May 17, 2025
தக் லைஃப்
87 சமயத்தில் எங்கள் ஊர் பகுதியில் கல்லூரிகள் இல்லை. பெரும்பாலும் மதுரையில் இருக்கும் அமெரிக்கன், மெஜூரா, தியாகராஜா ஆர்ட்ஸ் மற்றும் வக்ஃப் போர்டு கல்லூரிகளில் தான் எங்கள் ஊர் காரர்கள் சென்று படிப்பார்கள்.
ஹாஸ்டலில் தங்கி இருக்கும் அவர்கள் சனி ஞாயிறு வரும்போது, அவர்கள் பார்த்த படங்களைப் பற்றி சொல்வது தான் எங்களுக்கு முதல் தகவல் அறிக்கை. ஏனென்றால் எந்த படமாக இருந்தாலும் எங்கள் ஊருக்கு நூறு நாள் கழித்து தான் வரும்.
87 தீபாவளி சமயத்தில் போடப்பட்ட ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், மனிதன் படத்தின் வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன், உழவன் மகன் படத்தின் செம்மறியாடே செம்மறியாடே பாடல்கள் கொடுத்த தாக்கத்தை, நாயகனின் நான் சிரித்தால் தீபாவளி கொடுக்கவில்லை. என்னடா பாட்டு வரியே காதுக்குள்ள போக மாட்டேன் என்கிறதே என்பதுதான் அப்போது பேச்சாக இருந்தது.
தீபாவளி முடிந்து அதிரசம் முறுக்கு ரவா லட்டு வாளிகளோடு ஹாஸ்டல் சென்ற சீனியர் அண்ணன்கள், திரும்பும் நாளை எதிர்பார்த்திருந்தோம்.
நான் கமல் ரசிகன் என்பதால் அண்ணே நாயகன் எப்படி இருக்கு என்று எல்லோரிடமும் போய் கேட்டேன். டேய் அதை கதை மாதிரி சொல்ல முடியாதுடா. அது பாட்டுக்கு போகும். கவனமா பாக்கணும். அவ்வளவுதான் என்றார்கள். சிலர் படம் புரியவில்லை என்றும் சொன்னார்கள்.
எங்கள் ஊருக்கு படம் வந்தபோது, ஊர் தியேட்டரில் சுமாரான சவுண்ட் சிஸ்டம். சில டயலாக்குகள் காதில் கேட்கவே இல்லை. ஆனால் அதன் பின்னர் ஒவ்வொருவராக நாயகனை பற்றி பேச ஆரம்பித்ததும் தான் அந்தப் படத்தின் பிரம்மாண்டம் உறைத்தது.
அந்தப் படம் அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த பல பென்ச் மார்க்குகளை உடைத்து போட்டு புதிதாக பலவற்றை நிறுவியது. ஆர்ட் டைரக்சன் எப்படி இருக்க வேண்டும், ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டும் முக்கியமாக வயதானவர் என்று காட்ட வேண்டும் என்றால் தலை முடிக்கு சுண்ணாம்பு அடித்து விட்டு ஒரு கோட் மாட்டி விடக்கூடாது.
உருவம்,குரல், நடை முதற்கொண்டு அப்படியே மாற வேண்டும் என்று தமிழ் சினிமாவிற்கு பாடம் எடுத்தது.
சினிமா என்பது காட்சி ஊடகம். முடிந்தவரை வசனங்கள் குறைவாக இருக்க வேண்டும். அந்த வசனங்களும் அம்பு போல பாய வேண்டும். என்று பலவற்றை சொல்லாமல் சொல்லியது.
அதன் பின்னர், மணிரத்னம் கமல் அடுத்து இணைவார்களா என்ற எதிர்பார்ப்பிற்கு, பதிலாக வந்தது ஆனந்தம் திரைப்படம். அதில் நானா படேகரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் கமல் - மணி creative difference காரணமாக, கமல் அதிலிருந்து விலகினார். நானாவும் விலகினார்.
பின்னர் அதே ஸ்கிரிப்ட்டை, மோகன்லால் பிரகாஷ்ராஜ் வைத்து இருவர் என இயக்கினார் மணி.
கிட்டத்தட்ட நாயகன் வெளியாகி முப்பத்தி எட்டாவது வருடம். எவ்வளவோ மாற்றங்கள். அந்த சமயத்தில் பிறந்தவர்கள் தற்போது சினிமா பார்க்க தியேட்டருக்கு செல்ல வேண்டுமா என்று தயக்கம் கொள்ளும் அளவிற்கு காலம் மாறி விட்டது.
வெகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முரட்டுத்தனமான இயக்குனர்- நடிகர் காம்போ.
இன்று மாலை 5 மணிக்கு Thug life படத்தின் டிரைலர் வருகிறது. மீண்டும் அந்த மேஜிக் நடக்க வேண்டும் என்பது ஒரு கமல் ரசிகனாக எதிர்பார்ப்பு. அன்று ஒவ்வொரு அண்ணனாக சென்று, படம் எப்படி இருக்கிறது என்று கேட்ட மனம், இன்று ஜூன் 5ஆம் தேதி வரும் ஆன்லைன் விமர்சனங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
நானும் மகனும்
ஞாயிறு பிற்பகலில் வைகை எக்ஸ்பிரஸில் இருந்து இறங்கி, மகன் தங்கி இருந்த திருவல்லிக்கேணி மேன்சனை சென்றடைந்த போது, அவன் தூங்கிக் கொண்டிருந்தான்.
நான் சாப்பிட்டு விட்டேன். நீங்கள் பக்கத்தில் ஏதும் சென்று சாப்பிட்டு வருகிறீர்களா? என்றான்.ட்ரெயின்ல வரும்போது சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லி அறையில் இருந்த மகனின் ரூம் மேட் பெட்டில் படுத்து கொண்டேன்.
