June 09, 2025

ராமமூர்த்தி அண்ணன்

அண்ணன், மகள் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அது விஷயமாக அடிக்கடி பேசுவார். சென்ற வாரம் அப்படியான ஒரு அலைபேசி அழைப்பின்போது சொன்னார், முன்னாடி நகையெல்லாம் வாங்காம அசால்டா இருந்துட்டேண்டா. இப்ப விலையெல்லாம் கேட்டா தல சுத்துது. செய்கூலி,சேதாரம் அதுக்கப்புறம் ஜிஎஸ்டி. அப்படி இப்படின்னு டிசைனா வாங்கணும்னா பத்து பவுன் எட்டரை லட்சம் வருது. முன்னாடி நம்ம ஊர் கல்யாணம், விசேஷத்துக்கு எல்லாம் வருவாரே ராமமூர்த்தி, அவரு பழைய நகை எல்லாம் செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கி கொடுத்துட்டு ஒரு கிராமுக்கு இவ்வளவு ரூபா அப்படின்னு மட்டும் வாங்குவாரே, அவர் நம்பர் இருக்கா? அவர்கிட்ட கொஞ்சம் பழைய நகை வாங்குனா ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் குறைய வாய்ப்பிருக்கு. மத்த செலவுக்கு அது ஆகிவிடும் என்றார். ரெண்டு மூணு விசேஷத்துக்கு ஊர் பக்கம் போனபோது அவர பாக்க முடியல. பழைய போன் நம்பரும் மாத்திட்டாருன்னு சொன்னாங்க. வர ஞாயிறு வைகாசி வளர்பிறை கடைசி முகூர்த்தம். ஊரில் நிறைய கல்யாணம் இருக்கு. போறேன் எப்படியும் தட்டுப்படுவாரு பார்த்துட்டு கூப்பிடுறேன் என்றேன். ஞாயிற்றுக்கிழமை அட்டென்ட் செய்யப் போகும் விசேஷங்களுக்கு ஏற்ப மொய் கவர் வாங்கி வைத்துக்கொண்டு பஸ்ஸில் உட்கார்ந்தாயிற்று‌. பஸ் ஊரை நோக்கி கிளம்பியது. அரசு பேருந்து. டிரைவரும் கண்டக்டரும் சம 50 வயது ஆட்கள். அதைவிட இளையராஜா வெறியர்கள் போலும். அட்டகாசமான பாடல்களாக போட்டுக் கொண்டே வந்தார்கள். ரிக்ஷா மாமா படத்தின் தங்க நிலவுக்குள் பாடல் ஒலிக்க துவங்கியதும், ராமமூர்த்தி அண்ணனின் ஞாபகம் வரத்துவங்கியது. பேச்சுவாக்கில் தான் அண்ணன் ஆனால் அவருக்கு எப்படியும் தற்போது 70 வயது இருக்கும். 40 வருடங்களுக்கு முன்னர் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி எங்கள் ஊர் இருந்தபோது, விவசாயிகள் களை எடுக்க, உரம் போட, மருந்தடிக்க என்னும் செலவுகளுக்கு அல்லது அறுவடைக்கு நாள் இருக்கும் போது வந்துவிடும் சுப/அசுப செலவுகளுக்கு, நகையை அடகு வைத்து வட்டிக்கு பணம் வாங்குவார்கள். ஆனால் அவர்கள் அடகுக் கடைக்கு சென்று அங்கே நிற்பதை கௌரவ குறைச்சலாக கருதுவார்கள். பொதுவாக பெண்களை வெளியே அனுப்ப மாட்டார்கள். பொருளை எடுத்துக்கொண்டு அடகு கடையிலோ அல்லது கூட்டுறவு வங்கியிலோ உட்காருவது அவர்களைப் பொறுத்த வரை பெருத்த அவமானமாக இருந்த காலம் அது. அதேபோல நொடித்துப் போய் நகைகளை விற்கிறவர்களும் நகைக் கடைக்கு செல்ல மாட்டார்கள். ராமமூர்த்தி அண்ணனை நாடுவார்கள். அவர் நியாயமாக அடகு வைத்தோ விற்பனையோ செய்து கொடுப்பார். கஷ்டத்தில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகள் திருமணத்தின் போது ராமமூர்த்தி அண்ணனிடம் சொன்னால் விற்பனைக்கு வந்த பழைய நகைகளை பாலிஷ் செய்து சகாயமான விலைக்கு வாங்கி கொடுப்பார். எனவே ராமமூர்த்தி அண்ணன் அந்த ஏரியா முழுவதும் மிகப் பிரபலம். காதும் காதும் வைத்தார் போல இந்த டீல்களை எல்லாம் முடித்துக் கொடுப்பார். அதனால் பொதுவாக எல்லா விசேஷங்களுக்கும் சென்று விடுவார். அப்போது அவரிடம் தகவல் சொன்னால் போதும். வீடுகளுக்கு கூட வந்து வாங்காமல் ஏதாவது பொது இடத்திற்கு வந்து வாங்கிக் கொள்வார்.