October 23, 2010

நேர்காணல் – தென் மாவட்ட தியேட்டர் ஆப்பரேட்டர்

என் சிறுவயது கனவு வேலைகளில் ஒன்று – தியேட்டர் ஆப்பரேட்டர் ஆவது. அந்த வேலையைச் செய்பவர்களிடம் எனக்கு ஒரு கவர்ச்சி இருந்தது. பின்னாட்களில் அது மறைந்து போனது. என் நண்பர் ஒருவரின் உதவியுடன் நேற்று ஒரு தியேட்டர் ஆப்பரேட்டரை சந்தித்து உரையாடினேன். தன் பெயர், விபரம் வெளியிடவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். எனவே உரையாடல் மட்டும்

கே : முன் இருந்த வேலைப்பளு மற்றும் திறன் தேவைக்கும் தற்போது உள்ள நிலைமைக்கும் என்ன வித்தியாசம்?

ப: முன்னர் நிறைய திறமை தேவைப்பட்டது. முக்கால் மணிநேரத்தில் புரஜெக்டர் சூடாகி விடும், கார்பன் ராடுகள் மாற்ற வேண்டும், பிலிம் குவாலிட்டியும் மட்டமாக இருக்கும். அதுபோக சவுண்டு ரீபுரடக்‌ஷனிலும் அடிக்கடி பிரச்சினை வரும். இப்போது அப்படியில்லை. நல்ல குவாலிட்டி புரஜக்டர்,சவுண்டு சிஸ்டம் இருப்பதால் வேலைப் பளு குறைவு. யாரும் இந்த வேலையை இரண்டு மூன்று நாட்களில் கற்றுக் கொண்டு விடலாம்.


கே : ஆப்பரேட்டர்கள் சில காட்சிகளை வெட்டி விட்டார்கள் என்ற முணுமுணுப்பை பல ஆண்டுகளாக கேட்டு வந்துள்ளேன். ஏன் அப்படி?

ப : பெரும்பாலும் பெரிய நடிகர்கள் படங்களுக்கு அப்படிச் செய்வதில்லை. சில படங்களில் தேவையில்லாத பாடல்காட்சிகள் இருக்கும். அது ரசிப்புக்கு உரியதாகவும் இல்லாத நிலையில் வெட்டி விடுவோம். படம் நீளமாக இருந்தால் நான்கு காட்சிகளிலேயே தேவையில்லாத காட்சிகளை கணித்து வெட்டி விடுவோம்.

கே : அதை எப்படி முடிவு செய்வீர்கள்?
ப : தேவையில்லாத பாடல் காட்சி வரும் போது ரசிகர்களிடம் இருந்து ஒருவித அசூசை ஒலி கிளம்பும். கேண்டீனுக்கு சிகரெட் குடிக்க பலர் வெளிவருவார்கள். சக ஆப்பரேட்டர், என் உதவியாளர்கள், தியேட்டர் பணியாளர்கள் போன்றோருடன் ஷோ முடிந்தவுடன் பேசும் போது அது இழுவை, இது இழுவை என்று பேச்சு வரும். அந்த காட்சிகளை வெட்டி விடுவோம். இது பெரும்பாலும் அனுமானத்தில் செய்வதுதான். குறிப்பிட்ட விதிகள் இல்லை.

கே : காட்சி திடீரென தடைப்பட்டாலோ அல்லது மின்சாரம் நின்று போனாலோ ரசிகர்கள் ஆபாசமாக திட்டுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அப்போது உங்கள் மனநிலை?

ப : ஆரம்பத்தில் கோபம் வரும். நான் பதிலுக்கு திட்டிக்கொண்டே இருப்பேன். நாளாக நாளாக அது எரிச்சலோடு நின்று போனது. இப்போது அதுமாதிரி நடைபெறுவது அரிதாகவே இருக்கிறது. முன்னர் கார்பன் ராடு தீர்ந்து போனால் காட்சி மங்கலாகும், சில சமயம் பிலிம் ரோல் அந்து விடும், ஓவர்லேப் ஆகும், வசனம் கட்டாகிவிடும். இந்த சூழ்நிலைகளில் சத்தம் அதிகமாக இருக்கும். இன்றைய சூழல் அப்படியில்லை. பத்தாண்டுகளுக்கு முன்னால் வரையில் மின்சாரம் தடைப்பட்டால் டீசல் ஜெனெரேட்டரை இயக்கி படம் ஓட்ட வேண்டிய சூழல் இருந்தது. அதற்கு குறிப்பிட்ட நேரமாகும். தற்போது தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஒரு சுவிட்சிலேயே மாற்றிவிடுகிறோம்.

