December 21, 2009

பாரபட்சம் காட்டும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்

25 வருடங்களுக்கு முன்னால் பெரிய நடிகர்களின் படமோ, பெரிய தயாரிப்பாளர்களின் படங்களோ வரும் போது நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது பூஜையில் இருந்தே ஆரம்பிக்கும். டீக்கடைகள், சலூன் ஆகியவற்றில், தங்கள் அபிமான நடிகர் நடித்த படமெனில் இந்தப் பக்கங்களை கிழித்து ஒட்டி வைத்திருப்பார்கள்.

கலைப்புலி தாணு, டி ராஜேந்தர் ஆகியோர் இப்படி விளம்பரம் பண்ணுவதில் சமர்த்தர்கள். அதுவும் டி ஆர் தினமும் ஒரு அடுக்கு மொழி வசனத்துடன் விளம்பரப்படுத்துவார்.

90களில் பல படங்கள் தோல்வியடைந்து தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்த போது திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு கூட்டம் போட்டனர். அதன் நோக்கம், தயாரிப்புச் செலவைக் குறைப்பது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்று நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கக்கூடாது என்பது.

அதன்படி கால் பக்க அளவுக்கே நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 60 கோடியில் தயாரான தசாவதாரமாக இருந்தாலும் சரி. மூன்று கோடியில் உருவான சுப்பிரமணியபுரமாக இருந்தாலும் ஒரே அளவில் தான் விளம்பரம் செய்யவேண்டும் என்பது விதி. மீறுபவர்களுக்கு ரெட் கார்டு போடப்படும்.

ஆனால் இப்போது நடப்பது என்ன? நாளிதழ்கள் படிப்பவர்களை விட தொலைக்காட்சி பார்ப்போர் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் கால் மணி நேரத்துக்கு ஒருமுறை பட விளம்பரம் வெளியே வருகிறது. சன் தொலைக்காட்சியினர் தாங்கள் தயாரிக்கும்/வினியோகிக்கும் படங்களுக்கு இவ்வாறு அதிக விளம்பரம் செய்கிறார்கள்.

இந்த விளம்பரத் தொகையை கணக்குப் பார்த்தால்?

பிரைம் டைம் மற்றும் சாதாரண நேரங்களில் சன் டிவி அந்தக் குறிப்பிட்ட வினாடிகளுக்கு வசூலிக்கும் தொகை எவ்வளவு? தினமும் எவ்வளவு நேரம் ஒளிபரப்பாகிறது? எத்தனை நாட்களுக்கு ஒளிபரப்பாகிறது? என்று பார்த்தால் மொத்த விளம்பரத் தொகை கோடிகளை தாண்டும் என்பது சர்வ நிச்சயம்.

இது எந்தக் கணக்கில் வருகிறது? சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிப்பவர்கள் இதைச் செய்ய முடியுமா? அரைப்பக்க அளவு தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்தால் ரெட் காடு போடுபவர்கள் இப்போது எங்கே போனார்கள்?

அய்யா உங்களுக்கு சன் டிவியை கண்டிக்க முடியவில்லையா? பரவாயில்லை. இந்த விளம்பர கட்டுப்பாட்டையாவது நீக்குங்கள். மல்டிப்லெக்ஸ் ஆடியன்ஸ்க்கு படமெடுப்பவர்கள் ஆங்கில தினசரிகளில் முழுப்பக்க விளம்பரம் செய்து தங்கள் படத்தைக் கொண்டு சேர்க்கட்டும். ஜனரஞ்சக படமெடுப்பவர்கள் முழுப் பக்கம் தினத்தந்தியில் விளம்பரம் செய்து கொள்வார்களே? எல்லோரும் வாழ வாய்ப்புக் கொடுங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் படித்த ஒரு கதை ஞாபகம் வருகிறது

இரண்டு நண்பர்கள். திரையரங்குக்கு சென்றிருப்பார்கள். அரசியல்வாதியின் உறவினன் ஒருவன் சிகரெட் குடித்துக் கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருப்பான். பின்னால் உட்கார்ந்திருக்கும் இவர்கள் சிகரெட் புகையாலும் சத்தத்தாலும் அவதிப்படுவார்கள். அடுத்த முறை செல்லும் போது அங்கே ஒரு ஏழை பீடி பிடித்துக் கொண்டிருப்பான். நண்பர்களில் ஒருவன் அவனை கண்டிக்க எந்தரிப்பான். அப்போது இன்னொருவன் சொல்லுவான், சென்ற முறை அவன் செய்த தப்பைத்தானே இவனும் செய்கிறான். அவனை தட்டிக்கேட்காத நமக்கு இவனை தட்டிக்கேட்க மட்டும் என்ன தார்மீக உரிமை இருக்கிறது? என்று.

