June 09, 2025

ராமமூர்த்தி அண்ணன்

அண்ணன், மகள் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அது விஷயமாக அடிக்கடி பேசுவார். சென்ற வாரம் அப்படியான ஒரு அலைபேசி அழைப்பின்போது சொன்னார், முன்னாடி நகையெல்லாம் வாங்காம அசால்டா இருந்துட்டேண்டா. இப்ப விலையெல்லாம் கேட்டா தல சுத்துது. செய்கூலி,சேதாரம் அதுக்கப்புறம் ஜிஎஸ்டி. அப்படி இப்படின்னு டிசைனா வாங்கணும்னா பத்து பவுன் எட்டரை லட்சம் வருது. முன்னாடி நம்ம ஊர் கல்யாணம், விசேஷத்துக்கு எல்லாம் வருவாரே ராமமூர்த்தி, அவரு பழைய நகை எல்லாம் செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கி கொடுத்துட்டு ஒரு கிராமுக்கு இவ்வளவு ரூபா அப்படின்னு மட்டும் வாங்குவாரே, அவர் நம்பர் இருக்கா? அவர்கிட்ட கொஞ்சம் பழைய நகை வாங்குனா ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் குறைய வாய்ப்பிருக்கு. மத்த செலவுக்கு அது ஆகிவிடும் என்றார். ரெண்டு மூணு விசேஷத்துக்கு ஊர் பக்கம் போனபோது அவர பாக்க முடியல. பழைய போன் நம்பரும் மாத்திட்டாருன்னு சொன்னாங்க. வர ஞாயிறு வைகாசி வளர்பிறை கடைசி முகூர்த்தம். ஊரில் நிறைய கல்யாணம் இருக்கு. போறேன் எப்படியும் தட்டுப்படுவாரு பார்த்துட்டு கூப்பிடுறேன் என்றேன். ஞாயிற்றுக்கிழமை அட்டென்ட் செய்யப் போகும் விசேஷங்களுக்கு ஏற்ப மொய் கவர் வாங்கி வைத்துக்கொண்டு பஸ்ஸில் உட்கார்ந்தாயிற்று‌. பஸ் ஊரை நோக்கி கிளம்பியது. அரசு பேருந்து. டிரைவரும் கண்டக்டரும் சம 50 வயது ஆட்கள். அதைவிட இளையராஜா வெறியர்கள் போலும். அட்டகாசமான பாடல்களாக போட்டுக் கொண்டே வந்தார்கள். ரிக்ஷா மாமா படத்தின் தங்க நிலவுக்குள் பாடல் ஒலிக்க துவங்கியதும், ராமமூர்த்தி அண்ணனின் ஞாபகம் வரத்துவங்கியது. பேச்சுவாக்கில் தான் அண்ணன் ஆனால் அவருக்கு எப்படியும் தற்போது 70 வயது இருக்கும். 40 வருடங்களுக்கு முன்னர் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி எங்கள் ஊர் இருந்தபோது, விவசாயிகள் களை எடுக்க, உரம் போட, மருந்தடிக்க என்னும் செலவுகளுக்கு அல்லது அறுவடைக்கு நாள் இருக்கும் போது வந்துவிடும் சுப/அசுப செலவுகளுக்கு, நகையை அடகு வைத்து வட்டிக்கு பணம் வாங்குவார்கள். ஆனால் அவர்கள் அடகுக் கடைக்கு சென்று அங்கே நிற்பதை கௌரவ குறைச்சலாக கருதுவார்கள். பொதுவாக பெண்களை வெளியே அனுப்ப மாட்டார்கள். பொருளை எடுத்துக்கொண்டு அடகு கடையிலோ அல்லது கூட்டுறவு வங்கியிலோ உட்காருவது அவர்களைப் பொறுத்த வரை பெருத்த அவமானமாக இருந்த காலம் அது. அதேபோல நொடித்துப் போய் நகைகளை விற்கிறவர்களும் நகைக் கடைக்கு செல்ல மாட்டார்கள். ராமமூர்த்தி அண்ணனை நாடுவார்கள். அவர் நியாயமாக அடகு வைத்தோ விற்பனையோ செய்து கொடுப்பார். கஷ்டத்தில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகள் திருமணத்தின் போது ராமமூர்த்தி அண்ணனிடம் சொன்னால் விற்பனைக்கு வந்த பழைய நகைகளை பாலிஷ் செய்து சகாயமான விலைக்கு வாங்கி கொடுப்பார். எனவே ராமமூர்த்தி அண்ணன் அந்த ஏரியா முழுவதும் மிகப் பிரபலம். காதும் காதும் வைத்தார் போல இந்த டீல்களை எல்லாம் முடித்துக் கொடுப்பார். அதனால் பொதுவாக எல்லா விசேஷங்களுக்கும் சென்று விடுவார். அப்போது அவரிடம் தகவல் சொன்னால் போதும். வீடுகளுக்கு கூட வந்து வாங்காமல் ஏதாவது பொது இடத்திற்கு வந்து வாங்கிக் கொள்வார்.அவர் மீது மிக நம்பிக்கையாக எல்லோரும் இந்த வரவு செலவு வைத்துக் கொள்ள ஒரு காரணம் இருந்தது. அவர் இந்த தொழிலை ஆரம்பித்த சமயத்தில், ஒரு விவசாயி, விவசாயத்தில் தொடர் நஷ்டம் காரணமாக தன் வீட்டில் கடைசியாக இருந்த ஒரு பழைய கல் வைத்த செயினை அடகு வைக்க நினைத்தார். இவரைப் பற்றி கேள்விப்பட்டு, அந்த செயினை கொடுத்தார். இவரும் தான் வழக்கமாக செல்லும் அடகு கடைகளில் ஒன்றில் அந்த செயினை வைத்து பணம் வாங்கி கொடுத்தார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக அந்த விவசாயியால் வட்டி கட்ட முடியவில்லை. நகை மதிப்பில் கொஞ்சம் ரூபாய்தான் மீதம் இருந்தது. எனவே இவர் அந்த விவசாயியை சந்தித்து, ஒரு வருஷமா வட்டி கட்டல, நகை மூழ்கிடும் போல இருக்கு. என்ன செய்யலாம் என கேட்க, அவர் இந்த முறை போட்ட வாழையில் மேடேறி வந்து விடுவேன் என நினைத்தேன். ஒன்றும் நடக்கவில்லை. இந்த தோட்டத்தை வைத்தும் கொஞ்சம் கடன் வாங்கி இருக்கிறேன். அதையும் என்னால் இனி கட்ட முடியாது. அதனால் இந்த தோட்டத்தையும் விற்றுவிட்டு வேறு ஊருக்கு பிழைக்க செல்லலாம் என்று இருக்கிறேன். அடகு வைத்த நகை விற்று ஏதாவது மீதம் இருந்தால் கொடுங்கள் உதவியாக இருக்கும் என்றார். ராமமூர்த்தி அடகு கடைக்கு திரும்பி வந்து, விபரத்தை சொல்ல, அடகுக் கடைக்காரரோ, நீயே இந்த செயினை பஜாரில் விற்று பணத்தை எடுத்து, அசல் மற்றும் வட்டியை எனக்கு கொடுத்துவிட்டு, உன் கமிஷன் போக மீதத்தை அவரிடம் கொடுத்து விடு என்றார். நகையை வாங்கிக்கொண்டு பஜாரில் இருந்த அவர் வழக்கமாக பழைய நகைகளை விற்கும் ஒரு நாணயமான கடையில் செயினை கொடுத்தார். அதை பார்த்த முதலாளி, இன்னும் கொஞ்சம் பரிசோதித்து பார்த்துவிட்டு, இது எல்லாமே அசல் வைரக் கற்கள். அந்த காலத்துல பண்ணியிருக்காங்க. இப்ப ரொம்ப விலை போகும் என்று சொல்லி, அந்த நகையின் மதிப்பை விட பத்து மடங்கிற்கு மேல் பணத்தை கொடுத்து இருக்கிறார். உடனே இவர் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அடகு கடையில் செட்டில் செய்துவிட்டு, மீத பணத்தை பையில் கட்டி, பேருந்துக்கெல்லாம் காத்திருந்தால் நேரம் ஆகிவிடும் என்று, ஒரு வாடகை சைக்கிள் எடுத்து அந்த விவசாயியின் ஊருக்கு விரைவாகச் சென்று விவரம் சொல்லி பணத்தை கொடுத்து இருக்கிறார். அந்த வீட்டாரால் நம்பவே முடியவில்லை. ஊரைவிட்டு கிளம்ப மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருந்தவர்கள், அந்தப் பணத்தில் நிலத்தின் மீதான கடனை அடைத்து, மற்ற சிறு கடன்களையும் அடைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். இந்த சம்பவம் அப்போது அந்த கிராமத்தார்கள் மூலம் சுற்றுவட்டாரம் எல்லாம் பரவியது. அதிலிருந்து ராமமூர்த்தி அண்ணனுக்கு எல்லோரிடமும் பெரிய மரியாதை. எந்த விசேஷமாக இருந்தாலும் அழைப்பார்கள். அவசரத்திற்கு அவரிடம் தான் நகை கொடுக்க வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்கிற முடிவு தங்களை அறியாமலேயே எல்லோருக்கும் வந்து விட்டது. இளவெயில் ஆனால் லேசான காற்றுடன், இன்னும் சில பாடல்களை பேருந்தில் கேட்டு முடித்தபோது ஊர் வந்து சேர்ந்திருந்தது. இறங்கி, முதல் இரண்டு விசேஷங்களுக்குப் பின் மூன்றாவது விசேஷத்தில் ராமமூர்த்தி அண்ணன் காணக் கிடைத்தார். விவரத்தை சொல்லியதும், இல்ல தம்பி இப்பல்லாம் அந்த தொழிலை விட்டு விட்டேன் என்றார். என்னண்ணே என்ன ஆச்சு என்று கேட்டதற்கு, எங்களுக்கு மெயின் ரொட்டேஷன், பேங்க்ல அடமானத்துக்கு வச்சு மீட்க முடியாமல் ஏலத்துக்கு வர நகைகள் தான். முன்னாடி 500 ரூபா இப்போ ஐயாயிரம் ரூபாய் டெபாசிட் கட்டினால் யாரும் கலந்து கொள்ளலாம். நான் எனக்கு தெரிந்த நம்பிக்கையான நகை மதிப்பீட்டாளர கூட்டிக்கிட்டு போவேன். எல்லாம் செக் பண்ணி ஏலத்துல நகை எடுப்போம். ஆனா இப்ப உரசி பார்த்தா தங்கமா இருக்கு ஆனா உள்ளுக்குள்ள வேற மெட்டீரியல். ரொம்ப டெக்னிக்கலா செஞ்சு அடகு வைத்துவிட்டு போயிடுறாங்க. சில சமயம் பேங்க்ல இருக்கிறவங்களே இதுக்கு துணை போறாங்க. அந்த நகையோடு அதிகபட்ச மதிப்பீட்டுக்கு ஒரு கமிஷன் வாங்கிட்டு பணம் கொடுத்து விட்டுறாங்க. அப்படித்தான் நான் ஒரு தடவை வளையல் எடுத்தேன், அதுக்குள்ள வெள்ளி கம்பி இருந்திருக்கு. அதுக்கப்புறம் ஒரு 18 பவுன் காசு மாலை எடுத்தேன். அதிலும் உள்ள நிறைய வெள்ளி கம்பி. அதை எடுத்து சிலருக்கு மாத்தி கொடுத்தேன். ஆனா இப்ப இருக்கிற பெரிய நகைக் கடைகளில் தங்கம் குவாலிட்டி மெஷின்ல செக் பண்ணும் போது கண்டுபிடிச்சிட்டாங்க. இனி பேங்க்ல போய் அதை ஒன்னும் செய்ய முடியாது. ஏகப்பட்ட லட்சங்கள் என் கையில் இருந்து கொடுத்து தான் அந்த பிரச்சனையை முடிச்சேன். அதிலிருந்து இந்த தொழிலையே விட்டுவிட்டேன். நீங்க நகை கடையில் பார்த்து நல்லா பரிசோதித்து வாங்குங்க அதுதான் நல்லது என்று முடித்துக் கொண்டார். சரிண்ணே. இப்பொழுது என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டேன். நமக்கு தெரிந்தவர் பழைய பொருள்கள் கடை வச்சிருக்கார். ஒரு ட்ரை சைக்கிள் வச்சு பொதுவா சனி, ஞாயிறுகளில் ஏரியா பக்கம் போய் இருக்கும் பழைய பாத்திரம், பேப்பர், பிளாஸ்டிக் எல்லாம் எடை போட்டு வாங்கிட்டு வந்து அவர்கிட்ட கொடுக்கிறது. அவர் பொருளுக்கு ஏற்ற மாதிரி கமிஷன் கொடுப்பார் அத வச்சு வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. என்ன முன்னர் கிராம் கணக்குல நிறுத்து பார்ப்பேன். இப்ப கிலோ கணக்கு. எல்லோருக்குமே தேவைப்படுறதால அதுக்கு மதிப்பு அதிகம். இது தேவைப்படாத பொருள். ஏதாவது ஒரு காலத்துல தங்கமும் தேவைப்படாத பொருள் ஆகலாம் இல்லையா.. என்று சொல்லிவிட்டு, புது போன் நம்பரை கொடுத்து எந்தெந்த ஏரியாக்கள் கவர் செய்கிறார் என்று சொல்லிவிட்டு சாப்பிட கிளம்பினார்.

May 17, 2025

தக் லைஃப்

87 சமயத்தில் எங்கள் ஊர் பகுதியில் கல்லூரிகள் இல்லை. பெரும்பாலும் மதுரையில் இருக்கும் அமெரிக்கன், மெஜூரா, தியாகராஜா ஆர்ட்ஸ் மற்றும் வக்ஃப் போர்டு கல்லூரிகளில் தான் எங்கள் ஊர் காரர்கள் சென்று படிப்பார்கள். ஹாஸ்டலில் தங்கி இருக்கும் அவர்கள் சனி ஞாயிறு வரும்போது, அவர்கள் பார்த்த படங்களைப் பற்றி சொல்வது தான் எங்களுக்கு முதல் தகவல் அறிக்கை. ஏனென்றால் எந்த படமாக இருந்தாலும் எங்கள் ஊருக்கு நூறு நாள் கழித்து தான் வரும். 87 தீபாவளி சமயத்தில் போடப்பட்ட ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், மனிதன் படத்தின் வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன், உழவன் மகன் படத்தின் செம்மறியாடே செம்மறியாடே பாடல்கள் கொடுத்த தாக்கத்தை, நாயகனின் நான் சிரித்தால் தீபாவளி கொடுக்கவில்லை. என்னடா பாட்டு வரியே காதுக்குள்ள போக மாட்டேன் என்கிறதே என்பதுதான் அப்போது பேச்சாக இருந்தது. தீபாவளி முடிந்து அதிரசம் முறுக்கு ரவா லட்டு வாளிகளோடு ஹாஸ்டல் சென்ற சீனியர் அண்ணன்கள், திரும்பும் நாளை எதிர்பார்த்திருந்தோம். நான் கமல் ரசிகன் என்பதால் அண்ணே நாயகன் எப்படி இருக்கு என்று எல்லோரிடமும் போய் கேட்டேன். டேய் அதை கதை மாதிரி சொல்ல முடியாதுடா. அது பாட்டுக்கு போகும். கவனமா பாக்கணும். அவ்வளவுதான் என்றார்கள். சிலர் படம் புரியவில்லை என்றும் சொன்னார்கள். எங்கள் ஊருக்கு படம் வந்தபோது, ஊர் தியேட்டரில் சுமாரான சவுண்ட் சிஸ்டம். சில டயலாக்குகள் காதில் கேட்கவே இல்லை. ஆனால் அதன் பின்னர் ஒவ்வொருவராக நாயகனை பற்றி பேச ஆரம்பித்ததும் தான் அந்தப் படத்தின் பிரம்மாண்டம் உறைத்தது. அந்தப் படம் அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த பல பென்ச் மார்க்குகளை உடைத்து போட்டு புதிதாக பலவற்றை நிறுவியது. ஆர்ட் டைரக்சன் எப்படி இருக்க வேண்டும், ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டும் முக்கியமாக வயதானவர் என்று காட்ட வேண்டும் என்றால் தலை முடிக்கு சுண்ணாம்பு அடித்து விட்டு ஒரு கோட் மாட்டி விடக்கூடாது. உருவம்,குரல், நடை முதற்கொண்டு அப்படியே மாற வேண்டும் என்று தமிழ் சினிமாவிற்கு பாடம் எடுத்தது. சினிமா என்பது காட்சி ஊடகம். முடிந்தவரை வசனங்கள் குறைவாக இருக்க வேண்டும். அந்த வசனங்களும் அம்பு போல பாய வேண்டும். என்று பலவற்றை சொல்லாமல் சொல்லியது. அதன் பின்னர், மணிரத்னம் கமல் அடுத்து இணைவார்களா என்ற எதிர்பார்ப்பிற்கு, பதிலாக வந்தது ஆனந்தம் திரைப்படம். அதில் நானா படேகரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் கமல் - மணி creative difference காரணமாக, கமல் அதிலிருந்து விலகினார். நானாவும் விலகினார். பின்னர் அதே ஸ்கிரிப்ட்டை, மோகன்லால் பிரகாஷ்ராஜ் வைத்து இருவர் என இயக்கினார் மணி. கிட்டத்தட்ட நாயகன் வெளியாகி முப்பத்தி எட்டாவது வருடம். எவ்வளவோ மாற்றங்கள். அந்த சமயத்தில் பிறந்தவர்கள் தற்போது சினிமா பார்க்க தியேட்டருக்கு செல்ல வேண்டுமா என்று தயக்கம் கொள்ளும் அளவிற்கு காலம் மாறி விட்டது. வெகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முரட்டுத்தனமான இயக்குனர்- நடிகர் காம்போ. இன்று மாலை 5 மணிக்கு Thug life படத்தின் டிரைலர் வருகிறது. மீண்டும் அந்த மேஜிக் நடக்க வேண்டும் என்பது ஒரு கமல் ரசிகனாக எதிர்பார்ப்பு. அன்று ஒவ்வொரு அண்ணனாக சென்று, படம் எப்படி இருக்கிறது என்று கேட்ட மனம், இன்று ஜூன் 5ஆம் தேதி வரும் ஆன்லைன் விமர்சனங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

