August 17, 2011
மூன்று முடிச்சு - ரஜினி படமல்ல - தொடர் பதிவு
விரும்பும் விஷயம்
1. திரைப்படங்கள்
2. புத்தகங்கள்
3. சாப்பாடு
விரும்பாத விஷயம்
1. அசுத்தம்
2. நய வஞ்சகம்
3. சோம்பல்
பயப்படும் விஷயம்
1. உறவுகளுக்குள்ளான பஞ்சாயத்து
2. வேலையின் நிரந்தரமில்லாத்தன்மை
3. பிள்ளைகளின் எதிர்காலம்
புரியாத விஷயம்
1. மகளுக்கு ஒரு நீதி மருமகளுக்கு ஒரு நீதி என்னும் மாமியார்த்தனம்
2. தன் வீட்டுக்கு ஒரு நீதி புகுந்த வீட்டுக்கு ஒரு நீதி என்னும் மருமகள்தனம்
3. மிகப் பெரிய அளவில் சாதித்தவர்கள் கூட செண்டிமெண்ட்டை பாலோ பண்ணுவது
மேஜையில் உள்ள பொருள்
1. கணிப்பொறி
2. தேனீர்க் கோப்பை
3. குறிப்பு நோட்டு
சிரிக்க வைக்கும் விஷயம்/மனிதர்கள்
1. நகைச்சுவை நடிகர்கள் (எப்போதும் கவுண்டமணி, இப்போது சந்தானம்)
2. ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவே எழுதும் ஓவர் பில்டப் பேட்டிகள்
3. சில பதிவர்கள்
தற்போது செய்து கொண்டு இருக்கும் காரியம்
1. மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற திட்ட அறிக்கை தயாரித்தல்
2. நண்பர் ஒருவரின் ஆய்வுப் பணி அறிக்கையை திருத்துதல்
3. சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்
வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்
1.குறைந்தது பத்து அறிவு சார் சொத்துரிமை (பேடண்ட்) வாங்க வேண்டும் (வியாபார ரீதியில் பயன்தரக்கூடிய)
2.ஆடி அல்லது பென்ஸ் கார் (ஹை எண்ட்) ஒன்று வாங்க வேண்டும்
3. ஒரு நல்ல நாவல் எழுத வேண்டும்
உங்களால் செய்து முடிக்கக் கூடிய விஷயம்
மேற்கூறிய மூன்றும்
கேட்க விரும்பாத விஷயம்
1.சாவு/உடல் நலம் குன்றிய செய்திகள்
2. வறுமைச் செய்திகள்
3. சிறுவர்/சிறுமியர் கொலை, கற்பழிப்பு
கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்
1. சரளமான ஆங்கிலம்
2. கணிதவியல்
3. இயற்பியல்
பிடிச்ச உணவு வகை?
1. புரோட்டா, மட்டன் சாப்ஸ், ஆம்லேட்
2. இட்லி, ஈரல் குழம்பு
3. தேனீர்
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்
மாறிக் கொண்டேயிருக்கும். இப்போது
1.விளையாடு மங்காத்தா
2. முத்தமிழே (ராமன் அப்துல்லா)
3. எவண்டி உன்னைப் பெத்தான் (வானம்)
பிடித்த படம்
இதுவும் மாறிக் கொண்டேயிருக்கும். இப்போது
1. இன்செப்சன்
2. ஆடுகளம்
3. தென்மேற்கு பருவக்காற்று
இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்
1. காற்று
2. நீர்
3. உணவு
இதை எழுத அழைக்கப்போகும் நபர்
யார் எல்லாம் இந்த சங்கிலியில எழுதுனாங்கண்ணு தெரியலை.
இந்த ஆண்டு பதிவுலகில் இணைந்து, இன்னும் இந்த ஜோதியில் கலக்காத ஒருவர் இதை தொடரட்டும். (உடன்பிறப்பு, பலராமன், ராஜேஷ் மற்றும் ரியாஸ் அகமது ) இதுவரை எழுதலைன்னா, இதை அழைப்பாக ஏற்றுத் தொடரவும்
--
நட்புடன்,
முரளிகண்ணன்
June 26, 2009
பள்ளிக்கூடம் போகலாமா?