இதே கதை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பொருந்தும்தானே?

December 14, 2009

இந்திய ஆல் டைம் டெஸ்ட் கிரிக்கெட் அணி - வேகப்பந்து வீச்சாளர்கள்

முதல் பகுதி

இரண்டாம் பகுதி



நேற்றுதான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர் ஆனாலும் சரி நாற்பது ஆண்டுகளாக கிரிக்கெட் பார்ப்பவர்களாய் இருந்தாலும் சரி, மைதானத்தில் நடக்கும் இரண்டே விஷயங்களுக்குத்தான் அவர்களை மீறிய ஆஹாகாரம் வெளிப்படும். ஒன்று பேட்ஸ்மென் அடிக்கும் அடியில் பந்து மைதானத்தை தாண்டி பறக்கும் போது மற்றொன்று பேட்ஸ்மென்னின் மிடில் ஸ்டெம்ப் விக்கெட் கீப்பரைத் தாண்டி பறக்கும் போது.

நம் நாட்டில் முதல் சாகஸத்தை செய்ய ஒரு கூட்டமே இருக்கிறது. ஆனால் இரண்டாவதைச் செய்ய?. தேர்வாளர்கள் கூட நம் நாட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையை 30 ஆண்டுகளுக்கு முன்னால் வைத்திருந்தார்கள். அதனல் தான் கோச்சிங் கேம்பில் கபில்தேவ் என்ற இளைஞன் எனக்கு நான்கு சப்பாத்தி போதாது, நான் வேகப்பந்து வீச்சாளன், எனக்கு அதிக சக்தி தேவை, அதற்கேற்ற உணாவு கொடுங்கள் என்று கேட்டதற்கு சிரித்து அவமானப்படுத்தினார்கள். இன்னும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் 150 கிமீ வேகத்தில் ஒருவர் பந்து வீசுகிறார் என்ற செய்தி வருகிறது. அதைவிட வேகமாய் அவரது வேகம் அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்று விடுகிறது.


1.கபில்தேவ்

தன்னுடைய வேகத்தால் முதல் சில ஆண்டுகளும், நேர்த்தியான அவுட்சுவிங்கர்களால் பல ஆண்டுகளும் பேட்ஸ்மென்களை மிரட்டியவர். தன்னுடைய உச்சக்கட்ட பார்மில் இருந்த முதல் பத்தாண்டுகளில் இணையாக பந்து வீச ஆளில்லாமல் அவதிப்பட்டவர்.

டென்னிஸ் லில்லி-தாம்சன், அக்ரம்-யூணுஸ், அம்புரோஸ்- வால்ஷ், டொனால்ட்-போலக் என இணையான வீரர்கள் பந்து வீசும்போது எதிர் அணிக்கு மிகுந்த நெருக்கடி கிடைக்கும். கபில்தேவுக்கு அப்படி யாரும் கிடைக்கவேயில்லை.

ரோஜர் பின்னி ரேஷன் கடை துவரம் பருப்பு போல. நல்ல தண்ணி, காப்பர் பாட்டம், கேஸ் ஸ்டவ் என எல்லாம் சாதகமாக இருந்தால் தான் அவர் பருப்பு வேகும். அதனால்தான் வெளிநாட்டு ஆடுகளங்களில் பிரகாசித்த அளவுக்கு உள்ளூரில் அவர் பிரகாசிக்கவில்லை.

இன்னொரு துணையாக இருந்த மதன்லாலைப் பற்றி ரிச்சர்ட்ஸின் கமெண்ட்

"ஆப் ஸ்பின் போடுபவர்களிலேயே அதிக தூரத்தில் இருந்து ஓடி வந்து போடுபவர்"

85 ஆம் ஆண்டு வாக்கில் வந்த சேட்டன் சர்மா வேகமாக இருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சார்ஜாவில் போட்ட புல்டாஸில் மனம் உடைந்து போனார்.

