February 23, 2015

இயக்குநர் மணிவாசகம்

20 வருடங்களுக்கு முன்னர், சரியாகச் சொல்வதென்றால் 1993 ஆம் வருடம், மதுரையின் மீரான் சாகிப் தெருவான தானப்ப முதலி தெருவின் முனையில் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் நின்று கொண்டிருந்த போது, எங்கள் ஊர் தியேட்டர் ஒன்றின் மேனேஜரை தற்செயலாக சந்தித்தேன்.  அப்போது, அவர் தன் உதவியாளருடன் ”என்ன, ரொம்ப பிகு பண்ணுறான்” என்பது மாதிரி பேசிக் கொண்டிருந்தார். ஏதாவது ரஜினி அல்லது விஜயகாந்த் படத்தைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள் போலும் என நினைத்தேன். தொடர்ந்த அவர்களுடைய பேச்சின்  மூலம் அவர்கள் சரத்குமார் நடித்த “கட்டபொம்மன்” படத்தை வாங்குவதற்காக முயற்சி செய்கிறார்கள் எனத் தெரியவந்தது.

அதற்கு முந்தைய வருடத்தில் சூரியன், சாமுண்டி என இரண்டு வணிகரீதியான வெற்றிப்படங்களில் சரத்குமார் நடித்திருந்தாலும் 93ல் வெளியான ஆதித்யன், பேண்ட்மாஸ்டர், தசரதன், முன் அறிவிப்பு மற்றும் பெரிய பட்ஜெட் படமான ஐ லவ் இந்தியா ஆகியவை மண்ணைக் கவ்வியிருந்தன. அப்படி இருந்தும் கட்டபொம்மனுக்காக ஏன் சண்டை போடுகிறீர்கள்? எனக் கேட்டேன். சரத்குமாருக்காக இல்லை மணிவாசகத்துக்காக என்றார் தியேட்டர் மானேஜர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தொடர்ந்த அவர், மணிவாசகத்தோட முதல் படம் “நம்ம ஊரு பூவாத்தா”, அடுத்து எடுத்த பெரிய கவுண்டர் பொண்ணு, பட்டத்து ராணி எல்லாமே நம்ம தியேட்டர்ல ரெண்டு வாரம் ஓடுச்சுப்பா. ரேட்டும் கம்மியா சொல்லுவாங்க. லாபம் கையில நிக்கும். கட்டபொம்மன்ல பாட்டெல்லாம் நல்லா இருக்கு. நேத்து மெட்ராஸ்ல படம் பார்த்தவங்க நல்லாயிருக்குன்னு வேற சொன்னாங்க. அதான் புக் பண்ணீரலாம்னு வந்தேன் என்றார். அவர் கணித்தது போலவே படம் எங்கள் ஊரில் மூன்று வாரங்கள் ஓடி, அவர்களுக்கு நல்ல லாபத்தை தந்தது.
இப்படி தியேட்டர்காரகளும் நம்பிக்கை வைக்கும் இயக்குநராக இருந்தவர் மணிவாசகம். பெரும்பாலும் அவர் கிராமிய கதைகளங்களையே கையாண்டார். பெரும்பாலான கிராமியப் படங்களின் பேக் டிராப்பாக உழவு மற்றும் அதைச் சார்ந்த தொழில்களே இருக்கும், இல்லையென்றால் கிராமியக் கலைவடிவங்கள் இருக்கும். கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், தெம்மாங்கு பாட்டுக்காரன், நாடோடி பாட்டுக்காரன், நாட்டுப்புற பாட்டு, என் ஆச ராசாவே என உதாரணங்கள் ஏராளம். மிக குறைவாகவே வேறு தொழில் சார்ந்த களங்கள் கையாளப்படும்.

மணிவாசகம் தன்னுடைய படங்களில் முழுக்க முழுக்க இம்மாதிரி வேறு தொழில் சார்ந்த களங்களையே தன்னுடைய படங்களில் பயன்படுத்தினார். பாதிக்கும் மேலான காட்சிகள் அந்த இடத்திலேயே நடைபெறும். அவரின் முதல் படமான நம்ம ஊரு பூவாத்தாவில் முரளி நாயகன், கௌதமி நாயகி. கௌதமி தையல் வேலை செய்யும் ஏழைப்பெண். அப்போதெல்லாம் கிராமங்களில் பெண்கள் வயதுக்கு வந்த உடன் படிப்பை நிறுத்தி விடுவார்கள். திருமணம் ஆகும் வரை அவர்கள் ஏதாவது வேலை செய்து வருவார்கள். பெரும்பாலான பெண்கள், தையல் கற்றுக்கொண்டு, வீட்டில் ஒரு தையல் மெஷினை வைத்து வீட்டிற்கு பொருளாதார பலம் சேர்ப்பார்கள். அந்த மாதியான தையல் பெண் கேரக்டரில் கௌதமி நடித்திருந்தார். முரளியின் மீது அவருக்கு வரும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என எளிமையான கதை. கவுண்டமணியின் நகைச்சுவை, தேவாவின் கதைக்குப் பொருத்தமான இசை என படம் 50 நாட்கள் ஓடியது. அந்தப் படத்தின் குறைவான பட்ஜெட்டினால் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் லாபம் கிடைத்தது.

உடனே அடுத்து சரத்குமார்-கௌதமி காம்பினேஷனில் பெரிய கவுண்டர் பொண்ணு படத்தை தொடங்கினார். அப்போது சரத்குமார் நாயகனாக மாறியிருந்த நேரம். அவரை முழு நாயகனாக மாற்றிய சூரியன் வராத காலகட்டம். கதை நடக்கும் இடமாக மணிவாசகம் தேர்வு செய்தது இரும்பு பட்டறை. முதலாளி கம் தொழிலாளியாக சரத்குமார், துணைக்கு கவுண்டமணி-செந்தில். இசைக்கு தேவா. சரத்குமாரின் அம்மா மனோரமா, தன் தம்பிக்கு தன் சொத்தைக் கொடுத்து, அவர் மகளை தனக்கு மருமகளாக்க வேண்டும் என சத்தியம் வாங்கியிருப்பார். தம்பி மகள் கௌதமி, பட்டணத்துக்கு படிக்கச் சென்று, வந்தபின் திருமணம் செய்ய ஒத்துக் கொள்ள மாட்டார். எப்படி கௌதமியை சரத் திருமணம் செய்கிறார் என்பதே கதை. படத்தின் ஹைலைட் கவுண்டமணி-செந்திலின் காமெடி காட்சிகள் தான். மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படமும் அனைவருக்கும் லாபம் தந்தது. கிராமப்புற பகுதிகளில் சரத்குமாருக்கு ஒரு இமேஜைத் தந்தது.

