December 28, 2008

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்

இதுவரை தமிழில் விளம்பர உலகம் தொடர்பாக வந்திருக்கும் புத்தகங்கள் எத்தனை என்று பார்த்தால் அது தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்திற்க்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களை விட குறைவாகவே இருக்கும். பெரும்பாலானோர் ஞாபகத்திற்க்கு உடனே வருவது எப்படி ஜெயித்தார்கள் என்ற ரமேஷ்பிரபாவின் புத்தகம். இது விகடன் குழும பத்திரிக்கையில் தொடராக வந்து பின் புத்தக வடிவம் பெற்ற ஒன்று. இது பெரும்பாலும் விளம்பரங்களின் வெற்றியை அலசிய ஒன்று என்று சொல்லலாம். விளம்பரத்துறையின் ஆணிவேரான ஏஜென்சிகளின் பங்கு, அவை செயல்படும் விதம், விளம்பர நுணுக்கங்கள், அடிப்படை விதிகள் ஆகியவற்றை அலசிய புத்தகம் என்று பார்த்தால் அது பிஜேபி தமிழ்நாட்டில் தனியாக நின்று ஜெயிக்கும் நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையிலேயே இருக்கும். அந்த குறையைப் போக்க வந்த புத்தகம் யுவகிருஷ்ணா எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்பது பாமக திருமங்கலத்தில் தனித்து நின்றால் ஜெயிக்காது என்பதைப் போன்ற நிதர்சனம்.

இந்த புத்தகத்தின் சிறப்பசம்மே விளம்பரத்துறையின் எந்த அம்சத்தையும் விட்டுவிடாமல் கவர் செய்திருப்பதேயாகும். முதன்முதலில் வெளியான அதிகாரபூர்வ விளம்பரம் துவங்கி எதிர்காலத்தில் எந்த மாதிரியான விளம்பர உத்திகள் நடைமுறைக்கு வரும் என்பதுவரை ஒரு முழுமையான கவரேஜ் இந்த புத்தகத்தில் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களும் தக்க உதாரணத்துடனுடம், நூலாசிரியருக்கே உரித்தான நகைச்சுவையுடனும் கொடுக்கப்பட்டுள்ளது. பியர்ஸ் சோப் பற்றிய செய்தியில், மாமனாரின் கம்பெனிக்கான மருமகனின் விளம்பரம் அதுவென்றும், அந்த வெற்றிக்காக அவருக்கு தலைதீபாவளிக்காக எக்ஸ்ட்ரா மோதிரம் கிடைத்ததா என்பது தெரியவில்லை என்று சொல்லுவது அவருக்கே உரித்தான டிரேட்மார்க். இந்திய விளம்பரத்துறையின் தந்தை ஆர் கே ஸ்வாமி என்பதில் தொடங்கி முதன்முதலில் தொலைக்காட்சியில் வண்ணத்தில் ஒளிபரப்பான விளம்பரம் பாம்பே டையிங் என்பதுவரை தகவகல்கள் கொட்டிகிடக்கின்றன இப்புத்தகத்தில். பெருவெற்றியடைந்த விளம்பரங்கள் என்று தரப்பட்டுள்ள விளம்பரங்கள் எல்லாமே மிக சுவையானவை.

அரசியல் கட்சிகளின் விளம்பர யுக்திகள் பற்றியும் நூலாசிரியர் தகவல்களை கொடுத்துள்ளார். இந்தியா ஒளிர்கிறது என்ற பிஜேபியின் விளம்பரம் உருவான விதம், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் இறுதிசெய்து வைத்துள்ள விளம்பர ஏஜென்ஸி என சுவையான தகவல்கள்களும் உண்டு. என்னை இப்புத்தகத்தில் மிகவும் கவர்ந்தபகுதிகள் என்றால் எதிர்மறை விளம்பரம், விதிவிலக்குகள் ஆகிய அத்தியாயங்கள். மிக மிக கவர்ந்த பகுதி என்றால் அது நூலாசிரியரின் கற்பனை வெளிப்படும் எதிர்காலம் என்ற அத்தியாயமே. எதிர்காலத்தில் எப்படியெல்லாம் விளம்பரம் வரும் என்று அவர் விவரித்திருப்பது இப்படியெல்லாம் நடக்குமா என்று படிக்கும் போது நினைக்க வைத்தாலும், பின்னர் யோசிக்கும்போது நடக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. பின்னினைப்பாக விளம்பரத்துறையின் பிதாமகன்கள் மற்றியும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுச்சேவை,அரசு விளம்பரங்கள், கண்காட்சி, ஈவெண்ட் மானேஜ்மெண்ட்,பிராண்டிங் என இப்புத்தகம் எதையும் விட்டு வைக்கவில்லை. இப்புத்தகத்தின் குறையாக நான் கருதுவது விளம்பரம் என்றவுடன் நம் கண்ணில் தோன்றுவது அழகு மாடல்களே. அவர்களைப்பற்றி சுப்ரமணியம் சுவாமி கட்சிக்கு இருக்கும் வாக்கு சதவீதம் அளவுக்கு கூட தகவல் இல்லை என்பது மன்னிக்க முடியாத குற்றம். சத்தியமூர்த்தி பவன் கூட்டங்களுக்கு செல்லும் காங்கிரஸ்காரர்களுக்கு இறுக்கமாக வேட்டி கட்ட தெரிவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் விளம்பர துறைக்கு வர துடிப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டியதும்.

நூலை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்

நூலின் பெயர் : விளம்பர உலகம்

ஆசிரியர் : யுவகிருஷ்ணா
பக்கங்கள் : 152
விலை : ரூ 70.

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701

ரகுவம்சம் – அ வெ சுப்பிரமணியன்



ராமாயனம்,மஹாபாரதம் என்ற இரண்டு பெயர்ச்சொற்களை கேட்காமல் நம் நாட்டில் யாரும் பள்ளிப் படிப்பை கடக்க முடியாது. செவி வழியாகவும், நாடகங்கள் மூலமாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களிடம் இந்த காப்பியங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. 75 ஆண்டுகளாக திரைப்படங்கள் மூலமாகவும் இவை ஏதாவது ஒரு வகையில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. சினிமா எடுக்கப்பட்ட முதல் பத்தாண்டுகளில் ராமாயன,மஹாபாரத உப கதைகள் பெரும் இடத்தைப் பிடித்திருந்தன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின் இந்த இரண்டு காப்பியங்களின் சிறு சிறு உப கதைகளும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் காட்சி வடிவிலும் சென்றடைந்தன. இரண்டு காப்பியங்களும் விஷ்ணுவின் அவதாரத்தோடு சம்பந்தப்பட்டவையாக உள்ளதால் மத ரீதியாகவும் இதை படிப்பவர்கள் தங்கள் சுற்றத்தால் உற்சாகப்படுத்தப் பட்டார்கள்.

இந்த இரண்டு காப்பியங்களில் எது சிறந்தது என்று கேட்டால் பலரிடம் உடனே வரும் பதில் மஹாபாரதம் தான். ராமாயனத்தை விட அதிகமான கிளைக்கதைகளும், கதாபாத்திரங்களும், சுவையான சம்பவங்களும் மஹாபாரதத்தில் தான் அதிகம். ஆனால் இலக்கியசுவை என்று பார்த்தால் கம்பர் எழுதிய ராமாயனத்தின் அருகில் கூட மஹாபாரதத்தால் வர முடியாது. எந்த இலக்கியத்தையுமே அது உருவாகிய மொழியில் படித்தால் தனிச் சிறப்பாக இருக்கும். கிரேக்க காப்பியங்களான இலியட்,ஒடிஸி போன்றவற்றை ஆங்கிலத்தில் படிப்பதைவிட கிரேக்க மொழியில் படித்தால் இன்னும் அதன் இலக்கிய செழுமை புலப்படும்.

மகாகவி காளிதாஸ் எழுதிய சாகுந்தலம்,மாளவீகம், விக்கிரமன்ஊர்வசி ஆகிய காவியங்களையும் ரகுவம்சம் ,குமார சம்பவம் போன்ற பாடல் வடிவில் எழுதப்பட்ட புராணங்களையும், மேகதூதம் போன்றவற்றையும் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் அதை ருசிக்க வேண்டுமென ஆவல் எழுவதுண்டு. இவற்றில் எதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று மட்டுமே அறிந்திருந்தேன், ஆனால் வர்ணனைகளைப் படித்ததில்லை. நியு ஹொரைசன் மீடியாவின் ஒரு அங்கமான வரம் பிரிவு வெளியிட்டிருக்கும் ரகுவம்சம் மிக எளிய நடையில் அந்த வர்ணனைகளைத் தருகிறது.

ராமன், அவனுக்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள், அவன் பின் ஆண்டவர்கள் ஆகியோரது சிறப்புகளை சொல்வதே இந்த ரகுவம்ச காவியம். ரகு வம்சத்தின் முதல் மன்னர் வைவஸ்த மனு, கடைசி மன்னர் அக்கினிவர்ணன். முக்கியமாக திலீபன்,ரகு,அஜன், தசரதன் மற்றும் ராமன் ஆகிய மன்னர்களைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது.

இந்த ரகுவம்ச புத்தகத்தின் சிறப்பே இதன் வர்ணனைகள்தான். பல இடங்களில் வர்ணனைகள் நம் கற்பனைகளுக்கு அப்பால் செல்கின்றன. திலீபன் குழந்தைவரம் வேண்டி தன் மனைவி சுதட்சிணையுடன் வசிஷ்டர் ஆசிரமத்தில் தங்கி நந்தினி பசுவுக்கு பணிவிடை செய்தல், திலீபன் மகன் ரகு திக்விஜயம் செய்தல், ரகுவின் மகன் அஜனின் அழகை காண இளம்பெண்கள் ஓடி வருதல், அஜனின் மகன் தசரதன் வேட்டையாட செல்லுதல், புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பும்போது கீழே காணும் காட்சியை ராமன், சீதாவுக்கு விளக்கிக் கொண்டு வரும் காட்சி ஆகியவை வர்ணனைகளின் உச்சம் என சொல்லலாம்.

இந்த வம்சத்திற்க்கு ரகுவம்சம் என பெயர் வர, சிறப்பாக ஆட்சி செய்த ரகு காரணம் என இங்கு சொல்லப்படுகிறது. ஆனால் சூரியவம்சத்தை சார்ந்த அரசவம்சம் என்பதால் இப்பெயர் என கர்ணபரம்பரையாக ஒரு செய்தி நம்மிடையே புழங்கி வருகிறது. எது சரி என்பது தெரியவில்லை. நாம் அதிகம் கேள்விப்பட்டிராத குசன்,அதிதி,நிஷிதன் ஆகியோரைப் பற்றியும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் மிக குறைந்த அளவே.
இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் இதில் சொல்லப்பட்டுள்ள உவமைகளே. இந்துமதியின் சுயம்வரத்திற்க்கு அஜன் செல்லுகிறான். நகர மக்கள் அனைவரும் அங்கு வந்திருக்கும் மற்ற அரசர்களை பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள். அஜன் உள்ளே நுழைந்ததும் அனைவரின் கண்களும் அவனையே நோக்குகின்றன. எப்படி இருந்தது என்றால் ”காட்டிலிருந்து மதநீரை பெருகவிட்டுக் கொண்டுவரும் யானையைக் கண்டதும், வண்டுகள் பூக்களை எல்லாம் விட்டு விட்டு யானையிடம் செல்வது போல”

ரகுவின் திக்விஜயத்தில் ஒரு காட்சி “ கலிங்க நாட்டை வெற்றிகொண்டபின் ரகுவின் படை காவிரியாற்றின் கரையை அடைந்தது. அஙு சில நாட்கள் டரகு தன் படையுடன் தங்கியிருந்தான். மதநீர் பெருகும் யானைகள் அந்த நதியில் குளித்ததால், அவற்றின் மதநீர் பெருமளவில் ஆற்றின் நீருடன் கலந்துவிட்டது. இதன் விளைவு என்ன தெரியுமா? கடலரசனுக்கு ஆறுகள் எல்லாம் மனைவிகள் ஆகும். காவிரி ஆறு யானைகளின் மதநீருடன் கலந்த கலப்பினால், கடலரசனுக்கு மனைவியின் கற்பு ஒழுக்கத்தின்மீதே சந்தேகம் எழுந்துவிட்டதாம்”

தசரதன் வேட்டையில் ஒரு காட்சி, “ அவன் கையில் ஏந்தியிருந்த வில் அம்பைப் பார்த்து மிரண்டன மான்கள். அவைகளின் அழகிய கண்கள் சஞ்சலமாக அங்குமிங்கும் உருட்டி விழித்த காட்சி, தசரதனுக்கு தன் அந்தப்புற பென்களை ஞாபகம் ஊட்டியதால் அவற்றை கொல்லாமல் விட்டுவிட்டான்”

ரகுவம்சத்தை தமிழில் இங்கு மொழிபெயர்த்திருப்பவர் அ வெ சுப்பிரமணியன். மிக மிக சரளமான நடை. சமஸ்கிருதமும், தமிழும் இவருக்கு இரு கண்கள் என்கிறார்கள். இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு அதில் எந்த சந்தேகமும் வராது. ரகுவம்சத்தின் இலக்கிய செழுமையை ருசிக்க வைத்த அவருக்கு நன்றிகள்.