ஐம்பதை கடந்தாகி விட்டது. இதுவே 5-10 வருடம் முன்னால் என்றால் கூட, இப்படி வைகையில் இருந்து இறங்கினால் நாயர் மெஸ் அல்லது ஒரு நல்ல ஆந்திர மெஸ்ஸில் சாப்பாடு. முடித்தவுடன் அப்படியே பொடி நடையாக நடந்து தேவி தியேட்டரில் நாலு மணி ஷோ. படம் முடிந்ததும் சின்ன சமோசாவும் இராணி டீயும். இப்போது படுத்தால் போதும் என்று இருக்கிறது.
ஆறு மணி அளவில் எந்திரித்தேன். மகன் லேப்டாப்பில் அவன் அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு டீ சாப்பிட்டு வருவோமா? கிரவுண்டுக்கு எதுத்தாப்புல ஒரு கடையில நல்லா இருக்கும் என்றேன்.
நீங்க போய் சாப்பிட்டு வாங்க எனக்கு வேலை இருக்கிறது என்றான். டீ சாப்பிட்டு வந்ததும் பையில், குறிப்பு எடுத்து வைத்திருந்த பேப்பர்களை புரட்ட துவங்கினேன்.
நல்லா பிரிப்ஃபேர் பண்ணிட்டீங்களா? நாளைக்கு கிடைச்சிருமா? என்றான் மகன். 25 வருஷமா பார்த்துக்கிட்டு இருப்பது தானே? இப்ப லேட்டஸ்ட் அட்மினிஸ்ட்ரேஷன் அப்டேட் மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கேன் என்றேன்.
இரவு 8 மணி ஆனது. ஏதாச்சும் ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிடலாமா என்று கேட்டேன். அரை மனதுடன் உடன் வந்தான். சாப்பிட்டு முடித்ததும், அப்படியே பீச்சுல போய் கொஞ்சம் அலைகளை பார்த்துட்டு காத்து வாங்கிட்டு வரலாம் என்றேன்.
சரி என்று தலையசைத்து உடன் நடக்க துவங்கினான். அப்போது சிறிய மகனிடம் இருந்து அழைப்பு. சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டான். ஆச்சு நீ என்ன பண்ற ..என்ன.. அவனிடம் பேசிக் கொண்டே நடந்தேன்...
கடற்கரையை நெருங்கி மணலில் நடக்க ஆரம்பித்தோம். அப்போது மகன் கேட்டான். என்னை விட அவன் மேல தானே உங்களுக்கு பாசம் அதிகம் என்று.
எனக்கு ரெண்டு பேர் மீதும் ஒரே பாசம் தான். உனக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். உனக்கு நாங்கள் செய்ததெல்லாம் உன்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தம்பிக்கு செய்ததை நீ பார்த்துக் கொண்டு இருந்தாய்.
அதனால் உனக்கு அப்படி தோன்றுகிறது என்றேன். அது மட்டும் வச்சு சொல்லல. ஒரே செயலுக்கு நீங்க என்ன தண்டிக்கிற விதமும், அவன தண்டிக்கிற விதமும் வேற. அவ்வளவு ரியாக்ஷன் மாறுறது பார்த்திருக்கிறேன் என்றான்.
சில நிமிடம் எங்களுக்குள் ஒரு அமைதி நிலவியது. அப்படி இல்லடா. நான், நீ வளர்ந்து வரும் போது என் அப்போதைய வயதோடு
உன்னை கம்பேர் செய்து பார்த்தேன். நான் செய்வது போலவே வேலைகள், ஒழுங்காக படிக்க வேண்டும், சேட்டை செய்யக் கூடாது என்று.
அதனால் உன் மேல் எனக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு அது நடக்காத போது மிகக் கேவலமாக கூட உன்னை அடித்திருக்கிறேன் அத நெனச்சு இப்போ தினமும் மனசு கஷ்டப்படுகிறேன்.
ஆனால் உன் தம்பி வளர்ந்து வரும் போது உன்னைத்தான் அவனுக்கு பெஞ்ச் மார்க்காக மனம் நினைத்தது. அவன மாதிரி தானே இருக்கான் அல்லது அவனைவிட பரவாயில்லை என்று தோண ஆரம்பித்தது. அதனால், நீ செய்த அதே தவறுக்கு அவனை குறைவாக தண்டித்திருக்கிறேன்
என்னுடைய தவறுதான் என்றேன்.
நாளை காலை உங்களுக்கு எத்தனை மணிக்கு இன்டர்வியூ என்று கேட்டான். பத்து மணிக்கு அங்கே இருக்க வேண்டும் என்றதும், சீக்கிரம் தூங்குங்க ட்ரெயின் டயர்ட் வேற இருக்கும். காலைல எந்திரிச்சு சீக்கிரம் கிளம்பனும் என்றான்.
திரும்பி ரூமுக்கு வரும்போது, நான் நல்லாத்தான் உங்கள பாத்துகிட்டேன், எங்க அப்பாவ கம்பேர் பண்ணும் போதெல்லாம் நான் எவ்வளவோ மடங்கு மேல் என்றேன்.
ஆத்திரமான குரலில் பேச ஆரம்பித்தான். இப்படி கம்பேர் பண்ணாதீங்க. அவர் அந்தக் கால ஸ்டாண்டர்டுக்கு உங்கள பாத்துகிட்டார். நடத்தினார்.
ஒரு தலைமுறை தாண்டி எவ்வளவோ மாறிவிட்டது. நீங்கள் அவரை விட கொஞ்சம் பெட்டர் என்று தான் சொல்லலாமே தவிர, இந்தத் தலைமுறை பெற்றோர்களோடு ஒப்பிட்டால் நீங்கள் மோசம் தான் என்றான்.
