January 29, 2009

தமிழ் சினிமா எதிர் நாயகர்கள் - 1

பண்டைய காப்பியங்களில் இருந்து தற்கால சினிமா வரை நாயகனை நல்லவனாக, வல்லவனாக சித்தரிக்க எதிர் நாயகர்கள் தேவைப் படுகிறார்கள். எதிர் நாயகர்கள் இல்லாத கதையில் என்ன சுவராசியம் இருந்துவிட முடியும்?. நாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து இயங்கும் தமிழ் சினிமா, அந்த நாயகர்களை அவதாரமாக காட்ட வித விதமான எதிர் நாயகர்களை பயன்படுத்தி வந்திருக்கிறது. தன் பிம்பமாக நாயகனை பார்க்கும் ரசிகன், தன் பிரச்சினைகளுக்கு காரணமானவர்களை எதிர் நாயகனின் ரூபத்தில் காட்சிப்படுத்துகிறான்.



காதலியின் தந்தையை, பெண் கொடுக்காத தாய்மாமனை, சொத்து பிரித்தலில் ஏமாற்றிய பங்காளியை, துரோகம் செய்த சினேகிதனை, தன்னால் தட்டி கேட்க முடியாத சமூக விரோத செயல்களை செய்பவனை, தப்பான அரசியல்வாதியை அவன் எதிர் நாயகனின் உருவத்தில் ஏற்றுகிறான். அவனை கதாநாயகன் வெல்லும் போது தானே வென்றதாய் மகிழ்கிறான். கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும், நாயகனுக்கும் ஏற்ப பல எதிர் நாயகர்கள் தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.



உலக தரத்திற்க்கு நடிப்பை வெளிக்காட்டிய எம் ஆர் ராதா, பாலையா உருவத்திலேயே மிரட்டும் பி எஸ் வீரப்பா, செய்கைகளிலும் பேச்சிலும் மிரட்டிவிடும் நம்பியார், அசோகன், மனோகர், நாயகனாக அறிமுகமாகி வில்லனாக மாறிய ஜெய்சங்கர், ரவிசந்திரன், வில்லனாக நடித்து பின் கதாநாயகனாக மாறிய கமல்ஹாசன்,ரஜினிகாந்த், சத்யராஜ்,சரத்குமார். மாறுபட்ட நடிப்பை வழங்கும் நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ், தற்போது கலக்கிவரும் கிஷோர் (ஜெயம் கொண்டான், பொல்லாதவன்), டேனியல் பாலாஜி (வேட்டையாடு விளையாடு), சமுத்திரக்கனி (சுப்ரமணியபுரம்) என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டாலும் வில்லன் பஞ்சம் ஏற்பட்டதே இல்லை.


கேரளாவில் இருந்து திலகன்,முரளி,கலாபவன் மணி, ஆந்திரத்தில் இருந்து ராமிரெட்டி, கோட்டா சீனிவாசராவ், கன்னடத்தில் இருந்து தேவராஜ், உபேந்திரா என அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தராவிட்டாலும் நாயகிகளையும், வில்லன்களையும் மட்டும் தாராளமாய் தந்து கொண்டிருக்கின்றன. இந்தித் திணிப்பும் இதில் ஒரு பொருட்டே கிடையாது. அம்ரீஷ் பூரி, ஆசிஷ் வித்யார்த்தி என சகலரையும் ஏற்றுக் கொன்டிருக்கிறோம். பால் தாக்கரே கோபித்துக் கொள்வாரே என்று, மராத்தி நாடகங்களில் கலக்கி திரையுலகில் புகுந்த அதுல் குல்கர்னி, சாயாஜி ஷின்டே போன்றோரையும் தமிழ் சினிமா ஏற்றுக் கொண்டது.


நரசிம்மராவும் மன்மோகனும் 91ல் தான் உலகமயமாக்கலை கொண்டு வந்தார்கள். ஆனால் அதை 80 களிலேயே பாப் கிரிஸ்டோ மூலம் (விடுதலை,காக்கி சட்டை) தமிழ் சினிமா கொண்டு வந்து விட்டது.
யாரை விடுவது யாரை எழுதுவது?


இந்த பதிவு எழுத எனக்கு தூண்டுகோலாகவும் ஊக்கமருந்தாகவும் இருக்கும் கார்பொரெட் கம்பர் நர்சிம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஆரம்பிக்கிறேன்.

பி எஸ் வீரப்பா

சென்ற தலைமுறை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வில்லன் என்றாலே நினைவுக்கு வருபவர் பி எஸ் வீரப்பாதான். வில்லனுக்கு ஏற்ற உடல் வளமும், குரல் வளமும் ஒருங்கே அமையப் பெற்றவர் இவர். 1948 ஆம் ஆண்டு வெளியான ராஜமுக்தி என்னும் திரைப்படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமான இவர் பின்னாளில் சிறந்த வில்லன் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கினார்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் இருந்து விடுபட்ட எம் கே தியாகராஜ பாகவதர் தன் செல்வாக்கை நிலைநிறுத்த ஆரம்பித்த படம் ராஜமுக்தி. இதில் வி என் ஜானகி, பானுமதி, சிறு வேடத்தில் எம்ஜியார், எம் ஜி சக்கரபாணி, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை (நாகஸ்வரம்) ஆகியோரும் நடித்திருந்தனர். புதுமைப்பித்தன் வசனம் எழுத, எம் எல் வசந்தகுமாரி தன் முதல் திரைப்பாடலை பாட பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் தோல்வி அடைந்தது. ஆனால் பி எஸ் வீரப்பாவின் திரைப் பிரவேசத்துக்கு காரணமாய் அமைந்தது. இதன்பின் கருணாநிதி கதை வசனத்தில் வெளியான எம்ஜியார்,வி என் ஜானகி நடித்த மருத நாட்டு இளவரசியில் (1950) நடித்தார்.

1953 ஆம் ஆண்டு எம்ஜியார்,கருணாநிதி,காசிலிங்கம் ஆகியோருடன் இணைந்து நாம் என்னும் படத்தை பி எஸ் வீரப்பா தயாரித்தார். இது மேகலா பிக்சர்ஸ் பேனரில் வெளியானது. இதில் பி எஸ் வீரப்பா வீட்டு வேலைக்காரன் வேடத்தில் எம்ஜியார் நடித்திருப்பார். எம்ஜியாரை காலால் எட்டி உதைப்பதுபோல கூட காட்சி அமைப்பு இருக்கும். அதன்பின் வெளியான எம்ஜியார் படங்களில் இது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டதில்லை. இந்த காலகட்டத்தில் எம்ஜியார் உச்ச நட்சத்திரமாக மாறி பல சரித்திர படங்களில் நடித்தார். அவற்றில் பெரும்பாலான படங்களில் பி எஸ் வீரப்பா வில்லனாக நடித்தார். இயல்பாகவே இவரின் உடல்கட்டும்,முகவெட்டும் ராஜா, மந்திரி,ராஜகுரு போன்ற வேடங்களுக்கு பொருத்தமாய் இருக்கும். லேசாக முகத்தை இறுக்கினாலே வில்லன் தோரனை வந்துவிடும்.

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)

சக்கரவர்த்தி திருமகள் (1957)

மகாதேவி (1957)

பூலோக ரம்பை (1958)

நாடோடி மன்னன் (1958)

வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)

சிவகங்கை சீமை (1959)

மன்னாதி மன்னன் (1960)

ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அலிபாபாவும் 40 திருடர்களில் திருடர்கள் தலைவனாக குதிரையில் அவர் பவனி வரும் காட்சி கண்களை விட்டு அகலாதது. மகாதேவியில் அவர் பேசிய "அடைந்தால் மகா தேவி அடையாவிட்டால் மரண தேவி" வசனமும் வஞ்சிக்கோட்டை வாலிபனில் அவர் பேசிய " சபாஷ் சரியான போட்டி" வசனமும் தமிழ் சினிமா டாப் டென் பஞ்ச் டயலாக்குகளில் எப்போதும் இடம் பிடிக்கும். நாடோடி மன்னனில் வஞ்சக ராஜ குருவாக அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சிவகங்கை சீமை திரைப்படத்தில் சின்ன மருதுவான எஸ் எஸ் ராஜேந்திரன் தன் அண்ணனான டி கே பகவதியிடம் இவரை நம் படையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார். அப்போது அவையினர் சந்தேகமாகப் பார்க்க உடனே எஸ் எஸ் ஆர் இவரது வீரத்தை பரிட்சை செய்து பார்க்க வேண்டுமா என்று கேட்பார். அதற்க்கு டி கே பகவதி சொல்வார் "வேண்டாம் இவரைப் பார்த்தாலே இவரது வீரம் தெரிகிறது" என்பார்.

1960 க்குப் பின் சரித்திர கதைகளை தயாரிப்பது குறைந்து போனது. இந்த காலகட்டத்தில் வந்த ஸ்ரீதர், பாலசந்தர் ஆகியோரது படங்களில் பெரும்பாலும் சம்பவங்களே வில்லன்களாய் அமைந்தன. மற்ற சமூக கதையமைப்புள்ள படங்களிலும் பண்னையார், உள்ளூர் நகரசபைத் தலைவர் போன்ற உப்பு சப்பில்லாத திறமைக்கு அதிகம் வேலை வைக்காத வேடங்களே வில்லன்களுக்கு வாய்த்தன. இதுபோன்ற கேரக்டர்களுக்கு பி எஸ் வீரப்பா தேவையேயில்லை. ஐந்தையும் ஐந்தையும் கூட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் எதற்க்கு?

1977க்குப் பின் பாரதிராஜா,பாலுமகேந்திரா,மகேந்திரன் படங்களிலும் வில்லனுக்கு பெரிய தேவை ஏற்படவில்லை. இவர்கள் சித்தரித்த வில்லன்களுக்கு 40க்கும் குறைவான வயதுள்ளவர்களே தேவைப்பட்டர்கள். இக்காலத்தில் அலாவுதீனும் அற்புத விளக்கு படத்தில் (1979) நடித்தார்.முரட்டுக்காளைக்கு பின் ஜெய்சங்கர், அதன்பின் சத்யராஜ் என அடுத்த தலைமுறை வில்லன்கள் வந்த பின்னர் பி எஸ் வீரப்பாவின் தேவை குறைந்து போனது. பின் சுபாஷ் இயக்கத்தில் கலியுகம் (1988), வி சேகர் இயக்கத்தில் நீங்களும் ஹீரோதான் (1990) ஆகிய படங்களில் கடைசியாக நடித்தார்.

நீங்களும் ஹீரோதான் படம் சினிமா துறையை எள்ளல் செய்து எடுத்த படம். அதில் ஒரு காட்சியில் படபிடிப்புக்காக வரும் பி எஸ் வீரப்பாவையும் நம்பியாரையும் மக்கள் சபிப்பார்கள். நம்பியார் கூட தூறல் நின்னு போச்சு படத்துக்ப் பின் குணசித்திர நடிகராக மாறினார். ஆனால் வீரப்பா வீரப் பா தான். வீரப்பாவின் இன்னொரு முகம் தயாரிப்பாளர். தனது பி எஸ் வி பிக்சர்ஸ் மூலம் ஆனந்த ஜோதி,ஆண்டவன் கட்டளை, ஆலயமணி, ஆத்மி(இந்தி),வீரக்கனல்,பிள்ளைக்கனியமுது ஆகிய படங்களை தயாரித்தார். 1980 களில் சாட்சி,வெற்றி,கடமை,நட்பு ஆகிய படங்களை தயாரித்தார்.


(தொடரும்)

January 28, 2009

கார்த்திக் என்றொரு கலைஞன் - நிறைவுப் பகுதி

முதல் பகுதி


இரண்டாம் பகுதி

கார்த்திக்கின் மூன்றாம் பிறவி


நாயகிகளை அழகாக காட்டுவது கேமராமேனின் திறமை என்றாலும் அதில் இயக்குனர்களின் பங்கையும் மறுக்க முடியாது. சில இயக்குனர்கள் அந்த அழகியலில் கரை கண்டவர்கள். அதுவரை ஹோம்லி பிகராக பார்க்கப்பட்ட அமலாவுக்கு நீச்சல் உடையை மாட்டி ஜீவா திரைப்படத்தில் கவர்ச்சியாக காட்டியவர் பிரதாப் போத்தன். இன்னொரு பாத்திரத்தில் நடித்த சில்க் ஸ்மிதாவுக்கு குறைந்த அளவு உடைகளை கொடுத்து அதிக அளவு கோணங்களில் அவரது அழகை காட்டினார். தர்மத்தின் தலைவன், வருஷம்16, வெற்றிவிழா ஆகிய படங்களில் கவர்ச்சியானவர் என்ற எண்ணமே தோன்றாமலிருக்கும் வண்ணம் வலம் வந்த குஷ்புவை மைடியர் மார்த்தாண்டன் என்னும் படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக மாற்றியவரும் பிரதாப் போத்தனே. தற்போது கூட ஐயா,சந்திரமுகி ஆகிய படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்த நயந்தாராவை சிம்பு வல்லவனில் கவர்ச்சியாக காட்டினார். பின் விஷ்ணுவர்த்தன் பில்லாவில் மெருகேற்றினார்.

இயக்குனர் சுந்தர் சியும் இந்த வகையறாவை சேர்ந்தவரே. அகால மரணமடைந்த நடிகை திவ்யபாரதி பாதியில் விட்டுச் சென்ற படங்களை முடிக்க தெலுங்கு தேசத்தவர்கள் உபயோகப்படுத்திய ரம்பாவை கதிர் தான் இயக்கிய உழவன் படத்தில் இரண்டாம் கதானாயகியாக நடிக்க அழைத்துவந்தார். அப்படத்தில் சாதாரணமாக தோற்றமளித்த ரம்பாவை அந்த தேவலோக ரம்பையே இவள்தானோ என்னும் அளவுக்கு அழகாக காட்டினார் சுந்தர் சி தன் உள்ளத்தை அள்ளித் தா படத்தில்.


ஆம் கார்த்திக்குக்கு மூன்றாம் பிறவியாக அமைந்த அதே உள்ளத்தை அள்ளித் தாவில் தான். இந்தப்படம் தயாரிப்பில் இருந்தபோது இதில் பணியாற்றிய அனைவருமே இது சராசரி படம்தான் என்ற மனதோடுதான் இருந்தார்கள். சுந்தர் சி யின் முதல் படமான முறை மாமன் ஒரு சராசரி வெற்றிப் படம். இரண்டாவது படமான இதை அவர் இயக்கும் போது சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு இவ்வாறு பேட்டியளித்திருந்தார் "இதுவும் முறைமாமன் போல காமெடி படம். எப்படியாவது 50 நாள் ஓடிவிடும். தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராது". படம் வெளிவந்து தமிழ் சினிமா வரலாற்றின் சிறந்த 10 காமெடி படங்களுல் ஒன்றாக இடம் பிடித்தது.

உள்ளத்தை அள்ளித்தாவின் வெற்றியை அடுத்து கார்த்திக் நடித்த அடுத்த படம் கோகுலத்தில் சீதை. காதல் கோட்டை அகத்தியனின் அடுத்த படமான இது கார்த்திக் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை காட்டியது. இதைத் தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பிஸ்தாவும் வெற்றிப்படமே. தொடர் வெற்றிகளோடு இருந்த விக்ரமனுடன் கார்த்திக் இணைந்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படமும் கார்த்திக்கிக்கு பெரிய வெற்றிப் படமானது.

