April 24, 2016

வெயில் பிரச்சாரம் தேவையா?

டி என் சேஷன் கொண்டுவந்த தேர்தல் சீர் திருத்தங்களில் முக்கியமானது தேர்தல் பிரச்சாரத்தை இரவு 10 மணிக்கு மேல் செய்யக்கூடாது என்பதும் ஒன்று. ஏனென்றால் இரவு பிரச்சாரத்தை அனுமதிக்கும் போது, ஓட்டுக்கு பணம் கொடுத்தல், கட்சி ரீதியான மோதல்கள், உள்ளடங்கிய கிராமங்களில் ஏற்படும் ஜாதி ரீதியான மோதல்கள் போன்றவற்றை கண்காணிப்பது கடினம். அது போக வாக்காளர்களுக்கு பிரச்சார ஒலிபெருக்கிகளால் ஏற்படும் அசௌகர்யம், முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதீத சத்தத்தால் ஏற்படும் தொல்லை இவற்றைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதற்கு முன்னர் தேர்தல் காலங்களில் விடிய விடிய மேடைப்பிரச்சாரம் நடக்கும். அண்ணாதுரை, எம்ஜியார், கருணாநிதி போன்றவர்கள் காலை ஆறு மணி வரை கூட பிரச்சாரம் செய்வார்கள். பிரச்சாரம் முடிந்த பின்னர் ஆளுங்கட்சியாய் இருந்தால் சர்க்யூட் ஹவுஸிலோ அல்லது ட்ராவலர்ஸ் பங்களாவிலோ தங்குவார்கள். எதிர்க்கட்சியாய் இருந்தால் கட்சி பிரமுகர் வீட்டிலோ அல்லது லாட்ஜிலோ தங்குவார்கள். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு அன்று மாலை பேசப்போகும் இடங்களில் எது பற்றிப்பேச வேண்டும் என்று கட்சிக்காரர்களுடன் விவாதித்து விட்டு, மற்ற ஏரியா நிலவரங்களை விசாரித்து, தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு மதியம் அந்த ஏரியாவில் புகழ்பெற்றிருக்கும் அசைவ சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு கண்ணயர்வார்கள். மாலை 5 மணி அளவில் எழுந்து டச்சப் செய்து கொண்டு பிரச்சாரத்துக்கு கிளம்புவார்கள். தொடர்ந்து காலை வரை பிரச்சாரம் இருக்கும். இது தேர்தல் காலம் முழுவதும் மாறாமல் நடக்கும். இதனை சூறாவளி பிரச்சாரம் என்று அப்போது குறிப்பிடுவார்கள்.

அன்றைய நாள் பேசப்போகும் பிரச்சார இடங்களுக்கு உத்தேசமாக ஒரு நேரம் குறித்து அதை விளம்பரப்படுத்தி இருப்பார்கள். மாலை 6 மணி என்றால் நிச்சயம் 10 மணிக்காவது அந்த நட்சத்திரப் பேச்சாளர் வந்துவிடுவார். அதிகபட்சம் இரவு 9 மணி என்று குறிப்பிட்டிருப்பார்கள். அந்த இடத்திற்கு வரும்போது குறைந்தபட்சம் 2 மணியாவது ஆகியிருக்கும். இப்போது போல பொழுதுபோக்கு வசதிகள் இல்லாத காலம். ஆண்களுக்கு பிரச்சாரக் கூட்டம் கேட்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்த காலகட்டம் அது. பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு சக நண்பர்களுடன் வந்து தற்காலிக கடைகளில் பொரி, வறுத்த கடலை போன்ற அயிட்டங்களை சாப்பிட்டுக்கொண்டு, சுக்கு மல்லி காபி குடித்துக் கொண்டு, பீடி,சிகரெட் புகைத்துக் கொண்டு வெட்டி அரட்டை அடித்துக் கொண்டு நிற்பார்கள்.

இப்போது போல தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத காலம். எனவே போலிசாரின் வாக்கி டாக்கி தான் தலைவர்கள் எந்த பாயிண்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள உதவும் சாதனமாக இருந்தது. இந்த சுக்கு மல்லி காபி விற்பவர்கள், பேச்சாளர் வரும் நேரத்தை போலிசாருக்கு ஒரு காபி கொடுத்து கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஏனென்றால் பேச்சாளர் வந்த பிறகு ஓட்டம் குறைந்து விடும். அதற்கேற்ப காபி தயாரித்துக்கொள்ள இந்த விபரம் தெரிந்து கொள்வார்கள்.

84க்குப் பிறகு 90 வரை ஜெயலலிதா, காளிமுத்து, வைகோ, டி ராஜேந்தர் போன்ற மேல் மட்ட தலைவர்களுக்கும், வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், நெல்லை பாலாஜி போன்ற விரசம் கலந்து பேசும் பேச்சாளர்களுக்கும் இதுபோல ஒரு டிமாண்ட் இருந்தது. இவர்கள் பேசுவதாக இருந்தால் தன்னிச்சையாகவே கூட்டம் கூடிவிடும். ஆனால் இந்தக் கூட்டத்தை வைத்து வெற்றியைக் கணிக்க முடியாது.

கருணாநிதி அடிக்கடி சொல்லுவார், “நம் கூட்டத்துக்கு வருகிறவர்கள் எல்லாம் உதயசூரியனுக்கு வாக்களித்தால் போதும் நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம்” என்று. எல்லாத் தரப்பினரும் பேச்சைக் கேட்க வருவார்கள். ஒருமுறை டி. ராஜேந்தர் பேச்சைக் கேட்க எங்கள் ஊரில் காலை மூன்று மணிவரை கூட கூட்டம் கலையாமல் இருந்தது.