நூலின் பெயர் : ரகுவம்சம்

ஆசிரியர் : அ வெ சுப்பிரமணியன்

பக்கங்கள் : 136

விலை : ரூ 60.

ரகுவம்சம் ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701


நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

December 26, 2008

27 ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல்

பதிவர் சந்திப்பு அழைப்பிதழ்

நாள் : டிசம்பர் 27, சனிக்கிழமை

இடம் : நடேசன் பூங்கா, தியாகராய நகர்

மாலை 5 மணி

கலந்து கொள்பவர்களுக் கிடையேயான பரஸ்பர அறிமுகம்

மாலை 5.15மணி

மணமான ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் – அதற்க்கான நடைமுறை சாத்தியமான தீர்வு குறித்த விவாதம் நடைபெறும். விவாதத்தை தாமிரா துவக்கி வைக்க பதிவர்களுக்கு இடையே கலந்துரையாடல் நடைபெறும். டோண்டு ராகவன், கேபிள் சங்கர், அத்திரி போன்ற அனுபவசாலிகள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்

மாலை 5.45மணி

வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த மாதிரியான கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளது?. அக்கூட்டணிகளின் பலம்/பலவீனம், அமையப் போகும் புது அரசில் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன? என்பது பற்றிய கலந்துரையாடல். பாலபாரதி,லக்கிலுக், ஜியோவ்ராம் சுந்தர் மற்றும் பல பதிவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்
இரவு 7.00 மணி

ஏதாவதுசெய்யனும் பாஸு என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தை நர்சிம் தொடங்கி வைத்து பேசுவார்.

இரவு 7.30 மணி
ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்ளல்.

இரவு 7.45 மணி
பூங்கா அருகில் உள்ள தேநீர்க்கடையில் பிஸ்கட்,தேநீர் அருந்தும் வைபவம். பின்னர் அதிஷா,அக்னிபார்வை,ஸ்ரீ போன்ற துடிப்பான பதிவர்கள் ஆரம்பித்து வைக்கும் கும்மி. கொலைவெறியுடன் எல்லா விஷயங்களும் கும்மப்படும்.


இரவு 8.30 மணி


அவுங்கவுங்க வீட்டுக்கு அவரைக்காயும் சோத்துக்கு


சந்திப்பில் கலந்துகொள்ள சென்னை வாழ் முன்னாள்,இன்னாள், வருங்கால பதிவர்கள், வாசகர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி சென்னை பதிவர்கள் சார்பாக அழைக்கிறோம்.

சந்திப்புக்கு அமைப்பாளர்/ஒருங்கிணைப்பாளர் என்று யாரும் கிடையாது. வருபவர்கள் அனைவரும் அமைப்பாளர்/ ஒருங்கிணைப்பாளர்களே.

மேலதிக விபரங்களுக்கு சந்திப்பு பற்றிய அதிஷாவின் பதிவு

December 06, 2008

பரிசல், நர்சிம் மன்னிக்கவும்- ஒரு சிறுகதை முயற்சி

அம்மா, வெள்ளக்கோட்டை பசங்களோட மேட்ச் இருக்கு, மதியம் ரெண்டு ஆயிடும்மா என்று சொன்னவாறே பேட்டை எடுத்து சைக்கிள் கேரியரில் வைத்தேன். தெருவில் சைக்கிளை உருட்டத் தொடங்கினேன். நான்கு வீடு தள்ளி ரகுவின் வீடு. க்வின் ஆப் தி ஸ்டிரீட் ரம்யா எங்காவது தென் படுகிறாளா என்று நோட்டம் விட்டேன். காணோம். நாம என்ன காதலிக்கவா தேடுறோம், ஒரு ரெப்ரெஸ்சுக்கு கூட கண்ல சிக்க மாட்டேங்கிறாளே என்று சலித்துக்கொண்டென். சின்ன வயதில் இருந்தே பார்த்ததால் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. சுடிதார், நைட்டி எல்லாம் பெண்களுக்கு மிக பாதுகாப்பான உடை என்பது பங்குனி திருவிழாவில் அவளை தாவணியில் பார்த்தபோது தான் தெரிந்தது. பேசுவதற்க்கு தயக்கம். அந்த தெரு வழக்கப்படி அண்ணா என்று சொல்லிவிட்டால் ராத்திரி என் கனவு அரண்மனை அந்தப்புற அழகிகளில் ஒன்று குறைந்துவிடுமே.

ரகுவின் அக்கா, பிரசவத்திற்க்கு வந்தவள் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். வாயை கிண்டி மேட்டரை பிடுங்குவதில் கெட்டி. ரகூ என குரல் கொடுத்தேன். என்னடா இட்லி ஈரல் குழம்பு ஆச்சா மதியத்துக்கு கோலாவா என்றாள்? ஒரு அசட்டு சிரிப்பை சிந்தியவாறே நின்றேன். விடாமல் அவள் ராத்திருக்கு என்ன? என, ஆறு மணிக்கெல்லாம் காலேஜிக்கு கிளம்புறோம், அஸைன்மெண்ட் எழுதனும் என்றேன். அவள் என்னை விடுவதாய் இல்லை. ஏன் இங்க வச்சே எழுதலாமே? எழுதுன ஆளுகிட்ட இருந்து காப்பி அடிக்கப் போறிங்களா என்றாள்?. அதற்குள் ரகு வர தப்பிச்சண்டா சாமி என பெருமூச்சு விட்டேன்.

தெருமுனை தாண்டியதும், என்னடா புதுசா ஆறு மணிக்கு போலாங்கிற என்றான் ரகு. டேய் ஊருக்கு வரும்போது போஸ்டர் பாத்தமேடா, மதுல புது படம் போட்டிருக்காண்டா. பாத்துட்டு ஆஸ்டல் போவோம் என்றேன். ஏண்டா இப்பவேற போறோம், சாயங்காலம் ஒண்ணா என்று புலம்பினான் ரகு. காலைல சாப்பிட்ட, மதியம் பசிக்காதா? சும்மா வாடா என்றேன். அதுக்கில்லை அதை உப்புமாதிரி வச்சுக்கிடலாம், சோறு மாதிரின்னா எப்படி? என அங்கலாய்த்தான். ஒருவழியாய் அவனை சமாதானப்படுத்தி, பேட்டை தெரிந்த டீ கடையில் வைத்துவிட்டு லட்சுமி தியேட்டரை நோக்கி சைக்கிளை மிதிக்கலானேன்.

படம் ஆரம்பித்து சிறுது நேரம் கழித்து, பொறுத்து டிக்கெட் வாங்கி உள்ளே போனோம். தலையை குனிந்தவாறே நடந்து சென்று ஒரு மூலையில் அமர்ந்தோம். இடைவேளையில் தலையை குனிந்து உட்கார்ந்திருந்த ரகுவிடம், இந்தப் படத்துக்கெல்லாம் ஏண்டா இடைவேளை? கேண்டின் காரனுக்காக நம்மளை வெறுப்பேத்துரானுங்க என்றேன். அவன் சிரித்தவாறே, இவ்வளோ பேரு தைரியம்மா எப்படி வெளிய நிக்குராய்ங்க என்றான். விடு நாம மது தியெட்டரில நிக்குரோம்ல அதுமாதிரிதான் என்றேன்.

படம் முடிந்து எல்லோரும் வெளியேறியதும், குனிந்தவாறே வந்த போதுஒரு சீட்டில் பார்த்தேன், ஜானகிராமனின் நளபாகம் புத்தகம். எடுத்துப்பார்த்தால் அது லைப்ரேரி புக். இதப்படிக்கிற ஆளு இங்க ஏண்டா வர்றான் என்றேன் ரகுவிடம். ஏன் நாம வல்லையா என்றான் பதிலுக்கு. விட்டுட்டுப் போன ஆளு கேக்க சங்கடப்படுவான் அதனால் இங்க கொடுத்தா சுட்டுருவாய்ங்க, போயி லைப்ரேரில கொடுப்போம் என்றேன். உனக்கேண்டா இவ்வளோ அக்கறை என்றவனிடம், நம்ம ஜாதிடா, நமளே ஹெல்ப் பண்ணைலைன்னா எப்படி? சிகரெட் குடிக்கிறவன் எவ்வளோ பெரிய லார்டா இருந்தாலும் பிச்சக்காரன் நெருப்பு கேட்டா கண்டிப்பா குடுப்பான். அது மாதிரிதான் இதுவும் என்றேன்

--------------------------------------------------------------------------------------------

சே இன்னைக்கு நாளே நல்லால்ல. பார்த்த படம் வேஸ்ட், அங்க போயி லைப்ரரி புக் வேற மிஸ் பண்ணிட்டோம். சாப்பிடும் போது தேவையே இல்லாம இவகிட்ட ஒரு சண்டை. பையனை வேற அடிச்சிட்டோம். மணி அஞ்சாக போகுது, இவளை எழுப்பி டீ போட சொல்லலாமா, வேணாம் அசந்து தூங்குறா பாவம், இன்னைக்கு நாமளே டீ போட்டு சமாதானப் படுத்துவோம். அட கொடுமையே பால் இல்லையா. டேய் குட்டி, எந்திருடா, அப்பா கடைக்கு போயிட்டு வர்றேன். வீட்டப் பார்த்துக்கோ. ஐயையோ என்ன இது இந்த பசங்க எதுக்கு இங்க? விசாரிக்கிறாய்ங்க? போச்சுடா.

டேய் குட்டி, இந்தா பாரு இப்போ யாராச்சும் வந்து பெல் அடிச்சா என்னானு கேளு சரியா? போடா போ. அப்பா ஏதோ புக்க வச்சுட்டு வந்துட்டீங்களாம். அதோட லைப்ரேரி கார்டாம். போடா போய் ரொம்ப தேங்க்ஸ்னு சொல்லி கதவை பூட்டிட்டு வா. சரிப்பா என்று கேள்வியாய் பார்த்தவனிடம் சொல்ல முடியுமா " அவன் என் மானேஜர் பையன், இவன் சரியில்லை கிரிக்கெட்,சினிமான்னு சுத்தி அரியரா வச்சுருக்கான், நீங்க தான் நிறைய படிக்கிறவராச்சே, ஒரு நாள் அனுப்புறேன் அட்வைஸ் பண்ணுங்கன்னு மானேஜர் சொன்னதை".