உள்ளத்தை அள்ளித் தாவுக்கு பின் சுந்தர் சி யுடன் இணைந்த மேட்டுக்குடியும் ஓரளவு வெற்றிப்படமே. இன்னும் கூட சன் குழும தொலைக்காட்சிகளில் சனி, ஞாயிறுகளில் மதிய நேரத்தில் இப்படம் போடப் படுகிறது.


பின்னர் வழக்கம் போல் சரிவு ஆரம்பமானது. சின்ன ராஜா, நிலவே முகம் காட்டு, குபேரன், கண்ணன் வருவான், அழகான நாட்கள், லவ்லி என பல தோல்விப் படங்கள். உனக்காக எல்லாம் உனக்காக மட்டும் நஷ்டம் இல்லாமல் தப்பித்தது.


இந்த சமயத்தில் கார்த்திக் சில படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். ராஜ்கபூர் இயக்கத்தில் அஜீத் நாயகனாக நடித்த ஆனந்தப் பூங்காற்றே, சுந்தர் சி இயக்கத்தில் பிரபுதேவா நடித்த உள்ளம் கொள்ளை போகுதே, பிரபுவுடன் தை பொறந்தாச்சு, அருண் பாண்டியனின் தேவன் ஆகிய படங்களில் சிறிது நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நடித்திருப்பார்.

கடைசி மூன்று ஆண்டுகளில் அவர் நடித்து வந்த படங்கள் என்றால் குஸ்தி, கலக்குறே சந்துரு ஆகியவை.


இந்த மூன்றாம் சரிவுக்கும் முந்தைய காரணங்களே பொருந்தும். தொப்பி, ஊட்டி, பிளேசர் ஆகியவை கார்த்திக்கின் டிரேட் மார்க் ஆகின. சுந்தர் சி மட்டும் இவரை தாக்குப் பிடித்து ஆறு படங்களை இயக்கினார். ராஜ்கபூரும் இவரை நன்கு சமாளிக்க கூடியவர்.


மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வளவு அடிபட்ட பின்னும், மூன்றாவது ரவுண்டிலும் கூட சில விஷயங்களை கார்த்திக் மாற்றிக் கொள்ளாததே. ஒரு வெற்றிப் படத்தை கொடுத்த உடன் சுதாரிக்காமல் குப்பையான கதையில் நடிப்பது கார்த்திக்குக்கு மிகப் பிடித்த விஷயம். ஒரு எடுத்துக் காட்டை பார்ப்போம்.

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் வெளிவந்து பெரிய வெற்றி. அடுத்து என்ன படத்தில் நடிப்பார் இவர் என எல்லோரும் எதிர்பார்த்த போது விழுந்தது இடி. உப்புமா கூட, இவர் எடுக்கும் படங்களுக்கு என் பெயரை உபயோகப் படுத்துகிறீர்களே என கோபப்படும் அளவுக்கு படமெடுக்கும் ராம நாராயனன் இயக்கத்தில் குபேரன் என்னும் படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் என்ற செய்திதான் அது.
சிவலிங்கம் என்னும் படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின் அப்படம் கிடப்பில் போடப்பட்டது. இப்பொழுது மணிரத்னத்தின் அசோக வனத்தில் வில்லனாக நடிக்கிறார், ஜெயம் ரவிக்கு ஒரு படத்தில் தந்தையாக நடிக்கிறார் என செய்திகள் வருகின்றன. கார்த்திக்கின் மகன் ராதாவின் மகளுடன் இணைந்து நடிக்கப் போவதாகவும் செய்திகள் வருகின்றன.

பிரகாஷ்ராஜ் நடித்த மொழி,வெள்ளித்திரை கதாபாத்திரங்களை கார்த்திக் செய்திருக்கலாமோ என எனக்கு சில சமயம் தோன்றும். சுஜாதாவின் கணேஷ் பாத்திரத்துக்கு பல முறை கார்த்திக்கை பொருத்திப் பார்த்திருக்க்கிறேன்.

கார்த்திக் உங்களுக்கு திறமை இன்னும் குறையவில்லை. மோகன்லாலின் தன்மந்திரா, அமீர்கானின் தாரே ஜமின் பர் போன்ற பாத்திரங்களில் நடித்தால் இன்னும் கூட ஒரு பிறவியை நீங்கள் காண முடியும். அதை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும். நான்கு பிறவி கண்ட நவரச நாயகன் என்னும் பதிவை எழுத எனக்கு வாய்ப்பளிப்பீர்கள் என நம்புகிறேன்.
கார்த்திக் தொடங்கிய சரணாலய அமைப்பு, பார்வர்ட் பிளாக், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஆகியவை பிறிதொரு சந்தர்ப்பத்தில்
கார்த்திக் பற்றி சக பதிவர் அருண்மொழிவர்மன் எழுதிய அட்டகாச பதிவு

பதிவு எழுத ஐடியா கொடுத்த ச்சின்னப்பையன் அவர்களுக்கு நன்றிகள்

கார்த்திக் என்றொரு கலைஞன் - இரண்டாம் பகுதி

முதல் பகுதிக்கு இங்கே செல்லவும்

நாடோடி தென்றல், கோபுர வாசலிலே, அமரன், விக்னேஷ்வர் ஆகிய நான்கு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட ஏக காலத்தில் நடந்து கொண்டிருந்தது. நான்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பிய படங்கள்.

பாரதிராஜாவின் இயக்கம், கதையில் சுஜாதாவின் பங்களிப்பு, பீரியட் பிலிம்,இளையராஜவின் இசையில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த பாடல்கள் என நாடோடி தென்றல்.

மலையாள சினிமாவில் அப்போது உச்சத்தில் இருந்த ப்ரியதர்ஷன் இயக்கத்தில் கோபுர வாசலிலே (இதிலும் இளையராஜவின் பாடல்கள் அட்டகாசம்),

ஆதித்யன் இசையில் ராஜேஷ்வர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வந்த அமரன். இப்படத்தில் டான் வேடம். முதன்முதலாக கார்த்திக் இப்படத்தில் வெத்தல போட்ட ஷோக்குல என்ற கானாவை பாடியிருந்தார். தற்கால கானாவுக்கான விதை இப்படாலின் மூலமும் , இதன் சம காலத்தில் வெளியான தலைவாசல் படத்தின் மூலமே தூவப்பட்டது. ஸ்ரீவித்யாவும் இப்படத்தில் சண்ட பஜாரு என்னும் பாடலை பாடியிருந்தார். எம் எல் வசந்தகுமாரியின் மகளுக்கு திரைப்பாடல் பாட என்ன கஷ்டம் இருக்கும்?

குஷ்பு ஜோடியாக நடித்த விக்னேஷ்வர் முதன் முறையாக காவல் துறை அலுவலகத்தை நவீனமாக காட்டிய படம். சென்னை எக்மோரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்த ஹட்கோ அலுவலகத்தை காவல்துறை அலுவலகமாக காட்டி அசத்தியிருப்பார்கள்.

இந்த நான்கு படங்களிலும் நான்கு வித கதாபாத்திரங்கள். நாடோடி தென்றலில் அந்தக்கால ப்ளேபாய், கோபுர வாசலிலே இந்த கால காதலன், அமரனில் டான், விக்னேஷ்வரில் காவல்துறை அதிகாரி. மிக சிறப்பாக இந்த நான்கு கேரக்டர்களிலும் அசத்தியிருப்பார். என்ன ஒரு துரதிர்ஷ்டம், நான்கும் தோல்வி அடைந்தன்.

இந்தப் படங்களை அவர் ஒப்புக்கொண்ட 90- 91 காலகட்டத்தில் மணிரத்னம் தன் தளபதி படத்தின் கலெக்டர் கேரக்டருக்கு கார்த்திக்கை அணுகினார். ஆனால் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனால் அர்விந்த் சாமியை மணி அறிமுகப்படுத்தியதாகவும் கூறுவார்கள். சிலரோ அந்த வாய்ப்பை தவிர்க்கவே அவ்வாறு கார்த்திக் கேட்டதாகவும் கூறுவார்கள்.

இதன் பின் இவர் நடித்த உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன், நாடோடி பாட்டுக்காரன், இது நம்ம பூமி,தெய்வ வாக்கு, ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் பொன்னுமணி, காத்திருக்க நேரமில்லை, சின்ன கண்ணம்மா ஆகிய படங்கள் அனைத்தும் வணிக ரீதியில் தோல்வியைத் தழுவின.

இந்தக்காலத்தில் ராஜ்கபூர் இயக்கத்தில் கார்த்திக் நடித்த சின்ன ஜமீன், சீமான் ஆகிய படங்கள் மட்டுமே வணிகரீதியில் தப்பித்தன. பின் வெளியான முத்துக்காளை, நந்தவனத் தேரு ஆகியவையும் தோல்விப் படங்களே.

86ல் மறுவாழ்வு பெற்று 90 வரை உச்சத்தில் இருந்த கார்த்திக் பின் 95 வரை சரிவையே சந்தித்தார். இதற்க்கு முக்கிய காரணங்கள்.

1. சரியான நேரத்திற்க்கு படப்பிடிப்புக்கு வராமல் டபாய்ப்பது. காத்திருக்க நேரமில்லை, சக்கரவர்த்தி ஆகிய படங்கள் படப்பிடிப்பு தொடங்கி சில ஆண்டுகள் கழித்தே திரைக்கு வந்தன. இவரால் பல தயாரிப்பாளர்கள் டரியலானார்கள். பெரிய இயக்குனர்களும் இவரை தவிர்க்க தொடங்கினார்கள்.

2. முடி கொட்டத் துவங்கியதால் விக் அணிந்து நடித்தார். அது ஒத்துக் கொள்ளாமல் தோல் அலர்ஜி ஏற்பட்டது. எனவே பல காட்சிகளில் தொப்பி அணிந்து நடிக்கத் தொடங்கினார். வெயிலில் நின்று நடிக்க முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப் பட்ட போது ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ள வற்புறுத்தினார். இதனால் பல இயக்குனர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். நல்ல கதை வைத்திருந்த பலர் இவரை அணுக பயந்தார்கள்.

3. சோலைக்குயில் படத்தில் இணைந்து நடித்த ராகினியை திருமணம் செய்து கொண்டார். பின் அவரது தங்கையையும் மணந்து கொண்டார். இதனால் வீட்டிலும் சிக்கல்கள்.

4. கார்த்திக்கின் ப்ளேபாய்தனம் உலக புகழ்பெற்றது. பலருடனும் கோயிங் ஸ்டெடியாக இருந்தால் கேரியர் எப்படி ஸ்டெடியாக இருக்கும்?

5. இவருக்காகவே என ஸ்பெஷலாக இருக்கும் கதைகள் கூட இவரை வந்து அடையவில்லை. ஒரே எடுத்துக்காட்டு பார்க்கலாம். மலையாளத்தில் பெருவெற்றி அடைந்த சித்ரம் படத்தை தமிழில் ரீமேக் செய்தார்கள் எங்கிருந்தோ வந்தான் என்ற பெயரில். பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் பட்டையை கிளப்பிய படம். இங்கே கார்த்திக் அதை செய்திருந்தால் படம் அசத்தலாய் வந்திருக்கும். ஆனால் நடித்தது சத்யராஜ். சத்யராஜ் நல்ல நடிகர் தான். மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் அந்த கேரக்டரை அவரால் சரியாக் செய்யமுடியவில்லை. கடைசியில் அப்படி ஒரு படம் வந்ததா என எல்லோரும் கேட்கும் படி ஆனது.

6. 90க்குப் பின் வந்த அர்விந்த் சுவாமி (தாலாட்டு, மறுபடியும்) இவருக்கு வரவேண்டிய நல்ல படங்களை எடுத்துக் கொள்ள, இளமையான வேடங்களுக்கு பிரசாந்த்,அஜீத் போன்றோர் பங்குக்கு வர நிலைமை இன்னும் சிக்கலானது.

மேலும் சில காரணங்கள், மூன்றாம் பிறவி அடுத்த பதிவில்

January 27, 2009

கார்த்திக் என்றொரு கலைஞன்

முப்பிறவி கண்ட முதல்வர் என்று எம்ஜியாரை அழைப்பார்கள். கதாநாயக நடிகர்களுக்கு முப்பிறவி என்பது அரிது. ஒருமுறை உச்சத்திற்க்கு சென்று விட்டால் அவ்வளவுதான். முடிந்தவரை அங்கே தாக்குப்பிடிக்க வேண்டும். கீழே இறங்குதல் என்பதே கிடையாது விழுந்தால் பாதாளம் தான். மோகன்,ராமராஜன்,அர்விந்த்சுவாமி,பிரபுதேவா ஆகியோருக்கெல்லாம் உச்சம் ஒருமுறை மட்டுமே வாய்த்தது. விழுந்தார்கள் எழவில்லை. முப்பிறவியை அரிதாக கண்ட கதாநாயகர்களில் முத்துராமன் மகனும் ஒருவர்.

முதல் பிறவி

பாரதிராஜாவால் 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமான கார்திக்குக்கு அப்போது வயது 21. முதல் படத்தின் பிரமாண்ட வெற்றியும், முத்துராமனின் மகன் என்ற அடையாளமும் அவருக்கு கோடம்பாக்கத்தின் கதவுகளை முழுவதும் திறந்துவிட்டது. ஆனாலும் அவரால் தொடர்ந்து வெற்றிகளை பறிக்க முடியாவில்லை.

முத்துராமனின் திடீர் மரணத்தால் அவருக்கு சரியான வழிகாட்டி அமையாமல் போனதும், அப்போதைய அவருடைய தோற்றத்தின் காரணமாக கனமான பாத்திரங்களை ஏற்று நடிக்க முடியாமல் போனதும் தோல்விகள் தொடர்கதையானதுக்கு காரணமாயின.
வாலிபமே வா வா, நினைவெல்லாம் நித்யா, இளஞ்ஜோடிகள், பகவதிபுரம் ரயில்வே கேட் போன்ற படங்களில் நடித்தார். எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்தகால கட்டத்தில் காட்பாதர் என்று யாரும் இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டார். கதைகளை தேர்ந்தெடுக்கும் கலை கைவரப்பெறாத வயது வேறு. 1984 ல் வெளிவந்த நல்லவனுக்கு நல்லவனில் ரஜினிக்கு மாப்பிள்ளை வேடம். இந்த படத்தில் ஓரளவு மெச்சூர்டான தோற்றம் இருந்தாலும் நெகடிவ் கேரக்டர் என்பதால் மிகவும் பேசப்படவில்லை.
இந்த காலகட்டத்தில் விசு,கிஷ்மூ இவரை மிகவும் ஆதரித்தார்கள். இதை கார்த்திக்கின் பழைய பேட்டிகள் மூலம் அறியலாம். கெட்டி மேளம், அவள் சுமங்கலி தான் ஆகிய படங்களில் வாய்ப்பு கொடுத்து அவரை ஆதரித்தார்கள்.
இதே காலகட்டத்தில் தான் ராதாரவி இவருக்கு மிக நெருக்கமானார். இருவரும் இணைந்து நட்பு உட்பட சில படங்களில் நடித்தார்கள். வேறு வழியில்லாமல் கர்ணனின் இரட்டை குழல் துப்பாக்கியில் கூட இருவரும் நடித்தனர். ஆனந்த விகடனில் 90 களில் ஒரு தொடர் பேட்டி வெளிவந்தது. அதில் ஒரு பிரபலமானவர் தனக்கு மிக விருப்பமான நண்பரை குறிப்பிடவேண்டும். பின்னர் அவரை தன் வீட்டில் எப்போது சந்திப்போம், என்னென்ன பேசுவோம், என்ன பறிமாறப்படும் என்பது பற்றி சொல்ல வேண்டும். முதல் வாரத்தில் கமல்ஹாசன் குறிப்பிட்டது காந்தியை. பாலசந்தர் குறிப்பிட்டது மணிரத்னத்தை (சாந்தாராம் விருது பெற்றுத் தந்ததற்க்காக). அந்த வரிசையில் ராதாரவி குறிப்பிட்டது கார்த்திக்கை. அவர்கள் நட்பு இன்று கலக்குரே சந்துரு வரை தொடருவது ஆச்சரியமே.

