August 03, 2016

தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள்

முன்னர் மதுரை மாவட்டத்தில் இருந்து இப்போது தேனி மாவட்டத்தில் இருக்கும் ஊர் அது. பெயர் கெங்குவார்பட்டி. 80களில் அங்கே இருந்தது ஒரே ஒரு தியேட்டர் தான். இப்போதும் கூட அந்த தியேட்டர் மட்டும் தான் அங்கே இருக்கிறது. அங்கே ரஜினி படங்களுக்கு எப்போதும் நல்ல கூட்டம் வரும். இளைஞர்கள், குடும்பத்தோடு வரும் பெண்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து வரும் சிறுவர்கள் என சுமாரான படங்களுக்கு கூட திருவிழா கூட்டம் வரும். ஆனால் ஒரு குறிப்பிட்ட ரஜினி படத்திற்கு மட்டும் வழக்கமாக வரும் இளைஞர்களின் கூட்டத்தை விட அதிகமாகவும், அதற்கு இணையாக பள்ளிச் சிறுவர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. கடைசி சில நாட்களில் திரையரங்கு முழுவதும் இளைஞர்களும் சிறுவர்களும் மட்டுமே இருந்தனர்.

இத்தனைக்கும் அந்த படத்தின் கதை ஏராளமான படங்களில் வந்தது தான். பாசமான அண்ணன் தங்கை. அண்ணன் எந்த வம்பு தும்புக்கும் போகாத அப்பாவி மிடில்கிளாஸ் வாலிபன். அவனது தங்கையை வில்லன் கூட்டம் கற்பழித்து கொலை செய்து விடுகிறது. அதற்கு பழிவாங்க துடிக்கிறான் அண்ணன். மார்சியல் ஆர்ட்ஸ் கற்றுத்தரும் ஒரு குருகுலத்தில் சேர்ந்து அந்தக் கலைகளை கற்று இறுதித் தேர்வில் முதலிடம் பிடிக்கிறான். அங்கே அவனுடன் பயின்று போட்டியில் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவன் கோபத்தில் வில்லன் கூட்டத்துடன் சேர்கிறான். இவர்களை எப்படி நாயகன் வெல்கிறான் என்பதுதான் கதை.

அந்தப் படம் பாயும்புலி. பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இளைஞர்களிடமும் சிறுவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படம். காரணம் அதில் இடம் பெற்ற சண்டைப் பயிற்சி காட்சிகள். 36 சேம்பர் ஆப் ஷாவோலின் படத்தில் இருந்து சண்டைப் பயிற்சி காட்சிகளை அப்படியே உருவி இதில் சேர்த்திருந்தார்கள். அந்தப் படத்தை பார்க்காத பட்டி தொட்டிகளில் எல்லாம் பாயும்புலில சண்டை அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்றே பேச்சாக இருந்தது.

திரைப்பட பாடல்களுக்காக ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் சண்டை காட்சிகளுக்காக ரிப்பீட் ஆடியன்ஸ் வந்தது இந்தப் படத்திற்குத்தான். அதுவரை தமிழ்சினிமாவில் வராத சண்டைக் காட்சிகள் இருந்ததால் ரசிகர்களை அந்தப் படம் பெருமளவு ஈர்த்தது.