கரு கொடுத்த பரிசல்

புது கோணம் கொடுத்த நர்சிம்

திட்டுறவங்க இவங்களை திட்டுங்க.

December 05, 2008

1958ன் அபூர்வ படங்கள்

50 ஆண்டுகள் கழித்தும் எல்லோர் மனதிலும் ஆணியடித்தது போல் உட்கார்ந்து கொண்டிருக்கும் படங்களை வேறு எப்படி சொல்லமுடியும்?

நாடோடி மன்னன்

எம்ஜியாரின் வாழ்க்கையில் மிகப்பெரும் திருப்புமுனையாக இருந்த படம். அதுவரை வெற்றிகரமான கதாநாயகனாக மட்டுமே மக்களால் பார்க்கப்பட்ட நிலை மாறி ஆட்சிக்கும் இவர் பொருத்தமானவரே என்னும் நிலைக்கு உயர்ந்த படம். எம்ஜியார் தயாரித்து, இயக்கிய முதல் படம். இப்படத்தை பற்றி எம்ஜியார் சொன்னது “இந்த படம் வெற்றிபெற்றால் நான் மன்னன், தோற்றால் நான் நாடோடி”. கிட்டத்தட்ட 5 படங்களுக்கு தேவையான அளவு காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு எடிட்டிங்கில் ஒரு படமாக்கப்பட்டது. முதல் பாதி கறுப்பு வெள்ளையிலும் இரண்டாம் பாதி வண்னத்திலும் [கேவா கலர்] படமாக்கப்பட்டது. இந்தபடத்தில் இடம்பெற்ற பல வசனங்கள் கம்யூனிஸ சிந்தனையை பிரதிபலிக்கும். வில்லன் உங்கள் ஆட்சியில் அப்ப்டியானால் பணக்காரர்களே இருக்கமாட்டார்களா என கேள்வி எழுப்பும் போது எம்ஜியார் சொல்வார் “ பணக்காரர்கள் இருப்பார்கள். ஏழைகள் இருக்கமாட்டார்கள்” என்று. தூங்காதே தம்பி தூங்காதே, சம்மதமா, தடுக்காதே என்னை தடுக்காதே போன்ற பாடல்கள் நிறைந்த படம். சென்ற ஆண்டு சென்னை ஆல்பட் திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிய ஒன்றே போதும் இப்படத்தின் சிரப்பை சொல்ல.

உத்தம புத்திரன்

கமல்ஹாசன் ரீமேக் செய்து நடிக்க மிகவும் ஆசைப்பட்ட படம். ஆனாலும் என்னால் வில்லன் [விக்ரமன்] சிவாஜி கேரக்டரை செய்ய முடியாது என்று சொன்ன படம். இந்த படத்தில் விக்ரமன் சிவாஜியின் மேனரிஷங்களைதான் ரஜினி தன் ஆரம்ப கால படங்களில் பயன்படுத்தினார். இந்த படமே ஒரு ரிமேக்தான். ஒரே மாதிரி உருவ ஒற்றுமை இருந்தாலும் பாடி லாங்வேஜிலும், டயலாக் மாடுலேஷனிலும் இருவருமே வேறு வேறு நபர்கள் என பார்ப்பவர்களை நம்பவைத்திருப்பார். அதுவம் யாரடி நீ மோகினி பாடலில் பாஸ்ட் பீட்டுக்கு ஏற்ப நடனமும், முகபாவங்களும், புதுவித மேனரிஷமும் என அசத்தியிருப்பார். பார்த்திபன் கேரக்டர் சிவாஜிக்கு இணை பத்மினி. காத்திருப்பான் கமலக்கண்னன் பாடலில் தன் நடன திறமையை காட்டியிருப்பார். இதுதவிர முல்லை மலர் மேலே, உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே போன்ற இனிமையான பாடல்களும் உண்டு. இந்த படம் அப்போதைய காலகட்டத்தில் வணிகரீதியான வெற்றியைப் பெறவில்லை என்ற கருத்தும் உண்டு.

வஞ்சிக்கோட்டை வாலிபன்

ஹீரோ,ஹீரோயின்,கதை,இயக்கம் இவையெல்லாவற்றையும் வில்லன் பேசும் ஒரு வரி வசனம் மறக்க வைக்குமா? அந்த வசனமே 50 ஆண்டுகளாய் அந்த படத்திற்க்கு அடையாளமாய் இருக்கமுடியுமா? முடியும். திரையையும் தாண்டி, பத்மினி,வைஜெயந்திமாலா இருவரில் யார் சிறந்த நடனமணி என்ற விவாதம் மக்களிடம் அப்போது இருந்தது. பத்மினி முதலில் அரசைவையில் ஆட,அனைவரும் அசர, ஈகோ காரணமாக வைஜெயந்திமாலா நடன உடைக்கு மாறி சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி என்க. அப்பொழுது பி எஸ் வீரப்பா சபாஷ் என சொல்லி ஒரு சிறு இடைவெளிவிட்டு சரியான போட்டி என்று சொல்லும்போது நினைத்திருப்பாரா 50 ஆண்டுகளை கடந்தும் இந்த வசனம் நினைக்கப்படும் என. ஆனந்தவிகடன் பாஸ் ஜெமினி எஸ் எஸ் வாசன் தயாரிப்பு. அக்கம்பெனியில் முதலில் பணியாற்றிய நடிகர் ஜெமினி கணேசன் நாயகன். கண்ணும் கண்ணும், ராஜாமகள் ரோஜாமகள் போன்ற இனிமையான பாடல்களை கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருந்தார்.

சபாஷ் மீனா

சிவாஜி கணேசன், சந்திரபாபு, சரோஜா தேவி நடிப்பில் பி ஆர் பந்துலு இயக்கிய அற்புத நகைச்சுவைப் படம். இந்த படத்தை சுட்டு பல படங்கள் வந்துள்ளன. அவற்றில் பெரு வெற்றி பெற்றவை அமீர்கான்,சல்மான்கான் நடித்த அண்டாஸ் அப்னா அப்னா, கார்த்திக்,ரம்பா,கவுண்டமணி நடித்த உள்ளத்தை அள்ளி தா. தந்தையின் கண்டிப்பு காரணமாக நண்பர் வீட்டுக்கு அனுப்பப்படும் சிவாஜி, தன் நண்பர் சந்திரபாபுவை அங்கு மாற்ரி அனுப்பிவைப்பதில் தொடங்கும் நகைச்சுவை படம் முடியும் வரை தொடரும். நாடக பிரியையான சரோஜாதேவி, சந்திரபாபுவின் நடிப்பிற்க்காக அவரை காதலிப்பதும், அவரை மணக்க வேண்டிய சிவாஜி மற்றொரு பெண்னை காதலிப்பதுமாக செல்லும். இந்த படத்தில் ஏழை ரிக்‌ஷா தொழிலாளியாக சந்திரபாபு நாடகத்தில் பாடி நடிக்கும் பாடல் அருமையான கலா அனுபவம். சிவாஜி தன் காதலியை நினைத்து பாடும் சித்திரம் பேசுதடி பாடலும் மிக அருமையாக இருக்கும்.

சம்பூர்ண ராமாயணம்

ராமன் பிரதர்ஸ் பிறப்பில் தொடங்கி லவ குசா பிறப்புவரை பூரணமாக ராமனின் கதையை கூறும் படம். ராமனாக தேவுடு என் டி ஆர், பரதனாக சிவாஜி கணேசன், குணசித்திர வேடத்துக்காகவே பிறந்த சித்தூர் நாகையா, டி கே பகவதி நடித்த படம். பத்மினி, வரலட்சுமி, எம் என் ராஜம் ஆகியோரும் உண்டு. அப்போதைய கிராம திரையரங்குகளில் இருந்த [70 களில் நான் பார்த்த போது] ப்ரொஜெக்டர் கார்பன் ராடுகள் ஐந்து ரீல்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் தன்மை உடையவை. எனவே ஐந்து ரீல்கள் முடிந்ததும் படத்தை நிறுத்திவிட்டு பின் ஐந்து நிமிடம் கழித்து திரையிடுவார்கள். இதற்க்கு பாகம் பிரித்தல் என்று பெயர். இரண்டு ப்ரொஜெக்டர் உள்ள திரையரங்குகளில் இந்த பிரச்சினை இல்லை. எனவே கிராமங்களில் சாதரணமாக ஒரு படத்திற்க்கு மூன்று இடைவேளை இருக்கும். சம்பூர்ண ராமாயணம் 22-23 ரீல்கள் கொண்ட பெரிய படம். இதற்க்கு நாலு இடைவேளை விடுவார்கள். மொதப்பாகத்தில கூனி மேல அம்பு விடுவான், இரண்டாம் பாகத்தில வில்லை உடைப்பான் என்று படம் பார்த்து விட்டு வருபவர்கள் பேசிக்கொள்வார்கள். வால்மீகி,கம்பர் காண்டம் பிரித்ததை போல இங்கே ஆப்ப்ரேட்டர்கள் பாகத்தை பிரிப்பார்கள். வைகுண்ட ஏகாதேசிக்கு பார்க்க ஏற்ற படம். இரண்டாம் ஆட்டம் 11 மணிக்கு ஆரம்பிக்கும் படம் மூணரை அளவில் முடியும். பேசிக்கொண்டே வீடு திரும்ப நாலு மணிக்கு மேலாகிவிடும். அப்படியே குளித்துவிட்டு சொர்க்க வாசலை பார்க்க போய் விடலாம்.

மாலையிட்ட மங்கை

கண்ணதாசன் தயாரித்த படம். மெட்டுக்கே பாட்டு எழுத சொல்கிறார்களே, நாமே படம் எடுத்தால் நமக்கு பிடித்த பாட்டுகளை எழுதிக் கொடுத்து இசையமைக்க சொல்லலாமே என்பதற்க்காக அவர் தயாரித்த படம் என்று சொல்வார்கள். டீ ஆர் மகாலிங்கம் பாடிய செந்தமிழ் தேன் மொழியாள் பாடல் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்தும் ரசிக்கப்படும். பாடலுக்கு முன்னால் வரும் சில்லென்று பூத்த சிறு நெருஞிக் காட்டினிலே என்னும் விருத்தம் எப்படி உருவானதென்று இந்த வார வாரமலரில் கூட ஒரு கட்டுரை வந்திருக்கிறது. படம் தோல்வி என்றாலும் பாடல்களுக்காக னம் நினைவில் இருக்கும் படம்.

December 01, 2008

சில தொலைபேசி உரையாடல்களும் ஒரு பாடலும்

மாப்ளே, உங்க ஏரியாவுல ஏதாச்சும் ரூம் பாரேண்டா

அந்த ரூமுக்கு என்னடா?, நல்ல தண்ணி, மானேஜரும் உனக்கு குளோஸ்ஸு, மெஸ்ஸுலயும் உன்னையை சிறப்பா கவனிப்பாங்களே?

கூட தங்கியிருந்த எல்லோருக்கும் கல்யாணம் ஆயிருச்சு. இப்ப எல்லாம் புது பசங்களா இருக்காங்க, லோன்லியா பீல் பண்றண்டா

அதுக்குத்தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்கிறது.

வீட்டிலயும் தொல்லை பண்றாங்க. இப்பக்கூட ஒரு பொண்ணு போட்டோ அனுப்பியிருக்காங்க, நல்லா செட்டில் ஆனப்புறம் பண்னலாம்னு பார்க்கிறேன்.

பாத்துடா, பஸ்ல போறப்ப பக்கத்து சீட்டில பிளஸ் டூ சங்கோஜமில்லாம வந்து உக்காற வரைக்கும் தள்ளிப்போட்டுறாத.

நல்லா செட்டில் ஆகாட்டி நம்ம தோழர் வழிதான், சரிடா நான் வச்சுர்றேன்.

............................