முதல் இரண்டு படங்களிலும், தனக்கு கைகொடுத்த காமெடியை அடுத்த படத்தில் முழுவதுமாக எடுத்துக் கொண்டார் மணிவாசகம். அதுதான் பட்டத்து ராணி. கவுண்டமணியின் காம்பவுண்டில் வசிக்கும் யாரும் அவருக்கு வாடகை தருவதில்லை. எனவே செந்தில் ஒரு ஐடியா தருகிறார். வயதானவரை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணை இங்கே குடிவைத்தால், அந்தப் பெண்ணை வசீகரிப்பதற்காக எல்லா ஆண்களும் நல்லவராக நடிக்க முயற்சிப்பார்கள்.  வாடகையை ஒழுங்காகக் கொடுப்பார்கள் என. இளம்பெண்ணாக கௌதமியும், வயதானவராக விஜயகுமாரும் நடித்திருந்தார்கள். ஜனகராஜ், மணிவாசகம், டெல்லி கணேஷ் ஆகியோர் குடித்தனக்காரர்களாக நடித்திருந்தார்கள். காட்சிக்கு காட்சி நகைச்சுவை இழையோடிய படம். ஆனால் பெரிய வெற்றியைப் பெறவில்லை. விஜயகுமாருக்குப் பதிலாக அப்போதைய நாயக நடிகர்களில் ஒருவரே வயதான கெட்டப்பில் நடித்திருந்தால் படம் நன்கு கவனிக்கப்பட்டு இருந்திருக்கும்.

அடுத்து மணிவாசகம் இயக்கிய படம்தான் “கட்டபொம்மன்”. வழக்கமான பழிவாங்கும் கதைதான். சரத்குமார் ஜோடியாக வினிதா. முக்கிய வேடம் ஒன்றில் நாகேஷ். தேவாவின் இசை. கிராமத்து ரைஸ்மில் பேக்டிராப். சரத்குமார் முதலாளி. கவுண்டமணி சூப்பர்வைசர், செந்தில் உதவியாளர். இன்றுவரை இந்தப்படத்தின் காமெடி காட்சிகள் ரசிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய இளைஞர்களின் கலாச்சாரமான மீம்களிலும் இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் கவர்ச்சிக்கு இந்தி நடிகை பூனம் தாஸ் குப்தாவும் நடித்திருந்தார். இந்தப் படம் பி மற்றும் சி செண்டர்களில் நல்ல வசூலைத் தந்தது. சரத்குமாரை ஒரு வணிக மதிப்புள்ள நாயகனாக மாற்றியதில் இந்தப் படத்திற்கும் ஒரு பங்கு உண்டு.

அடுத்து மணிவாசகம் ரைஸ்மில்லில் இருந்து ஆயில் மில்லுக்கு மாறினார். பிரபுவை நாயகனாகவும்,கனகாவை நாயகியாகவும் கொண்டு வழக்கம் போல கவுண்டமணி-செந்தில் காமெடி, தேவாவின் இசை. கனகா மில் முதலாளியின் மகள், பிரபு, கவுண்டமணி அங்கே சூப்பர்வைசர்கள். பல தடைகளுக்குப் பின்னர் பிரபு, கனகாவை திருமணம் செய்து கொள்வார். பெண்ணாசை கொண்ட ஆனந்த்ராஜ், கனகாவை அடையவேண்டும் என நினைப்பார். அதுவும் கன்னியாக. அதனால் பல குழப்பங்களைச் செய்வார். இறுதியில் வழக்கம்போல எல்லாச் சதிகளையும் முறியடித்து நாயகன் வெல்வார். ஒரு வகையில் வாலி படத்துக்கு இது இன்ஸ்பிரேஷனாக இருக்குமோ என நான் நினைத்ததுண்டு. இந்தப் படத்திலும் கவுண்டமணி அமர்க்களப் படுத்தி இருப்பார். இப்போது, படங்களில் காமெடி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஷகிலா தன் தங்கை ஷீத்தலுடன் இணைந்து இந்தப் படத்தில் கவுண்டமணியின் ஜோடியாக நடித்திருப்பார். இந்தப் பட காமெடி காட்சிகளும் மீம் தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் முதலுக்கு மோசமில்லாமல் போனது.

அடுத்ததாக மீண்டும் டெய்லர் கடைக்கே வந்தார் மணிவாசகம் “மருமகன்” திரைப்படத்தின் மூலமாக. இம்முறை ஆண் டெய்லர். பாம்பேயில் நவீன டெய்லரிங் கற்று வந்தவராக, கார்த்திக் நடித்தார். கார்த்திக்கை காதலிக்கும் எம்.பியின் மகளாக மீனா. வழக்கம் போல் தேவாவின் இசை,மனோரமா, கவுண்டமணி, செந்தில் ஆகியோரும் உண்டு. இதிலும் கவுண்டமனி-செந்தில் காமெடி நன்கு ஒர்க் அவுட் ஆனது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

நாட்டாமை படத்தின் வெற்றிக்குப் பின்னர், சரத்குமார் தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக எடுத்த படம் ”நாடோடி மன்னன்”. செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்து, கோடீஸ்வரரின் மகள் மீனாவை மணந்து, பின் தன்னுடைய உழைப்பால் முன்னேறி சென்னை நகரின் ஷெரிப் ஆக மாறும் பாத்திரம் சரத்குமாருக்கு. எம்ஜியாரின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாகவும், அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும் இருந்த படம் நாடோடி மன்னன். அதே போல தன்னுடைய கேரியரும் மாற வேண்டுமென சரத்குமார் நினைத்து இந்தப் படத்தை எடுக்கச் சொல்லி இருப்பார் போலும்.