கே : உங்கள் வருமானம் எப்படி?

ப : சம்பளம் என்று பெரியதாக வராது. தியேட்டருக்கு உள்ளே சிறு கடைகள் வைத்துக் கொள்ள முன்னர் முதலாளிகள் அனுமதித்தார்கள். எனவே சிகரெட், முறுக்கு,கடலை மிட்டாய் குளிர்பானங்கள் கொண்ட கடை ஒன்றையும் நடத்தினேன். இப்போது மொத்த குத்தகையாக கடைகளை விட்டு விடுகிறார்கள். ஸ்லைடு மற்றும் விளம்பரப்படம் போடும் கம்பெனியினர் அவ்வப்போது கவனிப்பதுண்டு. இழுத்துப் பிடித்து ஓட்டும் நிலைமைதான்.

கே : ரசிகர்களின் மனோபாவம் எப்படியிருக்கிறது?

ப : முன்னெல்லாம் 2.30 மணி ஷோ என்றால் 1.30 மணிக்கே மக்கள் வந்துவிடுவார்கள். 2.00 மணிக்கு கவுண்டர் திறந்துவிடும்போது 75 சதவிகித கூட்டம் கூடியிருக்கும். இப்போது 2.15 மணி அளவில் கூட 10, 15 பேர்தான் வருகிறார்கள். சரியான நேரத்துக்குத் தான் எல்லோரும் வருகிறார்கள்.

கே : உங்கள் தியேட்டரில் ஆபாச காட்சிகள் பிரத்யேகமாக இணைக்கப்பட்ட திரைப்படம் வெளியிடும் போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

ப : மனது சங்கடமாகத்தான் இருக்கும். என் மகனின் நண்பர்கள், மற்றும் மகளின் தோழிகள் ஆகியோர் இதைக் கவனித்து ஏதும் அவர்களிடம் கேட்டுவிடுவார்களோ என பயமாக இருக்கும். என்ன செய்வது?.


முன்னர் ஒவ்வொரு தியேட்டரையும் குறிப்பிட்ட வினியோகஸ்தர்கள் பிடித்து வைத்திருப்பார்கள். அந்த தியேட்டருக்கு படம் தரும் வினியோகஸ்தர்கள் வினியோகிக்கும் படங்கள் சரியில்லாமல் போனாலோ அல்லது அவர்கள் நொடித்தாலோ படவரவு நின்றுவிடும். அப்போது பழைய ஹிட் படங்களைப் போட்டு ஒப்பேற்றுவோம். அது சரிவராத பட்சத்தில் காலைக் காட்சியாக அம்மாதிரிப் படங்களை திரையிட ஆரம்பித்து இப்போது எல்லாக் காட்சியும் அம்மாதிரிப் படங்கள் வெளியிடும் அளவுக்கு பல தியேட்டர்கள் மாறிவிட்டன.

இதற்கு தியேட்டர்காரர்களைச் சொல்லியும் குற்றமில்லை.
தியேட்டர் காம்பவுண்ட் வரி, மின்சாரக் கட்டணம், ஆட்கள் சம்பளம், பராமரிப்பு என அவர்களுக்கும் நிறைய செலவு இருக்கிறதே?.

இப்போது இங்கே மூன்று தியேட்டர்கள் இருக்கின்றன. ஒன்றை சன் பிக்சர்ஸ் மற்றும் முண்ணனி நிறுவனங்கள் பிடித்து வைத்துள்ளன. எங்கள் தியேட்டரை பழைய வினியோகஸ்தர்கள் மற்றும் தற்போது ஓரளவு நல்ல படம் கொடுக்கும் சிலர் பிடித்து வைத்துள்ளார்கள். இன்னொன்றுக்கு யாரும் படம் தருவதில்லை. ஏனென்றால் தரம் குறைந்த வசதிகள். அவர்கள் இப்போது வேறு வழியில்லாமல் அந்தப் படங்களைப் போட வேண்டிய நிலை.

கே : உங்கள் பார்வையில் எந்தப் படத்துக்கு அதிக கூட்டம் வந்துள்ளது?