இந்தியாவில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் பிறந்து அவர் 434 டெஸ்ட் விக்கெட் எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.


2.மனோஜ் பிரபாகர்


86 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி நம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, அக்ரம் ஸ்ரீகாந்தின் நெற்றியைப் பிளந்து விட, அந்த இடத்தில் துவக்க ஆட்டக்காரராக இறங்கியவர் இவர். பின்னர்தான் தெரிந்தது இவர் வேகப்பந்து வீச்சாளர் என்று. 89ஆம் ஆண்டு நம் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்தபோதுதான் இவரது பொடென்சியல் வெளியே தெரிந்தது. ஒரு பந்து வீச்சாளர் எதிரணி ஆட்டக்காரர்களுக்கு டெரராய் இருக்கிறார் என்பதை உணர்த்த பல அளவுகோல்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்று இருக்கிறது. அது பந்தை எறிகிரார் என எழும்பும் குற்றச்சாட்டு.

அக்தார்,முரளிதரன்,ஹர்பஜன் என முண்ணனி வீரர்களை குறித்துத்தான் இந்த குற்றச்சாட்டு கிளம்பும்.

அந்த அளவுகோலின் படி பார்த்தால் மனோஜ் இம்ரான்,மியான்டாட் வாயால் எறிகிறார் என குற்றம் சாட்டப்பட்டவர். எனவே அவரும் ரவுடிதான். பழைய பந்தை ஸ்விங் செய்வது எப்படி என எனக்கு கற்றுக் கொடுத்தவர் மனோஜ்தான் என கபில்தேவே ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.

அந்த தொடர் சம்பந்தமான கட்டுரை ஒன்றில் இந்தியா டுடே இதழ் இப்படி சொல்லியிருந்தது "மனோஜ் : தாமதமாக மலர்ந்த தாமரை". அசாருடன் மோதல், புக்கி விவகாரம், ஜெயசூர்யாவால் ஸ்பின்னராக மாற்றப்பட்டது என பல சர்ச்சைகளால் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார்.

இருந்தாலும் நல்ல் இன்ஸ்விங்கர் என்ற முறையில் போட்டியில் இருக்கிறார்.

3. ஜவகல் ஸ்ரீநாத்

பேட்ஸ்மென்கள் குட்டையாய் இருந்தாலும் பரவாயில்லை, பவுலர்களும் குட்டையாய் இருக்கும் அணி நம் அணிதான் என்று ஒரு கேலிப் பேச்சு இருக்கும். ஆறடிக்கு மேல் உயரத்துடன், ஒல்லியான உடல் வாகுடன் வந்த ஸ்ரீநாத் அந்தக் குறையைப் போக்கினார். அவர் உள்ளே நுழையும் போது கபில் தன் இறுதிக்கட்டத்தில் இருந்தார். மனோஜ் மட்டும் துணையாக இருந்தார். இவர்கள் சென்ற உடன் முழுச்சுமையும் இவர் தோளில் விழுந்தது. வெங்கடேஷ் பிரசாத் ஓரளவுக்கே துணை நின்றார். இவர் பந்து வீச்சின் மூலம் சில டெஸ்ட் வெற்றிகளை இந்தியா பெற்றது.

தெண்டுல்கர் கேப்டன் ஆனது இவருக்கு வினையானது. அவர் ஸ்ரீநாத்தை அதிகம் உபயோகப்படுத்தி படுத்தி விட்டார். ஷோல்டர் இஞ்சுரியால் விரைவாகவே ஓய்வு பெற்றுவிட்டார்.


4. ஜாகிர்கான்


எனக்கு பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர்களைக் கண்டாலே பொறாமையாய் இருக்கும். சர்பராஷ் நவாஸ் காலத்தில் இருந்தே அவர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்து வருகிறார்கள். கல்லூரியில் என் ஆதர்சம் வாசிம் அக்ரம் தான். ஹம் ஆப்கே
ஹெயின் கோன் படம் பாகிஸ்தானில் ஹிட் ஆன போது அவர்கள் பாடிய மாதுரி தீக்ஸித்தைக் கொடுத்து விட்டு காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள் (மாதுரி லேலோ காஷ்மிர் ... என என்னவோ இந்தியில் வரும்.மறந்து விட்டது) என்ற வரிகளை மாற்றி நாங்கள் வாசிமை கொடுங்கள் காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள் என பாடுவோம்.