அவர் மீது மிக நம்பிக்கையாக எல்லோரும் இந்த வரவு செலவு வைத்துக் கொள்ள ஒரு காரணம் இருந்தது. அவர் இந்த தொழிலை ஆரம்பித்த சமயத்தில், ஒரு விவசாயி, விவசாயத்தில் தொடர் நஷ்டம் காரணமாக தன் வீட்டில் கடைசியாக இருந்த ஒரு பழைய கல் வைத்த செயினை அடகு வைக்க நினைத்தார். இவரைப் பற்றி கேள்விப்பட்டு, அந்த செயினை கொடுத்தார். இவரும் தான் வழக்கமாக செல்லும் அடகு கடைகளில் ஒன்றில் அந்த செயினை வைத்து பணம் வாங்கி கொடுத்தார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக அந்த விவசாயியால் வட்டி கட்ட முடியவில்லை. நகை மதிப்பில் கொஞ்சம் ரூபாய்தான் மீதம் இருந்தது. எனவே இவர் அந்த விவசாயியை சந்தித்து, ஒரு வருஷமா வட்டி கட்டல, நகை மூழ்கிடும் போல இருக்கு. என்ன செய்யலாம் என கேட்க, அவர் இந்த முறை போட்ட வாழையில் மேடேறி வந்து விடுவேன் என நினைத்தேன். ஒன்றும் நடக்கவில்லை. இந்த தோட்டத்தை வைத்தும் கொஞ்சம் கடன் வாங்கி இருக்கிறேன். அதையும் என்னால் இனி கட்ட முடியாது. அதனால் இந்த தோட்டத்தையும் விற்றுவிட்டு வேறு ஊருக்கு பிழைக்க செல்லலாம் என்று இருக்கிறேன். அடகு வைத்த நகை விற்று ஏதாவது மீதம் இருந்தால் கொடுங்கள் உதவியாக இருக்கும் என்றார். ராமமூர்த்தி அடகு கடைக்கு திரும்பி வந்து, விபரத்தை சொல்ல, அடகுக் கடைக்காரரோ, நீயே இந்த செயினை பஜாரில் விற்று பணத்தை எடுத்து, அசல் மற்றும் வட்டியை எனக்கு கொடுத்துவிட்டு, உன் கமிஷன் போக மீதத்தை அவரிடம் கொடுத்து விடு என்றார். நகையை வாங்கிக்கொண்டு பஜாரில் இருந்த அவர் வழக்கமாக பழைய நகைகளை விற்கும் ஒரு நாணயமான கடையில் செயினை கொடுத்தார். அதை பார்த்த முதலாளி, இன்னும் கொஞ்சம் பரிசோதித்து பார்த்துவிட்டு, இது எல்லாமே அசல் வைரக் கற்கள். அந்த காலத்துல பண்ணியிருக்காங்க. இப்ப ரொம்ப விலை போகும் என்று சொல்லி, அந்த நகையின் மதிப்பை விட பத்து மடங்கிற்கு மேல் பணத்தை கொடுத்து இருக்கிறார். உடனே இவர் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அடகு கடையில் செட்டில் செய்துவிட்டு, மீத பணத்தை பையில் கட்டி, பேருந்துக்கெல்லாம் காத்திருந்தால் நேரம் ஆகிவிடும் என்று, ஒரு வாடகை சைக்கிள் எடுத்து அந்த விவசாயியின் ஊருக்கு விரைவாகச் சென்று விவரம் சொல்லி பணத்தை கொடுத்து இருக்கிறார். அந்த வீட்டாரால் நம்பவே முடியவில்லை. ஊரைவிட்டு கிளம்ப மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருந்தவர்கள், அந்தப் பணத்தில் நிலத்தின் மீதான கடனை அடைத்து, மற்ற சிறு கடன்களையும் அடைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். இந்த சம்பவம் அப்போது அந்த கிராமத்தார்கள் மூலம் சுற்றுவட்டாரம் எல்லாம் பரவியது. அதிலிருந்து