இப்படித்தான் தாத்தா அந்த காலத்தில், பாட்டியை நடத்தியதை விட நான் நல்லாத்தான் வச்சிருக்கேன் என்று என் அம்மாவையும் நீங்கள் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. உங்கள் ஒப்பீடு இந்த தலைமுறையில் தங்கள் மனைவியை, குழந்தைகளை பார்ப்பவர்களோடு இருக்க வேண்டுமே தவிர போன தலைமுறையோடு அல்ல என்றான்.
மேன்சனை நெருங்கினோம். அப்படியே, இந்தப் பக்கம் ஒரு கடை இருக்கும் இல்ல அங்க பால் குடிச்சிட்டு போயிடலாம் என்றேன்.
இதுதான் இதுதான் உங்ககிட்ட பிடிக்காதது. வந்ததுல இருந்து உங்க சுகத்தை பத்தியே தான் யோசிக்கிறீங்க, பேசுறீங்களே தவிர, எனக்கு என்ன வேணும்? எனக்கு என்ன பிடிச்சிருக்கு? சாப்பிடறியான்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா என்றான்.
இல்லப்பா நான் நல்லதா தானே செலக்ட் பண்ணி சொல்றேன். அது உனக்கும் பிடிக்கும்ல என்றேன். அதுதான், எல்லாத்தையுமே உங்க கோணத்திலேயே தான் பாக்குறீங்க. ஒரு தலைமுறை மாறிடுச்சு. என்னோட விருப்பம் என்ன?எது தேவையா இருக்கும்னு கூட உங்களுக்கு தோணல. அதுதான் இந்த குடும்பத்தை இப்படி சரியில்லாம வச்சிருக்கு.
இந்த வயசுலயும் இருக்கிற வேலையோடு சேர்த்து வேற என்ன சம்பாதிக்கலாம்னு நினைக்காம, சம்பளம் பத்தல, மெட்ராஸ்ல வேலை தேடுறேன்னு வர்றீங்க. குடும்பத்தோடையும் இப்ப இருக்க சூழலில் வர முடியாது. அப்படி வந்தா பத்தவும் செய்யாது. இங்க மேன்சனில் தங்கிட்டு வீட்டுக்கு கொஞ்சம் பணம் அனுப்பிவிட்டு ஜாலியா இருக்கலாம் என்று தான் உங்கள் மனசு சொல்லுது என்றான்.
சத்தியமா இல்லடா. அங்க குடுக்குற சம்பளம் பத்த மாட்டேங்குது. விலைவாசி கூடிக்கிட்டே போகுது. சம்பளம் ஏறுற மாதிரியே தெரியல. உன் தம்பியை இன்னும் நாலு வருஷம் எப்படியும் படிக்க வைக்கணும். அதனாலதான் இந்த முயற்சி என்றேன்.
இந்த யோசனை எல்லாம் வயசு காலத்தில் இருந்திருக்கணும். அப்ப சுகமா ஊரிலேயே இருந்து நல்லா தின்னுட்டு இப்ப பத்தல பத்தலன்னா எப்படி என்றான்?
ரூமுக்கு திரும்பி சிறிது நேரம் படித்துக்கொண்டிருந்தேன். அவன் முறைத்துப் பார்ப்பது போலவே உள்ளுணர்வு சொல்லியது.
காலை எழுந்ததும், இப்ப டிஃபன் எங்க நல்லா இருக்கும் என்ற கேள்வி நாக்கு வரை வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவனுடனேயே சென்றேன். அவன் வழக்கமாக சாப்பிடும் இடத்தில் ஒரு தோசை வாங்கி கொடுத்து பஸ் ஏற்றி விட்டான்.
இன்டர்வியூ முடிந்தது. பெரிய திருப்தி இல்லை. மேன்சனுக்கு திரும்பி, அவன் வரவுக்காக காத்திருந்தேன். வேலை முடிந்து களைப்பாக வந்தான்.
நைட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணிக்கு. இப்போ கிளம்பி போனா சரியா இருக்கும். கிளம்புகிறேன் என்றேன். ஸ்டேஷனுக்கு நான் வருகிறேன் என்றான்.
உங்களுக்கு சங்கீதா தானே பிடிக்கும் இங்கே சாப்பிடுவோம் என்றான். இல்ல உனக்கு பிடிச்ச இடத்தில் சாப்பிடுவோம் என்றேன்.
பரவாயில்ல சங்கீதாவே போவோம் என்றான். சாப்பிட்டு பிளாட்பாரத்திற்கு வந்தோம்.
நான் ஒரு சூப்பர் அப்பான்னு நினைச்சுகிட்டு நிறைய தப்பு பண்ணிட்டேன். ரொம்ப ஸாரி என்றேன்.
அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஒன்றும் சூப்பர் மகன் இல்லை. எனக்கு சூப்பர் அப்பாவும் தேவையில்லை. எங்க அப்பா மாதிரி இல்ல நான். எல்லாத்தையும் உங்களுக்காக விட்டுக் கொடுத்தேன் என்று மட்டும் இனி நினைத்துக் கொள்ளாமல் முக்கியமாக சொல்லாமல் இருங்கள் போதும் என்றான்.
சரி என்று கம்மிய குரலில் சொல்லிவிட்டு, தலை குனிந்தவாறு ட்ரெயினில் ஏறி உட்கார்ந்தேன். ட்ரெயின் கிளம்பியதும் ஹெட் செட்டில் பாடல் கேட்போமே பேக்கை திறந்தேன். எனக்கு பிடித்த பாஷா அல்வா பாக்கெட் இருந்தது.
மீனாட்சி சுடர்விழி
மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றி ஒரு வாரம் கழித்து, மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கும் நாளில் இருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வரை எங்கள் செட் பசங்கள் எல்லோரும் கீழ சித்திரை வீதி,மேல
சித்திரை வீதி, அம்மன் சன்னதி பகுதிகளில் தான் சுற்றிக்கொண்டே இருப்போம்.