நானும் மகனும்

ஞாயிறு பிற்பகலில் வைகை எக்ஸ்பிரஸில் இருந்து இறங்கி, மகன் தங்கி இருந்த திருவல்லிக்கேணி மேன்சனை சென்றடைந்த போது, அவன் தூங்கிக் கொண்டிருந்தான். நான் சாப்பிட்டு விட்டேன். நீங்கள் பக்கத்தில் ஏதும் சென்று சாப்பிட்டு வருகிறீர்களா? என்றான்.ட்ரெயின்ல வரும்போது சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லி அறையில் இருந்த மகனின் ரூம் மேட் பெட்டில் படுத்து கொண்டேன். ஐம்பதை கடந்தாகி விட்டது. இதுவே 5-10 வருடம் முன்னால் என்றால் கூட, இப்படி வைகையில் இருந்து இறங்கினால் நாயர் மெஸ் அல்லது ஒரு நல்ல ஆந்திர மெஸ்ஸில் சாப்பாடு. முடித்தவுடன் அப்படியே பொடி நடையாக நடந்து தேவி தியேட்டரில் நாலு மணி ஷோ. படம் முடிந்ததும் சின்ன சமோசாவும் இராணி டீயும். இப்போது படுத்தால் போதும் என்று இருக்கிறது. ஆறு மணி அளவில் எந்திரித்தேன். மகன் லேப்டாப்பில் அவன் அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு டீ சாப்பிட்டு வருவோமா? கிரவுண்டுக்கு எதுத்தாப்புல ஒரு கடையில நல்லா இருக்கும் என்றேன். நீங்க போய் சாப்பிட்டு வாங்க எனக்கு வேலை இருக்கிறது என்றான். டீ சாப்பிட்டு வந்ததும் பையில், குறிப்பு எடுத்து வைத்திருந்த பேப்பர்களை புரட்ட துவங்கினேன். நல்லா பிரிப்ஃபேர் பண்ணிட்டீங்களா? நாளைக்கு கிடைச்சிருமா? என்றான் மகன். 25 வருஷமா பார்த்துக்கிட்டு இருப்பது தானே? இப்ப லேட்டஸ்ட் அட்மினிஸ்ட்ரேஷன் அப்டேட் மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கேன் என்றேன். இரவு 8 மணி ஆனது. ஏதாச்சும் ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிடலாமா என்று கேட்டேன்‌. அரை மனதுடன் உடன் வந்தான். சாப்பிட்டு முடித்ததும், அப்படியே பீச்சுல போய் கொஞ்சம் அலைகளை பார்த்துட்டு காத்து வாங்கிட்டு வரலாம் என்றேன். சரி என்று தலையசைத்து உடன் நடக்க துவங்கினான். அப்போது சிறிய மகனிடம் இருந்து அழைப்பு. சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டான். ஆச்சு நீ என்ன பண்ற ..என்ன.. அவனிடம் பேசிக் கொண்டே நடந்தேன்... கடற்கரையை நெருங்கி மணலில் நடக்க ஆரம்பித்தோம். அப்போது மகன் கேட்டான். என்னை விட அவன் மேல தானே உங்களுக்கு பாசம் அதிகம் என்று. எனக்கு ரெண்டு பேர் மீதும் ஒரே பாசம் தான். உனக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். உனக்கு நாங்கள் செய்ததெல்லாம் உன்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தம்பிக்கு செய்ததை நீ பார்த்துக் கொண்டு இருந்தாய். அதனால் உனக்கு அப்படி தோன்றுகிறது என்றேன். அது மட்டும் வச்சு சொல்லல. ஒரே செயலுக்கு நீங்க என்ன தண்டிக்கிற விதமும், அவன தண்டிக்கிற விதமும் வேற. அவ்வளவு ரியாக்ஷன் மாறுறது பார்த்திருக்கிறேன் என்றான். சில நிமிடம் எங்களுக்குள் ஒரு அமைதி நிலவியது. அப்படி இல்லடா. நான், நீ வளர்ந்து வரும் போது என் அப்போதைய வயதோடு உன்னை கம்பேர் செய்து பார்த்தேன். நான் செய்வது போலவே வேலைகள், ஒழுங்காக படிக்க வேண்டும், சேட்டை செய்யக் கூடாது என்று. அதனால் உன் மேல் எனக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு அது நடக்காத போது மிகக் கேவலமாக கூட உன்னை அடித்திருக்கிறேன் ‌ அத நெனச்சு இப்போ தினமும் மனசு கஷ்டப்படுகிறேன். ஆனால் உன் தம்பி வளர்ந்து வரும் போது உன்னைத்தான் அவனுக்கு பெஞ்ச் மார்க்காக மனம் நினைத்தது. அவன மாதிரி தானே இருக்கான் அல்லது அவனைவிட பரவாயில்லை என்று தோண ஆரம்பித்தது. அதனால், நீ செய்த அதே தவறுக்கு அவனை குறைவாக தண்டித்திருக்கிறேன் ‌ என்னுடைய தவறுதான் என்றேன். நாளை காலை உங்களுக்கு எத்தனை மணிக்கு இன்டர்வியூ என்று கேட்டான். பத்து மணிக்கு அங்கே இருக்க வேண்டும் என்றதும், சீக்கிரம் தூங்குங்க ட்ரெயின் டயர்ட் வேற இருக்கும். காலைல எந்திரிச்சு சீக்கிரம் கிளம்பனும் என்றான். திரும்பி ரூமுக்கு வரும்போது, நான் நல்லாத்தான் உங்கள பாத்துகிட்டேன், எங்க அப்பாவ கம்பேர் பண்ணும் போதெல்லாம் நான் எவ்வளவோ மடங்கு மேல் என்றேன். ஆத்திரமான குரலில் பேச ஆரம்பித்தான். இப்படி கம்பேர் பண்ணாதீங்க. அவர் அந்தக் கால ஸ்டாண்டர்டுக்கு உங்கள பாத்துகிட்டார். நடத்தினார். ஒரு தலைமுறை தாண்டி எவ்வளவோ மாறிவிட்டது. நீங்கள் அவரை விட கொஞ்சம் பெட்டர் என்று தான் சொல்லலாமே தவிர, இந்தத் தலைமுறை பெற்றோர்களோடு ஒப்பிட்டால் நீங்கள் மோசம் தான் என்றான். இப்படித்தான் தாத்தா அந்த காலத்தில், பாட்டியை நடத்தியதை விட நான் நல்லாத்தான் வச்சிருக்கேன் என்று என் அம்மாவையும் நீங்கள் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. உங்கள் ஒப்பீடு இந்த தலைமுறையில் தங்கள் மனைவியை, குழந்தைகளை பார்ப்பவர்களோடு இருக்க வேண்டுமே தவிர போன தலைமுறையோடு அல்ல என்றான். மேன்சனை நெருங்கினோம். அப்படியே, இந்தப் பக்கம் ஒரு கடை இருக்கும் இல்ல அங்க பால் குடிச்சிட்டு போயிடலாம் என்றேன். இதுதான் இதுதான் உங்ககிட்ட பிடிக்காதது. வந்ததுல இருந்து உங்க சுகத்தை பத்தியே தான் யோசிக்கிறீங்க, பேசுறீங்களே தவிர, எனக்கு என்ன வேணும்? எனக்கு என்ன பிடிச்சிருக்கு? சாப்பிடறியான்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா என்றான். இல்லப்பா நான் நல்லதா தானே செலக்ட் பண்ணி சொல்றேன். அது உனக்கும் பிடிக்கும்ல என்றேன். அதுதான், எல்லாத்தையுமே உங்க கோணத்திலேயே தான் பாக்குறீங்க. ஒரு தலைமுறை மாறிடுச்சு. என்னோட விருப்பம் என்ன?எது தேவையா இருக்கும்னு கூட உங்களுக்கு தோணல. அதுதான் இந்த குடும்பத்தை இப்படி சரியில்லாம வச்சிருக்கு. இந்த வயசுலயும் இருக்கிற வேலையோடு சேர்த்து வேற என்ன சம்பாதிக்கலாம்னு நினைக்காம, சம்பளம் பத்தல, மெட்ராஸ்ல வேலை தேடுறேன்னு வர்றீங்க. குடும்பத்தோடையும் இப்ப இருக்க சூழலில் வர முடியாது. அப்படி வந்தா பத்தவும் செய்யாது. இங்க மேன்சனில் தங்கிட்டு வீட்டுக்கு கொஞ்சம் பணம் அனுப்பிவிட்டு ஜாலியா இருக்கலாம் என்று தான் உங்கள் மனசு சொல்லுது என்றான். சத்தியமா இல்லடா. அங்க குடுக்குற சம்பளம் பத்த மாட்டேங்குது. விலைவாசி கூடிக்கிட்டே போகுது. சம்பளம் ஏறுற மாதிரியே தெரியல. உன் தம்பியை இன்னும் நாலு வருஷம் எப்படியும் படிக்க வைக்கணும். அதனாலதான் இந்த முயற்சி என்றேன். இந்த யோசனை எல்லாம் வயசு காலத்தில் இருந்திருக்கணும். அப்ப சுகமா ஊரிலேயே இருந்து நல்லா தின்னுட்டு இப்ப பத்தல பத்தலன்னா எப்படி என்றான்? ரூமுக்கு திரும்பி சிறிது நேரம் படித்துக்கொண்டிருந்தேன். அவன் முறைத்துப் பார்ப்பது போலவே உள்ளுணர்வு சொல்லியது. காலை எழுந்ததும், இப்ப டிஃபன் எங்க நல்லா இருக்கும் என்ற கேள்வி நாக்கு வரை வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவனுடனேயே சென்றேன். அவன் வழக்கமாக சாப்பிடும் இடத்தில் ஒரு தோசை வாங்கி கொடுத்து பஸ் ஏற்றி விட்டான். இன்டர்வியூ முடிந்தது. பெரிய திருப்தி இல்லை. மேன்சனுக்கு திரும்பி, அவன் வரவுக்காக காத்திருந்தேன்.‌ வேலை முடிந்து களைப்பாக வந்தான். நைட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணிக்கு. இப்போ கிளம்பி போனா சரியா இருக்கும். கிளம்புகிறேன் என்றேன். ஸ்டேஷனுக்கு நான் வருகிறேன் என்றான். உங்களுக்கு சங்கீதா தானே பிடிக்கும் இங்கே சாப்பிடுவோம் என்றான். இல்ல உனக்கு பிடிச்ச இடத்தில் சாப்பிடுவோம் என்றேன். பரவாயில்ல சங்கீதாவே போவோம் என்றான். சாப்பிட்டு பிளாட்பாரத்திற்கு வந்தோம். நான் ஒரு சூப்பர் அப்பான்னு நினைச்சுகிட்டு நிறைய தப்பு பண்ணிட்டேன். ரொம்ப ஸாரி என்றேன்.‌ அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஒன்றும் சூப்பர் மகன் இல்லை. எனக்கு சூப்பர் அப்பாவும் தேவையில்லை. எங்க அப்பா மாதிரி இல்ல நான். எல்லாத்தையும் உங்களுக்காக விட்டுக் கொடுத்தேன் என்று மட்டும் இனி நினைத்துக் கொள்ளாமல் முக்கியமாக சொல்லாமல் இருங்கள் போதும் என்றான். சரி என்று கம்மிய குரலில் சொல்லிவிட்டு, தலை குனிந்தவாறு ட்ரெயினில் ஏறி உட்கார்ந்தேன். ட்ரெயின் கிளம்பியதும் ஹெட் செட்டில் பாடல் கேட்போமே பேக்கை திறந்தேன். எனக்கு பிடித்த பாஷா அல்வா பாக்கெட் இருந்தது.

மீனாட்சி சுடர்விழி

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றி ஒரு வாரம் கழித்து, மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கும் நாளில் இருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வரை எங்கள் செட் பசங்கள் எல்லோரும் கீழ சித்திரை வீதி,மேல சித்திரை வீதி, அம்மன் சன்னதி பகுதிகளில் தான் சுற்றிக்கொண்டே இருப்போம். அந்த டீன் ஏஜ் பருவத்தில், மீனாட்சி அம்மனைப் பற்றி பேசுகிறோமோ இல்லையோ, மீனாட்சி சுடர்விழியைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டோம். மீனாட்சி என்பது மதுரையில் சாதாரணமாக வைக்கப்படும் பெயர் என்றாலும், மீனாட்சி சுடர்விழிகள் அரிதாகத்தான் இருப்பார்கள். அவர் தந்தை எப்படி இந்தப் பெயரை அவருக்கு வைத்தார் என்று எங்களுக்கு இன்னமுமே ஆச்சரியம் தான். அவர் அப்போது மதுரை பி ஆர் சி யில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். சில சிவன் கோயில்களில் கருவறை சிறியதாக இருக்கும். மின்விளக்கு கூட இருக்காது. வேறு எந்த அலங்காரமும் இல்லாமல் லிங்கம் மட்டும் இருக்கும். அதிகபட்சம் தண்ணீரால் கழுவி மட்டும் தான் விட்டிருப்பார்கள். அந்தக் கருவறையில் தொங்கும் ஒரு விளக்கில் ஒரு சுடரை ஏற்றி இருப்பார்கள். அந்த சுடர் தீர்க்கமாக எரிந்து, அந்தக் கருவறையையே அழகாக்கும். சிவனை தரிசிப்பதை விட அந்த சுடர் நம் மனதை இழுக்கும். அப்படிப்பட்ட கண்களை உடையவள் தான் மீனாட்சி சுடர் விழி. பிறந்த போது எல்லாம் அப்படி ஒரு தீர்க்கம் அவள் கண்களில் தென்பட்டதில்லை. பருவ வயதை அடைந்த பின்னர் அவளைப் பார்க்கும் யாராலும் அவள் கண்களை விட்டு அகல முடியாதபடி அழகு சுடர் விடும் கண்கள் அவளுக்கு அமைந்தன. எல்லா நாளும் மீனாட்சி மீது கிரேஸோடு அலைந்து கொண்டிருந்த எங்கள் தெரு பையன்கள், மீனாட்சி பட்டாபிஷேகத்தன்று இன்னும் ஒரு படி மேலே சென்று விடுவார்கள். மதுரையின் ராணியாக இன்று முடி சூட்டிக் கொண்டாயே என் இதய ராணியாக என்று முடி சூட்ட வருகிறாய் என்று கவிதை எழுதுவதில் துவங்கி, மீனாட்சி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, இன்னைக்கு பட்டாபிஷேகமாமே? எங்கே கிரீடத்தை காணோம் என்று கமெண்ட் அடிப்பது வரை அவரவர் ஸ்டைலில் கவர முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். கண்களின் தீர்க்கம் அவள் படிப்பிலும் இருந்தது. பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றாள். எங்கள் தெரு பையன்களுக்கு எல்லாம் அவளால் வலுவாக வீட்டில் திட்டு விழுந்தது. ஒரு பொம்பள புள்ள, வீட்டு வேலை எல்லாத்தையும் அவங்க அம்மா கூட சேர்ந்து பார்த்துகிட்டு, ஸ்கூல் ஃபர்ஸ்ட்டும் எடுக்குறா? கொட்டிக்கிற வேலை மட்டும்தான் உனக்கெல்லாம் கொடுத்து இருக்கு. எங்க போச்சு உனக்கு அறிவு? எங்க தல விதி உன்னைய பெத்துட்டோம். என்பது அப்போது மீனாட்சியால் எங்கள் தெரு பையன்கள் எல்லோர் வீட்டிலும் அவரவர்களுக்கு கிடைத்த திட்டு. சில தந்தைகள் இருப்பார்கள். அவர்களை ஏதாவது ஒரு அதிகாரி அல்லது மருத்துவர் போன்றோர் கவர்ந்திருப்பார்கள் ‌ தங்கள் பிள்ளை அதேபோல வர வேண்டும் என்று அதற்காகவே மெனக்கிடுவார்கள். சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். மீனாட்சி சுடர்விழியின் தந்தையை அப்படி வசீகரித்தவர், அவரது சொந்த ஊரில் ஸ்டேட் பாங்க் பீல்ட் ஆபிசராக இருந்த ஒரு பெண் அதிகாரி. நல்ல காட்டன் சேலை கட்டிக்கிட்டு, கையில லெதர்வாட்ச் கட்டிக்கிட்டு, சின்ன கண்ணாடி போட்டு கிட்டு ஜீப்ல எல்லா ஊருக்கும் சுத்தி சுத்தி வந்து லோன் கொடுப்பாங்க. பீல்ட் ஆபிசர் வராங்க பீல்ட் ஆபிசர் வர்றாங்கன்னு எங்க ஊரே காத்து கிடக்கும். அது மாதிரி ஒரு பேங்க் ஆபீஸரா மீனாட்சியை ஆக்கிரனும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதற்காகவே மீனாட்சி, தான் பிஎஸ்சி அக்ரி படிக்க வேண்டும் என்று, பிளஸ் ஒன் பிளஸ் டூவில் வெறித்தனமாக படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் என்ட்ரன்ஸ் தேர்வுகள் இருந்தன. அதற்கான கோச்சிங் கிளாசிற்காக தினமும் காலையில் மீனாட்சியை கூட்டிக்கொண்டு போய்விட்டு கூட்டி வருவதற்காகவே அவர் தந்தை இரண்டு மாதம் விடுமுறை எடுத்தார். மீனாட்சி எதிர்பார்த்தபடியே பிஎஸ்சி அக்ரி கிடைத்தது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அவர் தந்தை மீனாட்சியை சேர்த்து விட்டார். தன்னுடைய கனவு நனவாக அதற்கடுத்தும் ஏராள முயற்சிகளை மீனாட்சியின் தந்தை எடுத்தார்.அவரது வேலை நாள் போக மற்ற நாள்களில் வேன் ஓட்டுவது, திருவிழா, டூர் பஸ்கள் ஓட்டுவது என்று எந்நேரமும் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார். பேங்க் எக்ஸாம் படிப்புக்கும் கோச்சிங் எல்லாம் இருக்கு. நல்ல சென்டர்ல சேர்த்து விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவரது அம்மாவும் சளைத்தவர் இல்லை. அந்த சமயத்தில் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி ஏராள கடைகள் இருந்தன. அதில் ஒரு கடையில் கேஷியராக பணிபுரிந்தார். நானும் எங்கள் செட் பையன்களும் டிகிரியை ஒரு வழியாக முடித்தோம். மதுரையை சுத்துன கழுதை வேறு எங்கேயும் போகாது. அதனால இங்கேயே இருந்து சுகம் கண்டுறாதிங்க என்று எங்கள் எல்லோரையும் சென்னைக்கு பேக் பண்ணி அனுப்பி வைத்தார்கள். தீபாவளி,பொங்கல், சித்திரை திருவிழா இவற்றிற்க்கு மட்டுமே வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டோம். அப்படி ஒரு சித்திரை திருவிழாவிற்கு வந்த போது, மீனாட்சி பட்டாபிஷேகம் அன்று எங்கள் தெரு பையன்கள் அனைவரின் கண்களும் தேடியது மீனாட்சி சுடர்விழியைத் தான். ஒருவேளை பேங்க் வேலை கிடைத்து போய்விட்டாரா என்று விசாரித்த போது தான் தெரிந்தது. மீனாட்சிக்கு யாரோ செய்வினை வைத்து விட்டார்கள், அதனால் அவள் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.‌ செய்வினை எடுப்பதற்காக அவரது பெற்றோர்கள் அவரை சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள் என்று. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள். எங்கெல்லாம் செய்வினை எடுக்கிறார்கள் என்று தகவல் வருகிறதோ அங்கெல்லாம் மீனாட்சி சுடர்விழியை அழைத்துச் சென்றனர் அவர் பெற்றோர்கள். நாகூர் தர்கா, பிரத்தியங்கரா தேவி, படவேடு அம்மன் என எல்லா திசைகளிலும் சென்றார்கள். எந்தப் பயனும் ஏற்படவில்லை. பின்னர் அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி, பேய் விரட்டும் ஆட்களிடம் தொடர்ச்சியாக அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். பேய் ஓட்டுபவர்கள் வேப்பிலையால் அடி அடி என்று அடித்து மயக்கம் அடையவே செய்து விடுவார்கள். பின்னர் மயக்கம் தெளிந்து விழித்த பின்னரும் மீனாட்சி அப்படியே தான் இருந்தார். மீனாட்சிக்கு அப்போதைய அந்த ஏரியா அதிகபட்ச திருமண வயதான 30 தாண்டியது. அவரது தந்தையும் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணிக்கு சேர்ந்தார். ஒரு நாள் மீனாட்சியை பார்க்க சென்று இருந்தேன். அவர் தந்தை நீண்ட நேரம் என்னிடம் மனம் விட்டு பேசினார். காலேஜ் முடிச்சு வந்த உடனே, என் காதில் ஏதோ குரல் கேட்கிறது கேட்கிறது என்று சொன்னாள். முதலில் ஈ என் டி டாக்டரிடம் கூட்டி போனேன். அவர் காதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார். அவள் தொடர்ச்சியாக, என்னை வெளியில் இருந்து ஒருவன் பேசி மயக்க பார்க்கிறான், என்னை தப்பானது எல்லாம் செய்யச் சொல்கிறான், இல்லாவிட்டால் என்னை சாகச் சொல்கிறான் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். திடீர் திடீரென இரவில் எந்திரித்து உட்காருவாள். சில நாட்கள் தற்கொலைக்கு முயன்றாள். எனக்கு எதுவும் புரியாமல் செய்வினை தான் வைத்து விட்டார்கள் என்று சில வருடங்கள் வீணடித்தேன். பின்னர் பேய் பிடித்து இருக்கும் என்று சிலர் சொன்னதை நம்பி அதில் பல வருடங்களை வீணடித்தேன் ‌ பின்னர், என் மேனேஜர் தான் சொன்னார் இது மனநோயாக இருக்கும். சீஷோபெர்னியாவாக இருக்கலாம் என்று. மீனாட்சிக்கு இப்படியான சில வருடங்களிலேயே ஒருவர் இதை சொன்னார். நான் தான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் மனநோய் என்று வெளியில் சொல்லி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் அவளுக்கு எப்படி திருமணம் நடக்கும் என்று பயந்தேன். செய்வினை, பேய் பிடித்து இருக்கிறது என்பதை பெரிதாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. எனவே என் மனமும் அதை நோக்கியே சென்றது. இப்போதுதான் ஆனது ஆகட்டும் என்று மனநல மருத்துவரிடம் காட்டி வருகிறேன் என்றார். 10- 12 ஆண்டுகள் மீனாட்சி அனுபவித்த வேதனை நரகத்திற்கு இணையானது. ஒருவனுக்கு கை கால் அடிபட்டால் அல்லது மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வந்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். எல்லோருக்கும் சொல்கிறார்கள். ஆறுதல் சொல்ல அனைவரும் வருகிறார்கள். ஆனால் மனநோய் என்பதை மூன்றாவது ஆள் அறியாமல் பூட்டி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்னும் நம் சமுதாயத்தில் இருக்கிறது. உடல் குறைபாடை போலத்தான் அதுவும் என்பதை யாருமே ஏற்றுக் கொள்வதில்லை. சீஷோபெர்னியா பாதித்தவர்களை குடும்பம் மூன்றாம் நபர் அறியாமல் பொத்தி பாதுகாக்க நினைக்கிறது. அதனால் பல கஷ்டங்களை எதிர்கொள்கிறது. அந்தக் கஷ்டங்களை வேதனைகளை வேறு வேறு யாரிடமும் காட்ட முடியாமல் அந்த நோயாளியின் மீது காட்டும் அவலமும் நடைபெறுகிறது. ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு மீனாட்சியின் பெற்றோர் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்க துவங்கினார்கள். இந்த சமயத்தில், திடீரென வீட்டில் இருந்து கிளம்பி அருகில் இருக்கும் கடைகளுக்கு மீனாட்சி செல்வார். அங்கே போய் உட்காருவார். ஒரு ஆண் அப்படி போகும்போது பெரிய பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் ஒரு பெண் அப்படி போய் உட்காருவது சமுதாயத்தில் கேலி பொருளானது. மாத்திரைகளின் வீரியம் அவரை தூங்க வைத்துக் கொண்டே இருக்கும். மீனாட்சியின் பெற்றோரும் வயது முதிர்வின் காரணமாகவும், இவ வீட்டுக்குள்ளேயே இருந்தா போதும் என்ற நிலைப்பாட்டின் காரணமாகவும், தூங்கிட்டே இருந்தா கூட போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்கள். மீனாட்சி நன்றாக சாப்பிடுவார். மாத்திரை போட்டுக் கொண்டு நன்றாக தூங்குவார். இதனால் உடல் பருமன் அதிகமாகிக் கொண்டே போனது. உடல் பொலிவு இழந்தது. மீனாட்சியின் தாயாரால் ஓரளவிற்கு தான் அவருக்கு சிருட்சைகள் செய்ய முடிந்தது. சில வருடங்களில் மீனாட்சியின் தந்தையார் காலமானார். அவரது தாய் மட்டும், நானும் போயிட்டா இவ என்ன ஆவா? என்கிற மனநிலையில் வைராக்கியமாக தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஏழு எட்டு வருடங்களாக நான் மதுரைக்கே வரவில்லை. மிகவும் ஆச்சரியமாக தந்தை அழைத்தார். இந்த வருஷம் மண்டகப்படி நம்ம பங்காளிகள் செய்ய வேண்டியது. ஏற்பாடுகள் எல்லாம் நிறைய இருக்கிறது, நிச்சயம் குடும்பத்தோட வந்துவிடு என்றார். வந்து இறங்கிய நாள் மீனாட்சி பட்டாபிஷேகம். ரெண்டு நாள் கழிச்சு தேரோட்டம். நம்ம கீழ சித்திர வீதி,மேல சித்திர வீதி ஆட்கள் எல்லாம் இருந்தா இந்த தடவை வடம் பிடிப்போம் என்று பேசிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில்தான், என்னப்பா இப்படி ஆகிப்போச்சு என்ற குரல் கேட்டது. மீனாட்சி இறந்துவிட்டார் என்று தகவல் சொன்னார்கள். உடனடியாக அவர்கள் வீட்டிற்கு போனோம். அவரது தாயார் அழுவதற்கு கூட சக்தியற்று சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். மீனாட்சியில் முகத்தைப் பார்த்தேன். சிவன் கோவில் கருவறை சுடர் போல ஒரு காலத்தில் ஒளிந்த அந்த கண்கள், எந்த ஜீவனும் இல்லாமல், பீளையோடு நிலைகுத்தி இருந்தது. கனத்த மனதோடு கண்களை மூடிய போது, பக்கத்து வீட்டு டிவியில் லோக்கல் கேபிள் சேனலில் மீனாட்சி பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

