August 23, 2014

புகழ் தின்னி

கட்டப்படும் போது நகரின் எல்லையில் இருந்து, நகர் வளர்ந்தவுடன், தற்போது மத்தியில் அமைந்திருக்கும்  ஆண்களுக்கான மேல் நிலைப்பள்ளி அது. ஆறாம், ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பில் மட்டுமே மாணவர் சேர்க்கை. முதலிரண்டுக்கும் நுழைவுத் தேர்வு, பதினொன்றுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண். நுழைவுத்தேர்வுக்காக தனியார் நடத்தும் கோச்சிங் கிளாஸ்களில் சேரவே தனிப்பயிற்சி தேவைப்படும் அளவுக்கு பிரபலமான பள்ளியாக 25 ஆண்டுகளில் அது வளர்ந்து விட்டிருந்தது.

பள்ளியின் பிரதான நுழைவாயிலைக் கடந்த உடன் நிர்வாகக் கட்டிடம். அதில் பத்துக்கு ஆறு என்ற அளவில் ஒரு கரும்பலகை. ஆறில் இருந்து பிளஸ் 2 வரை பள்ளித் தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவனின் பெயர் அதில் எழுதப்படும். பள்ளிக்குள் நுழையும் எவர் கண்ணிலிருந்தும் தப்பி விடாதபடி அது அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

ராஜேஷ் ஆறாம் வகுப்பு அட்மிசனுக்காக பள்ளிக்குள் நுழைந்த போது, அவனைக் கவர்ந்தது அந்தப் பலகைதான். அதில் ஒருமுறையாவது தன் பெயர் வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக் கொண்டான். பர்ஸ்ட் மிட் டெர்ம் டெஸ்டிலேயே ஆறு செக்சன் மாணவர்களிடையே முதல் மதிப்பெண் வாங்கி அவனுடைய பெயர் அந்த போர்டில் ஏறியது. மற்ற ஆண்டு மாணவர்களின் பெயர் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்க, ராஜேஷின் பெயர் மட்டும் காலாண்டு,அரையாண்டு உள்ளிட்ட எல்லாத் தேர்வுகளிலும் மாறிலியானது. ஒன்பதாம் வகுப்பிற்கு ராஜேஷ் வந்தபோது, புது திறமை சாலிகள் எல்லாம் சேர்ந்து 10 செக்‌ஷன்கள். அதிலும் ராஜேஷே போர்டுக்கு வந்தான். பத்தாம் வகுப்பில் கல்வி மாவட்டத்தில் முதலிடம்.

பதினொன்றாம் வகுப்புகள் முதன் முதலாக ஆரம்பிக்கும் போது, தலைமை ஆசிரியர் நிகழ்த்திய சம்பிரதாய உரையின் போது, மருத்துவப் படிப்பின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, நம் பள்ளி மானவர்கள், மருத்துவக் கல்லூரியில் அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பிளஸ் 2 பாடங்களை பிளஸ் 1லேயே கற்பிக்கும் போக்கு இல்லாத காலகட்டம் அது. சில இடங்களில் அப்படி நடைபெறுவதாய் செய்திகள் கசிந்தாலும், நம் பள்ளி அப்படி இருக்கக் கூடாது என நிர்வாகம் உறுதியாய் இருந்தது. அப்போதெல்லாம் பதினொன்றாம் வகுப்பை, வெளிநாட்டிற்கு கிரிக்கெட் ஆடச்செல்லும் அணிகள், அங்குள்ள உள்ளூர் அணிகளோடு மோதுவது போலவே எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால், அதிலும் ராஜேஷ் குறைவைக்கவில்லை. காலை நாலரை மணிக்கு எழுந்தரிப்பவன், குறைந்தது இரண்டு மணி நேரமாவது படித்து விட்டு, மேத்ஸ் டியூசன் போவான். மாலை பள்ளி முடிந்ததும் பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி டியூசன். டியூசன் முடிந்ததும் இரவு பத்தரை வரை இடைவிடாமல் படிப்பு. பயாலஜி அவனுக்கு தலைகீழ் பாடமானதால் அதற்கு மட்டும் டியூசன் இல்லை. ”பிடிச்சா ஸ்டெத் இல்லாட்டி டெத்” என்று பஞ்ச் டயலாக் மட்டும் தான் சொல்லவில்லை. மற்றபடி டாக்டராக வேண்டுமென்பது அவனது ஒவ்வொரு செல்லிலும் பச்சை குத்தப்பட்டிருந்தது. குளிக்கும் போதும் சாப்பிடும் போதும் கூட படித்த பாடத்தை அசை போட்டபடியேதான் இருப்பான். இவ்வளவு ஏன் அந்த ஆண்டு நடந்த அவனது அக்கா கல்யாணத்தில் கூட அமைதியாக உட்கார்ந்து பத்திரிக்கை கவர்களில் பார்முலாக்களை எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தான். இதனால் அவனுக்கும் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவனுக்கும் இடையேயான இடைவெளி முன் எப்பொழுதையும் விட இப்போது கூடியது.

