March 27, 2016

இயக்குநர் ஹரி



2002 ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டுக்கு விக்ரமின் ஜெமினி, விஜய்யின் தமிழன், பிரசாந்தின் தமிழ் ஆகிய படங்கள் வெளியாகின. ஏவிஎம் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் வந்த ஜெமினிக்கு ஏவிஎம் வழக்கம் போல ஏராளமான விளம்பரங்களைச் செய்தது. விஜய்க்கு அதற்கு முந்தைய ஆண்டுப்படங்களின் வெற்றியால் உருவாகியிருந்த கூட்டம் துணையாய் இருந்தது. சரணின் உதவி இயக்குநரான ஹரி இயக்கிய தமிழுக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் படம் வெளியாகி ஒரு வாரத்தில் படம் பற்றிய நல்ல அபிப்ராயம் பரவி படம் வெற்றி பெற்றது. ஒரு தாதாவால் ஒரு எந்த வம்புதும்புக்கும் போகத் தலைப்படாத குடும்பத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளும் அதில் இருந்து எப்படி அக்குடும்பம் வெளிவருகிறது என்பதும்தான் கதை. மதுரைப் பிண்ணனியில் அமைந்த கதை. அந்தப் படத்தில் மதுரைப் பகுதிப் பெயர்கள் மற்றும் இட விபரங்கள் துல்லியமாக உபயோகப் படுத்தப்பட்டிருந்தன.

ஹரி படங்களின் முக்கிய அம்சமே இதுதான். தொடர்ந்து அவர் படங்களில் ஏதாவது ஒரு ஊர் முன்னிறுத்தப்படும். அந்த ஊரிலேயே பல ஆண்டுகள் தங்கி இருந்தவர் போல அந்த நிலப்பரப்பு படங்களில் உபயோகப் படுத்தப்படும். சாமி (திருநெல்வேலி), கோவில் (நாகர் கோவில்), அருள், பூஜை (கோவை), தாமிரபரணி, சிங்கம் (தூத்துக்குடி), ஆறு (சென்னை), வேல் (திண்டுக்கல்) என கதை நடைபெறும் களம் அந்த வட்டார சொல்லாடல்களோடு, பழக்க வழக்கங்களோடு இடம் பெறும்.
தமிழ் படத்தின் வெற்றி, ஹரிக்கு பாலசந்தர் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. விக்ரமின் கேரியருக்கு பூஸ்டாய் அமைந்த சாமி தான் அது. சாமியே ஹரியின் இத்தனை ஆண்டுகால தாக்குப் பிடித்தலுக்கு அஸ்திவாரமாய் அமைந்த படம். படத்தின் வெற்றிவிழாவில் ஆறுச்சாமி கேரக்டர் எனக்கு அமைந்திருந்தால் எப்படி அமைந்திருக்கும் என்று ரஜினிகாந்தே சிலாகித்த படம். ஷங்கர், சாமி படத்தைப் பார்த்த பின்னர்தான் அந்நியன் படத்திற்கு விக்ரம் சரியாக வருவார் என தீர்மானித்தார்.

அடுத்து சிம்புவை வைத்து இயக்கிய கோவிலும், விக்ரமை வைத்து இயக்கிய அருளும் சுமாரான வெற்றியையே பெற்றது. ஹரி திட்டமிட அதிக நாட்கள் எடுத்துக்கொண்டாலும் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி முடித்துவிடுவார். அதனால் படம் குறைவான நாட்கள் ஓடினாலும் நஷ்டத்தை தந்துவிடாது.

2005ஆம் ஆண்டில் சரத்குமார் இருவேடங்களில் நடிக்க ஐயா படத்தை இயக்கினார். இதில் தான் நயன்தாராவை அறிமுகம் செய்தார். இந்தப்படம் விஜய்யின் திருப்பாச்சியோடு இணைந்து வெளியானது. பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவு லாபம் கொடுத்த படம். அதே ஆண்டில் சூரியாவை வைத்து ஹரி இயக்கிய ஆறு படமும் வெளியானது. சாக்லேட் பாயாக இருந்த சூர்யாவுக்கு ஆக்சன் அவதாரம் கொடுத்தவர் பாலா என்றால், ஒரு கமர்சியல் ஹீரோவுக்குரிய இமேஜ் ஏற்பட காரணமாய் இருந்தவர்களில் முக்கியமானவர் ஹரி. அதன்பின் 2007ல் விஜயின் போக்கிரியோடு ஹரியின் தாமிரபரணி மோதியது. மிகப்பெரும் வெற்றி பெற்ற போக்கிரியோடு வெளியானாலும் விஷால் நடித்த தாமிரபரணியும் களத்தில் நின்றது. மீண்டும் சூர்யாவுடன் இணைந்து வேல் படத்தை இயக்கி வெளியிட்டார் ஹரி. இப்போதும் விஜயின் அழகிய தமிழ்மகனுடன் போட்டி. இதில் வேலுக்கே ஜெயம். இதன்பின் பரத்தை வைத்து சேவல் படத்தை இயக்கினார்.இப்படம் மக்களை கவரவில்லை.
அதன்பின்னர் இரண்டாண்டுகள் ஸ்கிரிப்ட் ஒர்க் செய்து ஹரி இயக்கிய படம் சிங்கம். ஹரி படப்பிடிப்புக்குப் போகும் முன் செய்யும் முன் தயாரிப்பே அவர் வெற்றிகரமான கமர்சியல் இயக்குநராக தாக்குப்பிடிக்க காரணம். சிங்கம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம். அதன்பின் தனுஷை வைத்து இயக்கிய வேங்கை நன்றாகப் போகவில்லை. பின் சிங்கம் 2 இதுவும் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. சென்ற ஆண்டு மீண்டும் விஷாலை வைத்து  பூஜை படத்தை இயக்கினார். அது விஜய்யின் கத்தி படத்தோடு வெளியானது. ஆனால் பெரிய வெற்றி பெறவில்லை.

