August 13, 2012

மெடிகோர் மீடியேட்டர்


இந்த இயற்கைக்கு என் மேல் என்னதான் கோபமோ தெரியவில்லை. நான் எந்த விஷயம் சம்பந்தமாக ஒரு சங்கல்பம் செய்தாலும் உடனே அதை காலி பண்ணி விடுகிறது.

எங்கள் தெருவில் இருந்த இரண்டு தி.க மற்றும் இரண்டு கம்யூனிச அண்ணன்களிடம் குடித்த யானைப்பாலின் காரணமாக கோவிலுக்கே செல்லக்கூடாது என முடிவெடுத்த அடுத்த வாரமே குலதெய்வ கோயிலுக்கு பால் குடம் தூக்க வைத்தனர் என் குடும்பத்தினர்.

இப்படித்தான் குழந்தைகளை திட்ட, அடிக்க கூடாது, புறம் பேசக் கூடாது, அலுவலக அரசியல் செய்யக் கூடாது என பல சங்கல்பங்கள் எடுப்பேன். ஆனால் அது அடுத்த ஒரு மணி நேரத்தில் விகல்பம் ஆகிவிடும்.

ஆனால் பத்து வருடங்களுக்கு மேலாக நான் போட்டிருந்த ஒரு சபதத்தை மட்டும் இயற்கையால் ஒன்றும் செய்யமுடியவில்லை. வேறொன்றுமில்லை அது, சில திருமணங்களில் மீடியேட்டராக இருந்தவர்கள் பட்ட பாட்டை பார்த்ததால் எடுத்த முடிவு அது. இந்த பூவுலகில் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம், கல்யாண மீடியேட்டர் வேலை மட்டும் செய்யக்கூடாது என்பதே அது.

ஆனால் அதுவும் சென்ற வருடம் ஆட்டம் கண்டது. தவிர்க்க முடியாத ஒருவருக்காக (வேறு யார்? சகதர்மிணியின் உறவினர்க்காகத்தான்) மீடியேட்டர் ஆக நேர்ந்தது. தாங்க முடியாத மன வருத்தத்துடன் நண்பனிடம் புலம்பினேன்.


டேய், இந்த சபதம் ஒண்ணுதான் பத்து வருஷம் தாக்குப் பிடிச்சது. இதுவும் இப்படி புட்டுகிடுச்சே என்றேன்.

அவன் எகத்தாளமாகச் சிரித்து, தம்பி மீடியேட்டர் ஆகுறதுக்கு குறைந்த பட்ச தகுதியே கல்யாணமாகி பத்து வருசம் ஆகி நல்லது கெட்டது, லௌகீக கொடுக்கல் வாங்கல் எல்லாம் தெரிஞ்சிருக்கிறது தான். உனக்கு எலிஜிபிலிட்டி கிரிடீரியா சாடிஸ்பை ஆன உடனேயே அழைப்பு வந்துடுச்சு என்றான்.

மேலும் சிரித்தபடி, பூராடம் நூலாடும், தலைக்கும் வாலுக்கும் ஆகாது, அவிட்டம் தவிட்டுப் பானையை தங்கமாக்கும், பரணி தரணி ஆளும், மகம் ஜெகமாளும், கேட்டை கோட்டை கட்டி வாழும், ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம், ரோகிணி மாமனுக்கு ஆகாது இதெல்லாம் உனக்கு எப்ப தெரிஞ்சது? என்று கேட்டான்.

நான் யோசித்தபடியே இப்போ சில வருஷமாத்தான் என்றேன்.

அப்புறம் அப்பா பேரு, தாத்தா பேரு குல தெய்வம் இருக்குற ஊரு இதெல்லாம் சொன்ன உடனேயே இவன் இந்த ஜாதிக்காரனா இருப்பான் அப்படின்னு உனக்கு எப்ப தோண ஆரம்பிச்சது? என்றான்.

அதுவும் இப்போ சமீபமாத்தான் என்றேன்.

இதெல்லாம் கல்யாணம் ஆகி பத்து வருஷத்துக்கு மேல ஆனா கிடைக்கிற எக்ஸ்பீரியன்ஸ். அடிசனலா பொறுமையும் சேர்ந்திருக்கும். இனிமே நீ மீடியேட்டர் தான். சொந்த பந்தம் அலையன்ஸ் விசாரிக்கச் சொல்லும், தகவல் கேட்கும். தவிர்க்க முடியாது. எஞ்சாய் என்று அனுப்பிவைத்தான்.

