September 23, 2014

ரகுமான்

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே அரசியல், சமுதாய ரீதியில் பல பிணக்குகள் இருக்கலாம். ஆனால் திரைப்படத்துறை மட்டும் விதிவிலக்கு. நமக்கு தண்ணீரைத் தர மறுக்கும் கேரளா, நாயகிகளை மட்டும் தர தயங்குவதே இல்லை. அந்தக்கால பத்மினி முதல் இடைக்கால ராதா,ரேவதி, நதியா, இந்தக்கால நயன் தாரா, லட்சுமி மேனன் வரை கேரள நாயகிகள் தமிழ்நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை வந்துள்ள படங்களில் அதிக படங்களில் நாயகிகளாக நடித்தவர்கள் கேரள பெண்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் நாயகர்களில் அப்படிச் சொல்ல முடியாது. மலையாளத் திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்த நாயகர்கள் தமிழ்சினிமாவில் வெற்றி பெற்றதில்லை. ஆனால் மலையாள திரைப்படங்களில் நடிக்காமல் நேரடியாக இங்கு வந்த எம்ஜி ராமச்சந்திரன், அஜீத் ஆகியோர்  இங்கே அளப்பரிய வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.


தமிழ்சினிமாவுக்கு பல நல்ல கதைகளைக் கொடுத்த மலையாளத்திரை உலகம், கமல்ஹாசன் மற்றும் விக்ரமை அவர்களது ஆரம்ப நாட்களில் பட்டை தீட்டிக் கொடுத்தது. ஆனால் தங்களின் கேரியரில் உச்சத்தில் இருக்கும் போது, தமிழில் இருந்து யாரும் கேரளா செல்ல விரும்புவதில்லை. காரணம் சம்பளம். ஆனால் கேரளத் திரையுலகில் உச்சத்தில் இருப்பவர்கள் தமிழுக்கு வர தூண்டுதலாய் இருப்பதும் இதே சம்பளம்தான்.

மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற திறமைசாலிகள் கூட இங்கே நாயகனாக நிலைபெற முடியவில்லை. ஆனால் இவர்களுக்கு முன்னரே தமிழுக்கு வந்த ரகுமானுக்கு இவர்களுக்கு இல்லாத ஒரு அட்வாண்டேஜ் இருந்தது. மேற்குறிப்பிட்டவர்களுடன் ஒப்பிடுகையில் மிக இளவயதிலேயே தமிழுக்கு நாயகனாக வந்தவர் இவர்.


தன் 16 வயதிலேயே மலையாளத் திரைப்படங்களில் இளைஞனாக நடிக்க ஆரம்பித்த இவர், சில வருடங்களுக்குள்ளாகவே பத்மராஜன், சத்யன் அந்திக்காடு, கே எஸ் சேதுமாதவன், பரதன் போன்ற  இயக்குநர்களின் படங்களில் மம்முட்டி, மோகன்லால், பரத்கோபி, நெடுமுடி வேணு போன்ற திறமை மிகுந்த நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

86ஆம் ஆண்டு தன் 20ஆவது வயதில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில், அப்போது உச்சத்தில் இருந்த நதியாவின் ஜோடியாக ரகுமான் நிலவே மலரே படத்தில் அறிமுகமானார். பின் தொடர்ந்த ஆண்டுகளில் கண்ணே கனியமுதே, வசந்தராகம் (விஜயகாந்த் உடன்), அன்புள்ள அப்பா (சிவாஜி கணேசனுடன்) போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் ஷண்முகபிரியன் இயக்கிய ஒருவர் வாழும் ஆலயம் பிரபுவுடன் இணைந்து நடித்தார். படத்தில் நடித்தார். இந்த ஆரம்பகாலப் படங்களில் எல்லாம் கதையின் நாயகனாகவும், இரண்டாம் நாயகனாகவுமே நடித்து வந்தார்.

கே.பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரேக் கொடுத்த ”புதுப்புது அர்த்தங்கள்” தான் ரகுமானுக்கு தமிழில் நல்ல பிரேக் கொடுத்த படம். அழகான இளம் பாடகன்(ரகுமான்), பொஸ்ஸிவ்னெஸ் அதிகம் உடைய அவனது மனைவியால்(கீதா) வரும் பிரச்சினைகளால் வெறுப்புற்று தனிமை தேடிச் செல்கிறான். செல்லும் வழியில் கணவனால் துன்பப்படும் ஒரு பெண்ணைச்(சித்தாரா) சந்திக்கிறான். இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. ஆனால் பின்னர் நடக்கும் சம்பவங்களால் இருவரும் தத்தம் துணையுடனே மீண்டும் இணைகிறார்கள். ஜெயசித்ரா ரகுமானின் மாமியார் வேடத்தில் நடித்தார். சித்தாராவிற்கும் தமிழில் நல்ல அறிமுகம் கொடுத்த இந்தப்படத்தில், ஜனகராஜ் மற்றும் விவேக்கின் காமெடி பேசப்பட்ட ஒன்று. அனைத்திற்கும் மேலாக இளையராஜாவின் இசை. நூறு நாட்கள் ஓடிய இந்தப் படம் மூலம் ரகுமான் தமிழில் ஒரு நிலையான இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதைத் தொடர்ந்து அவர் நடித்த படங்களான பாக்யராஜின் உதவி இயக்குநர் கோலப்பன் இயக்கிய பட்டணந்தான் போகலாமடி, ரூபிணி, கவுண்டமணியுடன் இணைந்து நடித்த பட்டிக்காட்டான், மற்றும் மனைவி வந்த நேரம், ஆரத்தி எடுங்கடி என பெரும்பாலான படங்கள் சரியாகப் போகவில்லை. கே எஸ் ரவிகுமார் இயக்கிய முதல் படமான “புரியாத புதிர்” மட்டும் ஆவரேஜாக ஓடியது.  இதே நேரத்தில் அவர் மலையாளப்படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்து வந்தார்.
1991 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் நீ பாதி நான் பாதி, ஜெயசித்ராவின் இயக்கத்தில் புதிய ராகங்கள் போன்ற படங்களில் நடித்தார். புதுப்புது அர்த்தங்களில் மாமியாராக நடித்த ஜெயசித்ராவுடன் ஏறத்தாழ ஜோடி போன்ற கேரக்டரில் நடித்தார்.

