சட்ட சிக்கிடுச்சு என்றான். அவ பிறந்த நாளுக்குத்தான் போடனும்னு இருந்திருக்கு என்றான்.

நாளைக்கு செங்கல்பட்டு ஏரியா. முடிஞ்சு சாயங்காலம் வந்ததும் பேசியல், அப்படியே தூங்கிட்டு பிரெஷா இந்த சட்டையைப் போட்டுக்கிட்டு போனா ”என் ராஜகுமாரனே” அப்படீம்பா என்று லயித்தான்.

மாலை அலுவலத்திலிருந்து லேட்டாகத்தான் திரும்ப முடிந்தது. அரவிந்த் இருண்டு போன முகத்தோடு உட்கார்ந்திருந்தான். அந்த சட்டை கசக்கி வீசப்பட்டிருந்தது.

என்னடா ஆச்சு? என்றவுடன் புலம்பினான்.

இந்த சட்டையை அங்க ஒரு ஸ்கூல்ல யூனிபார்மா வச்சிருக்காங்கடா என்று.

November 08, 2009

தமிழ்சினிமாவில் பெண்ணியம் பகுதி-2

எண்ணிக்கையளவில் நடுத்தர குடும்பத்து பெண்களின் பிரச்சினைகளை தமிழ்சினிமாவில் அதிகம் பேசியவர் பாலசந்தர் தான்.

நடுத்தர வர்க்க பொருளாதார பிரச்சினைகள் (நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ),

சமூகப் பிரச்சினைகள் (வறுமையின் நிறம் சிகப்பு, தப்புத் தாளங்கள்,தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை
அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி, வானமே எல்லை)

காதல் (மரோ சரித்ரா, சொலத்தான் நினைக்கிறேன், நினைத்தாலே இனிக்கும்,புன்னகை மன்னன்,அழகன், டூயட்..),

நகைச்சுவை (பாமா விஜயம்,அனுபவி ராஜா அனுபவி, தில்லு முல்லு,பொய்க்கால் குதிரை),

ரொமாண்டிக் வகையில் நான் அவன் இல்லை, மன்மத லீலை, மனித உறவுகளின் தீவிர குழப்பத்தில் அபூரவ ராகங்கள், மூன்று முடிச்சு என அவர் கை வைக்காத துறைகள் இல்லை.

நாம் இந்தத் தொடரில் பார்க்கப் போவது அவர் பெண்ணியத்தை கையாண்ட விதம் மட்டுமே. அதற்கு நாம் எடுத்துக் கொள்ளப்போவது அவர் பெண்ணியத்தை அடிப்படையாக வைத்து எடுத்த படங்களை மட்டுமே.

1. இரு கோடுகள்
2.தாமரை நெஞ்சம்
3.அரங்கேற்றம்
4.அவள் ஒரு தொடர்கதை
5. அவர்கள்
6. நிழல் நிஜமாகிறது
7. 47 நாட்கள்
8.கல்யாண அகதிகள்
9. அக்னி சாட்சி
10. சிந்து பைரவி
11. மனதில் உறுதி வேண்டும்
12. புதுப் புது அர்த்தங்கள்
13. ஒரு வீடு இரு வாசல்
14. கல்கி
15. பார்த்தாலே பரவசம்.

இரு கோடுகள் படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி காதலிக்கிறார்கள். காசியில்
திருமணம் செய்கிறார்கள்.ஜெமினி வீட்டார் நிர்ப்பந்தம் காரணமாக அவர் சென்னை வருகிறார். அங்கே ஜெயந்தியை திருமணம் செய்கிறார். கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். சௌகார் ஐ ஏ எஸ் தேர்வு பெற்று அந்த அலுவலகத்திற்கே கலெக்டராக வருகிறார். வந்து ஜெமினியுடன் வாழ வேண்டுமென பிரயத்தனப் படுகிறார், புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் எனக்கே என்று கொலுவில் பாடு மளவுக்கு. இது அப்பட்டமான ஆணாதிக்கப் பிரதி. கலெக்டரே ஆனாலும் அவள் தாலிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பது மாதிரியான செய்தியே பெண்களைச் சென்றடைந்தது.