குட்ட பெரியப்பா

எங்கள் செட் பங்காளி பையன்களால் குட்ட பெரியப்பா என்றும், சூப்பர் சீனியர் பங்காளிகளால் பொடி மட்ட என்றும், கட்சிக்காரர்களால் வதிலை அண்ணாத்துரை என்றும் அழைக்கப்பட்டவர் என்னுடைய பெரியப்பா. அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் மிகவும் பிரபலமாக இருந்த ராஜா பிரஸ்ஸில் ஆல் இன் ஆலாக இருந்தவர். அப்போது தனித்தனியாக இருக்கும் எழுத்துக்களை கோர்த்து, பிரிண்டிங்கிற்கான மேட்டரை உருவாக்குவார் கம்பாசிட்டர். அதை ப்ரூப் பார்த்த பின்னர் அச்சடிக்க துவங்குவார்கள். விசேஷ பத்திரிகைகள், நோட்டீஸ் என எதுவாக இருந்தாலும், மேட்டரை தெளிவாக ரெடி பண்ணுவதில் பெரியப்பா கில்லாடி‌. எங்கே ஒற்று வர வேண்டும், ன, ண எங்கே வரவேண்டும் தமிழ் ஆண்டு, அவரவர் ஜாதிக்கு ஏற்ப போட வேண்டிய வாசகங்கள், தாய்மாமன், பெரியப்பா, சித்தப்பாமார் புரோட்டோகால்கள் என எல்லாவற்றையும் சரிபார்த்து கொடுப்பார். கட்சி நோட்டீஸ்கள் அடிக்கும் போதும், மாவட்டம், ஒன்றியம், கிளை பிரதிநிதி வரை சரியான புரோட்டோ கால் இருக்கிறதா என்று சரி பார்த்து பிழை திருத்தி கொடுப்பார். பேரை முன்னாள் போடவில்லை என்பதால் நின்று போன கல்யாணங்களும் வெட்டுக்குத்து வரை போன அரசியல் கட்சி கூட்டங்களும் எங்கள் ஏரியாவில் மிக அதிகம். எனவே எதற்கும் அவரிடம் ஒருமுறை சரிபார்த்து விடுவோம் என்று அவர் ஒப்புதல் அளித்த பின்னால் தான் அச்சுக்கே போவார்கள். நான் ஆறாம் வகுப்பிற்கு சென்றபோது, தெருவில் இருந்த அண்ணன் ஒருவரின் பழைய புத்தகங்களை தந்தை வாங்கி கொடுத்தார். புது புத்தகம் தான் இல்லை. பைண்டிங் ஆவது பண்ணிக் கொடுங்கள் அட்டை கூட இல்லாமல், அழுக்காக இருக்கிறது என்றேன். ராஜா பிரஸ்ல உங்க பெரியப்பா இருப்பாரு. பைண்டிங் எல்லாம் வேணாம். ஏதாவது ஒரு அட்டையை வைச்சு டொய்ன் நூல் போட்டு தைச்சு கொடுக்க சொல்லு என்று அனுப்பினார். புத்தகங்களை எடுத்துக்கொண்டு அவரை பார்த்தேன். நான்கரை அடி உயரம். சற்று பருமனான உருவம், மாநிறம். எப்போதும் அரை கை வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. வேட்டி இடுப்பு மடிப்பில் அவரது ஜீவ சக்தியான ஒரு பொடி மட்டை. எழுதும் பொழுதோ அல்லது ப்ரூப் பார்க்க துவங்கும் போதோ அந்த பொடி மட்டையை எடுப்பார். வலது கை பெரு விரலாலும் ஆட்காட்டி விரலாலும் ஒரு சிட்டிகை எடுத்து, இடது கை ஆள்காட்டி விரலால் இடது மூக்கை மூடிக்கொண்டு, வலது மூக்கில் பொடியை சர் என்று இழுப்பார். அடுத்த உடனே அடுத்த சிட்டிகை எடுத்து, வலது கை நடு விரலால் வலது மூக்கை மூடிக்கொண்டு, இடது முக்கால் பொடியை ஒரு இழு இழுப்பார். பத்மா சுப்ரமணியம் அவர்கள் சிருங்கார ரசம் காட்ட மூக்குத்தியை சுற்றி ஒரு அடவு காட்டுவார். அதற்கு இணையாக வெகு நளினமாக மூக்குப்பொடி போடுவார் பெரியப்பா. விவரம் சொன்னதும், ரோடு தாண்டி, டி ஏ எஸ் ரத்தினம் பட்டணம் பொடி கடை இருக்கும் அங்கே என் பெயரைச் சொல்லி பொடி வாங்கிட்டு வா என்றார். வாங்கி வருவதற்குள், ஒரு கெட்டி அட்டையை வைத்து டொய்ன் நூலால் அழகாக தைத்திருந்தார். கூடுதலாக ப்ரஸ்ஸில் மூன்று பக்கங்களிலும் அழகாக வெட்டி வைத்திருந்தார். அந்த அழுக்கெல்லாம் போய் புது புத்தகங்கள் போல இருந்தது. சந்தோசமாக வாங்கிக் கொண்டேன். காசு என இழுத்தேன். போடா போடா என்று விரட்டிவிட்டார். அதன் பின் அந்த வழியாக மேல்நிலை பள்ளிக்கு போகும் போது, அவ்வப்போது அவருக்கு பொடி வேண்டுமா என்று கேட்டு வாங்கி கொடுக்க தொடங்கினேன். எங்கள் இருவருக்கும் ஒரு நட்பு மலரத் துவங்கியது. அந்த ப்ரஸ்ஸில் ஏராளமான வேஸ்ட் பேப்பர்கள் வரும். ப்ரூப் பார்க்க எடுத்த பேப்பர்கள் நிறைய இருக்கும். அதில் மறுபக்கம் அச்சிட மாட்டார்கள். அதையெல்லாம் சேர்த்து, ஏதாவது கல்யாண பத்திரிக்கை ப்ரூப் எடுத்த அட்டையை போட்டு,தைத்து ஒரு நோட்டு போல தருவார். ரஃப் நோட் என்று அதை பெருமையாக எடுத்து எழுதுவேன். ஒருமுறை பொடிக்கடைக்கு சென்றபோது, கடைக்காரர், நீ தெற்கு தெரு பையன் தானே? பிரசிடெண்ட் வீட்டுல இந்த டப்பாவை கொடுத்துவிடு என்றார். அவருக்கு ஸ்பெஷல் பொடி. நேத்தே தீர்ந்து போச்சு. ‌ இப்பதான் திண்டுக்கல்ல இருந்து வந்துச்சு. அதை சொல்லிக் கொடு என்றார். வெள்ளியில் செய்யப்பட்ட அழகான ஒரு சிறிய பொடிடப்பா. எங்கள் தெருவில் இருந்தவர்கள் பிரசிடெண்ட் அம்மா என்ன வேலை சொன்னாலும் ஓடி செய்வோம். காரணம் அப்போது அவர்கள் வீட்டில் மட்டும் இருந்த கலர் டிவி. கடைக்கு போகிறவர்களை வீட்டில் உட்கார்ந்து பார்க்க அனுமதிப்பார்கள். அதனால் மிக மகிழ்ச்சியுடன், அதை வாங்கிக் கொண்டு போய் கொடுத்தேன். அப்போது அவர்கள் செட் ஆட்கள் மட்டும் தான் பொடி போட்டுக் கொண்டிருந்தார்கள். என் சித்தப்பா செட்டெல்லாம் பீடி, சிகரெட் என மாறிவிட்டார்கள். அடுத்த முறை பெரியப்பாவை பார்த்தபோது, உங்க வாத்தியார் சொன்னார்டா நல்லா படிக்கிறியாமே என்றார். அசடு வழிய சிரித்தேன். நல்லா படிடா. உனக்கு ரப்பர் ஸ்டாம்ப் நான் தான் அடிச்சு தருவேன். நம்ம பங்காளிகள்ல யாருமே விசிட்டிங் கார்டு எல்லாம் அடிக்கல. உனக்கு அதுவும் நான் அடிச்சு தருவேன் என்றார். உடனே நானும், பெரியப்பா, நான் வேலைக்கு போன உடனே, உங்களுக்கு ப்ரெசிடெண்ட் வச்சிருக்கிற மாதிரி ஒரு வெள்ளி மூக்குப்பொடி டப்பா வாங்கி கொடுக்கிறேன் என்றேன். வருடங்கள் கடந்தன. கல்லூரி விடுதியிலும் சேர்ந்து விட்டேன். ஒருமுறை கல்லூரி விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது, பிரஸ் பக்கம் சென்றால் அவர் இல்லை. போன வாரமே அவர் இறந்து போயிட்டாரே என்றார்கள். அதிர்ச்சி. அப்போது போன் போன்ற வசதி இல்லை என்றாலும் வீட்டிற்கு வந்தவுடன் கூட இதை யாராவது சொல்லி இருக்கலாமே என எனக்கு ஒரு ஆதங்கம். அவருடன் பணியாற்றிய பிரஸ் ஊழியரிடம் பெரியப்பாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன். வயசு ஆகுது இல்ல. சாப்பாடும் பல வருஷமாவே அவருக்கு சரி இல்லை. அவ்வளவுதான் உடம்பு தாங்கும் என்றார். பெரியப்பா பிறந்த சில மாதங்களிலேயே அவரது தாயார் இறந்துவிட, சரியான சாப்பாடு இல்லாமலேயே வளர்ந்தவர். படிப்பில் திறமைசாலி. அவர் வளர்ந்து வரும் நேரத்தில் அவர் தந்தையும் இறந்துவிட, கட்டிக் கொடுத்த அவரது மூத்த சகோதரிகள் வீட்டு பக்கமும் ஒதுங்க முடியாமல், கிட்டத்தட்ட அனாதை போலவே வாழ்ந்திருக்கிறார். அவருடன் படித்த நண்பருடைய பிரஸ் அது. அங்கேயே எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டு, இரவும் அங்கேயே தூங்குவார். காலை எழுந்ததும் எந்த பம்ப்செட்டில் தண்ணீர் வருகிறது என்று பார்த்து குளித்துவிட்டு அவர் வேட்டி சட்டையை அங்கே காய போட்டு விட்டு வருவார். வரும் வழியில் இருக்கும் நடைபாதை கடைகளில் ஏதாவது சாப்பாடு. பிரஸ் வந்த பின்னர் ஏதாவது வடை, டீ சாப்பிட்டு ஒட்டி விடுவார். இரவும் ஏதாவது ஒரு நடைபாதை கடை. இப்படியே 40 வருடங்களுக்கும் மேலாக ஓட்டியிருக்கிறார். பெற்றோர்களும் இல்லாமல், வசதி வாய்ப்பும் இல்லாமல், குட்டையாகவும் இருந்ததால் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய அவருக்கு வாய்ப்பு அமையவில்லை. அவரது நண்பர் மேலும் சொன்னார், எங்க பங்காளிகளிலேயே இந்த பையனத்தான் எனக்கு பிடிக்கும், எனக்கு வெள்ளி மூக்குப்பொடி டப்பா வாங்கி தரேன் என்று சொன்னான் என்று சொல்லி சிரித்தாராம். யாராவது கூப்பிட்டு விசேஷ நாட்களில் ஒரு வேளையாவது சாப்பாடு போடுவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாராம். எனக்கு அப்படி எதுவுமே தோணல, அந்த அளவுக்கு வீட்டுச் சூழலும் எனக்கு இல்ல என்றேன். நீ சின்ன பையன். ஆனா உங்க பங்காளிக யாராவது அவரை விசாரிக்கவாவது செஞ்சிருக்கலாம். 40- 50 வருஷமா எத்தனையோ பேருக்கு கல்யாண பத்திரிக்கை அடிச்சு கொடுத்தவரு. அவருக்கு கல்யாணமும் ஆகல. ஆயிரக்கணக்குல கருமாதி பத்திரிகை அடிச்சு கொடுத்தவரு. அந்தக் கருமாதி பத்திரிகை அடிக்கவும் அவருக்கு ஆள் இல்லாம போயிருச்சு. அனாத பொணம் மாதிரி மாதிரி தூக்கி போட்டு போயிட்டாங்க. ஒண்ணுமே நடக்காத ஒருத்தனுக்கு ஒரு கருமாதி பத்திரிக்கையாவது அடிச்சு அன்னைக்கு நாலு பேருக்கு சோறு போட்டு இருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டார். இன்று பொடிக்கடைகள் எல்லாம் மிகவும் குறைந்து விட்டன. அந்த பழக்கம் தற்போது இளைய தலைமுறை இடம் இல்லாததால், பழைய ஆட்கள் மட்டுமே அந்த கடைகளுக்கு வருகிறார்கள். அது மாதிரி கடைகளை பார்க்கும் போதெல்லாம், எனக்கு பெரியப்பாவின் ஞாபகம் வந்து மனதை ரணமாக்கும். யாருக்கு எது தேவை என்பதை உணரும் ஒரு நுட்பமான மனம் தேவை. அந்த நுட்பமான மனம் இருக்கிறவர்கள், வாய்ப்பிருக்கும்போதே பிறரை மகிழ்விக்கிறார்கள். அது இல்லாதவர்கள் அதை உணரும் நாளில் வருத்தம் மட்டுமே அடைய முடிகிறது.

April 19, 2025

சுந்தர் கடை

நான் எதிர்கொண்ட அதிர்ச்சிகளிலேயே முக்கியமானது சுந்தர், கார்த்திகாவை திருமணம் செய்து கொள்ள ஊரிலேயே வசதியான அவர்கள் வீட்டார் கேட்டு வந்தபோது மறுத்தது தான். அமைதியானவன்,தெளிவானவன் என்று பெயர் எடுத்தவன். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், எங்கள் செட்டில் எல்லோரும் பிளஸ் ஒன்றிற்கு மருத்துவம், பொறியியல், அக்ரி என சேர வேண்டும் என்று அதற்கேற்ற குரூப்புகள் கேட்டு முட்டி மோதிக் கொண்டிருந்த போது, எனக்கு எக்கனாமிக்ஸ் குரூப் தான் வேண்டும். எனக்கு மேத்ஸ் சரியாக வராது, பயாலஜியும் வேண்டாம். படம் வரையவும் வராது, அவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் படிக்க வேண்டாம் என்று சொல்லி எக்கனாமிக்ஸ் குரூப்பில் சேர்ந்தான். பிளஸ் டூ முடித்ததும் அவனுடன் படித்த எல்லோரும் மதுரையின் முக்கிய கல்லூரிகளில் அட்மிஷனுக்கு அலைந்து கொண்டிருந்தபோது, ஊருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு கல்லூரியில் பி காம் சேர்ந்தான். என்னுடைய எய்ம், குரூப் 2 அல்லது குரூப் 4. அதற்காக மட்டும் தான் படிப்பேன் என்று, கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்து படிக்க ஆரம்பித்தான். படிப்பாளி என்று சொல்லிவிட முடியாது தான். கல்லூரி முடிந்த உடனேயே அவன் செய்த செயல் எல்லோருக்கும் ஆச்சரியம். ஊரில் பஸ் ஸ்டாண்டுக்கு அருகே இருந்த ஒரு காம்ப்ளக்ஸின் தரைத்தளத்தில் பத்துக்கு எட்டு சைஸில் ஒரு கடையை பிடித்தான். பெரிய பிராண்ட் இல்லாத வேஷ்டிகள், துண்டுகள், சட்டைகள், சேலைகள், உள்ளாடைகள் என வாங்கி வைத்தான். காலையில் ஐந்தரை மணிக்கு கடையை திறந்து வைத்து விடுவான். அவனது காரணம், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் இறங்கி தான் சுற்றியுள்ள எல்லா கிராமங்களுக்கும் செல்கிறார்கள். குழந்தை பிறப்பு, திருவிழாக்கள், தீச்சட்டி, பிற விசேஷங்கள், துக்க நிகழ்வுக்கு வருபவர்கள் மலிவான விலையில் தான் எதிர்பார்ப்பார்கள். பெரும்பாலும் ஒரு முறைக்கு செய்ய வேண்டியது. எனவே இந்தப் பக்கம் தேடுவார்கள்‌. இப்படி ஒரு கடை இருக்கிறது என்றால் காலப்போக்கில் தொடர்ந்து எல்லோரும் வருவார்கள் என்றான். கிட்டத்தட்ட ஒரு வருடம் பெரிய ஓட்டம் இல்லை. ஆனால் அவன், அங்கே போனால் காலை ஐந்தரையிலிருந்து இரவு வரை இந்த வகை துணிகள் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருந்தான். கடையிலும் எந்நேரமும் படித்துக் கொண்டே தான் இருப்பான். எல்லா தேர்வுகளையும் போய் எழுதி விட்டு வருவான். இந்த சூழலில் தான் எங்கள் செட்டில் எல்லோரும் சைட் அடித்துக் கொண்டிருந்த, ”தெற்குத் தெரு ஷோபனா” என்கிற பட்டப்பெயர் கொண்ட கார்த்திகாவிற்கு திருமணம் செய்ய அவர்கள் வீட்டார் முடிவெடுத்தார்கள். இது நம்ம ஆளு படம் வந்திருந்த நேரம், அப்போது நாங்கள் டியூஷன் படிக்கும் தெருவில் ஒரு கோலாட்டம் நடந்தது. அதில் பச்சை கலர் பாவாடை சட்டை, சிகப்பு கலர் தாவணி அணிந்து ஒல்லியாக, நல்ல சிவப்பாக கிட்டத்தட்ட ஷோபனா முகச்சாடையில் ஆடிய கார்த்திகாவை பார்த்து எல்லோரும் மனதை பறி கொடுத்து, அந்தப் பெயரை சூட்டியிருந்தார்கள். அப்படிப்பட்ட பெண்ணை, சுந்தருக்கு கேட்டு வந்தபோது அவன் மறுத்து விட்டான். பொதுவாக, எங்கள் ஏரியா பெரிய திருமணங்களில், ஒரு லாட்ஜில் பல ரூம்களைப் பிடித்து வைத்து, ஒரு ரூமில் ஃபுல்லாக சரக்கு பாட்டில்கள், இன்னும் இரண்டு ரூம்களில் சாப்பாடு என அரேஞ்ச் செய்வார்கள். சரக்கு போடுவதற்கு சில பல ரூம்கள். இந்த நிர்வாகப் பொறுப்பை திருமணம் செய்பவர்கள் நம்பிக்கையானவர்களிடம் கொடுப்பார்கள். கார்த்திகா திருமணத்திற்கு, எல்லா செட்டிற்கும் அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஃபுல் பாட்டில்களை கொடுக்கும் பொறுப்பில் இருந்தவன் சுந்தர். இரவு கடந்து எல்லோரும் போதையில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவனிடம் கேட்டேன். ஏண்டா என்று. அவன் சொன்னான். என்னுடைய பெர்சனாலிட்டிக்கு, எங்கள் வீட்டு வசதிக்கு, இனிமேல் எனக்கு கிடைக்கும் வேலைக்கு என எந்த விதத்திலும் கார்த்திகா மேட்ச் கிடையாது. அவள் வாழ வேண்டியது வேறு சூழல். கழுகிற்கு தேவை பரந்த வானம். கோழிகளை வேண்டுமானால் என் வீட்டில் வளர்க்கலாம் என்று. பின்னர் அவனுக்கு திருமணம் நடைபெற்றது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் போராடிய சுந்தர் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றான். எல்லோரும் விஏஓ போஸ்டிங்கிற்கு போராடிக் கொண்டிருந்தபோது, எந்தவித மேல் வரும்படியும் வராத ஒரு டிபார்ட்மெண்டை தேர்வு செய்தான். அவனுடைய மச்சினன் என்னிடம் இது குறித்து புலம்பினான். அப்போது சொன்னேன் அவன் 300 பவுன் நகை,3 வீடு, 30 ஏக்கர் நிலத்தோடு கார்த்திகா வந்த போதே மறுத்தவன். உன் தங்கையை, உங்கள் குடும்பத்தை எப்படி நடத்துகிறான் என்பதில் குறை இருந்தால் சொல்லுங்கள் நான் பேசுகிறேன் என்றேன். எனக்குத் தெரியும் எல்லோருக்கும் பெய்யும் மழை போல அவன் எல்லோருக்கும் கொடுக்கும் சமமான மதிப்பு பற்றி. அடுத்த சில வருடங்களில் சுந்தருக்கு ஊரில் ஒரு மதிப்பு ஏற்பட்டிருந்தது. காலை ஐந்தரை மணிக்கு கடையை திறந்து விடுவான். கடைக்கு இரண்டு பேரை நியமித்திருந்தான். அவர்கள் 9 மணிக்கு வந்ததும் இவன் அலுவலகத்திற்கு கிளம்பி விடுவான். சாயங்காலம் அலுவலகத்தில் இருந்து வந்து அவர்களை ஆறு மணிக்கு அனுப்பி விடுவான். அதன் பின்னர் அவன் கடையை பார்த்துக்கொள்வான். வரை இருப்பான். இடையில் வீட்டிற்குப் போய் வர, துணைக்கு என அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் வசதி இல்லாத பையன்கள் யாரையாவது மாலையில் பார்ட் டைமாக வேலைக்கு வைத்திருப்பான். சுந்தர் கடை என்பது எப்போது போனாலும் சரியான விலையில் நமக்குத் தேவையான அவசர துணிகள் கிடைக்கும் என்கிற பெயரை பெற்றது. அதுபோக அவன் செட்டில் படித்து வெளியூர் சென்று இருந்தவர்கள் மற்றும் உறவுக்காரர்கள் எல்லோருக்கும் அது ஒரு மையமாக விளங்கியது. பொருட்களை கொடுத்து விடுவது, பேருந்து மூலம் வரும் பொருள்களை வாங்கி வைப்பது, அவ்வளவு ஏன் ஜாதகங்களைக் கொண்டு வந்து கொடுத்து இன்னொருவர் பெற்றுக் கொள்வது என சுந்தர் கடை என்பது எல்லோருக்கும் ஒரு அத்தியாவசிய மையமாக மாறியது. அதைவிட, மாலை வேலைகளில் எங்கள் செட்டு ஆட்கள், உறவினர்கள் எல்லோரும் தங்கள் மனக்குமுறலை கொட்டவும், டென்ஷனாக இருக்கும்போது வந்து உட்காரும் இடமாகவும் மாறியது. சொல்வதை அமைதியாக எந்த முக, உடல் சலனமும் இன்றி கேட்டுக் கொள்வான்.எந்தக் கருத்தும் சொல்ல மாட்டான். அதை யாரிடமும் பகிரவும் மாட்டான். கிளம்பும்போது எல்லாம் சரியாயிடும் பார்த்துக்கலாம் என்று மட்டும் சொல்லி அனுப்புவான். எனவே சுந்தர் கடையில் மாலை வேலைகளில் வந்து உட்காருபவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது. இந்த முறை ஊருக்கு சென்றபோது, சுந்தரை பார்த்துவிட்டு பஸ் ஏறலாம் என்று அவன் கடை பக்கம் போனேன். அங்கே கார்த்திகாவின் கணவர் உட்கார்ந்து, சுந்தரிடம் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தார்.