என்னுடைய முதல் அஸைன்மெண்ட் எப்படியோ சக்ஸஸ் ஆனது. அதற்கு என்னுடைய பங்களிப்பு ஏதுமில்லை. சம்பந்தப்பட்ட பையனின் பெண்ணைப் பற்றிய எதிர்பார்ப்பு அனுஷ்கா, அஞ்சலி, அமலாபால் என படிப்படியாகக் குறைந்து அங்கமுத்துவில் நின்றிருந்த நேரம்.

போலவே, அந்தப் பெண்ணின் எதிர்பார்ப்பும் கலெக்டர், டாக்டர், சாப்ட்வேர் என படிப்படியாகக் குறைந்து சரவணபவன் சப்ளையர் என்றாலும் பரவாயில்லை என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்த நேரம். சில மொக்கைப் படங்கள் கூட வெளியாகும் நேரத்தைப் பொறுத்து வெற்றி பெற்று விடுவதைப் போல இந்த சம்பந்தம் டைமிங்கால் முடிந்தது.

மேட்ரிமோனி இணைய தளங்களில் கூட இந்த அமைப்பைப் பார்க்கலாம். முதலில் வரும் ரிக்வெஸ்ட்டை எல்லாம் ரிஜக்ட் செய்வார்கள். பின்னர் அக்செப்ட் செய்வார்கள். பின்னர் ஏதாவது ரிக்வெஸ்ட்  வராதா என்று காத்திருப்பார்கள். எனக்கென்னவோ இதற்கு அவர்கள் தங்கள் தேவைகளை அடிக்கடி அப்டேட் செய்து கொண்டால் நல்லாயிருக்கும் என்று தோன்றும்.

ஷுட் பி வொர்க் இன் எ எம் என் சி என்று கொடுத்தவர்கள், ஏதும் தகையாவிட்டால் மே பி வொர்க் இன் எ எம் என் சி அல்லது மே பி வொர்க் என அடிக்கடி திருத்திக் கொள்ளலாம். ஆனால் சில வில்லங்கங்கள் அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து கலாய்க்காமல் இருக்க வேண்டும்.

இந்த மீடியேட்டர் தொல்லையில் நான் கண்டு கொண்டது, மாப்பிள்ளை/ பொண்ணுக்கு முதல் வரன் என்றால் நாம் அதில் தலையிடக் கூடாது. தோல்விதான் கிட்டும்.

முதல் முதலாக மாப்பிள்ளையானவர் பெண் பார்க்கப் போனால், அவர் தாய் மாமா (அவரிடம் பெண் இல்லாமல் இருந்தால்), அக்கா, தங்கை கணவர்கள், மற்றும் சுற்றத்தார் எல்லாம் ஏ/சி டெம்போ ட்ராவலர் பிடித்து போவார்கள்.

அங்கே பெண் வீட்டில் பட்சணங்களையெல்லாம் செய்து வைத்து, அவங்க வந்துட்டுப் போன உடனே  தர்றோம் என அவர்கள்
வீட்டு குஞ்சு குளுவான்களிடம் பிராமிஸ் செய்திருப்பார்கள். ஆனால் இந்தக் கூட்டம் அந்த நினைப்பில் மண்ணைப் போட்டு விடும்.
ஆனால் சில படலங்களுக்குப் பின் ஒவ்வொரு டிக்கட்டாக கழன்று கொள்ளும். இன்னோவா, டவேரா, அம்பாசிடர், இண்டிகா, நேநோ, ஆட்டோ என வாகன அளவு குறையும். பையனின் பெற்றோரும் எதாவது ஒரு மகளும் மட்டும் கூட வருவார்கள். என் அனுபவத்தில் ஒரு பையன் வீட்டார் கார் வாடகைக்கு எடுத்த காசை சேர்த்து வைத்திருந்தால் காரே வாங்கியிருப்பார்கள்.

பெண் வீடுகளிலும் அப்படித்தான், முதன் முதலாக தங்கள் பெண்ணைப் பார்க்க வருகிறவர்களுக்கு இரண்டு வித இனிப்பு, மூன்று வகை காரம் என அமர்க்களப் படுத்துவார்கள். பக்கத்து வீட்டில் இருந்து ஜமுக்காளம், சேர்கள் எல்லாம் வாங்கிப் போடுவார்கள். சிலர் பக்கத்து வீட்டில் இருந்து நகைகளும் இரவல் வாங்கி போடுவார்கள். இதிலும் சில பிரச்சினைகள் வரும். கண் கூர்மையுடைய சில நாத்தனார்கள், நாங்க பொண்ணு பார்க்க வந்தப்போ பச்சைக்கல் டாலர் கோர்த்து வக்கப்பிரி செயின் போட்டிரிந்தியே, அது இல்லையா? எனக் கேட்பார்கள்.

