December 24, 2013

ராகவ்வின் ஜன்னல்

ராகவ்வின் அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளில் ஞாயிற்றுக்கிழமை கூட அவன் அப்படி தூங்கியதில்லை. ஆறரை மணிக்கு அலாரம் அடித்தது போல் எழுந்து கொள்வான். ஆறே முக்கால் ஆகியும் இன்னும் எழவில்லை. ஏழு இருபதுக்கு அவனது கல்லூரி பேருந்து தெரு முனைக்கு வந்துவிடும். படுக்கை அருகில் சென்று ராகவ் எழுந்திரு, மணியாச்சு என்று சொல்லிப் பார்த்தாள். அசைவில்லை. என்னாச்சு இவனுக்கு என்று வியந்தபடியே லேசாக உலுக்கினாள்.

முழித்துப் பார்த்தவன், “அம்மா இன்னைக்கு நான் காலேஜ் போகல்லை”  என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான். அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராகவ்வின் அப்பா சிவராமன், ”விடு மைதிலி, தூங்கட்டும். உடம்பு சரியில்லையோ என்னவோ” சாயந்திரம் வந்து பார்த்திக்கிடலாம். நீ ஆபிஸ்க்கு கிளம்பு” என்றபடி தன் வேலையைத் தொடர்ந்தார்.

மாலை அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இனிமேல் காலேஜ்க்கே போகமாட்டேன் என ராகவ் திட்ட வட்டமாக சொல்லிவிட்டான்.

அலுவலக மேனேஜ்மெண்ட் வகுப்புகளில் ஊட்டப்பட்ட பாடங்கள் சிவராமனுக்கு நினைவுக்கு வந்தன. ஒரு வாரம் ராகவ் லீவில் இருப்பதால் பெரிய சிக்கல் ஏது வரப்போவதில்லை. இப்போ இரண்டாம் ஆண்டுதான். அவன் வீட்டிலேயே இருக்கட்டும். ஒரு வாரத்தில் பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டறிந்து தீர்த்து வைத்துவிடலாம் என முடிவு செய்து, மைதிலியிடமும் தெரிவித்து விட்டார்.

அடுத்த நாள் ராகவ்வின் வகுப்புக்கு பொறுப்பான பேராசிரியரிடம் சென்று பேசினார். ராகவ்வுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல அட்டென்டென்ஸ், நல்ல சிஜிபிஏ, எல்லார்கிட்டயும் நல்லா பிகேவ் பண்ணுவானே என்று தெரிவித்தார் அவர்.

அடுத்ததாக ராகவ்வின் வகுப்பு நண்பர்கள், பஸ் மேட்கள், அபார்ட்மெண்ட் பிரண்ட்ஸ் அனைவரிடமும் மாலை விசாரித்தார். ஏதும் லவ் கிவ்னு இருந்தாலும் சொல்லிடுங்கப்பா, பரவாயில்லை என்றார். இல்ல அங்கிள், ராகவ்வ நாங்க பழம்னு தான் சொல்லுவோம். கேர்ள்ஸ்ங்க்கிட்ட அவன் மூவ் பண்ணவே மாட்டான் என்றார்கள்.

அன்று இரவு ராகவ் தூங்கிய பின் அவன் செல், லேப்டாப் எல்லாவற்றையும் துருவிப் பார்த்தார். கிளீன் சிலேட். இப்போதுதான் சிவராமனுக்கு பயம் வரத் தொடங்கியது. விசாரிச்ச பிரச்சினைகள் எல்லாம் ஈஸியா சால்வ் பண்ணக் கூடிய மேட்டர். டிரக் மாதிரி பழக்கமும் இருக்கிறதாத் தெரியலை. வேற எதுவும் சைக்காலஜிக்கல் பிராப்ளமா இருக்குமோ? எனத் தோன்றியது.

மைதிலியிடம் விவாதித்தார். ஏதாச்சும் சைக்ரியாஸ்ட்கிட்ட போலாமா என்று யோசித்தார்கள். சென்சிட்டிவ் மேட்டர். அவனோட பிரண்ட்ஸுக்கு, அபார்ட்மெண்ட் அக்கம் பக்கத்துக்கு தெரிஞ்சா இவன் பீல் பண்ணுவான். நம்மகிட்ட ஷேர் பண்ணாட்டியும், அவனோட இன்னர் சர்க்கிள்ல யார்கிட்டயாச்சும் சொல்லத்தான செய்வான்? அந்த மாதிரி ஒரு மெச்சூர்டான ஆளுகிட்ட பேசச் சொல்லணும். இன்னும் ரெண்டு வருஷம் இவன் படிச்சாகணுமே? என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

தொடர் யோசிப்பில், ராகவ்வின் பர்த்டே செலிபரேஷனுக்கு வந்திருந்த சந்தோஷின் ஞாபகம் சிவராமனுக்கு வந்தது. சென்ற ஆண்டு இஞ்சினியரிங் முடித்து, இப்போது ஒரு எம் என்சியில் இருப்பவன். ராகவ்வின் பஸ் மேட். ராகவ்வின் முதலாமாண்டு பயங்களை பெருமளவு போக்கியவன் அவன் தான் என ராகவ்வே அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான்.