January 16, 2025

இதயத்தை திருடாதே

"ஓடிப் போயிடலாமா' என்னும் வார்த்தையை தமிழ் கூறும் நல் உலகிற்கு தந்த படம். இந்தப் படத்தின் நாயகி கிரிஜாவின் தந்தை ஒரு இன்கம்டாக்ஸ் அதிகாரி. இதயத்தை திருடாதே பாடல்கள் A சைடிலும், கரகாட்டக்காரன் பாடல்கள் B சைடிலும் பதிந்த கேசட்டுகள் கணக்கில்லாமல் விற்பனை ஆகின. 1989 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து ஏகப்பட்ட ஹிட் படங்கள். வருஷம் 16, ராஜாதி ராஜா அபூர்வ சகோதரர்கள், கரகாட்டக்காரன் என. அபூர்வ சகோதரர்கள் கரகாட்டக்காரன் படங்கள் இரண்டும் திரையரங்கில் இருந்தபோது இந்த படமும் வந்தது. இந்தப் படத்திற்கான விளம்பரத்தை மணிரத்னம் வித்தியாசமாக செய்தார். இரண்டு முகங்கள் மட்டும் இருக்கும். இதயத்தை திருடாதே, இளையராஜா அவ்வளவுதான். யார் அந்த முகங்கள் என்று ரிலீஸ் ஆகும் நாள் வரை காட்டவில்லை. நாயகன்,அக்னி நட்சத்திரம் எடுத்த டைரக்டர் என்று கல்லூரி இளைஞர்கள் அவர்களாகவே குவிந்தார்கள். பார்த்தவர்கள் இந்த படத்தின் விஷுவலில் மயங்கி ஹாஸ்டலில் இருந்த எல்லோரையும் படம் பார்க்க விரட்டி விட்டார்கள். ஒவ்வொரு சீனையும் சிலாகித்து சொல்வார்கள். நாகார்ஜுனா தண்ணீரிலிருந்து இறங்கி வரும்போது ஷூ காலை அழுத்த அதிலிருந்து வெளிவரும் தண்ணீர், எந்நேரமும் பிரேமில் இருக்கும் பனிப்புகை‌. ஓ பாப்பா லாலி, ஓம் நமஹா, காவியம் பாடவா தென்றலே பாடல்கள்... எத்தனை எத்தனை நினைவுகளை இந்த படம் அள்ளிக் கொடுத்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நிறைய நாகார்ஜூனா படங்கள் டப்‌ ஆகி வந்தன. சில விஷயங்களை அந்தந்த காலத்தில் அனுபவித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பார்கள். அதுபோல மேல்நிலைப்பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது இந்த படத்தை நல்ல சவுண்ட் சிஸ்டம் உடைய குளிர்சாதன அரங்கில் அப்போது பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ரட்சகன்

கே டி குஞ்சுமோன், கேரளாவில் விநியோகஸ்தராகவும் சில படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்தவர். அவர் தமிழில் பவித்ரனை இயக்குநராக வைத்து வசந்தகால பறவைகள் என்னும் படத்தை எடுத்தார். அந்தப் படத்தில் ஷங்கர் இணை இயக்குனர். படம் வெற்றி அதற்கடுத்து சூரியன் படத்தை எடுத்தார் அது பிரம்மாண்ட வெற்றி. அதன் பின் குஞ்சுமோனுக்கும் பவித்ரனுக்கும் சண்டை வர, குஞ்சுமோன் ஷங்கரை வைத்து ஜென்டில்மேன் எடுத்தார். பவித்ரன் விஷாலின் அப்பா ஜி கே ரெட்டியுடன் இணைந்து சரத்குமாரை வைத்து ஐ லவ் இந்தியா எடுத்தார். ஜென்டில்மேனின் அபார வெற்றிக்குப் பிறகு ஷங்கரை வைத்து காதலன் எடுத்தார் குஞ்சுமோன். அதுவும் பிரம்மாண்ட வெற்றி. அதே சமயத்தில் கலக்கப்போவது ராமரால் தற்போது புகழடைந்த ஆத்தாடி என்ன உடம்பி பாடல் இடம் பெற்ற சிந்துநதிப் பூ படத்தையும் தயாரித்தார். காதலனின் வெற்றிக்குப் பிறகு குஞ்சுமோனுக்கும் ஷங்கருக்கும் சண்டை. ஷங்கர் இந்தியன் படத்திற்கு போய்விட்டார். குஞ்சுமோன் என்ன செய்வது என்று யோசித்தார். அவருக்கு ஜென்டில்மேன் படத்திலிருந்து தெரிந்துவிட்டது. பிரம்மாண்டம் என்பது ஒரு பெரிய விசிட்டிங் கார்டு. அந்த பிரம்மாண்டத்தை அப்போதைய சூழ்நிலையில் தரக்கூடிய ஒரே ஆள் ஏ ஆர் ரகுமான் தான். அப்போது ஏ ஆர் ரகுமான் ஒரு படத்தில் கையெழுத்து இட்டார் என்றாலே அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் எகிறிவிடும். தயாரிப்பாளராக ஏ ஆர் ரகுமானிடம் மிகுந்த பழக்கம் இருந்தாலும், அவரை சம்மதிக்க வைக்க ஒரு இயக்குநர் தேவைப்பட்டார். அப்போது ஏ ஆர் ரகுமானின் நண்பர் கதிர் கிடைத்தார். காதல் தேசம் உருவானது. அந்தப் படம் வெளியானபோது முதல் சில நாட்கள் நல்ல ரெஸ்பான்ஸ் இல்லை. எனவே எடிட்டர் லெனினை வைத்து காட்சிகளை மறுசீரமைப்பு தியேட்டர்களுக்கு கொடுத்து படம் பிக்கப் ஆனது. அதோடு கதிருடனும் சண்டை. அடுத்து அவருக்கு கிடைத்த ரகுமானின் நண்பர் பிரவீன் காந்தி. எனவே அவரை இயக்குனர் ஆக்கி ரகுமானை இசையமைக்க வைத்து ரட்சகன் படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது படத்திற்கு இன்னும் ஹைப் கூட்டுவதற்காக பெரிய ஹீரோ தேடினார். (காதல் தேசத்தில் அப்பாஸ் அறிமுகம், வினித் அதற்கு முன் ஆவாரம்பூ படத்தில் ஒரு வெள்ளந்தி கேரக்டரில் நடித்தவர் தபுவுக்கு கிளாமர் அப்பீல் கிடையாது). தெலுங்கில் இருந்து நாகார்ஜுனாவை பிடித்தார். மிஸ் இந்தியா ஐஸ்வர்யா ராய் மணிரத்தினத்தின் இருவர் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென்னை இந்தப் படத்திற்குப் பிடித்தார். உடன் வடிவேலுவும் கிடைத்தார். அப்போது இந்த படத்தின் பட்ஜெட் 15 கோடி. அது பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம். ஒரு வேற்றுமொழி நாயகர் புது இயக்குனர் இவ்வளவு செலவா என்று. அந்த சமயத்தில் எங்கள் உறவில் ஒரு அண்ணன் இருந்தார். எனது அத்தை அவருக்கு பெண் கொடுக்க மிகவும் யோசித்தார். ஆள் பார்க்க சுமாராக இருக்கிறார் என்பதுதான் ஒரே காரணம். அப்போது, நாங்கள் எங்களுக்குள் கிண்டல் அடிப்போம். ஆமா 15 கோடி போட்டு படம் எடுக்க போகுது இந்த அத்தை. ஹீரோ தேடுது என்று. படத்தின் பாடல்கள் வெளியானதும், இன்னும் ஹைப் ஏறியது. சோனியா சோனியா பாடலும் சரி சந்திரனை தொட்டது யார் மெலடியும் சரி இன்ஸ்டன்ட் ஹிட். அப்போது இப்போது போல சமூக ஊடகங்கள் இல்லாத காரணத்தால் ஸ்டில்லும் போட்டோவும் மட்டுமே ஒரு படத்தின் கதையை கடத்தும் காரணிகளாக இருந்தது. ஸ்டில்லில் நாகார்ஜுனாவும் எஸ் பி பாலசுப்ரமணியம் ஒரு சின்ன வீடு ஸ்கூட்டரில் உட்கார்ந்து இருப்பார்கள். படத்தின் டைட்டில் ரட்சகன். துப்பாக்கி சிம்பல். எனவே, இந்தப் படத்தில் நாட்டிற்கு ஒரு பெரிய ஆபத்து. அதைக் காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹீரோவின் கதை என இளைஞர்கள் தங்கள் மனதில் ஃபிக்ஸ் செய்து கொண்டார்கள். படம் வெளியானது. தமிழ்நாட்டில் ஒரு வேற்று மொழி நடிகர் கதாநாயகனாக தமிழ் படத்தில் நடித்து கிடைத்த மிகப்பெரிய முதல் ஓப்பனிங் அது. மதுரை குரு தியேட்டரில் காலை காட்சிக்கு வந்திருந்தவர்கள் டிக்கெட் கிடைக்காமல் மதிய காட்சி வரை அங்கேயே நின்றது பெரிய ஆச்சரியம். அது ஹீரோவுக்காக அல்ல இயக்குனருக்காக அல்ல தயாரிப்பாளருக்காகவும் அவரது ப்ரொடக்ஷன் டிசைனுக்காகவும். கிட்டத்தட்ட காதல் தேசமும் அப்படித்தான். இயக்குனர் கதிர் கூட அதற்கு முன் உழவன் என்னும் தோல்வி படம் கொடுத்தவர். ஆனால் படம் ரசிகர்களை ஏமாற்றியது. ஒரு தனிமனிதனின் கோபம். அவன் குடும்பக்கதை என்னும் அளவில் அது சுருங்கி போனது. படம் முடித்து வெளியே வந்த மதுரை ரசிகர் ஒருவர், பூராத்தையும் போட்டு உடைக்கிறாங்கய்யா.. படம் முடிஞ்சதும் டயர் இருக்கான்னு கீழ தேடி பார்க்க வச்சுட்டாங்க என்றார். சூப்பர் ஹீரோ கதையாக இருந்திருந்தால் ஓடி இருக்கும்.

96 ஆம் ஆண்டு தீபாவளி

குருதிப்புனல் திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது, அதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் துரோகி. ஹிந்தியில், கோவிந்த் நிகலானி இயக்கிய துரோகால் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். துரோகி என்பது இந்த படத்திற்கு சரியான பெயர் தான். ஆனால் அப்போது கமல் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள், தங்களது பெயருக்கு முன்னால் படப் பெயர்களையும் போட்டுக் கொள்வார்கள், நற்பணி மன்றத்திற்கும் அந்த பெயரை வைப்பார்கள், பனியன்களிலும் அந்த படப் பெயரை அச்சிட்டு கொள்வார்கள். அவர்களுக்கு துரோகி என்ற டைட்டில் கேள்விப்பட்டதும் துரோகி கமல்ஹாசன் நற்பணி மன்றம், துரோகி குமார் என்றெல்லாம் எப்படி போட்டுக் கொள்வது என ராஜ்கமல் ஆபீசுக்கு பல கடிதங்களை எழுதினார்கள். அதனால் கமல்ஹாசன் படத்தலைப்பை குருதிப்புனல் என மாற்றினார். பி சி ஸ்ரீராம் இயக்கம் கமலஹாசனின் நண்பர் மகேஷ் இசை. இன்னொரு பக்கம் பாட்ஷா தந்த அதிரடியுடன் ரஜினிகாந்த், நாட்டாமை தந்த வெற்றியுடன் கே எஸ் ரவிக்குமார், இவர் தங்கள் படத்திற்கு இசையமைக்க மாட்டாரா என அப்போது எல்லோரும் ஏங்கிய ஏ ஆர் ரகுமான் என எதிரே வலுவான கூட்டணி. 95 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தான் பாட்ஷாவுடன் சதிலீலாவதி மோதியது. பல திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்தாலும் பாட்ஷா வெற்றியுடன் ஒப்பிடும்போது கமல் ரசிகர்களுக்கு மனக் குறை. இப்போதும் அந்தப் பக்கம் வலுவான கூட்டணி. பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது மணிரத்தினம் வீட்டில் குண்டு வெடித்ததை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசினார். அது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை கோபப்படுத்தியது. அமைச்சர்கள் ரஜினிகாந்தை எதிர்த்து அறிக்கை மேல் அறிக்கை விட்டார்கள். பாட்ஷா படத்தின் தயாரிப்பாளர் ஆரம் வீரப்பன் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். இந்த காரணங்களால் முத்து படத்தின் மேலான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது. முத்து படத்தின் பாடல்கள் வெளியாகின. ரஜினி ஸ்டைலாக வெள்ளை முழுக்கை சட்டையை மடித்து விட்டு சாட்டை கம்போடு வந்த கேசட்கள் விற்றுத் தீர்ந்தன. ஆமா நம்ம கேசட் எப்போ என்று கேட்டதற்கு பாடல்களே இல்லை என்ற பதில் வந்தது. அந்த சமயத்தில் விருதுநகரில் இருந்தோம். காலைக்காட்சி ராஜலட்சுமி தியேட்டரில் முத்து படம். ஒரே ஆரவாரம். படம் முடிந்ததும் அருகில் இருந்த கடைகளில் இரண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு நேராக அப்சரா தியேட்டரில் குருதிப்புனல். முதல் 10 நிமிடம் கத்தி விட்டு பிறகு படத்தில் ஆழ்ந்து போனோம். வீரம்னா என்னன்னு தெரியுமா? எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கும் உன் கண்ணுல கலாச்சார பலம் தெரியுது.. போன்ற வசனங்களை அசை போட்டுக் கொண்டே நடந்து சென்று மாலை காட்சி அமிர்தராஜ் தியேட்டரில் மக்களாட்சி. உண்மையில் எதிர்பார்க்காத ஒரு ட்ரீட் மக்களாட்சி தான். ஒவ்வொரு சீனையும் ரசித்துப் பார்த்தோம். அப்போதைய அரசியல் நிகழ்வுகளை நேரடியாகவும் சர்காசமாகவும் கலாய்த்து எடுத்து இருப்பார் செல்வமணி. அப்போது வைகோ திமுகவில் இருந்து வெளியேறி இருந்தார். அவரை கலாய்த்து சைதாப்பேட்டை கோவிந்தசாமி (சைகோ) என்னும் கேரக்டர், வால்டர் திருவாசகம் என சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்த நாள் காலை சுலோச்சனா தியேட்டரில் (இப்போது இடிக்கப்பட்டு விட்டது) சரத்குமாரின் ரகசிய போலீஸ். விஜய்யின் சந்திரலேகா திரைப்படமும் அப்போது வெளியாகி இருந்தது. குருதிப்புனலை இன்னொருமுறை பார்க்க வேண்டும் என்று அதற்கு போகவில்லை. கிடைத்த தீபாவளி காசு அவ்வளவுதான்.‌

91 ஆம் ஆண்டு பொங்கல் திரைப்படங்கள்

91 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெரைட்டியான படங்கள் வந்தன. நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துவிட்டேன். சிவாஜி அவர்களுடனும் நூறு படங்களுக்கு மேல் நடித்திருப்பேன். ஆனால் ஒரு படத்தில் கூட அவர் ஜோடியாக வரவில்லையே என ஜில் ஜில் ரமாமணி மனோரமா ஒரு பேட்டியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, சிவாஜியின் இணையாக நடிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு யாகவா முனிவரின் முக்கிய சீடரான தனபாலன் தயாரிப்பில் வெளியான படத்தில் கிடைத்தது. அந்தப் படம் ஞானப்பறவை‌. கமல்ஹாசன் பல பேட்டிகளில் தன் குரு என அடையாளப்படுத்திய அனந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலச்சந்தரிடம் உதவி இயக்குனர் ஆகவே இருந்தார். அவர் முதன் முதலில் இயக்கிய படம் சிகரம். எஸ்பிபி நாயகன் மற்றும் இசை. புது வசந்தம் என்கிற மாபெரும் வெற்றி படத்திற்கு பின் விக்ரமன் இயக்கிய திரைப்படம் பெரும்புள்ளி. ஏராளமான பெரிய வெற்றி படங்களின் விநியோகத்தராக இருந்த கே ஆர் இயக்குனர் அவதாரம் எடுத்த ஈரமான ரோஜாவே. நாற்பது படங்களில் நான் நடித்த பிறகு கிடைத்த ஆக்சன் ஹீரோ இமேஜ் உனக்கு முதல் படத்திலிருந்து ரஜினி, புதிய பாதை பார்த்து பார்த்திபனை பாராட்டி இருந்தார். அடுத்து ஆக்சன் படங்களில் நடிக்கச் சொன்னார். ஆனால் பார்த்திபன் பொண்டாட்டி தேவை என ஒரு சுமாரான படத்தை எடுத்தார். தோல்வி. அடுத்து கமர்சியல் இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் அவர் நடித்த படம் தையல்காரன். கார்த்திக் நடித்த கண் சிமிட்டும் நேரம் என்கிற தரமான திரில்லர் படத்தை கொடுத்த கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில் ஒரு பொம்மையை வைத்து எடுக்கப்பட்ட மிரட்டும் திரில்லர் படம் வா அருகில் வா. எப்போது மார்க்கெட்டிற்கு சென்றாலும் எதற்கும் இருக்கட்டும் என வாங்கும் அரை கிலோ உருளைக்கிழங்கு போல எல்லா பண்டிகைகளுக்கும் வரும் ராமராஜன் படம். அதுபோல வந்த படம் நாடு அதை நாடு. ஆர் சுந்தர்ராஜன் தன் வெற்றிப்பாதையில் இருந்து விலகி இருந்த நேரத்தில் முரளியை வைத்து இயக்கிய சாமி போட்ட முடிச்சு திரைப்படம். மலையூர் மம்பட்டியான் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதேபோல இன்னொரு தியாகராஜன் படம் தீச்சட்டி கோவிந்தன். கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு நடித்த கும்பக்கரை தங்கையா. கமல் குணா படத்திலும் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்திலும் பிசியாக இருந்த நேரம். அவர்கள் படம் எதுவும் வரவில்லை. எண்பதுகளில் மிக முக்கியமான கமர்சியல் இயக்குனர் ராஜசேகர். அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மதுரை. அந்த பொங்கலுக்கு, தர்மதுரை- கும்பக்கரை தங்கையா, தர்மதுரை- ஈரமான ரோஜாவே, கும்பக்கரை தங்கையா - ஈரமான ரோஜாவே என மூன்று செட்டு கேசட்டுகள் ஒவ்வொரு கேசட் சென்டர்களிலும் தலா 20 பதிந்து வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு ஓட்டம். இளையராஜா மூன்று படங்களுக்கும் அட்டகாச பாடல்களை கொடுத்திருந்தார். தர்மதுரையில் ஆண் என்ன பெண் என்ன அண்ணன் என்ன தம்பி என்ன என இரு தத்துவ பாடல்கள். சந்தைக்கு வந்த கிளி என்கிற துள்ளல் இசை பாடல். மாசி மாசம் ஆளான பொண்ணு என்கிற காதல் பாடல். கும்பக்கரை தங்கையாவில் அட்டகாசமான கிராமிய மெட்டுகள். ஈரமான ரோஜாவேயில் டீன் ஏஜ் மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கேட்டு காதல் வயப்படும்படியான பாடல்கள். தர்மதுரை ஆரம்ப நாளிலிருந்து மிகப்பெரும் கூட்டத்தோடு ஓடியது. ஈரமான ரோஜாவே மற்றும் வா அருகில் ஆகிய படங்கள் அடுத்து லாபத்தை கொடுத்தன. கும்பக்கரை தங்கையா முதலுக்கு மோசம் இல்லை. ஞானப்பறவை,சிகரம்,பெரும்புள்ளி,தையல்காரன், சாமி போட்ட முடிச்சு தோல்வியை சந்தித்தன. நாடு அதை நாடு லோ பட்ஜெட் என்பதால் தப்பித்தது. தீச்சட்டி கோவிந்தன் பி&சி சென்டர்களில் சுமாராக ஓடி தப்பித்தது. தர்மதுரை படம் நல்ல வசூலுடன் ஓடியது. இந்த சமயத்தில் ரஜினிகாந்த் நாட்டுக்கு ஒரு நல்லவன், தளபதி படங்களில் கமிட் ஆகி இருந்தார். அதற்கடுத்து ராஜசேகர் இயக்கத்தில் இன்னொரு படம் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் தர்மதுரை படத்தில் நூறாவது நாளில் எதிர்பாராத விதமாக ராஜசேகர் காலமானார். உண்மையில் அது தமிழ் வணிக வெற்றி படங்களுக்கு ஒரு இழப்பு என்றே சொல்ல வேண்டும். ரஜினி - ராஜசேகர் கூட்டணி என்பது மிக வெற்றிகரமான கூட்டணி. தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், தர்மதுரை என ரஜினியின் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் நெருக்கமான படங்களை கொடுத்தது இந்த கூட்டணி. மாவீரன் திரைப்படம் மட்டும் மிஸ் ஆனது. நிச்சயம் இன்னும் இரண்டு மூன்று வெற்றி திரைப்படங்களை இந்த கூட்டணி அளித்திருக்கும்

January 15, 2025

விருதுநகர் உணவு

90களில் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே அதிக அளவில் புரோட்டா தயாரிக்கும் மாவட்டமாக விளங்கியது விருதுநகர் எனலாம். விருதுநகர் எண்ணெய் புரோட்டா எல்லோரும் அறிந்தது. பர்மா கடை பற்றி எல்லோரும் பேசுவார்கள். ஆனால் தாஜ்,கார்னேசன், கமாலியா மற்றும் பெயர் இல்லாத கடைகளும் ஏராளமாக இருந்தன. அவர்கள் எந்த விதத்திலும் பர்மாவிற்கு குறைந்தவர்கள் இல்லை. பானு என்கிற கடை இப்போதும் இருக்கிறது. அவர்கள் சாதாரணமாக புரோட்டாவிற்கு கொடுக்கும் சால்னாவே பெப்பர் சிக்கன் கிரேவியிலிருந்து சிக்கனை எடுத்துவிட்டு ஊற்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். மாவட்டத் தலைநகர் விருதுநகராக இருந்தாலும் விருதுநகர் மாவட்டத்தின் கிங் சிவகாசி தான் என்பது போல, புரோட்டா தயாரிப்பிலும் சிவகாசி தான் நம்பர் ஒன். அங்கே நாள் முழுவதும் தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர்,டைரி, நோட் புக் மற்ற பிரிண்டிங் வேலைகள் என்று குடும்பத்தோடு வேலை பார்த்துவிட்டு, மாலை வேளையில் பார்சல் வாங்குவதற்கு என்றே நேர்ந்து விடப்பட்ட அவர்கள் குடும்பத்தில் ஒருவனை வாளியோடு அனுப்பிவிடுவார்கள். அங்கே எல்லா கடைகளிலும் சாப்பிடும் இடம் சிறியதாகவும் பார்சல் வாங்க நிற்பவர்கள் பெரிய இடத்தில் காத்திருக்கும்படிதான் அமைத்திருப்பார்கள். நான்கு பேர் சாப்பிட்டால் 40 பேர் பார்சலுக்கு நிற்பார்கள். அங்கேயும் விஜயம், ஜானகிராம், பெல் என சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு கடையுமே ஒரு பிராண்ட் தான். அருப்புக்கோட்டையில் அந்த சமயத்தில் ஏராளமான தறி நெசவாளிகள். அவர்களும் சாயங்காலம் ஆகிவிட்டால் கடைகளில்தான். இனிமை,நடராஜ், முக்கு,கடற்கரை, ஆழாக்கு கடை என ஏகப்பட்ட கடைகள். ஒவ்வொரு கடை சால்னாவும் texture, consistency, taste ஒவ்வொன்றிலும் வித்தியாசமாக இருக்கும். வாளியை திறந்து பார்த்த உடனேயே சிலர் என்னடா இனிமையில் வாங்க சொன்னேன் நடராஜுல வாங்கிட்டு வந்துட்ட என்று சொல்லும் அளவிற்கு இருக்கும். ராஜபாளையத்திலும் சொல்லவே வேண்டாம். ஆனந்தாஸ் பாம்பே ரஹமத் என ஏராள கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூரும் அப்படித்தான். சேத்தூர் கண்ணாடி கடை மட்டன் சுக்கா சாப்பிட்டவர்களுக்கு அது ஒரு பென்ச் மார்க்காகவே மாறிவிடும். வேறு எங்கு சாப்பிட்டாலும் அந்த கடை மாதிரி இருந்தது இல்லை என்று யோசிக்க வைத்து விடும். விருதுநகர் மாவட்ட கடைகளில் ஒரு விசேஷம். நீங்கள் புரோட்டா வாங்கினாலும் சரி பூரி வாங்கினாலும் சரி கேட்காமலேயே ஒரு கரண்டி நல்ல தேங்காய் சட்டினி வைத்து விடுவார்கள். வைக்கும் போது தான் நாம் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். அதேபோல ரவா தோசை வாங்கினால் சட்னி சாம்பார் ஊற்றிவிட்டு பக்கத்திலேயே ஒரு ஸ்பூன் சீனியும் வைத்து விடுவார்கள். அதுதான் பா காம்பினேஷன் என்பார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சாத்தூர் சேவு, பாலவனத்தம் சீரணி என ஸ்பெஷல் ஐட்டங்களும் இங்கேதான்.