இதுதான் ரகுமான் சறுக்கிய இடம். புதுப்புது அர்த்தங்களில் கிடைத்த வெற்றியை அவர் தக்கவைக்க விரும்பவேயில்லை. தமிழில் மட்டும் கவனம் குவிக்காமல் மலையாள, தெலுங்குப் படங்களிலும் நடித்தார். தமிழிலும் நடித்து தன்னை நிரூபிப்பதற்கான வேடங்களை தேர்ந்தெடுக்கவில்லை. இரண்டு மூன்று நாயககர்களுடனும் இணைந்து நடித்தார். இதனால் அவருக்கென ஒரு தனித்தன்மையோ, ரசிகர்களின் ஆதரவோ கிட்டவில்லை.

ஆனாலும் அவருக்கு மும்மொழிகளிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. மாப்பிள்ளை வந்தாச்சு, நானே வருவேன் (நீயா படத்தின் இரண்டாம் பாகம்), ஆத்மா (ராம்கியுடன்), உடன்பிறப்பு (சத்யராஜுடன்), அதிரடிப்படை (சுமன்), பொன் விலங்கு (ரஞ்சித்), கறுப்பு வெள்ளை, டியர் சன் மருது, பாட்டு பாடவா (எஸ்பிபியுடன்) இணைந்து படங்களில் நடித்து வந்தார். இவற்றில் எந்தப் படமும் வெற்றிபெறவில்லை.

1996ஆம் ஆண்டு பாலசந்தரின் இயக்கத்தில் “கல்கி” படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் ஆவரேஜாகத்தான் ஓடியது. அதிலும் எல்லாப் புகழையும் உடன் நடித்த பிரகாஷ்ராஜே எடுத்துக் கொண்டார். இதே ஆண்டில் இந்தியில் பெருவெற்றி அடைந்த சஞ்சய்தத் நடித்த “கல்நாயக்கின்” ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பும் ரகுமானுக்கு கிடைத்தது. அந்தப் படம் மூத்த இயக்குநர் ஏ ஜெகன்னாதனின் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படமும் தோல்வி.

கடைசி வாய்ப்பாக ரகுமானுக்கு கிடைத்த படம் சங்கமம். பிரமிட் நடராஜன் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரகுமானின் சகலையான ரஹ்மானின் இசை அமைப்பில் வெளியான படம். தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் வரிசையில் கலைஞர்களுக்கு இடையேயான போட்டியை அடிப்படையாக வைத்து உருவான படம்.
இந்தப் படத்தில் எத்தனை குறைகள் இருந்தாலும், கடைசியில் வரும் கிளைமாக்ஸ் பாடல் மட்டுமே படத்தை தூக்கி நிறுத்த போதுமான வலிமையோடு இருந்தது.

1980 மற்றும் 90களில் இருந்த மலையாள ஹீரோக்கள் யாரும் நடனத்தில் வித்தகர்கள் இல்லை. அவர்களுக்கு நன்றாக நடிப்பு வரும், நகைச்சுவையிலும் பிரமாதப்படுத்துவார்கள். ஆனால் நடனம் அவர்களுக்கு ஒரு வீக்னெஸ்ஸாகவே இருந்தது. மேலும் அப்போதைய மலையாள படங்களில் தேர்ந்த நடனத்திற்கு அவசியமிருக்கவில்லை. இதே காலகட்டத்தில் உருவான ரகுமானும் அப்படித்தான். நடனம் சரியாக வரவில்லை. அதுபோலவே நகைச்சுவை காட்சிகளிலும் அவருடைய பங்களிப்பு மிகக் குறைவே.