இரண்டாம் பிறவி

மணிரத்னத்துக்கு முதல் பிறவியான மௌன ராகம் கார்த்திக்குக்கு இரண்டாம் பிறவியாக அமைந்தது. அந்த 20 நிமிட நடிப்பு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்க போதுமானதாக இருந்தது. சத்யராஜ் சொல்வார் " நம்ம கிட்ட என்ன சரக்கு இருக்குங்கிறத காட்டுறவரைக்கும் தான் இங்க கஷ்டம். நம்மால இது முடியும்னு தெரிஞ்சுட்டா இண்டஸ்ட்ரியே நமக்கு கதை பண்ண ஆரம்பிச்சுடும்". இதற்க்கு பெரிய உதாரணம் ரகுவரன். அவரால் சில கேரக்டர்களை அனாசியமாக பண்ண முடியும் என அவர் நிரூபித்தபிறகு ஒவ்வொரு உதவி இயக்குனரும் தன் கதையில் அவருக்கு ஒரு பாத்திரத்தை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.
மௌன ராகம் படத்தில் நடித்ததற்க்கு கார்த்திக்கிக்கு கிடைத்த முக்கியமான விருதுகளில் ஒன்று புனே திரைப்பட கல்லூரியில் ஹால் ஆப் பேமில் சிறந்த துணை நடிப்புக்கான நடிப்புகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்னி நட்சத்திரம் (1988), வருஷம் 16 (1989), கிழக்கு வாசல் (1990) ஆகிய படங்களில் நடித்ததற்க்காக தொடர்ந்து மூன்று பிலிம்பேர் விருதுகளை வாங்கி ஹேட்டிரிக் அடித்தார். கிழக்கு வாசல் வெற்றி விழாவில் பேசிய ரஜினி சின்ன புள்ளையா இப்பதான் பார்த்த மாதிரி இருக்கு அதுக்குள்ள இப்படி ஒரு பெர்பார்மன்சா என பாராட்டினார்.

இதே காலகட்டத்தில் சங்கிலி முருகன் தயாரித்த பாண்டி நாட்டுத் தங்கம், பெரிய வீட்டு பண்ணக்காரன் ஆகிய பக்கா கமர்சியல் படங்களிலும் நடித்து பி சி சென்டர்களிலும் தன் முத்திரையை பதித்தார் கார்த்திக்.
91 ஆம் ஆண்டு இவர் நடித்துக் கொண்டிருந்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தன. ராஜேஷ்வர் இயக்கத்தில் அமரன், பாரதிராஜா இயக்கத்தில் நாடோடி தென்றல், பிரிய தர்ஷன் இயக்கத்தில் கோபுர வாசலிலே, மிக ஸ்டைலாக படமாக்கப் பட்டுக் கொண்டிருந்த விக்னேஷ்வர் ஆகியவை தான் அந்தப் படங்கள்
(தொடரும்)


January 20, 2009

நெத்தியடி

தகவல் புரட்சியால் அதிகமாக பாதிக்கப்பட்ட பத்து பேர்களை கணக்கெடுத்தால் எனக்கு அதில் ஒரு இடம் நிச்சயம் இருக்கும். எனக்கு முந்தைய செட்டில் பி காம் முடித்து கம்பெனியில் சின்ன வேலை பார்த்தாலும் பெண் கிடைத்தது. இப்பல்லாம் தரகர் கூட ஜாதகத்தை வாங்க மாட்டேங்கிறார். நான் ஒன்னும் டாடா பேமிலியிலயோ இல்லை தமன்னா பேமிலியிலயோ பொண்ணு வேணுமின்னு கேட்கலை. போனா வந்தா கறி சோறு ஆக்கிப்போட்டு, தீபாவளி பொங்கலுக்கு புள்ள குட்டிகளுக்கு சட்டை எடுத்துக்குடுக்குற அளவுக்கு காசு இருக்குறவங்க இருந்தா போதும். நின்னா நெத்தியில முத்தம் குடுக்குற உயரம், துணிக்கடைக்கு போனா கஷ்டமில்லாம சேலை எடுக்குற மாதிரி கலர், தூங்கி எந்திரிச்சுவந்தாலும் சகிக்கிற மாதிரி முகம் இருந்தா போதும்னு பார்த்தா, எனக்குத்தான் வயசு ஏறிக்கிட்டே போகுது.
இன்னோரு கஷ்டம் இந்த செல்போனு. எங்க எழவு விழுந்தாலும் போன அடிச்சுடுறாங்க. முன்னல்லாம் தந்திதான் வரும். ரொம்ப லேட்டா கிடச்சது, அவசர வேலையா வெளிய போயிட்டேன் அப்புறம்தான் தெரிஞ்சுச்சுன்னு புருடா விடலாம். இப்போ எழவு விழுந்தது அடுத்த வீட்டுக்காரனுக்கு தெரியுறதுக்குள்ள அமெரிக்காவுக்கே தெரிஞ்சுருது. நாளைக்கு புத்தக கண்காட்சிக்கு போயி என்னல்லாம் வாங்கலாம்னு ரூம்மேட் கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது ஊர்ல இருந்து வந்துருச்சு மாமா போயிட்ட நியூஸு. பொண்ண குடுக்க மாட்டேங்கிறாங்க, பொணத்த மட்டும் தூக்கச்சொல்லுவாங்க.
ஆறு மணிநேர ட்ராவல், ஏதாச்சும் மொக்கப் படத்த போட்டு வெறுப்பேத்திட்டாங்கண்ணா என்னா பண்றதுன்னு ரூம்ல கிடந்த புக்கெல்லாம் எடுத்து பேக்ல வச்சு கிளம்பிட்டேன். போற வழில ஐடிகாரன பார்த்தாலே வயிறு எரியுது. பீல்ட் அவுட்டாயிரும்கிறாங்க ஆனா இன்னும் பளபளப்பாத் தானய்யா அலையுறாங்க. சரியா தூக்குறதுக்கு முன்னாடியே போயாச்சு.மாமன் மகன் நல்லா செலவழிச்சுக்கிட்டு இருந்தான். மயானத்துல கோட்டி கேட்ட காசவிட சேர்த்து கொடுத்தான். டேய் இதென்ன திருப்பதியா? ஆஹா மனனெறைவா செய்யுறாங்களே, இவிங்க குடும்பம் அடிக்கடி வந்து போகணுமின்னு அவன் நினச்சுறப் போறாண்டா. அடங்குடா.
காரியம்லாம் முடிஞ்சுச்சு. வழக்கம் போல அம்மா, அப்பாவிடம் "பார்த்தீங்களா, எவ்வளோ செலவு ஆகுதுன்னு?, வேலை பார்த்தப்பவே ஒழுங்கா சேத்திருந்தா? இவனையாச்சும் இஞ்சினியருக்க படிக்க வையுங்கண்ணே. டொனேஷன் குடுக்க மாட்டேன்னு நிமிந்துக்கிட்டீங்க. முப்பது ஆகப்போகுது எங்கயாச்சும் முன்னாடி நிக்க முடியுதா இவனால?" என்று அர்ச்சனையை தொடங்க மௌனமாயிருந்தார் அப்பா. ஏம்மா, விடும்மா அவர, ரிட்டயரான காலத்துல நிம்மதியா இருக்க விடும்மா என்று அடக்கிவிட்டு கிளம்பினேன்.
பக்கத்தில் 45 வயது ஆள் உட்கார பஸ் கிளம்பியது. தம்பி சென்னைக்கா என ஆரம்பித்தார். போச்சுடா என்றது என் மனம்.

எங்க வேலை பார்க்குறீங்க?

பிரைவேட்ல தான் (என்னா பொண்ணா குடுக்கப்போற?)

அப்பா?

அவரு ஆர் டி ஓ. இப்ப ரிட்டயர் ஆயிட்டாரு.

நல்ல வருமானமில்ல?

இல்லிங்க. பொழைக்கத் தெரியாதவரு. ஸ்ட்ரைட் பார்வர்ட். (நல்லா சம்பாதிச்சு இருந்தா ஏண்டா நான் இந்த பஸ்ல வர்றேன்?)

தாத்தா வசதியானவரா தம்பி? அப்பதான் நம்மாளுக இப்படி இருப்பாங்க.

பெரிசா இல்ல. இருவது ஏக்கர் இருந்துச்சு. எங்கப்பா கூட பொறந்தவங்க மூணு தங்கச்சி. எங்கப்பா முட்டாத்தனமா எல்லாரும் சமம்னு பங்கிக் கொடுத்துட்டாரு. எங்கப்பா பங்குலயும் இப்ப என் அக்கா,தங்கச்சிக்கும் பங்கு வேற.

என்னடா விட்டா இந்தாளு நம்மளை ரொம்ப காச்சிடுவானோன்னு. பேக்ல இருந்து உயிர்மையை எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். அந்தாளும் லஜ்ஜையில்லாமல் வேற ஏதும் புக் இருக்கா என கேட்க, என் மனம் தொலைஞ்சடா மகனே என மகிழ்ச்சியில் எடுத்துக் கொடுத்தது "பின் நவீனம்- ஒரு அறிமுகம், பூக்கோ,தெரிதா -அறிமுகப் புத்தகம்"

அரை மணி நேரம் கழித்து, அவர் யாருங்க இவங்கெல்லாம், அதென்ன பின்னவீனத்துவம்னு கேட்க நான் ஆரம்பித்தேன்.
"இவங்கெல்லாம் எது சரியானதுன்னு மக்கள் செய்யுறாங்களோ அத உடைச்சு உண்மையிலேயே எது சரியானதுன்னு நமக்கு காட்டுறவங்க, சராசரி ஆளுங்க மாதிரி இருக்கமாட்டாங்க"

ஓ உங்கப்பா மாதிரிங்களா தம்பி?

January 15, 2009

கிரிமினல்

ஒரு முக்கிய நபரை சந்திப்பதற்காக அம்பத்தூரில் இருந்து அடையாறை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன், வழியெங்கும் பொறியியல் கல்லூரி பேருந்துகளில் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் 91ல் படிக்கும் போது டேஸ் ஸ்காலர் மாணவர்களைப் பார்ப்பது கோஷ்டி சண்டை இல்லாத சிறுபத்திரிக்கையைப் பார்ப்பது போல அபூர்வம். அப்போது ராகிங் செய்யாதவன் ராங் பர்சன் என்னும் கருத்தியல் நிலவிய காலம். சீனியரிடம் வாங்கிய அடியை ரன் வட்டி,மீட்டர் வட்டி போட்டு ஜுனியரிடம் ஒப்படைக்கும் நேர்மையான கடன்காரர்கள், அஸைன்மெண்ட்,ரெக்கார்ட் எழுத வைத்து கையை உடைக்கும் காரியவாதிகள், கிரீட்டிங்க்ஸ்,லெட்டரை கொடுக்கவைத்து அனுமாராக்கும் ராமர்கள் என பல குழுவினர் இருந்தார்கள். இவர்களிடம் மாட்டினால் கூட பரவாயில்லை, இன்னொரு எக்சென்ட்ரிக் குழு இருந்தது. அவர்களிடம் மாட்டினால் அம்பேல்தான்.

இவர்கள் புறநகரில் இருந்த ஒரு டூரிங் தியேட்டரை களமாக கொண்டு இயங்கியவர்கள். அங்கே சனி ஞாயிறுகளில் பிரத்யேக காட்சிகள் இணைக்கப்பட்ட மாற்றுக் கலாச்சாரத்தை முன் மொழியும் படங்கள் திரையிடப்படும். வெள்ளியன்று ஏதாவது ஜுனியரைப் பிடித்து அங்கே சென்று டிக்கட் ரிசர்வ் பண்ண சொல்வார்கள். அங்கே எந்திரன் வெளியானால்கூட சுடச்சுட தான் டிக்கெட் கொடுப்பார்கள். மாட்டிக்கொண்டவன் அங்கே போய் விழிப்பான் பாருங்கள். அதற்க்கடுத்த நாள் 20 அல்லது 30 ஜுனியர் மாணவர்களை மொத்தமாக கூட்டிச் சென்று விடுவார்கள். பிரத்யேக காட்சி ஓடத்தொடங்கியதும் ஸ்டார்ட் என்று ஆணையிடுவார்கள். ஜுனியர்கள் அனைவரும் எழுந்து நின்று முத்தைத்திரு அத்தித் திருநகை என்று பாட வேண்டும். படம் பார்க்க ஆவலுடன் வந்தவர்கள் எல்லாம் டென்சன் ஆகி நம் வீட்டார் மீது அர்ச்சனை செய்ய தொடங்கி விடுவார்கள்.

ஆனால் இதில் யாரிடமும் சிக்காமல் தப்பித்தவன் கிரிமினல் மணி என்று எங்களால் பின்னாளில் அழைக்கப்பட்ட மணிமுருகன். இரண்டாமாண்டு தொடக்கத்தில் அவனுக்கும் ஒரு நண்பன் கிடைத்தான். எப்படிடா என்று அந்த பாவப்பட்டவனிடம் கேட்டபோது, "மணி ரொம்ப நல்லவன்டா, நாங்க எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிருவோம்டா" என்று பதிலளித்தான். ஒருமுறை அவர்களைப் பின் தொடர்ந்த போது தான் ஷேரிங் என்றால் என்ன என்று தெரிந்தது


இவன் மெக்டோவல் ஆப் வாங்கினான், மணி மாப்பிள்ளை வினாயகர் சோடா

இவன் பிரியாணி ஆர்டர் செய்தான், மணி தயிர் வெங்காயம் கொண்டு வரச் சொன்னான்


இவன் வில்ஸ் பில்டர் வாங்கினான், மணி வெட்டுப்புலி தீப்பெட்டி வாங்கினான்.


இந்த ஏகாதிபத்திய சுரண்டலை கண்டு கொதித்தெழுந்த எங்கள் தோழன் ஒருவன், பல் போராட்டங்களுக்குப் பின் அவனது அடிமைத்தளையை உடைத்தெரிந்தான். சனி இப்போது தன் வக்கிரப் பார்வையை தோழன் மீது திருப்பியது.

முதல் ஆண்டில் கல்லூரி விழாவில் அழகு மலராட என அபிநயம் பிடித்த ஈசீஈ சாருலதாவிடம் மனதைப் பறிகொடுத்து பொட்டு வைத்த வட்ட நிலாவையே பாடிக் கொண்டிருப்பான் தோழன். புரட்சிக்காரனுக்கும் காதல் பூ பூப்பது உலக நியதிதானே. நாங்களும் எங்கள் பங்கிற்க்கு உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட நீ வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே என்று எசப்பாட்டு பாடுவோம்.