ராம நாராயணன்

இண்டஸ்ட்ரிகளில் முன்னாளில் சீக்வன்சியல் இன்ஜினியரிங் முறை இருந்தது. ஒரு பிராசஸ் முடிந்த பின்னரே அடுத்த பிராசஸ் துவங்குவார்கள். அதனால் lead time அதிகமாகிறது என்று concurrent engineering முறை கொண்டு வந்தார்கள். ஒரு ப்ராடக்டிற்கான வேலை இன்னும் சில ஒர்க் ஸ்டேஷன்களிலும் நடைபெறும். சைமல்டேனியஸ் ப்ராசஸ். இதை திரைத்துறையில் மிகவும் எபக்டிவ்வாக பயன்படுத்தியவர் இயக்குனர் ராமநாராயணன் அவர்கள். அவருடைய படங்கள் எல்லாமே குறைந்தது நான்கு வாரம் ஓடும். அப்படி நான்கு வாரம் ஓடி விட்டாலே தயாரிப்பாளரிலிருந்து தியேட்டர் அதிபர் வரை எல்லோருக்கும் தேவையான லாபம் கிடைத்து விடும். ராமநாராயணனுடைய கொள்கை நான் படமெடுக்கும் நாட்களை விட ஒரு நாளாவது படம் அதிகம் ஓட வேண்டும் என்பதே. அதனால் அவர் தன் எல்லா படங்களையும் நான்கு வாரத்திற்குள் முடித்து விடுவார். யானை,பாம்பு, நாய் என எதை வைத்து எடுத்தாலும் அவ்வளவு வேகமாக முடித்து விடுவார். அவர் அதற்காக வலுவான அசோசியேட் இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் குழு வைத்திருந்தார். ஒருவர் ஒரு இடத்தில் சண்டைக் காட்சிகளை படமாக்கினால் அதில் தொடர்பு இல்லாத ஆட்களை கொண்ட காட்சிகளை இன்னொரு உதவி இயக்குனர் இன்னொரு இடத்தில் இயக்கிக் கொண்டிருப்பார். ஓரிடத்தில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும். இப்படி ஒவ்வொரு இடங்களிலும் காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் இவர் எல்லா இடங்களுக்கும் சென்று மேற்பார்வையிட்டு கரெக்ஷன் சொல்லிக் கொண்டிருப்பார். மிகுந்த கம்யூனிச தாக்கம் உள்ள இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு வந்தவர் ராமநாராயணன். அவருடைய சுமை, சிவப்பு மல்லி, பட்டம் பறக்கட்டும் எல்லாமே அத்தகைய தாக்கத்தை கொண்டிருந்த படங்கள். சிவப்பு மல்லி படம் விஜயகாந்த்திற்கு ஏராள ரசிகர்களை பெற்று தந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் முழுக்க கமர்சியல் ரூட்டிற்கு மாறினார். நன்றி படத்தில் அர்ஜுன அறிமுகப்படுத்தினார். ஆடி வெள்ளி மற்றும் துர்கா ஆகிய இரண்டு படங்கள் செய்த கலெக்ஷன் சாதனையால் அவர் அதிகமாக விலங்குகள் மற்றும் பக்தி படங்கள் இயக்கலானார். இடையிடையே காமெடி படங்கள் வேறு. அவர் இயக்கிய நூறாவது திரைப்படம் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா மிகப்பெரிய கலெக்சன். ஆடி வெள்ளி, துர்கா படங்களின் கதையை வைத்துக்கொண்டு அவர் எல்லா திரையுலகிற்கும் சென்றார். போஜ்புரி மொழியிலும் பல படங்களை இயக்கினார். சின்னக் கல்லு பெத்த லாபம் என்கிற கொள்கையையும் கடைசிவரை கடைபிடித்தவர் ராமநாராயணன். அவருடைய படங்கள் எல்லாமே லோ பட்ஜெட் படங்கள் தான். எப்படியும் யார் கையையும் கடிக்காது. ஆனால் ஹிட் ஆகிவிட்டால் ஏகப்பட்ட லாபம் கிடைக்கும். ஆடி வெள்ளி திரைப்படம் வாங்கியவர்களுக்கு 5 மடங்கு லாபம் கொடுத்தது. துர்கா அதற்கு மேல் கொடுத்தது என்பார்கள்.

ஜீன்ஸ்

ஜீன்ஸ் திரைப்படத்தை, டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜின் கம்பெனி தயாரித்தது. அவர்கள் ஏற்கனவே ரஜினியை வைத்து பிளட் ஸ்டோன் என்கிற ஆங்கில படமும் தயாரித்திருந்தார்கள். ஜீன்ஸ் படத்தின் பட்ஜெட் 24 கோடி என அறிவிக்கப்பட்டது அப்பொழுது பெரிய செய்தியானது. ஏனென்றால் அதற்கு முந்தைய சங்கர் படமான இந்தியன் பட பட்ஜெட் 12 கோடி தான். அதுவும் எட்டு கோடி தான் பட்ஜெட் என அறிவிக்கப்பட்டு 12 கோடியானது. கமல்ஹாசன் அவர்களின் சம்பளம் 90 லட்சம். இந்த சூழ்நிலையில் பிரசாந்த் வைத்து எடுக்கப்படும் ஒரு படத்திற்கு 24 கோடி பட்ஜெட் என்பது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரசாந்திற்கு இந்த படத்திற்கு கிட்டத்தட்ட மாத சம்பளம் போல கொடுத்தார்கள் என்று சொல்வார்கள். ஓராண்டுக்கு மேல் தயாரிப்பில் இருந்தது. ஸ்ரீதேவியின் தாயாருக்கு அமெரிக்காவில் சிகிச்சையை மாற்றி செய்த சம்பவத்தை இந்த படத்தில் வைத்திருப்பார்கள். படம் ஆவரேஜ் ஆகத்தான் போனது. ஜீன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக தமிழில் படங்கள் எடுப்போம் என்று சொன்ன அவர்கள் பின்வாங்கினார்கள். பெரிய தயாரிப்பாளர்கள் ஷங்கரிடம் போவது, பூனைக்கு சுடுபால் வைத்த கதை. வேறு ஆப்ஷன் இருக்கும் பூனைகள் அந்த பக்கம் எட்டிப் பார்க்காது. வேறு வழியில்லாத பூனைகள் வாய் வெந்து பாலை குடிக்க வேண்டி இருக்கும். இதற்கு அடுத்து வந்த பிரசாந்த் படமான கண்ணெதிரே தோன்றினாள் குறைந்த பட்ஜெட்டில் வேகமாக எடுக்கப்பட்டு எல்லோருக்கும் ஏகப்பட்ட லாபம் கொடுத்தது. ஜீன்ஸை விட கண்ணெதிரே தோன்றினாள் தான் நிறைய பேருக்கு பிடித்த படம். லாபகரமான படமும் கூட.

லவ் லெட்டர்

திருமணம் ஆகா பெண்களின் தினசரி உடையாக தாவணி இருந்த காலகட்டம். போகி அன்று நள்ளிரவு துவங்கி, தைப்பொங்கல் விடியும் வரை தெருவில் கோலம் போடுவார்கள். தெருவிலேயே அழகான பெண் என பெயர் எடுத்தவர் சுபத்ரா. அப்போது கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். தெருவில் வசித்த கணேஷ்‌ அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு. எனக்கு அவர் மீது மிகுந்த அபிமானம். என்னைவிட நான்கு வயது கூடியவர். ஆறாம் வகுப்பில் நான் மேல்நிலைப்பள்ளியில் நுழைந்தபோது, கிட்டத்தட்ட அங்கே ஹீரோவாக இருந்தவர் கணேஷ். படிப்பு, கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் என எல்லாவற்றிலும் அவர் பெயர்தான் அடிபடும். நான் அந்த பொங்கல் சமயத்தில் பதினொன்றாம் வகுப்பு. கணேஷ் சுபத்ரா இருவருக்கும் இடையே பார்வை பரிமாற்றம் ஆரம்பமாகி இருந்த நேரம். கணேஷ் என்னிடம் சுபத்ராவிடம் கொடுக்குமாறு ஒரு லெட்டர் கொடுத்தார். அந்த சமயத்தில் அதை ஒரு ஹீரோயிசமாக கருதி செய்தேனா, இல்லை கணேஷ் மீது இருந்த அபிமானத்தில் செய்தேனா என்று தெரியவில்லை. அந்த லெட்டரை கொண்டு போய் சுபத்ராவிடம் கொடுத்தேன். மாட்டிக்கொண்டேன். அவ்வளவுதான் தெருவே சேர்ந்து என்னை காறித் துப்பினார்கள். சுபத்ராவின் தந்தை, உங்கள் வீட்டுப் பெண்ணிற்கு இப்படி யாராவது கொடுத்தால் சென்று கொடுப்பாயா என்று கேட்டார். என் தந்தை நடுவீதியில் வைத்து டெல்டால் விளாசிவிட்டார். கணேஷ் அவர்கள் வேறு ஜாதி என்பதால் நேரடியாக அவர்களிடம் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அடித்த அடியில் காய்ச்சல் வந்து, வீட்டிலேயே படுத்து கிடந்தேன். பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி சென்றபோது சக மாணவர்களிடம் ஏளன பேச்சுக்கு உள்ளானேன். ஊரிலேயே சிறப்பான பொங்கல் உனக்கு தானாமே என்பது துவங்கி இவர் பெரிய அனுமாரு என்பது வரை வகை வகையான கலாய்த்தல்கள். டியூஷன் சார், தன் பங்கிற்கு என்னடா இப்பவே டபுள் எம் ஏ வாங்கிட்ட என்றார். டியூஷன் மாணவர்கள் அதைப் பிடித்து கொண்டார்கள் டபுள் எம் ஏ என்பது என் பட்டப் பெயர் ஆயிற்று. அதைவிட தெருக்காரர்கள் நடந்து கொண்ட விதம்தான் மனதை மிகவும் காயப்படுத்தியது. அத்தனையும் வீடுகளுக்குள்ளும் உரிமையாக நுழைந்து வந்தவன். யார் வீட்டிற்கு சாப்பாடு நேரத்திற்கு போனாலும் தட்டு வைப்பார்கள். இல்லை ஒரு விள்ளலாவது சாப்பிடுவேன். அத்தனை பேருக்கும் கடை, மருத்துவமனை போவதற்கு உதவியிருக்கிறேன். ஒரே நாளில் எல்லாமே முடிந்து போனது. ஏதோ வீட்டிற்குள் விட்டால் அவர்களின் பெண்ணிற்கும் இப்படி செய்து விடுவேன் என்று வாசலோடு நிப்பாட்டினார்கள். அடுத்தடுத்த திருமணங்கள் துக்க வீடுகளின் மூலம் எல்லா உறவினர்களுக்கும் இந்த விஷயம் பரவியது. எல்லோருமே கேவலமாகவே பேசினார்கள். தவிர்த்தார்கள். ஒரு முதிர்ச்சி இல்லாத பையனின் சிறிய தவறு யாராலும் மன்னிக்க முடியாத ஒரு தவறாக மாறி நின்றது. உண்மையில் அது என மனதை முடக்கியது எனலாம். முன்பு போல படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. குரூப் ஸ்டடி என்று நண்பர்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. வீடு, சுற்றம், உறவினர்கள் எல்லோரும் என்னை ஒதுக்கிய விதம் எதுக்கு படிச்சு என்ன பண்ணப் போகிறோம் என்கிற நிலைக்கு கொண்டு வந்தது. சுபத்ராவின் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர் என்றாலும் கூட என்னை அழைக்கவில்லை. காலங்கள் இன்னும் கடந்தது. குடும்பத்தாரிடம் கூட மிகவும் ஒதுங்கியே இருந்தேன். ஒரு நாள் என் தந்தை சொன்னார். என் சக வயது ஆட்களோடு ஒப்பிடுகையில் நான் மிகவும் பின்தங்கியிருந்தேன். பிழைக்கத் தெரியாதவன் என்ற சொல் என்னை துரத்திக் கொண்டே இருந்தது. நீயும் என்னை மாதிரியே பிழைக்கத் தெரியாதவன் என்று ஆகி விடுவாயோ?, என்ற ஆற்றாமை. அதனால் அப்படி நடந்து கொண்டேன் என்றார். சில வருடங்கள் கழித்து கணேஷ் ஒரு முறை என்னிடம் பேசினார். சாரிடா இப்படி எல்லாம் ஆகுணும்னு நான் நினைக்கல என்றார். சமீபத்தில், நெருங்கிய உறவினர் இறப்பிற்காக ஊருக்கு சென்றிருந்தபோது, சுபத்ராவின் தந்தை ஆறுதலாக பார்த்தார். மின் மயானத்தில் எங்கள் டர்னுக்கு காத்திருந்தபோது, எல்லோரும் அருகே டீ சாப்பிட போனார்கள். அவர் எனக்கு எடுத்துக் கொடுத்தார். தற்போது பள்ளி whatsapp குரூப் களில் தெரு நண்பர்கள் whatsapp குரூப் களில் எல்லாம் இணைத்திருக்கிறார்கள். யாரும் டபுள் எம் ஏ என்று சொல்வதில்லை. எல்லோரும் தங்கள் பிள்ளைகளின் நினைத்தால் காதல், நினைத்தால் பிரேக்கப்புகளை பார்த்து நார்மலைஸ் ஆகி விட்டார்கள். குடும்பம் சுற்றம் எல்லோரிடமும் இன்றைக்கு அது ஒரு நகைச்சுவை சம்பவமாக மாறி இருக்கிறது. ஆனால் நான் இழந்த வசந்தம், கவனம் செலுத்தா படிப்பு, அதனால் தள்ளிக் கொண்டே போன வேலை, இன்றும் ஓட வைத்துக் கொண்டே இருக்கும் வாழ்க்கை.. இதற்கெல்லாம் பதிலை யார் தருவார்கள்?

மீண்டும் கோகிலா

மீண்டும் கோகிலா திரைப்படம். திண்டுக்கல் சென்ட்ரல் தியேட்டரில் 44 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம். அந்த சமயத்தில் ஆட்டோக்கள் குறைவாகவே உபயோகப்படுத்தப்படும். சைக்கோ ரிக்ஷாக்களும் குதிரை வண்டிகளும் தான் அப்போது திண்டுக்கல்லில் பிரதான பொதுமக்கள் உள்ளூர் போக்குவரத்து. இதில் குதிரை வண்டியில் பயணம் செய்வது எனக்கு ஒத்துக் கொள்ளாது டொடக்கு டொடக்கு என்று ஆடிக்கொண்டே போகிறது. சாண வாடை அடிக்கிறது என்று சொல்லி அதில் ஏறவே மாட்டேன். ஒரு பேலன்ஸ் இல்லாதது போல இருக்கும். வாந்தி வருவது போலவே இருக்கும். அதனால் என்னை கூட்டிக்கொண்டு போகும்போது சைக்கிள் ரிக்சாவில் தான் கூட்டிக் கொண்டு போவார்கள். அப்படி போய் பார்த்த படம் இது. மாலை காட்சிக்கு சென்ட்ரல் தியேட்டர் வாசலில் குதிரை வண்டிகளிலும் ரிக்ஷாவிலும் பேமிலி ஆடியன்ஸ் இறங்கி கொண்டு இருந்தார்கள். அந்த வயதில் படத்தின் பல காட்சிகள் புரியவில்லை. சண்டை இல்லையே என்பது என் குறையாக இருந்தது. சென்ட்ரல் தியேட்டர் இடைவேளையில் கிடைக்கும் பருப்பு போலி தேங்காய் போலியும் சோடா கலரும் மட்டுமே அன்று take away ஆக இருந்தது. பின்னர் கல்லூரியில் படிக்கும் போது, அரை நண்பன் வாங்கி வந்த கோல்டன் ஹிட்ஸ் ஆஃப் இளையராஜா 10 ரூபாய் டெல்லி கேசட்டில் இந்த பாடலை கேட்ட போது, அப்படியே மனம் கரைந்து போனது. எப்படியும் மாதத்திற்கு ஒருமுறை கேட்டுவிடும் பாடல்.