பழைய கதை, செருப்பு தைக்கும் இடம், அங்கு வரும் காதல், மீனா தன் காதலை சரத் ஏற்றுக் கொள்ள எடுக்கும் முயற்சி என நகரும் கதையில் காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. நாடோடி மன்னனில் இரண்டு எம்ஜியார் என்றால் இங்கே இரண்டு மீனா. மகள் மீனாவை காதலிக்கும் கேரக்டரில் விக்னேஷ். பாரின் லொக்கேஷனில் எடுத்த பாடல் காட்சிகள் ரசிக்கப்பட வில்லை. மணிவாசகம் இயக்கிய படங்களிலேயே அதிக செலவு செய்த படம் இதுதான். தோல்வி அடைந்ததால் பெரிய நஷ்டத்தை அனைவருக்கும் கொடுத்தது.

இந்தப் படத் தோல்விக்குப் பின்னர் மணிவாசகம் இயக்கிய படம் மாப்பிள்ளை கவுண்டர். பிரபு நாயகனாகவும், ஷாக்சி, சுவாதி நாயகிகளாகவும் நடித்தனர். படிக்க வைத்தால் நம் குழந்தைகள் வேறு ஒருவரை காதலித்து விடுவார்கள். எனவே படிக்க வைக்க வேண்டாம் என அக்காவும், தம்பியும் முடிவெடுக்கிறார்கள். அக்கா, தன் மகன் பிரபுவை படிக்க வைக்காமல் இருக்கிறார். ஆனால் தம்பியோ தன் மகள் ஷாக்‌ஷியை படிக்க வைத்து விடுகிறார். ஷாக்‌ஷிக்கு பிரபுவை பிடிக்காமல் போக, தன் வீட்டிற்கு பஞ்சம் பிழைக்க வந்த சுவாதியை திருமணம் செய்து கொள்கிறார் பிரபு. 1997ல் ஏற்றுக் கொள்ள முடியாத கதை. அரதப் பழசான காட்சி அமைப்புகள். இந்தப் படத்தில் இரண்டு மாறுதல்கள். ஒன்று கதையின் பேக் டிராப்பாக விவசாயம். மற்றொன்று கவுண்டமணிக்குப் பதிலாக வடிவேல். இந்தப் படமும் தோல்விப்படமே.

மணிவாசகம் தனக்கென ஒரு டெம்பிளெட் வைத்திருந்தார். அதன்படியே படங்களை அவர் இயக்கினார். பெரும்பாலும் கொங்கு பாஷை, அக்கா-தம்பி பாசம், தொழிற் கூடம் ஒன்றைச் சுற்றி நடக்கும் கதை, நிறைய நகைச்சுவை, எந்த விதத்திலும் தனித்து தெரிந்திராமல் பழக்கப்பட்ட சிட்சுவேசன்களுக்கான பழக்கப்பட்ட டியூனில் பாடல்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை. வர முடியவில்லை என்றும் சொல்லலாம்.
இப்போது நீங்கள் பார்க்கும் ஆறு, சென்ற வினாடி நீங்கள் பார்த்த ஆறு அல்ல என்ற புகழ்பெற்ற கவிதை வரிதான் ஞாபகம் வருகிறது. மக்களின் ரசனை நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகிறது. சில படங்கள், அடுத்து வரும் படங்களின் படமாக்கலில், மக்களின் எதிர்பார்ப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. 1990 ஆம் ஆண்டு படத்தைப் பார்த்தவர்கள் 1997ல் எவ்வளவு ரசனை மாற்றம் கொண்டிருப்பார்கள்? நிச்சயம் ஒரு கூடுதலான அனுபவத்தையே எதிர்பார்ப்பார்கள். அதைக் கணக்கில் கொள்ளாமல் ஓரிடத்திலேயே சுணங்கி நிற்கும் போது, நாம் தோற்று விடுகிறோம்.

அடுத்து சில ஆண்டுகள் கழித்து மணிவாசகம் உடல் நலக் கோளாறால் அவதியுற்று  காலமானார்.

மணிவாசகத்தின் படங்கள் தற்போது காமெடிக் காட்சிகளுக்காக மட்டுமே நினைவு கூறப்படுகின்றன. ஆனால் அந்தக் காட்சிகள் சிறப்பாக உருவாக அவர் அமைத்த களங்கள் உதவியது. 

காட்சிப்பிழை பிப்ரவரி’15 இதழில் வெளியான என்னுடைய கட்டுரை. நன்றி காட்சிப்பிழை ஆசிரியர் குழு.

February 20, 2015

தியாகராஜன் - மகனுக்காக

தமிழ் சினிமாவில் எதிர்நாயகனாக நடிப்பவர்கள், ஒரு புள்ளியில் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நாயகனாக மாறுவார்கள். 

ரஜினிகாந்த்,சத்யராஜ்,சரத்குமார், நெப்போலியன் என பல உதாரணங்கள் உண்டு. எவ்வளவு கொடூர வில்லனாக நடித்தாலும், அதில் மக்களைக் கவரும்படி அவர்களுக்கென்று ஒரு பாணியை பின்பற்றி இருந்தால், எளிதில் ஹீரோவாக ஏற்றுக்கொண்டு விடுவார்கள். அப்படி ஏதும் பிரத்யேக பாணி இல்லாவிட்டால், ஏதாவது ஒரு ராபின்ஹூட் டைப்பிலான கதையில், திருடனாகவோ அல்லது கொலைகாரனாகவோ இருந்து மக்களுக்கு நன்மை செய்யும் வேடத்தில் நடித்துவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் முழுமனதாக நாயகனாக ஏற்றுக்கொள்வார்கள்.
ரஜினிகாந்த், சத்யராஜ் எல்லாம் வில்லனாக இருக்கும்போதே நாயகன் ரேஞ்சுக்கு ரசிக்கப்பட்டவர்கள். சரத்குமார் அவருடைய தோற்றப்பொலிவு காரணமாக ஓரிரு படங்களில் நல்லமனிதர் கேரக்டர் பண்ணியவுடன் நாயகனாக பிரமோட் ஆகிவிட்டார். நெப்போலியனுக்கு நிறைய படங்களுக்குப் பின்னரே அந்த திருப்புமுனை ஏற்பட்டது. சீவலப்பேரி பாண்டி எனும் மக்களுக்கு உதவும்படியான கேரக்டர் அமைந்து நாயகனாக மாறினார்.

