August 11, 2016

ஆண்களின் வசந்தகாலம்

ஆண்களுக்கு எது வசந்த காலம்? என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும் குறிப்பாக பொருளாதாரத்தில் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த ஆணுக்கு. 20-21 வயதில் படிப்பு முடிக்கும் ஆணுக்கு குறைந்தது 4-5 ஆண்டுகளில், அதிகபட்சம் 10-12 ஆண்டுகளில் திருமணம் நடக்கிறது. சராசரியாக படிப்பு முடிந்து 7 ஆண்டுகளில் திருமணம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த காலம் மாதிரியான ஒன்று அவன் வாழ்வில் திரும்ப வரவே வராது.

முன்னர் எப்படியோ, ஆனால் இப்போது இந்த வயதில் இருக்கும் ஆண்களுக்கு பெரும்பாலும் குடும்பப் பொறுப்பு இருப்பதில்லை. வரதட்சனை கொடுக்காமல் அக்கா வாழாவெட்டியாக இருக்கிறார், தங்கைக்கு சீருக்கு பணம் சேர்க்க வேண்டும், தம்பி படிப்புக்கு அப்பா காசு கேட்கிறார் போன்ற பேச்சுக்கள் இப்போது பெருமளவில் இல்லை. மத்திய வர்க்க பெற்றோர், தன் மகனிடம் எந்த பண உதவியும் எதிர்பார்க்காமல் தங்கள் கடமைகளை முடிக்கும் நிலையிலேயே இப்போது உள்ளனர். விதிவிலக்குகள் இருக்கலாம். நம்மை பொருளாதார ரீதியாக எதிர்பார்க்காமல் இருக்கும் பெற்றோர் அமைவது ஒரு வரம். அந்த வரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் திருமணத்திற்கு முன்னான காலத்தை வசந்தகாலம் ஆக்கும்.


அமெரிக்காவில் உள்ள ஏடி அண்ட் டி ஆராய்ச்சி சாலையில் நடந்ததாக ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். அங்கு ஒரு ஆராய்ச்சியாளர், தன் மேலதிகாரியிடம் சென்று இவ்வாறு கேட்டாராம், “நானும் என்னுடன் பணிபுரிபவரும் ஐந்து ஆண்டுகள் முன்னர் இங்கே ஒரே நாளில் தான் வேலைக்குச் சேர்ந்தோம். இருவரும் அறிவைப் பொறுத்தவரையிலும் ஒரே அளவில் தான் இருந்தோம். ஆனால் தற்போது அவர் என்னைவிட அறிவும் அதிகமாகி. பதவி உயர்வும் பெற்றுவிட்டார். இது எப்படி?”.

அதற்கு அவரின் மேலதிகாரி “நீ உனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக முடித்துக் கொடுத்தாய். ஆனால் வேலை நேரம் முடிந்த உடன் அலுவலகத்தை விட்டு கிளம்பி விட்டாய். ஆனால் அவனோ தினமும் 2 மணி நேரம் உன்னை விட அதிகமாக இருந்து இங்கே மற்ற விஷயங்களை கற்றுக் கொண்டான். அவனுடைய மூளையில் நீ கற்றுக் கொண்டதை விட அதிகமான தகவல்கள் குடியேறின. மேலும் இரண்டு விஷயங்களை தெரிந்தவன் அதோடு தொடர்புடைய மூன்றாவது விஷயத்தை, எந்த விஷயமும் தெரியாதவனை விட விரைவாக கற்றுக் கொள்வான். இதனால் அவன் கற்றுக் கொள்ளும் வேகம் அதிகரித்தது.

எந்த ஒரு வேலையோ அல்லது பிரச்சனையோ வரும் போது நம் மூளையானது நம்மிடம் உள்ள தகவல்களைக் கொண்டே அதற்கான தீர்வை எடுக்க முனையும். அதிகமான தகவல்களை கொண்டவன், விஷயங்கள் புரிந்தவன், அதற்கு எளிதான தீர்வை எடுத்து விடுவான். 

தினமும் 2 மணி நேரம் என்பது குறைவான நேரம். ஆனால் தொடர்ந்து 5 ஆண்டுகள் இரண்டு மணி நேர உழைப்பு என்பது அவனுடைய அறிவை உன் அறிவை விட பல மடங்கு மேலாக்கிவிட்டது. அதனால் எந்த வேலையையும் அவனால் இப்போது உன்னை விட சிறப்பாக செய்ய முடிகிறது என்றார்.