நான் படித்த பள்ளி மற்றும் அந்த நினைவுகளைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். சில முக்கிய நினைவுகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
பர்த் சர்டிஃபிகேட்
நான் ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் எங்கள் ஊர் அறியாத ஒன்று. தலையின் மேற்புறமாக வலதுகையைக் கொண்டு சென்று இடது காதின் மேல் நுனியை தொட வேண்டும். அப்படித் தொட்டு விட்டால் ஐந்து வயது ஆகிவிட்டது என்று பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். பின்னர் ஏப்ரல் 2ல் இருந்து தொடங்கி ஜுன் 30 வரை உள்ள தேதிகளில் ஒன்றை ரேண்டமாக தேர்ந்தெடுத்து டேட் ஆப் பர்த்தை அல்லகேட் செய்வார்கள்.
தமிழ்நாடு பென்சனர் பட்டியலில் என் தந்தையின் பென்சன் விபரங்கள் சரியாக இருக்கிறதா எனத் தேடியபோது, பலரின் பிறந்தநாள் தேதியும் ஏப்ரல்,மே, ஜூனிலேயே இருந்ததைப் பார்த்து சிரிப்பு வந்தது.ஏதாவது புள்ளியியல் அறிஞர்கள் இதை ஆராய்ச்சி செய்து, இந்த மாதங்களில் பிறப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என கிளப்பிவிட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்து.
ஸ்கூல் பீஸ்
மூன்றாவது வரை மூன்று ரூபாய், பின் ஐந்தாவது வரை ஐந்து ரூபாய்.ஆறாவதில் இருந்து பத்தாம் வகுப்பு வரை 12 ரூபாய்.என்பது அப்போதைய நிலவரம். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது விகடன் 90 பைசா, குமுதம் 60 பைசா.
அப்போது அரசாங்க வேலை நாட்கள் வாரத்துக்கு ஆறு. இரண்டாம் சனி மட்டுமே விடுமுறை. சனிக்கிழமை அலுவலகத்தில் இருந்து வரும் என் தந்தை இரண்டு ரூபாய் கொடுப்பார். விகடன், குமுதம் போக மீத காசில் எங்கள் ஊரின் பிரபல லாலா கடையில் எனக்கு சாப்பிட எதாவது வாங்கிக் கொள்வேன். இதில் ஒருவாரம் மட்டும் ஸ்னாக்ஸ் கட்டாகும். ஏனென்றால் மாலைமதி அப்போது மாதமொருமுறை.
அது 50 பைசா.
இப்போதைய விகடன் விலையோடு ஒப்பிட்டால் 75 ரூபாய் ஓராண்டு கல்விக்கட்டணம்.
கிளாஸ் லீடர்
கிளாஸின் பிரம்பு, டஸ்டர் ஆகிய பொருட்களின் சேப்டி லாக்கரை இப்படியும் சொல்லலாம்.அதைத் தவிர இன்னொரு முக்கிய வேலை பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியரின் தூதராகச் செல்வது.
சத்துணவு
அப்போது காமராஜரின் மதிய உணவுத் திட்டம் அமலில் இருந்தது. நான் மூன்றாம் வகுப்பில் இருக்கும் போது எம்ஜியாரின் சத்துணவுத் திட்டம் அமலுக்கு வந்தது. உத்தியோகப் பூர்வமாக யோசிப்பவன் அதிகாரி, உணர்வுப் பூர்வமாக யோச்சிப்பவன் அரசன் என்று மெய்ப்பித்த நிகழ்வு இது. பல மாணவர்களின் இடை நிற்றலை நிறுத்திய நிகழ்வு இது. இந்த திட்டம் தொடங்கபட்டது எங்கள் ஊரில்தான். அன்னை தெரசா, எம்ஜியார் ஆகியோர் வந்து தொடங்கி வைத்தார்கள். அப்போது எங்கள் ஊர் மதுரை
மாவட்டத்தில் இருந்தது. கலெக்டர் ஆசிட் புகழ் சந்திரலேகா.
உணமையிலேயே வரலாறு காணாத கூட்டம். முதலில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அமல் படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாண்டுகள் கழித்து, 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது.
நேர வித்தியாசம்.
டிவி இல்லாக் காலம். எனவே எவ்வளவு நேரம் விளையாடினாலும் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கி விடுவோம். காலை ஐந்து மணிக்கு இயல்பாக முழிப்பு வந்துவிடும். பள்ளி திறப்பது ஒன்பது மணிக்கு. பள்ளி வீட்டுக்கு மிக அருகில். எனவே காலையில் நான்கு மணி நேரம் கிடைக்கும். இதில் வயல் வெளி, கிணறு, தெரு ஆயா கடை ஆப்பம்,பனியாரம் என எல்லாச் சடங்கும் முடிந்தும் நேரம் கொட்டிக் கிடக்கும். இன்றைய குழந்தைகளை நினைத்தால்?. தூங்கி எழுந்தவுடன் அவர்கள் பள்ளிக்குச்
செல்வது போல் ஒரு பிரமை.