வாகர் யூணிஸ் இங்கிலாந்தில் தன் பந்து வீச்சால் கலக்கிக் கொண்டிருக்கும் போது ஹென்றி புளோபீல்ட் அடித்த கமெண்ட் " த லைட் கெட்டிங் டார்க்கர் அண்ட் டார்க்கர், வக்கார் கெட்டிங் பாஸ்டர் அண்ட் பாஸ்டர்" . அதைக் கேட்டுவிட்டு இங்கே ஒரு ஆள் இப்படி வரமாட்டானா என ஏங்கியதுண்டு.

ஜாகிர் அந்தக்குறையை ஓரளவுக்கு தீர்த்தவர் என்று சொல்லலாம். இந்தியார்களும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வார்கள் என்று அழுத்தம் திருத்தமாக காட்டியவர். பிட்னஸ்ஸில் மட்டும் நிறைய கவனம் எடுத்துக் கொண்டிருந்தால் இன்னும் பிரகாசித்திருக்கக் கூடியவர்.


5. இஷாந்த் ஷர்மா


இவர் வந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தாலும் கவனமாகக் கையாளப்பட்டால் பெரிய உயரங்களுக்கு செல்லும் திறமை வாய்ந்தவர். சமகால வேகப்பந்து வீச்சாளர்களில் பிளிண்டாபுக்கு அடுத்து ரிக்கி பாண்டிங்கை திணற வைத்தவர் இவரே. மூன்று பார்மட் தவிர ஐபிஎல் என சகட்டுமேனிக்கு விளையாடியதில் டயர்ட் ஆகிவிட்டாரோ எனத் தோன்றுகிறது. அதுவும் கல்கத்தா ஐபிஎல் டீம் இவரை டீமாரலைஸ் செய்து விட்டதைப்போலவே எனக்குத் தோன்றும். உயரமும், பத்து ஓவர் வீசினாலும் டயர்ட் ஆகாத உடல்திறனும் அமையப்பெற்ற பந்து வீச்சாளர்.
ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் இன்சுவிங் யார்க்கர் வீசுவது கூடுதல் பலம்.


பதிவர்கள் தங்களுக்குப் பிடித்த இரு வேகப் பந்து வீச்சாளர்களைத் தெரிவிக்கலாம்.

சென்ற பதிவின் பின்னூட்டங்களின் படி துவக்க ஆட்டக்காரர்களாக தேர்வு பெற்றவர்கள்

1.சுனில் கவாஸ்கர்
2.விரேந்திரா சேவாக்

பின்னூட்டத்தில் தங்கள் தெரிவைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

December 10, 2009

தொழில் தர்மம்

கொஞ்சம் பவுடர் போட்டுக்குங்க
கோட் டை ஆப்டா இருக்குமே
நல்லா நிமிந்து உக்காருங்க
லைட்டா பேஸ் லெப்ட்ல திருப்புங்க
போதும் கொஞ்சம் ரைட்
சின் டவுன் பண்ணுங்க
ஸ்மைல் போதாது

என தொணத்திக் கொண்டே இருப்பவரிடம்
எப்படி சொல்வது
எடுக்கப் போவது செக்யூரிட்டி வேலைக்கான
புகைப்படம் தான் என்பதை



பின்குறிப்பு

என்டர் கவிதை என்று பின்னூட்டமிடுபவர்களின் பிளாக் ஹேக் செய்யப்படும்

தினமலர் வாரமலருக்கு அனுப்பலாம் என்பவர்களுக்கு பொங்கல் முதல் நாள் பாண்டியன் எக்ஸ்பிரஸ்சில் அன் ரிசர்வுடு கம்பார்ட்மென்டில் பயணம் செய்வதற்கான டிக்கட் கொடுக்கப்படும்

மொக்கை குப்பை என பின்னூட்ட மிடுபவர்களுக்கு உரையாடல் கவிதைப் போட்டியின் தேர்வாளர் பொறுப்பு கொடுக்கப்படும்