இந்த 25 வருடங்களை எடுத்துக் கொண்டால் ரஜினி,கமல் படங்களுக்கு நல்ல கூட்டம் வரும். இதில் ரஜினிக்குத்தான் அதிகம். அடுத்த தலைமுறையில் விஜய்,அஜீத்துக்கு கூட்டம் முதல் இரண்டுநாள் வருகிறது. பின் படத்தைப் பொறுத்தே கூட்டம். சூர்யா, விக்ரம் படத்துக்கும் முதல் நாள் கூட்டம் வருகிறது. படம் நல்லாயிருக்குன்னு கேள்விப்பட்டு கூட்டம் கூடின படம் நிறைய இருக்கு.

கே : எந்திரன் வரை வந்துள்ள ரஜினி படங்களில் எந்தப் படத்துக்கு கூட்டம் அதிகம் வந்ததுன்னு நினைக்கிறீங்க?

ப : அண்ணாமலை, பாட்ஷா மற்றும் படையப்பாவுக்குத்தான் அதிக கூட்டம். குறிப்பாச் சொல்லணும்னா படையப்பா படம். 25 நாள் ஓடியும் எந்த ஷோவுக்கும் கூட்டம் குறையவில்லை.

கே : எந்திரன் அதிக தியேட்டர் ரிலீஸ், மற்றும் அதிக கட்டணம் அதனால் கூட்டம் தெரியாம இருக்கலாம் இல்லையா?

ப : இங்கே, இரண்டு தியேட்டரில் வெளியிட்டுள்ளார்கள். இரண்டு தியேட்டர் சேர்த்தும் எப்பவும் வருகிற கூட்டம் தான். இந்த கூட்டத்தைக் கணக்கிட்டாலும் படையப்பாவுக்கு வந்தது நல்ல கூட்டம்.

கே : இந்த தொழிலில் எதிர்காலம் எப்படி இருக்கும்னு கணிக்கிறீர்கள்?

ப : தியேட்டர் வசதியாக இருந்தால்தான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். பெரிய கம்பெனிகளும் படம் கொடுக்கும். வசதிப்படுத்த முடியவில்லை என்றால் இடிப்பதே நல்லது.


உரையாடி முடித்தவுடன் அருகில் இருந்த கடையில் தேனீர் அருந்திவிட்டு விடைபெற்றேன்.

சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் செந்தில் வேலுக்கு இங்கும் நன்றியைப் பதிவு செய்துகொள்கிறேன்.

October 20, 2010

கமலின் அடுத்த மூவ்

கமல்ஹாசன் கலந்து கொள்ளும் விழாக்களைக் கவனித்தாலே அவரின் அடுத்த மூவ் புலப்பட்டுவிடும்.


அவர் கலந்து கொள்ளும், அவர் சம்பந்தப்படாத படங்களின் விழாக்களை இப்படி தரம் பிரிக்கலாம்.

1. கருணாநிதி/ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் போது அவர்களுக்காக அல்லது அவர்களால் நடத்தப்படும் விழாக்கள். இதில் வேறு வழியில்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.

2. நடிகர் சங்கம், பெப்ஸியின் கீழ் வரும் அமைப்புகள் போன்றவற்றால் நடத்தப்படும் கலை/காசு தேற்றும் விழாக்கள். இதுவும் கட்டாயமே.

3. குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய ஏவிஎம், இளம்வயதில் தொடர் வாய்ப்புக் கொடுத்த பாலசந்தர் மற்றும் பெரிதும் மதிக்கும் சிவாஜி குடும்பம் ஆகியவை தொடர்பாக நடக்கும் விழாக்கள். இதில் கலந்து கொள்ளாவிட்டால் தர்மசங்கடம் நேரும்.

4. கமலுக்கு ஒவ்வொரு சீசனிலும் சில கொள்கை பரப்பு செயலாளார்கள் இருப்பார்கள். அவர்கள் தொடர்பான விழாக்களிலும் கமல் கலந்து கொள்வார். உதாரணத்துக்கு கரணைச் சொல்லலாம். கரணின் கொக்கி, கனகவேல் காக்க ஆகிய படங்களில் விழாக்களில் கலந்து கொண்டதைச் சொல்லலாம்.

இவை தவிர அவர் மேலும் சில விழாக்களில் கலந்து கொள்வார். அவைகளை நன்கு கவனித்தோமானால் அந்த விழாக்கள் எல்லாம் அவர் அப்போது நடிக்கும் படத்தின் அல்லது நடிக்கப்போகும் படத்தின் தயாரிப்பாளர்/இயக்குநர்/முண்ணனி தொழில்நுட்பக்கலைஞர் ஆகியோர் தொடர்புடைய விழாவாக இருக்கும்.