ராகுல் ட்ராவிட்

எங்கள் தெருவில் செந்தில் என்று ஒரு அண்ணன் இருந்தார். அந்த சமயத்தில் எல்லா தெருக்களிலும் செந்தில்கள் இருந்தார்கள். இவர் படிப்பு செந்தில் என்று எங்களால் அழைக்கப்பட்டவர். காலையில் சேவலையே எழுப்பி இவர்தான் கூவ வைப்பார் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு விரைவாக எழுந்து படிப்பார். பத்தாம் வகுப்பில் ஒரு படத்திற்கும் அவர் சென்று பார்த்ததில்லை. தெரு கிரிக்கெட் விளையாட வந்தது இல்லை. தேர்வு முடிவுகள் வந்தபோது, ஒரு மார்க்கில் பள்ளி முதல் மார்க் எடுக்கும் வாய்ப்பை இழந்திருந்தார். அதனால் எல்லோருடைய வாழ்த்துக்களும் இவரை அனாதையாக விட்டுவிட்டு முதல் மார்க் எடுத்தவரிடம் சென்று விட்டன. இவர்களது உறவு வட்டாரத்திலும் வேறொரு ஊரில் படித்த இன்னொரு பையன் இவரை விட இரண்டு மார்க் அதிகம் எடுத்து விட்டதால், அங்கும் இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. 1987ல் 470 மார்க் பத்தாம் வகுப்பில் எடுப்பதெல்லாம் பெரிய சாதனை. ஆனால் அவர் தவறவிட்ட ஒன்று இரண்டு மார்க்குகளால் அவருக்கு எந்த புகழும் கிடைக்கவில்லை.அதோடு அவர் வெறிகொண்டு படிப்பதை நிறுத்திவிட்டார். சமீபத்தில் மறைந்த எம்டி வாசுதேவன் நாயரின் மிகப் புகழ்பெற்ற நாவல் இரண்டாம் இடம். மகாபாரதத்தை பீமனின் பார்வையில் இருந்து பார்த்தது. காலம் முழுவதும் அந்த இரண்டாம் இடம் பீமனை வருத்திக் கொண்டே இருக்கும். மதிப்பு,ஆட்சி என்று பார்த்தால் தர்மர். பலம் என்று பார்த்தால் அர்ஜுனன் அவரை விஞ்சி நிற்பார்கள். நவீன காலத்திலும் அது மாதிரியான கேரக்டர்களை நாம் வாழ்வில் கண்டு கொண்டே தான் இருக்கிறோம். அப்படி நவீன பீமன் என்று அழைக்கப்பட வேண்டியவர் ராகுல் டிராவிட். 96 - இங்கிலாந்தில் இரண்டாவது டெஸ்டில் கங்குலியும் டிராவிட்டும் இறங்குகிறார்கள். கங்குலி சதம் அடிக்கிறார். டிராவிட் 96 ரன்கள். ஆனால் கங்குலிக்கும் வாட்டர்ஷிப் கொடுத்து கீழ் உள்ள பேட்ஸ்மேன்களுடனும் ஆடி இந்திய அணிக்கு லீடு பெற்று தருகிறார். ஆனால் எல்லாப் புகழும் கங்குலிக்கே கிடைத்தது. 2001 கல்கத்தா ஈடன் கார்டனில் பாலோ ஆன் வாங்கி இந்திய அணி ஆடுகிறது. லட்சுமணனும் டிராவிட்டும் இணைந்து மிகப்பெரிய ஸ்கோர் எடுத்து அந்த மேட்சில் இந்தியாவை வெற்றி பெற வைக்கிறார்கள். அதிலும் லட்சுமணனுக்கே பெயர். 2006 - பாகிஸ்தானில் அவர்களுக்கு எதிரான டெஸ்ட். அவர்கள் 679 ரன்கள் குறிக்கிறார்கள். வலுவான பந்துவீச்சு. சேவாக்கும் டிராவிட்டும் ஓப்பனிங் இறங்கி 410 ரன்கள் குவிக்கிறார்கள். அதிலும் சேவாக்கிற்கே பெயர். எத்தனை ஆட்டங்கள். பலமுறை அணியை காப்பாற்றி, பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்று, அத்தனை ஆட்டங்களிலும் வேறு யாருக்காவது பெயர் சென்று கொண்டிருப்பதே டிராவிட்டின் சிறப்பு. நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாத நேரத்தில் டீம் பேலன்ஸிற்காக விக்கெட் கீப்பிங்கும் செய்தார். அபாரமான பேட்டிங் டெக்னிக், persistent என்றாலே நினைவுக்கு வரும் பெயர். அதிவேக பந்துவீச்சாக இருந்தாலும் சரி, SENA Swing ஆக இருந்தாலும் சரி, ஆசிய துணைக்கண்ட குழி விழுந்த பிட்ச்களில் பின் ஆக இருந்தாலும் சரி. டிராவிட்டின் ஒப்பற்ற டெக்னிக் அதை எளிதாக எதிர்கொள்ளும். அதைவிட மிகவும் பிரஷரான சிச்சுவேஷன்களிலும், அதை மனதில் எடுத்துக் கொள்ளாமல் தன் வழக்கமான ஆட்டத்தை ஆடுவார். அதுதான் பலமுறை இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றி இருக்கிறது. ஒரு நாள் முழுவதும் ஆடினால் தான் இந்த மேட்சை காப்பாற்ற முடியும் என்றால், முழு நாளுக்கும் நான் பிளான் செய்வதில்லை. இந்த செசன் மட்டும் எப்படியாவது ஆடிவிட்டால் போதும் என்று நினைப்பேன். ட்ரிங்ஸ் பிரேக்கில் அடுத்த செசன் ஆடினால் போதும் என நினைப்பேன். என் இலக்குகளை சிறியதாக பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றாக வெற்றி கண்டு வருவேன் என்று ஒரு முறை சொல்லி இருப்பார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேள்வி விளையாட்டாக அலுவலக விழாவில் கேட்கப்பட்டது. இந்த விக்கெட் விழுந்துவிட்டால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும். அப்படி என்றால் எந்த இரு பேட்ஸ்மான்கள் உங்களுக்காக களத்தில் விளையாட வேண்டும் என்று. நான் சொன்னது ராகுல் டிராவிட் & ஸ்டீவ் வாவ். ஏனென்றால் அந்த அளவிற்கு தங்களுடைய விக்கெட்டை மதித்தவர்கள் இருவரும். ராகுல் டிராவிட்டிடம் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது, நம் தொழிலுக்கு தேவைப்படும் டெக்னிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து விடக்கூடாது. போராடும் களத்தில் இருந்து நாமாக வெளியே சென்று விடக்கூடாது. எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் அதை பிரித்து அதை நோக்கி போராட வேண்டும். முக்கியமாக நமக்கு உலகில் எந்த இடம் கிடைத்தாலும் அதைக் கண்டு மனம் விட்டுவிடக்கூடாது.

ஜாகிர் கான்

சிறு வயதில் முதன்முதலாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில், கேள்விப்படும் வேகப்பந்து வீச்சாளர்களின் பெயர்கள் எல்லாம் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தும்‌. தெருவில் இருந்த விக்டரி கிரிக்கெட் கிளப் அணி வீரர்கள் எப்பொழுதும் மற்ற நாட்டு வேகப் பந்துவீச்சாளர்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேச்சில் அடிக்கடி இடம்பெறும் பெயர்கள் மார்ஷல், கார்னர், லில்லி, தாம்சன், இம்ரான் கான், ஹாட்லி, போத்தம். நம்ம நாட்டுல அப்படி யாரும் இல்லையா என அவர்களிடம் கேட்கும் போது, கபில் ஒருத்தர் தான் நல்லா போடுவார். இப்ப சேட்டன் சர்மா என்று ஒருத்தர் வேகமாகப் போடுகிறார். ஆனா இவங்க அளவுக்கு எல்லாம் சேட்டன் சர்மா இல்லை என்று பதில் அளித்தார்கள். சில டெஸ்ட் மேட்சுகளில், கபில்தேவ் முதல் ஓவர் போடுவார், இரண்டாம் ஓவர் மொஹிந்தர் அமர்நாத் வந்து போடுவார். மிலிட்டரி மீடியம் என்று சொல்வார்கள் மிக மெதுவாக ஓடிவந்து கிரீசை அடைந்ததும் நின்று கொண்டு வந்து வீசுவார். இன்னொரு பவுலர் இருந்தார் மதன்லால். விவியன் ரிச்சர்ட்ஸ் ஒருமுறை, இவர் ஏன் இவ்வளவு தூரம் ஓடி வந்து ஆப் ஸ்பின் போடுகிறார் என்று மதன்லாலை கிண்டல் செய்ததாக கூறுவார்கள். அந்த சமயத்தில் கபில்தேவும் தன்னுடைய வேகம் எல்லாம் குறைந்து ஒரு மீடியம் ஃபேஸ் பௌலராக தான் இருந்தார். அவராலும் பாட்ஸ்மென்கள் தவறு செய்தால் தான் விக்கெட் எடுக்க முடிந்ததே தவிர, விளையாடவே முடியாத பந்துகளை வீசி பேட்ஸ்மென்களை திணறடித்து, விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. ஸ்பின்னர்கள் வரும்போது தான் விக்கெட் கிடைக்கும். அதுவும் எதிரணி பேட்ஸ்மென்கள் அடித்து ஆடினால் தான். தங்களுடைய மெரிட்டில் விக்கெட்டுகளை எடுக்கும் இந்திய பந்துவீச்சாளர்கள் அப்போது மிகக் குறைவாகத்தான் இருந்தார்கள். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர்களை அடித்து மற்ற நாட்டு வீரர்கள் ஆட்டம் இழப்பார்கள்.டெஸ்ட் மேட்ச் ஆக இருந்தால், பெரும்பாலும் டிராவில் தான் முடியும். ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்சுகளில் மட்டுமே நாம் விக்கெட் எடுக்கும் நிலை இருந்தது.இது ஒரு கிரிக்கெட் ரசிகனாக, என்னடா இது மற்ற நாட்டு வேகப் பந்துவீச்சாளர்கள் போல் நம் நாட்டில் இல்லையே என்று சலித்துக் கொள்ள வைத்தது. முதல் முதலாகப் பார்த்த ஒரு நாள் போட்டிகள் சாம்பியன்ஷிப் என்றால் அது, 1986-87ல் சார்ஜாவில் நடந்த போட்டி தான். அதில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் விளையாடின. அந்தப் போட்டியில் தான் வால்ஷ் மற்றும் வாசிம் அக்ரம் என்கிற பெயர்கள் அறிமுகமானது‌. மேற்கிந்திய தீவு அணி வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் பந்து வீச வந்தாலே எங்கே விக்கெட் போய் விடுமோ என்று நகத்தை கடித்தபடியே பார்க்க வேண்டி இருந்தது. ஆனால் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் வீசும் போது எவ்வளவு ரன் போகுமோ என்று பதட்டத்துடனே பார்க்க வேண்டி இருந்தது. அப்பொழுது என்னுடைய ஆசை எல்லாம், இந்தியாவிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது பயம் கொள்ளும் அளவிற்கு ஒருவர் பந்து வீச வேண்டும் என்பதுதான். வாசிம் அக்ரம் எல்லாம் நம் டீமில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் அப்போதைய அதிகபட்ச கிரிக்கெட் கற்பனையாக இருந்தது. 1990 இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, மனோஜ் பிரபாகர் நன்றாக பந்து வீசினார் என்றார்கள். இம்ரான்கான், அவர் பந்தை சரியான பவுலிங் ஆக்‌ஷனில் வீசவில்லை என்றார். மனோஜ் பிரபாகரின் பந்து வீச்சும் பயம் கொள்ள வைக்கும் படி இருக்காது. 91-92 இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஜவஹல் ஸ்ரீநாத் வந்தார். அவர் கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்.கபில்தேவும் அந்த தொடரில் ஓரளவு நன்றாக பந்து வீசினார். ஆனாலும் இந்த கூட்டணி யாரையும் மிரட்டும்படி இல்லை. நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவர்களிடம் இருக்கும்போது அதன் மீது நமக்கு வரும் ஆசை மற்றும் மதிப்பானது அதிகம். அப்படித்தான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒரு வலுவான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நமது இந்திய அணியில் இல்லாமல் இருந்தது. அதற்கு முன்னர் காலின் கௌட்ரி என்பவர் இடதுகை வேகப்பந்து வீசியதாகச் சொல்வார்கள். அதனால் வாசிம் அக்ரம் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கும். இந்த சூழ்நிலையில், 2000 ஆவது ஆண்டு. வராது வந்த மாமணி போல இந்திய அணிக்கு வந்தார் தான் ஜாகிர் கான். ஒரு ரிதமான ரன்னப். பந்து வீசும் இடத்திற்கு வந்ததும் ஒரு அலட்டல் இல்லாத ஜம்ப். கால் லேண்ட் ஆகும்போது ஒரு அட்டகாசமான ரிலீஸ் என‌ உடனடியாக கவர்ந்தார் ஜாகிர் கான். பந்து வீச வந்த காலத்தில் நல்ல வேகம் கொண்டிருந்தார். தேவையான அளவு ஸ்விங். அவ்வப்போது யார்க்கர்கள். என ஒரு பக்கா பேக்கேஜாக வந்தார். ஆஹா நமக்கும் ஒரு அக்ரம் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சி வந்தது. அவர் பந்து வீசும் போது நிறைய பேட்ஸ்மேன்கள் பயந்தார்கள். 2003 ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடந்தன. தன் கேரியரின் கடைசி கட்டத்தில் இருந்த ஶ்ரீநாத் மற்றும் இன்னொரு இடதுகைப் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நேரா ஆகியோருடன் ஜாகிர் கான் இணைந்து ஒரு அருமையான வேகப்பந்து கூட்டணியை அந்த தொடரில் அமைத்தார். அப்போதைய ஆஸ்திரேலியா அணி மிகவும் பலம் வாய்ந்தது. வார்னே அவர்கள் ஊக்க மருந்து பிரச்சினையால் வெளியேறிய போதும் ,அது ஒரு பொருட்டே இல்லை என்று அசால்டாக எல்லோரையும் திணறடித்தது அந்த அணி. அந்த ஒரு அணியிடம் மட்டும் தான் தோற்றோம் மற்ற எல்லா போட்டிகளிலும் நமது கைதான் ஓங்கி இருந்தது அதற்கு முக்கிய காரணம் ஜாகிர் கான் தலைமையில் ஆன அந்த வேகப்பந்து கூட்டணி. 2011 உலகக் கோப்பை போட்டியிலும் நாம் 28 ஆண்டுகள் கழித்து அந்த கோப்பையை வெல்ல ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஜாகிர் தான். முக்கியமான விக்கெட்டுகளை எல்லாம் தேவைப்படும் நேரத்தில் எடுத்துக் கொடுத்தார். ஜாகிர்கானின் இன்னொரு சிறப்பு, அவர் இடது கை பேட்ஸ்மென்களை அவுட் ஆக்குவதில் கை தேர்ந்தவர். மேத்யூ ஹைடன், சங்காகரா, ஜெயசூர்யா, தென்னாப்பிரிக்க அணி முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் ஆகியோரை பத்து முறைக்கு மேல் ஆட்டம் இழக்கச் செய்தவர். இந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை வீழ்த்தும் போது, நமக்கு ஆட்டத்தில் அட்வாண்டேஜ் கிடைக்கும். ரிவர்ஸ் ஸ்வின் போடுவதிலும் விற்பன்னராக இருந்தார் ஜாகிர்கான். பந்து தேய்ந்த உடன், ஒரு டெஸ்ட் மேட்சில் ரிவர்ஸ் ஸ்விங் முறையில் இன்சமாம் உல் ஹக்கின் விக்கெட்டை அவர் எடுத்த காட்சி இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஜாகிர்கான் தன் கேரியரில், இன்னும் சிறப்பாக சாதித்து இருக்க முடியும். ஆனால் அவர் அடிக்கடி காயம் அடைந்து, பிரேக் எடுத்தார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற, முதல் 20-20 உலகக் கோப்பையில் அவர் பங்கு பெறவில்லை. ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஆட்கள் ஏலம் போன போது ஜாகிர் கானுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த ஏலத்தில் பெரிய வெளிநாட்டு வீரர்கள், ஹிட்டர்கள் என்று தான் பலரும் கவனம் செலுத்தினார்கள். பந்து வீச்சாளர்களைப் பற்றியே யாரும் பெரிய கவனம் செலுத்தவில்லை.ஆனாலும் ஜாகிர் கானுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் மும்பை அணிக்கு விளையாடிய போது, அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாக இருந்தார். ஜாகிர்கான் இந்திய கிரிக்கெட்டில் கொண்டு வந்த மாற்றம் என்னவென்றால், இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும், ஸ்டார் பேட்ஸ்மென்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் விதைத்தது தான். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து, நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் வரத் துவங்கினார்கள். ஐ பி எல் அணிகளில் அவர்களுக்கு கிடைத்த பொருளாதார ரீதியான ஊக்கமும் அதைத் தொடரச் செய்தது. அதன் பின்னர் கடந்த 10 - 15 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நமது அணிக்கு பும்ரா, சிராஜ் ஷமி என வேகப்பந்துவீச்சாளர்கள் சிறிய நகரங்களில் இருந்து வந்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு அவர்கள் நாட்டிலேயே சவால் விடும் அளவிற்கு வேகப்பந்து வீசுகிறார்கள். இந்த மாற்றத்தில் ஜாகிர் கானுக்கும் ஒரு பங்கு உண்டு எனச் சொல்லலாம்..

உத்தம வில்லன்

அங்கீகாரம். இந்த ஒற்றைச் சொல் தான் உலகத்தில் உள்ளோர் ஓரிடத்தில் தேங்கி நின்று விடாமல் செயல்பட்டுக் கொண்டே இருக்கச் செய்யும் விசை. மனிதர்களின் ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் தேடுவது வேறாக இருக்கும். படிக்கும் பருவத்தில் முதல் மார்க், விளையாட்டுப் போட்டியில் வெற்றி, நண்பர்களிடத்தில் முக்கியத்துவம் என விருப்பம் இருக்கும். பதின்பருவத்தில் எதிர்பாலினத்தவர்களின் ஏகோபித்த தேர்வாக இருக்க வேண்டுமென ஆசையிருக்கும். வேலைக்கு சேர்ந்த பின் அங்கே தவிர்க்க இயலா ஆளாக இருக்க வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். ஓய்வு பெற்ற பின்னர் உறவினர், ஊர் வட்டாரங்களில் நம்மை யாரும் மறந்து விடக்கூடாது என்ற துடிப்பு இருக்கும். கோவில் விழாக்கள், திருமண விசேஷங்களுக்கு ஆர்வத்துடன் செல்லுதல், வாட்ஸ் அப் குரூப்பில் எல்லோருக்கும் செய்திகளை அனுப்புதல் என ஆளுக்குத் தகுந்தபடி மாறும். இது எல்லாவற்றிற்கும் ஆதாரம் மனிதனின் அங்கீகாரம் தேடும் மனது. தன் அந்திமக் காலங்களில் மனிதன், தன்னை யாரும் மறந்து விடக்கூடாது என பிரயத்தனப்படுவான். ஏனென்றால் அதுதான் அவன் வாழ்ந்தற்கான அங்கீகாரம். சுஜாதா சொன்னது போல “மரணத்தை விட கொடுமையானது மறக்கப்படுவது”. கலைஞர்கள் இந்த அங்கீகாரம் தேடுவதில் இன்னும் ஒரு படி மேல். கை தட்டுக்களை சுவாசமாக கொண்டு வளர்ந்தவர்கள் அவர்கள். கை தட்டு நிற்கும் நாள் அவர்களைப் பொருத்த வரையில் அவர்களது கடைசி நாள். மக்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பது தான் அவர்களது ஒரே நோக்கமாக இருக்கும். தங்கள் வாழ்நாள் முடிவதற்குள் என்ன முடியுமோ அதைச் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற வேண்டுமென நினைப்பார்கள். என்றென்றும் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பது தானே உச்சபட்ச அங்கீகாரம்?. கிட்டத்தட்ட சாகாவரம். ஒரு கலைஞன், வாழ்க்கையில் சில தவறுகள் செய்தவன், திடீரென தனக்கு கேன்சர் இருப்பதையும், ஆயுள் சில மாதங்கள் தான் என்பதையும் அறிகிறான். மீதமிருக்கும் நாட்களுக்குள் மக்கள் தன்னை மறக்காமல் இருக்க இன்னுமோர் கலைப்படைப்பை கொடுத்து விட்டுச் செல்ல வேண்டுமென நினைக்கிறான். அவனது கடைசி மாதங்களை, அவன் ஏக்கங்களை, அவன் தன் தவறுகளைத் திருத்துவதை நமக்கு காட்சிப் படுத்தியதே உத்தம வில்லன் திரைப்படம். கமல்ஹாசன், மனோ ரஞ்சன் என்னும் நடிகராக இந்தப் படத்தில் வாழ்ந்திருந்தார். அவரது இளமைப்பருவத்தில் ஒரு காதலி, ஆனால் நிர்ப்பந்தங்களுக்காக தன்னை வைத்து தொடர்ச்சியாக படம் தயாரித்தவரின் மகளை மணம் செய்து கொள்கிறார். தனக்கு ஆரம்பத்தில் வழிகாட்டியாக இருந்த இயக்குநரிடமும் தன் மாமனாரால் பிணக்கு கொள்கிறார். அவரது தற்போதைய பெண் மருத்துவரிடமும் அவருக்கு காதல். இந்த சூழலில் தான் தன் முன்னாள் காதலி இறந்து விட்டதும், அவளுக்கு தன் மூலம் ஒரு பெண் இருப்பதும் தெரிய வருகிறது. மனோரஞ்சனுக்கு அதற்கடுத்த இடியாக, தனக்கு கேன்சர் என்பதும் இன்னும் சில மாதங்களில் இறக்கப்போகிறோம் எனவும் தெரிய வருகிறது. எல்லாவற்றையும் சரி செய்து கொண்டே, தன் கடைசிப்படத்தையும் முடிக்கிறான். குழந்தைகளுக்கான படம், இளைஞர்களுக்கான படம், குடும்பத்தோடு பார்க்கும் படம் என்பதைப்போல இது நாற்பது வயது ஆண்களுக்கான படம். நாற்பதுக்கு மேல் வயதான ஆண்கள் இந்தப்படத்துடன் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். அவர்கள் வாழ்வில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம் இந்தப்படத்தில் இருக்கும். அது இள வயது நிறைவேறாத காதலாக இருக்கலாம், நிர்ப்பந்தத்தால் தொடரும் மண வாழ்க்கையாக இருக்கலாம், வேலை அழுத்தத்தால் மகன் என்ன படிக்கிறான் எப்படி படிக்கிறான் என்று அறியாத நிலையாகவும் இருக்கலாம், நடுத்தர வயதில் இன்னொரு பெண்னால் ஈர்க்கப்பட்டதாகவும் இருக்கலாம், வாழ்வு முடிவதற்குள் குறைந்த பட்ச கடமைகளையாவது முடிக்க வேண்டுமென்ற எண்ணமாக இருக்கலாம். தங்கள் வாழ்வை மனோரஞ்சனோடு ஒப்பிட்டு ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ளும் அளவுக்கு தேர்ந்த பாத்திரப்படைப்பு கொண்டது உத்தம வில்லன். உத்தம வில்லன் திரைப்படத்தின் ஆரம்பகாட்சியிலேயே எல்லோரும் இயல்பாக அவரவர் குணாதியங்களுடன் அறிமுகமாவார்கள். இவர் இன்னார், இவர் இவருக்கு இப்படி உறவு என்றாலும் வாய்ஸ் ஓவர் இருக்காது. கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களில் வாய்ஸ் ஓவர் இருக்காது. சினிமா என்பது காட்சி ஊடகம். காட்சி மூலமே எல்லாவற்றையும் பார்வையாளனுக்கு கடத்த வேண்டும் என்பது கமல்ஹாசனின் நிலைப்பாடு. விஸ்வரூபம் படத்தின் ஆரம்ப காட்சியில் இருவரின் உரையாடலிலேயே ஆரம்பக் கதை சொல்லப்படு விடும். உத்தம வில்லனில், மனோரஞ்சன் நடித்த ஒரு படத்தின் ப்ரீமியர் ஷோ ஒரு மாலில் உள்ள திரையரங்கில் நடக்கும். அதைக் கொண்டே எல்லா முக்கிய கேரக்டர்களும் அறிமுகமாவார்கள். என்ன, இன்னும் இப்படிப்பட்ட மசாலாப் படங்களில் நடிக்கிறாரே தந்தை என விசனப்படும் மகன் கேரக்டர் கூட அதன் போக்கில் அறிமுகமாகும். கமல்ஹாசன் திரைப்படங்களில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், புதிதான காட்சிகள். மற்ற திரைப்படங்களில் எண்பது, தொண்ணூறு காட்சிகள் இருக்கிறதென்றால் அவற்றில் வழக்கமான ஹீரோ, ஹீரோயின் அறிமுக காட்சி, நகைச்சுவைக் காட்சி, பாடல் காட்சி, சண்டைக் காட்சி தவிர கதைக்குத் தேவையான சம்பவங்கள் என ஏழெட்டுக் காட்சிகள் தான் புதிதாக மற்ற திரைப்படங்களில் வராத காட்சிகளாக இருக்கும். கமல்ஹாசன் திரைப்படங்களில் கதைக்குத் தேவையான சம்பவ காட்சிகள் மற்ற படங்களை விட சற்று அதிகமாகவே இருக்கும். அந்தக்காட்சிகள் தான் கமல்ஹாசன் படங்களை ஞாபகத்தில் வைத்திருக்க உதவுகின்றன. உத்தம வில்லனில் அதுபோல ஏராள காட்சிகள் இருந்தாலும், ஆறு காட்சிகள் என்றும் இந்தத் திரைப்படத்தை ஞாபகத்தில் வைத்திருக்கச் செய்பவை. முன்னாள் காதலியின் கணவர், உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள் எனச் சொல்லி அவளது புகைப்படங்களைக் காட்டுவது. தனக்கு கேன்சர் எனத் தெரிந்ததும் தனக்கு வழிகாட்டியாக இருந்த இயக்குநரை பார்க்கச் செல்வது, தன் வீட்டாரிடம் தன் நோயைப் பற்றிச் சொல்ல போகும் போது அவருக்கும் அவரது மகனுக்கும் நடக்கும் உரையாடல், தன் உதவியாளர், தன் காதலியிடம் தான் கொடுத்த கடிதத்தை கொடுக்காததும், காதலியிடம் இருந்து வந்த கடிதத்தை மறைத்தும் தெரிய வந்து, அந்த கடிதத்தை அவரையே படிக்கச் சொல்லும் காட்சி, தன் முன்னாள் காதலிக்குப் பிறந்த மகளை சந்திக்கும் காட்சி, தற்போதைய காதலியான மருத்துவருடன் காரில் பேசிக் கொண்டே வரும் காட்சி. மனோரஞ்சன் தன் இயக்குநருடன் சேர்ந்து கடைசியாக நடிக்கும் படத்தின் பெயராக உத்தம வில்லன் இருக்கும். அந்தப்படம் ராஜா ராணி கால படம். அதில் தெய்யம் கலைஞராக கமல் வேடமேற்றிருப்பார். தொடர்ச்சியாக நாட்டுப்புற கலைகளையும், மற்ற கலை வடிவங்களையும் தமிழ்சினிமாவில் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது கமல்ஹாசனின் ஆசைகளில் ஒன்று. அன்பே சிவத்தில் தெருக்கூத்து, விஸ்வரூபத்தில் கதக் என பல உதாரணங்கள் சொல்லலாம். உத்தம வில்லனில் வில்லுப் பாட்டையும், தெய்யத்தையும் பயன்படுத்தியிருப்பார். எடுக்கப்படும் காட்சிகளின் இடைவேளையில் தன் செயலாளருடன் சந்திப்பு, மகளுடன் சந்திப்பு போன்ற நுணுக்கமான காட்சிகள் வரும். மனோரஞ்சன் தான் அறிமுகமாகும் காட்சியில் நல்ல அழகுடன், தேஜஸாக இருந்து கடைசியில் முடி இழந்து உடல் வலுவிழந்து இறந்து போவான். ஆனால் தான் நடிக்கும் படத்தில், அறிமுக காட்சியில் தாடி மீசை, மோசமான சிகை அலங்காரத்தில் தோன்றி, படம் முடியும் தருவாயில் அழகாக தேஜஸாக மன்னர் வேடத்தில் தோன்றுவான். உடல் அழியக்கூடியது புகழ் அழியக்கூடியதல்ல சாகாவரம் கொண்டது என படம் முடியும். படத்தின் இயக்கம் ரமேஷ் அரவிந்த், இசை ஜிப்ரான். சில பாடல்களை கமல்ஹாசன் எழுதியிருந்தார். அதில் முக்கியமான பாடல் சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா என்ற பாடல். சாகாவரம் போல் கொடுமையானது ஒன்றில்லை. நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களின் இழப்பு, நம்மை வேதனைப்படுத்த துவங்கி விடும். எல்லோரும் அந்த வரம் பெற்றுவிட்டாலும் அதற்கு சிறப்பு ஏதும் இல்லை. உடலால் சாகாவரம் பெறாமல் புகழால் பெறு என்பதே உத்தம வில்லனின் சாராம்சம். படத்தின் ஆரம்ப காட்சி முடிந்ததும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெறுவார் மனோரஞ்சன். கை தட்டுகள் முடிந்ததும், நிகழ்ச்சியை நடத்திச் செல்பவர் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான சம்பவம் எது எனக் கேட்பார். உடனே மனோ ரஞ்சன் இந்தக் கை தட்டு தான். அடுத்து எப்போது கிடைக்கும் எனத் தெரியாது, கிடைக்காமலும் கூடப் போகலாம் என்பார். அது பெரும்பாலான கலைஞர்களுக்கு நடந்திருக்கிறது. உச்சத்தில் இருந்தவர்கள் பேச்சுத்துணைக்கு ஏங்கிய எடுத்துக்காட்டுகள் தனிழ் சினிமாவில் ஏராளம் உண்டு. அது ஐந்து வயது முதல் கைதட்டு வாங்கி வரும் கமல்ஹாசனுக்கு நன்கு தெரியும். குழந்தைப்பருவம் முடிந்து வாலிபனாக மாறும் வயது வரை கைதட்டல்கள் இல்லாமல் ஏங்கிக் கிடந்த காலம் இன்னும் அவர் ஞாபகத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்தக் காலத்திலும் கை தட்டல் வாங்க நாட்டிய நிகழ்ச்சி நடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தார். பின் சிறிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து கை தட்டல் நிற்கா கலையுலகப் பயணம் அவருடையது. தற்போதைய கை தட்டலும் வேண்டும், தன்னை பிற்காலத்திலும் மக்கள் மறந்து விடக்கூடாது என்பதால் தான் காலத்தை மீறிய முயற்சிகளையும் அவர் தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருந்தார். அதில் ஒன்று தான் உத்தமவில்லன். காலத்தைக் கடந்து அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்.