தோழரே, வர்ற ஞாயிறு எங்க களப்பணி? சாரதா முதியோர் இல்லத்துக்கு போகணும்னு சொன்னீங்களே


இந்த வாரம் வேணாம் சிவா, காய்ச்சலா இருக்கு.

நான் வந்து ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போகட்டுமா?

வேணாம்பா, நான் பார்த்துக்கிறேன். ஆமாம் போன வாரம் ஒரு பொண்ணு போட்டோ வந்துருக்குன்னு சொன்னியே, ஏதும் பிராகிரஸ் இருக்கா?

கல்யாணம் வேணாம்னு பார்க்குறேங்க

இப்படி நினைச்சுதான்யா நான் கல்யாணம் பண்ணாம விட்டுட்டேன். இப்ப பாரு எனக்கு கல்யாணம் ஆயிருந்தா மொணங்கிக்கிட்டேயாவது பொண்டாட்டி கஞ்சி வச்சு தருவா, பையன் இருந்தா, திட்டிக்கிட்டேயாவது மெடிக்கல் ஷாப் போயி குரோசின் வாங்கிட்டு வருவான். பிரண்ட்ஸ் எவ்வளோ பேர் இருந்தாலும் கல்யாணம் பண்னாட்டி அனாதைதான்யா.

அந்த பொண்ணு எவ்வளோ கற்பனையோட இருக்கோ? அதுக்கு ஏத்த மாதிரி நாம சம்பாதிக்கணும், பிள்ளை குட்டிய நல்ல படியா வளர்க்கணும். நான் வாங்குற சம்பளத்துல?


இங்க பாருய்யா, வரப்போறவ ஒன்னையா பர்ஸ்ட் சாய்ஸ்லயா சம்மதிச்சுருப்பா?, வேற வழி இல்லாமத்தான், அதனால தைரியமா இருய்யா. பிள்ளைய நல்லவனா வளரு. நல்லவங்க ரேசியோ அதிகமாகுறது வர்ற தலைமுறைக்கு நல்லதுதான.

சரிங்க தோழர், உடம்ப பார்த்துக்கங்க.

.....................................


ஏம்பா போட்டோ அனுப்பிச்சு ஒரு வாரம் ஆச்சு. பதிலயே காணோம். உங்க வீட்டிலயும் அவங்க வீட்டிலயும் ஜாதகம் பார்த்துட்டாங்க. உங்க அப்பா நீ சொன்னா முடிச்சிரலாம்கிறாரு. அவுங்க வீட்டிலயும் ஓக்கே மாதிரிதான் தெரியுது. பொண்ணு சம்மதம்தான் அங்கயும் வெயிட்டிங். ரெண்டு பேரும் பார்த்து பேசிறீங்களா? பொண்ணு பார்க்கிறதுன்னா எல்லாரையும் கட்டி இழுக்கணுமே?

ஆமாங்க, குடும்பத்தோட போய் பார்த்து சரி வரல்லைன்னா மனக் கஷ்டம். நான் தனியாவே பார்த்துற்றேன்.

எழுதிக்க, இது அந்த பொண்ணு செல்லு நம்பரு........, இது ஆபிஸ் நம்பரு....... நேர்ல போய் பார்த்து பேசு.

ரொம்ப சந்தோஷம், பார்த்துட்டு நான் கூப்பிடுறேங்க

..............................


ஹலோ, வசந்தி

ஆமா, நீங்க

நான் சிவா, தரகர் சொல்லியிருப்பாரே

ஆமா ஆமா, நல்லாயிருக்கீங்களா?

பைன். நீங்க?

நல்லாயிருக்கேன்.

உங்களை பார்த்து பேசலாம்னு

ஸாரிங்க, இந்த வாரம் ஆடிட் நடக்குது. தினமும் எட்டு ஆயிடும்,
வீக் எண்ட் பார்க்கலாமா?

ஒகே.


.......................


ஹலோ ..................... ஆபிசா?

ஆமங்க

வசந்தின்னு இருப்பாங்களே?

அவங்க மீட்டிங்ல இருக்காங்க, நீங்க யாருங்க?

அவங்க சொந்தக்காரர். என்னா லஞ்ச் டைம்ல கூட மீட்டிங்?

ஆடிட் தம்பி. எல்லோரும் போயிருக்காங்க. நான் சுவீப்பரு.
உங்க பேரச் சொல்லுங்க, வந்ததும் சொல்லிர்ரேன்.

நான் அவங்க தூரத்துச் சொந்தம். பரவாயில்லமா நானே ரெண்டு நாள் கழிச்சு திரும்ப பேசறேன். கஷ்டப்பட்டு வேலை பார்க்கும் போது எதுக்கு தொல்லை பண்ணிக்கிட்டு?

ஆமா தம்பி, தங்கமான பொண்ணு, நல்லா வேலை பார்க்கும். என்னா கல்யாணம்தான் தள்ளிப் போயிட்டே இருக்கு.

நம்ம கைல என்னமா இருக்கு?

ஆமா தம்பி, அது கூட சொல்லும். நான் என்ன இளவரசியா? குதிரைல வந்து ராஜா தூக்கிட்டுப் போக, எனக்கு வர்றவன் பஸ்ஸுலயோ, பைக்கிலயோ வந்துக்கிட்டிருப்பான். சிக்னல்ல மாட்டிக்கிட்டிருப்பான். ஆனா எப்படியும் வந்துருவான்னு.

சரிம்மா, நான் வச்சுர்றேன்.

........................


ஹலோ, ஆடிட் முடிஞ்சிருச்சா?

நாலு மணிக்கு முடிஞ்சதுங்க. இப்பதான் வீட்டுக்கு போக பஸ் ஸ்டாப் வந்துருக்கேன்.

எங்க ஆபிஸ்ல திடீர்னு ஹைதராபாத் போகச் சொல்லிட்டாங்க. இன்னைக்கு கிளம்புறேன். அடுத்த வாரம்தான் வரமுடியும்.

சரிங்க, அப்போ பார்த்துக்கலாம்.

நான் நேர்ல பார்த்தா என்ன பேசுவனோ, அதை இப்பவே சொல்லிர்றேனே. பரவாயில்லையா?

அதனால என்னங்க? சொல்லுங்க

என் சம்பளம்........ இவ்வளோதான். சொத்தும் ஏதும் இல்ல. சிகரெட்,தண்ணி பழக்கம் கிடையாது. புக் நிறைய படிப்பேன். கொஞ்சம் சோம்பேறி, பெரிய ஆளா வரணும்னு இதுவரைக்கும் நினைப்பு வந்ததில்ல. இதுக்கு மேல உங்க விருப்பம். யோசிச்சு பதில் சொல்லுங்க

...................

சரிங்க நான் வச்சுர்றேன்.

.......................

ஹலோ, கிளம்பீட்டிங்களா

ஆமா, இப்போ ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கேன்.

உங்க செல்லுல எஃப் எம் இருக்குங்களா?

ம்

பிக் எஃப் எம் இப்போ கேளுங்களேன்

!!!!!!!!!!!!!!! சரி

ஹேப்பி ஜர்னீ

...................................


பிக் எஃப் எம்மா? என்ன புரோகிராமா இருக்கும்!

இந்தா இருக்கு, ஏதோ பாட்டு பாடுது, என்ன பாட்டு


என் கல்யான வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில்
பூமாலை நான் சூடுவேன்.

November 30, 2008

ஐ ஐ டி யில் பி எச் டி படிப்பு – வாய்ப்புகள்

ஐ ஐ டி க்களில் கீழ்கண்ட துறைகளில் பி எச் டி படிப்பிற்க்கான வாய்ப்புகள் உள்ளன

1 அனைத்து பொறியியல் துறைகள்
2 உயிரி தொழில்நுட்பம்
3 இயற்பியல்,வேதியியல்,கணிதம்
4 மேலாண்மை

கல்வித்தகுதி

1 பொறியியல் துறை
பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓரளவு மதிப்பான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். (70 சதவீதத்துக்கு மேல்). இதில் வெட்டு மதிப்பெண் வரும் விண்ணப்பங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும். இளங்கலை, முதுகலை இரண்டிலும் சராசரியாக 75% இருந்தால் போதுமானது. கேட் மதிப்பெண் அவசியமில்லை. வரும் விண்ணப்பங்கள், இருக்கும் இடங்களின் அடிப்படையில் நுழைவுத்தேர்வும், பின் நேர்முகத்தேர்வும் நடைபெறும். தற்போது பெரும்பாலும் நேர்முகத்தேர்வே நடைபெறுகிறது.

2 உயிரி தொழில்நுட்பம்
இதில் முதுகலை பொறியியல்/தொழில்நுட்பம் பட்டம் பெற்றவர்களுக்கு கேட் மதிப்பெண் தேவையில்லை. முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர்களாயின் கேட் மதிப்பெண் தேவை.

3 இயற்பியல்,வேதியியல்,கணிதம்
முதுகலை பட்டத்துடன், கேட் மதிப்பெண்ணும் அவசியம்.

4 மேலாண்மை
மேலாண்மை முதுகலை, பொறியியல் முதுகலை, அறிவியல், கணிதம் முதுகலை போன்ற பட்டம் பெற்ற யாரும் விண்ணப்பிக்கலாம்.

நுழைவு முறைகள்

1 ரெகுலர் (Half Time Research Associate)

எங்கும் பணியில் இல்லாதவர்களுக்கான முறை. (தற்போது வேலையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம், சேர்க்கையின் போது பணியை ராஜினாமா செய்துவிட வேண்டும்). உதவித்தொகை நான்கு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையால் வழங்கப்படும்.

2 குவாலிட்டி இம்ப்ரூவ்மெண்ட் ப்ரொகிராம் (QIP)
கல்லூரிகளில் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், மத்திய அரசு பணியில் (DRDO,ISRO,DOS,DGAQA போல) இருப்பவர்கள் நுழைவு முறை. இங்கும் உதவித்தொகை தரப்படும், அவர்களின் பணியிடத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகை தரப்படும். தேர்வு பெற்றவுடன், முதல் பருவத்தில் குறிப்பிட்ட நாட்கள் வழிகாட்டியுடன் (GUIDE) ஆலோசனை மற்றும் பணிகள் செய்ய வேண்டும் (பணீயிடத்தில் இருந்து, வந்து போய்) . பின் மூன்று ஆண்டுகள் வளாகத்தில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். படிப்பு முடிந்ததும் தங்களின் பணியிடத்திற்க்கே கட்டாயம் திரும்பி செல்ல வேண்டும். இந்த முறையில் வருபவர்கள் வளாக வேலைவாய்ப்பில் பங்கு பெறமுடியாது.

3 ப்ராஜக்ட்
கல்வித்தகுதி இருந்து ரெகுலர் முறையில் தேர்வு பெற முடியாதவர்கள் இதை பின்பற்றலாம். பேராசிரியர்கள் தாங்கள் வெளியிடங்களில் இருந்து பெற்றுள்ள ப்ராஜக்ட்களில் உங்களை இணைத்துக்கொள்வார்கள். குறிப்பிட்ட அளவு அனுபவம் பெற்றவுடன் நுழைவுத்தேர்வில் பங்குபெற்று (எளிதாக இருக்கும்) பி எச் டி யாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்க்கான உதவித்தொகை ஐ ஐ டி யில் உள்ள Industrial Consultancy & Sponsored Research துறை மூலம் வழங்கப்படும். இவர்கள் வளாக வேலைவாய்ப்பில் பங்கு பெறலாம்.