திடீரென அவனுக்கு சாருலதாவிடம் இருந்து காதல் கடிதம் வந்தது. யாராலும் நம்ப முடியவில்லை. உங்கள் மனதை உங்கள் செயல்கள் மூலம் அறிந்தேன் என்பது போல பல வரிகளில் தன் காதலுக்கான காரணங்களை அவள் சொல்லியிருந்தாள். பின் ஒரு நாள் தனியே சந்திப்போம், அதுவரை என்னிடம் நேரில் ஏதும் பேசவேண்டாம், எனக்கு பிரச்சினை என்று எழுதியிருந்தாள். அடுத்த கடிதத்தில் அவர்கள் விடுதிக்கு அருகில் உள்ள பாறாங்கல் அடியில் பதில் கடிதத்தை வைக்கவும் என்று எழுதியிருந்தாள். பின் ஆரம்பித்தது வினை. ஒவ்வொரு முறையும் அவன் வெடிகுண்டு வைப்பவனைப் போல பதுங்கி பதுங்கிப் போய் அங்கே பதிலை வைத்து விட்டு வருவான்.
சாருலதா அவனைப் பாடாய் படுத்தினாள். மீசை எடுக்க சொன்னாள். பூப்போட்ட சட்டை போடச் சொன்னாள், அவள் நண்பிகளுக்கு டிக்கட் எடுக்கச் சொன்னாள். ஒருமுறை பழனி சென்று மொட்டை கூட அடிக்க வைத்தாள்.

இரண்டாம் ஆண்டு மாணவர்களின் முக்கிய கடமையான ராக்கிங்கில் நாங்கள் மூழ்கி இருந்ததால் இதை நாங்கள் கண்டு கொள்ளவில்லை. போதாகுறைக்கு லெட்டர் வரும் போதெல்லாம் அவன் தரும் சிறு சிறு டிரீட்கள் வேறு. நான்காம் செமெஸ்டர் ஸ்டடி லீவ் விட்டதும் ராக்கிங்கை ஏறக் கட்டிவிட்டு படிக்கத் தொடங்கினோம். அப்போது தோழன் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, அவளிடம் நேரில் பேசினால்தான் நிம்மதியாக இருக்கும் என்று சொல்லி புறப்பட்டான். நாங்களும் சந்திப்பு நல்லபடியாக நடந்தால் நமக்கு டிரீட் கிடைக்குமே என்று வாழ்த்தி அனுப்பினோம். திரும்பி வந்தான் நடைப் பிணமாக, நீங்க யாருன்னு கேட்டுட்டாடா என்று அழ ஆரம்பித்தவன் ஓராண்டு கழித்து அழுகையை நிப்பாட்டியபோது 18 அரியர்களும், மனதில் ஆறாத வடுவும் பாக்கியிருந்தன.

ஆமாம். நாங்கள் எப்படி இது நடந்தது என்று கண்டிபிடித்து அவனைத் தேற்ற ஒரு ஆண்டு ஆனது. சூத்திரதாரி? வேறு யார் நம்ம மணிதான். ஜுனியர் பெண்கள் மூலம் கடிதம் எழுதவைத்து போஸ்ட் செய்தது, சாரு லதா விடுமுறைக்கு செல்லும் போது அவள் ஏரியாவில் இருந்து ஜூனியர் பசங்கள் மூலம் போஸ்ட் செய்வது, கல் அடியில் இருக்கும் லெட்டரை எடுப்பது என ஆறு மாத காலம் தோழரை ஆட்டி வைத்தவன் அவன் தான். எங்களுக்கு சந்தேகம் வராத வகையில் அப்பொழுது அவன் ஒரு சீனியரிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பது போல போக்கு கூட காட்டியிருந்தான்.

நான்காம் ஆண்டில் ரூமுக்கு இருவர் என்றும், அதை லாட் மூலம் தேர்வு செய்யப் போவதாகவும் விடுதி நிர்வாகம் அறிவித்தது. என் ரூம் மேட்டாக மணி வந்து சேர்ந்தான். பக்கத்து அறையில் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லாமல் ஒரு உருண்டையும் உருளுதடி என உன்னிக்கிருஷ்ணன் பாடிக் கொண்டிருந்தார் . வார்டனிடம் சென்று மாற்றல் கேட்கப் போகிறேன் என்றவனை நண்பர்கள் தடுத்து விட்டர்கள். நம்ம செட்டுக்கு ஒரு குணா போதும்டா, நாலு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அப்புறம் செமெஸ்டர் லீவு, பிராஜக்ட்டுன்னு ஓடிடும் என்று ஆறுதல் படுத்தினார்கள்.

அப்பொழுதெல்லாம் ஆண்டுக்கு 30- 40 மாணவிகள் தான் எங்கள் கல்லூரியில் சேருவார்கள். பெரும்பாலும் டம்மி பீஸ்தான் இருக்கும். அந்த பெண்களின் ஜாதகத்தை வாங்கி சீனியர்களிடம் தருவதுதான் முதலாமாண்டு மாணவர்களின் முதல் பணி. செமெஸ்டர் தொடங்கிய இரண்டாம் வாரத்தில் அந்த டீடெயில்ஸை எடுத்துக் கொண்டு நண்பன் ஒருவன் ரூமூக்கு வந்தான். அசுவராசியமாக அதை புரட்டிக் கொண்டே, என்னடா இந்த வருஷமும் ஒன்னும் தேறல்லியாமே என்றேன். அவனும் "என்னடா பண்ணுறது, கொஞ்சம் அழகா இருந்தாலும் ப்ளஸ் டூவிலேயெ லெட்டர கொடுத்து படிக்க விடாம பண்ணி ஆர்ட்ஸ் காலேஜுக்கு அனுப்பிடுறாங்க நம்ம பசங்க", இங்க வர்றதெல்லாம் ரிஜெக்டட் பீஸ் தானே என்றான். அப்பொழுது தான் கவனித்தேன் ஒரு பெண் தன் தந்தை வேலை பார்க்கும் இடமாக போட்டிருப்பது என் தந்தை பணிபுரியும் அலுவலகத்தை. பாருடா நமக்கு தெரியாமலே இதெல்லாம் நடக்குது என்று கமெண்ட் அடித்துவிட்டு லிஸ்டை அவனிடம் கொடுத்துவிட்டேன்.

அழுக்கு துணி தாங்காமல் கொடி அறுந்ததும்தான் வீட்டுக்கு போய் ஒரு மாதமானது ஞாபகம் வர வீக்கெண்டில் ஊருக்கு கிளம்பினேன். வீட்டில் நுழைந்ததும் பொளேரென அப்பா கன்னத்தில் அறைந்தார். இதற்கு முன் ஐந்தாவது படிக்கும்போதோ, ஆறாவதிலோ தான் அடித்த ஞாபகம். பின்னர் தான் தெரிந்தது இதுவும் நம்ம மணியின் வேலையென்று. நான் தான் முரளிகண்ணன்,உன் அப்பா வேலைப் பார்க்கும் இடத்தில்தான் என் அப்பாவும் வேலை பார்க்கிறார் என்று அந்த மாணவியை பிக்கப் செய்திருக்கிறான். ஒரு கட்டத்தில் இவன் எல்லை மீறப் போக அவள் தன் தந்தையிடம் சொல்லி எனக்கு அடி வாங்கி கொடுத்துவிட்டாள்.

அடடா மறந்தே போயிட்டனே. முக்கியமான ஆளை பார்க்க போறேன்னு சொன்னேன்ல அது நம்ம மணிய பார்க்கத்தான். பின்ன என்னங்க? ஆபிஸுல பிரச்சினை. மேல இருக்குறவன் குடையுறான், கீழ இருக்குறவன் குத்துறான். அதான் அவன்கிட்ட நெலமய சொல்லி கிரிமினலா ஒரு ஐடியா வாங்கலாம்னு. இதுக்கு முன்னாடி கூட ரெண்டு பிரச்சின வந்தப்ப அவந்தான் தீர்த்து வச்சான்.

சத்யம் நிறுவனம் அரசுடமை ஆக்கப்படுமா?

சத்யம் நிறுவனத்தை பெயில் அவுட் செய்யப் போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதற்க்கு முன் பல உற்பத்தி நிறுவனங்கள் , விவசாயிகள் (கரும்பு உற்பத்தியாளர்கள்), நெசவாளர்கள் இந்த பிரச்சினையை சந்தித்த போது அரசு ஏதும் செய்யவில்லை. போராட்டம் கூட நடத்தினார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

இம்முறை யாரும் கேட்காமலேயே அரசு முன்வந்துள்ளது. சத்யத்தை காப்பாற்றாது போனால் அது ஐ டி துறையையே பாதிக்கும், பின்னர் அது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். சிலரோ இது ஒபாமாவுக்கு சாதகமாக போய்விடும். சத்யம்,விப்ரோ அடுத்து இன்போசிஸ் மீதும் குற்றம் சாட்டி அவுட் சோர்ஸிங்கையே தவிர்த்து விடுவார்கள் அமெரிக்கர்கள் என்று சொல்லுகிறார்கள்.

இந்திய மக்களின் வரிப்பணத்தில் தானே பெயில் அவுட் செய்யப் போகிறீர்கள்?. அது 53,000 இந்தியரைத்தானே காப்பாற்றப் போகிறது? நல்லது. அரசுடமை ஆக்கிவிடுங்கள் சத்யத்தை. வரும் லாபம் பெயில் அவுட்டுக்கு வரி கட்டிய மக்களுக்கே போய் சேரட்டும். அரசுடமை ஆனால் ஊழல் மயமாகிவிடும் என இனி யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு முறை அவ்வாறு செய்துவிட்டால் தனியார் நிறுவனங்களும் ஊழல் செய்ய பயப்படும்.

அரசுடைமை ஆக்கிய பின் எட்டு மணி நேரமே எல்லோரும் வேலை செய்யட்டும். இரண்டு நாள் விடுமுறை கொடுக்கட்டும். வேலை முடியவில்லையா? இன்னும் 53,000 வேலை இல்லாதவர்களை எடுத்துக் கொள்ளட்டும். நிறைய மக்கள் பெஞ்சில் உள்ளார்கள். கேம்பஸில் செலெக்ட் ஆகி பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

January 14, 2009

சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே

இந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர்.


இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி எழுதி வந்தது. தற்போது குமுதத்திலும் இது பற்றி செய்தி வருவது மிக மகிழ்ச்சிகரமானது. விகடன் சென்று சேராத சில இடங்களில் குமுதம் செல்லும். எனவே வலைப்பதிவு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவ கூடுதல் வாய்ப்பு.


குமுதம் சர்வேயின் படி
1.இட்லிவடை

2.நாகார்ஜூனன்

3.பிகேபி

4. எண்ணங்கள் - பத்ரி

5. யுவகிருஷ்ணா

6.பரிசல்காரன்

7.அதிஷா

8.ஜ்யோவ்ராம் சுந்தர்

9.சத்தியகடதாசி

10.லிவிங்ஸ்மைல்

ஆகிய வலைபதிவுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

January 13, 2009

ரெங்கவிலாஸும் என் காதல் தோல்விகளும்

என் தந்தை ஒரு போஜனப்பிரியர், அதனால் எனக்கு காதல் தோல்விகள் என்றால் உங்களுக்கு சிரிப்பாய்த்தான் இருக்கும். அந்தக்காலத்தில் எங்கள் ஊரில் ரெங்க விலாஸ் என்னும் உணவகம் இருந்தது. அங்கே சாம்பார் வடை பேமஸ். இரண்டு சாம்பார் வடை வாங்கினால் ஒரு லிட்டர் சாம்பாரை வாளியில் ஊற்றி தருவார்கள். வாரத்தில் மூன்று நாட்களாவது அந்த கடை சாம்பார் வேண்டும் என் தந்தைக்கு. அது வந்தவுடன் அவர் இட்லி சாப்பிட ஆரம்பிப்பார். துணைக்கு அப்பொழுது அரைத்த தேங்காய் சட்னி, இரவு மீதமான தக்காளி கார சட்னி, எப்பொழுதும் வீட்டில் இருக்கும் எண்ணெய் மிளகாய்ப் பொடி.

இரவுகளில் ராஜு ஆப்பக்கடையிலோ, குதிரை மார்க் புரோட்டா ஸ்டாலிலோ வாங்கப்படும் வீச்சு புரோட்டா, வெங்காய கறி. நான் வாங்கி வந்த உடன் என் தாயார் ஆம்லேட் சுட ஆரம்பிப்பார் சின்ன வெங்காயம் போட்டு. பினிஷிங் டச்சாக இரண்டு நைஸ் ஊத்தாப்ப்பமும் உண்டு. மார்கழி மாதங்களில் என் தெருப் பையன்கள் எல்லோரும் பட்டையோ நாமத்தையோ போட்டுக்கொண்டு பொங்கல்,சுண்டல் வாங்க கோவிலுக்கு கிளம்பும் போது நான் வாளியை தூக்கிக் கொண்டு குள்ளி டீக்கடைக்கு போவேன். அங்கே டீ மட்டும் தான் கிடைக்கும். வடை,பஜ்ஜி எதுவும் இருக்காது. தென் மாவட்ட டீக்கடைகளில் காலையில் பறக்கும் மாநிலகொடியான தினத்தந்தி கூட அங்கே வாங்க மாட்டார்கள். ஆனாலும் வியாபாரம் அனல் பறக்கும். போடும் டீ அப்படி. சில மாலை வேளைகளில் ஸ்ரீராம் ஸ்வீட் ஸ்டாலில் இருந்து ஓமப்பொடி,நவதானிய மிக்சர்.
இப்படியாக நாளொரு சாப்பாடும், பொழுதொரு டிபனுமாக போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கையில் திடீரென பருவக்காற்று வீசியது. எங்கள் தெருவுக்கு இரண்டு தேவதைகளுடன் ஒரு வங்கி அதிகாரி குடி வந்தார். ஒற்றுமையாய் இருந்த தெருப் பையன்களுக்கிடையே சண்டை வரத் தொடங்கியது. எப்படியாவது என் வயதில் இருந்த இரண்டாவது பெண்ணின் காதலைப் பெற்றுவிட வேண்டுமென்று துடித்தேன். ஒருநாள் என் வருங்கால மாமனார் என் வீட்டிற்க்கு வந்தார். என் தந்தை பணிபுரியும் அலுவலகம் தொடர்பான வேலைக்காக.
இரண்டு நாள் கழித்து, என் தந்தை என்னை அழைத்து கையில் ஒரு கவரை கொடுத்து தேவதையின் வீட்டில் போய் கொடுக்கச் சொன்னார். சரி என்று உற்சாகமில்லாமல் தலையாட்டி விட்டு வெளியே வந்தேன். அங்கு போகாமல் ஒளிந்து கொண்டேன். என் தந்தை வெளியே கிளம்பியதும் என் பேவரைட் டிரஸ் அணிந்து ஒப்பனையிட்டு கிளம்பினேன். ஸ்டைலாக நடந்து சென்று அவர்கள் வீட்டு கதவைத் தட்டினேன். வருங்கால மாமியார் கதவைத் திறந்தார். ஹாலில் பாம்பே சகோதரிகளை தோற்கடிக்கும் வண்ணம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். கவரை கொடுத்ததும் அந்த அம்மாள் கேட்டார்
" அவர் பையனா நீ?, சும்மா வாளிய தூக்கிக்கிட்டே திரியுறனால ஏதோ கடைப் பயைன்னு நினச்சோம்".
அப்போது ஹாலில் பிசாசுகள் சிரிக்கும் சத்தம் கேட்டது.
பின்னர் தெருவில் ஆழமாக விசாரிக்கையில் தான் தெரிந்தது, இரண்டு முரளி இருப்பதால் எப்பொதும் ஜலதோசத்தால் அவதிப்படுவனை சளி முரளி என்றும் என்னை வாளி முரளி என்றும் மக்கள் அழைத்துவருவது. இனி தெருவில் நம் பப்பு வேகாது, வெளியூரில் இருக்கும் நம் உறவுப் பெண்களையாவது லவ்வலாம் என்று தீர்மானித்தேன். அங்கும் என் தந்தையின் போஜனப் பிரியம் குறுக்கே வந்தது. நானும் ஆசை அசையாக உறவினர் திருமணங்களுக்கு முதல் நாள் மாலையே கிளம்பி செல்வேன்.
கல்யானம் நடத்துபவர்கள் என்னை பார்த்ததும் கேட்பது
" அப்பாவுக்கு புரமோஷனாமே?, காலையிலாவது வருவாரா?,"
அடுத்து உடனே
" எப்பவும் அவர் தான் ஸ்டோரையும்,சமையல்காரங்களையும் பார்த்துப்பார், நீதான்பா அவர் இடத்தில இருந்து பார்த்துக்கணும்"
திருமணத்திற்க்கு வரும் பெண்கள் அதற்கெனவே ஒளித்து வைத்திருக்கும் சிறப்பு உடைகளுடனும், ஒப்பனைகளுடனும் வளைய வந்து கொண்டிருப்பார்கள். என் உறவுப் பையன்களெல்லாம் நூல் விட்டுக் கொண்டிருப்பார்கள். நானோ இங்கே இந்த எண்ணெயில வடை சுட்டா காரலா இருக்கும் மாத்துங்க என்று சமையல்காரர்களிடம் நூல் விட்டுக் கொண்டிருப்பேன்.
பந்தி விசாரணையின் போது,
ஒருமுறை என் அத்தை பெண்னிடம் இந்த கூட்டு வச்சுக்கங்க, ரசத்துக்கு நல்ல காம்பினேஷன் என்று சொல்லப் போக அவள் சொன்னது
" நாங்க வாழ்றதுக்காக சாப்பிடுறவங்க, சாப்பிடறதுக்காக வாழ்றவங்க இல்லை".
என் காதல் என்னிடமே தங்கிவிட்டது. பரிமாறாத சாதத்துக்கு என்ன மதிப்பு?
பின்னர் ஊரிலேயே ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தேன். ஒருமுறை என் நண்பனுக்கு அட்டஸ்டேஷன் வாங்குவதற்க்கு தந்தை அலுவலகம் சென்றிருந்த போது பியூன் என்னைக் காட்டி கிளார்க்கிடம் சொன்னார்,
" சாமானியமா லீவே எடுக்க மாட்டாரு நம்ம சாரு, மகனுக்கு மஞ்சள் காமாலைன்ன உடனேயே மூணு மாசம் லீவு போட்டதுமில்லாம, மகன் சாப்பிடுற கஞ்சித்தண்னிய தான் குடிச்சுக்குட்டு இருந்தாரு".
அதுவரை என் தந்தையிடம் எனக்கு ஏற்படாதிருந்த பாசம் கண்ணின் வழியே கங்கையாய் வெளியேறியது.
காதல் தான் என் தந்தையால் கிடைக்கவில்லை. ஆனால் கல்யாணம் கிடைத்தது. இப்போது கூட வேலை முடிந்து வீட்டிற்க்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். கதவை பையன் வந்து திறக்கிறான். என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு? என்று கேட்ட படியே உள்ளே நுழைகிறேன். தைல வாசனை. மதியம் இருந்து ஒரே தலைவலிங்க என்கிறாள் மனைவி. சரி சரி ரெஸ்ட் எடு, டிபன் வாங்கிட்டு வந்துர்றேன் என்று சொல்லியபடி பையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறேன் நான். மனைவி என்னை கனிவு கலந்த காதலோடு பார்க்கிறாள். பெண் பார்க்கும் போதோ, நிச்ச்யத்தின் போதோ, கல்யாணத்தின் போதோ இந்த காதல் பார்வையை நான் எதிர்கொண்டதில்லை. போகோவில் மிஸ்டர் பீனை பார்த்துக் கொண்டே என்னைப் பார்க்கிறான் என் மகன்.