தியாகராஜனும் இப்படித்தான். 1981ல் “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் நாயகியின் அண்ணனாக ஒரு நெகட்டிவ் ரோலில் தன் திரைப்பயணத்தை துவக்கினார். பின்னர் டிக் டிக் டிக், நேரம் வந்தாச்சு, கல்யாண காலம், நெஞ்சங்கள், பாயும்புலி போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். பெரும்பாலும் நெகடிவ் கேரக்டர்கள் தான்.

இந்த நேரத்தில் தான் ராஜசேகர் இயக்கத்தில்  “மலையூர் மம்பட்டியான்” படத்தில் நடித்தார். யாருமே எதிர்பாராத வெற்றியைப் பெற்றது இந்தப்படம். அதற்கு முன்னால் ராஜசேகர் தமிழில் இயக்கிய கண்ணீர் பூக்கள், அம்மா இரண்டுமே தோல்விப்படங்கள். ஆனால் கதையிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் கவனிக்கப்பட்ட படங்கள். மலையூர் மம்பட்டியான் இந்த இரண்டு படங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட படம். ஊர் பெரியமனிதரால் பாதிக்கப்பட்ட இளைஞன் அவரை பழிவாங்கி, பணம் உள்ளவர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் கதை. இளையாராஜா கொடுத்திருந்த பாடல்களில் சின்னப் பொண்ணு சேலையும், காட்டு வழி போற பொண்ணே பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆகியது. அந்த காலகட்டத்தில் இந்தப் படம் பி மற்றும் சி செண்டர்களில் எம்ஜியார் படங்களுக்கு இணையாக வசூலித்ததாகக் கூறுவார்கள். ஒரு படம் பெற்ற வெற்றியை அப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு அடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் இருந்தே அறிந்து கொள்ளலாம். 

எப்படி நாட்டாமை படத்தின் வெற்றிக்குப் பின்னர் கே எஸ் ரவிகுமாருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததோ, அதுபோல ராஜசேகருக்கு மலையூர் மம்பட்டியான் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, கமல் படங்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தன.

தியாகராஜன், வில்லனாக இருந்து நாயகனாக மாறியவர்களுடன் ஒப்பிடுகையில் சற்று முக வசீகரம் குறைந்தவர். அம்மைத் தழும்புகள் கொண்ட முகம் கொண்டவர். அவர் அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை படமானது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வெற்றிகரமாக ஓடிய படம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல பரிட்சியமானவராக இருந்தார். தங்கையின் காதலுக்கு எதிரானவராக, வேறொரு பெண் தொடர்பு கொண்டவராக, மதப்பித்து கொண்டவராக அப்படத்தில் சித்தரிக்கப்பட்டு, கிராம மக்களிடம் திட்டு வாங்கியவர்.  இருந்தாலும் மக்களால் நாயகனாக இரண்டே ஆண்டுகளால் ஏற்றுக்கொள்ளப் பட்டார் என்றால் அதுதான் மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தின் வெற்றி.

இப்படி நாயகனாக மாறுபவர்கள், சில சமயம் தங்களுக்கு சற்றும் பொருந்தாத கதைகளில் நடித்து அகலக்கால் வைப்பார்கள். ஆனால் தியாகராஜன் சற்று தெளிவானவர். எந்த மாதிரி படங்கள் தன் உடல் மற்றும் முக அமைப்புக்கு ஏற்றதாக இருக்குமோ, அந்த மாதிரி கதைகளாகவே தேர்ந்தெடுத்து நடித்தார். பெரும்பாலும் ஆக்‌ஷன் கதைகளாக இருந்தாலும், சில நல்ல கதை அம்சம் உள்ள படங்களிலும் அவர் நடித்தார். ஜெயகாந்தனின் கதையில் பி லெனின் இயக்கத்தில் உருவான “எத்தனை கோணம் எத்தனை பார்வை” யில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுள்ள கதாபாத்திரத்தில் நடித்தார். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடித்த ”நீங்கள் கேட்டவை” அவருக்கு அவ்வளவு பொருந்தாத படமென்றாலும், பாலுமகேந்திராவின் இயக்கம் அதை சரிசெய்து விட்டது.
தியாகராஜனுக்கு ஆக்‌ஷன் கதைகள் மட்டுமே பொருத்தமாய் இருக்கும். ஆக்ரோஷம், கோபம் ஆகியவற்றை வெளிக்காட்டும் சிறிய கண்களோடு கூடிய இறுக்கமான முகம், மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம். எனவே அவருக்கு காவல்துறை அதிகாரி, ராணுவ அதிகாரி அல்லது சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டு பழிவாங்கும் இளைஞன் போன்ற ரோல்கள் நன்கு பொருந்தும். அவர் ஏற்று நடித்த திரைப்படங்களின் பெயரே பாதி கதையை சொல்லிவிடும். கொம்பேறி மூக்கன், எரிமலை, கருப்பு சட்டைக்காரன், நெருப்புக்குள் ஈரம், சேலம் விஷ்ணு, தீச்சட்டி கோவிந்தன் என.

இந்த காலகட்டத்தில் தியாகராஜன் நடித்த முக்கியமான படம் “காவல்”. 1983 ஆம் ஆண்டு கோவிந்த் நிஹ்லானி இயக்கத்தில் ஓம்பூரி நடித்து, நடிப்புக்காக தேசிய விருது பெற்ற  “அர்த் சத்யா” வின் ரீமேக். நேர்மையாக இருக்கும்  சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் துறையில் இருப்பவர்களால் சிரமத்துக்கு உள்ளாவதும், பின் சூழல் காரணமாக குற்றம் சாட்டப்படுபவராக கதையமைப்பு கொண்ட படம். இந்தப் படம் தமிழில் நன்றாக போகவில்லை என்றாலும், தியாகராஜனுக்கு நல்ல மதிப்பைக் கொடுத்த படம்.