அந்த டீன் ஏஜ் பருவத்தில், மீனாட்சி அம்மனைப் பற்றி பேசுகிறோமோ இல்லையோ, மீனாட்சி சுடர்விழியைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டோம்.
மீனாட்சி என்பது மதுரையில் சாதாரணமாக வைக்கப்படும் பெயர் என்றாலும், மீனாட்சி சுடர்விழிகள் அரிதாகத்தான் இருப்பார்கள். அவர் தந்தை எப்படி இந்தப் பெயரை அவருக்கு வைத்தார் என்று எங்களுக்கு இன்னமுமே ஆச்சரியம் தான். அவர் அப்போது மதுரை பி ஆர் சி யில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
சில சிவன் கோயில்களில் கருவறை சிறியதாக இருக்கும். மின்விளக்கு கூட இருக்காது. வேறு எந்த அலங்காரமும் இல்லாமல் லிங்கம் மட்டும் இருக்கும். அதிகபட்சம் தண்ணீரால் கழுவி மட்டும் தான் விட்டிருப்பார்கள். அந்தக் கருவறையில் தொங்கும் ஒரு விளக்கில் ஒரு சுடரை ஏற்றி இருப்பார்கள். அந்த சுடர் தீர்க்கமாக எரிந்து, அந்தக் கருவறையையே அழகாக்கும்.
சிவனை தரிசிப்பதை விட அந்த சுடர் நம் மனதை இழுக்கும். அப்படிப்பட்ட கண்களை உடையவள் தான் மீனாட்சி சுடர் விழி. பிறந்த போது எல்லாம் அப்படி ஒரு தீர்க்கம் அவள் கண்களில் தென்பட்டதில்லை. பருவ வயதை அடைந்த பின்னர் அவளைப் பார்க்கும் யாராலும் அவள் கண்களை விட்டு அகல முடியாதபடி அழகு சுடர் விடும் கண்கள் அவளுக்கு அமைந்தன.
எல்லா நாளும் மீனாட்சி மீது கிரேஸோடு அலைந்து கொண்டிருந்த எங்கள் தெரு பையன்கள், மீனாட்சி பட்டாபிஷேகத்தன்று இன்னும் ஒரு படி மேலே சென்று விடுவார்கள்.
மதுரையின் ராணியாக இன்று முடி சூட்டிக் கொண்டாயே
என் இதய ராணியாக என்று முடி சூட்ட வருகிறாய்
என்று கவிதை எழுதுவதில் துவங்கி,
மீனாட்சி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, இன்னைக்கு பட்டாபிஷேகமாமே? எங்கே கிரீடத்தை காணோம் என்று கமெண்ட் அடிப்பது வரை அவரவர் ஸ்டைலில் கவர முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்.
கண்களின் தீர்க்கம் அவள் படிப்பிலும் இருந்தது. பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றாள். எங்கள் தெரு பையன்களுக்கு எல்லாம் அவளால் வலுவாக வீட்டில் திட்டு விழுந்தது. ஒரு பொம்பள புள்ள, வீட்டு வேலை எல்லாத்தையும் அவங்க அம்மா கூட சேர்ந்து பார்த்துகிட்டு, ஸ்கூல் ஃபர்ஸ்ட்டும் எடுக்குறா?
கொட்டிக்கிற வேலை மட்டும்தான் உனக்கெல்லாம் கொடுத்து இருக்கு. எங்க போச்சு உனக்கு அறிவு? எங்க தல விதி உன்னைய பெத்துட்டோம். என்பது அப்போது மீனாட்சியால் எங்கள் தெரு பையன்கள் எல்லோர் வீட்டிலும் அவரவர்களுக்கு கிடைத்த திட்டு.
சில தந்தைகள் இருப்பார்கள். அவர்களை ஏதாவது ஒரு அதிகாரி அல்லது மருத்துவர் போன்றோர் கவர்ந்திருப்பார்கள் தங்கள் பிள்ளை அதேபோல வர வேண்டும் என்று அதற்காகவே மெனக்கிடுவார்கள். சொல்லி சொல்லி வளர்ப்பார்கள்.
மீனாட்சி சுடர்விழியின் தந்தையை அப்படி வசீகரித்தவர், அவரது சொந்த ஊரில் ஸ்டேட் பாங்க் பீல்ட் ஆபிசராக இருந்த ஒரு பெண் அதிகாரி.
நல்ல காட்டன் சேலை கட்டிக்கிட்டு, கையில லெதர்வாட்ச் கட்டிக்கிட்டு, சின்ன கண்ணாடி போட்டு கிட்டு ஜீப்ல எல்லா ஊருக்கும் சுத்தி சுத்தி வந்து லோன் கொடுப்பாங்க. பீல்ட் ஆபிசர் வராங்க பீல்ட் ஆபிசர் வர்றாங்கன்னு எங்க ஊரே காத்து கிடக்கும்.
அது மாதிரி ஒரு பேங்க் ஆபீஸரா மீனாட்சியை ஆக்கிரனும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதற்காகவே மீனாட்சி, தான் பிஎஸ்சி அக்ரி படிக்க வேண்டும் என்று, பிளஸ் ஒன் பிளஸ் டூவில் வெறித்தனமாக படித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் என்ட்ரன்ஸ் தேர்வுகள் இருந்தன. அதற்கான கோச்சிங் கிளாசிற்காக தினமும் காலையில் மீனாட்சியை கூட்டிக்கொண்டு போய்விட்டு கூட்டி வருவதற்காகவே அவர் தந்தை இரண்டு மாதம் விடுமுறை எடுத்தார்.
மீனாட்சி எதிர்பார்த்தபடியே பிஎஸ்சி அக்ரி கிடைத்தது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அவர் தந்தை மீனாட்சியை சேர்த்து விட்டார்.
