August 18, 2012

2004 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – இரண்டாம் பகுதி



விருமாண்டி

கமல் ஹேராமுக்கு அப்புறம் இயக்கிய இரண்டாவது படம். கமலுக்கு இயக்குநராக வசூல் ரீதியில் வெற்றியைக் கொடுத்த முதல் தமிழ் படம். தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப் போரே நடக்கும் என்று செய்திகள் அடிபடும் சூழலில், தன் கிணற்றில் இருக்கும் வற்றாத தண்ணீருக்காக ஒரு வெள்ளந்தி இளைஞன் சந்திக்கும் சூழ்ச்சிகளும், பிரச்சினைகளும் தான் கதை. தூக்குதண்டனைக்கு எதிரான கருத்துகளும் படத்தில் முன்வைக்கப்பட்டன.

சத்யராஜ் முதலில் இந்தப் படத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியது. ஆனால் அவர் மறுத்து விடவே அந்தக் கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்தார். பசுபதி, சண்முகராஜ் ஆகியோருடன் நாசர், ரோகிணி ஆகிய ராஜ்கமல் கம்பெனி கலைஞர்களும் நடித்திருந்தார்கள். பசுபதி அனைவரையும் கவர்ந்தார் என்றாலும் சண்முகராஜ் சர்பிரைஸ் பேக்கேஜ்.

கமல் நாயகி அபிராமியிடம் பேசும் சில வசனங்கள் பஞ்ச் டயலாக்குகளாக இப்போது மாறிவிட்டன.

மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்

ஒருவன் தான் சந்தோஷமா இருக்குறத அந்தக் காலகட்டத்துல உணர்றதில்ல.

ட்ரைலாஜி வரிசையில் தேவர்மகன், விருமாண்டிக்கு அப்புறம் அடுத்த படம் என்னவாயிருக்கும்?

ஆயுத எழுத்து
மணிரத்னம் தமிழ்  ஆடியன்சுக்கு மட்டும் படம் எடுத்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் படங்கள் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் எப்போது நேஷனல் ஆடியன்ஸ்ஸை மனதில் வைத்து ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தாரோ அன்றுடன் அது குறைந்துவிட்டது. அதன்பின் அலைபாயுதே மட்டும் தான் தப்பித்தது. ஆயுத எழுத்துக்கும் அதே கதிதான். கல்லூரி மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்துடன் (ஏம்பா நான் சரியாத்தான் பேசுறனா?) எடுக்கப்பட்ட படம். சூர்யாவின் அம்மா,ஈஷா தியோல் ஆகியோர் படத்துடன் ஒன்றவிடாமல் தடுத்தனர். பாரதிராஜாவுக்கு கெட்ட அரசியல்வாதி (என்னைய்யா ஒரு பொருட் பன்மொழி என்றெல்லாம் கேட்கப்படாது) வேடம். சித்தார்த், அவரின் அப்பா ஆகியோர் மணிரத்னம் படத்தில் வழக்கமாக வரும் கதாபாத்திரங்கள். மூன்று மணி நேரம் என்பது எவ்வளவு நேரம் என்பதை உணரவைத்த படம்.

கண்களால் கைது செய்

பட்டைச் சாரயம் போரடிக்கும் போது பாரின் ஸ்காட்சுக்கு போவது போல கிராமப் படங்கள் போரடிக்கும் போது திரில்லர் பக்கம் எட்டிப் பார்ப்பார் பாரதி ராஜா. சிகப்பு ரோஜாக்கள், டிக் டி டிக் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் கேப்டன் மகள் படு தோல்வி. மீண்டும் பல ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை இயக்கினார். கிளப்டோமேனியா இருக்கும் நாயகன் ஒரு கண்காட்சியில் இருக்கும் வைரத்தை சுட்டுவிட, சேல்ஸ் கேர்ள் மீது சந்தேகம் எழுகிறது. அப்பெண்ணின் காதலனான போலிஸ் அதிகாரி அப்பெண்ணையே தூண்டிலாக வைத்து அவனைப் பிடிக்க நினைக்கிறார். பின்னர்தான் நாயகனுக்கு மனச்சிதைவும் இருப்பது தெரிய வருகிறது. சுஜாதா வசனம், ரஹ்மான் இசை என பல அயிட்டங்கள் இருந்தும் படம் மக்களை கவரவில்லை.

எதிரி

கே எஸ் ரவிகுமார் இயக்கி மாதவன் நடிப்பில் வெளியான படம். விவேக் காமெடி, சதா, பூமிகா, டெல்லிகணேஷ் நல்ல விகிதத்தில் கலந்து கொடுத்திருந்தார் இயக்குநர்.

கோவில், அருள்

சாமி வெற்றிக்குப் பின் வந்த இந்த இரண்டு ஹரி படங்களும் ஆவரேஜ்தான்.

ஏய்

வடிவேலுவின் காமெடியும், நமீதாவின் கவர்ச்சியும் இந்த சரத்குமார் படத்தை காப்பாற்றியது. இயக்குநர் வெங்கடேஷ்க்கு இந்தப் படமும், இதே ஆண்டில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான குத்து படமும் முதலுக்கு மோசமில்லாமல் போனது.

மகா நடிகன்

நமீதாவாலும் லொல்லு சபா டைப் காமெடியாலும் காப்பாற்றப்பட்ட சத்யராஜ் படம். சக்தி சிதம்பரம் இயக்கம். இந்த ஆண்டில் சேட்டை, செம ரகளை, ஜோர், அடிதடி என பல காமெடிப் படங்களில் நடித்திருந்தார் சத்யராஜ்.