இந்தப் பதிவை தொடர பதிவர் சினேகிதன் அக்பர், தற்கால நிகழ்வுகளை செமையாக
கிண்டலடிக்கும் வலைமனை சுகுமார் சுவாமிநாதன், பதிவர் ஸ்ரீ ஆகியோரை அழைக்கிறேன்.
May 31, 2009
மீண்டும் ஒரு தொடர் பதிவு
விதிகள் எப்பவும் போலத்தான். கீழே இருக்கிற 32 கேள்விகளுக்கும் (ஏதும் நியுமராலஜியா?) பதில் சொல்லணும். மூணு பேரைக் கூப்பிடணும்.
ரெடி ஸ்டார்ட்.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பெற்றோர் வைத்த பெயர்தான். எல்லா இடங்களிலும் முரளி கிருஷ்ணாவா எனக் கேட்கும்
போது மட்டும் அப்படிக்கூட இருந்திருக்கலாமா எனத் தோன்றும்.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்போது அழுகை எல்லாம் வருவதில்லை. ஆத்திரம் மட்டுமே.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்ஹூம்.
4).பிடித்த மதிய உணவு என்ன?
பொன்னி புழுங்கல் அரிசி சாதம், குரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ். முடிச்ச பின்னாடி பினிசிங் டச்சா ஒரு நன்னாரி சர்பத்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
விண்டவர் கண்டிலர் ரேஞ்சுல உடனே.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி. அதிலயும் குற்றாலத்தில புலியருவினு ஒன்னு இருக்கும். நம்ம தலைக்கு ரெண்டடி
உய்ரத்தில இருந்து விழும். அதுமாதிரி உயரம் கம்மியான அருவியா இருக்கணும். ஹோன்னு தலையில அடிக்கிற மாதிரி விழுகிற அருவிக்கு நோ.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களின் பேச்சு.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: அடாப்டபிலிட்டி
பிடிக்காத விஷயம் : சோம்பேறித்தனம்
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம் : அன்பு
பிடிக்காத விஷயம் : டயட்ல இருங்கன்னு கண்டிக்கிறது
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..
நண்பர்கள்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீலம்.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
எதுவும் இல்லை.
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பிங்க் (அப்போதான் பெண்கள் எடுத்துக்கிடுவாங்க)
14.பிடித்த மணம்?
காலைத் தேநீரின் மணம்.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
SUREஷ் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்.
டி வி ராதாகிருஷ்ணன் :பதிவர்களிடம் மிகப் பிரியமாக பழகுவார்
கார்த்திகைப் பாண்டியன் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்
காரணம் : இவங்களைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கத்தான்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
ஹாலிவுட் பாலா : அவருடைய எல்லா திரை விமர்சனங்களும்.
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ரொமாண்டிக் காமெடி
20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்
21.பிடித்த பருவ காலம் எது?
விண்டர்
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
இந்தவார ஜூனியர் விகடனும், ரிப்போர்டரும்.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
கடந்த மூன்று வருடமாக ஒன்றே (என் பையனின் படம்)
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : சிரிப்பு
பிடிக்காத சப்தம் : அழுகை
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
பெங்களூர் தான் அதிகபட்சம் நான் சென்றது
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கணும்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என்ன தப்பு செஞ்சேன்னே சொல்லாம நண்பர்கள் என்னை ஒதுக்கும்போது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அப்படி எதுவும் ஸ்பெசிபிக்கா இல்லை.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இதுக்கு நான் நீட்சேவைத் தான் துணைக்கழைக்கணும்
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
பதிவு போடுறது
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வேற வழியில்ல. வாழ்ந்துதான் கழிக்கணும்
November 09, 2008
நான் படித்த புத்தகங்கள்
இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த அத்திரிக்கு நன்றிகள்
எங்கள் தெருவில் சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா என்னும் கம்யூனிஸ இயக்கத்தின் நகர அலுவலகம் இருந்தது. அவர்கள் தட்டி எழுதுவதை வேடிக்கை பார்ப்பது என் சிறுவயது பொழுதுபோக்கு. அப்போது அவர்கள் எனக்கு சோவியத் யூனியன் தயாரித்து, மொழி மாற்றம் செய்யப்பட்ட சிறுவர் கதை புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்கள். எங்கள் வீட்டில் விகடன்,சாவி,குமுதம்,இதயம் போன்ற பத்திரிக்கைகளை வாங்குவதால் இயல்பாகவே எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது.