ஷங்கர் இயக்கி, தயாரித்த முதல்வன் படத்தின் வெற்றி விழாவில் அவர் கலந்து கொண்டார். காரணம் அப்போது ஷங்கர், ரோபோ படத்தை கமலின் நடிப்பில் இயக்குவதாக இருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டது.

படையப்பா பட வெற்றி விழாவில் அவர் கலந்து கொண்டார். காரணம் அதன் இயக்குநர் கே எஸ் ரவிகுமார் அடுத்து கமலின் தெனாலி படத்தை எடுப்பதாக இருந்தது. அதை மேடையிலும் கமல் வெளிப்படுத்தினார்.

“ரஜினிக்கு யாரை வைத்து வேலை வாங்க வேண்டும் என்ற புத்திசாலித்தனம் இருக்கிறது. எனக்கும் அந்த புத்திசாலித்தனம் இருக்கிறது. என் அடுத்த படம் இந்த இயக்குநருடன் தான்”

என்று மேடையில் பேசினார்.

பின்னர் தாணு தயாரிப்பில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்ற படத்தின் ஆடியோ வெளியீடு தேவி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடந்தது. கலந்து கொண்ட எல்லோருக்கும் பட்டாடை கொடுத்திருந்தார்கள். கமல் அதில் சிறப்பு விருந்தினர். காரணம் அப்போது ஆளவந்தான் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது.

தற்போது கூட மைனா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். காரணம் உதயநிதி ஸ்டாலின் அந்தப் படத்தை வெளியிடுவது. உதயநிதி, கமலின் தற்போதைய ப்ரொட்யூசர்.

இது மாதிரி கமல் கலந்து கொள்ளும் விழாக்களில் கூட ஒரு காரணம் இருக்கும். காரணம் அவர் நேர மேலாண்மையையும், ஆற்றல் மேலாண்மையையும் இரு கண்களைப் போல கருதுபவர்.

காதலா காதலா பட ஷீட்டிங் சமயத்தில் அவர் குங்குமம் பத்திரிக்கைக்கு ஒரு பேட்டியளித்தார். அதில்

“எனக்கு கார் ஓட்டத் தெரியும். அதற்காக நானே கார் ஒட்டிக் கொண்டு போனால் என்னுடைய நேரம் எவ்வளவு வீணாகும். அந்த நேரத்தில் நான் அடுத்து செய்யப் போவதை சிந்தித்தால் எனது ப்ரொடக்டிவிட்டி கூடும். அதனால் தான் நான் ஓட்டுநர் வைத்துக் கொள்கிறேன்”

என்று சொல்லியிருந்தார். அவர் தேவையில்லாமல் நேரத்தை வீணாக்குவதேயில்லை. அவர் சம்பந்தமில்லாமல் ஒரு விழாவில் கலந்து கொண்டால் அதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கும்.

சமீபத்தில் பரபரப்பாக திரையுலக வட்டாரங்களில் அடிபடும் செய்தி
“ தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. கமல் முதல் ஆளாக சென்று வாழ்த்தியுள்ளார்” என்பது.

காரணமில்லாமல் கமல் அங்கு செல்ல எந்த முகாந்திரமும் இல்லை. தற்போது மன்மதன் அம்பு படம் ஷீட்டிங் முடிந்து அதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த படத்துக்கு அவர் தயாராகி விட்டது போலவே தெரிகிறது.

ஆஸ்கார் ரவிசந்திரனும் தசாவதாரத்தில் ரவிவர்மனின் உழைப்பைப் பார்த்து மாஸ்கோவின் காவிரி என்னும் படத்தை இயக்கக் கொடுத்து, அவுட்புட்டை பார்த்து நொந்து போய், அந்தப் படம் தன் பேனரில் வெளியானால் ஆஸ்கார் பிலிம்ஸின் குட்வில் போய்விடும் என்று ஒரு டம்மி கம்பெனியைத் தொடங்கி, அதன் மூலம் வெளியிட்டு தோள் பட்டை வரை சுட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் தியேட்டர்களுக்கு படங்களை தொடர்ந்து பீட் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

எனவே ஆஸ்கார் தயாரிப்பில் கமல் படம் என்னும் அமைப்பு ஒன்று தெரிகிறது.

அது மருதநாயகமாய் இருக்குமோ என்னும் வதந்தியும் மீடியாவில் உலவுகிறது.