அவனுடைய வீட்டில் அவனை தங்கத்தட்டில் வைத்து தாங்கினார்கள். அவனுடைய தந்தை ஒரு அரசு ஊழியர். அந்த சமயம் வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவனது அம்மா அவனை அவசரத்துக்கு ஒரு அனாசின் வாங்கக்கூட அனுப்பியதில்லை. ராஜேஸம்மாவை கொண்டு போக எமன் வந்தாக்கூட, கொஞ்சம் பொறுப்பா, பையன் பரிட்சை முடியட்டும்னு ஜாமீன் வாங்கிடும் என தெருவில் பேசிக் கொள்வார்கள். பிளஸ் டூ காலாண்டுத்தேர்வு வரை ராஜேஷை யாரும் நெருங்கமுடியவில்லை.

அந்த பள்ளியின் ஏ ஹெச் எம் அழகு வாத்தியார் அடிக்கடி சொல்லுவார். பிளஸ் டூ லேசுப்பட்டதில்லடா. டென்த்ல கணக்குல நூறும்பான், ஆனா இங்க ஆறும்பான். சில பக்கிக பிளஸ் ஒன் வரைக்கும் மந்தமா இருக்குங்க. பிளஸ் டூவில சண்டமாருதம் பண்ணிடுங்க. வயசு மாறுதில்ல என்பார். அப்படி சண்டமாருதமாய் மாறியவன் சிவகுமார். மட்டமான கேரளா பென்சிலைக் கொடுத்தாலும் அதில் ஐந்தாறு திக்னெஸ்களில் கோடு இழுக்கக் கூடியவன். டைம்ஸ் நியூ ரோமன் 12 என்று செலக்ட் செய்தால் எப்படி டாக்குமெண்ட் பூராவும் ஒரே மாதிரி மாறுகிறதோ, அதே போல ஒரே அச்சாக எழுதத் தெரிந்த வித்தைக்காரன். தலைப்புக்கு ஒரு ஃபாண்ட், உப தலைப்புக்கு ஒரு ஃபாண்ட் என பேப்பர் முழுவதும் சீராக மெயிண்டைன் செய்யக் கூடியவன். ஆறாம் வகுப்பிலிருந்தே இங்கு படித்தவன். எப்போழுதும் ஐந்து ரேங்குக்குள் வருபவன்.

பிளஸ் 2 அரையாண்டு பேப்பர்கள் கொடுக்கப்பட்டது. மொத்தத்தில் சிவகுமார், ராஜேஷைவிட ஒரு மதிப்பெண் கூடுதலாய்ப் பெற்று போர்டில் இடம் பிடித்தான். ராஜேஷால் மட்டுமல்ல மொத்த பிளஸ் 2 மாணவர்களாலும் அதை முதலில் நம்பவே முடியவில்லை. அவனுடைய பேப்பர்களை வாங்கிப் பார்த்தான். டோட்டல்களை வெறியுடன் மீண்டும் மீண்டும் சரிபார்த்தான். மற்ற எல்லாவற்றிலும் இருவரும் ஏறத்தாழ ஒரே மதிப்பெண்கள். கணிதத்தில் சிவகுமார் முந்திவிட்டான். பள்ளியில் நுழையும் போதெல்லாம் அந்த போர்டை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான் ராஜேஷ். கிட்டத்தட்ட ஏழாண்டுகள் இடைவிடாமல் பிடித்து வைத்திருந்த இடம்.

அவனுக்கு அந்த போர்டில் மீண்டும் இடம் பிடிக்க ஒரே வாய்ப்புதான் இருந்தது. பிளஸ் 2 விற்கு பர்ஸ்ட் ரிவிசன் டெஸ்ட். மற்ற வகுப்புகளுக்கு தேர்ட் மிட் டெர்ம். அதனுடன் அந்த ஆண்டு ரோல் ஆஃப் ஹானர் முடிந்துவிடும். கணிதத்தில் எப்படியாவது முதல் மதிப்பெண் பெற்றுவிட்டால் போதும். போர்டில் மீண்டும் வந்துவிடலாம் என ராஜேஷ் எண்ணினான். கணிதத்தில் அசுர சாதகம் செய்ய ஆரம்பித்தான். தேர்வுக்கு முதல் நாள் இரவு முழுவதும் கண் விழித்து படித்து சிவந்த கண்களோடு தேர்வுக்கு வந்தான். முதல் கணக்கில், இண்டெகிரேசனில் மைனஸ் எக்ஸ்ஸை தவறாக பிளஸ் எக்ஸ் என வாசித்து செய்தான். ஆன்சர் வரவில்லை. பதட்டமானான். மீண்டும் மீண்டும் முயற்சித்து நேரத்தை வீணாக்கினான். கொஞ்சம் புத்தி வந்து, மற்ற கணக்குகளுக்குப் போனான். ஆனான் அவனின் ஆழ்மனதில் போர்டில் பேர் வராதே பேர் வராதே என்ற குரல் கேட்க கேட்க எந்த கணக்குக்கும் விடை வரவில்லை.