January 09, 2009

நாகேஷ் வூடு கட்டி அடித்த 1968

எம்ஜியாரும் சிவாஜியும் தாதாவாக வலம் வந்து கொண்டிருந்த பேட்டையில், குண்டுராவ் என்ற பேரிருந்தும் நோஞ்சானாக இருந்த ஒருவர் இவர்களுக்கு சமமாக ஏன் ஒருபடி மேலேயே இந்த ஆண்டில் வூடு கட்டி அடித்தார். வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களில் நாயகியாய் நடித்து முடிசூடா ராணியாய் வலம் வந்தார் ஜெயலலிதா.

ஒளிவிளக்கு

எம் ஜி யாரின் 100வது படம். எஸ் எஸ் வாசனின் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பு. இயக்கம் டி பி சாணக்யா, இசை எம் எஸ் விஸ்வனாதன். சௌகார் ஜானகி, ஜெயலலிதா இணை. இதன் மூலப் படமான இந்தியில் சௌகாரின் வேடமான விதவையை திருமணம் செய்துகொள்வது போல் கதை அமைப்பு இருக்கும். ஆனால் இங்கு எம்ஜியாரின் இமேஜுக்கு ஏற்ப ஜெயலலிதாவுடன் இணையுமாறு கதை மாற்றப்பட்டது. திருடனான ஒருவன் நல்வழிப்படும் கதை. 1984ல் எம்ஜியார் உடல் நலம் குன்றி மரணப் படுக்கையில் இருந்தபோது தினமலர் பத்திரிக்கை இப்படத்தில் வரும் “இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு” பாடலை முதல் பக்கத்தில் பெரிய எழுத்துருவில் பிரசுரித்தது. இந்த பாடல் உடல்நலம் குன்றி இருக்கும் எம்ஜியார் நலம்பெற சௌகார் பாடுவதாக படத்தில் வரும். அதன்பின் சில மாதங்களுக்கு அந்த பாடல் கிட்டத்தட்ட மாநில கீதமாக மாறிப்போனது. பள்ளி பிரேயரில் கூட ஒருமுறை அப்பாடலைப் பாடி எம்ஜியார் நலம் பெற வேண்டிக் கொள்ளச் சொன்னார்கள். பள்ளிகளில் நடக்கும் மாறுவேட போட்டிகளில் நரிக்குறவர் வேடம் போடும் குழந்தைகளுக்கு ஆட்டோமேட்டிக் சாய்ஸ் “நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க”.

தில்லானா மோகனாம்பாள்

விடீயோ பார்க்கும் பழக்கம் அறிமுகமானபோது அதிகம் பேர் லைப்ரரியில் வாடகைக்கு எடுத்த படங்களில் முக்கியமான படம் (குடும்பத்தோடு பார்ப்பவர்கள்). ராஜ் வீடியோ விஷன் கூட ஒரு பேட்டியில் அதிகம் விற்பனையான தங்கள் கேசட்டுகளில் இது அதிகம் விற்பனையானது என்று சொல்லி இருக்கிறார்கள். பத்மினி திருமணத்துக்கு பின் நடித்த படம். நலந்தானா பாடல் படமாக்கப்படும் போது அவர் மூன்று மாதம். சிவாஜி,பத்மினி, பாலையா என ஒரு கூட்டமே கலக்கியிருந்தாலும், பெரிய மனிதர்களுக்கு மாமா வேலை பார்க்கும் கேரக்டரில் நாகேஷ் அசத்தியிருப்பார். மனோரமாவும் ஜில் ஜில் ரமாமணியாக கலக்கியிருப்பார். இயக்கம் ஏ பி நாகராஜன். இஅசி கே வி மஹாதேவன். இந்தப் படத்தின் பல காட்சிகள் பல இயக்குநர்களால் மாடிஃபை செய்யப்பட்டு படமாக்கப் பட்டன. கதையை வைத்துக் கொண்டு, களத்தை மட்டும் மாற்றி எடுக்கப்பட்ட கரகாட்டக்காரன் ஒரு உதாரணம்.

குடியிருந்த கோயில்

முன்பு கிராம திருவிழாக்களில் உபயதாரர்களால் நடத்தப்படும் பாட்டு கச்சேரிகளில் முதலில் பக்திப் பாடல்கள்,பின் லேட்டஸ்ட் ஹிட், தொடர்ந்து மெலடி பாடல்கள் என எல்லோரையும் திருப்திப் படுத்தும்படி பாடிக்கொண்டிருப்பார்கள். பின்னிரவில் மெலடியால் தாலாட்டப்பட்டு மக்கள் தூங்கிவிடுவார்களோ என குழுவினருக்கு தோன்றும் போது அவர்கள் நாகாஸ்திரமாக உபயோகிக்கும் பாடல் துள்ளுவதோ இளமை. (பிரம்மாஸ்திரம் ஒன்று இருக்கிறது). எம் எஸ் வி இசையமைத்த இந்தப் படத்தில் ஆடலுடன் பாடலைக் கேட்டு, என் விழியும் உன் வாளும் சந்தித்தால், பெண் கவிஞரான ரோஷனா பேகம் எழுதிய குங்குமப் பொட்டின் மங்களம் ஆகிய ஹிட் பாடல்களும் உண்டு. (இவர் தான் தமிழ் சினிமாவின் முதல் பெண் பாடலாசிரியர் என்றும் கூறுவர்- உறுதியாக தெரியவில்லை). இயக்கம் கே சங்கர். இணை -ஜெயலலிதா.

கலாட்டா கல்யாணம்

தங்க வேலுவின் மகளான ஜெயலலிதாவை காதலிக்கிறார் சிவாஜி. அவரோ தம் மூத்த பெண் மனோரமா உட்பட நான்கு பெண்களுக்கும் மாப்பிள்ளை பார்த்தால் தான் சம்மதிப்பேன் என்கிறார். மனோரமா ஆண்களை வெறுப்பவர். மற்ற இரண்டு பெண்களும் ஒவ்வோரு விதம். நண்பர் நாகேஷின் துணை கொண்டு வெற்றிபெறுகிறார் சிவாஜி. ஆரம்பம் முதல் முடிவு வரை சிரிக்க வைக்கும் இந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீதரின் உதவி இயக்குநரான சி வி ராஜேந்திரன். இதில் நாகேஷ்க்கு முதலில் ஒரு பெண்ணை சொல்வார் சிவாஜி. ஆனால் மனோரமாவுக்கு மாப்பிள்ளை கிடைப்பது கடினம் என்பதால் நாகேஷிடம் கெஞ்சி அவர் மனத்தை மாற்றி விடுவார். பின் மனோரமாவை சம்மதிக்க வைக்க இருவரும் போடும் நாடகங்கள் கலக்கலானவை.

மூன்றெழுத்து

ரவிசந்திரன், ஜெயலலிதா, நாகேஷ், அசோகன் நடித்த படம். ஒரு குடும்பத்துக்கு சொந்தமான செல்வம் அனைத்தும் ஒரு இடத்தில் புதைக்கப்பட்டு அது இருக்கும் இடம் ஒரு மேப்பில் வரையப் படுகிறது. பின் அது மூன்று துண்டுகளாக கிழிக்கப்பட்டு புதையல் இருக்கும் ஊரின் பெயரில் (கமுதி) ஒவ்வொரு எழுத்தும் ஒரு துண்டின் பின்னால் எழுதப்படுகிறது. இது மூன்று பேரிடம் ஒப்படைக்கப் படுகிறது, அதை கண்டுபிடிக்க ரவிசந்திரன் மேற்கொள்ளும் போராட்டமே படம். நல்ல நகைச்சுவையுடன் செல்லும் சஸ்பெண்ஸ் படம்.

ரகசிய போலிஸ் 115

இதிலும் எம்ஜியார்,ஜெயலலிதா,நாகேஷ். எம்ஜியார் ரகசிய போலிஸ் அதிகாரி. அசோகன், ஜெயலலிதா அண்ணன் தங்கை. இவர்களின் தந்தை ஒரு நாடகப் பைத்தியம். அசோகன் குற்றங்கள் புரியும் கூட்டத்தை சேர்ந்தவர். அந்த கூட்டத்தில் இருக்கும் ஒரு கலைகள் தெரிந்த ஒரு அழகு பெண்ணை அவர் காதலிப்பார். அந்தப் பெண் தன் குழுவில் இருக்க வேண்டும் என அசோகனின் தந்தை நினைப்பார். இதற்க்காக் அவர் நிறைய செலவழிப்பார். இந்த சிக்கல்களை தீர்க்க ஜெயலலிதா தன் காதலன் என எம்ஜியாரை அழைத்து வருவார். ஜெயலலிதாவின் திட்டம் அந்தப் பெண்ணை எம்ஜியார் காதலிப்பது போல் நடித்து இவர்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்பது. எம்ஜியார் உளவு பார்க்க வந்தவர். ஜெயலலிதாவின் தந்தைக்கோ எம்ஜியாரை கலைக்குழு நாயகனாக்க வேண்டும் என்பது. சுவராசியமாக செல்லும் இந்தப் படத்தில் யார் ஆசை நிறைவேறும்?. இந்தப் படத்தில் எம்ஜியாருக்கு ஜெயலலிதா காதலிக்க சொல்லிக் கொடுக்கும் காதல் காட்சியும் அதை தொடர்ந்து வரும் என்ன பொருத்தம் பாடலிலும் கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும்.

எதிர் நீச்சல்

மாடி வீட்டி மாதுவாக நாகேஷ் கலக்கிய படம். அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி அங்கு வேலை செய்து படிக்கும் மாது, அவனுக்கு துணைநிற்கும் நாயர் (முத்துராமன்), மேஜர் சுந்தர் ராஜன். ஒவ்வொரு முறை சாப்பாட்டுக்கும் ஒருவர் வீட்டு வாசலில் நிற்கும் அவலம், வாழ்க்கையில் ஏமாற்றம் வேண்டாம் என்பதற்க்காக ஒரு காதல் என நாகேஷ் பல பரிமாணங்களை காட்டியிருப்பார். பாலசந்தர் இயக்கம். அடுத்தாத்து அம்புஜத்தை, சேதி கேட்டோ, தாமரை கன்னங்கள், வெற்றி வேண்டுமா போன்ற அருமையான பாடல்களை தந்திருப்பார் இசையமைப்பாளர் வி குமார்.

உயர்ந்த மனிதன்

ஏவிஎம் தயாரிக்க கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சிவாஜி, வாணிஸ்ரீ, மேஜர்,அசோகன் நடித்த படம். சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன் நண்பர்கள். பின்னாளில் அவர்கள் சந்திக்கும்போது பாடும் பாடலான அந்த நாள் ஞாபகம் பாடல் இன்றும் பாடப்படுகிறது. காதலன் வராத ஏக்கத்தில் வாணிஸ்ரீ பாடும் நாளை இந்த வேளை பார்த்து வா நிலா பாடல் (பி சுசீலா) காதல் ஏக்கத்தில் பெண் பாடுவதாக தமிழில் வந்திருக்கும் பாடல்களில் மிக சிறப்பான ஒன்று. சத்ரியன் படத்தில் பானுப்ரியா பாடும் மாலையில் நான் மனதோடு போல சில பாடல்களே இந்த உணர்வில் வந்திருக்கின்றன.


தாமரை நெஞ்சம்

நாகேஷ் கலக்கிய இன்னொரு படம். தன் உடல்நிலை காரணமாக தாழ்வு மனப்பான்மை கொண்ட நாகேஷ், சரோஜா தேவியை காதலித்தும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். பாலசந்தர் இயக்கிய இந்தப் படம் பின்னால் வெளிவந்த பல தாழ்வு மனப்பான்மை – காதல் சொல்லாமை படங்களுக்கு முன்னோடி எனலாம். சரோஜா தேவியும் தன் வழக்கமான கொஞ்சல் பாணி இல்லாமல் (கோப்பால் – மிமிக்ரி ஞாபகப்படுத்திக் கொள்ளவும்) இயல்பாக பேசியிருப்பார்.

