July 11, 2011

காசி விநாயகாவும் நாற்பது வயது பேச்சிலரும்

ஆடி, மார்கழி போன்ற சாமிக்கு உகந்த, விசேஷங்களுக்கு தகாத மாதங்கள் சென்ற பின் ஒரு வல்லிய முகூர்த்த நாள் ஞாயிற்றுக்கிழமையில் வரும். அந்த நாளில் நடக்கும் ஏராளமான விசேஷங்களில் ஒன்றுக்குகூட பத்திரிக்கை கூட வராவிட்டால் அவன் வாழ்ந்தது வேஸ்ட் என்றான் சங்கர். அவன் எப்போதுமே இப்படித்தான். வாயைத் திறந்தாலே சுவீப்பிங் ஸ்டேட்மெண்ட் தான்.

அது கூடப் பரவாயில்லை, பொங்கலுக்கு நாலு நாள் லீவு வரும். அதற்குக் கூட குடும்பத்தோடு இருக்க முடியாமல் மேன்ஷனிலேயே தங்கி சாப்பிட மெஸ் மெஸ்ஸாய் அலைபவன்தான் மிகப் பாவம் என்று ஆதரவாயும் இல்லாமல் எதிர்ப்பாயும் இல்லாமல் ஒரு கருத்தை உதிர்த்தான் கணேஷ்.

தொடர்ந்து அரட்டையைத் தொடராமல் அந்தக் கருத்துக்களில் இருந்த உண்மை சதிவிகிதத்தை எடை போட மனம் முயன்றது. உடனே ஞாபகம் வந்த உருவம் காசி விநாயகா மெஸ்ஸில் அடிக்கடி பார்க்கும் நாற்பதுகளில் இருக்கும் பக்கத்து மேன்ஷன்வாசி.

கடையில் துணியெடுத்து உள் பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட அரைக்கை சட்டை, டார்க்கான கலரில் பாட்டத்தில் ஜிப் வைத்து தைக்கப்பட்ட பேண்ட், பிரவுன் கலர் லெதர் ஸ்ட்ராப் வைத்த டைட்டன் வாட்ச், பாட்டா செருப்பு, பேஸிக் மாடல் நோகியா இதனுடன் கையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்த வார ஜூவியோ, ரிப்போர்ட்டரோ.

தான் இளைஞன்தான் என்று கடைசியாய் நம்பும் காலத்தில் நடைமுறையில் இருக்கும் பேஷனையே, தங்களின் மிச்ச காலத்துக்கும் ஆண்கள் தொடருவார்கள் என்ற சங்கரின் இன்னொரு சுவீப்பிங் ஸ்டேட்மெண்டுக்கு வலுச் சேர்க்கும் அவர் எந்த பொங்கலுக்கும் ஊருக்குச் சென்றதில்லை என்பது செவி வழிச் செய்தி.

வரிசையில் நிற்கும் போது யாருடனும் பேசாமல், சர்வரிடம் கூட எதுவும் கேட்காமல் கர்மவீரராய் நடந்து கொள்ளும் அவர் இப்போது மனதில் வந்து உட்கார்ந்து கொண்டார்.

மனதில் பயம் வர ஆரம்பித்தது. இந்த ஆண்டுக்குள்ளாவது திருமணம் முடிய வேண்டும் என்று மனம் இறைஞ்சத் தொடங்கியது. இரண்டரை வருடம் ஆகிவிட்டது பேச்சுத் தொடங்கி.

பிரச்சனையே உங்க ஜாதிதான் சார் என்றார் ஒரு தரகர். உங்களோட உட்பிரிவுல பத்தாயிரம் பேர்கூட இருக்க மாட்டாங்க போலிருக்கே என்றார். சரி, வேற உட்பிரிவு? என்று இழுத்ததற்க்கு

நீங்க வேற முன்னவிட இப்பத்தாங்க அதிகம் ஜாதி, உட்பிரிவுன்னு பாக்குறாங்க, வாய்ப்பேயில்லை என்றார்.

என் உட்பிரிவில், பங்காளி முறை போக வயது, வேலை, வசதி, ஜாதகம் என பல பில்டர்களுக்குப் பின் பத்துப் பெண் தேறுவது கூட கடினம் எனப்பட்டது.

அந்தப் பத்தில் ஒன்றை செலக்ட் செய்வது பிரச்சினையில்லை. ஒன்றுக்காவது நம்மைப் பிடித்திருக்க வேண்டும் அதுதான் பிரச்சினை.


மார்க்கட்டிங் வேலை என்பதால் சில தட்டிப்போயின. சாயங்காலம் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும், காலையில ஸ்கூலுக்கு அனுப்பணும். ஊர் ஊரா சுத்துறவங்க சரிப்படமாட்டாங்க என்ற பேச்சையையும் கேட்க நேரிட்டது.

எனக்கு அம்மா இல்லாததால் ஒரு வீட்டில் யோசித்தனர். பிரசவம், பிள்ளை குட்டின்னு நின்னு செய்ய மாமியா இல்லையே என்று ஒருவீட்டில் சொன்னார்களாம். மாமியார் இருந்தாலும் தொல்லைங்கிறாங்க இல்லேன்னாலும் இப்படியா என்று புலம்பி அதை கடக்க வேண்டியிருந்தது.