ஒருவர் ஆக்சன் ஹீரோவாக பரிமளித்துவிட்டார் என்பதற்கு இன்னொரு அளவுகோல் இரட்டை வேடம் கொண்ட கதை அம்சப்படங்களில் நடிப்பது. தியாகராஜனுக்கு எரிமலை படத்தில் மூன்று வேடங்கள். கொத்தடிமையான தந்தை கொல்லப்பட, பழிவாங்கும் இரண்டு மகன்களாகவும் தியாகராஜனே நடித்தார். கொம்பேறி மூக்கனில் தந்தை கொல்லப்பட, கொன்றவர்களைப் பழிவாங்க, மகனுக்கு சண்டைப் பயிற்சிகள் கொடுத்து அம்மாவே வல்லவனாக உருவாக்குவார். அந்த அம்மா கேரக்டரில் சரிதா நடித்தார். கொம்பேறி மூக்கன் பாம்பு போல பகையை மறக்காமல் பழிவாங்குபவராக தியாகராஜன் நடித்தார். மேலும் அவர் நடித்த கறுப்பு சட்டைக்காரன், ராஜா யுவராஜா, நெருப்புக்குள் ஈரம், மச்சக்காரன், ஊமைத்துரை போன்ற திரைப்படங்களும் இதே மாதிரியான ஆக்‌ஷன் மசாலாக்கள்தான். ராஜசேகர் இயக்கத்திலேயே செவன் சாமுராய், ஷோலே போன்ற படங்களின் பாணியில் எடுக்கப்பட்ட முரட்டுக்கரங்கள் என்ற படத்திலும் நாயகனாக நடித்தார். பின்னர் பூவுக்கள் பூகம்பம் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்தார்.

தியாகராஜன் அவ்வப்போது மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்து வந்தார். மலையாளத்தில் அவர் நடித்ததில் ஒரு முக்கியமான படம் ”நியூ டெல்லி”. ஜோஷி இயக்கத்தில் மம்முட்டி, சுரேஷ் கோபி நடித்த இப்படத்தில் “சேலம் விஷ்ணு” என்னும் கொலைகாரன் வேடத்தில் தியாகராஜன் நடித்தார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் இது. இந்தப் படத்தில் வரும் சேலம் விஷ்ணு கேரக்டர் எப்படி வந்தது என இதன் பிரிக்வெல்லாக “சேலம் விஷ்ணு” படத்தை தமிழில் தானே இயக்கி நடித்தார். அஜித் நடித்த பிரிக்வெல்லான பில்லா 2 வுக்கு தியாகராஜன் தான் முன்னோடி. தொடர்ந்து அதோலோகம், மனு அங்கிள், அப்காரி போன்ற படங்களில் நடித்தார். பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு முத்தசி கதா மற்றும் ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் நடித்த நம்பர் 20 மெட்ராஸ் மெயில் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் நாயகனாக எதிலும் நடிக்கவில்லை. எல்லாமே சிறிய கதாபாத்திரங்கள்தான்.

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஸ்டேட் ரவுடி என்ற படத்தில் நடித்தார். இதே ஆண்டில் சில்க் நாயகியாக நடித்த “மிஸ் பமீலா” என்ற படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தார்.

தியாகராஜன் நாயகனாக நடித்துக் கொண்டிருந்தபோது அவர் விஜயகாந்த், அர்ஜூன் போல ஒரு மினிமம் கியாரண்டி ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்தார். அந்த காலகட்டத்தில் படங்கள் அதிகபட்சமாக 60 பிரிண்டுகள் தான் போடப்படும். தியாகராஜன் படங்கள் அதைவிட குறைவான பிரிண்டுகளே போடப்படும். வெளியாகும் செண்டர்களில் படம் நாலு வாரங்கள் ஓடி, பின்னர் அடுத்தடுத்த செண்டர்களில் ஒரு வாரம் ஓடினாலே தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். ஒரளவு குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தியாகராஜன் படங்கள் ஆக்சன் படங்களாக இருந்ததால், மக்களால் பெரிதும் சிலாகிக்கப் படாமல் இருந்தாலும், தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியதால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றார். இதில் புரியாத விஷயம் என்னவென்றால், தமிழில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, ஏன் அதைவிட சம்பளம் குறைவாக கிடைக்கக்கூடிய கேரள திரையுலகில், அதுவும் முக்கியமில்லாத ரோல்களில் நடித்தார் என்பது. தெலுங்கிலும் அப்போதைய காலகட்டத்தில் எந்த நிர்ப்பந்தத்தில் வில்லனாக நடித்தார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் தெலுங்கில் நடிகர்,இயக்குநராக இருந்த பெக்கட்டி சிவராம் இவரது மாமனார்.

இப்படி ஓரளவுக்கு செட்டான ஒரு நடிகர், திடீரென திரையுலகில் இருந்து ஒதுங்கி பிண்ணனிக்கு போகக் காரணம், அவரது மகன் பிரசாந்தின் அறிமுகமே. தியாகராஜன் மகன் பிரசாந்த் அறிமுகமான “வைகாசி பொறந்தாச்சு” வெள்ளி விழா படமாக அமையவும், பிரசாந்தின் கேரியருக்கு உறுதுணையாக தன்னுடைய திரைப் பங்களிப்பை குறைத்துக் கொண்டார்.