ராகவ்வின் பேஸ்புக் அக்கவுண்ட் வழியே, சந்தோஷின் இன்பாக்ஸுக்கு தகவல் அனுப்பி, சந்தித்தார் சிவராமன். பிரச்சினையை விவரித்து, அவன்கிட்ட பேசுப்பா என்றார்.

அடுத்த நாள், தன்னுடைய  இன்கிரிமெண்ட்டுக்கு ட்ரீட் கொடுப்பதாகச் சொல்லி, ராகவ்வையும் இன்னும் சில நண்பர்களையும் எக்ஸ்பிரஸ் மாலுக்கு அழைத்துச் சென்றார் சந்தோஷ். பேச்சினூடே ராகவ்வின் பிரச்சினையும், அவனையறியாமல் வெளிவந்தது.

வேறொன்றுமில்லை. ராகவ்வுக்கு பஸ்தான் பிரச்சினை. பஸ் கூட இல்லை. பயணம்தான் பிரச்சினை. எல் கே ஜியில் ஆரம்பித்தது அது. பிரைவேட் வேன், ஸ்கூல் வேன், இப்போது காலேஜ் பஸ்.    காலை எழுந்து காலைக்கடன்கள் முடித்து, அவசர அவசரமாய் சாப்பிட்டு, வேனோ பஸ்ஸோ பிடித்து, பின் அதே போல மாலை திரும்பி, சாப்பிட்டு, படித்து. இந்த 16 ஆண்டுகளில் ஒரே ரோட்டில் பயணம் மட்டுமே செய்து கொண்டிருப்பது போல் உணர்ந்திருக்கிறான் ராகவ்.

இந்த செமெஸ்டர், கேம்பஸ் ஆரம்பித்த உடன் தான் அவனுக்கு இன்னொன்றும் தெரிந்தது. அவன் சீனியர்கள் எல்லோரும், சென்னையிலும் இயங்கும் எம் என் சிக்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களிலேயே பிளேஸ் ஆகிக்கொண்டிருந்தது. அந்த கம்பெனி பஸ்களையும் அவன் சென்னையில் பார்த்திருக்கிறான். அவையும் காலை ஏழு மணிக்கெல்லாம் அவன் ஏரியாவில் கிளம்பி, மாலை திரும்பி வருபவை.  இன்னும் இரண்டு ஆண்டுகள் கல்லூரி பேருந்து, பின் அலுவலக பேருந்து. வாழ்க்கை இப்படி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே செல்வதில் கழிந்து விடும் என்ற எண்ணம் வந்ததும் அவனுக்கு கல்லூரி செல்வதே வெறுப்பாகத் தோன்றிவிட்டது.


இந்த தகவல்களை சந்தோஷ், சிவராமனிடம் போனில் சொன்னான். கூடவே அவன், “சார், உள்ளூர்ல இருக்கமேன்னு ஹெஸிடேட் பண்ணாதீங்க. ராகவ்வை ஹாஸ்டலில் சேர்த்துடுங்க. பஸ் ட்ராவல் டைம் மிச்சமாகும், ஹெல்த்தும் இம்ப்ரூவ் ஆகும்,படிக்கவும் நிறைய டைம் கிடைக்கும். அப்புறம் அவனும் ரியலைஸ் பண்ணிக்குவான். பஸ்ல ட்ராவல் பண்ணாம நிறைய வேலை இருக்குன்னு புரிய வச்சிடலாம்” என்றான். சிவராமனுக்கும் அதுவே சரி என்று பட்டது.

3 comments:

ராஜி said...

நல்ல முடிவு

இராய செல்லப்பா said...

மாணவர்களின் பிரச்சினைகளுக்கு எப்படி மனோதத்துவமான தீர்வு காணவேண்டும் என்று அழகாக எடுத்துரைக்கும் கதை அல்லது கட்டுரை!

முரளிகண்ணன் said...

நன்றி ராஜி


நன்றி செல்லப்பா யாக்யஸ்வாமி.