January 27, 2016

தமிழ்நாட்டில் பானிபூரி

20 ஆண்டுகளுக்கு முன்னர் கோவை காந்திபுரம் ஏரியாவில் குடியேறிய போது ஆச்சரியப்படுத்திய விஷயம் அங்கே முக்குக்கு முக்கு இருந்த பானிபூரி கடைகள். மதுரை ஏரியாவில் டீ, வடைக்கடைகள் அப்படி இருக்கும். ஆனால் இது புதிதாக இருந்தது. சென்னையில் கூட அப்போது அந்த அளவுக்கு அதிகமான கடைகள் இருந்ததா எனத் தெரியவில்லை.

ஆனால் கோவையைப் பொறுத்தவரை அது மிக அத்தியாவசியம் எனத் தெரிந்தது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் காலை ஏழு மணிக்கே ஷிஃப்ட் தொடங்கிவிடும். மதியம் 1 மணிக்குள் மதிய உணவு சாப்பிட்டு விடுவார்கள். கல்லூரி,பாலிடெக்னிக் மாணவர்களும் கூட  மதியம் ஒரு மணிக்குள் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் இரவு உணவு என்பது சராசரியாக ஒன்பது மணிக்கு மேலேயே சாப்பிடும்படி இருக்கும்.

தொலைக்காட்சி வருவதற்கு முன் ஆரம்ப 80களில் தெருவில் பையன்களுடன் சேர்ந்து காவியம்-மணிக்காவியமோ, கப் ஐஸோ இல்லை கபடியோ ஆடிக்கொண்டிருக்கும் போது, ஏதாவது ஒரு உத்தியை அவர்கள் வீட்டில் இருந்து வந்து கூட்டிக் கொண்டு போய்விடுவார்கள். உடனே அவங்க அவங்க வீட்டுக்கு அவரக்கா சோத்துக்குன்னு பாடிவிட்டு வீட்டுக்கு சாப்பிட ஓடுவோம். இரவு அதிகபட்சம் எட்டரை மணிக்கெல்லாம் தூங்கிவிடுவோம். நைட் பத்துமணி என்பதெல்லாம் திருவிழா காலங்களில்தான் பார்த்திருக்கிறேன். இரவு சாப்பாட்டுக்கும் காலை சாப்பாட்டுக்கும் எப்படியும் 12 மணி நேரத்திற்கு மேல் இடைவெளி இருக்கும். அதனால் தான் அது பிரேக் பாஸ்ட். ஆனால் தொலைக்காட்சி வந்த கடந்த 30 வருடங்களில் இரவு உணவு என்பது ஒவ்வொரு அரை மணி நேரமாக தள்ளிப்போய் சராசரியாக 10 மணி அளவில் தான் இப்போதெல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் காலை பள்ளிக்கோ அலுவலகத்துக்கோ கிளம்ப சென்னை மற்றும் கோவை போன்ற மாநகரங்களில் காலை ஏழு மணிக்கே சாப்பிட வேண்டி இருக்கிறது. மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இருக்கும் இடைவேளை, இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையேயான இடைவெளியை நெருங்கிக் கொண்டு வருகிறது.

அதுபோலவே முன்னர் மதிய சாப்பாடு பெரும்பாலும் மாணவர்களும், ஏன் சில இடங்களில் அலுவலக வேலை பார்ப்பவர்களும் கூட வீட்டுக்கு வந்து சாப்பிட்டு செல்லும்படியும் இருக்கும். இப்போதெல்லாம் பள்ளி,கல்லூரி மாணவர்கள்  சாப்பாடை எடுத்துச் சென்று சாப்பிடுகிறார்கள். அவர்கள் மாலை வீடு திரும்பும் போது அசுரப்பசி ஏற்படும். ஆனால் நம் வழக்கத்தில் மாலை சாப்பாடு செய்து தருவது என்பது மிகக் குறைவான வீடுகளிலேயே நடைமுறையில் உள்ளது.
அதுவும் கணவன்,மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடென்றால் சுத்தம். பிஸ்கெட் பாக்கெட்டுகளும், சிப்ஸ்,முறுக்கு பாக்கெட்டுகளும் தான் கிடைக்கும். அதே போல கல்லூரி மற்றும் வேலைக்குச் சென்று திரும்பி வரும் பெண்களுக்கும் பசியாற வாகான உணவு வகைகள் குறைவு. திரும்ப திரும்ப டீயும், வடையும் சாப்பிட்டால் போரடிக்கும். தினமும் ஹோட்டலில் சாப்பிடவும் பொருளாதாரம் இடிக்கும்.

இவை எல்லாவற்றிற்கும் தீர்வாக அமைந்ததே பானிபூரி கடைகள். ஹோட்டலில் ஒரு சாதா தோசை 35 ரூபாய், அதை சாப்பிட்டால் பசி அடங்காத அளவில்தான் இருக்கும். ஆனால் காளான் பிரை 20 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டால் இரவு உணவுவரை பசி தாங்கும். காலி பிளவர், மசால் பூரி, பேல் பூரி, தாகி பூரி என நிறைய வெரைட்டிகளும் கிடைக்கும். பாக்கெட் மணியிலேயே அதை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இதனால் தான் பெண்களும் இயல்பாக பானிபூரி கடைகளில் தென்படுகிறார்கள். டீக்கடைகளில் சிகரெட்,பீடி புகைத்துக் கொண்டு பேப்பர் படித்துக் கொண்டு ஜாடை மாடையாக பேசுவது கூட நடக்கும். ஆனால் இந்தக் கடைகளில் அதற்கு வாய்ப்பே இல்லை. அதுவும் பிற மாநிலத்துவர்கள் நடத்தும் கடை என்றால் வெளியூரில் தொழில் செய்வதால் பெண்களை மிக மரியாதையுடன் நடத்துவார்கள்.

நீண்ட காலம் தொடர்ந்து சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பல உபாதைகள் வரும் வாய்ப்பு இருந்தாலும் வேறு வழியில்லாமல் தட்டேந்தி அங்கே நிற்க வேண்டியிருக்கிறது. 

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

பானிப்பூரி கடைகள் தெருவோரங்களில் சுகாதாரமற்று இருப்பது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது! மற்றபடி சீப் அண்ட் பெஸ்ட் இதுதான்!