April 19, 2025
சுந்தர் கடை
நான் எதிர்கொண்ட அதிர்ச்சிகளிலேயே முக்கியமானது சுந்தர், கார்த்திகாவை திருமணம் செய்து கொள்ள ஊரிலேயே வசதியான அவர்கள் வீட்டார் கேட்டு வந்தபோது மறுத்தது தான்.
அமைதியானவன்,தெளிவானவன் என்று பெயர் எடுத்தவன். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், எங்கள் செட்டில் எல்லோரும் பிளஸ் ஒன்றிற்கு மருத்துவம், பொறியியல், அக்ரி என சேர வேண்டும் என்று அதற்கேற்ற குரூப்புகள் கேட்டு முட்டி மோதிக் கொண்டிருந்த போது, எனக்கு எக்கனாமிக்ஸ் குரூப் தான் வேண்டும். எனக்கு மேத்ஸ் சரியாக வராது, பயாலஜியும் வேண்டாம். படம் வரையவும் வராது, அவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் படிக்க வேண்டாம் என்று சொல்லி எக்கனாமிக்ஸ் குரூப்பில் சேர்ந்தான்.
பிளஸ் டூ முடித்ததும் அவனுடன் படித்த எல்லோரும் மதுரையின் முக்கிய கல்லூரிகளில் அட்மிஷனுக்கு அலைந்து கொண்டிருந்தபோது, ஊருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு கல்லூரியில் பி காம் சேர்ந்தான்.
என்னுடைய எய்ம், குரூப் 2 அல்லது குரூப் 4. அதற்காக மட்டும் தான் படிப்பேன் என்று, கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்து படிக்க ஆரம்பித்தான். படிப்பாளி என்று சொல்லிவிட முடியாது தான்.
கல்லூரி முடிந்த உடனேயே அவன் செய்த செயல் எல்லோருக்கும் ஆச்சரியம். ஊரில் பஸ் ஸ்டாண்டுக்கு அருகே இருந்த ஒரு காம்ப்ளக்ஸின் தரைத்தளத்தில் பத்துக்கு எட்டு சைஸில் ஒரு கடையை பிடித்தான். பெரிய பிராண்ட் இல்லாத வேஷ்டிகள், துண்டுகள், சட்டைகள், சேலைகள், உள்ளாடைகள் என வாங்கி வைத்தான்.
காலையில் ஐந்தரை மணிக்கு கடையை திறந்து வைத்து விடுவான். அவனது காரணம், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் இறங்கி தான் சுற்றியுள்ள எல்லா கிராமங்களுக்கும் செல்கிறார்கள். குழந்தை பிறப்பு, திருவிழாக்கள், தீச்சட்டி, பிற விசேஷங்கள், துக்க நிகழ்வுக்கு வருபவர்கள் மலிவான விலையில் தான் எதிர்பார்ப்பார்கள். பெரும்பாலும் ஒரு முறைக்கு செய்ய வேண்டியது. எனவே இந்தப் பக்கம் தேடுவார்கள். இப்படி ஒரு கடை இருக்கிறது என்றால் காலப்போக்கில் தொடர்ந்து எல்லோரும் வருவார்கள் என்றான்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் பெரிய ஓட்டம் இல்லை. ஆனால் அவன், அங்கே போனால் காலை ஐந்தரையிலிருந்து இரவு வரை இந்த வகை துணிகள் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருந்தான். கடையிலும் எந்நேரமும் படித்துக் கொண்டே தான் இருப்பான். எல்லா தேர்வுகளையும் போய் எழுதி விட்டு வருவான்.
இந்த சூழலில் தான் எங்கள் செட்டில் எல்லோரும் சைட் அடித்துக் கொண்டிருந்த, ”தெற்குத் தெரு ஷோபனா” என்கிற பட்டப்பெயர் கொண்ட கார்த்திகாவிற்கு திருமணம் செய்ய அவர்கள் வீட்டார் முடிவெடுத்தார்கள். இது நம்ம ஆளு படம் வந்திருந்த நேரம், அப்போது நாங்கள் டியூஷன் படிக்கும் தெருவில் ஒரு கோலாட்டம் நடந்தது. அதில் பச்சை கலர் பாவாடை சட்டை, சிகப்பு கலர் தாவணி அணிந்து ஒல்லியாக, நல்ல சிவப்பாக கிட்டத்தட்ட ஷோபனா முகச்சாடையில் ஆடிய கார்த்திகாவை பார்த்து எல்லோரும் மனதை பறி கொடுத்து, அந்தப் பெயரை சூட்டியிருந்தார்கள்.
அப்படிப்பட்ட பெண்ணை, சுந்தருக்கு கேட்டு வந்தபோது அவன் மறுத்து விட்டான்.