சத்யராஜ் போன்றவர்கள் தங்கள் மகன் நாயகனாக நடித்த போதும், விடாமல் படங்களில் நாயகனாக நடித்து வந்தார்கள். தியாகராஜனும் தொடர்ந்திருந்தால் இன்னும் சில வருடங்கள் நாயகனாக இருந்திருக்கலாம். ஏனென்றால் 1995 வரை அவர் மாதிரியான ஹீரோக்களுக்கு தமிழ்சினிமாவில் இடம் இருந்தது.
பொதுவாக ஹீரோவாக நடிப்பவர்கள், தங்கள் மார்க்கெட் தொய்வுறுவது போல் தெரிந்தால், சொந்தப்படம் எடுத்து தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்வார்கள். அர்ஜூன் தன் வாய்ப்புகள் குறைந்த போது, சேவகன் என்னும் படத்தை எடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அதுபோல தன்னை நிலைநிறுத்தும் அளவுக்கு படமெடுக்கவும் தியாகராஜனால் முடிந்த ஒன்றுதான்.

1991ல் அறிமுகமான பிரசாந்தும், 2000 ஆவது ஆண்டு வரை, குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அஜீத் ஒரு முக்கிய நாயகனாக மாறும் வரை, லைம்லைட்டில் இருந்தார். அதன் பின்புலமாக தியாகராஜனின் உழைப்பும் இருந்தது.

பின்னர் பிரசாந்தின் கேரியரை புதுப்பிப்பதற்காக ஷாக், ஜெய், பொன்னர் சங்கர், மம்பட்டியான் ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் எதிலும் வெற்றி கிட்டவில்லை.


சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் “பெஸ்ட் டாட் ஆஃப் மில்லினியம்” என்னும் விருதை தியாகராஜனுக்கு ஒரு நிறுவனம் கொடுத்தது. தன் மகனின் வளர்ச்சிக்காக தன் கேரியரை பாதியில் நிறுத்திய ஒருவருக்கு கிடைத்த சிறப்பு அது.


February 18, 2015

விருதுநகர்

ஓல்ட் எம் ஆர் என்று தமிழ்சினிமா வினியோக வட்டாரங்களில் அழைக்கப்படும் பழைய மதுரை,ராமநாதபுரம் மாவட்டங்கள் இன்று மதுரை,திண்டுக்கல்,தேனி,ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர் என ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுவிட்டன. விருதுநகர் மாவட்டத்தைத் தவிர மற்ற ஐந்து மாவட்டக்காரர்களும் விருதுநகர் என்னும் ஊருக்குள் நுழைந்தாலே சற்று அன்னியமாகத்தான் உணர்வார்கள். அவ்வளவு ஏன் விருதுநகர் மாவட்டத்திலேயே விருதுநகரைத் தவிர மற்ற ஊர்க்காரர்களும் கூட அவ்வூருக்குள் நுழைந்தாலே சற்று அன்னியமாகத்தான் உணர்வார்கள்.

முக்கியமாக மதுரை,திண்டுக்கல் பகுதிகளில் தங்கள் இளமைக்காலத்தை கழித்தவர்கள் விருதுநகருக்கு முதன்முதலாக வந்தால் பல வித்தியாசங்களை உணர்வார்கள்.91 ஆம் ஆண்டு நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டு இருந்தபோது,என் தந்தை பணியிடமாறுதல் காரணமாக விருதுநகருக்கு குடிபுகுந்தோம். இரண்டு நாட்கள் கழித்து இரவு உணவு பார்சல் வாங்க சற்று தொலைவில் இருந்த கடைக்குப் போனேன். வாங்கும் போது, கடை கல்லாவில் இருந்தவர், புதுசா குடிவந்திருக்கீங்களா? என்று கேட்டார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏதாவது சின்ன ஊரில் ஒரு கடைக்காரர் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. ஆனால் ஒரு மாவட்டத்தலைநகரில், தமிழ்நாட்டில் பருப்பு, எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் கேந்திரங்களில் ஒன்றான விருதுநகரில் எப்படி கண்டுபிடித்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

வீட்டிற்கு வந்து பொட்டலத்தைப் பிரித்ததும் வீட்டிலுள்ளவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னடா புரோட்டா வாங்கிட்டு வரச் சொன்னா வரிக்கி வாங்கிட்டு வந்திருக்க என்றார்கள். நான் முழிக்க, பின்னர் தான் தெரிந்தது இங்கே புரோட்டா என்றாலே எண்ணையில் முக்குளிப்பாட்டிய புரோட்டாதான் என்றும், சாதா புரோட்டா கிடைப்பது அரிது என்றும். அடுத்த நாள் காலை காட்சிக்கு மன்னன் திரைப்படத்திற்கு போனேன். அதற்கு முதல்நாள் மதுரையில் பயங்கர கூட்டம் இருந்ததை பஸ்ஸில் வரும்போது பார்த்திருந்தேன். ஆனால் இங்கே ஓரிருவர்தான் தென்பட்டார்கள். இத்தனைக்கும் படம் வெளியான முதல் வாரம்.ஆனால்  படம் பார்க்கும் போது பாடல் காட்சிகள் வரும்போதெல்லாம் திரையைச் சுற்றி வண்ண விளக்குகளை ஒளிரவிட்டார்கள். படம் முடிந்து வெளியே வந்து பார்த்தால் சனி,ஞாயிறு 5 காட்சிகள் என்று போஸ்டரில் துண்டு போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். எங்கள் வீட்டில் உள்ளவர்கள், சனிக்கிழமை படத்துக்கு போய்விட்டு வந்து எவ்வளோ கூட்டம் என அலுத்துக் கொண்டார்கள்.

பின்னர் தான் தெரியவந்தது, அங்கே எந்தப் படம் என்றாலும், சனி ஞாயிறு 5 காட்சிகளும், மற்ற நாட்களில் 4 காட்சிகளும் என்று. எல்லோருமே சனி, ஞாயிறுகளில் தான் படத்துக்கு வருவார்கள், அந்த ஊரின் ஒரே பொழுதுபோக்கு அதுதான். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருவார்கள். திங்கட் கிழமை காலைக் காட்சி புல் ஆனால் அந்தப் படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டராக விநியோக வட்டாரத்தால் கருதப்படும்.