ஹரி 13 ஆண்டுகளில் 13 படங்களை இயக்கியுள்ளார். 2000க்குப் பின் வந்த இயக்குநர்களில் 10 படங்களுக்கு மேல் இயக்கிய மிகச்சிலரில் ஹரியும் ஒருவர். ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,அஜீத்,விஜய் என்று இந்த 13 ஆண்டுகளில் முண்ணனியில் இருந்த ஒருவரைக்கூட இயக்காமல் இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்தவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார்.
கமர்சியல் படங்கள் பார்க்கும் போது நம் மூளையை சிந்திக்க டைரக்டர் விடக்கூடாது என்பது மிக முக்கியம். ஹரி அதனை செவ்வனே செய்யக்கூடிவர். ஆனால் மூளை சிந்திக்கும் அவகாசமானது வருடங்கள் ஓட ஓட குறைந்து கொண்டே வருகிறது. 80 மற்றும் 90 களில் தனி காமெடி டிராக், கதைக்குச் சம்பந்தமில்லாத காட்சிகள் வந்தால் கூட யாரும் யோசிக்கவில்லை. ஆனால் தற்போது சிறிய இடைவெளி கிடைத்தாலும் இது சாத்தியமா என யோசிக்கும் மூளையுடைவர்கள் அதிகரித்து விட்டார்கள். எனவே கமர்சியல் படத்துக்கு காட்சி நகரும் வேகம் மிக அத்தியாவசியமாகிவிட்டது. இங்குதான் ஹரி தன்னை மாற்றிக் கொண்டே வருகிறார். அவரது ஆரம்ப கால படங்களான தமிழ்,சாமி,கோவில் போன்றவற்றில் காட்சி நகரும் வேகம் குறைவாகவே இருக்கும். ஆறு படத்தில் காட்சி நகரும் வேகம் அதிகமாக இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் மித வேகமாகவே காட்சி நகர்ந்தது.

சிங்கம் படத்தில் இருந்து ஹரி டாப் கியருக்குச் சென்றார். அடுத்த காட்சியின் வசனம் முந்தைய காட்சி தொடங்குமுன்னே ஒலிக்கத் தொடங்கியது. யாரும் நடக்கவில்லை. ஏறக்குறைய ஓடினார்கள். வேங்கை படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் கூட வெகு வேகமாக இருந்தன. சிங்கம் 2 வில் இன்னும் வேகம் கூடியது. அதில் செண்டிமெண்ட் காட்சிகள் கூட வேகமாக இருந்தன.

பூஜை இதில் உச்சம் எனலாம். படமே பாஸ்ட் பார்வர்ட் மோடில் எடுக்கப்பட்டது போல் இருந்தது. பொதுவாக பாடல்கள் நான்கு முதல் நான்கரை நிமிடங்கள் இருந்தால் ஹரியின் படங்களில் அதிகபட்சம் மூன்று-மூன்றரை நிமிடத்தில்  பாடல்காட்சிகள் முடிந்து விடும். பாடலின் கடைசி வரியும் அடுத்த காட்சியின் முதல் வரியும் சில சமயம் ஒன்றாகக் கூட ஒலிக்கும்.

ஆனால் இப்போதைய, படம் பார்க்கும்போதே ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் தலைமுறைக்கு இதுதான் சரி. அவர்கள் தங்கள் போனை உபயோகிக்காமல் இருக்கச் செய்வதில்தான் படத்தின் வெற்றியே இருக்கிறது. ஹரி வேகமாக காட்சிகளை கடத்தி அதை சாதிக்கிறார். ஸ்மார்ட் போன் என்றவுடன் ஹரியின் கதாநாயகர்கள் போனை உபயோகிக்கும் லாவகம்தான் நினைவுக்கு வரும். உண்மையிலேயே போனை ஸ்மார்ட்டாக உபயோகிப்பவர்கள் ஹரியின் நாயகர்கள்தான். ஹரி பட டிஸ்கசனின் போது எது இருக்குமோ இல்லையோ பலவித போன்களின் மேனுவல்கள் நிச்சயம் இருக்கும் போல.