அந்த பேப்பரை வகுப்பில் கொடுக்கும் போது, யாருமே நம்பவில்லை. ராஜேஷ் பெயிலா என்ற ஆச்சரியம் பள்ளி முழுவதும் பரவியது. ”அழகு வாத்தியார் அவனை கவுன்சிலிங் செய்தார். மூணு நாலு லட்சம் பேர் தமிழ்நாடு பூராம் எழுதுறாண்டா. அதுல முன்னூறுக்குள்ள வந்திட்டாலே உனக்கு மெடிக்கல் சீட் நிச்சயம். நீ அசால்டா அப்படி வந்துடுவ. இங்க ரேங்க் வாங்குறது ஒரு விஷயமே இல்லை. இதத் தாண்டி உலகத்தில சாதிக்க எவ்வளவோ இருக்கு. எதைப் பத்தியும் கவலைப் படாம படி. ஸ்கூல்க்கு கூட வரவேண்டாம். எக்ஸாமுக்கு மட்டும் வா. என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் அவன் கேட்கவில்லை. ஒவ்வொரு நாள் பள்ளிக்குள் நுழையும் போதும், நிமிர்ந்து அந்த போர்டை வெறித்துப் பார்ப்பான். பின் தலையை குனிந்தபடி வகுப்பிற்குச் சென்றுவிடுவான்.

தேர்வு முடிவுகள் வெளியானது. மெடிக்கலுக்கு வாய்ப்பில்லை. இஞ்சினியரிங் வாய்ப்பு இருந்தது. நான் கீழிறங்க விரும்பவில்லை. ஐ ஏ எஸ் ஆகி  யாரென்று காட்ட விரும்புகிறேன் என பெற்றோரிடம் சொல்லி விட்டான். இதுவரை எதுவும் வாய்விட்டு கேட்காத மகன், எந்த சொல்லையும் தட்டாத மகன், போட்ட எந்த சாப்பாட்டையும் புன்னகையோடு சாப்பிட்ட மகனின் சொல்லைத் தட்ட அவர்களால் முடியவில்லை.

அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற கலை அறிவியல் கல்லூரியில் பி ஏ பொலிடிக்கல் சயின்ஸ் சேர்ந்தான். முதல் பருவத்தில் வைக்கப்பட்ட எல்லாத் தேர்வுகளிலும் அட்டகாசமான மதிப்பெண்கள். ஆனால் இரண்டாம் பருவத்திலேயே கீழிறங்கினான்.

உண்மையில் ராஜேஷுக்கு படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கிளறியது அவன் மீது விழுந்த பெருமித, ஆச்சரிய, பாராட்டிய, பொறாமை கொண்ட பார்வைகள் தான். அந்தப் பார்வைகள் படப்பட அவனுடைய சக்தி வளர்ந்து கொண்டே போனது. சாதகப் பறவைக்கு இசை, சக்கரவாகத்திற்கு மழை, ராஜேஷுக்கு புகழ், புகழ்ப்பார்வை. வீட்டில், தெருவில், பள்ளியில், டியூசனில் அவன் மீது விழுந்த புகழ்ப்பார்வைகளை உண்டு வளர்ந்தவன் அவன். எப்பொழுது அந்தப் பார்வைகள் இரக்க, பச்சாதாப, கேலிப் பார்வைகளாக மாறியதோ அப்போதே அவனுடைய சக்தி குறையத் தொடங்கியது.