கமல் தேவர் மகன் படம் தொடர்பான ஒரு பத்திரிக்கைப் பேட்டியில்

“இந்தப் படத்தில் வரும் சிலம்ப சண்டைக்காட்சி (சுண்ணாம்பு மூலம் பொட்டு வைப்பது) மருதநாயகத்துக்காக நான் கன்ஸீவ் பண்ணியது”

என்று சொல்லியிருந்தார். எனவே கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக கமலுக்கு கனவாக இருப்பது மருதநாயகம்.

மதராச பட்டிணம் படத்துக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பும் ஆஸ்கார் பிலிம்ஸையும், கமலையும் மருதநாயகத்தை நோக்கி மனம் திருப்ப வைத்திருக்கலாம்.

எப்படியோ இம்முறையாவது அவர் கனவு நிறைவேறட்டும். இல்லையெனில் ஒரு நல்ல பொழுது போக்குப் படம் இவர்கள் கூட்டணியில் உருவாகட்டும்.


நிறைவேறாத காதல் தான் காவியமாகிறது. சாத்தியப்பட்ட காதல் சடங்காகி விடுகிறது. அதுபோலவே கமலுக்கு மருதநாயகம் நிறைவேறாத காதலாகவே இருக்கட்டும் என்பதே என் ஆசை. இவ்வளவு நாள் எதிர்பார்த்து விட்டு கடைசியில் இதைத்தானா? என்று மனம் வெதும்பும் படி ஆகிவிடக் கூடாது என்பதே என் எண்ணம்.

October 19, 2010

ஜெயலலிதா மதுரை கூட்டம் – நேரடி கவரேஜ்

காலை ஐந்து ஆறு மணி அளவில் இருந்தே திருமங்கலம் ஏரியா டீக்கடைகளில் திருவிழா கூட்டம். டீயும் சிகரெட் விற்பனையும் கொடிகட்டிப் பறந்தது. கன்னியாகுமரி,திருநெல்வேலி உட்பட பல ஊர்களில் இருந்தும் கட்சியினர் வேன்களில் வந்திருந்தனர்.

மகிந்திரா போன்ற வேன்களே அதிகம் இருந்தன. சொகுசு வாகனங்கள் குறைவு. ஸ்கார்பியோக்களும் அதிகம்.

நான் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்றது கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் சார்பாக வந்த வேனில்( லிஃப்ட் கேட்டு). அந்த வேன் பொறுப்பாளரிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள்.

முதல் நாள் இரவு புரோட்டா ஆம்லேட், காலை டீ, சிகரெட் பின்னர் டிபன், மதியம் மற்றும் இரவு சாப்பாடு வரை அவர் பொறுப்பு. ஆனால் ஒரு ஆளுக்கு என்று தனியாக பணமோ, மதுபானமோ தர தேவையில்லை.

மாவட்டத்துக்கு இத்தனை வேன்கள் என்று டார்கெட். அதை ஒன்றியம் வாரியாக பிரித்து, பின் கிளைகழகம் வரை பிரித்து டார்கெட் அச்சீவ் பண்ணியுள்ளார்கள்.

வந்தவர்கள் அனைவருமே கட்சிக்காரர்கள் தான்.

தற்போது மாணவரணி செயலாளராக இருக்கும் ஆர் பி உதயகுமாருக்கு நல்ல மவுசு என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் எததனை நாளைக்கு அது இருக்கும் என்ற கேள்வியும் அவர்களிடம் இருந்தது.

கூட்டம் நடந்த இடத்துக்குச் சென்ற போது பெண்களையே காண முடியவில்லை. தீப்பொறி ஆறுமுகம் மீட்டிங்கிலும், சபரி மலையிலும் தான் திரும்பிய பக்கமெல்லாம் ஆண்கள் இருப்பார்கள். நேற்றும் அதுபோலத்தான் கூட்டம் இருந்தது.
83,84 ஆம் ஆண்டு வாக்கில் ஜெயலலிதா எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் சரி பாதி பெண்கள் கூட்டம் இருக்கும். இப்போது அது மிஸ்ஸிங். ஒருவேளை கூட்டம் நடைபெற்ற நேரம், இடம் ஆகியவை காரணியா இல்லை டிவியில் மூழ்கி விட்டார்களா இல்லை போயி என்ன ஆகப் போகுது என்ற மனநிலையா இல்லை அரசியல் ஆர்வம் குறைந்து விட்டதா என பல கேள்விகள்.