என் வயதையொத்த நண்பர்கள் எனக்கு அமையாததால் நூலகத்துக்கு செல்ல ஆரம்பித்தேன். அங்கு ஸ்டெல்லா புருஸ்,சுஜாதா, பாலகுமாரன் போன்றோரை விரும்பி படித்தேன். இந்த கால கட்டத்தில் ஜூனியர் விகடன் வேகமாக வளர ஆரம்பித்தது. அதனுடன் தராசு, நக்கீரன், நாரதர், கழுகு போன்ற அரசியல் புலனாய்வு பத்திரிக்கைகள் வெளியாயின. எம் ஜி யார் மறைவுக்குப் பின், ஜா ஜெ பிளவு, சட்டமன்ற அடிதடி, ஆட்சிகலைப்பு, கவர்னர் ஆட்சி என தமிழகம் பரபரப்பாக இவற்றில் வரும் சூடான செய்திகளுக்காக இவற்றை படிக்க ஆரம்பித்தேன்.
1989 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பூத் ஸ்லிப் எழுதுவது, டோர் கேன்வாஸிங் என (10 ஆம் வகுப்பில்) களப்பணியில் ஈடுபட்டேன். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு முன் அமைக்கப்படும் (பூத் ஸ்லிப் வினியோகிக்க உதவும்) கீற்று பந்தலில் அமர்ந்து ஸ்டெல்லா புருஸ்ஸின் (அது ஒரு நிலா காலம் என நினைக்கிறேன்) நாவலையும், நக்கீரனின் கருத்து கணிப்பையும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்த்த ஒரு தோழர், இதையெல்லாம் ஏன் படிக்கிறாய்? என கடிந்து கொண்டு தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.
அவர் எனக்கு வாழ்வின் அலைகள் (மாக்சிம் கார்க்கி), வால்கா முதல் கங்கை வரை (ராகுல சாங்கிருத்தியன்), அன்டோன் செகாவ் சிறுகதைகள் மற்றும் லெனினின் புத்தகங்கள் ஆகியவற்றை தந்தார். படித்தேன். எதுவும் புரியவில்லை.
பின் 1991 கல்லூரி விடுதியில், உடனிருந்த மற்றவர்கள் ஸ்டார் டஸ்ட், பிலிம் பேர், வீக், இந்தியா டுடே என படித்ததால் நானும் அவற்றை படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் இந்தி படவுலகம் குறித்தும், தேசிய அரசியல் குறித்தும் முதன்முறையாக அறிந்து கொண்டேன்.
பின் படிப்பு முடிந்து, வாழ்க்கையில் அடிபட்டு சென்னையில் அலைந்து கொண்டு இருந்தபோது எனக்கு ஆதரவளித்தது சென்னை கன்னிமாரா நூலகம். காலையில் நுழைந்தால் பசி உணரும் வரை படிக்க வேண்டியது. வெளியில் சென்று ஒரு பிரட் ஆம்லேட் பின்னர் விட்ட இடத்தில் தொடர வேண்டியது. இக்காலத்தில் தான் எனக்கு சிறுவயதில் புரியாததெல்லாம் புரிய ஆரம்பித்தது. கு அழகிரிசாமி, அசோகமித்திரன், லாசரா, புதுமைப்பித்தன், சி சு செல்லப்பா (வாடிவாசல்) ஆகியோரது படைப்புகள்அனைத்தும் படித்தேன். தி ஜா வின் மோகமுள், மரப்பசு, கல்கி,தேவனின் பெரும்பாலான படைப்புகள், ஆதவனின் என் பெயர் ராமசேஷன், சு ராவின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள், நாஞ்சில் நாடன், எஸ் ராமகிருஷ்ணன்
ஜெயமோகனின் குறு நாவல்கள் (ரப்பர்), என கலந்து கட்டி படித்தேன்.