ஒரு மாதம் கழித்து, பக்கத்து வீட்டுக்காரரின் பெண் திருமணத்திற்கு அழைத்தார்கள். காலை மண்டபத்திற்கு போனோம். தேவையற்ற சடங்குகள் இன்றி, சமுதாயப் பெரியவர் ஒருவர் தாலி எடுத்துக் கொடுக்க மணமகன் தாலி கட்டினார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மண்டபம் பாதி காலியானது. காலை உணவு முடிந்ததும் மண்டபத்தில் மணமக்கள் உட்பட பத்துப் பேர்தான் இருந்தோம். பெண் வீட்டிற்கு, மாப்பிள்ளை வீட்டிற்கு என்று தனித்தனியாக மண்டபம், சாப்பாடு எனத் தெரியவந்தது. அப்படி பிரிந்து சென்ற பின்னும் சாப்பிட்டுவிட்டு உடனே கிளம்பி விடுவார்கள்,மதிய சாப்பாட்டிற்கு என்று தனியாக வீட்டில் போய் அழைத்தால்தான் வருவார்கள் என்று கேள்விப்பட்டபோது, அதிர்ச்சியாக இருந்தது.

திருமண விழாக்களை எல்லாம் கொண்டாட்டமாக அனுபவித்த மதுரை மாவட்டத்துக்காரனுக்கு இது ஜீரணிக்க முடியாததுதான். ஓரளவு பழக்கமானவர்களாக இருந்தால் கூட முதல் நாளே மண்டபத்திற்கு சென்று, கூடமாட ஒத்தாசையாக இருந்து, பந்தி பரிமாறி, சேரை இழுத்துப் போட்டு வட்ட சேர் மாநாடு கூட்டி, பாடல்களைக் கேட்டுக் கொண்டே வம்பு வளர்த்து, மண்டபத்தை ஒரு சேர காலி செய்து கிளம்பும் கலாச்சாரம் எங்கே? மணமக்கள் வீட்டார் தனித்தனியாக சாப்பிடும் கலாச்சாரம் எங்கே?. நல்ல வேளை மணமக்களாவது ஒரே மண்டபத்தில் சாப்பிட்டுக்கொள்கிறார்களே என்று ஆறுதல் பட்டுக் கொள்ளத்தான் முடிந்தது. அதற்கடுத்த மாதத்தில் பங்குனி பொங்கல் என்னும் விருதுநகரின் பிரசித்தி பெற்ற திருவிழா வந்தது. நாங்கள் குடியிருந்த தெருவில் இருந்த இரண்டு திருமணமாகாத பெண்கள் சர்வ அலங்காரத்துடன்  கழுத்து நிறைய நகையுடன் குடும்பத்தார் சூழ கிளம்பினார்கள். நம்ம பக்கமும் இப்படித்தானே பொண்ணுங்க, திருவிழான்னாலே புல் கோட்டிங்கோட கிளம்புவாங்க, ஆனா இங்க இவ்ளோ நகையை போட்டுகிட்டு போறாங்களே என லேசாக சந்தேகம் வந்தது. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்த போது, இங்க பொண்ணு பார்க்க வீட்டுக்கு வர மாட்டாங்கப்பா, இன்ன தேதிக்கு கோவிலுக்கு இல்லாட்டி திருவிழாக்கு கூட்டிட்டு வாங்க, நாங்க பார்க்குறோம்னு பேசி வச்சிக்குவாங்க. அங்க வச்சு பொண்ண பார்த்திட்டு பின்னர் முடிவு சொல்லுவாங்கப்பா என்றார். பெண்ணுக்கு எவ்வளவு நகை போட உத்தேசித்திருக்கிறார்களோ, அந்த அளவு நகையை பெண் அணிந்து திருவிழாவுக்குச் செல்வார் என்றும்,வியாபாரத்தில் ஈடுபடும் மாப்பிள்ளைக்கு 100 பவுன் என்றால், அரசு அல்லது தனியார் வேலையில் இருப்பவருக்கு 50 பவுனுக்கு குறைவாகத்தான் போடுவார்கள் என்றும் சொன்னார்.

அடுத்த நாள் திருவிழாவுக்குச் சென்ற போது, ஜமுக்காளத்தை விரித்து, சுற்றத்தார் நடுவே பெண் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் போது, என்னையறியாமல் மெல்லிய புன்முறுவல் ஏற்பட்டது.
ஒரு ஊரில் இருந்து இன்னோரு ஊருக்குச் செல்லும் போது, வீட்டுப் பெண்களுக்கு எளிதில் சிநேகிதம் அக்கம் பக்கத்தில் கிடைத்துவிடும். பள்ளி,கல்லூரி பையன்களுக்கும் அப்படியே. 30 வயதுக்கு மேற்பட்ட குடும்பத்தலைவர்களுக்கு பணியிடத்தில் சிநேகிதம் கிடைத்தால்தான். மற்றபடி வெளியிடங்களில் ஆத்மார்த்த நட்பு கிடைப்பது கடினம். கல்லூரி மாணவனான எனக்கே எங்கள் தெருவிலும், சுற்றுவட்டாரத்திலும் நட்பு கிடைக்கவில்லை. பெரும்பாலும் பையன்கள் குழுவாகவே இயங்கினார்கள். அந்தக் குழுவில் இடம்பிடிப்பது மிகக் கடினமாக இருந்தது. மிகவும் கன்சர்வேடிவ்வாக இருப்பார்கள். எனக்கே இப்படியென்றால், என் தந்தையின் நிலையோ படு மோசம். விருதுநகர் சம்சாரிகளின் சொற்கோவையில் அதிகபட்சம் ஐம்பது வார்த்தைகள் தான் இருக்கும். அதிலும் சரக்கு, கொள்முதல்,டிடி கமிசன், கலெக்‌ஷன், சிட்டை, செக் ரிட்டர்ன் போன்ற சில வார்த்தைகளே அதிகப்படியாக உச்சரிக்கப்படும். அப்போது சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வராத காலம் வேறு. வேறு வழியில்லாமல் என்னுடன் அவர் நெருக்கமாக நண்பனைப் போல் உரையாட ஆரம்பித்தார். நாங்கள் விருதுநகர் சென்றதால் எனக்கு கிடைத்த போனஸ் அது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை,திருப்பூர்,சிவகாசி ஆகிய இடங்கள் பிழைக்கச் செல்லும் இடங்களில் முதலிடம் வகிப்பவை. மற்ற மாவட்ட தலைநகரங்களுக்கு ஓரளவுக்கு மக்கள் இடம் பெயருவார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு வர்த்தகம் நடக்கும் விருதுநகருக்கு யாரும் பிழைப்பு தேடி வருவதில்லை. மத்திய, மாநில அரசு பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் போன்றோர்கள் இட மாறுதலுக்கு உட்பட்டு வருவார்கள். அதனால்தான் புதிதாக குடிவரும் ஆட்களை உள்ளூர்க்காரர்களால் அப்போது எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது.