மேலும் பொது மக்கள் என்ற ஜாதியினரையும் அங்கே நான் பார்க்கவில்லை. பார்த்த எல்லோருமே கட்சியினர் தான். இதில் பெண்களை எதிர்பார்ப்பது என்பது ப்ளெக்ஸ் இல்லாத மதுரை வீதிகளை எதிர்பார்ப்பதற்குச் சமம்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தற்போது பிளக்ஸ் வைத்துத் தானே தமிழை வளர்க்கிறது. இந்தக் கூட்டத்திலும் பல அட்டகாச பிளக்ஸ் வசனங்கள். அன்னை மீனாட்சியே தொடங்கி அம்மா வந்தாச்சு பூமி குளிர்ந்தாச்சு வரை வித வித வசனங்கள். ஆனால் மேன் ஆப் தி மேட்ச் கிரம்மர் சுரேஷ் என்பவர்தான். (முன்னர் பி டி ஆர் பழனிவேல்ராஜனின் தொண்டராக இருந்து அழகிரியால் அதிமுகவிற்க்கு வந்தவர்). இவர் வைத்த உலக செயலாளர்களுக்கெல்லாம் செயலாளரே மிகப்பெரிய ஹிட்.

கூட்டத்தில் பெரும்பாலோனோர்கள் ஜெயலலிதா பேசியதை கவனித்ததாகவே தெரியவில்லை. காலையில் இருந்தே வெயிலிலும், புழுக்கத்திலும் இருந்ததால் உண்டான களைப்பு மற்றும் பேசுபொருள் தெரிந்திருந்ததால் ஏற்பட்ட அசுவராசியம் போன்ற காரணங்கள் என்று நினைக்கிறேன். கேமரா திரும்பும்போது மட்டும் உற்சாகமாக கையாட்டினார்கள்.

பெரும்பாலும் குழு குழுவாகவே அமர்ந்திருந்தார்கள் அல்லது நின்றிருந்தார்கள். உட்கட்சிப் பேச்சுக்கள் அவர்களிடையே பிரதானப் பங்கு வகித்தன. இளைஞர் பாசறை செயலாளர், தொகுதி செயலாளார் ஆகியோர் உற்சாகமாக இருப்பதாக அவர்கள் பேச்சில் இருந்து தெரியவந்தது.

கூட்டம் முடிந்து வீட்டிற்க்கு கோவை மாவட்டம் வேலுமணி எம் எல் ஏ அவர்கள் ஏற்பாட்டில் வந்திருந்த வேனில் லிஃப்ட் கேட்டு திரும்பினேன். அந்த வேனின் பொறுப்பாளர் வட மாவட்டங்களில் இருந்து குறைவான வாகனங்களே வந்திருந்ததாகவும், மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்துதான் அதிக வாகனங்கள் வந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

ரிங் ரோடில் இருந்த பல கல்லூரிகளில் விடுமுறை அறிவித்திருந்தார்கள். பல பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வகுப்புகளை முடித்து விட்டிருந்தார்கள். சில தனியார் அலுவலகங்களும் வேலை நேரத்தை மாற்றி அமைத்திருந்தன. பொதுமக்களும் தங்கள் நடமாட்டத்தை குறைத்திருந்தனர்/மாற்றியமைத்திருந்தனர்.

பாபர் மசூதி/ராம ஜென்ம பூமி தீர்ப்பின் போதும் மக்களிடம் இதே அணுகுமுறை இருந்தது. மக்கள் புரோ ஆக்டிவ்வாக மாறத் தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது. மேலும் பல கல்வி/வியாபார நிறுவனங்கள் அரசியல்வாதிகளுடையதாக இருப்பதும் இதற்கு காரணாமாய் இருக்கலாம்.

இதனால் கூட்டம் நடைபெறும்போது அந்தப் பகுதி தவிர மதுரை மிக இயல்பாகவே இருந்தது. கூட்டம் முடிந்த பின்னர் எல்லா வாகனங்களும் ஒரு சேர கிளம்பியதால் மட்டுமே டிராஃபிக் ஜாம் ஆனது.

நான் கவனித்த வரையில் கூடிய கூட்டத்தை பார்த்தால் இது ஒரு கட்சி மாநாடு போலவே நடந்தது. வந்த கூட்டததை ஆட்சிக்கு எதிரான மக்களின் எழுச்சி என்று சொல்ல வாய்ப்பே இல்லை.

