March 30, 2016

ரேவதி

இப்போது திரைப்பட சுவரொட்டிகளின் டிசைன், பிரிண்டிங், டிரான்ஸ்போர்டேசன் எல்லாமே எளிதாகி விட்டது. ஆனால் போஸ்டர் ஒட்ட இடங்கள் கிடைப்பது கஷ்டமாகி விட்டது. 80களில் போஸ்டர் ஒட்ட ஏராளமான சுவர்கள், குட்டிச் சுவர்கள் இருந்தன. ஆனால் போஸ்டர் டிசைன், பிரிண்டிங் எல்லாம் நேரம் பிடிக்கும். செலவும் படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது தற்காலத்தை விட அதிகமாகவே இருந்தது. பெரிய நகரங்களில் 50 நாட்களும், நகரப் பகுதிகளில் 25 நாட்களும், சிற்றூர், கிராமப்புறங்களில் ஒரு வாரம், 10 நாட்கள் வரை படங்கள் பொதுவாக ஓடும். மக்களுக்கு இந்த திரையரங்கில் இந்தப் படம் ஓடுகிறது என தெரிவிக்கும் ஊடகங்களாக செய்தித்தாளும் சுவரொட்டிகளுமே இருந்தன. அதிலும் சிற்றூர் தியேட்டர்களில் படம் வரும்போது செய்தித்தாள்களில் அந்தப் படங்களின் விளம்பரம் கூட நின்று போயிருக்க வாய்ப்புண்டு. எனவே சுவரொட்டிகள் என்பது அப்போது சினிமாவிற்கு மிகப்பெரிய விளம்பர ஆயுதம்.

எனவே சுவரொட்டிகளை கவனமாக வடிவமைப்பார்கள். ஹீரோவின் படம் பெரியதாகவும், அந்தப் படத்தில் கவர்ச்சி நடனம் ஆடும் நடிகையின் படம் ஒரு ஓரத்திலும் அச்சிடுவார்கள். நாயகி கவர்ச்சியாக அந்தப்படத்தில் தோன்றி இருந்தால் மட்டுமே சுவரொட்டியில் அவருக்கு பிரதான இடம் ஒதுக்கப்படும். இல்லாவிட்டால் பாஸ்போர்ட் சைஸில் ஒரு இடத்தை ஒதுக்கி விடுவார்கள். பொதுவாக இந்தப் போஸ்டர்கள் 50 நாட்களுக்கு மேல் மாற்றப்படாமல் இருக்கும். பெரும்பாலான படங்களுக்கு முதலில் அடிக்கும் 8 பிட், 4 பிட் போஸ்டர்கள் தவிர நூறாவது நாளுக்குத்தான் அடுத்த போஸ்டர் அடிப்பார்கள். 2000க்குப் பிறகுதான் வெற்றிகரமான 2 வது வாரம், பார் போற்றும் 10வது நாள் போஸ்டர்கள் அதிகமாக வரத்துவங்கின.

எனவே அந்நாட்களில் பலநாட்களுக்கு நின்று மக்களை தியேட்டருக்கு வரவைக்கும் ஊடகமான போஸ்டரில் கதாநாயகி பிரதானமாக இடம்பெற வேண்டுமானால் கவர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது ஒரு நாயகி அதுமாதிரியான தோற்றம் எல்லாம் இல்லாமல் சாதாரண உடைகளுடன் போஸ்டரில் இடம்பிடித்தார். அவர் தான் ரேவதி.

காதல் ஓவியம், வாலிபமே வா வா படங்களின் தோல்விக்குப் பிறகு தன் களம் எது என உணர்ந்து மண்வாசனை படத்தை எடுத்தார் பாரதிராஜா. அந்தப் படத்தில் முத்துப் பேச்சி என்னும் பாத்திரத்தில் அறிமுகமானார் ரேவதி. அவரின் ஆர் வரிசை பெயர் ராசியின் படி ராதிகா, ரத்தி அக்னி ஹோத்திரி,ராதா வரிசையில் வந்தார் ரேவதி.. அந்தப் படத்தை பார்த்த ரசிகர்களில் பத்திரிக்கைகள் படிக்காத பெரும்பாலோனோர் அவர் உசிலம்பட்டி அல்லது தேனிப் பக்க பெண்ணாக இருப்பார் என்றே நினைத்தார்கள். அந்தப் பட நாயகன் பாண்டியன் மதுரையைச் சார்ந்தவர். அவர் இயல்பாக அந்தக் கதைக்கு பொருந்திப் போனார். ஆனால் ரேவதி, கேரளாவைச் சேர்ந்தவர், ராணுவ அதிகாரியின் மகள், பரதநாட்டியம் கற்றவர் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் மிக இயல்பான கிராமத்துப் பெண்ணாக அந்தப் படத்தில் பொருந்திப் போயிருந்தார் ரேவதி.