சோப்பு சீப்பு கண்ணாடி

அழகுப் பொருட்கள் விற்கும் விற்பனை பிரதிநிதியான நாகேஷ் ஒரு பூட்டிய வீட்டுக்குள் மாட்டிக் கொள்கிறார். பின் அவர் எப்படி வெளியேறுகிறார் இதுதான் கதை. இதை வைத்து மூன்று மணி நேரம் புகுந்து விளையாடியிருப்பார்கள். இடையில் ஒரு இளப் பெண் வேறு. உள்ளே மாட்டிக் கொண்டு வெளியேற துடிக்கும் நாகேஷின் கலாட்டக்களும், புலம்பல்களையும் மாவாக வைத்துக் கொண்டு, வெங்காயம் போட்டு, ரவை போட்டு, உருளைகிழங்கு போட்டு என பல படங்களில் பலர் ஸ்பெசல் தோசை சுட்டு நமக்கு பரிமாறி விட்டார்கள்.

இந்த ஆண்டில் நாகேஷ் ஏற்றது போல வெரைட்டியான ரோல்கள் ஒரு நடிகருக்கு ஒரே ஆண்டில் இனி கிடைக்குமா என்பது சந்தேகமே.

January 06, 2009

தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிர்வாகிகள்

தமிழ் சினிமாவில் கடினமான வேலைகளுள் ஒன்று தயாரிப்பு நிர்வாகி வேலை. அச்சாணியாக இருந்து தேரை திரையரங்கில் நிலை நிறுத்தும் வரை அவரது பணி ஓய்வில்லாமல் இருக்கும். ஒரு நல்ல தயாரிப்பு நிர்வாகியால் பட செலவை 20% வரை குறைக்கலாம் என்பதில் இருந்தே அவர்களின் முக்கியதுவத்தை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு தயாரிப்பு நிர்வாகியின் பணி என்ன?

ஒரே ஒரு நிமிடம் வரும் காட்சியை எடுத்துக் கொள்வோம். காலையில் கடற்கரையில் ஒரு பிணம் ஒதுங்கி இருக்கிறது. மக்கள் அதை வேடிக்கை பார்க்கிறார்கள். காவல்துறையினரும் வந்து பார்க்கிறார்கள். அவ்வளவுதான். எந்த ஹீரோ,ஹீரோயினும் இல்லை. இந்த காட்சி எடுக்க என்னென்ன முன் தயாரிப்புகள் தேவை?

1. கடற்கரையில் ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி

2. கேமரா உள்ளிட்ட அவுட்டோர் யூனிட் உபகரணங்களை வாடகைக்கு தரும் நிறுவனத்திடம் இருந்து ஏற்பாடு செய்தல்

3. காட்சிக்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்தல்

4.டைரெக்டர், கேமரா மேன் அவரது உதவியாளர்கள் படபிடிப்பு இடத்தை அடைய ஏற்பாடு செய்தல்

5. காவல்துறையினராக நடிப்பவருக்கான உடை, அவர்கள் வரும் போலிஸ் ஜீப் ஏற்பாடு

6. வரும் அனைவருக்கும் காலை சாப்பாடு

இது போல கண்ணுக்கு தெரியாத பல வேளைகளும் இருக்கும். தயாரிப்பாளரிடம் அன்று பணம் இல்லை என்றால் அதையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.

ஷங்கர் போன்றோர் படத்தில் பணிபுரிபவர்கள் என்றால். எடுத்துக்காட்டாக சிவாஜி படத்தின் பல்லேலக்கா பாடல் காட்சியை எடுத்துக் கொள்வோம்

1. ரஜினி, நயன் தாரா, ஷங்கர், கே வி ஆனந்த், தோட்டா தரணி, பிருந்தா மாஸ்டர் மற்றும் மேற்குறிப்பிட்ட அனைவரது உதவியாளர்களின் பயண் ஏற்பாடு,தங்குமிடம்
2. தொப்பையில் படம் வரைந்து ஆட வேண்டுமென்பதால் பெருந்தொப்பை கொண்டான்களின் ஏற்பாடு, பெயிண்ட், அனைவருக்கும் உணவு ஏற்பாடு.
3. அகேலா கிரேன், ஜிம்மி ஜிப் போன்ற நவீன கேமரா உபகரண ஏற்பாடு

யோசியுங்கள். இதை காஸ்ட் எபெக்டிவ்வாகவும் செய்ய வேண்டும். இத்தனை அம்சங்களும் அந்த இடத்தில், நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதுதான் தயாரிப்பு நிர்வாகியின் முதற்கட்ட பணி.

இம்மாதிரி சிறப்பாக திட்டமிட தெரிந்தால் மட்டும் போதுமா? வெறும் 24 காரட் தங்கத்தை வைத்து என்ன செய்ய முடியும்?. குயுக்தி என்னும் தாமிரம் கிடைத்தால் கலந்தால் தான் அணிகலனாக முடியும்.

1. மார்க்கட்டில் மாறிவரும் நடிக,நடிகையரின் மதிப்பை சரியாக கணித்து சம்பளம் பேச வேண்டும். நடிகையாக இருந்தால் யாரையும் காதலிக்கிறாரா? ஓடிவிடிடும் நிலையில் இருக்கிறாரா என்ற தகவல்கள் வரை தெரிந்திருக்க வேண்டும்.

2.எது எது எங்கே மலிவு?, வாடகை சிறந்ததா, வாங்குவது சிறந்ததா? உள் கமிஷன் அடிப்பவர்கள் யார்? எப்படி தவிர்க்க வேண்டும்?

3.நடிகையோ அவரது தாயாரோ பார்க் ஷெராட்டன் பட்டர் சிக்கன் தான் வேண்டும் என்பார்கள். முதல் தடவை வாங்கும் போது மட்டும் அங்கே வாங்கிவிட்டு கூடுதலாக நாலு பார்சல் கவர் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த முறை வேலுவிலோ, பொன்னுசாமியிலோ,அஞ்சப்பரிலோ, அரசப்பரிலோ வாங்கி ரீ பேக்கிங் செய்து கொடுத்துவிட வேண்டும்

4. மார்க்கட்டில் உள்ள காமெடி நடிகர்களை சமாளிப்பது சாமானியமானதல்ல. அவர்கள் டப்பிங் பண்ணும் வரை தெளிவாக தாங்க வேண்டும்.

இம்மாதிரி பல திறமைகள் தேவைப்படும் இந்த வேலை, தயாரிப்பாளராக மாறுவதற்க்கேற்ற பெரும் அனுபவத்தை கொடுக்கக் கூடியது. தற்போதுள்ள பல தயாரிப்பாளர்கள் முன்பு நிர்வாகியாய் இருந்தவர்களே. ஜெமினி கணேசன் தான் பார்த்து வந்த தாம்பரம் கிறித்துவக் கல்லூரி விரிவுரையாளர் பணியில் இருந்து தயாரிப்பு நிர்வாகியாய் ஜெமினி ஸ்டியோவில் சேர்ந்தார். பின்னர் அந்த ஸ்டியோவின் மாத சம்பள நடிகரானார். அந்நாளைய பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ஜெமினி,ஏவிஎம்,விஜயா வாகினி ஆகியவை தயாரிப்பு நிர்வாகத்துக்கு தங்களுக்கு வேண்டிய ஆட்களை மட்டுமே வைத்துக் கொன்டிருந்தன. ஏவிஎம் சரவணன் முதன் முதலாக தங்கள் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகி பணியைத்தான் பார்த்தார். ராஜ்கமல் பிலிம்ஸ்ல் இருந்த டி என் சுப்ரமணியம் திறமையாக பணியாற்றியவர். அவர் வயதின் காரணமாக ஓய்வு பெறும்போது தயாரிப்பாளர் அவருக்கு விழா எடுத்து ஓய்வு தொகையாக 10 லட்சம் அளித்தார்.


நிர்வாகியாய் இருந்து தயாரிப்பாளராய் மாறியவர்கள்

பிரமிட் நடராஜன்

இவர் கவிதாலயா நிறுவனத்தில் பணியாற்றிய போது கவிதாலயா நடராஜன் என அழைக்கப்பட்டார். அப்போது பிரமிட் ஆடியோ நிறுவனத்தை இவர் தொடங்கியதால் பிரமிட் நடராஜன் என அழைக்கப்பட்டார். பிரமிட் சாய்மீராவுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமை என்பது புதுகை அப்துல்லாவுக்கும், காஷ்மீர் ஓமர் அப்துல்லாவுக்கும் உள்ள ஒற்றுமை போன்றது. இவர் கவிதாலயாவில் இருந்து வெளியேறி அப்போது லைம்லைட்டில் இருந்த பிரபுதேவா,நக்மா ஆகியோரை வைத்து ரஹ்மான் இசையில் பி வாசு இயக்கத்தில் லவ்பேர்ட்ஸ் படத்தை தயாரித்தார். படம் படு தோல்வி. பின்னர் சங்கமம்,ரிதம் போன்ற படங்களை தயாரித்தார். அலைபாயுதேவில் நடிப்பில் கிடைத்த பெயரால் தற்போது குணசித்திர நடிகராக மாறிவிட்டார்.

பி எல் தேனப்பன்

ட்ரெயின் டிக்கட் புக் செய்து கொடுப்பவராக பணியை துவக்கி பின் சூப்பர் குட் பிலிம்ஸ், ரவிக்குமாரின் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாய் இருந்தவர். முத்து படத்தில் செந்தில் கேரக்டருக்கு இவர் பெயரை வைப்பது வரை அவர் மனதில் இடம் பிடித்தவர். கமலின் அபிமானத்துக்கும் உரியவர். பெப்ஸி பிரச்சினையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கமல் துவக்கிய காதலா காதலா படத்துக்கு இவரே தயாரிப்பாளர். பின்னர் மீடியா டிரீம்ஸ் தயாரித்த பம்மல் கே சம்பந்தம் இவர் பேனரில்தான் வெளியானது. திவான்,கனா கண்டேன்,பிரியசகி, வல்லவன், துரை ஆகிய படங்களை தயாரித்தார்.

எஸ் கே கிருஷ்ணகாந்த்

லஷ்மி மூவி மேக்கர்ஸ்ல் பணியாற்றிய இவர் இந்தியன் மூவி மேக்கர்ஸ் என்னும் நிறுவனத்தை துவக்கி கிங் போன்ற படங்களை தயாரித்தார். திருடா திருடி என்னும் படம் மூலம் பிரபலமானார். முதல் வார ஓட்டத்துக்ப்பின் என் எஸ் சி ஏரியாவில் அந்தப் பட உரிமை ஏலம் விடப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. சிம்புவின் வெற்றிப்படமான மன்மதனும் இவர் தயாரிப்பே

பாபு ராஜா

சூப்பர் குட் பிலிம்ஸ்ல் பணியாற்றிய இவர் பின்னர் சரத்குமார்,வடிவேல் ஆகியோரை வைத்து அரசு,சத்ரபதி போன்ற படங்களை தயாரித்தார்.

கிருஷ்ணமூர்த்தி

தவசி திரைப்படத்தில் வடிவேலுவிடம் ஒசாமா பின் லாடன் விலாசம் விசாரிக்கும் மனநிலை தவறியவராக வருவாரே அவர்தான் இவர். தற்போது ஒரு படத்தை தயாரித்து வருகிறார். புத்தாண்டு அன்று நடந்த நான் கடவுள் ஆடியோ வெளியீட்டு மேடையில் கூட ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது எவ்வளவு இயல்பான பிரமோஷனாக கருதப்படுகிறதோ அதுபோலவே நிர்வாகிகள் தயாரிப்பாளர் ஆவதும் கருதப்படுகிறது

January 05, 2009

ரஜினியை உச்சத்துக்கு கொண்டு போன 1980

1980 ஆண்டை ரஜினியின் ஆண்டு என சொல்லலாம். ரஜினி நடித்து ஏழு படங்கள் வந்தன, அதில் இரண்டு படங்கள் இன்றும் பலரால் சிலாகிக்கப் படுகின்றன. டி ராஜேந்தர் ஒரு தலை ராகம் மூலமும், வைரமுத்து நிழல்கள் மூலமாகவும் பாடலாசிரியராக அறிமுகமானார்கள். சில்க் ஸ்மிதா,மாதவி, விஜயசாந்தி,சுஹாசினி, எஸ் வி சேகர் ஆகியோர் தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டில் அறிமுகமானார்கள்.


அவன் அவள் அது


சிவசங்கரி எழுதிய ஒரு நாவலை தழுவி எடுத்த படம். சிவகுமார்,லட்சுமி தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் வாடகைத்தாயாக ஸ்ரீப்ரியாவை ஏற்பாடு செய்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. மூவருக்கும் இடையே மனப் போராட்டம் ஆரம்பிக்கிறது. இந்த படம் வெளியான காலகட்டத்தில் இது புது விஷயமாக இருந்ததால் பரபரப்பாக பேசப்பட்டது (நாவல் படிப்பவர்கள் மிக குறைவுதானே?).


எமனுக்கு எமன்


சிவாஜி கணேசன் நடித்த படம். எமலோகத்தை அடிப்படையாக கொண்ட கதை. ஆயுள் முடிவதற்க்கு முன்பே சிவாஜியை எமகிங்கரர்கள் தூக்கி வந்துவிட, உண்மை தெரிந்த சிவாஜி அடிக்கும் லூட்டியே கதை. இந்த படமே எஸ் வி சேகரின் காதுல பூ நாடகம், அதிசய பிறவி, தங்கமாமா, இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஆகிய படங்களுக்கு ஊற்றுக்கண். இந்த படம் ஒரு தெலுங்கு ரீமேக் என கேள்வி.


நிழல்கள்


தொடர்ந்து ஐந்து வெற்றி படங்களைக் கொடுத்த பாரதிராஜாவுக்கு முதல் வணிக ரீதியிலான தோல்விப்படம். இந்தப் படத்தின் கதை மணிவண்ணனுடையது. இந்த தோல்வி வெறியில் அவர் எழுதிய அடுத்த கதை தான் அலைகள் ஓய்வதில்லை. இது ஒரு பொன் மாலை பொழுது என்ற பாடலின் மூலம் வைரமுத்து பாடாலாசிரியராக அறிமுகமானார். ரவி இதில் அறிமுகமானதால் நிழல்கள் ரவி. ஒளிப்பதிவாளராக இருந்த (ராபர்ட்) ராஜசேகரும் இப்படத்தில் அறிமுகமானார். இப்படம் அப்போது முக்கிய பிரச்சினையாக இருந்த வேலை இல்லா திண்டாட்டத்தை அடிப்படை கருவாக கொண்ட படம். மறக்கமுடியமா மடை திறந்து பாடலை?

வறுமையின் நிறம் சிகப்பு

இதே கருவை கொண்ட இப்படமும் இந்த ஆண்டு வெளிவந்தது. நிழல்கள் கீழ் மத்திய தர வர்க்க (கதாநாயகன்)தளத்திலும், இப்படம் மேல் நடுத்தர வர்க்க தளத்திலும் வேலையின்மையால் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைத்தது. கமல்,ஸ்ரீதேவி,பூர்ணம் விஸ்வனாதன்,பிரதாப் போத்தன்,திலீப், எஸ் வி சேகர் (அறிமுகம்) ஆகியோரின் நடிப்பில் வந்த இந்தப்படம் வேலையின்மைக்கு மாற்றாக சுயதொழில் என்னும் தீர்வை சொன்னது. எம் எஸ் விஸ்வனாதன், கண்னதாசன் பாடல் வரிகளில் வந்த சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடல், கமல் ஸ்ரீதேவி கெமிஸ்டிரியால் இன்னும் அழகானது. அப்போதைய நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு கேள்விகளை செமத்தியாக கிண்டல் அடித்திருப்பார்கள் இந்தப் படத்தில்.