4 ஸ்பான்ஸர்ட்/ எக்ஸ்டெர்னல் கேண்டிடேட்
பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய தனியார்/அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான முறை. இதில் உதவித்தொகை தரப்பட மாட்டாது. முதல் பருவத்தில் வளாகத்தில் தங்கி, ஆராய்ச்சிக்கு தேவையான பாடங்களை (இது எல்லா நுழைவு முறைகளுக்கும் பொது) படிக்க வேண்டும். பின்னர் தங்கள் பணியிடத்திற்க்கு திரும்பி சென்று ஆராய்ச்சியை தொடரவேண்டும். ஆராய்ச்சிக்கான கட்டமைப்பு உள்ள நிறுவனத்தில் பணிபுரிவோருக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும். மேலும் நிறுவனத்திற்க்கும், ஐ ஐ டிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இருக்கவேண்டும். இதற்க்கு கால உச்சவரம்பு கிடையாது.

தேர்வுகள்

நுழைவுத்தேர்வுக்கும், நேர்முகத்தேர்வுக்கும் பெரும்பாலும் அடிப்படையில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வுக்கே முக்கியத்துவம் அதிகம்.

உதவித்தொகை

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ 14,500ம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரூ 15,000ம் வழங்கப்படும். ஒவ்வொரு பருவத்திற்க்கும் கல்வி கட்டணமாக ரூ 9000 நாம் செலுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கு வளாகத்திலேயே குடியிருப்பு வசதி தரப்படும்.

November 29, 2008

நாகேஷின் வித்தியாச வேடங்கள்

தமிழ்திரையுலகம் கண்ட மாபெரும் கலைஞர்களில் முக்கிய மானவர் நாகேஷ். நகைச்சுவை நடிகராகவே பெரும் பாண்மையானோர் மனத்தில் இடம் பெற்றிருக்கும் நாகேஷ் ஆரம்ப காலத்தில் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தவர். பதினாறு வயதினிலே படத்திற்க்கு கூட பாரதிராஜா சப்பாணி வேடத்திற்க்கு நாகேஷைத்தான் மனதில் வைத்திருந்தார். தயாரிப்பாளரின் விருப்பத்தின் பேரிலேயே கமலிடம் கதை சொல்ல சென்றார். படம் முழுவதும் வராமல் நான்கு காட்சிகளில் நடித்தாலும் அதை மறக்க முடியாத அனுபவமாக மாற்றக் கூடியவர். பிணமாக (மகளிர் மட்டும்) நடித்து கூட கைதட்டல் வாங்கமுடியும் என காட்டியவர். இவர் நடித்த நகைச்சுவை வேடங்களை பட்டியலிடமுடியாது, புத்தகமாகத்தான் எழுதமுடியும் என்பதால் அவர் ஏற்று நடித்த நகைச்சுவை அல்லாத வித்தியாச வேடங்களைப் பற்றிய ஒரு பார்வை.

தில்லானா மோகனாம்பாள்

பெரிய மனிதர்களுக்கு பெண்களை ஏற்பாடு செய்து தரும் வைத்தி என்னும் வேடம். கையில் எப்போதும் ஒரு எழுமிச்சம் பழத்துடன் அலைவதும், பெரிய மனிதர்களை கண்டவுடன் அதை கொடுத்துவிட்டு கேள்விக்குறியாய் வளைந்து பேசுவதும், தன்னை விட அந்துஸ்து குறைந்தவரிடம் ஆச்சரியக்குறியாய் நின்று பேசுவதுமாய், பாடி லாங்குவேஜில் பின்னியிருப்பார். அந்த வேலைக்குத் தேவையான அத்தனை கல்யாண குணங்களையும் பிரதிபலிப்பார். ஒரு விருந்தில் சிவாஜியை நாகஸ்வரம் வாசிக்க வேண்டாமென சொல்லுவதும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளிலும் அசத்தியிருப்பார்.

திருவிளையாடல்

ஏழைப் புலவன் தருமி வேடம். இந்த படத்தில் இவர் பேசிய ஒவ்வொரு வசனமும் பள்ளி, கல்லூரி விழா நாடகங்களிலும், மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் கணக்கிலடங்கா முறை மறுசுழற்சி செய்யப்பட்டது. ஆயிரம் லட்டு,பெண்,கோழி என இருக்கும் எல்லா பொருள்களையும் பரிசாக கற்பனை செய்துகொண்டு அதற்கேற்ப சீன் எழுதுவார்கள். சாகாவரம் பெற்ற டிராக் இது.

தாமரை நெஞ்சம்

தாழ்வு மனப்பாண்மையால் அவதிப்படும் வேடம். சரோஜா தேவி நாயகியாய் நடித்த இப்படத்தில், தன் பர்சனாலிட்டி மற்றும் நோய் காரணமாக காதலை நாயகியிடம் சொல்லாமல் தவிக்கும் வேடம். நாயகனாக ஜெமினி கணேசன். தன் மனத்தை தைரியப் படுத்திக்கொண்டு ஒவ்வொரு முறை நாயகியிடம் காதலை சொல்ல முயற்சிப்பதும், பின்னர் பின் வாங்குவதுமாய் அசத்தியிருப்பார். பாலசந்தர் இயக்கிய இந்தப்படத்தில் நாயகனை விட அதிக கவனிப்பு பெற்றவர் நாகேஷே.

எதிர்நீச்சல்

சிறு சிறு வேலைகளை அக்கம் பக்கத்தாருக்கு செய்து கொடுத்து, படித்து முன்னேறும் வேடம். இடையில் ஒரு காதல். முறைவைத்து சாப்பாடு கொடுக்கும் வீடுகளுக்கு சென்று நான் மாது வந்திருக்கேன் என்று சொல்லும் போது அவர் முகத்தில் தோன்றும் உணர்ச்சியை விவரிப்பது கடினம்.

அபூர்வ ராகங்கள்

பாடகி பைரவிக்கு (ஸ்ரீவித்யா) மாரல் சப்போர்டராக இருக்கும் குடிகார டாக்டர் வேடம். தன் நிழலுடன் அவர் பேசும் காட்சியிலும், சியர்ஸ் சொல்லும் காட்சியிலும் டைமிங் பிரமாதமாக இருக்கும்.

மக்கள் என் பக்கம்

கடத்தல்காரனிடம் பணிபுரியும் வழக்கறிஞர் வேடம். ஒரு சிக்கலான வழக்கில் வழி சொல்ல முடியாமல் இவர் தவிக்க, மற்றொரு பெண் வழக்கறிஞர் அதற்க்கு தீர்வு சொல்கிறார். இதனால் அவமானப்படும் அவர் கடத்தல்காரனுக்கு எதிரான அரசியல்வாதியிடம் தஞ்சம் புகுகிறார். பெண் வழக்கறிஞர் தீர்வு சொல்லும் காட்சியில், மற்றவர்கள் ஏளனமாக பார்க்க அதை தாங்க முடியாமல் தன் உணர்ச்சிகளை மறைக்கும் காட்சியிலும், எதிரியிடம் சரணடையும் காட்சியிலும் நடிப்பில் அசத்தியிருப்பார்.

அபூர்வ சகோதரர்கள்

வில்லனாக நடிக்க வேண்டுமென்றால் அஜானுபாகுவான உடலமைப்பு வேண்டும் இல்லையென்றால் மிரட்டும் குரல் வேண்டும். இவை எதுவும் இல்லையென்றாலும் புதுமுகமாக இருந்தால் கூட போதும், தேவையான எபெக்டை கொண்டுவந்து விடலாம். காமெடியனாக மனதில் பதிந்து போனவரை கொடூர வில்லனாக மாற்ற முடியுமா?. முடியும் அது நாகேஷாக இருந்தால். பிரதான வில்லனாக மிரட்டியிருப்பார் இந்த படத்தில்.

மைக்கேல் மதன காம ராஜன்

எட்டு பென்களின் தந்தை, அவர்களின் திருமணத்திற்க்காக பொய்கணக்கு எழுதி முதலாளியின் பணத்தை சுருட்டும் அவினாசி என்னும் கேரக்டரில் அதகளப்படுத்தியிருப்பார். தூக்கி எறிந்தால் கூட பந்து போல் திரும்பிவரும் போதும் சரி, எல்லா சிக்கல்களையும் சமாளிக்கும்போதும் சரி அனாயாசமாக நடித்திருப்பார்.

சேரன் பாண்டியன்

தன்னை மதிக்காவிட்டாலும் தன் மகன் ஊர் போற்ற வர வேண்டும் என துடிக்கும் தந்தை, அதற்க்காக ஊர் பெரிய மனிதர்களான சகோதரர்களை மேலும் சண்டைக்காரர்களாக தன் குயுக்தியால் மாற்றுகிறார். காட்சிக்கு தகுந்தவாறு பாடி லாங்வேஜ், வாய்ஸ் மாடுலேஷனை மாற்றி அசத்துவார்.

கட்டபொம்மன்

தன் மகனை வில்லனின் சூழ்ச்சிக்கு இழந்திருப்பார். அவரின் நம்பிக்கை பேரன் தான். அந்த ஊரிலேயே இருக்கும் வில்லனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என தன் கையாலாகதனத்தை எண்ணி மறுகுவார். ஒருமுறை வில்லனை நேரில் பார்க்கும் போது அவனை அடித்து நொறுக்குவது போல மனக்கண்ணில் பார்ப்பார் (வால்டர் மிட்டி போல) . அந்த காட்சியில் அவர் நடிப்பை பார்த்தால் தான் புரியும்.

நம்மவர்

இந்த வேடத்திற்க்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். கல்லூரி பேராசிரியர் வேடம். ஆசையாய் வளர்த்த மகள் (பிருந்தா), சக மாணவனின் பழி வாங்கலால் (விபச்சார குற்றச்சாட்டு) தற்கொலை செய்துகொள்ள அதை தாங்க முடியாமல் திணறும் வேடத்தில் எல்லோரையும் அழ வைத்திருப்பார். இறந்த மகளுக்கு லேசான தலையனை வையுங்கள் என்று சொல்லும் போதும், அவள் உடன் ஆடுவதாக எண்ணி பாலே ஆடும் போதும் அழாதவர் தியேட்டரில் இல்லை.

தமிழ்சினிமாவின் முக்கிய காதல் படங்கள் பகுதி - 3

அன்புடன்

அருண்விஜய், ரம்பா, வினுசக்கரவர்த்தி,வையாபுரி நடிப்பில் வெளிவந்த படம். கதையின் நாயகியை கடைசிவரை காட்டாமல்,பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை திரையில் கொண்டுவந்த படம் இது. இதற்க்கு முன்னால் தாமரைநெஞ்சம் (நாகேஷ்), சொல்லாமலே (லிவிங்ஸ்டன்), அலைபாயுதே (விவேக்) என ஆண்கள் தாழ்வுமனப்பாண்மையை சித்தரித்த பல படங்கள் வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் பெண்களின் தாழ்வுமனப்பான்மை என்பது அவர்களின் பொருளாதார நிலையாகவே காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. தனக்கு அழகில்லை என்பதால் காதலனை சந்திக்க தயங்கும் பெண்ணை இப்படம் காட்டியது.

காவல்துறை ஆய்வாளரின் (வினுசக்கரவர்த்தி) மகள் கறுப்பு நிறமுடையவள். அவள் ஒரு ஓவியனை(அருண் விஜய் அப்போது அருண்குமார்) காதலிக்கிறாள். அவனின் முன்னேற்றத்துக்கு தன் முகம் காட்டாமல் உதவுகிறாள். நண்பர் குழாமோ அவ்வாறு உதவுவது தங்களின் தோழியோ (ரம்பா) என சந்தேகித்து பின் தெளிவடைகிறார்கள். தன்னை காதலிப்பவளை சந்திக்க பெருமுயற்சி எடுக்கிறான் ஓவியன். நோய்வாய்ப்பட்ட தாயையும் மறக்கிறான். அப்பெண்ணின் தந்தையின் தவறான புரிதலால் நிலைமை சிக்கலாகிறது. காதலி முகம் காட்டாமலேயே உலகை விட்டு செல்கிறாள்.