சிந்து பைரவியில் பாடகர் சிவகுமாருக்கு தன் மனைவி சுலக்‌ஷனாவுக்கு இசை பற்றி தெரியவில்லை என வருத்தம். இசையைப் பற்றி பகிர சுஹாசினி வருகிறார்.படுக்கையையும் பகிர்கிறார். சுலக்‌ஷனாவுக்கு இது பற்றி தெரிய வந்ததும் அவர்களுக்கு திருமணம் செய்ய வைக்க முனைகிறார். சுஹாசினியோ தனக்குப் பிறந்த குழந்தையை பரிசாக கொடுத்து விட்டுப் போகிறார். இதில் ஒரு கிளைக்கதை, சுஹாசினியின் ஒரிஜினல் பெற்றோர், சிவகுமாருக்கு நண்பர்கள். திருமணத்துக்கு முன் உறவின் காரணமாகப் பிறந்தவர்
சுஹாசினி. அதனால் அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுகிறார் சுஹாசினியின் தாய். உண்மை தெரிந்தும் குடும்ப அமைதி கெடும் என குடும்பத்தில் சேர்க்க மறுக்கிறார் சுஹாசினியின் தாய்.

இந்தப் படம் சொல்ல வருவது என்ன? ஒரு ஆண் தனக்கு தேவையென்றால் இன்னொரு பெண்ணிடம் உறவு கொள்ளலாம். அதை மனைவி ஏற்றுக் கொள்ள வேண்டும்.சரி பெண் இப்படிச் செய்யலாமா? தன் ரசனைக்கு ஏற்ப?

கணவருக்கே குழந்தையைப் பெற்றிருந்தாலும் குடும்ப அமைதி கெடாமல் இருக்க அவளை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

இந்த செய்திகள் தான் மக்களைச் சென்றடைந்தன இந்தப் படத்தில்.

புதுப் புது அர்த்தங்கள்

பாடகன் (ரகுமான்)மீது ஆசைப் படுகிறாள் பணக்காரப் பெண்(கீதா). ஓவர் பொசஷிவ் காரணமாக சந்தேகப் படுகிறாள். அவன் ஓடி விடுகிறான். அங்கே கணவனால் பாதிக்கப் பட்ட பெண்ணுடன் (சித்தாரா)காதல். இங்கே பணக்காரப் பெண்ணுக்கு இன்னொரு கிரிக்கெட் வீரனுடன் மணம் முடிக்க ஏற்பாடு ஆகிறது. கிரிக்கெட் வீரனுக்கும், கீதா வீட்டு பணிப் பெண்ணுக்கும் காதல். திருமண செய்தி கேட்டு அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். கீதாவுக்கு பைத்தியம் பிடிக்கிறது. கணவனை கொடுமைப் படுத்தியது தவறு என மனச் சிதைவு கொள்கிறாள். அங்கே சித்தாராவின் கணவன் விபத்தில் சிக்கி கலை இழக்கிறான். இயக்குநர் படத்தில் வரும் மற்ற பாத்திரங்களை பேச விட்டு ரகுமான் - சித்தாரா ஜோடிக்கான முடிவவைச் சொல்கிறார். கல்யாணம் புனிதமானது. அவங்க அவங்க வீட்டுக்கு சமத்தா திரும்பிப் போங்க என்று.

சரி. இதில் ரகுமான் கேசைக் கூட விட்டு விடலாம். தன்னை விபச்சார விடுதி அளவுக்கு தள்ளிய கணவனுக்கு ஏன் சித்தாரா சேவை செய்யப் போக வேண்டும்?

கல்கி

ஒரு சாடிஸ்ட் கணவனால் பாதிக்கப் படும் இரு மனைவிகள். அவனைத் திருத்த நினைக்கிறாள் பெண்ணிய புதுமைப் பெண் கல்கி.அவளை ஒருவன் காதலித்துக் கொண்டு இருக்கிறான். ஆனாலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவனை பழைவாங்க வேண்டுமே? அவனுக்கு மூன்றாவது மனைவியாகி, கர்ப்பமாக இருக்கும் போது பல டார்ச்சர் செய்து அவனைப் பழிவாங்குகிறாள். எந்த லாஜிக்காலும் ஜீரணிக்க முடியாத ஒன்று. பெண்ணியம் என்றால் என்னவென்று ஒரு பெண்ணுக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை.அரைகுறையாய் தெரிந்து வைத்திருப்பதுதான் அதிக ஆபத்து. என்ற கருத்தை மட்டும் நான் இதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

பார்த்தாலே பரவசம்

தன் கணவனுக்கு (மாதவன்) இன்னொரு பெண்ணுடன் உறவு இருந்து குழந்தை இருக்கிறது என்று தெரிய வந்தவுடன் பிரிகிறாள் மனைவி (சிம்ரன்). ஒரு நடனக் கலைஞனை சந்திக்கிறாள் (ராகவா லாரன்ஸ்)தன் கணவன் மற்றொரு பெண்ணை (சினேகா) திருமணம் செய்யப் போகிறான் என கேள்விப்பட்டு லாரன்ஸை திருமணம் செய்ய நினைக்கிறாள். ஆனால் பல திருப்பங்கள் ஏற்பட்டு சிம்ரன்,மாதவனுடனே இணைகிறாள்.