ஒரு கை ஓசை


பாக்யராஜ் தயாரித்து,இயக்கி ஊமையாக நடித்த படம். இதே ஆண்டில் இவர் இரண்டு பெண்களுக்கு கணவனாக நடித்த பாமா ருக்மணியும் வெளியானது. இதில் ஒரு மனைவியாக நடித்த பிரவீணாவையே இவர் திருமணம் செய்து கொண்டார். பிரவீணா தெலுங்கு பெண், அவருக்கு இவர் தமிழ் சொல்லிக் கொடுக்க போய் காதல் உருவாகி கல்யாணத்தில் முடிந்தது. உடல்நலமின்றி அவர் இறந்த பின் இரண்டாவதாக தன்னுடன் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த பூர்ணிமா ஜெயராமை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்

கமல்ஹாசன்


கமலின் 50ஆவது படமாக ஐ வி சசி இயக்கத்தில் வந்த குரு நல்ல வெற்றியைப் பெற்றது. ஸ்ரீதேவி ஜோடி. ரதி,தீபா உடன் இணைந்து நடித்த உல்லாச பறவைகள் சுமார் ரகமே. வறுமையின் நிறம் சிகப்பு வெற்றி. இந்த ஆண்டில் கமல் வைத்திருந்த தொங்கு மீசை பலரை கவர்ந்தது.

ரஜினிகாந்த்

அமிதாப் நடித்து வெற்றி பெற்ற டானை அப்போதைய ரீமேக் மன்னனான பாலாஜி, தமிழில் ரஜினியை வைத்து தயாரித்தார். இது ரஜினிக்கு 50 ஆவது படம். இயக்கம் கிருஷ்ணமூர்த்தி,இசை எம் எஸ் விஸ்வனாதன். இப்பட வெற்றிக்குப் பின் இயக்குனர் பில்லா கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்பட்டார். படத் தயாரிப்பில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த ஏவி எம், எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் தயாரித்த படம் முரட்டுக்காளை. அதுவரை கதாநாயகனாக இருந்த ஜெய்சங்கர் இப்படத்தின் மூலம் வில்லனாக டீபுரமோட் ஆனார். ரஜினி, தயாரிப்பு நிறுவனத்திடம் அவருக்கு தக்க மரியாதையை தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது அடிக்கப்பட்ட போஸ்டர்களில் இருவருக்கும் சம முக்கியத்துவம் தரப்பட்டது. இளையராஜா இசையமைத்து மலேசியா வாசுதேவன் பாடிய பொதுவாக எம்மனசு தங்கம் அப்பொதைய ரஜினி ரசிகர்களின் தேசிய கீதமாய் இருந்தது. எந்த பூவிலும் வாசமுண்டு, மாமே மச்சான், புது வண்ணங்கள் ஆகிய மெலடிகளும் மக்களை தாலாட்டின. ரதி,சுமலதா,சுருளிராஜன் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படம் இப்போது சுந்தர் சி, சினேகா நடிப்பில் ரீமேக் செய்யப் படுகிறது. இந்த இரண்டு படங்களும் ரஜினிக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்தன.

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி இருவேடத்தில் நடித்த ஜானி, இயல்பான நடிப்புக்காகவும், அருமையான பாடல்களுக்காகவும் நினைவு கூறப்படுகிறது. தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான அன்புக்கு நான் அடிமையும் நல்ல வெற்றிப் படமே. இதுதவிர பொல்லாதவன்,நான்போட்ட சவால்,காளி ஆகிய படங்களும் இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்தன.

புதுமுகங்கள்

மரோசரித்திராவில் நடித்திருந்தாலும் தமிழுக்கு புதிய தோரணங்கள் படத்தின் மூலம் இந்த ஆண்டில் அறிமுகமானார் மிஸ் இந்தியா போட்டியாளரான மாதவி. ரஜினி,கமல் ஆகியோருடன் பல படங்கள் நடித்து அமிதாப் வரை சென்றவர் பின் அமெரிக்காவில் செட்டிலானார். மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே மூலம் ஒளிப்பதிவு மாணவியான சுஹாசினி நாயகியானார். இந்தப் படத்தில் சரத்பாபு இவரின் அண்ணன். அப்போதே கொடுமைக்கார அண்னியாக நடித்தவர் மெட்டி ஒலி மாமியார் சாந்தி வில்லியம்ஸ். வண்டிச்சக்கரம் படத்தில் சில்க் என்னும் கேரக்டரில் அறிமுகமான ஸ்மிதா தமிழின் ஒப்பற்ற கவர்ச்சி நடிகையாய் பரிமளித்தார். பாரதி ராஜாவின் கல்லுக்குள் ஈரம் மூலம் அறிமுகமான விஜயசாந்தி பின்னாளில் நெஞ்சில் ஈரம் இல்லாத பல தெலுங்கு வில்லன்களை புரட்டியெடுத்தார். பேசாமலே காதல் என்று காதலுக்கு புது பரிமாணத்தையும், மறக்க முடியா பாடல்களையும் கொடுத்து ஒரு தலை ராகத்தின் மூலம் அறிமுகமானார் டி ராஜேந்தர்.

ஜம்பு

வினியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையான இந்த படம் ஜெய்சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம் எனலாம். கர்ணன் இயக்கம், மாரா வசனம், சங்கர் கணேஷ் இசை, நாயகி – ஜெயமாலா. அவரது திரையுலக வாழ்க்கையில் இந்தப் படத்தை அவர் தவிர்த்திருக்கலாம் என்று நான் பலமுறை எண்ணியதுண்டு. அதற்குமுன் கர்ணனின் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் இந்தப் படம் அளவிற்க்கு கவர்ச்சி/ஆபாச காட்சிகள் அவற்றில் இல்லை.

இந்த ஆண்டு இளையராஜா, எம் எஸ் விஸ்வனாதன், டி ராஜேந்தர் ஆகியோர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வந்தன. பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரதாப் போத்தன்,ஷோபா நடித்த மூடுபனி படத்தில் வரும் என் இனிய பொன் நிலாவே மற்றும் கரும்புவில் படத்தில் வரும் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் என்று படத்துக்கு ஒரு பாடல் எடுத்து, தொகுத்து கேளுங்கள். வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.

January 04, 2009

1986ல் ரஜினி, கமலை மிஞ்சிய விஜயகாந்த்

தமிழ்சினிமா ரசிகர்கள் எதை ரசிப்பார்கள் என்று எல்லோர் சிண்டையும் பிய்க்கவைத்த ஆண்டு இது என கூறலாம். எல்லாவகை படங்களும் வெற்றியும் அடைந்தன. தோல்வியும் அடைந்தன. இந்த ஆண்டில் ரஜினி,கமலைவிட விஜயகாந்தின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது எனலாம். திரைப்பட கல்லூரி மாணவர்களின் வருகை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கிராமராஜனாக கொடிகட்டிப் பறந்த ராமராஜன் நாயகனாக அறிமுகமானது, சத்யராஜுக்கு கிடைத்த ஹீரோ அந்தஸ்து, கார்த்திக்கின் புது வாழ்வு, லோ பட்ஜெட் படங்களை ஊக்கப்படுத்திய சம்சாரம் அது மின்சாரத்தின் வெற்றி என பலதரப்பட்ட ரசனை வெளிப்பட்ட ஆண்டு இது.

சம்சாரம் அது மின்சாரம்

ஏவிஎம் தயாரிப்பில், விசு இயக்கத்தில் அவரது ஆஸ்தான நடிகர்களை வைத்து 13 லட்சத்தில் (பிரிண்டிங்,விளம்பரம் உட்பட) எடுக்கப்பட்ட படம். பெரு வெற்றியடைந்து சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான குடியரசுதலைவர் தங்கப்பதக்கத்தையும் வாங்கி வந்தது. இந்தப்படத்துக்காக ஏவிஎம்மில் போடப்பட்ட செட் சம்சாரம் அது மின்சாரம் செட் என பெயர்பெற்று பட செலவை விட அதிக வருவாயை பெற்றுத்தந்தது. இப்பட வெற்றி திருமதி ஒரு வெகுமதி, காவலன் அவன் கோவலன் என பல லோ பட்ஜெட் படங்களுக்கும் காரணமானது.

பாலைவன ரோஜாக்கள்

கலைஞர் கருணாநிதி பல ஆண்டுகளுக்குப் பின் வசனம் எழுதிய படம். சத்யராஜ்,பிரபு,லட்சுமி,நளினி நடிப்பில் வெளியான இப்படம் அப்போதைய எம்ஜியார் ஆட்சி பற்றிய விமர்சனத்தை மறைமுகமாக வைத்தது.

மைதிலி என்னை காதலி

கலாஷேத்ராவில் நடனம் பழகிக் கொண்டிருந்த அமலாவை நாயகியாக அறிமுகப்படுத்திய படம். டி ராஜேந்தர் கிட்டத்தட்ட கதாநாயகனாக நடித்த முதல் படம். இப்படத்தில் காதல் தோல்வியில் டிஆர் பாடும் காம்பு, பூ உவமையை விக்ரமன் தன் பூவே உனக்காக படத்துக்கு சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார். என்னாசை மைதிலியே பாடல் சிம்பு யுவன் கூட்டனியால் பின்னர் மன்மதனுக்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டது.

நம்ம ஊரு நல்ல ஊரு

இப்படத்தின் இயக்குனர் வி அழகப்பன். இவர்கள் இந்தப் படத்திற்க்காக கதை விவாதம் செய்து வந்த அலுவலகம் பாரதிராஜாவின் வீட்டிற்க்கு எதிரில் அமைந்திருந்தது. அந்த அலுவகத்திற்க்கு வந்து போய்க் கொண்டிருந்த ராமராஜனை பாரதிராஜா கவனித்து வந்திருந்தார். ஒருமுறை அழகப்பன் பாரதிராஜவிடம் பேசும்போது தன் கதையைச் சொல்லி நாயகன் கிடைக்கவில்லை என்க, ஏன் வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்டு ஒரு ஆள் வந்து போறாரே அவர் இந்த கதைக்கு சரியாயிருப்பார் என்று சொல்ல அப்படி கதாநாயகனானவர்தான் ராமராஜன்.

ரஜினிகாந்த்

இந்த ஆண்டு ரஜினிக்கு சொல்லிக்கொள்ளும் படியான ஆண்டாக அமையவில்லை. நான் அடிமை இல்லை,மிஸ்டர் பாரத், விடுதலை, மாவீரன் என எல்லாப் படங்களுமே இந்தி ரீமேக். எதுவும் பெரிய வெற்றி பெறவில்லை. மிஸ்டர் பாரத்,விடுதலை ஆகியவை முதலுக்கு மோசமில்லாமல் ஓடின.

கமல்ஹாசன்

ஸ்ரீதர் இயக்கத்தில் பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த நானும் ஒரு தொழிலாளி, ராஜசேகர் இயக்கத்தில் ஒரு கோடியில் கண்ட கனவான விக்ரம் ஆகியவை தோல்வி அடைந்தன. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான புன்னகை மன்னன் மட்டும் வெற்றி பெற்று கமலை காப்பாற்றியது. இந்த படத்தின் இசையில் ரகுமானும் பங்கு பெற்றிருந்தார். (கமல் ரேவதி ஆடும் மியூசிகல் பிட்). அடுத்த அபூர்வசகோதரர்களில் போட்ட குள்ள வேடத்துக்கு இதில் ஒரு ஒத்திகையும் பார்த்திருப்பார்.

விஜயகாந்த்

இந்த ஆண்டு விஜயகாந்துக்கு நல்ல அறுவடை. திரைப்பட கல்லூரி மாணவர்களின் தயாரிப்பு,இயக்கத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்த ஊமைவிழிகள் நன்கு பேசப்பட்டது. ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் பாடகராக அம்மன் கோவில் கிழக்காலே, எட்டுகுழந்தைகளுக்கு அப்பாவாக தழுவாத கைகள், ஆர் சி சக்தி இயக்கத்தில் கேமராமேனாக மனக்கணக்கு (இதில் இயக்குநராக கமல் கௌரவ வேடம்). சங்கிலி முருகன் தயாரிப்பில் கரிமேடு கருவாயன் என பலதரப் பட்ட வேடங்கள், வெற்றிகள்.

கார்த்திக்

மணிரத்னம் இயக்கத்தில் மௌனராகம், ராதாரவியுடன் இணைந்து நடித்த நட்பு ஆகியவை கார்த்திக்குக்கு நட்சத்திர அந்தஸ்தை தந்தன. தர்மபத்தினி என்ற படத்திலும் நடித்தார்.

சத்யராஜ்

சத்யராஜுக்கும் இந்த ஆண்டு ஏற்றம் தந்த ஆண்டு. மணிவண்னன் இயக்கத்தில் முதல் வசந்தம், விடிஞ்சா கல்யாணம் ஆகிய படங்களில் நல்ல வேடம். பாரதிராஜா இயக்கத்தில் கடலோர கவிதைகள், கலைஞர் வசனத்தில் பாலைவன ரோஜாக்கள், பாலு ஆனந்த்தின் ரசிகன் ஒரு ரசிகை (ஏழிசை கீதமே), மந்திரப்புன்னகை என வில்லனில் இருந்து கதை நாயகனாக பின்னர் கதானாயகனாக பிரமோஷன்.

பிரபு

இவரது அண்ணன் ராம்குமார் இவர் நாயகனாக நடித்த அறுவடை நாள் படம் மூலம் இந்த ஆண்டு அறிமுகமானார். பாலைவன ரோஜாக்களில் இவர் நடிப்பு பேசப்பட்டது.

மோகன்

உயிரே உனக்காக, மெல்லத் திறந்தது கதவு போன்ற பாடல்,நகைச்சுவையால் வெற்றியடைந்த படங்களில் நடித்தார்.

இந்த ஆண்டுக்கு பின்னரே சூப்பர் செவன் என்னும் சொல் வினியோகஸ்தர்களிடம் புழக்கத்துக்கு வந்தது. அதாவது வணிக மதிப்புள்ள ஏழு கதாநாயகர்கள். இவர்களின் பட விற்பனையில் ஏதும் பிரச்சினை இருக்காது. இதில் அடுத்த ஆண்டிலேயே மோகன் போய் ராமராஜன் வந்தார். பின்னர் அந்த இடத்துக்கு சரத்குமார் வந்தார். பிரபுதேவா,அர்விந்த் சுவாமி ஆகியோரும் உள்ளே வந்து பின்னர் விரைவில் வெளியேறினர். சத்யராஜ்,கார்த்திக்,பிரபுவும் சென்றுவிட விஜய்,அஜீத்,விக்ரம், சூர்யா,விஷால் வந்தனர். இப்போது விஜயகாந்த்,சரத்குமாரும் இந்த லிஸ்டில் இல்லை. கமலும் ரஜினியும் மட்டும் அதில் இருந்து இறங்காமல் இருக்கிறார்கள். தனுஷ்,சிம்பு,விஷால் ஆகியோர் இப்போது அந்த ஏழாவது இடத்துக்கான போட்டியில் உள்ளார்கள்.

இந்த (1986) கால கட்டத்தில் இரண்டு வகையான பட்ஜெட்டும் (நல்ல மற்றும் குறைந்த), நான்கு வகையான பட ஓட்டங்களும் இருந்தன.