தன்னை பார்க்க துடிக்கும் காதலனுக்காக கடிதம் அனுப்புகிறாள் பெண். இன்று மாலை கோவிலுக்கு குறிப்பிட்ட நிற உடையில் வருவதாக. காதலன் நண்பர் குழாமுடன் சென்று கோவிலையே அலசுகிறார்கள். அவள் வரவில்லை. தன் இறுதி கடிதத்தில் அவள் சொல்லுகிறாள் "அன்று நான் கோவிலுக்கு சொன்னபடியே வந்திருந்தேன், நீங்கள் நிறமான பெண்ணாகவே தேடி தேடி கேட்டீர்கள். என்னை கேட்கவேஇல்லையே நீயா என்று?" படத்தின் மையமே இதுதான். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அருமையான படமாக வந்திருக்க வேண்டிய கதைக்கரு. பட்ஜெட் மற்றும் பல காரணங்களால் போதிய கவனம் பெறப்படாமல் போனது இந்த படம்.

இந்த படம் நம்மிடம் கேட்கும் கேள்விகள் பல.

ஊடகங்கள் (சிகப்பழகு கிரீம்) தொடர்ந்து சிகப்பு தான் அழகு என அனைவர் மனதிலும் பதிய வைக்கிறதே, இதனால் கறுப்பு நிறமுடைய பெண்களின் மனம் என்ன பாடுபடும்?

முதலில் 36 26 36 என்றார்கள், இப்பொழுது சைஸ் ஜீரோவில் வந்து நிற்கிறார்கள். குண்டாக இருக்கும் பெண்கள் சாபம் பெற்றவர்களா?

பெற்றோர் கூட இவ கறுப்பா பிறந்துட்டா, நெறைய சேர்க்கனும் என்று சொல்லி வளர்க்கும் போது அவளுக்கு எப்படி சுயமரியாதை வளரும்?

ஒரு தெருவில், கல்லூரியில்,அலுவலகத்தில் சிகப்பு நிற பெண்ணுக்கு கிடைக்கும் அதே மரியாதை நிறம் குறைந்த பெண்ணுக்கு கிடைக்கிறதா?

7 G ரெயின்போ காலனி

வாழ்ந்து கெட்ட குடும்பத்து பெண்(சோனியா அகர்வால்), அவளை வெறித்தனமாக காதலிக்கும் (ரவிக்ருஷ்ணா) லோயர் மிடில் கிளாஸ் பையன். அவள் மனமும் கரைகிறது, ஆனால் குடும்ப சூழ்நிலையால் செல்வந்தனை மணக்க வேண்டிய நிலை. உன் காதலுக்கு என் உடலை கொடுக்கிறேன், எடுத்துக்கொண்டு என்னை மறந்து விடு என செயல்படுத்துகிறாள். தொடரும் விபத்தில் அவள் இறக்க, புத்தி பேதலிக்கிறான் நாயகன்.

செல்வராகவன் இயக்கத்தில், யுவனின் இசையில், அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஏ எம் ரத்னம் தயாரித்த படம். நான் முன்பு பணிபுரிந்த இடத்தில், பயிற்சிக்கு வந்த பெண்கள் இந்த படம் பார்க்க போவதால் மாலை ஒரு மணி நேரம் பெர்மிஷன் வேண்டும் என கேட்டு வந்தார்கள். நான் இந்தப்பட தீம் நன்றாக இருக்காது, வேறு படத்துக்கு போங்கள் என சொன்னேன். அவர்களோ கேட்பதாயில்லை. அடுத்த நாள் அவர்களிடம் படம் பற்றி விசாரித்தேன். எங்கள் அனைவருக்கும் படம் பிடித்திருந்தது, க்ளைமாக்ஸில் சோனியா பயன்படுத்திய தலையணை,பாயை தூக்கிகொண்டு அவன் ஓடிவரும் போது அழுதுவிட்டோம் என்று கூறினார்கள்.

எனக்கு காதல் தோல்விப் பாடல்கள் மிக பிடிக்கும். பூங்காற்றிலே (உயிரே), உன்னை நினைச்சேன் (அபூர்வ சகோதரர்கள்), எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்), டீ ஆரின் ஆரம்பகால படங்களின் காதல் தோல்விப் பாடல்கள் என கலைவையாக போல்டரில் போட்டு வைத்து கேட்டுக்கொண்டிருப்பேன். நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலை மட்டும் மூன்று முறை காப்பி செய்து அதில் வைத்திருக்கிறேன்.

இயற்கை

ஜனநாதன் இயக்கத்தில், ஏகாம்பரம் ஒளிப்பதிவில், வித்தியாசாகர் இசையில், அருண்குமார், ஷாம், குட்டி ராதிகா, சீமா பிஸ்வாஸ், கருணாஸ் நடிப்பில் வெளிவந்த இந்தப்படம் மாநில, மத்திய அரசு விருதுகளை பெற்றது. தஸ்தவாஸ்கியின் வெண்ணிற இரவுகளின் சாயல் இந்த படத்தில் இருக்கும். சஞ்சய் லீலா பன்ஸாலி இயக்கத்தில், ரண்பீர் கபூர் (ரிஷிகபூர் மகன்), சோனம் கபூர் (அனில் கபூர் மகள்) நடிப்பில், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் வெளியான சவாரியா படம் இப்பட கருவை தழுவியதே.

துறைமுகப் பகுதியில் வியாபாரம் செய்யும் குடும்பபத்துப் பெண்(குட்டி ராதிகா), ஒரு கப்பல் கேப்டனை (அருண்) காதலிக்கிறாள். அவன் திரும்பி வருவதாக சொல்லிப் போகிறான். மாதங்கள் கடக்கின்றன. அத்துறைமுகத்துக்கு வரும் மாலுமி (ஷாம்) ஒருவன் அவளிடம் காதல் கொள்கிறான். அவளோ தன் பழைய காதலை சொல்லி மறுக்கிறாள். காப்டன் கடல் புயலில் இறந்து விட்டதாக தகவல். மாலுமியை அவள் மணமுடிக்க அரை மனதுடன் சம்மதிக்கிறாள். பின்னர் என்ன ஆனது?
ஷாமின் காதல், ராதிகாவின் உணர்ச்சிப் போராட்டம் என அருமையாக கொண்டு சென்றிருப்பார் ஜனநாதன். இப்படத்தில் வரும் காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் காதலியிடம் நல்ல சிக்னல் கிடைக்காதவர்கள் காலர் டியூனாக வைத்துக்கொள்ள ஏற்றது.

November 27, 2008

வண்ணநிலவனின் கடல்புரத்தில்



அதிகாரம் என்பதே ஒருவன் வாழ்வதற்க்கான பலத்தையும், மன திடத்தையும் தருகிறது. அந்த அதிகாரம் குறையும் போது அவன் வாழ்வதற்க்கான காரணம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. முற்றிலும் அதை இழக்கும்போதோ கிட்டத்தட்ட நடைப்பிணமாகிறான். நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான அலுவலக அதிகாரிகள்/ஊழியர்களிடம் நாம் காண்பது, இதை உறுதிப்படுத்துகிறது. இது இவர்களுக்கு மட்டுமா பொருந்துகிறது?. ஆட்சியாளர்கள், கலைத்துறையினர், வர்த்தகர்கள், விவசாயிகள், நெசவாளிகள் என அனைத்து பிரிவினருக்கும் இது பொருந்துகிறது.



வண்ணநிலவன் எழுதிய கடல்புரத்தில் புதினத்தில் இதுபோல் அதிகாரம் குறையும் ஒரு மீனவனுடைய குடும்பத்தார் வாழ்க்கை அந்த வட்டார மொழியில் சொல்லப்பட்டிருகிறது. இங்கே அவனது அதிகாரமாக இருப்பது அவனுடைய மீன்பிடி படகும், அதை செலுத்தக்கூடிய உடல் வலிமையும் தான். இயந்திரப்படகுகள் வருகையால் நாட்டுப்படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் அடையும் பின்னடைவும் இதில் ஊடுபாகாக சொல்லப்பட்டுள்ளது. அவ்வூர் மீனவர்களின் காதல்,காமம், பாசம், ஏமாற்றம், அரவணைப்பு ஆகியவை இக்கதை மாந்தர்கள் மூலம் நம்மனதில் படியவைக்கப்படுகிறது.




எனக்கு கடலும் மீனவர்களும் அவ்வளவு பரிச்சியமில்லை. தென் தமிழ்நாட்டில் ஒரு விவசாய கிராமத்தில் பிறந்த எனக்கு விவசாயிகளின் வாழ்க்கை மட்டுமே அறியப்பட்டிருந்தது. சிறு விவசாயத்திற்க்கு செய்யும் செலவு ஒரு வழிப்பாதை ஆனபின், வாரிசுகள் வேறு இடத்திற்க்கு பிழைப்புக்கு சென்றபின் மீதமுள்ள பெண்ணின் திருமணத்திற்க்கோ, விட்டுப்போன சீர்வரிசைக்காகவோ பூர்விக நிலத்தை விற்க டவுனுக்கு வரும் பலரை பார்த்திருக்கிறேன், பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் இருக்கும் பாலமுருகன் பிரியாணி ஸ்டாலில். பதிவு முடிந்தவுடன் அங்கே அரை பிளேட் மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, குடும்பத்தார்க்கு பார்சல் வாங்கி டவுன் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் போதுகூட அவர்கள் முகத்தில் சலனம் இருக்காது.



மறுநாள் காலை உடல் கடிகாரம் ஐந்து மணிக்கு எழுப்பிவிட்டுவிட, வழக்கம் போல் கருவிகளை எடுத்துக் கொண்டு நிலத்தை நோக்கி நாலடி வைத்தவுடன் உண்மை உறைத்து தோள் துண்டால் வாயைப் பொத்தி கேவும் போது, மனதளவில் இறந்துவிடுவார். அடுத்து யார் பாலமுருகன் கடையில் பிரியாணி சாப்பிடப்போகிறார்கள் என்பது ஊர் சாவடியில் வருத்ததுடன் பேசிக்கொள்ளப்படும். அதே போல் இங்கும் கதையின் நாயகன் மிக்கேல் குரூஸ் தன் பூர்விக படகையும் வீட்டையும் விற்றுவிட்டு மகளுக்கு விருப்பமானதை வாங்கிக்கொண்டு வருவதும் அதை தொடரும் நிகழ்வுகளும் குறிஞ்சி,முல்லைக்கு மட்டுமல்ல நெய்தலுக்கும் இதே நிலைதானோ என வருந்த வைக்கிறது.


எங்கள் ஊர் பக்கம் சேனைத்தண்ணீர் வைப்பது என்னும் பழக்கம் உண்டு. பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இருக்கும் என நினைக்கிறேன். பிறந்த குழந்தைக்கு சர்க்கரை கலந்த நீரை கொடுப்பதுதான் அது. அதை கொடுப்பவருடைய குணாதியசங்கள் குழந்தைக்கு வரும் என்பது ஒரு நம்பிக்கை. எனவே நன்கு படித்த, வாழ்வில் வெற்றியடைந்தவர்களையே சேணை வைக்கச் சொல்வார்கள். சில சமயம் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒருவனை சிலாகிக்க இப்படி சொல்வார்கள் "அவனுக்கு சேணை வச்சது யாரு?, நம்ம கிழக்கு வீட்டுக்காரரில்ல" என்று. இங்கும் சேணை வைக்கிறார்கள். சர்க்கரை நீரை அல்ல, கடல் நீரை. ஆணாயிருந்தால் அவனுக்கு கடலில் பிழைப்பதற்க்கான உடல் வலுவையும், பெண்ணாய் இருந்தால் எந்த கஷ்டத்தையும் தாங்கும் மனத்திடத்தையும் கடலம்மா தருவாள் என்ற நம்பிக்கை இங்கே. உண்மையிலேயே இங்கே பெண்ணுக்குத்தான் அதிக மனதிடம் வேண்டும். சென்றவன் என்ன ஆனான்? என ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்க வேண்டுமே?