இந்தப் படத்தை பார்த்து யாரும் டென்சன் ஆகாமல் இருந்தால் அவருக்கு மிஸ்டர் கூல் பட்டத்தைக் கொடுக்கலாம். மாதவனுடன் உறவு கொண்ட பெண் (ராதிகா சௌத்ரி) எதற்கு மெனக்கெட்டு தன் மகனைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து அதை சொல்லுகிறாள்? பல வருடம் கழித்து? சரி கணவனைப் பழிவாங்க இன்னொரு திருமணம் தான் மாற்றா?.

இதெல்லாம் பரவாயில்லை. லாரன்ஸின் குடும்பத்தை கறுப்பு குடும்பம் என்று சித்தரித்திருப்பார்கள்.எல்லோருக்கும் கறுப்பு மை தடவி. வடிவுக்கரசிக்கு கறுப்பு மை தடவி, அவர் குடிப்பது போல் காட்டி,மற்ற ஜாதியினர் இப்படித்தான் என்பது போல் பாலசந்தர் தன் வக்கிரத்தை வெளிப்படுத்தியிருப்பார். யாருமே இந்த வக்கிரத்தை கண்டிக்கவில்லை.


47 நாட்கள், ஒரு வீடு இரு வாசல் ஆகியவை ஓகே.
அரங்கேற்றம்,அவள் ஒரு தொடர்கதை, மனதில் உறுதி வேண்டும் மூன்றுமே குடும்பத்தில் உள்ள தம்பி,தங்கைகளுக்காக அக்கா பாடுபடுவது. மூன்றிலுமே அவர்கள் தங்கள் வாழ்க்கையை,காதலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பாத்திரங்கள். (அரங்கேற்றத்தில் பாலியல் தொழிலாளி). இந்தப் படங்களையும் அவர்கள், நிழல் நிஜமாகிறது போன்றவற்றைப் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

தமிழ்சினிமாவில் பெண்ணியம் - பகுதி 1

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிக்கையில் கார்ல் மார்க்ஸ்ஸின் மூலதனம் பற்றி ஒரு நகைச்சுவை வெளிவந்திருந்தது. "மூலதனத்தை தமிழ்நாட்டில் படித்தவர்கள் நான்கு பேர் தான். இருவர் அதை மொழிபெயர்த்தவர்கள், இருவர் அதை ப்ரூப் ரீடிங் செய்தவர்கள் என்று. அதைப் போலத்தான் தமிழ்நாட்டில் பெண்ணியமும். அதை முழுதாக அறிந்தவர்கள் எத்த்னை பேர் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் வரும். "கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு. அது கார்ல் மார்க்ஸ் சொல்லும் முன்னரேயும் பலருக்கு இருந்திருக்கிறது". ஆம் கார்ல் மர்க்ஸ்ஸை தெரியாதவர்களுக்கும் கூட கம்யூனிஸ சிந்தனை வந்து கொண்டுதான் இருக்கும். அது ஒரு உணர்வு. அதுபோலத்தான் பெண்ணியமும். ஷபனா ஆஸ்மி, தீபா மேத்தா, பெமினா போல பெண்ணியத்தைக் குறிக்கும் எந்த குறியீடுகளும் தெரியாமலேயே பெண்ணிய உணர்வுடன் வாழும் ப்லர் இருக்கிறார்கள். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், கஞ்சி போட்ட காட்டன் சாரி, ஆபரணங்கள் அணியாமை தான் பெண்ணியம் என்று ஒரு கருதுகோள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. இன்று அதில் இருந்து சில அடி தூரம் பெண்ணிய கருத்துக்கள் முன்னேறி வந்துள்ளன.

தமிழ்நாட்டிலிருக்கும் பெண்ணியவாதிகளுக்கு முழு முதல் எதிரி யாரென்று பார்த்தோமானால் அது எழுத்தாளர் ரமணி சந்திரன் தான். (கவுண்டமணி : அப்படீன்னா ஆதவன், நாஞ்சில் நாடனையெல்லாம் என்னன்னு சொல்லுவீங்க)

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே என்பதுதான் இவரது எல்லா நாவல்களின் யு எஸ் பி யும். பாத்திரப் பெயரும், களமும் தான் மாறும். இந்த லட்சணத்தில் இவை சிடிக்களாக வேறு வெளிவருகிறதாம். வாசகியர் சமைக்கும் போது, துணி துவைக்கும் போது கேட்டுக் கொண்டே வேலை செய்யலாமாம். வெளங்கிடும் அடுத்த தலைமுறை. இதில் இன்னொரு காமெடி இதில் வரும் பகுதிகளை யாரும் மற்றவற்றில் பயன் படுத்தக் கூடாதாம். நீங்களே முதல் கதையை வச்சுத்தானே மத்த எல்லாத்தையும் எழுதிட்டு வர்றீங்க? உங்களுக்கு இது அப்பிளிகபில் இல்லையா?