தன்னுடைய கனவு நனவாக அதற்கடுத்தும் ஏராள முயற்சிகளை மீனாட்சியின் தந்தை எடுத்தார்.அவரது வேலை நாள் போக மற்ற நாள்களில் வேன் ஓட்டுவது, திருவிழா, டூர் பஸ்கள் ஓட்டுவது என்று எந்நேரமும் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார்.
பேங்க் எக்ஸாம் படிப்புக்கும் கோச்சிங் எல்லாம் இருக்கு. நல்ல சென்டர்ல சேர்த்து விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவரது அம்மாவும் சளைத்தவர் இல்லை. அந்த சமயத்தில் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி ஏராள கடைகள் இருந்தன. அதில் ஒரு கடையில் கேஷியராக பணிபுரிந்தார்.
நானும் எங்கள் செட் பையன்களும் டிகிரியை ஒரு வழியாக முடித்தோம். மதுரையை சுத்துன கழுதை வேறு எங்கேயும் போகாது. அதனால இங்கேயே இருந்து சுகம் கண்டுறாதிங்க என்று எங்கள் எல்லோரையும் சென்னைக்கு பேக் பண்ணி அனுப்பி வைத்தார்கள்.
தீபாவளி,பொங்கல், சித்திரை திருவிழா இவற்றிற்க்கு மட்டுமே வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டோம்.
அப்படி ஒரு சித்திரை திருவிழாவிற்கு வந்த போது, மீனாட்சி பட்டாபிஷேகம் அன்று எங்கள் தெரு பையன்கள் அனைவரின் கண்களும் தேடியது மீனாட்சி சுடர்விழியைத் தான்.
ஒருவேளை பேங்க் வேலை கிடைத்து போய்விட்டாரா என்று விசாரித்த போது தான் தெரிந்தது.
மீனாட்சிக்கு யாரோ செய்வினை வைத்து விட்டார்கள், அதனால் அவள் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. செய்வினை எடுப்பதற்காக அவரது பெற்றோர்கள் அவரை சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள் என்று.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள். எங்கெல்லாம் செய்வினை எடுக்கிறார்கள் என்று தகவல் வருகிறதோ அங்கெல்லாம் மீனாட்சி சுடர்விழியை அழைத்துச் சென்றனர் அவர் பெற்றோர்கள். நாகூர் தர்கா, பிரத்தியங்கரா தேவி, படவேடு அம்மன் என எல்லா திசைகளிலும் சென்றார்கள். எந்தப் பயனும் ஏற்படவில்லை.
பின்னர் அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி, பேய் விரட்டும் ஆட்களிடம் தொடர்ச்சியாக அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். பேய் ஓட்டுபவர்கள் வேப்பிலையால் அடி அடி என்று அடித்து மயக்கம் அடையவே செய்து விடுவார்கள். பின்னர் மயக்கம் தெளிந்து விழித்த பின்னரும் மீனாட்சி அப்படியே தான் இருந்தார்.
மீனாட்சிக்கு அப்போதைய அந்த ஏரியா அதிகபட்ச திருமண வயதான 30 தாண்டியது. அவரது தந்தையும் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணிக்கு சேர்ந்தார். ஒரு நாள் மீனாட்சியை பார்க்க சென்று இருந்தேன்.
அவர் தந்தை நீண்ட நேரம் என்னிடம் மனம் விட்டு பேசினார். காலேஜ் முடிச்சு வந்த உடனே,
என் காதில் ஏதோ குரல் கேட்கிறது கேட்கிறது என்று சொன்னாள். முதலில் ஈ என் டி டாக்டரிடம் கூட்டி போனேன். அவர் காதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.
அவள் தொடர்ச்சியாக, என்னை வெளியில் இருந்து ஒருவன் பேசி மயக்க பார்க்கிறான், என்னை தப்பானது எல்லாம் செய்யச் சொல்கிறான், இல்லாவிட்டால் என்னை சாகச் சொல்கிறான் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
திடீர் திடீரென இரவில் எந்திரித்து உட்காருவாள். சில நாட்கள் தற்கொலைக்கு முயன்றாள்.
எனக்கு எதுவும் புரியாமல் செய்வினை தான் வைத்து விட்டார்கள் என்று சில வருடங்கள் வீணடித்தேன். பின்னர் பேய் பிடித்து இருக்கும் என்று சிலர் சொன்னதை நம்பி அதில் பல வருடங்களை வீணடித்தேன்
பின்னர், என் மேனேஜர் தான் சொன்னார் இது மனநோயாக இருக்கும். சீஷோபெர்னியாவாக இருக்கலாம் என்று. மீனாட்சிக்கு இப்படியான சில வருடங்களிலேயே ஒருவர் இதை சொன்னார். நான் தான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இன்னொரு பக்கம் மனநோய் என்று வெளியில் சொல்லி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் அவளுக்கு எப்படி திருமணம் நடக்கும் என்று பயந்தேன். செய்வினை, பேய் பிடித்து இருக்கிறது என்பதை பெரிதாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. எனவே என் மனமும் அதை நோக்கியே சென்றது.
இப்போதுதான் ஆனது ஆகட்டும் என்று மனநல மருத்துவரிடம் காட்டி வருகிறேன் என்றார்.
10- 12 ஆண்டுகள் மீனாட்சி அனுபவித்த வேதனை நரகத்திற்கு இணையானது. ஒருவனுக்கு கை கால் அடிபட்டால் அல்லது மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வந்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். எல்லோருக்கும் சொல்கிறார்கள். ஆறுதல் சொல்ல அனைவரும் வருகிறார்கள்.
ஆனால் மனநோய் என்பதை மூன்றாவது ஆள் அறியாமல் பூட்டி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்னும் நம் சமுதாயத்தில் இருக்கிறது. உடல் குறைபாடை போலத்தான் அதுவும் என்பதை யாருமே ஏற்றுக் கொள்வதில்லை.