கொடூர வில்லனாகவே தமிழக மக்கள் மனதில் பதிந்து போயிருந்த எம் என் நம்பியார்க்கு நல்லவர் என்ற இமேஜ் மேக் ஓவர் கொடுத்த படம் பாக்யராஜ் இயக்கிய தூறல் நின்னு போச்சு. இந்தப் படத்தின் கதையும் வழக்கமான பாக்யராஜின் யதார்த்தமான கதைக்களம் தான். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பக்கத்து ஊர் பெண்ணை வெகுவாக காதலிக்கும் கிராமத்து இளைஞனாக பாக்யராஜ். ஆனால் அவன் பெற்றோரால் திருமணம் தடைப்பட அந்த ஊருக்கே வந்து தங்கி, தன் காதலில் ஜெயிக்கிறான். இதில் பெண்ணின் பெரியப்பாவாக வரும் எம் என் நம்பியார் சிலம்பக் கலை வல்லுநர். அவர் பாக்யராஜுக்கு ஆதரவு தருகிறார். இந்தப் படத்தில் முக்கிய காட்சியாக பாக்யராஜ் லாவகமாக சிலம்பு சுற்றும் காட்சி இடம்பெற்றிருக்கும். விடியும் வரை காத்திரு படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், பாக்யராஜுக்கு தமிழக மக்களிடத்தில் ஒரு அப்பாவி இளைஞன் இமேஜே இருந்தது. அந்தப் பின்புலத்தில் அந்த சிலம்பும் சுற்றும் காட்சி திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எம்ஜியாருக்கு அடுத்த படியாக திரையில் லாவகமாக சிலம்பம் சுற்றியவர் என்ற பெயரையும் பாக்யராஜுக்கு பெற்றுத் தந்தது. அதே போல ஆசியாவின் மிகப்பெரிய மதுரை தங்கம் தியேட்டரில் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜியாரின் படங்களுக்கு அடுத்து 100 நாட்களைத் தாண்டி ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றது. எம்ஜியார் தூறல் நின்னு போச்சு படத்தைப் பார்த்து பாக்யராஜின் சிலம்ப ஆட்டத்தை மிகவும் சிலாகித்தார். இதுவே பின்னாட்களில் பாக்யராஜை எம்ஜியார் தன் கலையுலக வாரிசு என அறிவிக்க ஒரு காரணமாகவும் அமைந்தது.

இந்தப் படத்தில் இன்று கேட்டாலும் மயக்கும் பாடல்கள், இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் இருந்தாலும் படத்தில் இடம்பெற்ற சிலம்ப சண்டைக் காட்சிகள் இளைஞர்களிடம் படத்தின் பால் நல்ல ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இந்தப் படங்கள் என்றில்லை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சண்டைக்காட்சிகளுக்கு என பிரத்யேக ரசிகர் கூட்டம் இருந்தது.
சினிமா தொடங்கி பல ஆண்டுகள் வரை புராண, வரலாற்றுப் படங்கள் தான் அதிகம் வந்தன. அதில் சண்டைக் காட்சிகள் என்றால் கத்திச் சண்டை தான் பிரதானமாக இருந்தது. எம்ஜியார், ஆனந்தன் ஆகியோர் இந்த கத்திச் சண்டைகள் மூலமாக ஆரம்ப காலத்தில் மக்களைக் கவர்ந்தவர்கள். ஒரு முறை கம்யூனிஸ்ட் பேச்சாளர் ஒருவர் தங்கள் கொள்கையையெல்லாம் முழங்கிய பிறகு, அதெல்லாம் சரி, உங்க கட்சித்தலைவர் எங்க எம்ஜியார் மாதிரி சண்டை போடுவாரா என கூட்டத்தினர் கேட்ட வரலாறெல்லாம் தமிழகத்தில் உண்டு.

சமூக கதைகளை அடிப்படையாகக் கொண்டு படங்கள் வரத் தொடங்கிய காலகட்டத்தில் மார்சியல் ஆர்ட்ஸ் முறையில் சண்டை அமைத்து மிகவும் குறைவான படங்களே வந்தன. மார்டன் தியேட்டர்ஸ் படங்களின் சண்டைக் காட்சிகளில் மட்டும் சிறிதளவு மார்சியல் ஆர்ட்ஸ் பிண்ணனி இருக்கும். பெரும்பாலான படங்களில் சினிமாத்தனமான சண்டைக்காட்சிகள் தான். எப்படி பரதம், கதகளி, ஒடிஸி என எந்த வித நடன முறையும் இல்லாமல் புதுவிதமாக சினிமா நடனம் ஒன்றை உருவாக்கினார்களோ அதுபோல ஜூடோ,குங்பூ,கராத்தே என எந்த வித முறையும் இல்லாமல் சினிமாவுக்கென தனியாக சண்டைக் காட்சிகளை அப்போது அமைத்தார்கள். ஏன் இன்றும் கூட அப்படி கலந்துகட்டித்தான் சண்டைக் காட்சிகளை அமைத்து வருகிறார்கள்.
சாண்டோ சின்னப்பா தேவர் எம்ஜியாரை வைத்து தயாரித்த படங்களில் சிலம்ப சண்டை முக்கிய இடம்பெறும். தாய்க்குப் பின் தாரம் படத்தில் எம்ஜியாருக்கும் சின்னப்பா தேவருக்கும் நடக்கும் சிலம்ப சண்டைக்காட்சி பிரசித்தம்.