இதைக் கேட்ட சங்கர்தான் சொன்னான், மூல நட்சத்திர பெண்ணா பார்க்க வேண்டியதுதானே என்று? மருமக மூலம் மாமனார்க்குத்தான் என்று தரகர் அதற்கும் பதில் வைத்திருந்தார்.

மாப்பிள்ளையோட அப்பா கூடவே இருப்பாராமா? என்று சில விசாரணைகள்.

இதை விடக் கொடுமை, மாப்பிள்ளையோட அப்பாவுக்கு தலையில முடியே இல்லையே, இவரும் அப்படி ஆயிடுவாரேன்னு ஒரு பெண் சொன்னதுதான்.

உங்க அம்மாகூட தான் சிண்டெக்ஸ் டேங்க் மாதிரி இருக்கா, நீயும் அப்படித்தான் ஆயிருவ, ஆனாலும் நான் மனசைத் தேத்திக்கிட்டு உட்கார்ந்திருக்கலையா என்று நாக்கு வரை வந்த வார்த்தையை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு வந்தேன்.

அவங்கம்மா சைஸ் மட்டுமில்ல கலரும் கூட சிண்டெக்ஸ் டேங்க் மாதிரித்தாண்டா, யானைச் சிவப்பா இருக்குறவல்லாம் கூட ரிஜெக்ட் பண்றாளுகடா என்று டாஸ்மாக்கில் நண்பர்களோடு புலம்பியதுதான் மிச்சம்.



நாங்க கிளம்புறோம்டா என்ற சங்கரின் வார்த்தையொலியில், ஓடிய எண்ணங்களை கலைத்து விட்டு நிகழுக்கு வந்தேன். அவர்கள் வந்திருந்தது கணேஷின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக. பேச்சு எங்கெங்கோ ஓடி அந்தப் புள்ளியில் நின்றிருந்தது. கடைசியாக இப்படி நண்பர்களோடு அரட்டை அடித்து பல மாதங்கள் ஆகியிருந்ததும் அது கூட சங்கரின் கல்யாண பார்ட்டிதான் என்பதும் ஞாபகத்துக்கு வந்தது.

மேன்ஷனின் கீழே வந்து அவர்களை வழியனுப்பி வைத்த போது, கையில் ஜூவியை சுருட்டியபடியே அவர் எதிர்பட்டார்.

ஒரு நட்புப் புன்னகையை அவரை நோக்கி படரவிட்டேன்

13 comments:

Raju said...

சின்னப்பதிவுன்னாலும், 'ஸ்வீப்பு ஸ்டேட்மென்ட்' , 'யானைச் சிவப்பு' , 'சிண்டெக்ஸ் டேங்க்' என பல இடங்களில் பவுண்டரியைத் தாண்டிப் பறக்கிறது பந்து!

முரளிகண்ணன் said...

நன்றி ராஜு

கோபிநாத் said...

ரைட்டுண்ணே ;-)

Jayadev Das said...

கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்கலியா? நேரா கேரளாவுக்கு போகச் சொல்லுங்க, நீங்க எந்த ரேஞ்சுல எதிர் பாக்கிறீங்களோ அதிலேயே பெண் கிடைக்கும். ஏங்க ஊர்ல ஒருத்தர் தன்னோட பேத்திக்கு நாலு குழந்தைகள் பிறந்ததுக்கப்புறம் மனைவியை இழந்தார். தனக்கு பணிவிடை செய்ய வேண்டுமே என்று கேரளா போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டார். இது மாதிரி அரை டசன் பேர் இருக்காங்க, நீங்களும் உங்க நண்பரை முயற்சி பண்ணச் சொல்லுங்க, பெண் கிடைக்கும்!!

King Viswa said...

ஹலோ தலைவரே,
இப்போதுதான் படித்தேன். உடனடியாக உங்களை நீங்களே கட்டிபிடித்துக் கொள்ளுங்கள், அல்லது கை குளுக்கிக் கொள்ளுங்கள் (நான் பாராட்டியதாக நினைத்துக்கொண்டு). அட்டகாசமான நடை. சூப்பர். சமீப காலங்களில் நண்பர் அந்தணன் எழுத்துக்களில் தான் இப்படி ஒரு துள்ளல் நடையை படித்த மாதிரி நினைவு.

தொடர்ந்து இதைப்போலவே (அடிக்கடி) எழுதுங்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி கோபிநாத்

நன்றி ஜெயதேவ் தாஸ்

நன்றி கிங்விஸ்வா

shortfilmindia.com said...

//தான் இளைஞன்தான் என்று கடைசியாய் நம்பும் காலத்தில் நடைமுறையில் இருக்கும் பேஷனையே, தங்களின் மிச்ச காலத்துக்கும் ஆண்கள் தொடருவார்கள் //

முரளி.. நல்லாருக்கு.. ரொம்ப நல்லாருக்கு

கேபிள் சங்கர்.

முரளிகண்ணன் said...

நன்றி தலைவரே

Mahesh said...

முரளி..... சூப்பர்ப் !!! ஏன் இப்பிடி எங்களை காயப் போடறீங்க? அடிக்கடி எழுதுங்க !!!

Mahesh said...

முரளி... சூப்பர்ப் !! ஏன் இப்பிடி எங்களை காயப் போடறீங்க? அடிக்கடி எழுதுங்க....

முரளிகண்ணன் said...

நன்றி மகேஷ்

srikanth said...

இயல்பான நடை. நன்றாக இருந்தத

srikanth said...

இயல்பான நடை. நன்றாக இருந்தத