கிரி
வடிவேலுவால் இந்த ஆண்டு காப்பாற்றப்பட்ட இன்னொரு படம். சுந்தர் சி இயக்கம், அர்ஜூன் சண்டை, ரீமா சென் மற்றும் குத்து ரம்யா கவர்ச்சி, பிரகாஷ் ராஜ், தேவயானி நடிப்பு என குஷ்பு தயாரிப்பில் ஒரு அக்மார்க் மசாலா படம். சிங்கம் சிங்கிளாத்தன் வரும் என்ற பஞ்ச் டயலாக் முதன் முதலில் பேசப்பட்ட படம்.

அரசாட்சி
தமிழுக்கு வந்த உலக அழகிகள் வரிசையில் இருந்து விட்டுப் போகட்டுமே என்று லாரா தத்தாவை கூட்டி வந்து மகராஜன் இயக்கிய படம். அர்ஜூன், நாசர், பி வாசு, மன்சூர் அலிகான் என தேவையான நடிகர்கள், எஸ் வி சேகர், விவேக் காமெடி இருந்தும் படம் கவரவில்லை. தப்புச் செய்ய்றவனுக்கு வாதாடும் வக்கீலை போட்டுத்தள்ளினால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று ஷங்கர் தனமான தீர்வைச் சொன்ன படம்.

அட்டகாசம்

சில மன வருத்தங்களுக்குப் பின் அஜீத் சரண் இணைந்த படம். அஜீத்துக்கு இரட்டை வேடம். அஜீத்துக்கு கொஞ்சம் இமேஜ் பில்ட் அப் செய்ய மட்டும் உதவியது. ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் அஜீத் நடித்த ஜனா படமும் இந்த ஆண்டு வெளியாகி ஜண்டு பாம் விறபனையை அதிகரித்தது. நியாயப் படி இந்தப் படத்தை ரீமேக் (பாட்ஷா) லிஸ்டில் தான் சேர்த்திருக்க வேண்டும்.

சுள்ளான்

திருமலை வெற்றிக்குப்பின் இயக்குநர் ரமணா இயக்கிய படம். தனுஷ் நாயகன். எறும்பின் தலையில் இமயமலை. புதுக்கோட்டையிலிருந்து சரவணனும் இந்தப் படமும் தனுஷின் ஆரம்பகால வெற்றிப் பயணத்தின் தடைக்கற்கள்.

மதுர

கில்லியின் வெற்றிக்குப் பின் வந்த விஜயின் படம். ஷங்கரின் இணை இயக்குநர் மாதேஷ் இயக்கிய படம். தம் ரக்‌ஷிதா, சோனியா அகர்வால், தேஜா ஸ்ரீ என நாயகிகள், வடிவேலு நகைச்சுவை, பசுபதி வில்லத்தனம் என அம்சங்கள். விமர்சகர்கள் கிழித்தாலும் தயாரிப்பாளர் டவுசர் கிழியவில்லை.

வானம் வசப்படும்

பி சி ஸ்ரீராம் இயக்கம். படமும், வந்த நேரமும் சரியில்லை. பார்க்க போனவர்களுக்கும் தான்.

ஜெய்
முதலில் மாதேஷ் இயக்குவதாக இருந்து, பின் அவர் விலகிக் கொள்ள நாராயணன் என்பவர் இயக்கிய பிரசாந்த் படம். அந்த ஆண்டு வெளியான பாட்டம் பத்தில் இதற்கு நிச்சய இடம் உண்டு.

இந்த ஆண்டில் வடிவேலு தான் காமெடியில் டாப். ஏய், சத்ரபதி, அருள், கோவில், கிரி, எங்கள் அண்ணா, ஜோர், மதுர என கொடிகட்டிப் பறந்தார்.

விவேக்கும் தன் பங்குக்கு செல்லமே, எம் குமரன் சன் ஆப் மகா லட்சுமி, எதிரி, அரசாட்சி என கலக்கினார்.

நீங்கள் இன்று சிரிப்பொலி அல்லது ஆதித்யா பாருங்கள். மேற்கூறிய படங்களில் இருந்து நிச்சயம் கிளிப்பிங்ஸ் இருக்கும்.

தமிழர்களின் கனவை   இந்த ஆண்டில் அதிகம் ஆக்ரமித்தது நமீதா தான். ஏய், மகா நடிகன், எங்கள் அண்ணா படங்களில் சித்தப்பூ நடிகர்களுக்கு துணையாக வந்தார்.

இந்த ஆண்டில் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில் ரிச்சர்ட் மதுரம் நடித்த காமராஜர் படம் வெளியானது.

6 comments:

Bruno said...

//பி சி ஸ்ரீராம் இயக்கம். படமும், வந்த நேரமும் சரியில்லை. பார்க்க போனவர்களுக்கும் தான்.//

அதுவும்
சுஜாதாவின் கதையை படித்து விட்டு பார்க்கப்போனவர்களின் கதி அதோ கதி தான்



ஆனால் பாடல்கள் டாப் க்ளாஸ்

Bruno said...

2003ஆம் ஆண்டு திரைப்படங்கள் குறித்து சிறு கட்டுரை இங்கு உள்ளது

முரளிகண்ணன் said...

வாங்க டாக்டர்.

செமயான பதிவு அது.

Indu said...

//இந்த ஆண்டில் ரிச்சர்ட் இயக்கத்தில், இளையராஜா இசையில் பால்கிருஷ்ணன் நடித்த காமராஜர் படம் வெளியானது.//
காமராஜராக நடித்தவர் ரிச்சர்ட் மதுரம். இயக்கியவர் பாலகிருஷ்ணன்.

முரளிகண்ணன் said...

மன்னித்துக் கொள்ளவும் இந்து. உடனே திருத்தி விடுகிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான தொகுப்பு! நன்றி!

இன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html