மண்வாசனையின் பெரிய வெற்றிக்குப் பின் அதற்கடுத்த மூன்று ஆண்டுகள் தமிழ்சினிமாவின் இளவரசியாக கோலோச்சினார் ரேவதி. இளவரசி என்று பெயருக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே. மகேந்திரன், மணிரத்னம், சுந்தர்ராஜன், ரங்கராஜன் போன்ற இயக்குநர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜய்காந்த், பிரபு, கார்த்திக்,சுரேஷ்,மோகன் போன்ற முன்வரிசை நடிகர்கள், பாண்டியராஜன் போன்ற புது இயக்குநர்கள், ஏவிஎம் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள், புதிய சிறிய தயாரிப்பாளர்கள் என அனைவரின் சாய்ஸாகவும் ரேவதி இருந்தார்.

போஸ்டர்களில் ரேவதி படம் இருந்தால் பேமிலி ஆடியன்ஸ் வருவார்கள் என்ற நம்பிக்கை திரையுலகில் நிலவியது. ரேவதியின் முகத்தை பெரியதாகப் போட்டு போஸ்டர்கள் அடிக்கப்பட்டது. ஏவி எம் தயாரித்து, பாரதிராஜா இயக்கிய புதுமைப்பெண்ணில் ரேவதியின் படம் மட்டுமே போடப்பட்டது.
பொதுவாக ஒரு ஹீரோயின் புதிதாக வந்தால் இளவயது ஆண்களுக்கு உடனே பிடித்துப் போகும். பெண்களுக்கு ஹீரோயின்களை உடனடியாகப் பிடித்துப்போகாது. ஆனால் ரேவதியைப் பொறுத்த வரையில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த நடிகையாக இருந்தார். எல்லோரும் அவரை தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்த்தார்கள்.

எல்லோரும் நதியா தோடு. நதியா கம்மல் என்று பிரபலமாக இருந்ததையே நினைவு கூறுவார்கள். ஆனால் அதற்கு முன்னாலேயே ரேவதியின் ஆஸ்தான உடையான முட்டிக்காலை தாண்டி சிறிது நீளம் இருக்கும் மிடி மிகவும் பேமஸ். ரேவதி அணிந்த மாடல்களில் அப்போது தமிழ்நாடு முழுவதும் அந்த உடை அதிகமாக விற்றது. 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் அப்போது பாவாடை சட்டை அணிவார்கள், அந்த வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தாவணி அணிவார்கள். இந்த 15 வயதுக்கு உட்பட்ட பெண்களை பாவாடை சட்டையில் இருந்து மாற்றியது ரேவதியின் ட்ரேட் மார்க் மிடிதான். அதற்கு முன் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களே எனத் தயங்கிய பெண்கள் அது கௌரவமான/சௌகர்யமான உடை என நம்பியது அதை ரேவதி அணிந்து நடித்த பின்னர் தான்.

ரேவதி சுட்டித்தனமான பாத்திரங்களில் இயல்பாக நடிக்கக் கூடியவர். ஒரு கைதியின் டைரி, புன்னகை மன்னன், உன்னை நான் சந்தித்தேன், பகல் நிலவு போன்ற படங்களில் அவர் சுட்டித்தனம் எல்லோரையும் கவர்ந்தது. அதுவும் புன்னகை மன்னனில் ஸ்ரீவித்யாவிடமே அவரைப் போலவே மிமிக்ரி செய்து காண்பிக்கும் இடம், மௌன ராகம் படத்தின் ஆரம்ப காட்சிகள் மட்டும் கார்த்திக் உடனான பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் மனதை விட்டு மறையாதவை.
ஆனால் ரேவதியை அழுத்தமாக குடும்பங்களில் பதிய வைத்தது அவர் ஏற்று நடித்த கஷ்டத்தில் உழலும் கதாபாத்திரங்களே. அறிமுகமான மண்வாசனையில் முறை மாமனுக்காக காத்திருந்து மணமாகாத பெண், கை கொடுக்கும் கையில் கண் தெரியாத பெண், வைதேகி காத்திருந்தாளில் கணவனின் முகத்தைப் பார்க்காமலேயே விதவையான பெண், புதுமைப்பெண்ணில் கணவன் சிறைக்குச் செல்ல அவனை மீட்க போராடும் பெண், குங்குமச்சிமிழில் வரதட்சனை கொடுக்க இயலாமல் திருமணம் தடைப்பட்ட பெண், ஆண் பாவத்தில் திருமணம் தடைப்பட்டதால் கிணற்றில் விழுந்து ஊமையான பெண், உதயகீதத்தில் அண்ணன் சாவுக்கு பழி வாங்கத்துடிக்கும் பெண், லட்சுமி வந்தாச்சுவில் தனக்கு வந்திருக்கும் உயிர்க்கொல்லி நோயைப்பற்றி அறிந்திருந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் பெண், இலங்கேஸ்வரனில் சீதை என அழுத்தமான கதாபாத்திரங்கள் அவருக்கு வாய்த்தன.

அந்த மூன்றாண்டுகளில் நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம் என்றாலே இயக்குநர்களுக்கு ரேவதிதான் ஞாபகத்துக்கு வருவார். குறுகிய காலத்தில் நல்ல கேரக்டர்களை அதிகமாக நடித்த நடிகை தமிழ்சினிமாவில் சாவித்திரிக்கு அடுத்து ரேவதியாகத்தான் இருக்கும். ரேவதி நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாகவும் அமைந்தன.