ஆனால் அதிமுக விற்கு இவ்வளவு நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்பது திமுகவிற்கு கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான். ஒவ்வொருவரும் ஐம்பது ஓட்டைக் கொண்டு வந்தாலே அதிமுகவிற்கு பெரிய பலமாகிவிடும். மேலும் இவர்களுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுகவிற்கு தலைவலிதான்.

October 15, 2010

கம்பெனி நடிகர்கள்

கம்பெனி நடிகர்கள் என்றவுடன் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பாய்ஸ் கம்பெனி முதலான நாடகக் கம்பெனி நடிகர்கள் தான். எம்ஜியார், சிவாஜி கணேசன் போன்றவர்கள் கூட இம்மாதிரி கம்பெனி நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான். நடிப்பில் அசத்தி மக்கள் மனதை வசீகரித்துவிட்டால் கம்பெனி நடிகர் என்னும் வட்டத்தில் இருந்து தப்பித்து ஸ்பெஷல் நாடக நடிகர், சினிமா நட்சத்திரம் என முன்னேறிவிடலாம்.

அதன் பின்னர் தமிழ்சினிமாவில் மார்டன் தியேட்டர்ஸ், ஜெமினி போன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கணக்கில் நடிகர் நடிகைகளை ஒப்பந்தம் செய்து மாத சம்பளம் கொடுத்து வேலை வாங்கினார்கள்.

சில இயக்குநர்கள் தாங்கள் அறிமுகப்படுத்தும் நாயக/நாயகியரை சில படங்கள் வரை தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என கேட்டுக் கொள்வதும்/நிர்பந்திப்பதும் உண்டு. பாலசந்தர் நடிகர்களிடத்திலும், பாரதிராஜா நடிகைகள் இடத்திலும் இது போல ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுண்டு. எனவேதான் பாலசந்தர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ், விவேக் என பலரிடம் தொடர்ந்து வேலை வாங்க முடிந்தது (விதிவிலக்காக இதில் சரிதாவையும் சேர்த்துக் கொள்ளலாம்) . பாரதிராஜாவோ ரேவதி,ராதிகா,ராதா போன்றோரை தொடர்ந்து உபயோகப் படுத்த முடிந்தது. (விதிவிலக்காக ராஜா வை சேர்த்துக் கொள்ளலாம்).

மணிரத்னம், பாலா ஆகியோரிடத்திலும் இந்தத் தொடர்ச்சியைப் பார்க்கலாம். மணிரத்னம் அரவிந்த்சாமி மற்றும் மாதவனை தொடர்ந்து பயன்படுத்தினார். பாலாவும் விக்ரம்,சூர்யா மற்றும் ஆர்யாவிடம் உரிமை எடுத்துக் கொண்டது உண்டு.

இவர்கள் எல்லாம் நட்சத்திரங்கள். ஆனால் நடிகர்கள் என்னும் நிலையில் இருந்து தொடர்ந்து ஒரு கம்பெனியின் எல்லாப் படங்களிலும் தலை காட்டுபவர்களை கம்பெனி நடிகர்கள் என்று செல்லமாகக் குறிப்பிடுவார்கள். அப்படி அழைக்கப் படும் கம்பெனி நடிகர்களைப் பற்றி பார்ப்பதே இந்தப் பதிவு.


முதலில் கவிதாலயா நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். இந்நிறுவனத்திற்க்கென்றே பிரத்யேக நடிகர்கள் உண்டு. அவர்களில் முக்கியமானவர் கவிதாலயா கிருஷ்ணன். எம் டெக் பட்டதாரியான (அந்தக் காலத்திலேயே!) இவர் கவிதாலயாவின் எல்லாப் படங்களிலும் இருப்பார், அது யார் நடித்ததாக இருந்தாலும் சரி, யார் இயக்கியதாக இருந்தாலும் சரி. மற்ற கம்பெனிப் படங்களில் இவர் அரிதாகவே தலை காட்டுவார். இதற்கெல்லாம் உச்சமாக இவர் கவிதாலயாவின் துணை நிறுவனமான மின்பிம்பங்களின் அனைத்து சீரியல்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜாவை விட ராஜாவின் மேல் விசுவாசம் என்பதற்கு இவர்தான் உதாரணம்.

நாசர், சார்லி போன்றவர்களும் கவிதாலயாவின் கம்பெனி நடிகர்களாக இருந்தாலும் அதை விட்டு நாசர் முழு அளவிலும், சார்லி பகுதியாகவும் தங்கள் திறமையினால் தனித்து நின்றுவிட்டார்கள்.