சீஷோபெர்னியா பாதித்தவர்களை குடும்பம் மூன்றாம் நபர் அறியாமல் பொத்தி பாதுகாக்க நினைக்கிறது. அதனால் பல கஷ்டங்களை எதிர்கொள்கிறது. அந்தக் கஷ்டங்களை வேதனைகளை வேறு வேறு யாரிடமும் காட்ட முடியாமல் அந்த நோயாளியின் மீது காட்டும் அவலமும் நடைபெறுகிறது.
ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு மீனாட்சியின் பெற்றோர் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்க துவங்கினார்கள்.
இந்த சமயத்தில், திடீரென வீட்டில் இருந்து கிளம்பி அருகில் இருக்கும் கடைகளுக்கு மீனாட்சி செல்வார். அங்கே போய் உட்காருவார். ஒரு ஆண் அப்படி போகும்போது பெரிய பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் ஒரு பெண் அப்படி போய் உட்காருவது சமுதாயத்தில் கேலி பொருளானது.
மாத்திரைகளின் வீரியம் அவரை தூங்க வைத்துக் கொண்டே இருக்கும். மீனாட்சியின் பெற்றோரும் வயது முதிர்வின் காரணமாகவும், இவ வீட்டுக்குள்ளேயே இருந்தா போதும் என்ற நிலைப்பாட்டின் காரணமாகவும், தூங்கிட்டே இருந்தா கூட போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.
மீனாட்சி நன்றாக சாப்பிடுவார். மாத்திரை போட்டுக் கொண்டு நன்றாக தூங்குவார். இதனால் உடல் பருமன் அதிகமாகிக் கொண்டே போனது. உடல் பொலிவு இழந்தது. மீனாட்சியின் தாயாரால் ஓரளவிற்கு தான் அவருக்கு சிருட்சைகள் செய்ய முடிந்தது.
சில வருடங்களில் மீனாட்சியின் தந்தையார் காலமானார். அவரது தாய் மட்டும், நானும் போயிட்டா இவ என்ன ஆவா? என்கிற மனநிலையில் வைராக்கியமாக தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
ஏழு எட்டு வருடங்களாக நான் மதுரைக்கே வரவில்லை. மிகவும் ஆச்சரியமாக தந்தை அழைத்தார். இந்த வருஷம் மண்டகப்படி நம்ம பங்காளிகள் செய்ய வேண்டியது. ஏற்பாடுகள் எல்லாம் நிறைய இருக்கிறது, நிச்சயம் குடும்பத்தோட வந்துவிடு என்றார்.
வந்து இறங்கிய நாள் மீனாட்சி பட்டாபிஷேகம். ரெண்டு நாள் கழிச்சு தேரோட்டம். நம்ம கீழ சித்திர வீதி,மேல சித்திர வீதி ஆட்கள் எல்லாம் இருந்தா இந்த தடவை வடம் பிடிப்போம் என்று பேசிக் கொண்டிருந்தோம்.
அந்த சமயத்தில்தான், என்னப்பா இப்படி ஆகிப்போச்சு என்ற குரல் கேட்டது. மீனாட்சி இறந்துவிட்டார் என்று தகவல் சொன்னார்கள்.
உடனடியாக அவர்கள் வீட்டிற்கு போனோம். அவரது தாயார் அழுவதற்கு கூட சக்தியற்று சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.
மீனாட்சியில் முகத்தைப் பார்த்தேன். சிவன் கோவில் கருவறை சுடர் போல ஒரு காலத்தில் ஒளிந்த அந்த கண்கள், எந்த ஜீவனும் இல்லாமல், பீளையோடு நிலைகுத்தி இருந்தது.
கனத்த மனதோடு கண்களை மூடிய போது, பக்கத்து வீட்டு டிவியில் லோக்கல் கேபிள் சேனலில் மீனாட்சி பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
குட்ட பெரியப்பா
எங்கள் செட் பங்காளி பையன்களால் குட்ட பெரியப்பா என்றும், சூப்பர் சீனியர் பங்காளிகளால் பொடி மட்ட என்றும், கட்சிக்காரர்களால் வதிலை அண்ணாத்துரை என்றும் அழைக்கப்பட்டவர் என்னுடைய பெரியப்பா.
அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் மிகவும் பிரபலமாக இருந்த ராஜா பிரஸ்ஸில் ஆல் இன் ஆலாக இருந்தவர்.
அப்போது தனித்தனியாக இருக்கும் எழுத்துக்களை கோர்த்து, பிரிண்டிங்கிற்கான மேட்டரை உருவாக்குவார் கம்பாசிட்டர். அதை ப்ரூப் பார்த்த பின்னர் அச்சடிக்க துவங்குவார்கள்.
விசேஷ பத்திரிகைகள், நோட்டீஸ் என எதுவாக இருந்தாலும், மேட்டரை தெளிவாக ரெடி பண்ணுவதில் பெரியப்பா கில்லாடி.
எங்கே ஒற்று வர வேண்டும், ன, ண எங்கே வரவேண்டும் தமிழ் ஆண்டு, அவரவர் ஜாதிக்கு ஏற்ப போட வேண்டிய வாசகங்கள், தாய்மாமன், பெரியப்பா, சித்தப்பாமார் புரோட்டோகால்கள் என எல்லாவற்றையும் சரிபார்த்து கொடுப்பார்.
கட்சி நோட்டீஸ்கள் அடிக்கும் போதும், மாவட்டம், ஒன்றியம், கிளை பிரதிநிதி வரை சரியான புரோட்டோ கால் இருக்கிறதா என்று சரி பார்த்து பிழை திருத்தி கொடுப்பார்.
பேரை முன்னாள் போடவில்லை என்பதால் நின்று போன கல்யாணங்களும் வெட்டுக்குத்து வரை போன அரசியல் கட்சி கூட்டங்களும் எங்கள் ஏரியாவில் மிக அதிகம்.