அதன்பின் மேல்படிப்பு,திருமணம், குழந்தை என சமூக அந்துஸ்துக்காக ஓடிக்கொண்டிருருப்பதால் படிப்பது குறைந்து விட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாரு,ஜெமோ,கீற்று,சென்னை லைப்ரரி, வலைப்பதிவுகள் என வலையில் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
1.தமிழ்பறவை
3. அக்னி பார்வை
October 10, 2008
சினிமா கேள்வி பதில் தொடர்விளையாட்டு
என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த பாஸ்டன் பாலா,லக்கிலுக் ஆகியோருக்கு நன்றிகள்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எங்கள் ஊரில் பெண்கள் மதிய காட்சி, ஆண்கள் மாலை மற்றும் இரவு. பெண்கள் அனைவரும் சேர்ந்தே செல்வதால் கைக்குழந்தையையும் தூக்கி செல்வார்கள்.விவரம் தெரிந்து பார்த்த படம் சகலகலாவல்லவன். படம் முடிந்தபின் சகதி சண்டை,கம்பு சண்டை,சேஸிங் என சிலாகித்துக் கொண்டே வந்தேன். நிலாகாயுது பாட்டு அறுவை என்ற கமெண்ட் வேறு.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம் - வேளச்சேரி ராஜலட்சுமியில் (5 வது முறை)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சன் டிவியில் நேற்று கில்லி. இதன் மூலமான ஒக்கடுவில் இருக்கும் ஆந்திராவுக்கான எக்ஸ்ட்ரீம் காட்சிகளை தரணி கவனமாக தவிர்த்திருப்பது அவரின் தமிழ் சினிமா ரசிகர்கள் மீதான புரிதலை காட்டியது. தெலுங்கை விட தமிழ் கில்லி படு வேகம். இவரா குருவி?
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
இந்தியன். நல்ல கம்பெனியில் ரிட்டர்ன் கிளியர், இன்டெர்வியு ஓவர். ரிசல்டுக்காக காத்திருக்கும் போது உறவினர் ஒருவரின் மூலம் முயன்றால் வெற்றி என தெரியவந்தது. அடுத்த நாள் அவரை சந்திக்கலாம் என்ற்ரு இருந்த நிலையில் இந்தப்படம். தாத்தா கமல் சொல்வார் "லஞ்சம் கொடுத்தா உனக்கு முன்னாடி இருக்கிரவனை ஏய்க்கிறதில்லையா" என்று. மனசு சரியில்லை. அவரை சந்திக்கவில்லை. கோவிந்தா. இரண்டு வருடம் நாய்ப்பாடு பட்டபின் இருந்த கொஞச நஞ்ச நல்ல குணமும் போய், இப்பல்லாம் ரொம்பவே சுயநலம்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
குஷ்பூ - கற்பு மேட்டர். பகவத் கீதையின் சாரம்சம் கடமையை செய் பலனை எதிர்பாராதே. அதையும் நைக்காரர்கள் சுருக்கி டூ இட் ஆக்கினார்கள். அதுபோல் பெரியாரின் பெண்ணுரிமைக்கருத்துகளின் சாரம்சமே குஷ்பூ பேசியது. அதை பெரியாரை ஞானத்தந்தையாக ஏற்றவர்களே எதிர்த்தது ஆச்சரியம். பெரியார் என்றால் கடவுள் மட்டும் ஜாதி மறுப்பு தானா? மற்றவற்றை படிக்க வில்லையா? மனம் இல்லையா?
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
தசாவதாரத்தில் பல கிராபிக்ஸ் காட்சிகள் சராசரிக்கும் கீழே. ஆனால் பல்ராம் நாயுடு,பாட்டி இருவரும் காரில் முன்னால் போக பின்னால் கோவிந்த் துரத்தி வரும் காட்சி ஒரே ப்ரேமில் இருக்கும். சரியான அளவுகளுடன். முற்பாதியில் நாயுடு நடந்து கொண்டே விசாரனை செய்யும்போது அவருக்குப் பின் இருக்கும் கண்ணாடியில் கோவிந்தின் உருவம் தோன்றும் சரியான பாவங்களுடன். அசந்து விட்டேன். இயக்குனர்,கமல்,கேமிராமேன் கலக்கிய காட்சி அது.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சுவாசிப்பதுண்டா என்று கேட்டிருக்கிறீர்கள். முன்பு குமுதம் சினிமா நிருபர்களின் செய்திகளை தொகுத்து ரா கி ரங்கராஜன் எழுதிய லைட்ஸ் ஆன் வினோத் தான் நான் முதலில் படிப்பது. அவர் கொடுக்கும் ஆங்கில பன்ச் அசர வைக்கும். தேவியில் நெல்லை வழக்கில் எழுதும் பகுதியும், ஜெ பிஸ்மி வண்னத்திரையில் எழுதுவதும் பிடிக்கும். உயிர்மை காலச்சுவடு கீற்று போன்றவற்றில் வரும் சினிமா தொடர்பான கட்டுரைகளையும் விடுவதில்லை. முன்பு ஞாயிறுகளில் மாலைமலர் இணைப்பாக கொடுக்கும் சினிமா மலருக்காகவே அதை வாங்கியதுண்டு.