கடல்புரத்தில் வரும் பெண்களில் முக்கியமானவர்கள் மிக்கேல் குருஸ்ஸின் கடைசி மகள் பிலோமினாவும், அவளது தோழி ரஞ்சியும். இருவருக்கும் காதல் தோல்வி இருக்கிறது. ஆனால் அதை கடக்கும் மன உறுதியும் வாய்க்கப்பட்டவர்கள். இவர்களை வண்ணதாசன் வர்ணிக்கும் விதம் அலாதியாக இருக்கும். அவர்களை வர்ணிக்கும் போது சொல்வார், "பிலோமியின் உடல் நிறம் கறுப்பாக இருந்தாலும் உதடுகள் மின்னும் கறுப்பாக இருக்கும்" என்று. பொதுவாக தமிழர்களுக்கு வெள்ளை நிற பெண்ணும் பிடிக்காது, கறுப்பு நிற பெண்ணும் பிடிக்காது. மாநிற மேனி என்றால் மயங்கி விடுவார்கள். எங்கள் ஊர்பக்கம் அதை புதுநிறம் என்பார்கள். அந்த நிறத்தில் முகம் லட்சணமாக இருக்கும் பெண்கள் திருவிழா காலங்களில் தாவணி அணிந்து வளைய வரும் போது ஊரே வெறிக்கும். ஆனால் முழு கறுப்பு என்றால்???. பிலோமி சொல்கிறாள் " ரஞ்சி உன் சிரிப்புல என்னவோ இருக்குடி, இல்லாட்டி இந்த கறுப்பிய யாரு கட்டிக்கிருவா?" இதைப் படித்தபின் யோசித்துப் பார்த்தேன் கடைசியாக நம்மை கவர்ந்த கறுப்பான பெண் யார்? டி ஆர் ராஜகுமாரி,ரோஜா முதல் சினேகா வரை புதுநிறத்து பெண்கள் தானே?. நாம் ரசிக்கும் அழகுகூட சமுதாயத்தின் கருத்தாகவே நம்மீது படிகிறதோ?. சுற்றம் நட்பு என எல்லோரும் கறுப்புதான் அழகு என கற்பித்திருந்தால் நமது ரசனை மாறியிருக்குமோ?


இயந்திரப்படகுகள்வந்ததால் தொழில் நசிந்து வெளியேறுகிறார்கள் நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள். உடனே நமக்குள்ளே கேள்வி வருகிறது. ஏன் இவர்கள் வருங்காலத்தை மனதில் வைத்து வாழ்க்கை நடத்தியிருக்க கூடாது? இந்த எண்ணமே பொருளை மட்டுமே பார்க்கும் பலருக்கும் முதலில் தோன்றும். இயந்திரப்படகுகள் இல்லாமல் வல்லத்தில் மட்டும் சென்று எல்லோரும் மீன் பிடித்தால்? யாவரும் நலமாய் இருக்கலாமே?. அரிய மீன் வகைகள் அழியாது.சுற்றுச்சூழல் நிலை நிறுத்தப்படும். இதைதான் அவர்கள் கடலம்மா கோபித்துக்கொள்வாள் என்ற எளிய மொழியில் சொல்லுகிறார்கள். உண்மையில் இருப்பதோடு அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்வதில் வரும் தலைமுறைக்கு உலகத்தை தருகிறார்கள். தொழிலில் இம்ப்ரூவ்மெண்ட் என்று பேச ஆரம்பிக்கும் போது, நாம் செய்யும் எந்த முயற்சியும் சூழலை பாதிப்பதாகவோ இருக்கும் சமனிலையை சிதைப்பதாகவோதானே முடிகிறது. அதற்கு பாதிப்பில்லமல் செய்ய வழி இருந்தாலும் பொருள் கண்ணை மறைக்கிறதே. அதற்க்கு இந்த கடல்புரத்து வல்லத்துக்காரர்கள் எவ்வளவோ மேல்.




கதையில் வரும் மற்ற பாத்திரங்களான செபஸ்டி,ஐசக்,சிலுவை,வாத்தி, பவுலுபாட்டா போன்றவர்களின் பிம்பத்தை குறைவான வர்ணனைகள் மூலமே ஆசிரியர் நம் மனதில் ஏற்றிவிடுகிறார். அந்த கதாபாத்திரங்கள் பேசும் மொழியும் அவர்களின் இயல்புக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது.
கதையின் மையக்கதாபாத்திரமான மைக்கேல் குருஸ்ன் மனைவி மரியம்மை- ஊர் வாத்தி இடையேயான இலை மறை காய் மறை உறவு, அது தெரிந்திருந்தும் குறைந்துவிடாத மைக்கேலின் மனைவி பாசம், பிலோமிக்கும் தரகருக்கும் இடையே நடக்கும் ஒளிவுமறைவில்லாத பேச்சு, ரஞ்சிக்கும் அவளது கொளுந்தனுக்கும் இடையேயான பாசம் என பல காட்சிகளின் மூலம் அம்மக்களிடையே இருந்த நீக்கு போக்கான தன்மையும் வெளிப்படுகிறது.
இந்த கதை நடக்கும் காலகட்டம் 1970 என்பதால் இதில் சொல்லப்படும் படகின் விலை 350 ரூபாய், திருவிழாகாசு 10 பைசா என்பதெல்லாம் நம்மை ஆச்சரியப்படுத்துபவை. மேலும் அக்காலத்திலேயே ஆசிரியர்கள் உபதொழில்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியப்படுத்தப்படுகிறது. அப்போதைய முக்கிய லாபம் தரும் வியாபாரங்களில் ஒன்றாக சைக்கிள் ஸ்பேர்பார்ட்ஸ் கடை சொல்லப்படுகிறது.

இந்த நாவலின் சிறப்பே, இதில் வரும் சம்பவங்கள், குடும்பத்தில் நடக்கும் வாத பிரதி வாதங்கள் எல்லாம் எந்த சமூகத்திற்க்கும் தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் அமைந்திருப்பதேயாகும். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் கடலைப் பார்த்தேன். இன்றுவரை கடற்கரையை தாண்டி எதையும் யோசித்ததில்லை. ஆனால் இதை வாசிக்கும்போது, கடல்புர மக்களின் பேச்சுவழக்கு, உடல்மொழி ஆகியவை என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தன. இனி எப்பொழுதாவது மீனவர் குடியிருப்பு பக்கம் போனால் அங்கே குரூஸையும், பிலோமியையும், பவுலுபாட்டாவையும் என் கண்கள் தேடும்.


நூலின் பெயர் : கடல்புரத்தில்


ஆசிரியர் : வண்ணநிலவன்


பக்கங்கள் : 128


விலை : ரூ 75.


வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,


ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701

நூலை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்



நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

November 26, 2008

என் சகியே

திருமணமான புதிதில் உன்னிடம் பேசிக் கொண்டேயிருப்பேன். ஒரு தொடர்வண்டி பயனத்தில் அதே போல் நான் பேசிக்கொண்டே வந்தபோது, எதிர் இருக்கை பயணி புருவம் உயர்த்தினார். அவரிடம் நான் சொல்லலாம் என நினைத்தேன். " நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன். இந்த 25 ஆண்டுகளில் காதலாக யாரிடமும் பேசியதில்லை. இப்போது சேர்த்து வைத்து பேசிக்கொண்டிருக்கிறேன்".

ஒருமுறை அலுவலகத்தில் இருந்து திரும்பிவந்த போது கோபமாய் இருந்தாய். திருமணத்துக்கு இரு ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்த மொக்கை கவிதைகளை காட்டி, "யாரை நினைத்து எழுதுயது இது?" என சண்டையிட்டாய். அப்பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே, இன்று வரை அதை அனுபவித்ததில்லை நான். ஆஹா நம் மீதும் பொசசிவ்வாய் இருக்க ஒரு பெண் இருக்கிறாளே!!! . நம்மாலும் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்க முடிந்திருக்கிறதே!!! என்று.

உறவிலும் சரி, நட்பு வட்டாரத்திலும் சரி என்றும் நான் முதன்மையாகவோ, முக்கியமான நபராகவோ கருதப்பட்டதில்லை. வந்தால் சரி என்பார்கள். வராவிட்டால் அதைப்பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். நீ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்டா என்ற பூச்செண்டை யாரும் எனக்கு கொடுத்ததில்லை. ஒரு முறை உன் ஊர் திருவிழாவுக்கு சென்றிருந்தாய். நான் தொலைபேசியில் அழைத்த போது சொன்னாய் "போன தடவை ஒவ்வொண்ணுக்கும் கமெண்ட் அடிச்சு சிரிக்க வச்சீங்க, இந்த தடவை நீங்க இல்லாம ஒரே போர்". கால காலமாய் பூச்செண்டு எதிர்பார்த்தவனுக்கு ஆர்கிட் மலர் தோட்டம் அந்த பதில்.

ஜாதி, ஜாதகம் பார்த்து திருமணம் செய்கிறார்களே என்று சமுதாயத்தின் மீது ஒரு வெறுப்பு இருந்தது. காதல் திருமணங்கள் மட்டும் தான் நடக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் இப்போதோ சமுதாயத்தை வணங்கிக்கொண்டிருக்கிறேன். பெண்களை துளியளவு கூட இம்ப்ரெஸ் பண்ண இயலாத தோற்றம், ஆரம்பித்த உடனேயே அறுக்காதடா என நண்பர்களே புலம்பும் அளவுக்கு போரான என் பேச்சு, சராசரி அறிவு, அதற்கும் கீழான வசதி என இருந்த எனக்கு உன்னைப்போல் ஒரு தேவதையை எப்படி காதலித்து அடையமுடியும். வாழ்க ஜாதி,ஜாதகம்.

இதுவரை நான் அடைந்த தோல்விகளெல்லாம் உன்னை திருமணம் செய்ததால் அர்த்தமற்றதாகிப் போய்விட்டது.

எவ்வளவு அழைப்பு வார்த்தைகள் இருந்தாலும் உன்னை அழைப்பது சகி என்று தான். தொடர்ந்து இதுபோலவே என்னை சகித்துக்கொள் என்று வேண்டிக்கொள்ளத்தான்.

November 22, 2008

1979 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள்

கடந்த 75 ஆண்டுகளில் சிறந்த 10 தமிழ்படங்களை பட்டியலிடுமாறு எந்த பிரபலங்களைக் கேட்டாலும் இரண்டு படஙகள் மட்டும் தவறாமல் அந்த பட்டியலில் இடம் பெறும். அவள் அப்படித்தான் மற்றும் உதிரிப் பூக்கள். இந்த இரண்டுமே 79 ஆம் ஆண்டு வெளிவந்தவை. இவை தவிர இன்னும் ஏராளமான வித்தியாச கதைக் கருவை கொண்ட படங்கள் இந்த ஆண்டு வெளிவந்தன.

அவள் அப்படித்தான்

பெண் நதியைப் போல. ஆணாதிக்கம் எனும் பெரும் பாறை அவள் போக்கில் குறுக்கிட்டு அவளின் இயல்பு மாறி பயணிக்க வைக்கிறது. அவளின் எல்லைகளை சுருக்குகிறது. மெதுவாக ஓடும் நதியால் அந்த பாறையை என்ன செய்ய முடியும்?. பல யுகங்களின் முடிவில் தான் கூழாங்கல்லாக மாற்ற முடியும். ஆனால் அவளே புதுவெள்ளமாக புறப்பட்டு பிரவாகமாக பொங்கினால் பாறையை உருட்டி விடலாமே?. அவ்வாறு பொங்குபவள்தான் இந்த மஞ்சு [ஸ்ரீபிரியா]. ருத்ரைய்யா இயக்கத்தில், கமல்ஹாசன்,ரஜினி நடித்து வெளியான படம். ஒரு ஆவணப்படம் எடுக்கும் நிகழ்வை கதைக்களமாக வைத்து பெண்ணுரிமையை பேசியபடம். உறவுகள் தொடர்கதை என்னும் இனிமையான பாடலும் உண்டு. ஸ்ரீபிரியா பேசும் பெண்ணிய வசனங்கள் அப்போது அதிகப்பிரசங்கித்தனமாக தோன்றினாலும் அதில் இருந்த நிஜம் அனைவரையும் சுட்டது.