இந்தச் சூழ்நிலையில் தான் திடீரென ஒரு வதந்தி பரவியது. ரேவதி கேமிரா மேன் சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக. அது உண்மை எனவும் ஆனது. திரையுலகத்துக்கே அதிர்ச்சி. தன்னுடைய பீக் பீரியடில் ஒரு நடிகை இப்படி செய்துகொள்வாரா என.

ரேவதி திருமணத்துக்குப் பின் சில ஆண்டுகள் கழித்து நடிக்க வந்தார். பொதுவாக ஒரு நடிகையைப் பற்றி கிசுகிசு வந்தாலே மார்க்கெட் குறையும் காலம் அது. இப்போது போல காதல்கள் இருந்தாலும் அதற்கேற்ப வாய்ப்பு கூடும் காலமில்லை.

ரேவதி, இரண்டு வருடங்களுக்கு மேலான காலம் கழித்து வந்தும் அவருக்கான நாயகி வேடங்கள் கிடைத்தன. அக்கா.அண்ணி வேடங்கள் அல்லாது படத்தைத் தாங்கும் கதைநாயகி வேடங்கள் கிடைத்தன. அதுதான் அவர் நடிப்பின் மீது திரையுலகம் வைத்திருந்த நம்பிக்கை. பிரபுவுடன் உத்தமபுருஷன், அரங்கேற்ற வேளை ஆகிய படங்களும் கார்த்திக்குடன் இதய தாமரை படத்திலும் நாயகியாக நடித்தார்.

ஆர் வி உதயகுமாருக்கும், ஏன் கார்த்திக்குக்கூட ஒரு திருப்புமுனையாக அமைந்த கிழக்கு வாசல் படத்தில் தாயம்மா என்னும் தாசியாகப்போகும் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து மணிரத்னத்தின் அஞ்சலி, முரளியுடன் இணைந்து நடித்த சின்னப் பசங்க நாங்க என பெயர் சொல்லும் கேரக்டர்கள்.
அதையடுத்து இன்னும் ஒரு சிறப்பாக தேவர் மகனில் பஞ்சவர்ணம் என்னும் கேரக்டரில் நடித்து சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் மறுபடியுமில் கணவனை விவகாரத்து செய்யும் பெண்ணாக, தன் கணவர் சுரேஷ்மேனனுடன் புதியமுகத்தில் குறும்பு பெண்ணாக , நாசர் இயக்கிய அவதாரத்தில் பார்வை இழந்த பெண்ணாக, கே எஸ் அதியமான் இயக்கத்தில் வெளியான தொட்டாச்சிணுங்கியில் தன் மீது அன்பாக இல்லையோ என கணவர் சந்தேகப்படும் மனைவியாக என அடுத்தடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

ரேவதியின் சிறப்பே அதுதான். கிராமத்துப் பெண் வேடமானாலும் சரி, அல்ட்ரா மார்டன் பெண்ணாகவும் சரி அவரால் அந்தப் பாத்திரத்துக்குள் புகுந்து விட முடியும். தேவர் மகன் பஞ்சவர்ணம் பாத்திரத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் மீனா. ஆனால் அவரால் அந்த கேரக்டருடன் ஒன்றி நடிக்க முடியவில்லை. உடனே கமல்ஹாசன் அவரை அனுப்பிவிட்டு ரேவதியை அழைத்தார். இன்றளவும் அந்தப் படத்தில் அவர் அப்பாவியாக பேசிய ”வெறும் காத்துத்தாங்க வருது” மறக்க முடியாததாக இருக்கிறது.

1995-96 வாக்கில் அவர் சமுதாயப்பணிகளில் ஈடுபட்டார். 96 தேர்தலில் தென் சென்னைத்தொகுதி நாடாளுமன்றத் தொகுதியில் நின்று சுமார் 43,000 வாக்குகள் பெற்றார். தொடர்ந்து அவரது மனமொத்த சினேகிதிகளான ரோஹினி,கமீலா நாசருடன் இணைந்து பான்யான் என்னும் அமைப்பை நடத்தி வந்தார்.
அதன்பின்னர் மணிரத்னத்தின் இருவர், பாரதிராஜாவின் தாஜ்மஹால் என அம்மா வேடங்களுக்கு மாறினார். கண்ட நாள் முதல், ஒஸ்தி ஆகிய படங்களில் வழக்கத்துக்கு மாறான அம்மா வேடங்களில் நடித்தார்.

90களில் புதிதாக நடிகைகளை பேட்டி எடுக்கும் போது சம்பிரதாயமாக கேட்கும் கேள்விகளில் நீங்கள் யாரைப்போல் வர விரும்புகிறீர்கள் எனக் கேட்பார்கள். பெரும்பாலான பதில் ரேவதி என்பதாகத்தான் இருக்கும். அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் ரேவதி. எப்படி 60களுக்கு ஒரு சாவித்திரியோ அதுபோல 80களுக்கு ஒரு ரேவதி.

1 comment:

ஆரூர் பாஸ்கர் said...

ரேவதி பற்றியஅருமையான பதிவு.