7.தமிழ்ச்சினிமா இசை?
திரைப்பட பாடல் மட்டுமே எனக்கு தெரிந்த சங்கீதம். சிறுவயதில் அதிரடி இசை. விடலையில் காதல் பாடல்கள். இப்போது கானாதான் என் பேவரைட். உசுருபோற நேரத்தில ஊத்த மாட்டான் பால, கால நீட்டி படுத்துக்கிட்டா எவ்வளோ பெரிய மாலை? என அசால்டாக ஒரே வரியில் வாழ்க்கையை புரியவைக்கிறார்கள்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
வாய்ப்பு கிடைத்தால் எதையும் விடுவதில்லை. சிறுவனாக இருக்கும் போது தெலுங்கு டப்பிங். மீசை முளைத்த போது மூன்றாம்தர மலையாளம். காலேஜில் கெத்துக்காக தில்,பேட்டா. நேம் ட்ராப்பிங்குக்காக பெங்காளி. உறவினர்களுக்காக ஆங்கிலம். அதிகம் தாக்கிய படம் ஹம் ஆப்கே ஹைன் கோன் (40 முறை, மாதுரிக்காக)
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
மேன்ஷனில் பலர் பழக்கம். ஒருமுறை அவர்களை இம்ப்ரெஸ் செய்வதற்க்காக பொன்னியின் செல்வனை உல்டா செய்து ஒரு கதை சொன்னேன்.
சுந்தரசோழன் - வயதான மாபியா டான்
ஆதித்த கரிகாலன் - ஐரோப்பாவில் போதை நெட்வொர்க் கவனிக்கும் மூத்த மகன்
வந்திய தேவன் - மூத்த மகனின் நம்பிக்கைக்குரிய அடியாள்
அருண்மொழிவர்மன் - ஹாங்ஹாங் போதை நெட்வொர்க் கவனிக்கும் இளைய மகன்
குந்தவை - மாபியா டானின் மகள் மற்றும் தற்போதைய செக்கரட்டரி
பழுவேட்டரையர்கள் - டானின் கூட்டாளிகள், இந்திய நெட்வொர்க்
கொடும்பாளூர் மலையமான் - இளைய மகனுக்கு பெண் கொடுக்க நினைக்கும் மற்றோரு கூட்டாளி
நந்தினி - பழைய பங்கு பிரித்தலில் கொல்லப்பட்ட இன்னோரு கூட்டாளியின் மகள். பழி வாங்க துடிக்கிறாள்.
சேந்தன் அமுதன்,பூங்குழலி,மதுராந்தகன்,பினாகபானி போன்ற மொக்கை கேரக்டர்களை தவிர்த்துவிட்டு 80 சீன் எழுதினேன். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் தான் நான் உண்மையை கூறினேன். பட்ஜெட் பெரிசு என்று எகிறிவிட்டார்கள். இப்போதுதான் பொன்னியின் செல்வன் பொது உடமை தானே? யாராவது இளிச்சவாயன் கிடைத்தால் நான் ரெடி. டிவி தொடராக கூட எடுக்கலாம்.
தமிழ்சினிமாவை கீழே வேண்டுமானால் அது இறக்கும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
டிவி விழுங்கிவிடும் என்று சொன்னார்கள். படத்தை வைத்திருப்பதுதான் டிவிக்கு இப்போது சொத்து. காதலில் விழுந்தேன் படத்தை பென்ஹர் பட ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள். எனவே 10 வருஷமாவது இந்நிலை நீடிக்கும்.தற்போது, 3சி என்று அழைக்கப்படும் சென்னை, செங்கல்பட்டு ,கோவை ஆகிய சென்டர்களின் வசூல் மற்ற அனைத்து சென்டர்களின் கூட்டு வசூலுக்கு நிகராக இருக்கிறது.இதுபோக சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு உரிமை என மார்க்கட் விரிந்து உள்ளது. எனவே சரோஜா, பொய் சொல்ல போறோம் போன்ற அர்பன் தீம் படங்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
என் வேலையில் நல்ல பெயரெடுப்பேன். புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உருவாக வாய்ப்பு அதிகம். தமிழக வரலாறு 4000 வருடம் என கொண்டாலும் இந்த 77 ஆண்டுகள் இரண்டு சதவீதம் தானே?