அடுத்ததாக சூப்பர் குட் பிலிம்ஸ். இவர்கள் குறுகிய காலத்தில் ஐம்பது படங்களை தயாரித்தவர்கள். பெரும்பாலும் லோ பட்ஜெட் படங்கள். அதனால் தான் அலுவலக நிர்வாகிகள், உதவி இயக்குநர்கள் ஆகியோரை தொடர்ந்து தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்வார்கள். சிங்கமுத்து, லட்சுமணன் போன்ற நடிகர்கள் இவர்களின் எல்லாப் படத்திலும் சிறு சிறு கேரக்டர்களின் வருவார்கள்.

விசுவின் படங்களில் மறைந்த கிஷ்மு (வேறு வழியில்லை, தம்பி), திலீப் போன்றோரை தொடர்ந்து பார்க்கலாம்.

ராஜ்கமல் பிலிம்ஸ்ஸை பொறுத்தவரை சந்தான பாரதி,அஜய் ரத்னம் பல படங்களில் தலை காட்டினார்கள். அதுபோல் பி வாசுவின் படங்களில் பாண்டு, மார்க்கண்டேயன் போன்றோரும், தற்போது கே எஸ் ரவிக்குமாரின் படங்களில் அனுமோகன், மனோபாலா போன்றோரையும் தொடர்ந்து பார்க்கலாம்.

இம்மாதிரியான கம்பெனி நடிகர்களின் தொடர் வாய்ப்புக்கு காரணம் என்ன?

1. முதல் காரணம் செண்டிமெண்ட். ஒரு வெற்றிப்படத்தில் ஒருவர் தலை காட்டிவிட்டால் அவர் இதிலும் இருக்கட்டுமே என்று கம்பெனி ஆட்கள் அனைவருமே நினைப்பார்கள். எடுத்துக்காட்டாக நாகராஜ சோழன் என்னும் நடிகர் ஒரு கால கட்டத்தில் நடித்த படங்கள் எல்லாமே நூறு நாட்கள். அவரை ஒரு காட்சியிலாவது நடிக்க வைக்க பல இயக்குநர்கள் விரும்பினார்கள்.

2. ஒரு நிறுவனத்தில் இருக்கும் வேலைகளை இழுத்துப் போட்டு செய்பவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கவே தலைமை விரும்பும். அதுபோல் படப்பிடிப்பில், வணிகத்தில் என ஆர்வம் காட்டும் நபர்களை தொடர்ந்து சினிமாவில் உபயோகப்படுத்த நினைப்பார்கள்.

3. சில இயக்குநர்களுக்கு தங்களுக்கு கதை விவாதத்தில் உதவுபவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிடும். அதனாலேயே சில இயக்குநர்களின் படங்களில் சிலர் தொடர்ந்து தலை காட்டுவது உண்டு.

4. சில நடிகர்கள் வலுக்கட்டாயமாக சென்று தொடர்ந்து வாய்ப்புக் கேட்பதும் உண்டு. நாமளே இவனுக்கு வாய்ப்புத் தராட்டி யார் தரப்போறா? என்ற அனுதாபத்தில் அவர்களும் வாய்ப்பளிப்பதுண்டு. எங்கள் ஊரில் இருந்த துணை நடிகர் ஒருவர் தொடர்ந்து சங்கிலி முருகன் படங்களில் ஒரு சீனிலாவது நடித்து விடுவார். அதற்குக் காரணம் பட பூஜையன்றே அட்டெண்டென்ஸ் கொடுத்து விடுவதுதான்.

5. சில இயக்குநர்களுக்கு ஒன் டேக் ஆர்டிஸ்ட் எனப்படும் தப்புச் செய்யாமல் நடிக்கும் நடிகர்களைப் பிடிக்கும் நேர/பண விரயத்தைத் தடுக்க அவர்களை அழைத்து இந்த கேரக்டரைச் செய் என்று சொல்லி விடுவார்கள்.

ஆனால் இப்படி கம்பெனி ஆர்டிஸ்ட் என அழைக்கப் படுவதில் அவர்களுக்கு உண்மையிலே உவப்பாக இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஒவ்வொருவரும் திரை உலகத்தில் நட்சத்திரமாக மின்ன வேண்டும் என்ற பெருங்கனவுடனே வந்தவர்களாய்த்தான் இருப்பார்கள். ஒரு கட்டத்தில் கனவு கலைந்து கிடைத்த இடத்தில் அதிருப்தியுடந்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.