ஹரியின் கதாநாயகிகளிலும் காலத்திற்கு ஏற்ப மாற்றம் வந்து கொண்டேயிருக்கிறது. ஆரம்ப காலப் படங்களில் தாவணி அணிந்த நடுத்தர குடும்பத்துப் பெண்களையே தொடர்ந்து நாயகியாக்கினார். பின்னர் காலமாற்றத்தில் படம் பார்க்க வரும் நவீன இளைஞர்களின் உருவகத்திற்கு ஏற்ப நவீன உடை அணியும் பணக்கார பெண் கேரக்டர்களை நாயகியாக்கினார். ஆனால் அந்த நாயகியரை குடும்பப்பாங்காகவே சித்தரிப்பார். நாயகனை குடும்பத்திற்கு மிக அடங்கியவராக சித்தரிப்பார்.

ஹரியின் படங்களில் சேவல் படத்தைத் தவிர எல்லாப்படங்களிலும் நாயகனானவன் குடும்பத்திற்கு அடங்கி, அவர்களின் நலனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பவனாகவே பாத்திரப்படைப்பு இருக்கும். சேவல் தோல்வி அடைந்ததில் இருந்து ஹரி இன்னும் அழுத்தமாக அவரின் பாத்திரப்படைப்பை பிடித்துக் கொண்டார். ஒரு வகையில் ஹரி தமிழக குடும்ப அமைப்பை காப்பாற்றும் படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம். இது அவரின் படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் வருகைக்கும் காரணமாக இருக்கிறது.

 ஹரி இயக்கிய படங்களின் வசனங்களும் தமிழ்நாடு முழுவதும் ஊடுருவி விடும். சாமி படத்தின் ஒருச்சாமி இருச்சாமி”, ”அவன் பேசும் போது காது ஆடுதில்லே அவன் நம்ம சாதிக்காரன்லே”, “துப்பாக்கி யார் சுட்டாலும் சுடும்போன்ற மாஸ் வசனங்கள்  ஆகட்டும், ஆறு படத்தில் போகிற போக்கில் வரும் உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா?” ஆகட்டும் தமிழகத்தின் எல்லா மட்டங்களிலும் பேசப்படுபவை. சிங்கம் படத்தின் ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் பஞ்ச் டயலாக்கான சிங்கத்த காட்டுல பார்த்திருப்ப பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் அளவுக்கு புகழ் பெற்றிருக்கிறது.  
ஹரியின் பலம் தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்திருப்பது மற்றும் தனக்கு என்ன தேவை என்று உணர்ந்திருப்பது. அதனால் தான் ஒரு இயக்குநரின் வேலையைப் பற்று அறிந்து, அதை சப்போர்ட் செய்ய சினிமா பிண்ணனியில் இருந்து வந்த பெண் தான் வேண்டும் எனச் சொல்லி சினிமா குடும்பத்தில் வந்த பிரித்தா விஜயகுமாரை மணந்து கொண்டார். தன் படத்தை பார்க்க வருகிறவர்கள் யார்? அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதிலும் தெளிவானவர் ஹரி.
இப்போது சூர்யாவை வைத்து சிங்கம் 3 படத்தை இயக்கிக்கொண்டு உள்ளார். சூர்யாவுக்கும் இந்த இரண்டாண்டுகளாக சிங்கம் 2 விற்குப்பின்னர் சொல்லிக் கொள்ளும் படி வெற்றிப்படம் கிடைக்கவில்லை. சமீபத்தில் சிங்கம் 3 யின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. வெளியாவதற்கு முன் எப்படி இருக்குமோ என பலரும் கற்பனை பண்ணிக்கொண்டிருக்க சிங்கமுகத்தில் சூர்யாவின் முகத்தை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டார். இணையவாசிகள் அதனை கிண்டல் செய்தார்கள், ஆனால் ஹரியின் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கும் மக்களுக்கு அது ரீச்சானது.

இரண்டு பாகங்களிலும் சூர்யா விற்கும் அனுஷ்காவிற்கும் திருமணம் ஆகவில்லை. இதிலாவது ஆகுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள், கூடுதல் அட்ராக்‌ஷனாக போலிஸ் அதிகாரி வேட்த்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார். என்ன கதையாக இருந்தாலும் சிங்கம் 3 யிலும் குடும்பத்திற்கு அடங்கிய, பெண்களை மதிக்கக்கூடிய, மொபைலை இன்னும் லாவகமாகப் பயன்படுத்தக்கூடிய, ஓட மட்டுமே தெரிந்த ஒரு போலிஸ் அதிகாரியை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

1 comment:

Unknown said...

Nice Review About Director Hari