கீழ்க்கண்டவர்கள் இதே கேள்விகளுக்கு தங்கள் மலரும் நினைவுகளை தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் புருனோ
ராப்
வெட்டிப்பயல்
குட்டிபிசாசு
பரிசல்காரன்
நந்தா
June 06, 2008
திண்ணையும் திருவிழாவும்

எங்கள் தெருவில் ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது முன்பொரு காலத்தில். தொலைக்காட்சிகள் தங்கள் கொடூர கரங்களால் குடும்ப உறவுகளை குலைத்திராத காலத்தில் அந்த திண்ணைகள் மகளிரால் நிரம்பி வழிந்தன. கணேஷ் அப்பா வந்துட்டார், குமார் அப்பா வந்துட்டார் போன்ற குரல்கள் கேட்டதும் அவருக்குரியோர் தத்தம் இல்லங்களுக்கு திரும்புவோர். மாலை 6 மணி அளவில் தொடங்கும் இந்த சந்திப்புகள் இரவு 8 மணி அளவில் முடிவுறும். அக்காலத்தில் எல்லார் வீடுகளிலும் மின்விசிறி இல்லாததும் அவர்களை திண்ணைக்கு வரவழைத்தது. புரணி என்ற வார்த்தை எனக்கு அறிமுகமானது அங்குதான். பெரும்பாலும் பழைய சினிமா கதைகள், பிறந்த புகுந்த வீடு பெருமைகள் சில கிசுகிசுக்கள் பரிமாறப்படும்.
சாதாரண நாட்களில் டல்லடிக்கும் இந்த திண்ணைகள் திருவிழா சமயங்களில் டாலடிக்கும். அந்நாளைய பதின்மவயது பெண்களின் தேசிய உடையான பாவாடை சட்டை மற்றும் தாவணிகளால் திண்ணை அலங்கரிக்கப்படும் . (இப்போதும் அணிகிறார்களே சுடிதார் நைட்டி :-(( ). அவர்கள் போடும் கோலமும் அதற்கு நண்பிகளின் கமெண்ட் என தெருவே கலகலப்பாக இருக்கும். மாட்டுப்பொங்கல் அன்று எல்லோரும் திண்ணையில் அமர்ந்து கரும்பு சாப்பிடுவது, மருதாணி வைப்பது என அமர்க்களப்படும். தீபாவளி அன்று அவர்கள் திண்ணையில் நின்று கொண்டு அண்ணன் தம்பிகள் வெடிவெடிப்பதை கலாய்ப்பார்கள். அதெல்லாம் ஒரு வசந்த காலம்.
இந்த கோடை விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது வெறிச்சோடிய திண்ணைகள் என்னை வரவேற்றன. பல திண்ணைகள் வீட்டின் வரவேற்பரையாக பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தன. அந்த 6 – 8 ல் அவர்கள் நெடுந்தொடர் கதாபாத்திரங்களுடன் உறவாடிக்கொண்டிருந்தனர். வாம்மா திண்ணையில உட்கார்ந்து பேசலாம் என்ற என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள் அம்மா. வழக்கொழிந்து போன தொழில்களில் விரைவில் சேரப்போகும் தயிர்,வளையல் விற்போர், ஈயம் பூசுதல்,பிளாஸ்டிக் ரிப்பேர் போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் போது மட்டும்தான் இப்பொது திண்ணைகள் உயிர் வாழ்கின்றன.
தலை பாலபாரதி ஆரம்பித்து சென்ஷி சொன்னதற்காக முதலில் எழுதி விட்டேன். ஆர்வமுள்ளவர்கள் திண்ணை பற்றி எழுதலாம். ஆர்வம் தெரிவித்த முத்துலட்சுமி அவர்களை அடுத்து எழுத அழைக்கிறேன்
திண்ணை பற்றிய அணைத்து பதிவுகளையும் காண