அவனுடைய கல்லூரி வகுப்பு எந்த நாளிலும் நிறைந்திருந்ததில்லை. சிலர் விளையாட்டுப் போட்டிகளுக்கு, சிலர் கல்சுரல்ஸ்களுக்கு, சிலர் சினிமாக்களுக்கு என அறுபது சதவிகிதம் பேர் வெளியில் தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். முதல் பருவத் தேர்வு முடிவு வெளியானவுடன் தன் மீது மீண்டும் புகழ்ப் பார்வை படியும் என எதிர்பார்த்தவனுக்கு, யாரும் அதைப் பொருட்படுத்த வில்லை என்பது அதிர்ச்சியாய் இருந்தது. இண்டர் காலேஜ் வோக்கல் சோலோ பர்ஸ்ட் பிரைஸ்க்கு இருந்த புகழ்ப்பார்வையில் ஒரு சதவிகதம் கூட எல்லா சப்ஜெக்ட்களிலும் எஸ் கிரேட் எடுத்த ராஜேசுக்கு கிட்டவில்லை.

புகழைத் தின்னாத ராஜேஸ் வெகு சாதாரணன் ஆகிப் போனான். ஒரு வழியாக டிகிரியை முடித்தவனை அவனுடைய தந்தை வற்புறுத்தி குடிமைப் பணிகளுக்கான ஒரு கோச்சிங் செண்டரில் சேர்த்து விட்டார். இரண்டு மணி நேர கிளாஸ் போக மீத நேரம் வீட்டில் படிக்க ஆரம்பித்தான் ராஜேஸ். வகுப்பிலும், யாரையும் சுட்டாமல் பாடம் எடுப்பார்கள். தேர்வு பேப்பர்களையும் மூன்றாம் நபர் அறியாமல்தான் கொடுப்பார்கள். உண்மையில் ராஜேஷின் காலிபருக்கு அந்த தேர்வுகள் எல்லாம் சாதாரணம். ஆனால் வீட்டில் அவன் படிக்கும் போது, பெற்றோரின் பச்சாதாப பார்வை, தெருவில் கிடைத்த கிண்டல், கேலி பார்வைகள் அவனுடைய கீழே இறக்கவே செய்தன.

கடைசியில் அவனுடைய தந்தையின் சிபாரிசில் சில இடங்களுக்கு வேலைக்குப் போனான். அவன் வளர்த்திருந்த திறமைக்கும், அவர்கள் புகழ்ப்பார்வை பார்க்க நினைத்தால் தேவைப்படும் திறமைக்கு ஒரு பெரிய இடைவெளி இருந்தது. பத்தோடு பதினொன்றாகவே பணி புரிந்தான்.
விடுமுறை நாட்களில் தான் படித்த பள்ளிக்கு வெளியே நின்று, அந்த போர்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். ஒருமுறை பள்ளி நடந்து கொண்டிருக்கும் போது, உள்ளே புகுந்து சாக்பீஸால் அந்த போர்டில் தன் பெயரை எல்லா வகுப்புக்கும் நேராக எழுத ஆரம்பித்தான்.


இப்போது அந்த பள்ளிக்குச் சென்றால் நீங்கள் கவனிக்கலாம். போர்டு இருந்த இடத்தில் புத்தனின் பொன்மொழி ஒன்று இருப்பதை.

11 comments:

Balakumar Vijayaraman said...

தரமான கதை. வாழ்த்துகள் !

முரளிகண்ணன் said...

நன்றி பாலகுமார்

”தளிர் சுரேஷ்” said...

மதிப்பெண்களை உருவாக்கும் பள்ளிக்களை சாடும் அருமையான கதை! வாழ்த்துக்கள்!

முரளிகண்ணன் said...

நன்றி சுரேஷ்

rajasundararajan said...

நல்லா வந்திருக்கு. நடந்ததுன்னா ஏத்துக்கலாம், ஆனா கதைன்னா போதாது. (ஒரு போக்காப் போகுது.)

முரளிகண்ணன் said...

நன்றி ரா.சு சார். மகிழ்ச்சி.

வினோத் கெளதம் said...

தல 15ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திற்கு எதிரில் நின்றது நீங்களா?

முரளிகண்ணன் said...

வினோத்,
ஆகஸ்ட் 15 அன்று செல்லவில்லை. ஆக்ஸ்ட் 1 மற்றும் 3 அன்று வத்தலகுண்டில் இருந்தேன்.

வினோத் கெளதம் said...

Ok thala..உங்களை போலவே ஒருவரை பார்த்தேன் அதான்..

A Simple Man said...

neat flow..
Even though I can understand the plot of the story there is a big mistake (irony) in between.
Can you spot on ?
he missed only in Maths subject that would not have stopped him getting a medical seat as he is topper in Biology.

முரளிகண்ணன் said...

நன்றி சிம்பிள் மேன்.

அவனுடைய பிரச்சினையே படிப்பில் முதலாவதாக இருக்கவேண்டும் என்பதுதான். அதனால்தான் ஆசிரியர் கவுன்சிலிங் கொடுத்தும் அவனால் மீள முடியவில்லை.