70களின் பிற்பகுதியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமமாலினி நடித்த ஷோலே தமிழகத்தில் அபார ஓட்டம் ஓடிய போது அதே காலகட்டத்தில் புரூஸ்லி நடித்த எண்டர் தி ட்ராகனும் பட்டி தொட்டியெங்கும் ஓடியது. தொடர்ந்து புருஸ்லிக்கும் மார்சியல் ஆர்ட்ஸ் முறையிலான சண்டைக்காட்சிகளுக்கும் தமிழகத்தில் ஒரு ஈர்ப்பு வந்தது.
ஒரு திரைப்படத்திற்கு போகலாமா வேண்டாமா என முடிவெடுக்க ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கும். கல்லூரி மாணவர்கள், திருமணமாக இளைஞர்கள் காதல் சம்பந்தமான படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். மத்திய வயதினர் கதையம்சம் உள்ள படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். கலகலப்பான, மசாலா படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் பள்ளி மாணவர்களைப் பொறுத்த வரை சண்டைக் காட்சிகள் அதிகமுள்ள படங்களுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். 80களில் சினிமா போஸ்டர்களில் ஒரு ஆக்ஷன் ஸ்டில்லாவது இருந்தால் தான் அந்த படத்திற்குப் போகலாம் என முடிவெடுப்பார்கள். அவர்கள் பேச்சிலும் கூட இந்தப் படத்துல இத்தனை சண்டை, அந்தப் படத்துல அத்தனை சண்டை என்றே பேச்சிருக்கும். இப்பொழுதும் கூட பள்ளி மாணவர்கள் ஆக்ஷன் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். தற்கால பள்ளி மாணவர்களே ஒரு நடிகரின் எதிர்கால ரசிகர்கள் என்பதால் அவர்கள் விரும்பும் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிப்பவர்களுக்கே தொடர்ந்து ரசிகர்கள் கிடைத்த வண்ணம் இருப்பார்கள்.

இதனாலேயே உச்ச நடிகர்கள் அனைவரும் தாங்கள் நடிக்கும் படத்தில் சிறப்பான சண்டைக்காட்சிகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்.
இந்த சண்டைக்காட்சிகள் பரவலாக ஆரம்பித்த உடன், அப்போது ஊர் ஊருக்கு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் போல திடீரென கராத்தே கற்றுத் தரும் பள்ளிகளும் முளைத்தன. பள்ளிகளில் கட்டாயம் ஒரு கராத்தே மாஸ்டர் இருந்து கராத்தே உடுப்புகள் விற்பனையை அதிகரிக்க உதவினார். யெல்லோ பெல்ட், பிளாக் பெல்ட் என டெக்னிக்கல் வார்த்தைகளும் தமிழில் புழங்க ஆரம்பித்தன. ஒரு ஆர்வத்தில் கராத்தே கிளாஸில் சேர்பவர்களில் 25 சதவிகிதம் கூட தொடர்ந்து பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள். எப்படி ஜாக்கிங் போக வாங்கிய ஷூ செப்பல் ஸ்டாண்டில் ஒரு அலங்காரப் பொருளாக மாறுமோ அதுபோல இந்த கராத்தே உடைகளும் துணி அலமாரியில் காட்சிப் பொருளாகவே பல வீடுகளில் ஆகிப்போனது.

அந்த 25 சதவிகித ஆட்களில் 15 சதவிகிதத்தினர் ஓடு உடைப்பது செங்கல் உடைப்பதுடன் திருப்தி பட்டுக்கொள்வர். எஞ்சிய சிலரே ஏதாவது பெல்ட் வாங்கி தங்கள் பெயருடன் கராத்தே என்று போட்டுக் கொள்வார்கள்.
சண்டைப் பயிற்சியாளர்கள் கூட தங்கள் பெயர் டெரராக தெரிய வேண்டுமென தற்காப்புக் கலை பெயர்களைச் சூடிக் கொண்டார்கள். ஜூடோ ரத்னம், கொபுடோ கிருஷ்ணமூர்த்தி என.