எனவே எதற்கும் அவரிடம் ஒருமுறை சரிபார்த்து விடுவோம் என்று அவர் ஒப்புதல் அளித்த பின்னால் தான் அச்சுக்கே போவார்கள்.
நான் ஆறாம் வகுப்பிற்கு சென்றபோது, தெருவில் இருந்த அண்ணன் ஒருவரின் பழைய புத்தகங்களை தந்தை வாங்கி கொடுத்தார்.
புது புத்தகம் தான் இல்லை. பைண்டிங் ஆவது பண்ணிக் கொடுங்கள் அட்டை கூட இல்லாமல், அழுக்காக இருக்கிறது என்றேன்.
ராஜா பிரஸ்ல உங்க பெரியப்பா இருப்பாரு. பைண்டிங் எல்லாம் வேணாம். ஏதாவது ஒரு அட்டையை வைச்சு டொய்ன் நூல் போட்டு தைச்சு கொடுக்க சொல்லு என்று அனுப்பினார்.
புத்தகங்களை எடுத்துக்கொண்டு அவரை பார்த்தேன். நான்கரை அடி உயரம். சற்று பருமனான உருவம், மாநிறம். எப்போதும் அரை கை வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி.
வேட்டி இடுப்பு மடிப்பில் அவரது ஜீவ சக்தியான ஒரு பொடி மட்டை.
எழுதும் பொழுதோ அல்லது ப்ரூப் பார்க்க துவங்கும் போதோ அந்த பொடி மட்டையை எடுப்பார். வலது கை பெரு விரலாலும் ஆட்காட்டி விரலாலும் ஒரு சிட்டிகை எடுத்து, இடது கை ஆள்காட்டி விரலால் இடது மூக்கை மூடிக்கொண்டு, வலது மூக்கில் பொடியை சர் என்று இழுப்பார். அடுத்த உடனே அடுத்த சிட்டிகை எடுத்து, வலது கை நடு விரலால் வலது மூக்கை மூடிக்கொண்டு, இடது முக்கால் பொடியை ஒரு இழு இழுப்பார்.
பத்மா சுப்ரமணியம் அவர்கள் சிருங்கார ரசம் காட்ட மூக்குத்தியை சுற்றி ஒரு அடவு காட்டுவார். அதற்கு இணையாக வெகு நளினமாக மூக்குப்பொடி போடுவார் பெரியப்பா.
விவரம் சொன்னதும், ரோடு தாண்டி, டி ஏ எஸ் ரத்தினம் பட்டணம் பொடி கடை இருக்கும் அங்கே என் பெயரைச் சொல்லி பொடி வாங்கிட்டு வா என்றார்.
வாங்கி வருவதற்குள், ஒரு கெட்டி அட்டையை வைத்து டொய்ன் நூலால் அழகாக தைத்திருந்தார். கூடுதலாக ப்ரஸ்ஸில் மூன்று பக்கங்களிலும் அழகாக வெட்டி வைத்திருந்தார். அந்த அழுக்கெல்லாம் போய் புது புத்தகங்கள் போல இருந்தது.
சந்தோசமாக வாங்கிக் கொண்டேன். காசு என இழுத்தேன். போடா போடா என்று விரட்டிவிட்டார்.
அதன் பின் அந்த வழியாக மேல்நிலை பள்ளிக்கு போகும் போது, அவ்வப்போது அவருக்கு பொடி வேண்டுமா என்று கேட்டு வாங்கி கொடுக்க தொடங்கினேன்.
எங்கள் இருவருக்கும் ஒரு நட்பு மலரத் துவங்கியது. அந்த ப்ரஸ்ஸில் ஏராளமான வேஸ்ட் பேப்பர்கள் வரும். ப்ரூப் பார்க்க எடுத்த பேப்பர்கள் நிறைய இருக்கும். அதில் மறுபக்கம் அச்சிட மாட்டார்கள். அதையெல்லாம் சேர்த்து, ஏதாவது கல்யாண பத்திரிக்கை ப்ரூப் எடுத்த அட்டையை போட்டு,தைத்து ஒரு நோட்டு போல தருவார்.
ரஃப் நோட் என்று அதை பெருமையாக எடுத்து எழுதுவேன்.
ஒருமுறை பொடிக்கடைக்கு சென்றபோது, கடைக்காரர், நீ தெற்கு தெரு பையன் தானே? பிரசிடெண்ட் வீட்டுல இந்த டப்பாவை கொடுத்துவிடு என்றார்.
அவருக்கு ஸ்பெஷல் பொடி. நேத்தே தீர்ந்து போச்சு. இப்பதான் திண்டுக்கல்ல இருந்து வந்துச்சு. அதை சொல்லிக் கொடு என்றார்.
வெள்ளியில் செய்யப்பட்ட அழகான ஒரு சிறிய பொடிடப்பா. எங்கள் தெருவில் இருந்தவர்கள் பிரசிடெண்ட் அம்மா என்ன வேலை சொன்னாலும் ஓடி செய்வோம். காரணம் அப்போது அவர்கள் வீட்டில் மட்டும் இருந்த கலர் டிவி. கடைக்கு போகிறவர்களை வீட்டில் உட்கார்ந்து பார்க்க அனுமதிப்பார்கள்.
அதனால் மிக மகிழ்ச்சியுடன், அதை வாங்கிக் கொண்டு போய் கொடுத்தேன்.
அப்போது அவர்கள் செட் ஆட்கள் மட்டும் தான் பொடி போட்டுக் கொண்டிருந்தார்கள். என் சித்தப்பா செட்டெல்லாம் பீடி, சிகரெட் என மாறிவிட்டார்கள். அடுத்த முறை பெரியப்பாவை பார்த்தபோது, உங்க வாத்தியார் சொன்னார்டா நல்லா படிக்கிறியாமே என்றார். அசடு வழிய சிரித்தேன்.