உதிரிப் பூக்கள்

மணிரத்னம் சில காலம் முன் ஒரு பேட்டியில் சொன்னது “ உதிரிப் பூக்கள் போல ஒரு படம் கொடுத்து விட்டால் சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்ததற்கு எனக்கு ஒரு நிறைவு கிடைக்கும்”. எனக்கென்னவோ அதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மகேந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் விஜயன், அஸ்வினி,சரத் பாபு, சாருஹாசன் நடிப்பில் வெளியான இந்தப்படம் தமிழ்சினிமாவின் மைல்கல் படம். ஊர் பெரிய மனிதரும், பள்ளி தாளாளருமான விஜயன், மனைவி உடல் நலமின்றி இருப்பதால் தன் மைத்துனியை திருமணம் செய்ய நினைக்கிறார். மனைவி இறக்க, பின் இவர் பல தவறுகள் செய்ய, ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத ஆனால் மறக்கவே முடியாத கிளைமாக்ஸ். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் ஹாஜா ஷெரிப்,அஞ்சு. இவர்கள் பங்கு பெறும் அழகிய கண்ணே எனும் பாடலில் காட்டப்படும் தாய், குழந்தைகளுக்கு இடையேயான அன்னியோன்யம் கண்ணில் நீரை வர வழைத்து விடும். மிக குறைவான வசனங்கள். ஆனால் எல்லாமே கத்தியின் கூர்மை. என்றும் இல்லாத திருநாளாய் கடுகடு கணவன் பூ வாங்கி அனுப்புகிறான். அதை பெற்றுக் கொண்ட மனைவி வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்க்கிறாள். மழை வருகிறதா என்று?. இதுபோல பெரும்பாலான காட்சிகள் வசனமே இல்லாமல் சிம்பாலிக்காகவே அமைக்கப்பட்டிருக்கும்.


ரோசாப்பூ ரவிக்கைக்காரி

சிவகுமாரின் 100 வது படம். தீபா நாயகி,இது ஒரு பீரியட் பிலிம். சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் வண்டிச்சோலை என்னும் கிராமத்தில் நடைபெற்ற கலாசார மாற்றங்களை திரையில் பிரதிபலித்த படம். செம்பட்டை (சிவகுமார்) அந்த கிராமத்தில் சிறு சிறு வேலை செய்துவருபவர். அவருக்கு நகரத்து நாகரீகப் பெண் (தீபா) மனைவியாக அமைகிறார். தீபாவுக்கு, தன் தந்தையின் நண்பரும் வனத்துறை அதிகாரியுமான சிவசந்திரனுடன் தொடர்பு ஏற்படுகிறது. சிவகுமாருக்கு இது தெரியவந்ததும் தற்கொலை செய்து கொள்கிறார். வெத்தலை வெத்தலை வெத்தலையோ, உச்சி வகுடெத்து பிச்சிபூ வச்ச கிளி போன்ற பாடல்கள் கொண்டது. இப்படத்தின் பல காட்சிகள் சிம்பாலிக்காக அமைக்கப்பட்டிருக்கும்.

சுவரில்லாத சித்திரங்கள்

இயக்குனராக பாக்யராஜின் முதல் படம். சிறுநகரத்தில் கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்கள் குடியிருக்கும் தெருவொன்றில் நடைபெறும் சம்பவங்களே படம். கதானாயகியை ஒரு தலையாக காதலிக்கும் பாக்யராஜ், அவளை காதலிக்க அந்த தெரு தையல் கடையில் டாப் அடிக்கும் சுதாகர். தையல் காரர் கவுண்டமணி என இயல்பான பாத்திரங்கள். தண்ணி எடுக்கப்போகும் போது காதலனுக்கு சிக்னல் கொடுக்கும் காட்சிகள் யதார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கும். பாக்யராஜ் தான் ஒருதலையாய் காதலித்தவளுக்காக ஒரு ஊமை கைம்பெண்ணை மணந்து கொள்வதும், ஆனால் இவர் செய்த தியாகம் அர்த்தமற்றதாகி விடுவதுமாய் முடிவு அமையும். காதல் வைபோகமே என்னும் துள்ளல் பாடல் இப்போது சுந்தர் சி யின் படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.


அழியாத கோலங்கள்

பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரதாப், ஷோபா மற்றும் சிறு வேடத்தில் கமல் நடித்த படம். இந்தி இசை அமைப்பாளர் சலீல் சௌத்ரி இசை அமைத்த படம். 15 வயதில் இருக்கும் விடலை பையன்களுக்கு வரும் காமத்தைப் பற்றி பேசிய படம். பூவண்ணம் போல நெஞ்சம் என்னும் காவியமான பாடல் கொண்ட படம்.

புதிய வார்ப்புகள்

இப்படபிடிப்பிற்கு ஹீரோயின் உட்பட அனைவரும் லொக்கேஷனுக்கு சென்று விட்டார்கள். இரண்டு, மூன்று நாள் படபிடிப்பும் முடிந்து விட்டது. ஹீரோ யார் என்று இயக்குனர் பாரதிராஜா யாரிடமும் சொல்லவில்லை. உதவி இயக்குனர் பாக்யராஜ் வாய் விட்டு கேட்டு விட்டார். நீதான்யா ஹீரோ என்கிறார் இயக்குனர். படமும் வெற்றி. இப்படத்தில் இடம் பெற்ற தந்தன தந்தன தாளம் வரும் பாடல் பல ஆண்டுகளுக்கு திரையில் காதல் வரும்போது குறிப்பால் உணர்த்த பயன்பட்டது.

பசி

இப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஷோபா பெற்றார். துரை இயக்கிய இந்தப் படம் சென்னை குடிசை வாழ் மக்களை ஓரளவு எதார்த்தமாக பிரதிபலித்தது. விஜயன், டெல்லி கணேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஏழ்மையிலும் கண்ணியம் தவறாதவர்கள் குடிசை வாழ் மக்கள் என்ற கருத்தை சொன்ன படம்.

கன்னிப்பருவத்திலே

ராஜேஷ்,வடிவுக்கரசி,பாக்யராஜ் நடித்த படம். பாலகுரு இயக்கி சங்கர் கணேஷ் இசைஅமைத்த படம். வடிவுக்கரசியின் கணவர் ராஜேஷ் தாம்பத்ய வாழ்வில் ஈடுபடும் தகுதி இல்லாமல் இருக்கிறார். பாக்யராஜ் இடையில் வருகிறார். சிக்கல்கள். இப்படத்தில் இடம்பெற்ற நடையை மாத்து சரியான நாட்டுப்புற பாணி குத்துப் பாடல். பட்டு வண்ண ரோசாவாம் என்ற அருமையான மெலடியும் உண்டு.

மாந்தோப்புக்கிளியே

சுருளிராஜனை மக்கள் இன்னும் மறக்காமல் இருக்கும்படி செய்த படம். இதில் அவர் ஏற்று நடித்த கஞ்சன் கதாபாத்திரம் ஒரு டிரெண்ட் செட்டர். எம் ஏ காஜா இயக்கிய இப்படத்தில் தீபா,சுதாகர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

நிறம் மாறாத பூக்கள்

பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் விஜயன்,ரத்தி,ராதிகா, சுதாகர் நடித்த படம். ரத்தி இதில்தான் அறிமுகம். ஆயிரம் மலர்களே மலருங்கள், முதன் முதலாக காதல் டூயட் போன்ற இனிமையான பாடல்கள்.

ஆறில் இருந்து அறுபது வரை

நான் கமல் ரசிகனாக இருந்தாலும், ரஜினி நடிப்பிற்க்கும் மிகப் பெரிய ரசிகன் நான். ரஜினியின் ஆன்மீக, பெண்ணடிமை மற்றும் அரைகுறை அரசியல் கருத்துக்களுக்காகவே அவரை விமர்சிப்பேன். நண்பர்களுடனான விவாதங்களில் ரஜினியின் நடிப்பை யாராவது விமர்சித்தால் நான் சொல்லுவது ”முள்ளும் மலரும், ஆறில் இருந்து அறுபது வரை எல்லாம் பார், பின் பேசு”. ஒரு கண்டிப்பு மிகுந்த அண்ணனாக அமர்க்களப்படுத்தியிருப்பார் இந்த படத்தில். இந்த ஆண்டில் ரஜினியின் அன்னை ஓர் ஆலயம், தர்மயுத்தம்[ ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு] போன்ற படங்களும் வந்தன.

கல்யாண ராமன்

ஜி ரங்கராஜன் இயக்கிய முதல் படம். கமல் இருவேடம், ஒன்று எத்துப்பல். ஸ்ரீதேவி இணை. எத்துப்பல் அப்பாவி கமல் கலக்கியிருப்பார். பின் இந்த இயக்குனர் மீண்டும் கோகிலா, கடல்மீன்கள் போன்ற படங்களையும் இயக்கினார். இவருக்கு உதவவே கமல் மகராசன் படத்தில் நடித்தார்.

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

ஸ்ரீதர் இயக்கத்தில் விஜயகுமார், லதா,ஜெய்கணெஷ் நடிக்க வெளியான படம். நானே நானா, அபிசேக நேரத்தில், என் கல்யான வைபோகம் உன்னோடுதான், குறிஞ்சி மலரில் போன்ற இளையராஜாவின் அதி பயங்கர ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.

நினைத்தாலே இனிக்கும்

பாலசந்தர் இயக்கம். கமல்,ரஜினி,ஜெயபிரதா, எம் எஸ் வி இசை, கண்னதாசன் பாடல்கள். வேறெதுவும் சொல்ல வேண்டுமா?
பாலசந்தர் இயக்கிய நூல் வேலியும் இந்த ஆண்டுதான் வந்தது. கமல் ரஜினி இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் இந்த ஆண்டில் வந்ததே.

இப்படி பல வித்தியாச படங்கள் வந்தாலும் வசூலில் சாதனை படைத்த படம் சிவாஜியின் திரிசூலம். இப்படத்தில் மூன்று வேடம். அதில் அப்பா வேடம், சூழ்னிலையால் பிரிந்துவிட்ட தன் மனைவியிடம் தொலைபேசியில் பேசும் காட்சியின் வாய்ஸ் மாடுலேஷன் மிமிக்ரி கலைஞர்களால் இப்பொழுது உபயோகிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பல படங்கள் வணிக ரீதியிலும் சிறப்பாக இருந்தாலும் பஞ்ச கல்யாணி என்னும் படமும் பாப்பாத்தி என்னும் படமும் வினியோகஸ்தர்களை மகிழ்சிப்படுத்தியது. அழகிய சலவைத் தொழிலாளி, அவள் வளர்க்கும் கழுதை, ஒரு மைனர், ஒரு காதலன் இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதை பி சி செண்டர்களை கலக்கியது. ரதி தேவி நாயகியாக நடித்த பாப்பாத்தி படம் வயது வந்தவர்களுக்கு மட்டும். நாயகி மேலாடை இன்றி நடித்த படம். இதுவும் பரபரப்பாக ஓடியது.

எந்த ஆண்டிற்க்கும் டாப் டென் பாடல்களை பட்டியலிடலாம். இந்த ஆண்டிற்கு அதை செய்தால் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியதுதான். இந்த ஆண்டின் சிறந்த மெலடி மற்றும் துள்ளல் இசைப் பாடல்களை ஒரு எம்பி3 ஆக பதிந்தால் விற்பனை ஓகோவென இருக்கும்.