தன் தனித்துவமான ஸ்டைலின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற ரஜினி, சண்டைக் காட்சிகளிலும் தனி ஸ்டைலை பின்பற்றினார். அவரின் கைகள் மின்னல் வேகத்தில் அசைந்தாலும் வேகம் மட்டுமில்லாது அதில் ஸ்டைலும் கலந்திருக்கும். கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய ”கராத்தே” மணி ரஜினியின் அன்புக்கு நான் அடிமை படத்தில் வில்லனாக அறிமுகமானார். இருவருக்குமான சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. ஆனால் கராத்தே மணியின் சிஷ்யர்கள் அனைவருக்கும் கராத்தே மணி சண்டையில் தோற்றதாக இருந்தது பலத்த மன வருத்தத்தை கொடுத்தது என்பார்கள்.

அதன்பின் ரங்கா படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தார்கள். திருடனான கராத்தே மணி, ரஜினியின் பேச்சைக் கேட்டு நல்லவராக மாறுவார், ரஜினி, கராத்தே மணியின் பாதையைப் பின்பற்றி திருடனாக மாறுவார். இருவரும் எதிர் எதிரே சந்திக்கும் சூழல் வரும். கராத்தே மணி தன்னுடைய முறையான கராத்தே பாணியால் தாக்க, ரஜினி தன் அனாயாசமான ஸ்டைலால் அதை முறியடிக்க தியேட்டரில் விசில் பறக்கும். அவசர அடி ரங்கா என ஸ்டைலாக எதிரியின் நெற்றியில் அவர் வைக்கும் பஞ்ச் அப்போது பிரசித்தம். பள்ளி மாணவர்கள் தங்கள் கையில் தங்கள் பெயர் கொண்ட பேப்பரை வைத்துக் கொண்டு அடுத்தவனின் நெற்றியில் அது போல் பஞ்ச் வைப்பார்கள். நிஜமான சண்டை என்பது வேறு. மக்கள் ரசிக்கும் படியாக அதை திரையில் கொண்டு வருவது என்பது வேறு. ரஜினிகாந்திடம் அப்போது இருந்த வேகம் அவர் செய்யும் சண்டைகளை மிகவும் ரசிக்க வைத்தது. அந்த சண்டைக் காட்சிகளில் அவர் கலக்கும் குறும்பும் எல்லோரையும் தங்களை மறந்து களைகநிஜ வாழ்க்கையில் புகழ்பெற்ற கராத்தே மாஸ்டரை ரஜினி அனாயாசமாக வெல்வதை மக்கள் ரசிக்க அவருடைய வேகமான தனித்துவம் மிக்க ஸ்டைலே காரணம். எந்த வகை சண்டைக் காட்சிகளாக இருந்தாலும் அதை களைகட்ட வைக்க ரஜினியால் முடிந்தது.

முரட்டுக்காளை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் சிலம்பம், அடுத்த வாரிசில் கத்திச் சண்டை என அதற்கு முன்னர் மற்றவர்கள் சண்டையிட்ட விதங்களில் இருந்து சற்று மாறுபட்டு தன் ஸ்டைலைக் காட்டியிருப்பார் ரஜினி. ராஜாதி ராஜாவில் அப்பாவியாக இருந்து சிலம்பம் கற்றுக் கொள்ளும் பாடல் காட்சியிலும் மாப்பிள்ளையில் ஊர் திருவிழாவில் நகைச்சுவை கலந்து செய்யும் சிலம்பு சண்டையிலும் தன் முத்திரையை பதித்திருப்பார்.

சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் முதன்மையானவர் கமல்ஹாசன். ஒரு பேட்டியில் கூட படம் பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகன் யாரையாவது அடிக்க வேண்டும் என்று வெறியேறுவது போல சண்டைக்காட்சிகள் அமைக்க வேண்டும் என்று சொல்வார். சண்டைப் பயிற்சி கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ், பயிற்சி பட்டறை என பல முன்னெடுப்புகள் செய்தவர் கமல்ஹாசன். தன்னுடைய படங்களில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார்.