சங்கமத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு ஆக்ரோசமான நடனம் தேவைப்பட்டது. அதைத்தர ரகுமானால் முடியவில்லை. படத்தின் கதாநாயகியான விந்தியாவும் கதைப்படி ஒரு கிளாசிக்கல் டான்ஸர். அவருக்கும் சுத்தமாக பரதநாட்டியம் தெரியாது. சுரேஷ்கிருஷ்ணா தன் அனுபவத்தைக் கொண்டு, அது தெரியாமல் பார்த்துக் கொண்டார். நல்ல பரதநாட்டியம் தெரிந்த நாயகியும், பிரபுதேவா போன்ற நடனத்தில் விற்பன்னரும் அந்தப் படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் சங்கமம் வெற்றி பெற்றிருக்கும். கேரள நாயகர்கள் யாருக்கும் நடனம் கைகூடவில்லை. அதனால் தான் இப்போதைய கேரள இளைஞர்கள் விஜய்யை ரசிக்கிறார்கள் போலும்.

அதற்குப்பின் ரகுமானுக்கு இறங்குமுகம் தான். 2004ல் கே எஸ் ரவிகுமார் இயக்கிய எதிரி படத்தில் ஒரு நெகடிவ்வான போலிஸ் அதிகாரி வேடம் கொடுத்தார். அடுத்த ஆண்டு வெளியான அமீரின் ராமில் போலிஸ் இன்ஸ்பெக்டர் வேடம், பின் 2007ல் வெளியான பில்லா வில் நெகட்டிவ்வான போலிஸ் அதிகாரி வேடம். ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் 2 லும் ஒரு நெகட்டிவ் கேரக்டர். இதுதான் ரகுமானுக்கான பாதையாகிப் போனது. மேலும் இவர் இந்த காலகட்டத்தில் இருந்து  தான் தன்னுடைய சொந்தக்குரலில் பேசி படங்களில் நடிக்கிறார்.
ஆரம்பகாலத்தில் இருந்தே நல்ல டைரக்டர்கள், நடிகர்களுடன் நடித்து வந்த ரகுமான், ஒரு குறிப்பிடத்தக்க கதாநாயகனாக மாறவே இல்லை. தமிழில் அவருக்கு கிடைத்த ஒரே ஹிட் என புதுப்புது அர்த்தங்களை மட்டுமே சொல்லமுடியும். உணர்ச்சிகளை ஓரளவு வெளிப்படுத்தக்கூடிய முகம், நல்ல உயரம், சிவந்த நிறம் இருந்தும் அவரால் தமிழ் திரைப்பட உலகில் எந்த முத்திரையும் பதிக்க முடியவில்லை.
அதற்கான காரணங்கள் என்று பார்த்தால்,

ரகுமான், தனக்கான படங்களை/கதைகளை/வேடங்களை தேர்ந்தெடுப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதனால் அவருடைய படங்கள் வெற்றிபெற வில்லை. வெற்றி பெற்ற நடிகருக்குத்தான் இங்கே அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வரும்.
ரகுமான் அறிமுகமான காலத்தில் இருந்து 15 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் நடனக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் அவர் அதில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. புதுப்புது அர்த்தங்களில் வரும் நல்ல தாளக்கட்டு உடைய பாடலான “எடுத்து நான் விடவா”வில் அவர் ஜனகராஜுக்கு இணையாகவே ஆடுவார். அது இன்று வரை மாறவில்லை.

தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இன்னொரு அம்சம் நகைச்சுவை. நாயகனாக இருந்து தனியாக நகைச்சுவை செய்யாவிட்டாலும், உடன் இருப்போர் செய்யும் போது, அதற்கு ஏற்ப ரியாக்‌ஷன் கொடுத்து, காட்சியை சிறப்பாகவாவது செய்யவேண்டும். ரகுமானின் பட்டணந்தான் போகலாமடியும் பட்டிக்காட்டானும் நல்ல நகைச்சுவை ஸ்கிரிப்ட் கொண்டவை. அதிலும் பட்டிக்காட்டானில் கவுண்டமணி டாக்டர் டென் சொங்கப்பாவாக அதகளம் பண்ணுவார். ரகுமான் தேமே என்றிருப்பார். தமிழில் வெற்றி பெற்ற நாயகர்கள் பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளில் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதில் சரியாக இருப்பார்கள்.


விஜயகாந்த், அர்ஜூன், சரத்குமார் எல்லாம் இன்றுவரை தங்கள் நாயக அந்தஸ்தை இழக்காமல் இருக்க காரணமே அவர்கள் ஆக்‌ஷன் படங்களில் நடித்ததுதான். ஏனென்றால் 1980கள் மற்றும் 90களில் சினிமாவின் முக்கிய வருவாய் கேந்திரங்களாக விளங்கிய பி மற்றும் சி செண்டர்களில் ஆக்சன் படங்களே பிரதானமாய் ஓடின. ரகுமானும் நல்ல உயரம், ஓரளவு நல்ல உடலமைப்பும் கொண்டவர்தான் (ஆரம்ப காலங்களில், பின்னர்தான் தொப்பை வந்தது). மேலும் பாரத் பந்த் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கில் வேறு அவருக்கு நல்ல அறிமுகம் இருந்தது. எனவே அவர் ஏதாவது சில ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தால் கூட அவர் நாயகனாக தமிழ் மண்ணில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பார். இன்றும் கூட நாயகனாகவே இருந்திருக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கும்.