1983 உலக கோப்பை இறுதி போட்டி

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு அரை வேலை நாள் இருந்த காலம் அது. மதியத்துடன் பள்ளிகள் முடியும் அந்த சனிக்கிழமைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம். ஏனென்றால் மாலை வரை மைதானத்தில் விளையாண்டு கொண்டேயிருக்கலாம். அப்போது கிரிக்கெட் எல்லாம் எங்கள் ஊரில் பிரபலமாகாத காலம். பள்ளி விளையாட்டு ஆசிரியரின் அறையில் ஹாக்கி மட்டைகளும், பேஸ்பால் மட்டைகளும், வாலிபால்,பேஸ்கட் பால், கால்பந்துகளுமே பெரும்பான்மையாக இருக்கும். உள்ளூரில் ஒரே ஒரு தெருவைச் சார்ந்த கிரிக்கெட் அணி மட்டுமே இருந்தது. அவர்கள் மாவட்ட அளவிலான லீக் கிரிக்கெட்டில் பங்கு பெறும் அணியாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு என மைதானம் இல்லாததால் எங்கள் பள்ளி மைதானத்தில் தான் விளையாடுவார்கள். எப்போது பள்ளி முடியும் என காத்திருந்து உள்ளே வருவார்கள். சனிக்கிழமை பள்ளி அரை நாள் என்பதால் அவர்களும் மதியமே வந்து விடுவார்கள். அன்று நாங்கள் எங்களுக்கு கிடைத்த கால்பந்தை எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்த போது ஒரு அதிர்ச்சி. சனிக்கிழமை தவறாது ஆட வந்து எங்களுக்கு இடப்பற்றாக்குறையை அளிக்கும் கிரிக்கெட் அணியினரைக் காணோம். ஆச்சரியத்துடன் கேட்ட போது, தெரியாதா? இன்று இந்தியா உலக கோப்பை பைனல் ஆடுகிறது. அதுதான் கமெண்டரி கேட்கவேண்டுமென்று யாரும் வரவில்லை என்றார்கள். ஆம். அன்றுதான் ஜூன் 25, 1983. இந்தியா தன் கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத நாளாக அது மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அணி சென்றால் எவ்வளவு அசுவராசியமாக இருப்போமோ, அதே அளவு அசுவராசியத்துடன் தான் அன்று இந்தியா இந்த மேட்சுகளை கவனித்துக் கொண்டிருந்தது. இந்தியா வெற்றி பெறும் என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை. அப்போது பொதுவாக கிரிக்கெட் என்பதே ஒரு மேல்தட்டு மற்றும் உயர் நடுத்தரவர்க்கத்தினரின் ஆட்டமாகத்தான் கருதப்பட்டு வந்தது. இப்போது போல மேட்சுகளை தொலைக்காட்சியில் பார்ப்பதற்ககு வாய்ப்பேயில்லை. ஊரில் நான்கைந்து வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிகள் இருந்தன. மற்றபடி ரேடியோவில் கேட்கும் கமெண்ட்ரி மட்டும் தான். அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளின் வர்ணனை கேட்க வேண்டுமெனில் நான்கு பேண்ட் ரேடியோ வேண்டும். ஊரில் பெரும்பாலும் இரண்டு பேண்ட் ரேடியோக்கள் தான் இருக்கும். சில தெருக்களில் மட்டுமே பிபிசி, ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசி ஒலிபரப்பை கேட்கும் படி நான்கு பேண்ட் ரேடியோக்கள் இருக்கும். அவர்களுக்கு மட்டுமே அப்போது கிரிக்கெட் ஆட்டம் பற்றி தெரிந்திருந்தது.ஏனையோருக்கு அது பற்றிய அவ்வளவு தெளிவில்லை. ஜூன் முதல் வாரத்தில் இந்தியா இங்கிலாந்திற்குச் சென்றிருந்தது. மேட்சுகளைப் பற்றி தமிழ் நாளிதழ்களில் சிறு அளவிலேயே கவரேஜ் இருந்தது. ஆங்கில நாளிதழ்களில் நன்றாக கவரேஜ் செய்தார்கள். இந்தியா இடம்பெற்றிருந்த குரூப்பில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. இன்னொரு குரூப்பில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. இந்தியா இருந்த குரூப்பில் எப்படியும் மேற்கிந்திய தீவுகளும், ஆஸ்திரேலியாவும் தான் நாக் அவுட்டிற்குச் செல்லும். இந்திய அணி இங்கிலாந்தைச் சுற்றிப் பார்த்து விட்டுத்தான் வரும் என்று அனைவரும் கணித்தார்கள். குரூப் ஸ்டேஜில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை ஆடவேண்டும். முதல் ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜிம்பாப்வே உடனான வெற்றி எதிர்பார்த்த ஒன்று. ஆனால் ஆஸ்திரேலியாவுடனும் மேற்கிந்திய தீவுகளுடனும் அடுத்தடுத்த மேட்சுகளில் தோற்கவும் எதிர்பார்ப்பு குறைய ஆரம்பித்தது. இங்கிலாந்து ஆட்டக்களங்கள் சீம், ஸ்விங் பந்து வீச்சுக்கு உகந்ததாய் இருந்தது இந்திய அணிக்கு சாதகமாய்ப் போனது. கபில்தேவ், பின்னி, பல்விந்தர் சிங் சாந்து, மதன்லால், மொஹிந்தர் அமர்நாத் அனைவருமே இந்த முறையில் பந்து வீசக்கூடியவர்கள். யஷ்பால் சர்மா, சந்தீப் பாட்டில் இருவரும் வெளிநாட்டு ஆடுகளங்களிலும் துடிப்பாக ஆடக் கூடியவர்கள். கவாஸ்கர், அமர்நாத் குவாலிட்டி பேட்ஸ்மென்கள், ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடக்கூடியவர். கபில்தேவ், இன்று வரை இந்தியாவில் உருவான ஒரே உலகத்தரமான ஆல்ரவுண்டர். பின்னி, மதன்லால் போன்றோர் பேட்டிங்கிலும் தாக்குப்பிடிக்க கூடியவர்கள். கிர்மானி நல்ல விக்கெட் கீப்பர் மற்றும் தாக்குப்பிடிக்கக் கூடிய பேட்ஸ்மென். எனவே எச்சூழலையும் சமாளிக்கும் சரிநிகர் சமானமான அணியாக இந்திய அணி இருந்தது. சிற்றூர்களில் அப்போது கிரிக்கெட் என்றால் இரண்டு பெயர்கள் மட்டுமே எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தது. கவாஸ்கர் மற்றும் கபில்தேவ். ஆனால் முதல் இரண்டு வெற்றிகளின் மூலம் மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த், பின்னி. மதன்லால், யஷ்பால் சர்மா போன்ற பெயர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்கத் துவங்கியது. ஜிம்பாப்வே உடனான முக்கிய மேட்சில் கபில்தேவின் ஹீரோயிசத்தால் ஜெயிக்க உத்வேகம் பெற்றது இந்திய அணி. அடுத்து ஆஸ்திரேலியாவையும் வென்று, செமிபைனலுக்குள் நுழைந்து இங்கிலாந்தை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்வாறு இந்திய அணி முதன் முதலாய் உலக கோப்பைக்கு தகுதி பெற்றது நல்ல பேச்சாக அடிபடத் துவங்கியது. அதற்கு முன்னதாக ஹாக்கியில் மட்டுமே நாம் உலக அளவில் வெற்றி பெறும் அணியாக இருந்தோம். மற்ற விளையாட்டுகளில் நாம் சவலைப் பிள்ளை தான். இன்னொரு விளையாட்டிலும் நம்மால் உலக அணிகளுக்கு இணையாக ஆட முடியும் என்று இந்திய மக்களை பெருமிதம் கொள்ள வைத்தது இந்த நிகழ்வு. மிக மிகக் குறைவான ஆட்களே எங்கள் ஊரில் அந்த இறுதிப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டார்கள். அதைவிட சற்று கூடுதலானவர்கள் வானொலியில் வர்ணனையை கேட்டார்கள். நாங்கள் கிரவுண்ட் ப்ரீயா இருக்கு என நன்றாக ஆடிக்களித்து விட்டு திரும்பும் போது, ஊரில் இருந்த ஒரே ஒரு ரேடியோ கடையில் சிலர் நின்று கமெண்டிரி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீகாந்த் நல்லா அடிச்சானாம்பா என்ற ஒரு வார்த்தை தான் அப்போது காதில் விழுந்தது. சில தெருக்களில் மட்டும் வீட்டிற்கு வெளியே ரேடியோவை வைத்து மாலையில் வர்ணனை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ரிச்சர்ட்ஸ் இருக்கிற வரை கஷ்டம் என்றார்கள். அப்புறம் கபில்தேவ் கேட்ச் பிடித்து அவர் அவுட்டானார் என்றார்கள். நடந்து கொண்டிருந்த சம்பவத்தின் முக்கியத்துவம் அறியாமல் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அடுத்த நாள் காலை இந்தியாவே ஆனந்தக் கொண்டாட்டத்தில் மூழ்கியது. கிரிக்கெட் ஆட்டம் பற்றி தெரியாதவர்கள் கூட, அதைப் பற்றியே பேசலானார்கள். நாம உலக அளவில் ஒரு போட்டியில் ஜெயித்து விட்டோம் என்பதே எல்லோருக்கும் பெரிய பெருமையைக் கொடுத்தது. திங்கள் அன்று பள்ளி செல்லும் போது அதே பேச்சு. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் டிவி இருந்தது. அவர் கிரிக்கெட் ரசிகரும் கூட. அவர் சொல்லி பள்ளி நோட்டீஸ் போர்டில் கொட்டெழுத்துக்களில் இந்திய வெற்றியைப் பற்றி எழுதியிருந்தார்கள். அவரும் பிரேயரில் இந்த வரலாற்றுச் சம்பவத்தைப் பற்றி நிறைய பேசினார். இந்த ஜூன் 25க்குப் பின் இந்தியாவே ஒரு மாற்றத்தைச் சந்தித்தது. அதுவரை ஹாக்கி, புட்பால் விளையாடிக் கொண்டிருந்த இந்திய சிறுவர்கள் கிரிக்கெட்டின் பால் ஈர்க்கப்பட்டனர். ஹாக்கி விளையாட நல்ல ஹாக்கி மட்டை தேவை. புட்பாலுக்கு சாதா பந்து இருந்தாலும் இட வசதி தேவை. எந்த உபகரணமும் தேவையில்லை, சின்ன இடம் போதும், இரண்டு பேர் இருந்தாலும் ஆடலாம் என்ற கிரிக்கெட்டின் தன்மையால் பலரும் அதை நோக்கி இழுக்கப்பட்டனர். பிள்ளையாரை எப்படி தங்களுக்குப் பிடித்த வடிவங்களில் எல்லாம் பிடித்தார்களோ அது போலத்தான் கிரிக்கெட்டும். சிலையாகவும் வைக்கலாம், மஞ்சளில் பிடித்து வைக்கலாம், கைப்பிடி மண்ணிலும் பிடிக்கலாம் என்ற பிள்ளையாரின் சிம்ப்ளிசிட்டி கிரிக்கெட்டுக்கும் உண்டு. பேட், பேட்,பால் என எதுவும் தேவையில்லை. ஒரு கட்டை, அறுத்த சைக்கிள் ட்யூப் துண்டுகளைக் கொண்டு கூட பந்து செய்யலாம் என்ற எளிமையால் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட் பரவியது. ஆனால் பிள்ளையாருக்கு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை மக்கள் மனதில் விதைக்கப்பட்டது போல, கிரிக்கெட்டில் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த உலகக் கோப்பை வெற்றி கொடுத்தது. இந்த வெற்றியை இந்தியாவிற்குச் சாத்தியமாக்கியது எது என்ற கேள்வி எழும்போதெல்லாம் மனதுக்கு தோன்றுவது அப்போது இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றார் போல் அமைந்த அணியும் கபில்தேவ் என்ற பெயரும் தான். பொதுவாக அப்போது இருந்த இந்திய அணிக்கு வெற்றி பெறும் ஆவலெல்லாம் இருக்காது. தங்கள் சாதனை, தங்கள் கேரியர் என்றே இருப்பார்கள். அணியின் ஒட்டுமொத்த வெற்றிக்குத் தேவைப்படும் அந்த அதிகப்படியான முயற்சியைச் செய்ய சுணக்கம் காட்டுவார்கள். கபில்தேவுக்கு அந்த அதிகப்படியான முயற்சியைக் கொடுக்கும் மனம் இயல்பிலேயே இருந்தது. அதுபோக தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியும். அவருக்குள் இருந்த அந்த வெறிதான் இந்தியாவை கோப்பையை நோக்கி அழைத்துச் சென்றது. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரே கிடையாது நீ வேகப்பந்து வீச்சாளர் என்கிறாயா என்ற கேலிகள், டிரஸ்ஸிங் ரூமில் பேட்ஸ்மென்களால் அவர் அடைந்த அவமானங்கள், கொச்சையாக ஆங்கிலம் பேசுகிறார் என்ற மும்பை மீடியாக்களின் எள்ளல்கள் என அனைத்தையும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியாக மாற்றி அணியை வெற்றி பெறச் செய்தார். வெற்றி பெறுவோம் என்ற அவரின் நம்பிக்கையே எல்லோர் மனதிலும் புகுந்து உத்வேகம் கொடுத்தது. நம் நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி தவிர்த்து இன்று வரை குழு ஆட்டங்களில் நாம் உலக அளவில் பெயர் சொல்லும் படியாக இருப்பது கிரிக்கெட்டில் தான். ஏன் தனி நபர் ஆட்டங்களில் கூட நம் நாட்டு சாதனையாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். 1983 கிரிக்கெட் உலக கோப்பை வெற்றிக்குப் பின் ஹாக்கி நம் மக்கள் மனதில் பெற்றிருந்த இடம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மும்பை முதல் மேற்கு வங்கம் வரை இந்தியாவின் எல்லா மூலைகளிலும் பரவியிருப்பது கிரிக்கெட் தான். அப்படி கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்க காரணமான நாள் ஜூன் 25, 1983 என்றால் அதற்கு அச்சாணியாய் இருந்தது கபில்தேவ் என்ற மனிதனின் வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் தான்.