கமல்ஹாசன் நடித்த ராம் லட்சுமண் என்னும் படத்தில் சிலம்பம் உள்ளிட்ட எல்லா வகையான கலைகளையும் பயன்படுத்தி இருப்பார்கள். எப்படி சலங்கை ஒலியில் எல்லா வகையான நடனமுறைகளையும் ஆடிக்காண்பிப்பாரோ அதேபோல நான் தான் ஒங்கப்பண்டா நல்ல முத்து பேரண்டா என்ற பாடலில் எல்லா வகையான சண்டைப் பயிற்சி முறைகளையும் செய்து காண்பித்திருப்பார். ஒரு வகையில் தூள் படத்தில் வரும் சிங்கம் போல என்னும் சண்டைக்காட்சியுடன் இணைந்த பாடலுக்கு இது ஒரு முன்மாதிரி. சகலகலா வல்லவன் படத்திலும் ஒரு சிலம்ப சண்டைக்காட்சி உண்டு. கமல்ஹாசனுக்கு சிலம்ப சண்டை மீது நல்ல ஈர்ப்பு உண்டு. தேவர் மகனிலும் ஒரு சிலம்ப சண்டைக் காட்சியை வைத்திருப்பார். தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படத்தில் பெஞ்ச் வைத்துக் கொண்டு ஜாக்கிசான் படப்பாணியில் ஒரு சண்டைக்காட்சியை வைத்திருப்பார். எனக்குள் ஒருவன் திரைப்படத்திலும் கராத்தே கற்ற வாலிபராக தன் கேரக்டரை அமைத்திருப்பார்.

ராம நாராயணன் 84 ஆம் ஆண்டு அர்ஜூனை தன்னுடைய நன்றி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகப்படுத்தினார். வாய் பேச முடியாத ஊமை கதாபாத்திரம். ஆனால் சிறப்பாக கராத்தே சண்டை போடுவார். இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து கடமை,இவன்,வேஷம் என கராத்தே சண்டை போடும் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். எப்படி ஆனந்தபாபுவை டிஸ்கோ டான்சர் என மக்கள் நினைத்தார்களோ அது போல அர்ஜூனை கராத்தே மாஸ்டர் என்றே நினைத்தார்கள்.
அவரும் தான் நடித்த பெரும்பாலான படங்களில் மார்சியல் ஆர்ட்ஸ் சண்டைக்காட்சிகளில் திறம்பட நடித்து வந்தார். தாய் மேல் ஆணை என்னும் படத்தின் கதை மிகச் சாதாரணமானது. வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஆனால் அந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் எல்லாம் வெகு சிறப்பாக அமைக்கப்பட்டு அதனாலேயே அந்தப் படம் கவனம் பெற்றது. தொடர்ந்து தன்னுடைய படங்களில் கராத்தே, குங்பூ கற்றவராகவே தன்னுடைய பாத்திரத்தை அமைத்திருப்பார். சுதந்திரம் படத்தில் குத்துச் சண்டை வீரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சண்டை காட்சிகளில் நடித்தே கிராமப் பகுதிகளில் அதிக ரசிகர்களைப் பெற்றவர் விஜயகாந்த். அவர் பெரும்பாலும் எந்த கலை பிண்ணனியும் இல்லாத சினிமா சண்டையையே போட்டு வந்தார். கால்களால் எதிரியை சுழன்று சுழன்று அடிக்கும் சண்டைதான் அவரின் ட்ரேட் மார்க். பரதன் படத்தில் கிக் பாக்ஸராக நடித்திருப்பார். பிரபுவும் குத்துச் சண்டைக் காட்சிகளில் நடித்தால் நம்பும்படி இருக்கும். அவரும் வெற்றி மேல் வெற்றி என்னும் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்தார். இதில் குத்துச் சண்டையில் இருக்கும் பாதுகாப்பின்மையால் குடும்பத்தில் வரும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதை அமைத்திருப்பார்கள்.
அதற்கடுத்த தலைமுறையில் விஜய் பத்ரி திரைப்படத்திலும், ஜெயம் ரவி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமியிலும் கிக் பாக்ஸர்களாக நடித்திருந்தார்கள்.
தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், இந்த மார்சியல் ஆர்ட்ஸ் வகை சண்டைகளை ஆக்ஷன் படங்களில், ஒரு பகையைத் தீர்த்துக் கொள்ள நாயகனுக்கு உதவும் கருவியாகவே வைத்திருப்பார்கள். கதாநாயகன் வீரமானவன் எனக் காட்டுவதற்கு அவன் பாக்ஸிங் போட்டியிலோ அல்லது கராத்தே போட்டியிலோ வெல்வது போல காட்டியிருப்பார்கள். அல்லது நகைச்சுவைக்காக (இன்று போய் நாளை வாவில் சோமா பயில்வான், கோவிலில் சிலம்ப ஸ்கூல் வைத்திருக்கும் வடிவேல்) உபயோகப்படுத்தி இருப்பார்கள்.