ராமமூர்த்தி அண்ணனுக்கு எல்லோரிடமும் பெரிய மரியாதை. எந்த விசேஷமாக இருந்தாலும் அழைப்பார்கள். அவசரத்திற்கு அவரிடம் தான் நகை கொடுக்க வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்கிற முடிவு தங்களை அறியாமலேயே எல்லோருக்கும் வந்து விட்டது. இளவெயில் ஆனால் லேசான காற்றுடன், இன்னும் சில பாடல்களை பேருந்தில் கேட்டு முடித்தபோது ஊர் வந்து சேர்ந்திருந்தது. இறங்கி, முதல் இரண்டு விசேஷங்களுக்குப் பின் மூன்றாவது விசேஷத்தில் ராமமூர்த்தி அண்ணன் காணக் கிடைத்தார். விவரத்தை சொல்லியதும், இல்ல தம்பி இப்பல்லாம் அந்த தொழிலை விட்டு விட்டேன் என்றார். என்னண்ணே என்ன ஆச்சு என்று கேட்டதற்கு, எங்களுக்கு மெயின் ரொட்டேஷன், பேங்க்ல அடமானத்துக்கு வச்சு மீட்க முடியாமல் ஏலத்துக்கு வர நகைகள் தான். முன்னாடி 500 ரூபா இப்போ ஐயாயிரம் ரூபாய் டெபாசிட் கட்டினால் யாரும் கலந்து கொள்ளலாம். நான் எனக்கு தெரிந்த நம்பிக்கையான நகை மதிப்பீட்டாளர கூட்டிக்கிட்டு போவேன். எல்லாம் செக் பண்ணி ஏலத்துல நகை எடுப்போம். ஆனா இப்ப உரசி பார்த்தா தங்கமா இருக்கு ஆனா உள்ளுக்குள்ள வேற மெட்டீரியல். ரொம்ப டெக்னிக்கலா செஞ்சு அடகு வைத்துவிட்டு போயிடுறாங்க. சில சமயம் பேங்க்ல இருக்கிறவங்களே இதுக்கு துணை போறாங்க. அந்த நகையோடு அதிகபட்ச மதிப்பீட்டுக்கு ஒரு கமிஷன் வாங்கிட்டு பணம் கொடுத்து விட்டுறாங்க. அப்படித்தான் நான் ஒரு தடவை வளையல் எடுத்தேன், அதுக்குள்ள வெள்ளி கம்பி இருந்திருக்கு. அதுக்கப்புறம் ஒரு 18 பவுன் காசு மாலை எடுத்தேன். அதிலும் உள்ள நிறைய வெள்ளி கம்பி. அதை எடுத்து சிலருக்கு மாத்தி கொடுத்தேன். ஆனா இப்ப இருக்கிற பெரிய நகைக் கடைகளில் தங்கம் குவாலிட்டி மெஷின்ல செக் பண்ணும் போது கண்டுபிடிச்சிட்டாங்க. இனி பேங்க்ல போய் அதை ஒன்னும் செய்ய முடியாது. ஏகப்பட்ட லட்சங்கள் என் கையில் இருந்து கொடுத்து தான் அந்த பிரச்சனையை முடிச்சேன். அதிலிருந்து இந்த தொழிலையே விட்டுவிட்டேன். நீங்க நகை கடையில் பார்த்து நல்லா பரிசோதித்து வாங்குங்க அதுதான் நல்லது என்று முடித்துக் கொண்டார். சரிண்ணே. இப்பொழுது என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டேன். நமக்கு தெரிந்தவர் பழைய பொருள்கள் கடை வச்சிருக்கார். ஒரு ட்ரை சைக்கிள் வச்சு பொதுவா சனி, ஞாயிறுகளில் ஏரியா பக்கம் போய் இருக்கும் பழைய பாத்திரம், பேப்பர், பிளாஸ்டிக் எல்லாம் எடை போட்டு வாங்கிட்டு வந்து அவர்கிட்ட கொடுக்கிறது. அவர் பொருளுக்கு ஏற்ற மாதிரி கமிஷன் கொடுப்பார் அத வச்சு வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. என்ன முன்னர் கிராம் கணக்குல நிறுத்து பார்ப்பேன். இப்ப கிலோ கணக்கு. எல்லோருக்குமே தேவைப்படுறதால அதுக்கு மதிப்பு அதிகம். இது தேவைப்படாத பொருள். ஏதாவது ஒரு காலத்துல தங்கமும் தேவைப்படாத பொருள் ஆகலாம் இல்லையா.. என்று சொல்லிவிட்டு, புது போன் நம்பரை கொடுத்து எந்தெந்த ஏரியாக்கள் கவர் செய்கிறார் என்று சொல்லிவிட்டு சாப்பிட கிளம்பினார்.