பொதுவாக, எங்கள் ஏரியா பெரிய திருமணங்களில், ஒரு லாட்ஜில் பல ரூம்களைப் பிடித்து வைத்து, ஒரு ரூமில் ஃபுல்லாக சரக்கு பாட்டில்கள், இன்னும் இரண்டு ரூம்களில் சாப்பாடு என அரேஞ்ச் செய்வார்கள். சரக்கு போடுவதற்கு சில பல ரூம்கள். இந்த நிர்வாகப் பொறுப்பை திருமணம் செய்பவர்கள் நம்பிக்கையானவர்களிடம் கொடுப்பார்கள். கார்த்திகா திருமணத்திற்கு, எல்லா செட்டிற்கும் அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஃபுல் பாட்டில்களை கொடுக்கும் பொறுப்பில் இருந்தவன் சுந்தர்.
இரவு கடந்து எல்லோரும் போதையில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவனிடம் கேட்டேன். ஏண்டா என்று. அவன் சொன்னான்.
என்னுடைய பெர்சனாலிட்டிக்கு, எங்கள் வீட்டு வசதிக்கு, இனிமேல் எனக்கு கிடைக்கும் வேலைக்கு என எந்த விதத்திலும் கார்த்திகா மேட்ச் கிடையாது. அவள் வாழ வேண்டியது வேறு சூழல். கழுகிற்கு தேவை பரந்த வானம். கோழிகளை வேண்டுமானால் என் வீட்டில் வளர்க்கலாம் என்று.
பின்னர் அவனுக்கு திருமணம் நடைபெற்றது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் போராடிய சுந்தர் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றான். எல்லோரும் விஏஓ போஸ்டிங்கிற்கு போராடிக் கொண்டிருந்தபோது, எந்தவித மேல் வரும்படியும் வராத ஒரு டிபார்ட்மெண்டை தேர்வு செய்தான்.
அவனுடைய மச்சினன் என்னிடம் இது குறித்து புலம்பினான். அப்போது சொன்னேன் அவன் 300 பவுன் நகை,3 வீடு, 30 ஏக்கர் நிலத்தோடு கார்த்திகா வந்த போதே மறுத்தவன். உன் தங்கையை, உங்கள் குடும்பத்தை எப்படி நடத்துகிறான் என்பதில் குறை இருந்தால் சொல்லுங்கள் நான் பேசுகிறேன் என்றேன். எனக்குத் தெரியும் எல்லோருக்கும் பெய்யும் மழை போல அவன் எல்லோருக்கும் கொடுக்கும் சமமான மதிப்பு பற்றி.
அடுத்த சில வருடங்களில் சுந்தருக்கு ஊரில் ஒரு மதிப்பு ஏற்பட்டிருந்தது. காலை ஐந்தரை மணிக்கு கடையை திறந்து விடுவான். கடைக்கு இரண்டு பேரை நியமித்திருந்தான். அவர்கள் 9 மணிக்கு வந்ததும் இவன் அலுவலகத்திற்கு கிளம்பி விடுவான். சாயங்காலம் அலுவலகத்தில் இருந்து வந்து அவர்களை ஆறு மணிக்கு அனுப்பி விடுவான். அதன் பின்னர் அவன் கடையை பார்த்துக்கொள்வான். வரை இருப்பான். இடையில் வீட்டிற்குப் போய் வர, துணைக்கு என அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் வசதி இல்லாத பையன்கள் யாரையாவது மாலையில் பார்ட் டைமாக வேலைக்கு வைத்திருப்பான்.
சுந்தர் கடை என்பது எப்போது போனாலும் சரியான விலையில் நமக்குத் தேவையான அவசர துணிகள் கிடைக்கும் என்கிற பெயரை பெற்றது. அதுபோக அவன் செட்டில் படித்து வெளியூர் சென்று இருந்தவர்கள் மற்றும் உறவுக்காரர்கள் எல்லோருக்கும் அது ஒரு மையமாக விளங்கியது.
பொருட்களை கொடுத்து விடுவது, பேருந்து மூலம் வரும் பொருள்களை வாங்கி வைப்பது, அவ்வளவு ஏன் ஜாதகங்களைக் கொண்டு வந்து கொடுத்து இன்னொருவர் பெற்றுக் கொள்வது என சுந்தர் கடை என்பது எல்லோருக்கும் ஒரு அத்தியாவசிய மையமாக மாறியது.
அதைவிட, மாலை வேலைகளில் எங்கள் செட்டு ஆட்கள், உறவினர்கள் எல்லோரும் தங்கள் மனக்குமுறலை கொட்டவும், டென்ஷனாக இருக்கும்போது வந்து உட்காரும் இடமாகவும் மாறியது.
சொல்வதை அமைதியாக எந்த முக, உடல் சலனமும் இன்றி கேட்டுக் கொள்வான்.எந்தக் கருத்தும் சொல்ல மாட்டான். அதை யாரிடமும் பகிரவும் மாட்டான். கிளம்பும்போது எல்லாம் சரியாயிடும் பார்த்துக்கலாம் என்று மட்டும் சொல்லி அனுப்புவான். எனவே சுந்தர் கடையில் மாலை வேலைகளில் வந்து உட்காருபவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது.
இந்த முறை ஊருக்கு சென்றபோது, சுந்தரை பார்த்துவிட்டு பஸ் ஏறலாம் என்று அவன் கடை பக்கம் போனேன். அங்கே கார்த்திகாவின் கணவர் உட்கார்ந்து, சுந்தரிடம் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தார்.
Subscribe to:
Posts (Atom)