ராக்கி, கிக் பாக்ஸர் போன்ற ஆங்கில படங்களில் சாம்பியன்ஷிப் பெறுவதன் பொருட்டே கதை நிகழும், முழுக்க முழுக்க கதைக்களம் சண்டைப் பயிற்சிகளைச் சுற்றியே வரும். இங்கு அதுபோல நிறைய படங்கள் வருவதில்லை.

பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசன் திரைப்பட சண்டைப் பயிற்சியாளராக வந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சண்டைக் காட்சிகளை அந்தப் படத்தில் அமைக்கவில்லை. ஆனால் அடுத்து சில ஆண்டுகள் கழித்து வந்த தசாவதாரத்தில் சிங்கன் நரகாசி என்னும் ஜப்பானிய தற்காப்புக்கலை நிபுணராக ஒரு வேடத்தில் நடித்திருந்தார். கமல் நடித்த இன்னொரு வேடமான பிளட்சர் அமெரிக்க தொழில் முறை கொலைகாரனாக நடித்திருப்பார். ஒரு ஜப்பானிய கலைக்கும் அமெரிக்க தற்காப்புக்கலைக்குமான சண்டைக் காட்சியாக அப்பட்த்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அமைக்கப் பட்டிருக்கும்.

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா நடித்து வெளியான முகமூடியில் நாயகன் சமுதாய பிரச்சினைகளை தீர்க்க சூப்பர் ஹீரோவாக மாறுவார். அவர் முறையான தற்காப்புக்கலை பயிற்சியை மேற்கொண்டவர். மேலும் வில்லனும் அதே தற்காப்புக் கலை பயின்றிருப்பவர். இவர்களுக்கிடையேயான மோதல் என கதைக்களம் பெரும்பாலும் மார்சியல் ஆர்ட்ஸ்ஸையே சுற்றிவரும்.

சென்ற ஆண்டில் வெளியான ஜெயம் ரவி நடித்த பூலோகம், மாதவன் நடித்த இறுதிச்சுற்று ஆகியவை பாக்ஸிங்கை கதைக்களமாக கொண்டவை. ஆனாலும் பூலோகத்தில் கார்பொரேட் நிறுவனங்கள் எப்படி மக்களை சுரண்டுகின்றன என்பதும், இறுதிச்சுற்றில் பாக்ஸிங் அமைப்பில் நிகழும் அரசியலும் மையப்புள்ளியாய் இருந்தன. மற்ற நாட்டுப் படங்களில் குழந்தைகளுக்கான சினிமா, இளைஞர்களுக்கு, ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு என தனித்தனி வகைகளில் படமெடுப்பதால் ஆக்ஷன் படங்களில் முழுக்க முழக்க மார்சியல் ஆர்ட்ஸ்ஸை வைத்தே படமெடுக்க முடிகிறது. தமிழிலும் அம்மாதிரி வகை வகையாக படமெடுக்கும் சூழல் வரும்போது அம்மாதிரிப் படங்களை நாமும் எதிர்பார்க்கலாம்.

(அந்தி மழை ஜூலை இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி:அந்திமழை)

No comments: