June 10, 2011

வேற்று மொழி நடிகர்கள்

திடீரென ஒர் படத்திற்க்கு அறிவிப்பு வரும். இந்தப் படத்தில் வேற்று மொழி படங்களில் புகழ்பெற்ற ஒரு நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்று. இது ஜஸ்டிஸ் பார்ட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த கதாபாத்திரம் சிலசமயம் ஹீரோவிற்க்கு இணையாகவும் அல்லது கதை திருப்பத்திற்க்கு முக்கியமானதாகவும் கூட இருக்கும்.

சத்யம் – உபேந்திரா
மலைக்கோட்டை – தேவராஜ்
சர்வம், கச்சேரி ஆரம்பம் - சக்கரவர்த்தி
வேட்டைக்காரன் – ஸ்ரீஹரி
ராஜ்ஜியம் – திலீப்
12 பி – சுனில் ஷெட்டி
தீனா - சுரேஷ்கோபி
என பல படங்களைச் சொல்லலாம்.

ஏன் இந்த கேரக்டர்களுக்கு இவர்கள் இவ்வளவு முக்கியமா? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் அது பெரிய அப்பாடக்கர் கேரக்டராய் இருக்காது. வேட்டைக்காரனில் ஸ்ரீஹரி நடித்த போலிஸ் கேரக்டரோ அல்லது மலைக்கோட்டையில் தேவராஜ் நடித்த கேரக்டரோ நாசர், பிரகாஷ்ராஜ் வகையறாக்கள் போகிற போக்கில் ஊதி விட்டு போய்விடுகிற கேரக்டர்கள் தான். அப்புறம் ஏன் இவர்களைப் பிடித்து தொங்க வேண்டும்?

என் நண்பர் ஒருவர் சொல்லுவார், ஒரே பழிவாங்குற கதைதான். ஆனா அதையே ரஜினிய வச்சு, விஜய்காந்த வச்சு, விக்ரம வச்சு, விஜய்ய வச்சு, சூர்யாவ வச்சுன்னு ஆளை மட்டும் மாத்தினாலே போதும். மக்கள் ஏத்துப்பாங்க என்பார். இது காதல் கதை படங்களுக்கும் பொருந்தும்.
அப்படி மக்களுக்கு பழகின கதையா இருந்தாலும் புது முகமா இருந்தா ஆர்வமா பார்ப்பாங்க என்பது அவர் தியரி. யோசித்துப் பார்த்தால் அது சரிதான் என்று படும்.

ராம நாராயனன் அவர்களிடம் இருப்பது ஒரே ஒரு அம்மன் கதைதான். ஆனால் அவர் ஒவ்வொரு முறை எடுக்கும் போது அம்மனாக நடிக்கும் நடிகையை மாற்றிவிடுவார். (பாளையத்தம்மன் – மீனா, ராஜகாளியம்மன் – ரம்யா கிருஷ்ணன்). இது கவர்ச்சி நடிகைகள் விஷயத்தில் கட்டாயமான ஒன்று. படம் என்று ஒன்று எடுத்தால், டைட்டில் என்று ஒன்று இருக்குமோ இருக்காதோ ஆனால் ஒரு ஐட்டம் சாங் இருக்க வேண்டும் என்ற ரூல் இருந்த காலத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. அவரை மிஞ்சிய பேரழகி உண்டா? ஆனால் அவர் உச்சத்தில் இருக்கும்போதே அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என பல கவர்ச்சி நாயகிகளை களத்தில் இறக்கியவர்கள் நம் ஆட்கள். அவர்களுக்கு எதுவும் புதிதாக இருக்க வேண்டும்.

இயக்குநர் பி வாசு ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். மசாலா படங்களிலேயே அதிகபட்சம் 10 கதைகள் தான் இருக்கும். 0 வில் இருந்து 9 வரை. அடுத்து 11ஆவது கதையென்று போனால் அதில் 0வும் 1 ம் கலந்திருக்கும் என்று. வேட்டைக்காரன் படத்தையே எடுத்துக் கொள்வோம். சென்னையில் இருக்கும் ஒரு தாதாவை தமிழ்நாட்டின் மற்றொரு பகுதியில் இருந்து வந்து வெல்லும் வீரனின் கதை. இது மாதிரி விஷாலே நான்கு படம் நடித்து விட்டார். ஆனால் வெரைட்டி காண்பிக்க வேண்டுமே? ஹிரோயின், ஹீரோவோட அப்பா அம்மா, ஃப்ரண்ட்ஸ், வில்லன் மட்டும் மாத்தினா போதுமா? கதைக்கு திருப்பம் கொடுக்க ஒரு இணை பாத்திரம் வேணுமே என்கிற போதுதான் இம்மாதிரி பிரெஷ்ஷான பேஸ் பிடிப்போம் என்று வேற்று மொழிகளில் இருந்து ஆட்களை பிடித்து வருகிறார்கள். இதில் வணிக லாபமும் ஒளிந்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் போர்ஸாக இருக்க வேண்டும், அந்த பாத்திரம் வரும்போதே ஒரு கெத்தான பீல் கிடைக்க வேண்டும் எனும் போது இம்மாதிரி வேற்று மொழி பிரபலங்களை உபயோகப் படுத்துகிறார்கள். நினைத்துப் பாருங்கள் சத்யத்தில் உபேந்திரா கேரக்டருக்குப் பதில் நாசரோ, பிரகாஷ் ராஜோ நடித்திருந்தால் அந்தப் படத்தின் ஒரே ஆறுதலும் இல்லாமல் போயிருக்கும். 12 பி யில் முறைமாமன் கேரக்டர் தான் ஆனால் அதற்கு ஜீவா தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சுனில் ஷெட்டியை கூட்டி வந்திருப்பார். ஏன் எத்தனை அமெரிக்க ரிட்டர்ன் கேரக்டர் நடிகர்கள் இருக்கிறார்களே? அவர்களை உபயோகப் படுத்தியிருக்கலாமே?

இன்னொரு முக்கிய காரணம், அந்த சப்போர்டிங் கேரக்டர்களுக்கு என்று தனிப்பட்ட குணாதிசயங்கள் அல்லது அது தனித்து தெரிவதற்கான சீன்களை உருவாக்கும் திறமை குறைவு அல்லது சோம்பேறித்தனம். கதாநாயகிகளுக்கே கேரக்டரைசேஷன் சரியாக செய்வதில்லை. இதில் இவர்களுக்கு வேறு கேரக்டரை சேஷனா என்று பெரும்பாலோனோர் விட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் வித்தியாசமாக படைத்தால் இருக்கிற நடிகர்களே போதுமே?

நேர்மையான போலிஸ், கெட்ட அரசியல்வாதி, நல்ல அண்ணன் என்று ஒரே ஒரு பரிமாணம் கொண்ட கேரக்டர்களை உருவாக்குவதால் தான் வெரைட்டி காண்பிக்க புது ஆட்களை தேட வேண்டியிருக்கிறது. பேட் மென் வில்லன் போல வித்தியாச பரிமாணங்களில் இந்த இணை கேரக்டர்களை உருவாக்கும் போது தமிழ்சினிமா இன்னும் சுவராசியப்படும்

11 comments:

அரவிந்த் said...

Welcome back...

அரவிந்த் said...

இப்போது புதியதாக, 'ஆரண்ய காண்டம்' படத்தில் ஜாக்கி ஷெராப். சற்றே பழையது என்றால், 'விடுதலை' படத்தில் விஷ்ணுவர்தன், இன்னும், இன்னும்.. தாங்களுக்கு தெரியாத படம் எதுவுமில்லை, ஆகவே நீங்களே சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மற்ற மொழிப் படங்களில் நமது நடிகர்கள் பற்றியும் எழுத வேண்டுகிறேன்.

King Viswa said...
This comment has been removed by the author.
King Viswa said...