விருதுநகரைப் பொறுத்த வரையில் பெரும்பாலும் கமிஷன் வியாபாரம்தான். பல எண்ணெய் தொழிற்சாலைகளும், சில நூற்பாலைகளும் உண்டு. கமிஷன் கடைக்கு பத்துக்கு பத்தடி இடமும், ஒரு டேபிளும், போனும் போதும். பெரும்பாலும் உள்ளூர்காரர்களே குமாஸ்தா மற்றும் குடோனுக்கான லோடு மேனாக இருப்பார்கள். தொழிற்சாலைகளிலும் பெரும்பாலும் உள்ளூர் ஆட்கள்தான் இருப்பார்கள். அந்தமாதிரி வேலைகளுக்கு வெளியூரில் இருந்து வந்து, வீடுபார்த்து குடித்தனம் இருக்கும் படி சம்பளம் இருக்காது. அவ்வளவு பெரிய ஊரில் நல்ல டேபிள் போட்டு சாப்பிடும்படி ஒரே ஒரு சைவ ஹோட்டல்தான் இன்னும் இருக்கிறது என்பதில் இருந்தே அந்த ஊருக்கு ஒரு நாளில் உத்தியோக பூர்வமாக  வரும் வெளியூர் பயணிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.

விருதுநகர் மக்கள் பணத்தைச் செலவு செய்வதில் மிகச் சிக்கனமாக இருப்பார்கள். நகை வாங்கினால் கூட நல்ல உருட்டாக, பெரிய நகையாக, அதிக சேதாரம் வராத டிசைனாக வாங்குவார்கள். லைட் வெயிட் கலெக்‌ஷன் அவர்களிடம் இருக்காது. வீட்டிலும் கூட ஆடம்பரப் பொருட்கள் இருக்காது. பர்னிச்சர்கள் கூட நல்ல ரீ சேல் வேல்யூ உள்ள மர பர்னிச்சர்களாகத்தான் வாங்குவார்கள். மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் சாதாரணமாகக் கிடைக்கும் காஸ்மெட்டிக் அயிட்டங்கள், பிஸ்கட் வகைகள் கூட விருதுநகரில் அரிதாகத்தான் கிடைக்கும். பணம் ஒரு குறிப்பிட்ட சாராரிடமே சுற்றி வருவதால் மற்றவர்கள் திடீரென உள்ளே வந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியாத நிலை இருந்தது.
மூன்றாண்டுகள் கழித்து என் தந்தைக்கு மீண்டும் பணியிட மாறுதல். மற்ற ஊர்களில் எல்லாம் வீடு மாற்றும் போது, கூடவே வண்டியில் வரும்வரை நண்பர்களைக் கொண்டிருந்த எனக்கு கையைசைத்து வழியனுப்பக் கூட யாருமில்லாத நிலை.

அடுத்து பத்தாண்டுகள் கழித்து, சில மாதங்கள் விருதுநகரில் தங்கும் சூழல். பெரிய அளவில் மாற்றத்தை உணரமுடியவில்லை. சுற்றிலும் உருவாகியிருந்த பொறியியல் கல்லூரிகளால் கல்லூரி ஆசிரியர்கள் புதிதாக குடிவர ஆரம்பித்து இருந்தார்கள். தாவணி அணிந்த பெண்கள் குறைந்து சுடிதார், நைட்டி அதிகம் தென்பட்டது. ஆனால் ஒரு நல்ல துணிகளுக்கான ஷோ ரூமோ, ஸ்டைலான சலுனோ தென்படவில்லை.
சில வாரங்களுக்கு முன்பும் விருதுநகரில் ஒருநாள் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டது.  சனி, ஞாயிறு 5 காட்சிகளுக்குப் பதிலாக ஞாயிறு மட்டும் 5 காட்சிகள்,ஒன்றிரண்டு புதிய பேக்கரிகள், விருதுநகரின் பிரதான அசைவ உணவு கடையான பர்மா ஹோட்டலுக்கு புதிய பிராஞ்ச் என சில மாற்றங்கள் தான். உத்தியோக பூர்வமாக நட்பாகியிருந்த விருதுநகர்காரரிடம் “இப்பவும் முன்ன மாதிரி வெளி ஆட்கள் வர்றதில்லையா” ? என கேட்டேன்.

நீங்க வேற, வியாபாரத்துல இருக்குறவங்க தவிர மத்த ஆளுகள்ல நிறைய பேரு  ஐடி இண்டஸ்ட்ரிக்கு போயிட்டாங்க என்றார். அப்படியும் இன்னும் ஊர் மார்டன் ஆகலையேப்பா என்றேன். விருதுநகர்ல பிறந்து வளர்ந்தவன் விருதுநகர்காரனாத்தான் எங்கயுமே இருப்பான். எந்த மெண்டாலிட்டியில இங்க இருந்து கிளம்பி போனானோ அதே மெண்டாலிட்டிலதான் இங்க பொங்கலுக்கு வருவான் என்றார்.

இப்போதும் கூட வீட்டில் தந்தை-மகன் சுமுக உறவு இல்லாதவர்கள், அண்ணன் – தம்பிக்கு இடையே சுமுக உறவு இல்லாதவர்கள் விருதுநகர் சென்று குடியேறலாம். ஆறு மாதத்தில் அவர்கள் நண்பர்களாகிவிடும் வாய்ப்பு மிக அதிகம்.

(”தமிழ்” மின்னிதழில்  வெளியான என்னுடைய கட்டுரை. நன்றி தமிழ் மின்னிதழ்)