ஜெயலலிதா

ஜெயலலிதா தமிழ்சினிமாவில் நடிகையாக உள்ளே நுழைந்த காலகட்டம் தமிழ்சினிமாவின் பொற்காலங்களில் ஒன்றான அறுபதுகள். எம்ஜியாரும், சிவாஜியும் முழுவீச்சில் வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எம்ஜியார், ப.நீலகண்டன், கே. சங்கர் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிகரமான பார்முலா படங்களைக் கொடுத்து வந்தார். சிவாஜி கணேசன் பீம்சிங் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பா வரிசை படங்களை (பாசமலர், பாவமன்னிப்பு போன்ற) கொடுத்து வந்தார். இயக்குநர் ஸ்ரீதர் அப்போதைய வழக்கத்தில் இருந்து ஒரு இயக்குநரின் படம் என்று தனித்துத் தெரியும் வகையில் அவருக்கான பிரத்யேக காட்சி அமைப்புகள், வசனம், இசை என தனிக்கவனம் செலுத்தி படங்களை இயக்கி வந்தார். கே பாலசந்தரும் தன் பயனத்தை அறுபதுகளில் துவங்கியிருந்தார். இது போக ஸ்க்ரிப்ட் ஒரியண்டட் இயக்குநர் கே கோபாலகிருஷ்ணன் தன் பங்கிற்கு சித்தி, கற்பகம் என அட்டகாசப் படங்களை கொடுத்து வந்தார். இவர்கள் போக ஏ பி நாகராஜன் திருவிளையாடல் போன்ற புராணப் படங்களை இயக்கி தன் பங்கிற்கு தமிழ்சினிமாவை அலங்கரித்துக் கொண்டிருந்தார். எஸ் எஸ் வாசன் அவர்களின் ஜெமினி, ஏ வி எம், விஜயா வாகினி போன்ற தயாரிப்பு நிறுவனங்களும் ஏராளமான படங்களை இந்தக் காலகட்டத்தில் தயாரித்து வந்தன. தேவர் பிலிம்ஸ், மேகலா பிக்சர்ஸ் போன்ற பட்ஜெட் படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவங்களும் தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வந்தார்கள். இந்தக் கலைஞர்களுக்கெல்லாம் திரைப்படத்துறைக்கு உள்ளே நுழையும் கருவியாக இருந்தது நாடகங்கள் தான். ஒரு நாடகத்தில் சிறப்பாக நடிப்பதன் மூலம் படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கண்ணில் பட்டு அவர்களை தங்கள் திறமையால் கவர்ந்து வாய்ப்பு பெறுவது தான் முக்கிய வழியாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் சென்னையில் ஏராள நாடக கம்பெனிகள் இயங்கி வந்தன. கே பாலசந்தர்,சோ ராமசாமி, ஒய் ஜி பார்த்தசாரதி போன்றோர் தொடர்ச்சியாக நாடகங்களை நடத்தி வந்தார்கள். ஜெயலலிதாவின் தாயாரான சந்தியா சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டினாலும் இது போன்ற நாடக கம்பெனிகளில் அடிக்கடி நடித்து வந்தார். ஜெயலலிதாவும் இதைப் பின்பற்றி சோ, ஒய் ஜி பார்த்தசாரதி போன்றோரின் நாடகங்களில் பள்ளியில் நடிக்கும் போதே நடிக்க ஆரம்பித்தார். அப்போது தென்னக சினிமாவின் தலைமையகமாக சென்னை தான் விளங்கியது. ஏராளமான தெலுங்கு படங்கள் இங்கே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சில கன்னட படங்களும். ஜெயலலிதாவிற்கு இதன் மூலம் சில தெலுங்கு, கன்னட படங்களில் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி விடுமுறையில் இப்படங்களை நடித்தார். 1965 ஆம் ஆண்டு, இயக்குநர் ஸ்ரீதர் புதுமுகங்களை வைத்து வெண்ணிற ஆடை என்ற படத்தை துவக்கினார். அதில் நிர்மலா, மூர்த்தி ஆகியோர் அறிமுகமானார்கள். இன்னொரு நாயகி வேடத்திற்கு ஹேமமாலினி வரவழைக்கப்பட்டு ஸ்க்ரீன் டெஸ்டில் நிராகரிக்கப்பட்டார். அந்த வேடத்திற்கு 16 வயது ஜெயலலிதா பின்னர் தேர்வு செய்யப்பட்டார். வெண்ணிற ஆடை வெற்றி பெற்றது. நிர்மலாவும், மூர்த்தியும் வெண்ணிற ஆடை என்ற பெயருடன் சேர்த்து அழைக்கப் பட்டார்கள். ஆனால் ஜெயலலிதா அந்த அடைமொழியைப் பெறவில்லை. அதையெல்லாம் தாண்டி அவர் பலப்பல அடைமொழிகளைப் பெறுவார் என மற்றவர்களுக்குத் தோன்றியதோ என்னவோ. தன் முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார் ஜெயலலிதா. வெண்ணிற ஆடை வெற்றிக்குப் பின் ஜெயலிதாவிற்கு மிகப்பெரிய ஏற்றமாக அமைந்தது ஆயிரத்தில் ஒருவன். சிவாஜி கணேசனை வைத்து பல படங்களை இயக்கிய பி ஆர் பந்துலு எம்ஜியாரை வைத்து இயக்கிய முதல் படம் ஆயிரத்தில் ஒருவன். அதில் கன்னித்தீவு இளவரசி வேடத்தில் நடித்தார். அப்போது எம்ஜியார் மிகப்பெரிய நாயகன். ஆனால் 17 வயது ஜெயலலிதா அவருக்கு இணையான நடிப்பை வழங்கி அந்த கேரக்டரை நிலைநிறுத்தி இருந்தார். ராஜா ராணி கால சரித்திர படமான ஆயிரத்தில் ஒருவன் இந்தக் கால பாகுபலி போல பெரு வெற்றி அடைந்த படம். அதன்பின்னர் ஜெயலலிதாவிற்கு ஏறுமுகம் தான். எம்ஜியாருடன் குடியிருந்த கோயில், ரகசிய போலீஸ் 115, அடிமைப் பெண், சிவாஜி கணேசனுடன் பட்டிக்காடா பட்டணமா, கலாட்டா கல்யாணம் என கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான படங்கள், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் என அப்போதிருந்த அடுத்த நிலை நடிகர்களுடனும் நிறையப் படங்கள் என தமிழ்சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார். தெலுங்கிலும் என் டி ஆர், நாகேஸ்வராவ் போன்ற முண்ணனி நடிகர்களுடனும், கிருஷ்ணா, சோபன்பாபு போன்ற அடுத்த நிலை நடிகர்களுடனும் பல வெற்றிப்படங்களில் நடித்தார். கன்னடத்திலும் பல வெற்றிப்படங்கள். நடிக்க வந்த முதல் 10 ஆண்டுகளில் பல மொழி வெற்றிப்படங்களின் மூலம் முக்கிய தென் இந்திய திரை நட்சத்திரமாக மாறினார். ஜெயலலிதா ஏற்று நடித்த பல்வேறு கேரக்டர்களின் மூலம் ஏராளமான தமிழக மக்களின் அபிமானத்தைப் பெற்றார். எப்படி அறுபதுகளில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களிடையே கடும் போட்டி இருந்தது போல நடிகைகளிடமும் கடும் போட்டி இருந்தது. பானுமதி, வைஜயந்தி மாலா செட்டில் வைஜயந்திமாலா இந்திக்குப் போய் இருந்தார். பானுமதி இன்னும் பீல்டில் இருந்தார். பத்மினி, சாவித்திரி, தேவிகா செட்டும் மிக ஆக்டிவ்வாக பீல்டில் இருந்தார்கள். ஜெயலலிதாவிற்கு சில வருடங்கள் முன் அறிமுகமாயிருந்த சரோஜா தேவி, கே ஆர் விஜயா தங்கள் கேரியரின் உச்சத்தில் இருந்தனர். ஜெயலலிதாவிற்குப் பின் அறிமுகமாகி இருந்த லதா, மஞ்சுளா போன்றோரும் கடும் போட்டியை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இத்தனை பேரையும் மீறி ஜெயலலிதா தனக்கான வெற்றிகளைக் குவித்தார். அவர் கணக்கில் ஏராளமான சில்வர் ஜூபிலி படங்கள் இருந்தன. பெருவாரியான திரைத் துறையினரின் முதல் தேர்வாக ஜெயலலிதா இருந்தார். அதற்கு முக்கிய காரணம் எந்த கேரக்டரையும் ஏற்று நடித்து அதைச் சிறப்பிக்கும் திறமை அவருக்கு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் துடுக்குத்தனமான நவநாகரீகப் பெண் வேடத்திற்கு போட்டியே இல்லாத தேர்வாக ஜெயலலிதா இருந்தார். அவர் இயல்பே அதுதான் என்பதால் அதை அசால்டாக செய்வார். இளவரசி வேடமும் அவருக்கு கனகச்சிதமாகப் பொருந்தும். அதற்கேற்ற தோற்றம், தோரணை, குரல் எல்லாம் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. அதே சமயம் நடுத்தர குடும்பப் பெண் வேடம், அப்பாவி கிராமத்துப் பெண் வேடம் போன்றவற்றையும் மிக எளிதாகச் செய்வார். இந்த பன்முகத்தன்மைதான் அவரை திரையுலகில் முண்ணனி நட்சத்திரமாக நிலை நிறுத்தியது. எம்ஜியாருடன் இணைந்து நடித்த ராமன் தேடிய சீதையில் எம் ஜி யாரை பல வேடங்கள் போட்டு ஏமாற்றும் கதாபாத்திரம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வேடங்கள். அனாயாசமாக அதைச் செய்திருப்பார். முத்துராமனுடன் நடித்த சூரியகாந்தி திரைப்படத்தில் வேலைக்குச் செல்லும் பெண் உரிமையில் நம்பிக்கை கொண்ட கதாபாத்திரம் அதையும் செம்மையாக செய்திருப்பார். அதற்காக பெரியாரின் பாராட்டையும் பெற்றார். நகைச்சுவை வேடங்களும் அவருக்கு எளிது தான். கலாட்டா கல்யாணம் போன்ற படங்களில் அதிலும் கலக்கியிருப்பார். வழக்கமான கவர்ச்சி கதாநாயகி வேடங்கள் சொல்லவே வேண்டாம். ஏராளம். அதிலும் சிறப்புற நடித்திருப்பார். இது தவிர மனநிலை பாதிக்கப்பட்ட வேடங்கள் அவற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ளார். நவரத்தினம், எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களில் அந்த வித்தியாசத்தைக் காட்டியிருப்பார். எந்த வகை வேடமாக இருந்தாலும் சரி, எந்த நாயகர்களுடன் நடித்தாலும் சரி. ஜெயலலிதா தனித்து தன் திறமையைக் காட்டத் தவறியதேயில்லை. 1970களின் மத்தி வரை ஜெயலலிதா வெற்றிகரமான கதாநாயகியாக இருந்தார். பின்னர் பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரய்யா போன்ற புதிய அலை இயக்குநர்கள் வர ஆரம்பித்தார்கள். ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா போன்ற நாயகிகளின் வருகை, கமல்ஹாசன், ரஜினிகாந்த் தலை எடுக்க ஆரம்பிக்க ஜெயலலிதாவின் நாயகி அந்துஸ்து குறையத் துவங்கியது. இனி இரண்டாம் நாயகி, சகோதரி, அம்மா கேரக்டர்களில் தான் நடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அது போல சில குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1980ல் ரஜினியில் பில்லா படத்தில் அவருக்கு நெருக்கமான தயாரிப்பாளர் பாலாஜியால் ஸ்ரீபிரியா நடித்த வேடத்திற்கு முதலில் நடிக்க அழைக்கப்பட்டார். ஆனால் அதில் அவர் நடிக்க வில்லை. அதே ஆண்டில் அவர் நடித்த நதியை தேடி வந்த கடல் அவரின் கடைசிப் படமாயிற்று. அவர் உச்சத்தில் இருந்த பத்தாண்டுகளில் அவர் சேர்ந்து நடிக்காத பெரிய நடிகர்கள் இல்லை, வித்தியாச வேடங்கள் இல்லை. எந்தக் காட்சியிலும் அவர் தன் ரோலை மீறி நடித்தது இல்லை. அந்த கேரக்டருக்கு எவ்வளவு நடிக்க வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருந்தது. ஜெயலலிதா ஒரு காட்சியில் இருந்தாலே, அவரை மற்றவர்களை மீறி கவனிக்க வைக்கும் திறமையும் அவரிடம் இருந்தது.எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும் அந்தக் கலாச்சாரத்திற்கு ஏற்ப, மொழிக்கு ஏற்ப முன் தயாரிப்பு செய்து பாவனைகளை கொடுக்கக் கூடியவர். இந்தத் திறமைகள்தான் அவருக்கு தென் இந்திய திரைத்துறையிலும் பொது மக்களிடையேயும் பெரிய மரியாதையைப் பெற்றுக் கொடுத்தது.

சேப்பாக்கம் டை டெஸ்ட்

எவ்வளவோ கிரிக்கெட் மேட்சுகளைப் பார்த்தாலும் சில கிரிக்கெட் மேட்சுகள் மட்டுமே நம் மனதை விட்டு அகலாது இருக்கும். மேட்சின் சுவராசியம் ஒரு காரணமாய் இருந்தாலும், நாம் அதைப் பார்த்த சூழ்நிலை, அந்த மேட்ச் அன்றைய நிலையில் நமக்குக் கடத்திய உணர்வு போன்றவையும் அதற்கு முக்கிய காரணமாய் இருக்கும். 80களில் கிரிக்கெட் ரசிகர்களாய் இருந்த பலருக்கும் அப்படி ஒரு மேட்ச் மறக்க முடியாததாய் இருக்கும். அந்த மேட்சைப் பற்றிய நினைவுகளே இந்தக் கட்டுரை. அது 1986ஆம் வருடம். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திற்குச் சென்று அவர்கள் மண்ணிலேயே வரலாற்றில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வந்திருந்தது. அந்த சூட்டோடு தன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியின் வருகைக்காக காத்திருந்தது. அப்போதைய ஆஸ்திரேலிய அணி தன்னுடைய நட்சத்திர ஆட்டக்காரர்களான க்ரெக் சாப்பல், இயன் சாப்பல், டென்னிஸ் லில்லி, தாம்சன் போன்றோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றிருந்ததால் நிறைய இளம் ஆட்டக்காரர்களுடன் இந்தியா வந்திறங்கியது. அணித்தலைவர் ஆலன் பார்டர், பூன், மார்ஷ் போன்றவர்களே அப்போது அதிகம் அறியப்பட்டவர்களாய் இருந்தார்கள். இங்கிலாந்தை அவர்கள் மண்ணிலேயே தலையில் தட்டிவிட்டு வந்தவர்கள், தங்கள் மண்ணில் ஆஸ்திரேலியாவை தலையில் கொட்டி அனுப்புவார்கள் என்றே பலரும் கணித்தார்கள். பலரும் கணித்தபடியே முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த போட்டியிலேயே ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, எங்களை குறைத்து எடை போடாதீர்கள் என்ன இருந்தாலும் நாங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எனக் காட்டினார்கள். இந்த இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்குப் பின்னர் சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. அப்போது பரவலாக தொலைக்காட்சிப் பெட்டிகள் ஊருக்குள் ஊடுருவிக் கொண்டிருந்த நேரம். இங்கிலாந்தில் இந்தியா பெற்ற வெற்றி அப்போது இன்னும் பலரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆக்கி விட்டிருந்தது. சென்னையில் மேட்ச் என்பதால் வானொலியில் தமிழ் வர்ணனை வேறு. ஒரு நாள் போட்டியில் வேண்டுமானால் நீங்கள் எனக்கு சமமாய் இருக்கலாம், ஆனால் டெஸ்ட் போட்டியில் நாங்கள் தான் என மார்தட்டி களம் கண்டது இந்திய அணி. ஆஸ்திரேலியா டாஸை வென்று பேட்டிங் எடுத்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதற்கு முன்னால் பல டெஸ்ட் மேட்சுகள் நடந்திருக்கின்றன. இந்தியாவிலே கல்கத்தா ஈடன் கார்டனுக்கு அடுத்த படியாக உருவான மைதானம் இந்த எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம். பொங்கல் சமயத்தில் ஒரு டெஸ்ட் மேட்ச் இங்கே நடத்துவதென்பது ஒரு ஐதீகம். சென்னை மார்கழி இசை விழா முடிந்ததும் இந்த பொங்கல் டெஸ்ட் பற்றிய பேச்சு சென்னை எலைட் வட்டாரங்களில் துவங்கும். மற்ற மாவட்டங்களில் இந்த மேட்ச் வானொலியில் வழங்கப்படும் அட்டகாச தமிழ் வர்ணனை மூலமே அறியப்படும். வாலாஜா முனை, பெவிலியன் முனை, வலது கை ஆட்டக்காரர், உதிரி ஓட்டங்கள், கால்காப்பில் பட்டு பைன்லெக் திசையை நோக்கிச் சென்றது பந்து என சொல்லப்படும் வர்ணனை மூலமே கிரிக்கெட் பழகப்பட்டு வந்தது. மேட்ச் தொடங்கி முதல் விக்கெட்டாக மார்ஷ் ஆட்டமிழந்த பின்னர் டேவிட் பூன் – டீன் ஜோன்ஸ் இணை ஆடத்துவங்கியது. அவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் கல்லூரி விடுதியில் இருந்து ஊருக்கு வந்த கல்லூரி கிரிக்கெட் டீம் ஆட்டக்காரர் தெரு பையன்களோடு எளிதாய் விளையாடுவது போல ஆடினார்கள். அப்போதுதான் இந்திய அணியின் பவுலிங் பலவீனம் புரிந்தது. வெளி நாட்டு பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதில் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார்கள். ஆனால் இந்திய ஆடுகளங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 211 ரன்களை எடுத்தது. அடுத்த நாள் ஆட்டத்தில் நான்காம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டீன் ஜோன்ஸும் ஆலன் பார்டரும் நிதானமாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார்கள். டீன் ஜோன்ஸ்க்கு சென்னை வெயில் ஒத்துக் கொள்ளாமல் வாந்தியெல்லாம் எடுத்தார். ஆனாலும் விடாமல் விளையாடி 210 ரன்கள் எடுத்தார். மூன்றாம் நாளின் ஆரம்பத்தில் தான் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நம்மிடம் அன்று மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அவர்களாலும் ஏதும் பெரிதாக நடத்த முடியவில்லை. பின் இந்திய இன்னிங்ஸ் தொடங்கியது. வழக்கம்போல் ஸ்ரீகாந்த் அதிரடியாகவும். கவாஸ்கர் நிதானமாகவும் ஆட ஆரம்பித்தனர். 65 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டை இழந்தது இந்தியா. அசாருதீனும் ரவி சாஸ்திரியும் இந்தியா 200 ரன்களை எட்ட காரணமாய் இருந்தார்கள். ஐந்தாவது விக்கெட் விழுந்து கபில்தேவ் உள்ளே வரும் போது அணியின் ஸ்கோர் 206. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் விழ இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களுக்கு தள்ளாடத் துவங்கியது. அப்போதைய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தால் அடுத்து 50 ரன்களுக்குள்ளும், 7 வது விக்கெட் இழந்தால் அடுத்த 15 ரன்களுக்குள்ளும் தன் ஆட்டத்தை முடித்துக் கொள்ளும் என்றே எழுதி வைத்துக் கொள்ளலாம். அந்த அளவில் தான் நமது பந்து வீச்சாளர்களின் பேட்டிங் திறமை இருக்கும். இந்திய அணி பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 130 ரன்கள் தேவைப்பட்டன. வானொலியில் வர்ணனை செய்தவர்கள் இதை ஒவ்வொரு பந்து வீசப்படும் போதும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதன் மூலம் தான், முதன் முறையாக அப்போது கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு பாலோ ஆன் என்றால் என்ன என்று தெரியத் துவங்கியது. அந்தச் சூழ்நிலையில் தான் தன்னுடைய கேரியரின் மற்றுமொரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கபில் தேவ். சேட்டன் சர்மா, சிவலால் யாதவ், மனீந்தர் சிங் போன்றோரை மறுமுனையில் நிற்க வைத்து 119 ரன்களை எடுத்து, பாலோ ஆனைத் தவிர்த்தார்.அதில் 21 பவுண்டரிகள். பல பந்துகளை தானே சந்தித்து சுமாரான பந்துகளை தண்டித்து இந்த ரன்களை ஈட்டினார். நான்காம் நாள் இந்தியா அணி பாலோ ஆனைத் தவிர்த்து விட்டு ஆல் அவுட் ஆக ஆஸ்திரேலியா தன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கியது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் 170 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது. சரி அவ்வளவு தான் வழக்கம் போல இந்த டெஸ்ட்டும் ட்ராவை நோக்கித்தான் போகப்போகிறது என அனைவரும் நினைத்திருந்த வேளையில் நான்காம் நாள் ஆட்ட முடிவோடு டிக்ளேர் செய்தார் பார்டர். இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். ஆட்டத்தின் கடைசி நாள். 348 ரன்கள் எடுக்க முடிந்தால் எடுத்து வெற்றி கொள் என்றார் பார்டர். ஏற்றுக் கொண்டார் கபில்தேவ். இந்திய வீரர்கள் களமிறங்கினார்கள். ரன்கள் குவிப்பதும், விக்கெட்டுகள் போவதுமாய் இருந்தது. கவாஸ்கர் ஒரு முனையில் நங்கூரமாய் நின்று 90 ரன்கள் எடுத்தார். கபில்தேவின் விக்கெட் விழுந்ததும் இந்திய ரசிகர்களுக்கு கலக்கம் ஏற்பட்டது. ஆனால் அப்போதைய மிஸ்டர் கூலான ரவி சாஸ்திரி நம்பிக்கை கொடுத்தார். 9 விக்கெட்டுகள் போய் விட்டன. 2 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் ரவி சாஸ்திரி ஒரு ரன் மட்டும் எடுத்து மறுமுனைக்குச் செல்ல. மனீந்தர் சிங் தன் விக்கெட்டை பறி கொடுக்க டை ஆனது டெஸ்ட். வர்ணனையாளர்கள் டிராவுக்கும் டைக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்கிக் கொண்டிருக்க, சேப்பாக்கம் மைதானத்தில் குமுழியிருந்த ரசிகர்கள் தங்கள் கண் முன்னால் நடந்ததை நம்ப முடியாமல் இருந்தனர். டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்களும், வர்ணனை கேட்டுக் கொண்டு இருந்தவர்களும் தான். அந்தக் கணம் அவர்களுக்குத் தெரியாது, நாம் ஒரு சரித்திரத்தின் சாட்சியாக இருக்கப் போகிறோம் என்று. ஏனென்றால் அதுவரை நடந்த டெஸ்ட் மேட்சுகளில் ஒரு டெஸ்ட் மட்டுமே டை ஆகியிருந்தது. அதிலும் ஆஸ்திரேலியா பங்கெடுத்து இருந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1960ஆம் ஆண்டில் ஒரு டெஸ்டை அவர்கள் செய்திருந்தார்கள். அதற்கடுத்து இதுதான். இந்த டெஸ்ட் முடிந்து 34 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதற்கடுத்து இன்னும் ஒரு டெஸ்ட் கூட டை ஆகவில்லை. இந்த டெஸ்ட்டின் முடிவு ஆஸ்திரேலியாவிற்கு உற்சாகத்தைக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்களும் பந்து வீச்சாளர் மெக்டர்மெட்டும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அந்த அணியில் முக்கிய புள்ளிகளாக விளங்கினார்கள். அணியில் இடம் பிடித்திருந்த இளம் வீரரான ஸ்டீவ் வாவ் அடுத்த 15 ஆண்டுகள் அணிக்கு முக்கிய தூணாக இருந்தார். ஆனால் இவர்களை விட இந்தப் போட்டியில் சென்னை ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் க்ரெய்க் மாத்யூஸ் தான். இந்திய ஸ்பின்னர்களே விக்கெட் எடுக்க கஷ்டப்பட்ட பிட்ச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், முதல் இன்னிங்ஸில் 44 ரன்கலையும் அடித்திருந்தார். அவரின் ஆட்டிட்யூட் மைதானத்தில் இருந்த எல்லோரையும் கவர்ந்தது. டிவியில் பார்த்தவர்கள் கூட யார்றா இது இப்படி துறு துறுவென்று இருக்கிறான் என்றே பார்த்தார்கள். பவுண்டரி லைனில் நின்றிருக்கும் போது எல்லா ரசிகர்களுடனும் அன்னியோன்யமாக சிரித்துக் கொண்டே இருந்தார். சென்னை வெயிலில் முகமெல்லாம் சிவந்து, பவுண்டரி லைனில் உருண்டு புரண்டு பீல்டிங் செய்ததால் அழுக்கான உடைகளுடன் முகமெல்லாம் சிரிப்புடன் இருந்த மேத்யூஸை அன்று மேட்ச் பார்த்தவர்களால் மறக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு கட்டத்தில் இந்தியாவின் கையில் இருந்த மேட்சை தங்கள் பக்கம் தன் பவுலிங்கால் திருப்பியவர் மாத்யூஸ். யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் ஆட்டம் முடிந்தாலும் அதில் பங்குபெற்றவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும் இன்று வரை ஒரு திருப்தி. இதுவரை நடந்திருக்கும் 2000க்கும் அதிகமான டெஸ்ட்மேட்சுகளில் டை ஆனது இரண்டே மேட்சுகள் தான். அதில் ஒன்றில் நாம் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதே அது.