சரி நம்ம தமிழ் சினிமாவுக்கு வருவோம். பெரிய நடிகர்கள் நடிச்ச படங்களை விட்டுடுவோம். அதில பொண்ணுன்னா இப்படி இருக்கணும் அப்பிடி இருக்கணும்னு பல டெபனிஷன்லாம் வரும். அதில பெண்ணியக் கருத்துக்கள தேடுறது டைம் வேஸ்ட். நாம பெண்ணியத்தை மையமா வச்சு எடுத்த படங்களை மட்டும் பார்ப்போம்.

இயக்குநர் கே சுப்ரமணியத்தின் தியாக பூமி, வீணை பாலச்சந்தரின் அந்தநாள், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான், சேதுமாதவனின் மறு பக்கம், பாலு மகேந்திராவின் மறுபடியும், சிங்கீதம் சீனிவாசராவின் மகளிர் மட்டும் என பல படங்களில் பெண்ணியம் சிறப்பாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

ஆர் சி சக்தியின் சிறை (அனுராதா ரமணன் கதை) , கே பாலசந்தரின் கல்கி (இவர் பட பெண்ணிய கொடுமைகளை தனியா பார்ப்போம்), மதுமிதாவின் வல்லமை தாராயோ போன்ற பல படங்கள் பெண்ணியத்தின் அபத்தச் சித்தரிப்புக்களுக்கு உதாரணம்.

தற்போதைய இயக்குநர்களில் பெண்ணியத்தைப் புரிந்து படம் எடுப்பவர்கள் என்று பார்த்தால் ராதா மோகனை சொல்லலாம். அவரின் அழகிய தீயே, மொழி,அபியும் நானும் என எல்லாமே பெண்ணிய கருத்துக்களை அழகாக சொன்ன படங்கள்.

அழகிய தீயே

தன் கொள்கைகளுக்காக வசதியான வாழ்வைத் துறந்து வரும் நாயகி, சூழ்நிலை காரணமாக இன்னொரு ஆணுடன் தங்க நேரிடுகிறது. அவனை வெறுக்கிறாள். ஆனால் நட்பாகிறாள். எப்போது? அவன் நாம் இருவரும் சம உரிமையுடன் நட்பாக இருப்போம். உன்னிடமிருந்து நான் சிலவற்றைக் கற்றுக்கொள்கிறேன் என கரம் நீட்டும் போது. படத்தின் இறுதிவரை அவள் நிமிர்ந்தே நிற்கிறாள். நீ யில்லாமல் நானில்லை என மீன்டும் அவன் கரம் நீளும் போது அவனை ஏற்றுக்கொள்கிறாள். தமிழ்சினிமா சித்தரித்த ஆளுமை உடைய பெண்பாத்திரங்களில் இது நிச்சயம் அடக்கம்.

மொழி

இதை உடல் ஊனம் இருந்தாலும் கம்பீரமாக இருக்கும் மனித ஆளுமை என்றும் கொள்ளலாம். ஆளுமையுடைய பெண் கதாபாத்திரம் என்றும் கருதிக்கொள்ளலாம். இதில் வரும் முகம் தெரியாத பிரகாஷ் ராஜின் அம்மா கூட பெண்ணியத்தை உணர்ந்தவராக சித்தரிப்பு இருக்கும். தன் மகன் ஒரு விதவையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொன்னவுடன் இன்னைக்குதான் நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அந்தப் பாத்திரம் சொல்லும்.

அபியும் நானும்

15 வய்துப் பெண் சொல்லும் "டாடி ஐ நோ வாட் ஐ யாம் டூயிங்" வசனமும் சரி, அம்மா வாக வரும் ஐஸ்வரியா எதையும் எளிதாக எடுத்துக் கொள்வதாகட்டும் பார்க்கும் அனைவருக்கும் ஒரு செய்தியைக் கடத்துகிறது.

மற்ற இயக்குநர்களைப் போல் இல்லாமல் நோ நான்சென்ஸ் பெண்ணிய கேரக்டர்களை அதிகம் உலவ விட்டவர் ராதாமோகன் தான் (இந்த குறுகிய காலத்தில்). இனி விசு டைப், வி சேகர் டைப், பாலசந்தர் டைப் பெண்ணியங்கள் எல்லாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.