இந்த அதிக நேரமானது நமக்கு திருமணத்திற்கு முன்னரே கிடைக்கும். திருமணத்திற்கு முன் நம்மை நம் வீட்டிலோ,உறவு வட்டங்களிலோ அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள். திருமணத்திற்கு முன் தங்கையின் பிரசவத்திற்கு போகாத அண்ணனைக் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் திருமனத்திற்குப்பின் தங்கை மகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கூட அது ஒரு பிரச்சனையாகும். பெற்றோர்களே கூட திருமணத்திற்குப் பின் தங்கள் மகன் தங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கல்யாணத்துக்கு முன்னாடிலாம் இப்படி இல்லை. அவ வந்து தான் இப்படி என்று அவள் காதுபட வேறு சொல்லி, தேவையில்லாத பஞ்சாயத்துகளில் நம் நேரத்தை விரயமாக்குவார்கள். நம் சுற்றத்தாரும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு போகாவிட்டால், எங்கள் வீட்டிற்கெல்லாம் நீங்கள் வருவீர்களா, கல்யாணத்துக்குப் பின்னாடி கண்ணு தெரியலை என்று குமைவார்கள். அதைவிட மனைவி வீட்டு விசேஷங்களுக்கு ஒதுக்கப்படும் நேரம். அவர்களின் ஒன்றுவிட்ட சித்தியின் மகள் வளைகாப்புக்கு கூட நாம் போயாக வேண்டும். சம்பளம் தருகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மனைவிகள், அலுவல நேரத்தில் பணி புரிய அனுமதிக்கிறார்கள். அதற்கு மேல் அங்கு நேரம் செலவு செய்து விட்டு தாமதமாக வந்தால் நாம் வேறு வகை செலவுகளை செய்தாக வேண்டும்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்கையில் அது தொடர்பான விஷயங்களுக்கு இப்பொழுது அதிக நேரத்தை ஒதுக்க வேண்டி இருக்கிறது. எனவே திருமணத்திற்குப் பின் நம் நேரம் நம் கையில் இல்லை.

வேலைக்காக இன்னொரு ஊருக்கு வந்து, திருமணமாகாத காலகட்டத்தில், நம் இளைஞர்கள் செய்யும் இன்னொரு நேரச் செலவு, உணவு தேடி அலைவது. வார நாட்களின் இரவுகள், வார இறுதி நாட்களில் சாப்பிட என்று பைக்கில் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் நாங்களே சமைத்து சாப்பிடுகிறோம் என்பவர்களைத்தான் மன்னிக்கவே முடியாது. அத்தியாவசிய சமையலைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் பாத்திரம் கழுவுவது, அதனால் ஏற்படும் சண்டைகள், வீட்டுக்கு சாமான் வாங்குவது, சிறு சிறு ரிப்பேர்கள் செய்வது என தங்களின் வசந்த காலத்தை வீணடிப்பவர்கள் இவர்கள். இந்த வேலைகளை எல்லாம் அதிகபட்சம் மூன்று மாதங்களில் திருமணத்திற்குப் பின் கற்றுக்கொள்ளலாம்.

இந்த வகையில் வேறு ஊருக்கு வந்து வேலை பார்க்கும் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல் இருக்கிறது. மூன்று வேளை சாப்பாடு நேர நேரத்திற்கு கிடைத்து விடும். செலவும் மிகக் குறைவு. ஆண்களுக்கு இது போல ஒர்க்கிங் மென்ஸ் ஹாஸ்டல் இருந்தால் நலம். அதே போல பிரயாண நேரம். தாங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே தங்கிக் கொள்வது நமது நேரம் அனாவசியமாக செலவாவதை குறைக்கும். திருமணத்திற்குப் பின் மனைவிக்கு ஏதுவாக, குழந்தைகளின் கல்விக்காக, எல்லோருக்கும் சிரம்மில்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டி இருக்கும். மாமியார் வீட்டிற்கு அருகில் இருக்க வேண்டும் என்ற மனைவியின் நிபந்தனைக்காக தினமும் நான்கைந்து மணி நேரம் பயணம் செய்யும் பலரை நான் அறிவேன்.

இப்போதைய மத்திய வர்க்க இளைஞன் தன் பெற்றோர்க்கு பணம் அனுப்பத் தேவையில்லாத காரணத்தால் சிக்கனமாக செலவழித்தால் நிறைய சேமிக்கலாம். ஏழாண்டுகள் இப்படி சேமிக்கும் பணம், ஒரு மிகப்பெரிய கையிருப்பாக மாறும். அதை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், புதிதாகத் தொழில் தொடங்க விரும்பினால் அந்நேரத்தில் அது கை கொடுக்கும். அம்மாதிரியான சேமிப்பை நாம் திருமணமான பின் செய்வது மிகக் கடினம்.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு முன் அங்கே நம்மை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம். வருமானத்தையும் சரியாக சேமித்துக் கொண்டால், நாம் இருக்கும் நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மேலே உயர ஏதுவாக இருக்கும். 

இந்த வசந்த காலம் ஒரு ஸ்பிரிங் போர்ட் போன்றது. ஊன்றி அழுத்தி எவ்வினால் சமூக பொருளாதார நிலையின் அடுத்த தளத்திற்கு தாவி விடலாம். இல்லையென்றால் நம் மகனுக்கு பின்னாட்களில் தெரியப்படுத்துவதற்காக இதை எழுதிக் கொண்டிருக்கலாம். 

2 comments:

ravikumar said...

The Write up tells the truth, However majority of the people ( more than 95%)failing to attain next level as you said , since they think that is the top most level of career in their life

Unknown said...

அருமயைான தகவல்....