கிராமங்களில் இருப்பவர்கள் தங்கள் ஊருக்கு தலைவர்கள் வருகை இல்லாவிட்டால் அருகில் இருக்கும் முக்கிய பிரச்சார இடங்களுக்குச் சென்று பேச்சைக் கேட்பார்கள். அவர்கள் இரவில் திரும்ப வாகன வசதி இல்லாமல் அந்த திடலிலேயே படுத்துக் கொள்வதும் உண்டு. எம்ஜியார் இந்த மாதிரி தங்குபவர்களுக்கு ஏரியா பொறுப்பாளர்கள் மூலம் காலை சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்து விட்டுப் போவார். பெரும்பாலும் வெண்பொங்கல். அதைச் சாப்பிடும் வேற்று கட்சிக்காரர்கள் கூட எம்ஜியார் மீது அபிமானம் கொண்டு விடுவார்கள்.
டி என் சேஷன் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் நீட்டிப்பதை நிறுத்திய பின்னர் மதியம் மூன்று மணி அளவில் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. தொலைக்காட்சி முதலான பொழுது போக்குகளும் 90ல் கிடைக்க ஆரம்பித்த உடன் பிரச்சாரம் பொழுது போக்கு அம்சத்தில் இருந்து விடுபட்டது. கட்சிக்காரர்கள் மட்டுமே பிரச்சார இடங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். ஊரிலேயே நெரிசல் மிகுந்த இடத்தில் பிரச்சாரம் செய்தால் தான் பொதுமக்கள் பேச்சைக் கேட்பார்கள் என்னும் நிலை ஏற்பட்டது. கட்சித் தலைவர்கள் வந்தால் கூட நேரில் பார்க்கும் ஆவல் குறைந்தது.

எனவே கூட்டம் சேர்க்க வேண்டுமானால் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து கூட்டி வரவேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, பிரேமலதா, திருமா வளவன் போன்றவர்கள் சாலை பிரச்சாரம் மேற்கொள்ளுவதால் கட்சிக்காரர்கள், இயல்பாக அங்கே இருப்பவர்கள் என ஓரளவு கூட்டம் சேர்ந்து விடுகிறது. ஆனால் ஜெயலலிதா போக்குவரத்து வசதி இல்லாத பொட்டல் காடுகளில் பிரச்சாரம் செய்வதால், ஆட்களை அங்கே கொண்டு போய் இறக்கி பிரச்சாரம் கேட்க வைக்கப் படுகிறது.

எங்கள் தெருவில் இருந்து இரண்டு பெண்களை இப்படி அழைத்துச் சென்று வந்தார்கள். ஆளுக்கு 300 ரூபாய் கிடைத்தது என்றார்கள். ஆனால் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வெயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த்தால் அடுத்து 2 நாட்கள் அவர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டார்கள். இந்த ஏரியா பொறுப்பாளர்கள் தங்கள் கட்சி பிரச்சாரம் கேட்க தங்கள் மனைவி, சகோதரி, மகள், மருமகள்களை இப்படி ஐந்து மணி நேர வெயிலில் அடைத்து வைப்பார்களா?

ஜெயலலிதா ஓரிடத்தில் பிரச்சாரம் செய்வதற்கு முன்னால் மூன்று நாட்கள் முன்னதாகவே அந்த ஏரியாவில் காவலர்கள் குவிக்கப்படுகிறார்கள். அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது. ஜெயலலிதா இப்போது சட்டப்படி ஒரு காபந்து அரசின் முதல்வர்தான். அவரின் பிரச்சாரத்திற்கு அரசாங்கம் இவ்வளவு மனித சக்தியையும், வாகனம், எரிபொருள் என பொருட் செலவு செய்யலாமா?
அதைவிட கொடுமையானது பிரச்சாரத்துக்கு அழைத்து வரப்படும் மக்களை போலிசார் அதட்டி உருட்டி உட்காரவைப்பது. யார் தந்த அதிகாரம் இது? அதிமுக உறுப்பினர்கள் கூட பரவாயில்லை எனும்படி இவர்கள் சில சமயங்களில் அடித்தே விடுகிறார்கள். ஜெயலலிதாவிற்குத்தான் இசட் பிளஸ் பாதுகாப்பு இருக்கிறது. அவரைப் பாதுகாருங்கள் அது உங்கள் கடமை. பிரச்சாரம் கேட்க வந்தவர்களை நகர விடாமல் அடிப்பது?

மனித உரிமை அமைப்புகள் இம்மாதிரி பிரச்சாரத்திற்கு தடை கோரலாம். ஒருவரின் தனிப்பட்ட வசதிக்காக பல்லாயிரக்கணக்கான மக்களை வெயிலில் வதைப்பது இந்த ஜனநாயக நாட்டில் நடக்க விடலாமா? அப்படி ஜெயித்து ஜெயலலிதா எதை சாதிக்கப்போகிறார்?

1 comment:

bandhu said...

//அப்படி ஜெயித்து ஜெயலலிதா எதை சாதிக்கப்போகிறார்?//
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? பதவியெல்லாம் புலி வால் பிடித்த கதை. விட்டால், அவரையே அது தின்றுவிடும்! பதவியில் இருக்கும்போதே சிறைக்கு அனுப்பினார்கள். இல்லையென்றால் சுத்தம்!