நல்லா படிடா. உனக்கு ரப்பர் ஸ்டாம்ப் நான் தான் அடிச்சு தருவேன். நம்ம பங்காளிகள்ல யாருமே விசிட்டிங் கார்டு எல்லாம் அடிக்கல. உனக்கு அதுவும் நான் அடிச்சு தருவேன் என்றார்.
உடனே நானும், பெரியப்பா, நான் வேலைக்கு போன உடனே, உங்களுக்கு ப்ரெசிடெண்ட் வச்சிருக்கிற மாதிரி ஒரு வெள்ளி மூக்குப்பொடி டப்பா வாங்கி கொடுக்கிறேன் என்றேன்.
வருடங்கள் கடந்தன. கல்லூரி விடுதியிலும் சேர்ந்து விட்டேன். ஒருமுறை கல்லூரி விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது, பிரஸ் பக்கம் சென்றால் அவர் இல்லை.
போன வாரமே அவர் இறந்து போயிட்டாரே என்றார்கள். அதிர்ச்சி. அப்போது போன் போன்ற வசதி இல்லை என்றாலும் வீட்டிற்கு வந்தவுடன் கூட இதை யாராவது சொல்லி இருக்கலாமே என எனக்கு ஒரு ஆதங்கம்.
அவருடன் பணியாற்றிய பிரஸ் ஊழியரிடம் பெரியப்பாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன்.
வயசு ஆகுது இல்ல. சாப்பாடும் பல வருஷமாவே அவருக்கு சரி இல்லை. அவ்வளவுதான் உடம்பு தாங்கும் என்றார்.
பெரியப்பா பிறந்த சில மாதங்களிலேயே அவரது தாயார் இறந்துவிட, சரியான சாப்பாடு இல்லாமலேயே வளர்ந்தவர். படிப்பில் திறமைசாலி. அவர் வளர்ந்து வரும் நேரத்தில் அவர் தந்தையும் இறந்துவிட, கட்டிக் கொடுத்த அவரது மூத்த சகோதரிகள் வீட்டு பக்கமும் ஒதுங்க முடியாமல், கிட்டத்தட்ட அனாதை போலவே வாழ்ந்திருக்கிறார்.
அவருடன் படித்த நண்பருடைய பிரஸ் அது. அங்கேயே எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டு, இரவும் அங்கேயே தூங்குவார்.
காலை எழுந்ததும் எந்த பம்ப்செட்டில் தண்ணீர் வருகிறது என்று பார்த்து குளித்துவிட்டு அவர் வேட்டி சட்டையை அங்கே காய போட்டு விட்டு வருவார். வரும் வழியில் இருக்கும் நடைபாதை கடைகளில் ஏதாவது சாப்பாடு. பிரஸ் வந்த பின்னர் ஏதாவது வடை, டீ சாப்பிட்டு ஒட்டி விடுவார். இரவும் ஏதாவது ஒரு நடைபாதை கடை.
இப்படியே 40 வருடங்களுக்கும் மேலாக ஓட்டியிருக்கிறார். பெற்றோர்களும் இல்லாமல், வசதி வாய்ப்பும் இல்லாமல், குட்டையாகவும் இருந்ததால் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய அவருக்கு வாய்ப்பு அமையவில்லை.
அவரது நண்பர் மேலும் சொன்னார், எங்க பங்காளிகளிலேயே இந்த பையனத்தான் எனக்கு பிடிக்கும், எனக்கு வெள்ளி மூக்குப்பொடி டப்பா வாங்கி தரேன் என்று சொன்னான் என்று சொல்லி சிரித்தாராம்.
யாராவது கூப்பிட்டு விசேஷ நாட்களில் ஒரு வேளையாவது சாப்பாடு போடுவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாராம்.
எனக்கு அப்படி எதுவுமே தோணல, அந்த அளவுக்கு வீட்டுச் சூழலும் எனக்கு இல்ல என்றேன்.
நீ சின்ன பையன். ஆனா உங்க பங்காளிக யாராவது அவரை விசாரிக்கவாவது செஞ்சிருக்கலாம்.
40- 50 வருஷமா எத்தனையோ பேருக்கு கல்யாண பத்திரிக்கை அடிச்சு கொடுத்தவரு. அவருக்கு கல்யாணமும் ஆகல. ஆயிரக்கணக்குல கருமாதி பத்திரிகை அடிச்சு கொடுத்தவரு. அந்தக் கருமாதி பத்திரிகை அடிக்கவும் அவருக்கு ஆள் இல்லாம போயிருச்சு.
அனாத பொணம் மாதிரி மாதிரி தூக்கி போட்டு போயிட்டாங்க. ஒண்ணுமே நடக்காத ஒருத்தனுக்கு ஒரு கருமாதி பத்திரிக்கையாவது அடிச்சு அன்னைக்கு நாலு பேருக்கு சோறு போட்டு இருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டார்.
இன்று பொடிக்கடைகள் எல்லாம் மிகவும் குறைந்து விட்டன. அந்த பழக்கம் தற்போது இளைய தலைமுறை இடம் இல்லாததால், பழைய ஆட்கள் மட்டுமே அந்த கடைகளுக்கு வருகிறார்கள்.
அது மாதிரி கடைகளை பார்க்கும் போதெல்லாம், எனக்கு பெரியப்பாவின் ஞாபகம் வந்து மனதை ரணமாக்கும். யாருக்கு எது தேவை என்பதை உணரும் ஒரு நுட்பமான மனம் தேவை. அந்த நுட்பமான மனம் இருக்கிறவர்கள், வாய்ப்பிருக்கும்போதே பிறரை மகிழ்விக்கிறார்கள்.
அது இல்லாதவர்கள் அதை உணரும் நாளில் வருத்தம் மட்டுமே அடைய முடிகிறது.
Subscribe to:
Posts (Atom)