இவர்களும் பல வைபவங்களுக்குப் பிறகு அசந்து விடுவார்கள். அரக்கிலோ சுவீட், காக்கிலோ மிக்சர், பத்து ரூபா சன்ரைஸ் பாக்கெட் ஒண்ணு மட்டும் வரும் போது வாங்கிட்டு வாங்க என்று      
குடும்பத்தலைவி சொல்லி விடுவார்.

இந்த ஜாதகம் பார்க்கும் விசயத்திலும் இப்படித்தான். முதல் சில மாதங்களுக்கு நல்ல ஜோசியர், கைராசிக்காரர் என்று பார்ப்பார்கள். பின் முகராசி இல்லாமல் போணியாகாத உள்ளூர் ஜோசியரிடம் போவார்கள். பின் அவர்களே இந்த நட்சத்திரத்துக்கு இது ஆகாது என முடிவெடுக்கும் லெவலுக்கு இறங்கி விடுவார்கள். எங்கள் தெருவில் தாலுகா ஆபிஸில் வேலை பார்த்து தன் மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த குமாஸ்தா ஒருவர் வெள்ளி மலருக்கு ராசி பலன் எழுதித்தரும் அளவுக்கு தேர்ந்து விட்டார்.

அவர் எப்போது பேசினாலும் மகேந்திரப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் என பினாத்திக் கொண்டேயிருப்பார்.

பத்துப் பொருத்தம் தேடி பெயர்ப் பொருத்தம் இருந்தால் போதும் என்று நேற்று கூட ஒருவர் வந்தார். ஏன் கவலைப் படுறீங்க? அயனான ஜாதகம் ஒண்ணு இருக்கு என்று சொல்லி இப்போதுதான் அயனாவரம் கூட்டிக் கொண்டு போகிறேன்.

பையனின் அம்மா விக்டோரியா மகாராணி ரேஞ்சுக்கு ஹாலில் உட்கார்ந்து நோட்டம் விடுகிறார். பெண்ணின் அம்மா பம்மிக் கொண்டே பேசுகிறார்.

ஒருவேளை இந்த வரன் தகைந்து விட்டாம் (சை, மீடியேட்டர் வேலை பார்த்து அந்த லாங்குவேஜே வந்து தொலையுது), இந்த காட்சி ஓராண்டில் எப்படி மாறும் என்று நினைத்தேன். வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அங்க ஹீனமான மைசூர் பாக்கை கடித்தேன்.

முடிந்து திரும்பி வரும் போது, பொண்ணு குடும்பப் பாங்காத் தெரியுதே? இல்லை தம்பி என்று பையனின் தகப்பனார் ஆரம்பித்தார். ஆமா நல்ல குடும்பம் என்று அந்தக் கேள்விக்கு முட்டுக் கொடுத்தேன்.

பின்ன இவன மட்டும் நிம்மதியா இருக்க விட்டிடுவனா
என்ன?

18 comments:

Paleo God said...

பத்து வருட பலன்கள் அருமை:))



புதுப்பேட்டை தனுஷ் ஏனோ நினைவுக்கு வருது பாஸ் :))

Balakumar Vijayaraman said...

கலக்கல் அனுபவம்.

பணி சிறக்க (!!!) வாழ்த்துகள் :)

முரளிகண்ணன் said...

நன்றி பபாஷா

நன்றி பாலகுமார்.

anujanya said...

WELCOME BACK! AWESOME.

முரளிகண்ணன் said...

நன்றி அனுஜன்யா

vasu balaji said...

:))))). செம

Cable சங்கர் said...

:))) அதானே.. நிம்மதியா இருக்க விட்டிருவோமா?

sriram said...

சூப்பர் சைண்டீஸ்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

முரளிகண்ணன் said...

நன்றி வானம்பாடிகள்

நன்றி கேபிள்ஜி

நன்றி பாஸ்டனார்

சரவணகுமரன் said...

சூப்பருங்க...

அகல்விளக்கு said...

லாஸ்ட் பன்ஞ்... சூப்பர் மாம்சு...

புதுகை.அப்துல்லா said...

:))

முரளிகண்ணன் said...

நன்றி சரவணகுமரன்

நன்றி அகல்விளக்கு

நன்றி அப்து அண்ணே

குட்டிபிசாசு said...

:))

வவ்வால் said...

என்ன கொடுமை சார் :-))

முரளிகண்ணன் said...

நன்றி குட்டி பிசாசு

நன்றி வவ்வால்

hariprasath said...

dear murali sir,
when we browse occasionally we end up with very good articles written judiciously. yours is one such article. keep it up sir....
:):)

முரளிகண்ணன் said...

நன்றி ஹரிபிரசாத்