தலைவரே,
வேற்று மொழி நடிகர்கள் என்னும் இந்த தலைப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் இந்த "வித்தியாசமான" பழைய கள் இன் புதிய மொந்தை விளையாட்டை தவிர வேற்று மொழி நடிகர்களை நடிக்க வைப்பதில் வேறு ஒரு காரணமும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். அதாவது தகுந்த நடிகர்கள் இல்லாதது / நடிக்க முடியாதது.

உதாரணமாக தேவர் பில்ம்ஸ் ஆரம்பித்தபோது தேவர் எம்ஜியார் அவர்களை வைத்து தாய்க்கு பின் தாரம் என்று தன்னுடைய முதல் படத்தை எடுத்தார். படம் முடிந்தவுடன் ஏற்பட்ட சிறிய மனஸ்தாபத்தில் எம்ஜியாருக்கு போட்டியாக/பதிலாக ரஞ்சனை கொண்டு நீலமலை திருடன் படத்தை எடுத்தார். ஆனால் அடுத்த படத்திலேயே ரஞ்சனுக்கு வயது முதிர்ந்து இருந்ததால் கன்னட நடிகர் உதயகுமாரை வைத்து செங்கோட்டை சிங்கம் படம் எடுத்தார். இங்கே அவருக்கு ஒரு நடிகரை நடிக்க வைக்க முடியாத சூழல் (எம்ஜியார்), வேறொரு நடிகர் நடிக்கவே முடியாத சூழல் (ரஞ்சன்).

இந்த உதாரணம் ஹீரோக்களை வைத்து சொல்லப்பட்டாலும்கூட துணை நடிகர் விஷயத்திலும் இப்படியே நடக்க பெரும்பாலான வாய்ப்பு உண்டல்லவா?


கிங் விஸ்வா
ஆரண்ய காண்டம் : திரைவிமர்சனம்!

King Viswa said...

//ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் போர்ஸாக இருக்க வேண்டும், அந்த பாத்திரம் வரும்போதே ஒரு கெத்தான பீல் கிடைக்க வேண்டும் எனும் போது இம்மாதிரி வேற்று மொழி பிரபலங்களை உபயோகப் படுத்துகிறார்கள். நினைத்துப் பாருங்கள் சத்யத்தில் உபேந்திரா கேரக்டருக்குப் பதில் நாசரோ, பிரகாஷ் ராஜோ நடித்திருந்தால் அந்தப் படத்தின் ஒரே ஆறுதலும் இல்லாமல் போயிருக்கும்.//

நெத்தி அடி. சத்யம் படத்தை என்னுடைய பேவரிட் நடிகர் உபேந்திரா அவர்களுக்காகவே இரண்டாவது முறை (சகித்து கொண்டு) பார்த்தேன். அந்த ஹிப்பி முடியை தொப்பிக்குள் மறைத்து வைத்து இன்ஸ்பெக்டராக வந்த காட்சிகளும் சரி, சிறையில் சவால் விடும் காட்சிகளிலும் சரி, மனுஷன் பின்னிஎடுப்பார். நல்ல கதையை புதிய இயக்குனர் சொதப்பி விட்டார். (இதைப்பற்றிய ஒரு டீடெயில் ஆன கட்டுரை எப்ரல் மாதத்திய கலாட்டா சினிமாவில் வந்துள்ளது படித்து பாருங்கள்).

கிங் விஸ்வா
ஆரண்ய காண்டம் : திரைவிமர்சனம்!

Ashok D said...

:)

Bruno said...

நாட்டாமை தெலுங்கு மறுபடைப்பில் ரஜினி நடித்தது போலவா

முரளிகண்ணன் said...

நன்றி அரவிந்த்

நன்றி கிங் விஸ்வா

நன்றி அசோக்

நன்றி டாக்டர்

சி.பி.செந்தில்குமார் said...

நல்லா தான் திங்க் பண்ணி இருக்கீங்க

குணசேகரன்... said...

கரெக்டாத்தான் சொல்றீங்க

sakthi said...

வித்தியாசமான பார்வை தொடருங்கள் :) முரளி கண்ணன்