100 நாள் மற்றும் அதற்க்கும் மேல்
50 நாள்
நான்கு வாரம்
தோல்விப் படம்

நல்ல பட்ஜெட் படம் 50 நாள் ஓடினாலே லாபம். நாலு வாரம் ஓடினால் தலை தப்பிவிடும். லோ பட்ஜெட் படம் 50 நாள் ஓடினாலே நல்ல லாபம் கிடைக்கும். முதல் வசந்தம்.விடிஞ்சா கல்யாணம் போன்ற படங்கள் 50 நாள் ஓடினாலே வெற்றி பெற்றவையாக கருதப்பட்டன. இப்போதோ வெற்றிப் படம் அல்லது தோல்விப்படம் என்ற இரண்டே கேட்டகிரிதான் உள்ளன. கார்பொரேட் கம்பெனிகள் எல்லாவகை படங்களுக்கும் ஒரே மாதிரி திட்டமிடுவதால் (ஓவர் ஹெட், விளம்பரம் மாதிரி) அவற்றுக்கு ஏற்ப லாபம் கிடைப்பதில்லை.

1985 ல் தமிழ்சினிமா – ஒரு பார்வை

1985 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவுக்கு பல புதுவரவுகளை தந்தது. மணிரத்னம் பகல்நிலவு படம் மூலம் தமிழில் தன் முதல் படத்தை இயக்கினார். கல்யாண அகதிகள் மூலம் நாசர் என்னும் அற்புத நடிகர் அறிமுகமானார். கன்னிராசி படத்தின் மூலம் இயக்குனராக பாண்டியராஜன், பூவே பூச்சூடவா படத்தின் மூலம் நதியா, தென்றலே என்னைத் தொடு மூலம் ஜெயஸ்ரீ, ஆண்பாவம் மூலம் சீதா என 1985 பல முகங்களை தமிழுக்கு தந்தது. சாவி என்னும் படத்தின் மூலம் அதுவரை வில்லனாக திறமை காட்டிகொண்டு இருந்த சத்யராஜ் நாயகனாக (எதிர்மறை பாத்திரம்) பதவி உயர்வு பெற்றார். சிறந்த இசை, பாடகி, நடிகைக்கான தேசிய விருதை சிந்து பைரவியும், பாடலாசிரியருக்கான விருதை முதல் மரியாதையும் தமிழுக்குப் பெற்றுத் தந்தன. இந்த ஆண்டு வெளியான சில படங்களைப் பற்றியும், சில நட்சத்திரங்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருந்தது என்பதனைப் பற்றியும் ஒரு பார்வை.

முதல் மரியாதை
சிறந்த நடிகர்,இயக்குனர்,இசை அமைப்பாளர்,பாடலாசிரியர் கூட்டணி அமைத்தால் ஆண்டின் சிறந்த படமென்ற முதல் மரியாதை கிடைக்காதா என்ன?. நவ நாகரீக மங்கையாக பாரதிராஜாவால் சிகப்பு ரோஜாக்களில் (1978) அறிமுகப்படுத்தப்பட்ட வடிவுக்கரசி, இந்தப்படத்தில் சிவாஜிக்கு இணையாக வயதான கேரக்டரில் நடிக்க வைக்கப்பட்டார். அதுவரை தமிழ்சினிமா காணாத பாத்திரப் படைப்பு அது. கவர்ச்சி பதுமையாக பலரின் கனவுகளை ஆண்டு கொண்டிருந்த ராதாவுக்கும் கனமாண பாத்திரம். ரஞ்சனி அறிமுகம். அவருடன் அறிமுகமானவர் தீபன். 87ல் எம்ஜியார் இறந்தபோது, ஜெயலலிதாவை எம்ஜியார் இருந்த வண்டியில் இருந்து தள்ளி இறக்கிவிட்டதால் புகழ் அடைந்தார். இவர் ஜானகியின் உறவினர் என்று கூறுவர். அந்த காரணத்தாலேயே 89ல் ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னத்தில் ஓட்டுகேட்டு தமிழகத்தை வலம் வந்தார். திருவையாரில் நின்ற சிவாஜிக்கு “என் மாமாவுக்கு ஓட்டு போடுங்கள்” என்று கேட்டாரா என்று தெரியவில்லை. வீராச்சாமி இப்படத்தில் பேசிய எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி இன்னும் நண்பர்கள் வட்டாரத்தில் யாராவது பீலா விடும்போது உபயோகப் படுத்தப் படுகிறது. ஐந்து நிமிட கேரக்டர் சத்யராஜுக்கு. ஒண்டேயில் 400 ரன்னை சேஸ் பண்ணும் அணியில் பெரிய ஆள் எல்லாம் 50,100 என்று அடிக்க கடைசி ஓவரில் 20 ரன் தேவைப்பட்டு 10 ஆவது ஆட்டக்காரர் அதை அடித்தால் எப்படி மறக்கப்படாமல் இருப்பாரோ அப்படிப்பட்ட அதகளத்தை பண்னியிருப்பார் சத்யராஜ். இதுவே அவருக்கு பின்னளில் கடலோர கவிதைகள்,வேதம் புதிது கிடைக்க காரணமாய் இருந்திருக்கலாம். இந்தப் படத்தில் கம்பெனி பாடல் கேசட்டில் வைரமுத்துவின் உரை இடம்பிடித்திருக்கும். பொதுவாக கேசட் பதிபவர்கள் இம்மாதிரி முற்சேர்க்கைகளை தவிர்ப்பார்கள். ஆனால் வாடிக்கையாளர்கள் அதையும் சேர்த்து பதிஞ்சு கொடுனங்கண்ணே என்று கேட்கும் அளவுக்கு அசத்தலாக இருந்தது அது. தில்,பேட்டா,ராஜா ஆகிய படங்களை இயக்கிய இந்திரகுமார், அமிதாப் சிறு இடைவேளைக்குப் பின் இந்திப் படங்களில் நடிக்க தொடங்கியபோது இக்கதையின் சாயலில் அமிதாப்,மாதுரி நடிக்க ஒரு படத்தை இயக்க நினைத்து வேலைகளை தொடங்கினார். ஆனால் அது நடக்கவில்லை.

பூவே பூச்சூடவா

பாசில் அமெரிக்காவில் இருந்த பத்மினியை வற்புறுத்தி அழைத்து வந்து நடிக்க வைத்த படம். நதியா வளையல்,பொட்டு,ஹேர்பின் என புது பிராண்டுகளை சிறு வணிகர்கள் உருவாக்க உதவிய படம். எஸ் வி சேகர் நாந்தான் நதியாவின் முதல் ஹீரோ என பெருமைஅடித்துக் கொள்ள உதவிய படம். சித்ராவுக்கு சின்னக்குயில் சித்ரா என பட்டம் வழங்கிய படம். தூர்தர்ஷனுக்கு தீபாவளியின் போது போட ஒரு பாட்டை வழங்கிய படம். பாசிலுக்கு தமிழில் ஒரு இடம் கிடைக்க காரணமாய் இருப்த படம்.

ஆண்பாவம்

கன்னிராசியில் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜன் வாமனன் அவதாரம் எடுத்த கதையாக விஸ்வரூபம் எடுத்த படம். அவரது குருநாதர் பாக்கியராஜின் தாவணிகனவுகள், சின்னவீடு ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெறாத நிலையில் இப்படம் பெருவெற்றியைப் பெற்றது. கல்கி பத்திரிக்கை ஒரு கார்ட்டூனில் பாக்யராஜ் மிக்சியில் அரைப்பது போலவும், பாண்டியராஜன் அம்மியில் அரைப்பது போலவும் போட்டு பாராட்டியது. இப்பட வெற்றியினால் பாண்டியராஜனுக்கு இதை ஜூஹிசாவ்லாவை வைத்து இந்தியில் [சச்சா பியார்] எடுக்கும் வாய்ப்பு கிட்டியது. பல நாட்கள் தயாரிப்பில் இருந்த அந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. பாண்டியராஜன் இப்படத்தில் நடிகராகவும் அறியப்பட்டு நடிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில் மணிரத்னத்திடம் படம் இயக்க கேட்டு ஒரு தயாரிப்பாளர் வந்தார். இதயகோவில் தோல்வி அடைந்திருந்த நேரம் அது. மணிரத்னத்துக்கு ஆச்சரியம். காரணத்தை தயாரிப்பாளர் சொன்னார். நான் பாண்டியராஜனிடம் நடிக்க கால்ஷீட் கேட்டுப் போனேன். அவர் நீங்க இயக்குரதா இருந்தா நடிக்கிறேன்னார் என்றார். ஆனால் அது கைகூடவில்லை.

சிந்துபைரவி

தமிழுக்கு பல தேசிய விருதுகளை பெற்றுத்தந்த படம். தன் ரசனைக்கு மனைவி அமையாததால் இன்னொரு பெண்ணிடம் அதை தேடும் கர்னாடக சங்கீத வித்துவானின் கதை. பெண்ணிய நோக்கில் இப்படம் இப்போது கடுமையாக விமர்சிக்கப் படுகிறது.

யார்
அதுவரை வினியோகஸ்தரர் களாயிருந்த தாணு,சேகரன் ஆகியோர் கலைப்புலி பேனரில் தயாரித்த படம். அர்ஜூன்,நளினி,செந்தில், அழிவு சக்தியாய் ஒரு புதுமுகம் நடித்த சைத்தான் – சாமி - திரில்லர் படம். இப்படம் இயக்கிய கண்ணன் பின்னாட்களில் யார் கண்ணன் என அறியப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பின் தமிழில் வந்த நல்ல க்ரிப்பான திரில்லர் படன் என்பதால் நன்கு ஓடியது.

மண்ணுக்கேத்த பொண்ணு

பி சி செண்டர்களில் இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. பாண்டியன், இளவரசி,நளினி நடித்த இப்படத்தின் இயக்குனர் ராமராஜன். இந்த படம் ராமராஜன் நளினி திருமணத்துக்கு மிக உதவிய படம். கவுண்டமணி,செந்தில்,கோவை சரளாவின் காமெடியும், இளையராஜவின் இசையும் வெற்றிக்கு உதவியது.

இந்தியில் இருந்து

கோவிந்த் நிகாலனி இயக்கி ஓம்பூரி நடிப்பில் வெளியாகி பெரும் பாராட்டுப் பெற்ற அர்த் சத்யா இங்கே தியாகராஜன் நடிப்பில் காவல் என்ற பெயரில் வந்தது. நல்ல முயற்சி. மிதுன் சக்கர வர்த்தி நடித்து வெற்றிபெற்ற டிஸ்கோ டான்ஸர் பாடும் வானம் பாடி என்ற பெயரில் ஆனந்த்பாபு,நாகேஷ்,ராஜிவ் நடிக்க பப்பிலஹரியின் இசையில் வெளிவந்து சுமாராக ஓடியது.

3டி படங்கள்
விஜயகாந்த் நடித்த அன்னைபூமி, நம்பியார் நடித்த தங்கமாமா


கமல்ஹாசன்

கமலின் நடிப்பில் அந்த ஒரு நிமிடம், உயர்ந்த உள்ளம், மங்கம்மா சபதம், ஜப்பானில் கல்யாணராமன் ஆகிய தோல்விப்படங்களும் ஒரு கைதியின் டைரி, காக்கிசட்டை ஆகிய வெற்றிப்படங்களும் வெளிவந்தன.

ரஜினிகாந்த்

பாலு மகேந்திரா இயக்கத்தில் உன் கண்ணில் நீர் வழிந்தால், 100ஆவது படமான ராகவேந்திரர் ஆகியவை தோல்வியையும், சிவாஜியுடன் இணைந்து நடித்த படிக்காதவன், எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடித்த நான் சிகப்பு மனிதன் ஆகியவை வெற்றியையும் பெற்றன.

விஜயகாந்த்

அன்னைபூமி,தண்டனை, அமுதகானம், ஈட்டி (50 வது படம்), நானே ராஜா நானே மந்திரி, சந்திரசேகர் இயக்கத்தில் நீதியின் மறுபக்கம் (மாலைக் கருக்கலில் சோலை இளங்குயில்) ஆகிய படங்களில் நடித்தார். கடைசி இரண்டு படங்கள் தப்பித்தன.

மோகன்
மணிரத்னம் இயக்கிய இதயகோயில் சுமார் ரகம் என்றாலும், ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய குங்குமசிமிழ், ரங்கராஜன் இயக்கிய உதயகீதம், ஸ்ரீதர் இயக்கிய தென்றலே என்னைத் தொடு ஆகியவை வெற்றி பெற்றன. மனோபாலா இயக்கத்தில் நடித்த பிள்ளை நிலா ஓரளவு ஓடியது.

கார்த்திக்
அலைகள் ஓய்வதில்லையில் பெரிய ரீச் அடைந்தாலும், வயது மற்றும் தோற்றம் காரணமாக நல்ல கேரக்டர்கள் கிடைக்காமல் விசு,கர்ணன் போன்றோரிடம் அடைக்கலம் புகுந்திருந்தார். அவள் சுமங்கலிதான் என்ற இந்த ஆண்டு வெளிவந்த படத்தில் சாவை நோக்கி செல்லும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்து தன்னை வெளிக்காட்டினார். 83-85 இவருக்கு சோதனையான கால கட்டம். 86ல் மௌனராகம் எல்லாவற்ரையும் மாற்றிவிட்டது.


பிரபு
கன்னிராசி,அடுத்தாத்து ஆல்பட் என சொற்ப படங்களே.

அறிமுக இயக்குனர்கள்

நானே ராஜா நானே மந்திரி மூலம் வித்தியாசமான வேடத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்து பாலு ஆனந்த் இயக்குனராக அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை மூலம் பிரதாப் போத்தன் இயக்குனராகவும், பின்னர் ராதிகாவின் கணவராகவும், அதன்பின் முன்னால் கணவராகவும் பதவி உயர்வு பெற்றார்.விஜயசிங்கம் கவுண்டமணியை நாயகனாக்கி பணம் பத்தும் செய்யும் என்ற காம்ச்டிப் படத்தை இயக்கினார். ராம நாராயனின் உதவியாளர் சோழராஜன் நாகம் என்னும் படத்தை இயக்கி வெற்றிபெற்றார். மனோபாலா, பிள்ளை நிலா மூலம் இயக்குனரானார்.

.

இப்படி 85ல் எத்தனை படங்கள் வந்திருந்தாலும், இதில் எதை ரீ ரிலிஸ் பண்ணினாலும் படம் ஒடாது. ஆனால் ஒரு படம் மட்டும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகி கல்லா கட்டி வருகிறது சி செண்டர்களில். அதுதான் மாதவி இரு வேடத்தில் நடித்த ஜான்ஸி. டாக்டர் ராஜ சேகர் எதிர் நாயகனாக நடிக்க கர்ணன் இயக்கிய படம். சன் தொலைக்காட்சி மிட்னைட் மசாலா தொடங்கிய போது இப்படத்தின் பாடல் ஒன்று தொடர்ந்து இடம் பெற்று வாலிப வயோதிக அன்பர்களை குஷிப்படுத்தியது.

கதாநாயகர்களின் சில படங்கள் ஓடினாலும் பல படங்கள் சொதப்பின. ஆனால் ஒரு கதாநாயகன் மட்டும் வெற்றியை மட்டுமே தந்தார். அவர்தான் இளையராஜா.

முதல் மரியாதை,சிந்து பைரவி. இதயகோயில், பகல்நிலவு ,கீதாஞ்சலி, உதய கீதம் (300 வது படம்), குங்கும சிமிழ், தென்றலே என்னை தொடு, ஒரு கைதியின் டைரி,ஆண்பாவம்,பூவே பூச்சூடவா போதுமா, இல்லை?